வெள்ளி, 2 டிசம்பர், 2016

ஒரு காரசாரமான பதிவு

                                 
                                     Image result for மிளகாய்ஊறுகாய்

மனிதன் சாப்பிடுவது ருசிக்காகத்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள். அப்படி ஒப்புக்கொள்ளாதவர்கள் தயவு செய்து வேறு பதிவிற்குச் சென்று விடுங்கள். உங்கள் நேரத்தை இங்கு விரயப்படுத்த வேண்டாம். ATM க்யூவில் நின்றாலாவது இரண்டாயிரம் ரூபாய் செலவிற்குக் கிடைக்கும்.

ருசியை அறிவது நாக்கில் உள்ள ருசி அறியும் திசுக்களே. இவை 60 வயதாகும்போது பாதிக்கு மேல் செயலிழந்து போகின்றன என்று மருத்துவம் படிக்கும் என் பேரன் சொல்கிறான். அது உண்மைதான் என்று என் மனைவியும் சொல்கிறாள். அவள் எதை வைத்து அப்படி சொல்கிறாளென்றால், நான் தினமும் சாப்பிடும்போது சாப்பாட்டில் ருசியே இல்லை என்று சொல்வதை வைத்து அப்படி சொல்கிறாள்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் கடைக்குப் போனபோது "மிளகாய் ஊறுகாய்" என்ற ஒன்றைப் பார்த்தேன். ஒரு பாக்கெட் வாங்கி வந்தேன். பிரித்து ஒரு பாட்டிலில் போட்டு, சாப்பிடும்போது தயிர் சாப்பாட்டுக்கு அதை வைத்து சாப்பிட ஆரம்பித்தேன். தொட்டு வாயில் வைத்தவுடன், ஆஹா, அந்த அனுபவத்தை எப்படிச் சொல்வேன்?

உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் அப்படியே ஒரு சிலிர்ப்பு. அடுத்த வினாடியே ஒரு கவளம் தயிர் சாதம், எப்படி எடுத்தேன், எப்போது வாயில் போட்டேன், எப்படி விழுங்கினேன் என்பது ஒன்றும் நினைவில் இல்லை. இப்படியாக ஒரு அரை ஸ்பூன் ஊறுகாயில் தயிர் சாதம் முழுவதும் மறைந்தது.

ஆஹா, இந்த ஊறுகாய்தான் நமக்கு உகந்தது என்று முடிவு செய்து, இன்னும் இரண்டு பாக்கெட் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று அடுத்த நாள் அந்தக் கடைக்குப் போனால், சார், அந்த ஊறுகாய் நேற்றே தீர்ந்து விட்டது, ஆர்டர் போட்டிருக்கிறோம், வந்து விடும். அடிக்கடி வந்து பார்த்து விட்டுப் போங்கள், என்றார்கள். வியாபார தந்திரம் எப்படி, பாருங்கள்.

பின்பு பல முறை போய்ப்பார்த்தும் அந்த ஊறுகாய் வரவேயில்லை. முதலில் வாங்கினது தீர்ந்து விட்டது. அந்த ஊறுகாய் இல்லாமல் தயிர் சாதம் உள்ளே போகமாட்டேனென்கிறது. என்ன பண்ணலாம் என்று யோசித்தேன்.

அப்போதுதான் ஒரு யோசனை வந்தது. நாம் படித்த படிப்பென்ன, லேசான படிப்பா, வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்களே, இந்த மிளகாய் ஊறுகாய் என்ன, ஆர்ய வித்தையா? என்று முடிவு செய்து செயலில் இறங்கினேன். என்ன செய்தேன் என்று அடுத்த பதிவில் பாருங்கள்.

16 கருத்துகள்:

  1. மிளகாய் ஊறுகாய் எனக்கும் மிகவும் பிடிக்கும். குறிப்பாக புளி மிளகாய்!

    பதிலளிநீக்கு
  2. முதல் பாராவில் முதல் வரியினில் ஒத்துக்கொள்ளும் உண்மை உள்ளது. மனிதன் சாப்பிடுவது பசியை விட ருசிக்காக மட்டுமே.

    அதே முதல் பாராவில் அடுத்துவரும் வரிகளில் சமூக அக்கறை மிளிர்கிறது. //ATM க்யூவில் நின்றாலாவது இரண்டாயிரம் ரூபாய் செலவிற்குக் கிடைக்கும்.// அதுசரி .... நம் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் அல்லவா அதுவும் கிடைக்கக் கூடும் ?

    இரண்டாம் பாராவில் உங்கள் பாணியில் நல்ல நகைச்சுவை மிளிர்கிறது. :) ரஸித்தேன்.

    மூன்றாம் பாரா + நான்காம் பாராக்களைப் படிக்கும் போதே என் நாக்கிலும் அப்படியே ஜலம் ஊறி, தலைப்புத் தேர்வின் பொருத்தத்தை அறிய முடிகிறது.

