வியாழன், 12 ஆகஸ்ட், 2010

கேதார்-பத்ரி யாத்திரை - 3 விமான பயணமும் சாதாரண குடிமகனும்.


கேதார்-பத்ரி யாத்திரை – 3
விமான பயணமும் சாதாரண குடிமகனும்.

(தப்பா எடுத்துக்காதீங்க, குடிமகன் = Ordinary Citizen, இப்பெல்லாம் செந்தமிழ்ல சொன்னாத்தான் ரொம்ப பேருக்கு புரியுது)



முந்தி பிந்தி ஏரோப்பிளேன்ல போகாதவங்களுக்கு விமான நிலைய வாசல்ல போயி இறங்கினவுடனே தலையும் புரியாது, காலும் புரியாது. இது சகஜம். ரெண்டு தடவ போய்ட்டு வந்தாச்சுன்னா, அப்புறம் ஏரோப்பிளேன்லயே பொறந்து வளர்ந்தா மாதிரிதான் பேச்சு வரும்.
டாக்சிக்காரன் ஏர்போர்ட் வாசலுக்கு கொஞ்ச தூரத்திலயே இறக்கி உட்டுட்டு சார்ஜை வாங்கிட்டுப் போய்டுவான். நீங்க திருதிருன்னு முளிச்சுட்டு நிக்கப்படாது. நாலு பக்கமும் சுத்தி ஒரு லுக் உடுங்க. உங்களை யாரும் பாக்கமாட்டாங்க. எல்லோரும் அவங்கவங்க வேலைலதான் கவனமாயிருப்பாங்க. அதனால வெக்கப்படாதீங்க. மொதல்ல உள்ள போறதுக்கு வாசல் எங்க இருக்குன்னு கண்டு பிடிங்க. எல்லாப்பயலும் சாமான்களையெல்லாம் ஒரு தள்ளு வண்டியில வச்சுட்டு ஒரு பக்கமாப்போய்ட்டு இருப்பானுங்க. அதுதான் வாசல். நீங்களும் அந்த மாதிரி ஒரு தள்ளு வண்டியப் புடிங்க. அங்கதான் பக்கத்துல எங்காச்சும் இருக்கும். அதுக்கு ஒண்ணும் காசு கொடுக்கவேண்டாம். ஒருத்தன் கிட்டயும் கேக்கவும் வேண்டாம்.

உங்க சாமான்களையெல்லாம் தள்ளுவண்டியில ஏத்தி தள்ளீட்டே ஏர் போர்ட் வாசலுக்குப் போங்க. உங்க டிக்கட், அடையாளச்சீட்டு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா கையில வச்சுக்குங்க. அங்க வாசல்ல செக்யூரிடி அதைச் செக் பண்ணீட்டுத்தான் உள்ள உடுவான். உள்ள போனவுடனே நீங்க பறக்க வேண்டிய பிளேன் கம்பெனிக்காரங்க உங்களைப் பிடிச்சுவாங்க. உங்களை செக்இன் கவுன்ட்டருக்கு கூட்டிட்டுப்போவாங்க. அங்க உங்க ஏரோப்பிளேன்னுக்குள்ள போடற லக்கேஜ்களை மட்டும், அங்க வச்சிருக்கிற எடை மேடைல வச்சிருங்க. அவங்க லக்கேஜ் எடை, லிமிட்டுக்குள்ள இருக்கான்னு பாத்துட்டு ஒவ்வொரு லக்கேஜுக்கும் ஒவ்வொரு சீட்டுப்போட்டு, அதில ஒரு பாதியை லக்கேஜுல கட்டீடுவாங்க. மீதி பாதிய உங்களுக்கு கொடுக்கப்போற போர்டிங்க் பாஸுல ஒட்டிக்குடுப்பாங்க. உங்க டிக்கட்டப் பார்த்து உங்களுக்கு சீட் நெம்பர் கொடுத்து ஒரு சீட்டு கொடுப்பாங்க. அதைத்தான் போர்டிங்க் பாஸ்னு சொல்லுவாங்க.

