திங்கள், 17 டிசம்பர், 2012

பெட்டி போனாப் போகட்டே. தாக்கோல் இவட உண்டல்லோ!


கேரளாவில் ஒரு பிரபலமான கதை. அங்கு ஒரு நம்பூதிரி, ஒரு பிரயாணம் மேற்கொண்டார். அவருடைய உடமைகளெல்லாவற்றையும் ஒரு பெட்டியில் போட்டு நல்ல பூட்டினால் பூட்டி சாவியை பூணூலில் முடிந்து கொண்டார். போகும் வழியில் அவர் கொஞ்சம் கண்ணசந்து விட்டார். விழித்தபின் பார்த்தால் பெட்டியைக் காணவில்லை.

சக பிரயாணிகளிடம் விசாரித்தார். ஒருவரும் பெட்டியைப் பார்க்கவில்லை என்றனர். சக பிரயாணிகள் அனுதாபத்துடன் இவருக்கு ஆறுதல் கூறினர். அப்போது நம்பூதிரி சொன்னார்.

"பெட்டி போனால் போகட்டே. தாக்கோல் இவட உண்டல்லோ, ஆ கள்ளன் பெட்டியைத் திறக்கான் கூடி இவடதன்னே வரணும். ஆ சமயம் ஞான் அவனைப் பிடிக்கான்"

அப்படீன்னாராம்.

அர்த்தம் மனசிலாயோ?

"அதாவது பெட்டி போனா என்ன, சாவி என்கிட்டதான இருக்கு, அந்த திருடன் பெட்டியைத் திறக்க என்கிட்டதானே வந்தாகணும், அப்ப அவனை நான் பிடிப்பேன்."

கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கார்டுகளின் நெம்பரை வைத்துக்கொண்டு யார் என்ன செய்து விட முடியும்? கார்டு என்னிடம்தானே இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இருப்பார்கள்.

இந்தக் கார்டுகளின் நெம்பர் மட்டும் இருந்தால் போதும், தங்கள் கணக்கிலுள்ள எல்லாப் பணத்தையும் சுருட்டிவிடலாம் என்று அவர்கள் அறிய மாட்டார்கள்.

கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு, மற்றும் இன்டர்நெட் அக்கவுன்ட் வைத்திருக்கும் அன்பர்களே, கொஞ்சம் ஏமாந்தீர்களானால், நீங்கள் விழித்திருக்கும்போதே உங்கள் கண்ணாமுழியைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்கள். ஜாக்கிரதை.

உங்கள் கார்டு நெம்பர், பாஸ்வேர்டு ஆகியவை எக்காரணம் கொண்டும் அடுத்தவர்களுக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் அப்புறம் உங்கள் பணம் கோவிந்தாதான்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சக பதிவரை வருந்த விடலாமா?


திரு.கோபி அவர்கள் தன்னுடைய பதிவில் இவ்வாறு அங்கலாய்த்துள்ளார். 

http://ramamoorthygopi.blogspot.in/

R கோபி

"இதுபோன்ற புது விஷயங்களை அவ்வப்போது ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்வதற்காகவே எனக்கு ஏதேனும் விருதுகள் கொடுத்து கௌரவிக்கலாம். ஆனால் பாருங்கள் தமிழ்ச் சூழலில் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது:-)"


ஒரு சக பதிவர் இவ்வாறு சொல்வதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சொல்லாமல் செய்வர் பெரியோர். சொல்லிச் செய்வர் இடையோர்,சொல்லியும் செய்யார் கடையோர். நான் பெரியோராக இருக்கமுடியாவிட்டாலும் கடையோனாக இருக்க விரும்பவில்லை. அதற்காக கூகுளில் தேடி அவருக்கு ஒரு விருது கண்டுபிடித்தேன்.


அதை அவருடைய பதிவுலக் சேவையை பாராட்டி இந்த விருதை அவருக்கு அளிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.


இதோ விருது:




இதற்காக எனக்கு அவர் நன்றி சொல்ல வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்கிறேன். (அப்பொழுதுதான் அவர் நன்றி தெரிவிப்பார் என்று நம்புகிறேன்)

சனி, 15 டிசம்பர், 2012

பேங்க் கணக்கு வைத்திருக்கிறீர்களா?

உங்களில் அநேகமாக எல்லோரும் ஏதாவதொரு பேங்க்கில் கணக்கு வைத்திருப்பீர்கள். ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் அந்த கணக்குக்கான செக் புக், ஏடிஎம் அட்டை ஆகியவைகள் வைத்திருப்பீர்கள். ஏடிஎம் அட்டை உபயோகிப்பதற்கான வழி முறைகளைப் பின்னால் பார்ப்போம். இப்போது செக் உபயோகத்தைப் பற்றி சில தகவல்கள்.

வரும் 1-1-2013 முதல் புதுவகையான செக்குகள் (CTS 2010) உபயோகத்திற்கு வரப்போகின்றன. அதன் வடிவத்தைப் பாருங்கள்.