    ஏனோ என் பதிவான ‘வெண்ணிலவைத் தொட்டு ... முத்தமிட ஆசை! .... மிளகாய்ப்பொடி கொஞ்சம் ... தொட்டுக்கொள்ள ஆசை!!’ நினைவுக்கு வந்தது. http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html .... [Total No. of Comments as on date: 187]

    ஐந்தாம் பாரா + ஆறாம் பாராக்களில், பாமர மக்களுக்கு இன்று செலவுகளுக்குச் சில்லறை நோட்டுக்கள் கிடைக்காமல் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது போன்ற தங்களின் அவஸ்தையை நன்கு உணர முடிகிறது.

    இறுதி பாரா மிகவும் த்ரில்லிங்காக உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை வாசகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

    மேலே காட்டியுள்ள படத்தைப் பார்த்துவிட்டு, கண்ணீர் நீர் வழிய மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம். தொடரட்டும் .... பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா, அடுத்த பதிவிற்கு வெயிட்டிங்!! நானும் மிளகாயில் ஒரு ஊறுகாய் செய்திருக்கிறேன் - http://middleclassmadhavi.blogspot.in/2011/05/blog-post_30.html - முடிந்தால் பாருங்கள்!!

    பதிலளிநீக்கு
  4. ​​
    கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பச்சைமிளகாயில் அல்வா செய்திருக்கிறார்கள். வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள்.
    ​ ​
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. ஆஹா... மிளகாய் வாங்கி தாங்களே ஊறுகாய் போட்டுட்டீங்க போல...
    ஊறுகாயும் தயிர்ச்சாதமும் என்றால் ஒரு பிடி பிடிக்கதான் சொல்லும்...

    பதிலளிநீக்கு
  6. பொதுவா சாப்பாட்டுப் பதிவை ஆவலுடன் படிப்பேன். எங்கம்மா இங்க வந்தபோது, சாப்பாட்டில உப்பு பத்தலை, காரம் போதலைனு சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இப்படி உப்பு போட்டால் ப்ரஷர் வராதோ, காரம் ஒத்துக்கொள்ளுமா என்றுதான் தோணியதே தவிர, வயதானால் ருசி குறைந்துவிடும் என்று தோன்றியதே இல்லை. நீங்கள் எழுதியதை வைத்து அதைத் தெரிந்துகொண்டேன்.

    எங்க அம்மாவுக்கு, ப.மிளகாய், பெருங்காயம், உப்பு அரைச்சது ரொம்பப் பிடிக்கும். எனக்கு ஶ்ரீராம் சொன்னதுபோல் புளி மிளகாய், (இதைச் சிலர் புளிக்கறி என்றும் சொல்கின்றனர்).

    நான் எப்போதும் பாக்கெட் சாமான்கள் வாங்கும்போது, ரொம்ப நல்லா இருந்தா அதில் உள்ள அட்ரஸ், போன் நம்பரைக் குறித்துக்கொள்வேன். நாமே நேரடியா போன் பண்ணிக் கிடைக்கும் இடத்தைத் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் என்ன செய்தீர்கள்? எக்குத் தப்பா ஏதாவது டிரை செய்து நல்லா வந்துடுச்சா?

    பதிலளிநீக்கு


  7. பச்சை மிளகாய் ஊறுகாய் -தங்களுடைய செயல் முறை விளக்கத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் !

    மாலி

    பதிலளிநீக்கு
  8. ஆஹா... காரசாரமா ஒரு பகிர்வு! கடைசில சஸ்பென்ஸ்! சீக்கிரம் அடுத்த பகுதியை பதிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஐயா, தங்கள் பச்சை மிளகாய் ஊறுகாய் செய்முறைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். தயவு செய்து ஏமாற்றிவ்டாதீர்கள்!

    பதிலளிநீக்கு
  10. 40 வயதிற்கு மேல் ஊறுகாய் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். காரணம் அது உப்பிலேயே ஊறுவதால். (அதை நினைவூட்டத்தான் மலையாளத்தில் உப்பிலிட்டது என்றும் கன்னடத்தில் உப்பினகாயி என்கிறார்கள் போலும்.)
    நீங்கள் என்னவென்றால் பச்சை மிளகாய் ஊறுகாய் சாப்பிடலாம் என்கிறீர்கள். அது போகட்டும். பச்சை மிளகாய் ஊறுகாய் தயாரிப்பது எப்படி என்ற தங்களின் பதிவிற்காக நானும் காத்திருக்கிறேன்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதான காலத்தில் மிகவும் சாத்வீகமான உணவுதான் உண்ண வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது உப்பு, காரம், புளிப்பு ஆகியவை மிகக் குறைவாக சேர்ந்த உணவுதான் சாப்பிடவேண்டும். ஆனால் இந்தப் பாழாய்ப்போன நாக்கும் மனதும் ஒத்துழைக்க மறுக்கிறதே? என்ன செய்ய?

      நீக்கு
  11. என்னால் இந்த மாதிரி காரத்தை உண்ண முடியாது நீர் நிறையக் கேட்கும் வயிறும் நீரால் நிறையும்

    பதிலளிநீக்கு