அதை வாங்கிட்டு செக்யூரிட்டி செக்கப்புக்கு போகணும். நீங்க ஏரோப்பிளேனுக்குள்ள கொண்டு போற பைகளை கையில எடுத்துட்டு இந்த செக்யூரிடி கேட்டுக்குப் போகணும். இங்க உங்க பைகளை வாங்கி ஸ்கேன் மெஷினுக்குள்ள அனுப்பீடுவாங்க. உங்களை செக்யூரிடி ஸ்கேன் வாசல் வழியா வரச்சொல்லுவாங்க. நீங்க எதாச்சும் வெடிகுண்டு எடுத்துட்டுப் போனீங்கன்னா இந்த மெஷின் காச்சுமூச்சுன்னு சத்தம் போடும். அதக்கேட்டவுடனே செக்யூரிடி ஆளுங்க உங்களைத் தனியா தள்ளீட்டுப்போய் தனியாக் கவனிப்பாங்க. அப்படி வெடிகுண்டு ஒண்ணும் கொண்டு போகலீன்னா அந்த மெஷின் பேசாம சாதுவா இருக்கும். அப்புறமும் போலீஸ்காரன் (காரி) உங்களைத்தடவிப்பார்த்துட்டு அப்புறம்தான் அனுப்புவான். அதத்தாண்டி அந்தப்பக்கம் போனீங்கன்னா உங்க கைப்பை ஸகேன் ஆகி வந்திருக்கும். அதிலயும் வெடிகுண்டு இல்லைன்னா அத எடுத்துக்கிட்டு போயி அங்க இருக்கற சேர்கள்ள உக்காந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

நீங்க போகப்போகிற ஏரோப்பிளேன் எங்கிருந்தாவது வந்து அப்புறம் நீங்க போகவேண்டிய ஊருக்குப் புறப்படும். மைக்குல இதயெல்லாம் சொல்லுவாங்க. கவனமா கேட்டுக்கோணும். உங்க பிளேன் புறப்பட ரெடியான உடனே அதுல பொறவங்க எல்லாம் வாங்கன்னு அறிவிப்பு கொடுப்பாங்க. அதக்கேட்டவுடனே புறப்பட்டு பிளேனுக்குப் போக வேண்டியதுதான். சில ஊர்கள்ல பிளேன் கொஞ்ச தூரத்தில நிற்கும். அப்ப உங்களை பஸ்சில ஏத்திக் கூப்பிட்டுட்டுப் போவாங்க. பிளேன் கிட்ட போனதும் பஸ்சைவிட்டு இறங்கி பிளேன்ல ஏர்றதுக்கு ஒரு ஏணி வச்சிருப்பாங்க.  அதன் முதல் படியில பிளேனோட கண்டக்டர் (?) நின்னிட்டிருப்பார். அவர்கிட்ட உங்க போர்டிங்க் பாஸைக் கொடுக்க வேண்டும். அவர் அதுல பாதியைக் கிழிச்சிட்டு மீதிய உங்க கிட்ட கொடுத்துடுவாரு. மேல ஏரோப்ளேன் வாசலுக்குப் போனா, அங்கே ஒரு சினிமா நடிகை மாதிரி ஒருத்தி, உங்களைக் கும்பிட்டு வாங்கன்னு வரவேற்பாங்க. அதை தலையாட்டி ஏத்துக்கிட்டு உள்ள போனா எங்க உக்கார்ரதுன்னு தெரியாம முளிக்காதீங்க. உங்க போர்டிங்க் பாஸ்ல சீட் நெம்பர் குறிச்சிருக்கும். உள்ள இன்னோரு சினிமாக்காரி இருப்பா. அவகிட்ட கேட்டா உங்கள உங்க சீட்ல கரெக்ட்டா உக்கார வச்சிருவா. நீங்க கையில் கொண்டு போன பேக்கை வாங்கி தலைக்கு மேல இருக்கிற கேபின்ல போட்டுடுவாங்க. இறங்கறப்ப மறக்காம இந்த லக்கேஜை எடுத்துக்கொண்டு இறங்கணும்.

அவ்வளவுதான். சீட்ல உக்காந்துட்டு சீட் பெல்ட் எங்க இருக்குதுன்னு பாருங்க. கார்ல இருக்கிற மாதிரிதான் இருக்கும். அத எடுத்து இடுப்புல கட்டிக்குங்க. எல்லா பாசஞ்சர்களும் வந்து உக்கார்ந்த பிறகு, ஏணியத் தள்ளீட்டுப்போயிடுவாங்க. அப்பறம் பிளேன் கேட்டச்சாத்துவாங்க. பிளேன் டிரைவர் (அவருக்கு பைலட்னு பேரு) பிளேனை ஸ்டார்ட் செய்வார். எல்லாம் ரெடியான பிறகு ஏர் டிராபிக் கன்ட்ரோல்லர் பிளேனுக்கு ரைட் கொடுப்பார். அப்புறம் பைலட் பிளேனைத் திருப்பி மெதுவா ஓடுபாதைக்கு கொண்டு போவார். பிளேன் கட்டைவண்டி ஸ்பீடுலதான் போவும். சலிச்சுப்போகும். ஓடுபாதைக் கடைசீக்குப் போய் பிளேனைத்திருப்பி போகவேண்டிய திசையில் நிறுத்துவார்.