இதில் முக்கியமான ஒன்று இடது பக்கம் கீழே ஒரு கட்டம் இருக்கிறது. அந்தக் கட்டத்தில் கண்ணுக்குத் தெரிந்தோ தெரியாமலோ சில டிசைன்கள் இருக்கின்றன. இந்த டிசைன் ஒவ்வொரு பேங்க்கிற்கும் வித்தியாசப்படும். இந்த டிசைனை கம்ப்யூட்டரில் சேர்ந்து இருக்கும் ஒரு கருவி ஸ்கேன் செய்து அந்த செக் எந்த பேங்கினுடையது என்று துல்லியமாக கண்டு பிடித்துவிடும். இதனால் என்ன லாபம் என்று பார்ப்போம்.

செக் மூலமாக பணப்பரிவர்த்தனை எப்படி நடக்கிறது என்று நீங்கள் அறிந்திருக்கலாம். நீங்கள் உங்கள் கடைக்காரருக்கு ஒரு செக் கொடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ஸ்டேட் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கிறீர்கள். உங்கள் கடைக்காரர் கனரா பேங்கில் கணக்கு வைத்திருக்கிறார். அவர் அந்த செக்கை உபயோகித்து இரண்டு விதமாக பணம் பெறலாம்.

ஒன்று அந்த செக்கை நேரில் எடுத்துக்கொண்டு அந்த ஸ்டேட் பேங்க் கிளைக்குப் போய் பணத்தைப் பெறலாம். ஆனால் இதில் பல சிக்கல்கள் உள்ளன. அந்த செக் உண்மையாக உங்களுக்கு வந்ததுதானா, அதில் குறிப்பிட்டிருக்கும் நபர் நீங்கள்தானா என்று பலவிதமான கேள்விகள் கேட்டு அவர்களுக்கு நம்பிக்கை வந்த பிறகுதான் பணம் கொடுப்பார்கள். ஏனென்றால் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பலவிதமான தில்லுமுல்லுகள் நடந்திருக்கின்றன. சரியான நபருக்கு பணம் சேருவதற்கு பேங்க்தான் பொறுப்பு. ஆகவே அவர்கள் முன் ஜாக்கிரதையாகத்தான் செயல்படுவார்கள்.

இந்த வழி வழக்கமாக செக்குகளை பரிமாறிக் கொள்பவர்களுக்கு உகந்ததல்ல. ஆகவே அவர்கள் இரண்டாவது வழியைக் கையாளுவார்கள். அந்த வழி, அவர்கள் கணக்கு வைத்திருக்கும் பேங்க்கில் இந்த செக்கைக் கொடுத்து விட்டால் அவர்கள் அந்தப் பணத்தை வசூல் செய்து அவர்களுடைய கணக்கில் சேர்த்துவிடுவார்கள். இந்த நடைமுறை பேங்க்கில் செக்குடன் கூடிய கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் அறிந்ததே.

ஆனால் ஒரு பேங்க்கிலிருந்து இன்னொரு பேங்க்கிற்கு பணப் பரிவர்த்தனை எப்படி நடக்கிறது என்று சிலர் அறியாமல் இருக்கலாம். அவர்களுக்காகத்தான் இந்தக் குறிப்பு.

ஒவ்வொரு ஊரிலும் "கிளியரிங்க் ஹவுஸ்" என்று ஒரு அமைப்பு இருக்கிறது. இதை அந்த ஊரில் இருக்கும் ஒரு பெரிய பேங்க் நடத்தும்.  ஒரு பேங்கில் ஒரு நாளில் இது மாதிரி வரும் செக்குகளை எல்லாம் அந்த பேங்க், ஒரு ஆள் மூலமாக இந்த "கிளியரிங்க் ஹவுஸ்" க்கு கொண்டுபோய் கொடுப்பார்கள். அங்கு அந்த ஊரில் இருக்கும் அனைத்து பேங்குகளின் அனைத்து கிளைகளிலிருந்தும் இந்த மாதிரி ஆட்கள் செக்குகளைக் கொண்டு வருவார்கள்.

ஒரு பெரிய ஊரில் இந்த இடம் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணிப்பாருங்கள். நான் நேரில் போனதில்லை. ஆனால் ஏறக்குறைய சென்னை மீன்மார்க்கெட் மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன்.

அங்கு இந்த செக்குகளை எல்லாம் பிரித்து அந்தந்த பேங்க் கிளைகளுக்கு கொடுப்பார்கள். அந்த பேங்க்குக்கு செக்குகளை கொண்டு போனவரே, இந்தச் செக்குகளை வாங்கிக்கொண்டு தன்னுடைய கிளைக்கு வருவார். அவர் கொண்டு வந்திருக்கும் செக்குகள் அனைத்தும் அந்தக் கிளையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு காரியங்களுக்காக கொடுத்த செக்குகளாகும்.

இந்தச் செக்குகளை அந்த கிளையில் இருக்கும் ஒரு அலுவலர் பாஸ் செய்வார். அதாவது ஒவ்வொருவருடைய கணக்கிற்குள்ளும் போய், அந்தச் செக்குக்குத் தேவையான பண இருப்பு இருக்கிறதா என்று பார்த்து, பணம் இருந்தால் இந்தச் செக்கிற்கான பணத்தை கழிப்பார். இதுதான் செக் பாஸ் பண்ணுவது என்பது.

அப்போது ஏதாவது செக் பாஸ் ஆகாவிட்டால் உடனே "கிளியரிங்க் ஹவுஸ்" க்கு சொல்லவேண்டும். இல்லாவிட்டால் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டுவிடும்.

