வியாழன், 18 ஆகஸ்ட், 2016

இறப்புக்கு காரணம் ஜாண்டிஸ்

                         Image result for கல்லீரல்

சமீபத்தில் ஒர பிரபல மனிதர் காலமானதற்கு கூறப்பட்ட காரணம் ஜாண்டிஸ். அதாவது கல்லீரலில் பாதிப்பு.

ஜாண்டிஸ் என்று ஏன் சொல்லுகிறார்கள் அதை ஏன் தமிழில் "காமாலை" என்று சொல்வதில்லை என்றால் ஒரு இமேஜுக்காகத்தான். காமாலை என்றால் ஏதோ பிச்சைக்காரனுக்கு வரும் நோய், ஜாண்டிஸ் என்றால் மேல்தட்டு மக்களுக்கு வரும் ஒரு நோய் என்ற மனோபாவம் நம் மக்களிடையே இருக்கிறது.

காய்ச்சல் வந்திருக்கிறது என்ற சொல்லமாட்டான். லேசா ஃபீவருங்க என்பான்.

சரி, இப்போ காமாலைக்கு வருவோம். காமாலை என்பது ஒரு சாதாரண வைரஸ் தொற்று நோய். கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் இது. கல்லீரல் கொஞ்சம் சுணக்கமாக வேலை செய்யும். அதனால் இரத்தத்தில் சில மாறுபாடுகள் ஏற்படும். கண்ணிலுள்ள வெள்ளைத் திரை மஞ்சள் நிறமாக மாறும். நோய் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் தோலும் மஞ்சளாக மாறும்.   ஆகாரத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால் சில நாட்களில் தானாகவே சரியாகிவிடக்கூடிய ஒரு நோய் இது.

ஆகவே காமாலை என்பது காய்ச்சல் தலைவலி மாதிரி ஒரு சாதாரண நோய்தான். ஆனால் கல்லீரலில் வேறு பல நோய்களும் வரும். அப்போதும் காமாலை வந்தது போன்ற அறிகுறிகளே தென்படும். அதனால் இதை சாதாரண காமாலை என்று கருதி நாட்டு வைத்தியம் செய்தால் குணம் கிடைக்காது. நோய் அதிகமான பிறகுதான் டாக்டரிடம் போவார்கள்.

அப்போது நோய் மிகவும் தீவிரமடைந்து சிகிச்சைக்கு அப்பாற்பட்ட நிலையை அடைந்திருக்கும். டாக்டர் முயற்சி செய்து பார்ப்பார். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அந்த முயற்சி பலனளிக்காது. நோயாளி இறந்து விடுவார். அவர் காமாலை வந்து இறந்து விட்டார் என்றுதான் காரணம் சொல்வார்கள். கல்லீரலில் உண்டான நோயைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள்.

கல்லீரல் கெடுவதற்கு முக்கிய காரணம் நம்ம டாஸ்மாக்தான். ஆல்கஹால் எவ்வாறு கல்லீரலைப் பாதிக்கிறது என்பது ஒரு சீரியஸ் பாடம். பயோகெமிஸ்ட்ரி படித்தவர்கள் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும். அப்படி டாஸ்மாக்கினால் கல்லீரல் கெட்டுப்போய் மரணத்தைத் தழுவுபவர்களையும் "காமாலை" வந்து இறந்து விட்டதாகத்தான் கூறுவார்கள். அதுதான் ஒரு நாகரிகமாகப் பின்பற்றப்படுகிறது.

"பின்னே என்னங்க குடிச்சு செத்துப் போய்ட்டாருன்னா" சொல்ல முடியும் என்று கேட்பவர்களுக்கு பதில் ஏதும் இல்லை. ஆனாலும் எல்லோருக்கும் அந்த நபர் இறந்ததற்கான  நிஜக் காரணம் தெரியும்.
ஆனாலும் நாகரிகம் கருதி வெளியில் பேசுவதில்லை. இது சரிதான். ஆனால் இந்த சாவுக்கு அப்புறமும் டாஸ்மாக் போவதை நிறுத்துவார்களா என்றால் நிறுத்த மாட்டார்கள். அவன் தலைவிதி, போய்ட்டான், நானெல்லாம் யாரு, எமனுக்கே மச்சானாக்கும் என்று சவால் விடுபவர்களே அதிகம்.

வாழ்க டாஸ்மாக், வளர்க குடிமக்கள்.

                          Image result for டாஸ்மாக் கடை

10 கருத்துகள்:

  1. உண்மைதான் ஐயா
    மக்கள் அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு

    பதிலளிநீக்கு
  2. ஃப்லாட்ஃபார்ம் (தமிழில்?) புகைப்படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. platform என்பதற்கு நடைமேடை என்று ரயில் நிலையங்களில் எழுதி உள்ளார்களே.
      --
      Jayakumar

      நீக்கு
  3. இப்போல்லாம் பொட்டுல அடிச்சாப்புல உண்மையைச் சொல்லிடறீங்க. நல்ல கவிஞர்தான். ஆனாலும் வீட்டைப்பற்றியோ மகனைப்பற்றியோ எண்ணாமல், அவர்கள் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல், குடித்து, புகைத்துத் தற்கொலை செய்துகொண்டார். இதை ஒருவர்தான் (உங்களைத்தவிர) எழுதியுள்ளார். இதை எழுதினால்தான், கவிஞர்களோ அல்லது சினிமாக்காரர்களோ பொதுமக்களோதிருந்துகிறார்களோ இல்லையோ அவர்களின் மனைவிகள் முழித்துக்கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
  4. விரிவான விளக்கம்! பாவம் ஓரிடம் பழி ஓரிடம்! பழி காமாலைக்கு வந்து விட்டது போலிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  5. கல்லீரலில் நோய் முற்றக் காரணமே குடிதான் என் உறவினர் ஒருவர் இறந்தபோதும் அவர் காமாலையால்தான் இறந்தார் என்று சொன்னார்கள்

    பதிலளிநீக்கு
  6. ஐயா இதைக் கவனிக்கவில்லையா?

    "இந்த கேஜெட்டில் பிழை உள்ளது. "

    ​நம்ம ​D D கிட்டே சொல்லி சரிப்படுத்துங்கள்.

    --
    Jayakumar
    ​ ​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதுதான் கவனித்தேன். சூபர் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போற அளவிற்கு இது அவ்வளவு பெரிய வியாதியா, என்ன? நாலு நாள் விட்டா தானே சரியாய்ட்டுப் போகுது.

      நீக்கு