எல்லாம் சரியாக இருந்தால் ஏர் டிராபிக் கன்ட்ரோல்லர் டபுள் ரைட் கொடுப்பார். அப்புறம்தான் பிளேன் பறக்கறதுக்கு ரெடியாகும், பைலட் இஞ்சினை ரெய்ஸ் பண்ணி ஸ்பீட் எடுப்பார் பாருங்க, காதெல்லாம் ஜிவ்வுன்னு ஆயிடும். கொஞ்ச தூரம் ஸ்பீடாப் போயி அப்பிறம் பிளேன் பறக்க ஆரம்பிக்கும். பிளேன் மேல ஏறிம்போது அடிவயிறு நெஞ்சுக்கு வந்துடும். வயித்துக்குள்ள இருக்கறது வெளிய வர மாதிரி இருக்கும். ஜன்னல் ஓர சீட்டா இருந்தா பூமி கொஞ்சம் கொஞ்சமா நம்மை விட்டு தள்ளிப்போவது நன்றாகத்தெரியும். வீடுகள் சின்னதாய் ஆகி, புள்ளியாய் மாறி, அப்புறம் கண்ணுக்கே தெரியாமல் போகும்.

பிளேன் கொஞ்ச நேரத்தில 30000 அடி உயரம் வந்த பிறகு சமமான நிலையில் பறக்கும். அப்போது உம்ம்ம்னு ஒரு சத்தம் மட்டும்தான் கேட்கும். ஒருவிதமான ஆட்டமும் இருக்காது. வீட்டுல சேர்ல உக்காந்துட்டு இருக்கிற மாதிரிதான் இருக்கும். மணிக்கு 800 கி.மீ. ஸ்பீடில் பறக்கும் உணர்வே தெரியாது. வெளியில் பஞ்சு மூட்டைகள் மிதந்து கொண்டிருக்கும். அவை எல்லாம் மேகங்கள். வீட்டில் சேரில் உட்கார்ந்துகொண்டிருப்பது போலத்தான் இருக்கும். விமானம் முழுவதும் .சி. செய்திருப்பார்கள். சில பேருக்கு ரொம்பக்குளிர்வது போல் இருக்கும். அப்போது ஒரு சினிமாக்காரியைக் கூப்பிட்டு சொன்னால் அவளுக்கு நல்ல மூட் இருந்தால் ஒரு ஷால் கொடுப்பாள். அதைப் போர்த்திக் கொள்ளலாம்.

சில சமயம் ஏர் பாக்கெட்டுகள் என்பது வரும். அதாவது ஆகாய வெளியில் காற்றே இல்லாத ஒரு வெற்றிடம் எங்காவது ஒரு பகுதியில் இருக்கும். அந்தப் பகுதியில் விமானம் பறக்கும்போது விமானத்தைத் தாங்கிப்பிடிக்க காற்று இல்லாததால் விமானம் தொபுக்கடீரென்று கீழே சரியும். அப்போது கட்டை வண்டியில் போகும் உணர்வும், ஆஹா, நம் ஆயுள் இன்றோடு முடிந்தது என்ற பயமும் ஒன்றாக வரும்.

நாம் முன்னே பார்த்த சினிமாக்காரிகள் இப்போது ரொம்பவும் மும்முரமாக இருப்பார்கள். அவர்கள் சினிமாக்காரிகள் அல்ல, விமான சிப்பந்திகள் (ஏர் ஹோஸ்டஸ் என்று அவர்களுக்கு நாமகரணம்) என்பது அப்புறம்தான் நமக்குப் புரியும். பயணிகளுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரவேண்டியதுதான் அவர்களுக்கு வேலை. ஆனால் பெரும்பாலான ஏர் ஹோஸ்டஸ்கள் ஏதோ தாங்கள்தான் விமானக்கம்பெனி முதலாளிகள் போல் நடந்துகொள்வார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு கொடுக்கப்படும் அதிக சம்பளமும் மற்ற வசதிகளும். பயணிகளில் பெரும் பணக்காரர்களையும் சினிமா டைரக்டர்களையும் மட்டும் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்வார்கள். நம்மைப் போல் சாதாரண பயணிகளை பென்ஸ் காரில் போகிறவன் பிச்சைக்காரனைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். அப்படியேதான் நம்மை நடத்துவார்கள். அவர்களிடத்தில் குறை சொல்லுவதில் எந்தப் பயனும் இல்லை. பிளேனை விட்டு இறங்கின பிறகு நாம் யாரோ அவர்கள் யாரோ?