நீங்கள் ஒரு செக் உங்கள் கணக்கில் போட்டிருந்தால் அது "கிளியரிங்க் ஹவுஸ்" போய் பாஸ் ஆகி வரவேண்டும். உங்கள் செக் பாஸ் ஆகாவிட்டால் "கிளியரிங்க் ஹவுஸ்" உங்கள் பேங்கிற்கு உடனே தகவல் சொல்லிவிடும். அவர்கள் அந்த செக் பணத்தை உங்கள் கணக்கில் சேர்க்கமாட்டார்கள். அது தவிர பேங்கிற்கு வெட்டி அலைச்சல் கொடுத்ததற்காக உங்களுக்கு ஒரு அபராதம் போட்டு அதை உங்கள் கணக்கிலிருந்து உடனே எடுத்துக் கொள்வார்கள். அதே மாதிரி உங்கள் கணக்கில் போதிய இருப்பு இல்லாமல் நீங்கள் யாருக்காவது செக் கொடுத்திருந்தாலும் அதற்கும் அபராதம் உண்டு.

இந்த வேலைகளெல்லாம் முடிந்து ஒரு செக் பாஸ் ஆகி உங்கள் கணக்கிற்கு பணம் வந்து சேர இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். உள்ளூர் செக்குகளுக்கு இந்த கணக்கு. வெளியூர் செக்குகளின் தலைவிதி வேறு மாதிரியானது. அதற்கு ஒரு தனி பதிவு வேண்டும்.

இதுதான் இப்போது இருக்கும் நடைமுறை. இதில் உள்ள சங்கடம் கால தாமதம்தான். இதை தவிர்க்கத்தான் தற்போது புதிய நடைமுறையாக இந்த CTS செக்கைப் புகுத்தியிருக்கிறார்கள்.

இந்த புதிய நடைமுறையில், செக்குகளை "கிளியரிங்க் ஹவுஸ்" க்கு நேரில் கொண்டு செல்ல அவசியமில்லை. அந்தந்த பேங்க் கிளையில் உள்ள ஸ்கேனரில் இந்தச் செக்கை போட்டால் அதில் உள்ள விவரங்கள் ஒரு சென்ட்ரல் கம்ப்யூட்டருக்குப் போய் பாஸ் ஆகி உடனே உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.

எவ்வளவு சௌகரியம் பாருங்கள். நேரம் மிச்சம். அலைச்சல் மிச்சம். வியாபார நிறுவனங்களுக்கு உடனடியாகப் பணம் கிடைத்து விடும். ஆனாலும் முதலில் சில நாட்களில் சில சங்கடங்கள் ஏற்படலாம். ஆனால் இந்த ஏற்பாடு நடைமுறைக்கு வந்து விட்டால் எல்லோருக்கும் சௌகரியம்தான்.

ஆகவே அனைத்து பேங்குகளும் இப்போது இந்த புதிய செக்குகளைக் கொடுத்துக்கொண்டு இருக்கின்றன. இது வரை வாங்காதவர்கள் உடனடியாக வாங்கி விடுங்கள். புது வருடத்திலிருந்து பழைய செக்குகள் அந்தந்த பேங்கில் பணம் வாங்குவதற்கு மட்டுமே பயன்படும். வேறு  யாருக்கும் அந்த செக்குகளைக் கொடுக்க முடியாது.

இன்னொரு விஷயம். இந்தச் செக்குகளை எழுதும்போது கவனமாக இருக்கவேண்டும். ஏதாவது அடித்தல் திருத்தல்கள் இருந்தால் செக் பாஸ் ஆகாது. அப்போது புது செக்தான் எழுதவேண்டும். இரண்டாவது எழுதுவது அழுத்தமான கலர் இங்க் உள்ள பேனாவால்தான் எழுதவேண்டும். மங்கலான எழுத்துக்களை ஸ்கேன் மிஷின் படிக்கமுடியாது.

பின் குறிப்பு: இந்தப் பதிவு நியாயமாக திரு. நடனசபாபதி மாதிரி பேங்கில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்தான் எழுத வேண்டும். ஆனால் நானும் (ஒரு பிரபல பதிவர்) பதிவு எழுத சமாசாரம் வேண்டுமல்லவா? அதனால் முந்திக்கொண்டேன். இந்தப் பதிவில் உள்ள ஓட்டை உடைசல்களை திரு. நடனசபாபதி அவர்கள் அலசுவார். அவருக்கும் ஒரு பதிவிற்கு வழி காட்டிவிட்டேன்.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

உலகம் அழியுமா?


மனிதன் விஞ்ஞானத்தில் எவ்வளவோ உயர்ந்திருக்கிறான். பல சாதனைகள்புரிந்திருக்கிறான். மரணத்தை வெல்ல முடியவில்லையே தவிர மனிதனின் பல நோய்களுக்கு தீர்வு கண்டு மனிதனின் ஆயுளை அதிகரித்திருக்கிறான்.

அப்படிப்பட்ட காலத்தில் யாரோ சிலர் ஒரு அபத்தமான கொள்கையின்படி இந்த உலகம் 21-12-12 அன்று அழியப்போகிறது என்று சொன்னால் அதையும் நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அதிசயம்.

பகவத் கீதையில் பகவான் சொல்லியிருக்கிறாராம். உலகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்கும்பொழுது நான் அவதரித்து தர்மத்தைக் காப்பாற்றுவேன் என்று. மத நம்பிக்கையுள்ளவர்கள் இதை நம்புகிறார்கள். ஆனாலும் கீதையில் நான் இத்தனாம் தேதி வருகிறேன் என்று கிருஷ்ணர் சொல்லவில்லை.

ஆனால் இந்த மாயன் கேலண்டர்காரர்கள் தேதியைக் குறிப்பிட்டு உலக அழிவை சொல்கிறார்கள். இது ஒரு அப்பட்டமான புளுகு. இதை நம்புகிறவர்கள் தங்கள் அறிவை அடகு வைத்துவிட்டார்கள் என்று பொருள்.

வியாழன், 13 டிசம்பர், 2012

போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே

நான் இந்த பிளாக்கிலிருந்து விடை பெற்றுப் போய் ஏறக்குறைய பத்து நாட்கள் ஆகின்றன. வேர்டு பிரஸ்ஸில் ஒரு பிளாக் ஆரம்பித்தேன். அவர்கள் எதற்கெடுத்தாலும் துட்டு கேட்கிறார்கள். மேலும் நான் ஒரு HTML Code ஐ பதிவு செய்ய முயற்சித்தேன். முடியவில்லை.

சிரங்கு பிடித்தவன் கையும் பிளாக் எழுதினவன் கையும் சும்மா இருக்காதுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?

அதுவுமில்லாமல் என் பதிவின் புள்ளி விவரங்களைப் பார்த்தேன். கொஞ்சம் நன்றாக இருக்கிறது.


ஆகவே "சுவத்துக் கீரையை வழிச்சுப் போடடி, சொரணை கெட்டவளே" என்றபடி திரும்பி கூகுளாண்டவரே கதி என்று சரண்டைந்து விட்டேன். என்ன இருந்தாலும் "தெரியாத தேவதையைவிட தெரிந்த சைத்தானே மேல் அல்லவா".

செவ்வாய், 4 டிசம்பர், 2012

விடை பெறுகிறேன்

இந்தப் பதிவுலகிற்கு நான் வந்ததன் நோக்கம் இதிலுள்ள நுட்பங்களை தெரிந்து கொள்ளத்தான்.

அந்த நுட்பங்களையும் இதிலுள்ள அரசியலையும் நன்கு கற்றுக்கொண்டேன்.

என் பதிவுகளைத்  தொடர்ந்து வந்து எனக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப் படுத்தியவர்களுக்கும், என் பதிவுகளை வாசித்தவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு சலிப்பு வந்து விட்டது. என்னால் இனி தொடர முடியாது. விடை பெற்றுக்கொள்கிறேன்.

திங்கள், 3 டிசம்பர், 2012

எனக்கு கிடைத்த பட்டம்

http://www.nambalki.com/2012/11/1_27.html

மேலே கொடுத்துள்ள பதிவில் வந்த ஒரு பின்னூட்டம்.
mubarak kuwait said...
பொதுவாக வெளிநாட்டில் வேலை பார்பவர்களை பார்த்து உள்ளூரில் இருப்பவர்கள் கேட்பதுதான், அதை நாம் பெரிதாக எடுத்து கொள்ள தேவை இல்லை, இதை ஒரு சாதரணமானவர்கள் சொன்னால் விட்டு விடலாம், படித்த சிந்தனையாளர் திரு பழனி கந்தசாமி சொல்வது நகைப்பிற்குரியது மேலும் அவரின் பொறாமையை காட்டுகிறது, இந்திய மக்கள் வரிபனத்தில் படித்த உள்ளூர் டாக்டர்கள் எல்லாம் முழு சேவை நோக்கத்தோடுதான் வைத்தியம் செய்கிறார்களா? அரசு மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்பதற்கும் இவர்கள் தனியாக கிளினிக் நடத்தும் இடங்களும் வேறுபாடுகள் இல்லையா? மக்கள் வரிபனத்தில் படித்து விட்டு மக்கள் வரிபனத்தில் சம்பளம் வாங்கி கொண்டு முறையாக வைத்தியம் பார்காதவர்களை விட, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மேல், நாம் வெளிநாட்டில் இருந்தாலும் நம் வருமானத்தை நம் தாய் நாட்டிர்க்குதானே அனுப்பிகிறோம், நம் நாட்டிற்கு எவ்வளவு அந்நிய செலவாணியை கொடுக்கிறோம்.
அப்புறம் டாக்டர் அண்ணே. பப்பாளி இலை டெங்கு நோயை குனபடுதுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

சிந்தனைத் தெளிவு


நாம் நம் வாழ்க்கையில் பல அனுபவங்களைப் பெறுகிறோம். பல நூல்களைக் கற்கிறோம். பலருடன் கலந்து பழகுகிறோம். அறிஞர்களின் பேச்சைக் கேட்கிறோம். மதத் தலைவர்களின் அறிவுரைகளைக் கேட்கிறோம். இவைகளினால் நம் மூளையில் ஏகப்பட்ட செய்திகள் சேர்ந்திருக்கின்றன.