இப்படிப்பட்ட விமானப்பயணத்தை என் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தினேன். நாங்கள் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் காலை 11 மணிக்குப் புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் ஹைதராபாத் அடைந்தது. இதற்குள் சாப்பாடு என்கிற பெயரில் ஒரு பொட்டலத்தையும் ஒரு சிறிய தண்ணீர் பாட்டிலையும் ஒரு சினிமாக்காரி கொண்டுவந்து கொடுத்தாள். அதற்குள் முதல் நாள் சுட்ட வடைகள் இரண்டும், இரண்டு பிஸ்கட்டும், ஒரு சிறிய லட்டும் இருந்தன. அதை விட்டால் வேறு வழி இல்லை என்பதால் அதை பெரும்பாடு பட்டு வயிற்றுக்குள் அனுப்பினேன். இதற்கு தனியாக 125 ரூபாய் டிக்கட்டுடன் கட்டியிருந்தோம். இப்படி பணம் கட்டாதவர்கள் புண்ணியவான்கள். தப்பித்தார்கள்.

ஹைதராபாத்தில் இறங்க வேண்டிவர்கள் இறங்கி, ஏறவேண்டியவர்கள் ஏறியதும் விமானம் புறப்பட்டு மாலை மூன்று மணிக்கு டில்லி விமான நிலைய ஓடுபாதையைத் தொட்டது. விமான ஓடுபாதை விமான நிலைய பயணிகள் கூடத்திலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் இருக்கிறது. விமானம் தரையில் இறங்கிய பிறகு கட்டை வண்டி ஸ்பீடில்தான் போகும். சுமார் 15 நிமிட கட்டை வண்டி பயணத்திற்குப் பிறகு விமானம் பயணிகள் கூடத்திற்கு அரை கி.மீ. தூரத்தில் வந்து நின்றது. விமானக்கதவைத் திறந்து இறங்கும் ஏணி கொண்டுவந்து சேர்த்து பயணிகள் இறங்க ஆரம்பிக்க மேலும் ஐந்து நிமிடங்கள் ஆயின. அதற்குள் பெரும்பாலான பயணிகள் அடித்துப்பிடித்துக்கொண்டு இறங்க ஆரம்பித்தார்கள். நாங்கள் மெதுவாக இறங்கி கீழே வந்தோம். அங்கு பஸ்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அதில் ஏறி பயணிகள் கூடத்திற்கு அருகில் வந்து இறங்கினோம்.

பயணிகள் கூடத்திலதான் நாம் பிளேனுக்குள்ள போட்ட பெட்டிகள் எல்லாம் வரும். ஒரு வட்டமா, நீளமா கன்வேயர் பெல்ட் சுத்திக்கிட்டே இருக்கும். ஒவ்வொரு பிளைட்டுக்கும் ஒவ்வொரு கன்வேயர் பெல்ட். அதுக்குப்பக்கத்தில பிளைட் நெம்பர் எழுதியிருக்கும். ஒரு தள்ளு வண்டியப்புடிச்சுக்கிட்டு அதுக்குப்பக்கத்தில போயி, நின்னுக்கோணும். நம்ம பெட்டி வர்ரப்போ கரெக்ட்டா அடையாளம் கண்டு பிடிச்சு, லபக்குனு எடுத்துக்கோணும். உட்டுட்டோம்னா அது ஒரு ரவுண்டு போயிட்டு அப்பறம்தான் வரும். நம்ம பெட்டி, லக்கேஜ் எல்லாத்தையும் புடிச்சு தள்ளு வண்டியில ஏத்தி அந்த ஏரியாவை விட்டு வெளியில வரணும். வரப்போ லக்கேஜ்களை செக் பண்ணுவாங்க.