இத்தனை செய்திகளையும் ஏதோ ஒரு வகையில் நம் வாழ்க்கையை வாழ உபயோகப்படுத்துகிறோம். ஆனாலும் ஒரு வகைக் குழப்பத்தோடுதான் பெரும்பாலானவர்கள் வாழ்கிறார்கள். ஏன் என்றால், நாம் செய்வது சரிதானா இல்லையா என்ற குழப்பம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம் நாம் பல செய்திகளைச் சேகரித்தோமே தவிர, அவைகளைப் பற்றி சிந்திக்கத் தவறி விட்டோம்.

செய்திகளினால் எப்போது பயன் ஏற்படும் என்றால், அந்தச் செய்திகளிலிருந்து நம் வாழ்க்கைக்குப் பயன்படும் குறிக்கோள்கள், நெறிமுறைகள் ஆகியவற்றை நாம் சிந்தித்து, உணர்ந்து, அவைகளைக் கடைப்பிடித்தால்தான் ஏற்படும். இந்த சிந்தனை ஒவ்வொருவரும் தனித் தனியாகத்தான் செய்யவேண்டும். உங்களுக்காக நான் சிந்திக்க முடியாது. அப்படி சிந்தித்து வழ்க்கையைப் பற்றி, எப்படி வாழ வேண்டும் என்ற கொள்கையைப் பற்றிய தெளிவு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

அதுதான் “தன்னையறிதல் அல்லது மெய்ஞ்ஞானம் பெறுதல்” என்று கூறப்படுகிறது. இந்த சிந்தனைத் தெளிவு ஏற்பட்டால்தான் மனதில் அமைதி உண்டாகும். உங்கள் வாழ்க்கையை செம்மையாக வாழ முடியும். நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று வேறு யாரும் சொல்லிக்கொடுக்க முடியாது. ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கை. நீங்களாக ஒரு தெளிவு பெற்று வாழ்ந்தால்தான் அந்த வாழ்க்கையில் சிக்கல்கள் வரும்போது உங்களால் சிந்தித்து ஒரு தீர்வு காண முடியும்.

இந்தத் தெளிவு இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் சிக்கல்கள் தோன்றும்போது அறிவுரைக்காக யாரையாவது தேடிக்கொண்டு போவீர்கள். பொதுவாகப் பலரும் இந்த நிலையில் தேடிப்போவது ஜோசியரைத்தான். அவர் சில பரிகாரங்கள் சொல்லுவார் அல்லது கோவில்களுக்குப் போகச்சொல்வார். இது சாதாரண மனோதத்துவ ஆலோசனைதான். நீங்களே இந்த யோசனையை அடுத்தவர்களுக்கு சொல்வீர்கள். ஆனால் உங்களுக்கு என்று வரும்போது மனது சஞ்சலப்படுகிறது. வெளியிலிருந்து ஆலோசனை உங்களுக்குத் தேவைப்படுகிறது.

இந்த முறையில் நீங்கள் உங்கள் மனதைப் பழக்கப்படுத்தி விட்டால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஜோசியரையோ அல்லது கடவுளையோ நாடவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏனென்றால் உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கையில்லை. வெளியிலிருந்து ஒரு ஆதரவு தேவைப்படுகிறது. அதை ஜோசியரிடமும் கடவுளிடமும் தேடுகிறீர்கள்.

இது அவ்வளவு நல்ல வழி அல்ல. இந்த முறையினால் உங்களுக்கு எப்பொழுதும் மனத்திருப்தி ஏற்படாது. ஜோசியர்களை மாற்றுவீர்கள். கடவுள்களை மாற்றுவீர்கள். இதனாலெல்லாம் நீங்கள் விரும்பும் நிலை ஏற்படாவிட்டால் மனச்சோர்வு அடைவீர்கள். உங்கள் வாழ்க்கை சுக்கானில்லாத கப்பல் போல் ஆகும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு சிந்தனைத் தெளிவுதான். நன்றாக சிந்தியுங்கள். சிந்தித்து தெளிவு பெறுங்கள். குழப்பங்களை அகற்றுங்கள். வாழ்க்கையை எளிமைப்படுத்துங்கள். ஆனந்தம் உங்களைத்தேடி வரும்.

சனி, 1 டிசம்பர், 2012

கடவுள் வாங்கும் லஞ்சம்.


எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை தமிழாக்கம் செய்து போட்டிருக்கிறேன்



இந்தியாவில் லஞ்சம் என்பது மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போயிருக்கிறது. லஞ்சத்தை இந்தியர்கள் தவறாகவே நினைப்பதில்லை. அது எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஒரு விஷயம்.

இந்தியர்கள் லஞ்சம் வாங்குபவர்களை சகித்துக்கொள்ளுகிறார்கள். அவர்களை ஒருபோதும் திருத்த முயலுவதில்லை. எந்த மனிதனும் பிறக்கும்போது லஞ்ச எண்ணத்துடன் பிறப்பதில்லை. அவன், தான் வாழும் கலாசாரத்திலிருந்துதான் லஞ்சத்தை கற்றுக்கொள்கிறான்.

இந்தியர்கள் ஏன் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்.

முதலாவதாக அவர்களின் மதம், பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் கடவுளுக்கு பணம் கொடுத்து தங்களுக்கு முறை தவறிய சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள். இந்த பேரத்தில் தகுதியில்லாதவர்களும் பரிசினைப் பெற வழி உண்டாகிறது.

பணக்காரர்களும் பதவியில் இருப்பவர்களும், கடவுளுக்கு பணமாகவும் தங்கமாகவும் அள்ளிக்கொடுக்கிறார்கள். எதற்காக? கடவுள் தங்கள் பதவியையும் பணத்தையும் காப்பாற்றுவார் என்பதற்காகத்தானே? அப்போது அது லஞ்சம் அல்லவா?

இப்படி கடவுளுக்கே லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதினால், கோவிலுக்கு வெளியேயும் அதே முறையைக் கையாளுவதில் தவறு இல்லை என்று நம்புகிறார்கள்.

2009 ஜூன் மாதம் ஜி.ஜனார்த்தன ரெட்டி என்பவர் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரத்தினாலான கிரீடத்தை திருப்பதி கோவிலுக்கு கொடுத்திருக்கிறார். ஏழைகளுக்கு இம்மாதிரி கொடுப்பதை வீண் என்று இத்தகையோர்கள் கருதுகிறார்கள். இந்தியாவின் கோவில்களில் சேர்ந்துள்ள அளவுக்கதிகமான செல்வங்களை என்ன செய்வதென்று கோவில் நிர்வாகத்திற்கு தெரியவில்லை. கோடிக்கணக்கான செல்வங்கள் கோவில்களில் புழுதி படிந்து கிடக்கின்றன.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தபோது பள்ளிகளும் கல்லூரிகளும் கட்டினார்கள். இந்தியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து போனபோது கோவில்கள் கட்டினார்கள்.

அடுத்ததாக இந்தியர்களின் தனி மனித தார்மீகக் கொள்கை கேள்விக்குரியது. இந்திய வரலாற்றில் பல ராஜ்யங்கள் அந்த நாட்டு சேனைத் தலைவர்களுக்கு கையூட்டு கொடுத்து கைப்பற்றப் பட்டவைதான். இது இந்தியாவிற்கே உள்ள தனிப்பட்ட குணம். கிரீஸ் மற்றும் ஐரோப்பாவில் நடந்துள்ள வீரம் மிக்க யுத்தங்களைப் பார்க்கும்போது, இந்தியாவில் யுத்தங்கள் எப்படி லஞ்ச லாவண்யத்தால் முடிவு செய்யப்பட்டன என்பது கேவலமாக இருக்கிறது.

இந்தியாவில் யுத்தங்களில் சண்டை போடவேண்டிய அவசியமே இல்லை. அனைத்து போர்களும் லஞ்சத்தினால்தான் முடிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு ராஜாவிடம் எவ்வளவு படைகள் இருந்தாலும் பணத்தினால் அவைகளை வெல்லமுடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பிளாசி யுத்தத்தில் லஞ்சம் கொடுக்கப்பட்டதினால் இந்திய வீரர்கள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. இன்றும் பாகிஸ்தான் உளவாளிகள் இந்திய சிப்பாய்களுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு காஷ்மீருக்குள் வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. கிளைவ் வெறும் மூவாயிரம் சிப்பாய்களை வைத்துக்கொண்டு மீர் ஜாபருக்கு லஞ்சம் கொடுத்து முழு வங்காளத்தையும் வெற்றி கொண்டதாக சரித்திரம் கூறுகிறது.

இந்தியக் கோட்டைகள் அனைத்தும் தகுந்த ஆட்களுக்கு பணம் கொடுத்தே பிடிக்கப்பட்டிருக்கின்றன.

ஏன் இந்தியர்கள் மட்டும் இவ்வாறு இருக்கிறார்கள்?

இந்தியர்கள் தாங்கள் ஒவ்வொருவரும் நியாயமாக நடந்தால் எல்லோரும் முன்னேறலாம் என்ற கொள்கையில் நம்பிக்கையில்லாதவர்கள். (ராஜா அண்டாவில் பால் ஊற்றச் சொன்ன கதையை நினைவில் கொள்ளவும்.)

ஏனென்றால் அவர்கள் மத நம்பிக்கையில் இந்த ஒற்றுமையைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. அவர்களுடைய ஜாதிகள் அவர்களை தனித்தனியாகப் பிரித்து வைத்திருக்கிறது. எல்லோரும் சமம் என்று அவர்கள் நம்புவதில்லை. இதனால் அவர்களுக்குள் பேதங்கள் ஏற்பட்டு பல மதங்களாக, சீக்கியர், பௌத்தர், சைனர் என்று பிரிந்தார்கள். பலர் கிறித்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மாறினார்கள். இதனால் இந்தியாவில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் நம்புவதில்லை.

இந்தியாவில், இந்தியர்கள் யாரும் இல்லை. இந்துக்கள், கிறித்தவர்கள், முஸலிம்கள் ஆகியோர்தான் இருக்கிறார்கள். இந்த வேறுபாடுகள் ஒரு மோசமான கலாசாரத்தை உருவாக்கியுள்ளது. இதே வேறுபாடுகள்தான் லஞ்சம் மிகுந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொருவரும் அடுத்தவனுக்கு எதிரி – கடவுளைத்தவிர, ஆனால் அவருக்கும் காரியம் நிறைவேற லஞ்சம் கொடுக்கவேண்டும். 