வெளியில வந்தாச்சா. இதுவரை .சி. யில குளு குளுன்னு இருந்ததுக்கு, வெளியில டில்லி வெயில் வறுத்தெடுக்கும் பாருங்க. அதை அனுபவிச்சாத்தான் தெரியும். தண்ணி பாட்டிலக் கையில வச்சுட்டு குடிச்சுக்கிட்டே இருக்கோணுமுங்க. இனி நாங்க ஹரித்துவார் போக பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் போகவேண்டும். இதற்கு பிரிபெய்டு டாக்சி பிடித்துக்கொள்ளுங்கள என்று ஊரிலேயே மாப்பிள்ளை கூறியிருந்தார். அப்படியே பிரிபெய்டு டாக்சி கவுன்டருக்குப் போய் இரண்டு டாக்சிகளுக்கு டோகன் வாங்கிக்கொண்டு, தள்ளு வண்டிகளோட டாக்சி ஸ்டேண்டுக்கு வந்தோம். பிரிபெய்டு டாக்சி என்பதினால் பேரம் பேச வழியில்லாததினால் இதற்கென்று சில அரதப்பழைய டாக்சிக்காரர்கள் மட்டுமே வருகிறார்கள். எப்படியோ இரண்டு டாக்சிகளைப்பிடித்து சாமான்களை ஏற்றி, நாங்களும் ஏறி பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் மாலை நான்கு மணிக்கு வெற்றிகரமாக வந்து சேர்ந்தோம்.
தொடரும்

25 கருத்துகள்:

  1. நன்றாக இருக்கிறது. சொன்ன விதம் மிகவும் பிடித்துள்ளது.

    பதிலளிநீக்கு
  2. Jay Said:

    //நன்றாக இருக்கிறது. சொன்ன விதம் மிகவும் பிடித்துள்ளது.//

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. சில்லரைத்தனமான நிகழ்வுகளால் விமான விபத்து நடந்துள்ளது என்பதை அவ்வப்போது ஜியாகிரபியில் போடுவார்கள் முடிந்தால் பார்க்கவும்,அருமையாக இருக்கும்.
    அடுத்து ஹரித்துவாரா?

    பதிலளிநீக்கு
  4. ஆரம்பமே ஜோர். அந்த AIR HOSTESS களைப் பார்க்கும்போது நமக்கும் விமானப் பயணம் போகணும்னு ஆசையா இருக்கு.ஆஹா..அந்த சிரிப்பில தான் என்ன ஒரு ரிஷப்ஷன்!! அந்த சிரிப்புக்கே கடனோ..உடனோ..SUDDENஆ
    போட்டு ஒரு பென்ஸ் கார் வாங்கணும்னு தோணுது!!

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்

    பதிலளிநீக்கு
  5. வடுவூர் குமார் said:

    //அடுத்து ஹரித்துவாரா?//

    இல்லீங்க. நேரா கேதார்நாத்துங்க. திரும்பும்போதுதான் ஹரித்துவார் ஹால்ட்.

    பதிலளிநீக்கு
  6. ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி said:

    //ஆரம்பமே ஜோர். அந்த AIR HOSTESS களைப் பார்க்கும்போது நமக்கும் விமானப் பயணம் போகணும்னு ஆசையா இருக்கு.ஆஹா..அந்த சிரிப்பில தான் என்ன ஒரு ரிஷப்ஷன்!! அந்த சிரிப்புக்கே கடனோ..உடனோ..SUDDENஆ
    போட்டு ஒரு பென்ஸ் கார் வாங்கணும்னு தோணுது!!
    அன்புடன்,
    ஆர்.ஆர்.ஆர்//

    தலைல பிரம்மா எழுதியிருந்தா எல்லாம் நடக்குமுங்க.

    பதிலளிநீக்கு
  7. நல்ல அனுபவம்! உங்களோடவே வர்ர மாதிரி இருக்குதுங்க!!!!!!

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையா எல்லா விஷயத்தையும் சொல்லியிருக்கிங்க சார்.. புதிதாக விமான பயணம் செய்பவர்களுக்கு பயனுள்ளதாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. தெய்வசுகந்தி சொன்னது:

    //நல்ல அனுபவம்! உங்களோடவே வர்ர மாதிரி இருக்குதுங்க!!!!!! //

    ரொம்ப நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  10. Ryas said:

    //மிக அருமையா எல்லா விஷயத்தையும் சொல்லியிருக்கிங்க சார்.. புதிதாக விமான பயணம் செய்பவர்களுக்கு பயனுள்ளதாயிருக்கும்.//

    அதுக்காகத்தான் இவ்வளவு விரிவா எழுதினேனுங்க. அடிக்கடி விமானத்துல போய்ட்டு வர்ரவங்களுக்கு இந்த விவரங்கள் கொஞ்சம் போரா இருக்குமுங்க.