வெள்ளி, 30 நவம்பர், 2012

கடவுள் சைவமா, அசைவமா?


இத்தகைய கேள்விகளையே கேட்கக்கூடாது, இதுதான் தமிழனின் முக்கிமான கெட்ட குணம், நாங்கள் சொல்வதை அப்படியே கேட்டு நம்புகிறவர்கள் மட்டும் எங்களிடம் வந்தால் போதும் என்று சொல்லும் மத குருமார்கள் இருக்கிறார்கள். நன்றாகவே இருக்கிறார்கள்.

ஆனாலும் சமீப காலங்களில் இந்த சைவ, அசைவ உணவுகளைப் பற்றிய விழிப்புணர்வு பதிவுலகில் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாகத்தான் இந்த சந்தேகம் என் மனதில் தோன்றியது.

இரண்டு விதமான கடவுள்களும் இருக்கிறார்கள். ஆடு, மாடு, எருமை, கோழி இவற்றைப் பலி கொடுக்கும் கடவுள்கள் நிறைய இருக்கின்றன. கோவில் மடப்பள்ளியில் அய்யர் சமைத்ததைத்தான் சாப்பிடுவேன் என்று சொல்லும் கடவுள்களும் இருக்கிறார்கள்.

கடைசியில் பார்த்தால் கடவுள் பெயரைச் சொல்லி மனுசன் சாப்பிடுகிறதுக்காகத்தான் இந்த படையல்களெல்லாம். இந்த வழக்கங்களெல்லாம் எப்போது யாரால் முறைப்படுத்தப்பட்டன என்று தெரியவில்லை. எது சரி என்றும் தெரியவில்லை?

எது எப்படியானாலும் மனிதன் தன்னுடைய தேவைக்கேற்பவும் கற்பனைக்கேற்பவும் கடவுள்களைப் படைத்திருக்கிறான். தனக்கும் பிடித்த உணவு வகைகளை கடவுள் பெயரைச்சொல்லி சாப்பிடுகிறான். ஆகவே ஒரு வகை உணவுதான் சிறந்தது மற்ற வகை உணவு தாழ்ந்தது என்று கருதவேண்டியதில்லை.

புதன், 28 நவம்பர், 2012

சட்டமும் மனிதாபிமானமும்

சட்டம் பெரிதா? மனிதாபிமானம் பெரிதா?

நீதி அறிந்தவர்கள் எப்பொழுதும் மனிதாபிமானத்திற்கே முதலிடம் கொடுத்துள்ளார்கள். இந்திய நீதித்துறையின் கோட்பாடுகளின்படி, சட்டத்திலுள்ள ஓட்டைகளினால் 99 சதம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பித்தாலும் சரி, ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான். அதனால்தான் பெரிய குற்றங்களில் கூட குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெறுவதில்லை.

மாவட்ட ஆட்சியர்களுக்குள்ள வரம்பற்ற அதிகாரங்களைப் பற்றி சாதாரண குடிமகன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த அதிகாரங்களை அவர் சாதாரண நேரங்களில் பயன் படுத்துவதில்லை. பேரிடர் காலங்களில் மட்டுமே பயன்படுத்துவார். இது முற்றிலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் செயல்பட அவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள்.

ஒவ்வொரு உயர் அதிகாரிக்கும் இப்படிப்பட்ட அதிகாரங்கள் உண்டு. ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் பயம். நாளைக்கு யாராவது கேள்வு கேட்டால் என்ன சொல்வது என்ற பயம். இன்ன காரணத்திற்காக பொது நன்மைக்காக அல்லது ஒரு தன் மனிதனின் உரிமையைக் காக்க, இந்த முடிவை நான் எடுத்தேன் என்று சொல்லக்கூடிய தார்மீக பலம் அவர்களுக்கு இல்லை.

சமீப காலத்தில் பல கொலைகளில், அவை தற்காப்பிற்காக செய்யப்பட்டவை என்று பட்டவர்த்தனமாகத் தெரிந்தபோது உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை அரெஸ்ட் கூட செய்யாமல் விட்டிருக்கிறார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் சட்டத்தை விட மனிதாபிமானம்தான் உயர்ந்தது என்று அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் சரித்திரம் நினைவு கொள்கிறது.

என் சர்வீசில் நடந்த ஒரு சம்பவம். நான் தஞ்சாவூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் இரவு 8 மணிக்கு ஆபீஸ் ஜீப்பில் என் இருப்பிடத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தேன். நான் அப்போது தஞ்சாவூர் அவுட்டரில் ஒரு வீட்டில் குடியிருந்தேன். அப்பாது லேசாக மழை தூறிக்கொண்டு இருந்தது. மின்சாரமும் இல்லை. ரோடு முழுவதும் இருட்டு.

என் வீட்டிற்கு சமீபத்தில் வந்து கொண்டிருக்கும்போது ஒரு வயதான அம்மா கையைக் காட்டி என் வண்டியை நிறுத்தினார். நான்தான் ஜீப்பை ஓட்டிக்கொண்டு வந்தேன். நான் வண்டியை நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்கு அந்த அம்மா, "என் மகளுக்கு பிரசவ வலி வந்திருக்கிறது. உடனே ஆஸ்பத்திருக்குப் போகவேண்டும். இந்த இருட்டிலும் மழையிலும் ஒரு ஆட்டோ கூட இந்தப் பக்கம் வரவில்லை. நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்" என்றார்கள்.

அரசு வண்டியை சொந்தக் காரியங்களுக்கு பயன் படுத்தக்கூடாது என்பது சட்டம்.  ஆனால் அங்கு நான் எதிர்கொள்வது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. நான் அதிகம் யோசிக்கவில்லை. சரி, வாருங்கள் என்று அந்த அம்மாவின் வீட்டிற்குச் சென்று அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு, நான்கு கி.மீ. தூரத்திலுள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தேன். அந்த அம்மா பலமுறை நன்றி சொல்லிவிட்டு ஐந்து ரூபாய் கொடுத்தார்கள். நான் அந்தப் பணத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

நான் செய்தது சட்டத்திற்குப் புறம்பாயிருக்கலாம். ஆனால் என் மனச்சாட்சியின்படி அது ஒரு மனிதாபிமானச் செயல். அதை நான் செய்திருக்காவிடில் என் ஆயுள் முழுவதும் என் மனச்சாட்சி என்னைக் குத்திக்கொண்டு இருந்திருக்கும். இந்த காரியத்திற்காக எனக்கு ஏதும் தண்டனை வந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன். என்னுடைய பெரிய அதிகாரியை அடுத்த முறை சந்தித்தபோது இதைச் சொன்னேன். அவர் நீ செய்தது சரிதான், ஆனால் வண்டியின் லாக்புக்கில் எழுதாதே, பின்னால் ஆடிட்டர்கள் வீணாக தொந்திரவு செய்வார்கள் என்று சொல்லிவிட்டார்.

ஒவ்வொரு உயர் அதிகாரியும் இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக, மனிதாபிமான அடிப்படையில், முடிவுகள் எடுக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதே நிதரிசனம்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

நம்பள்கியின் கேள்விக்கு பதில்.


வருத்தத்திற்குரிய நிகழ்வு.
டாக்டர் பழனி.கந்தசாமி ஐயா, இந்த வருத்தம் ஏன் தினமும் இறக்கும் 5000 இந்தியக் குழந்தைகளிடம் யாருக்கும் இல்லை; அதுதான் என் கேள்வி?

நீங்கள் இதற்க்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் டாக்டர் பழனி.கந்தசாமி ஐயா; எனக்கு பல பெரிய மனிதர்கள் "இந்தியாவில்" சிந்திப்பது இன்றும் புரியவில்லை; உங்களையும் சேர்த்துதான் இந்தக் கேள்வி.
'
ஒரு வேளை சிகப்பாக இருந்தால் "மட்டுமே" இந்திய அரசாங்கம் கேள்வி கேட்குமா? உதவி செய்யுமா? நீங்கள் பெரிய மனிதர்; நீங்கள் இதற்க்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்...

[[
பழனி.கந்தசாமி said...வருத்தத்திற்குரிய நிகழ்வு.]]


நம்பள்கியின் இந்தக் கேள்வியை இன்றுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் பிறந்து இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து இன்று அமெரிக்க சிகப்புத்தோல்களுக்கு சேவை புரியும் நீங்கள் இந்த 5000 குழந்தைகளின் இறப்புக்காக என்ன செய்தீர்கள் என்று சொல்லிவிட்டு, அப்புறம் எங்களைக் கேள்வி கேளுங்கள், பதில் சொல்கிறோம்.


திங்கள், 26 நவம்பர், 2012

நல்ல கலந்துரையாடல் - எப்படி இருக்கவேண்டும்?


சமீபத்தில் நானும் என்னுடைய இரு நண்பர்களும் என்னுடைய ஒரு உறவினர் வீட்டுக்குப் போயிருந்தோம். இதுதான் முதல் முறையாக அவர் வீட்டுக்குப்பொவது.

நாங்கள் சுமார் அரை மணி நேரம் இருந்தோம். நான் போனவுடன் என் நண்பர்களை அறிமுகப்படுத்தினேன். கொஞ்ச நேரம் கழித்து அவர் மனைவி ஸ்வீட், காரம் கொண்டுவந்து வைத்தார்கள்.

நாங்கள் போனதிலிருந்து விடை பெற்றுக்கொள்ளும் வரை, நாங்கள் அங்கே இருந்த அரை மணி நேரம் முழுவதும் அவர்தான் பேசிக்கொண்டிருந்தார். அவர் பெண்களின் புகுந்த வீட்டுப் பெருமை, தன் உத்தியோக காலத்திய பெருமை ஆகியவைகளைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தாரே தவிர, என்னைப்பற்றியோ, என்னுடன் வந்த நண்பர்களைப் பற்றியோ ஒன்றும் விசாரிக்கவில்லை.

இந்த மாதிரி அநேகம் பேர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழில் "கழுத்தறுப்பு" என்றும் ஆங்கிலத்தில் "போர்" என்றும் பெயர் வைத்திருக்கிறோம். ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.