    நானெல்லாம் ரொம்ப சாதாரணக் குடும்பத்தில இருந்து வந்தவனுங்க. ஏதோ விதி அனுகூலமா இருந்ததினால கொஞ்சம் முன்னேறியிருக்கறனுங்க. அவ்வளவுதானுங்க.

    பதிலளிநீக்கு
  11. அய்யா, விமானப் பயணம் பத்தி ரொம்ப விரிவா எளிமையா சொல்லியிருக்கீங்க. அருமை!

    ரெண்டே ரெண்டு திருத்தங்கள்..

    //அங்க உங்க ஏரோப்பிளேன்னுக்குள்ள போடற லக்கேஜ்களை மட்டும், அங்க வச்சிருக்கிற எடை மேடைல வச்சிருங்க//

    இங்கே போறதுக்கு முன்னமே, லக்கேஜ்களை செக்யுரிடி ஸ்கேன் பண்ணனும்.

    //வரப்போ லக்கேஜ்களை செக் பண்ணுவாங்க.//

    உள்நாட்டு பயணங்களுக்கு பண்ணமாட்டாங்க.

    பதிலளிநீக்கு
  12. தஞ்சாவூரான் சொன்னது:

    //அய்யா, விமானப் பயணம் பத்தி ரொம்ப விரிவா எளிமையா சொல்லியிருக்கீங்க. அருமை!

    ரெண்டே ரெண்டு திருத்தங்கள்..

    //அங்க உங்க ஏரோப்பிளேன்னுக்குள்ள போடற லக்கேஜ்களை மட்டும், அங்க வச்சிருக்கிற எடை மேடைல வச்சிருங்க//

    இங்கே போறதுக்கு முன்னமே, லக்கேஜ்களை செக்யுரிடி ஸ்கேன் பண்ணனும்.

    ****என்னுடைய நினைவு பிசகியிருக்கலாம்****

    //வரப்போ லக்கேஜ்களை செக் பண்ணுவாங்க.//

    உள்நாட்டு பயணங்களுக்கு பண்ணமாட்டாங்க.//

    வெளிநாட்டுப்பயணங்கள்லெ கஸ்டம்ஸ் செக் உண்டு. அதுவும் கிரீன் சேனல்ல வந்தா இருக்காது. நான் சொல்ல வந்த்து, லக்கேஜ் ஏரியாவிலிருந்து வெளியில் வரும்போது உங்கள் லக்கேஜ் டோகனும், லக்கேஜில் ஒட்டியிருக்கும் டோகனும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது. ஏனெனில் ஒருவர் லக்கேஜை இன்னொருவர் தவறுதலாகவோ, வேண்டுமென்றோ மாற்றி எடுத்துச்செல்வதைத் தடுப்பதற்காகவே இந்த முறை. பழைய காலத்தில் (40-50 வருஷத்துக்கு முன்) இந்த நடைமுறை இருந்தது. இப்போது இல்லை. எழுதும்போதே மனதில் பட்டது. இந்த பாயின்டை இவ்வளவு நுணுக்கமாகப் பார்க்க உங்கள் மாதிரி வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. பாராட்டுக்களும் நன்றிகளும்.

    பதிலளிநீக்கு
  13. எங்களையும் கூட்டிகிட்டு போற மாதிரி இருக்குங்க..ஆமா..அந்த போ..காரி உங்களை தடவினாங்களா?

    பதிலளிநீக்கு
  14. தாராபுரத்தான் சொன்னது:

    //எங்களையும் கூட்டிகிட்டு போற மாதிரி இருக்குங்க..ஆமா..அந்த போ..காரி உங்களை தடவினாங்களா?//

    என்னங்க, என்ன வில்லங்கத்தில மாட்டி உடப் பாக்கறீங்க. எழுதறப்பவே நெனச்சேன், இந்த மாதிரி எதாச்சும் வில்லங்கம் வந்தாலும் வரும்னு, வந்துட்டுது.

    அது வந்துங்க, ஆம்பளைங்களுக்கு ஆம்பிளை போலீஸு, பொம்பளைங்களுக்கு பொம்பளை போலீஸுங்க. அப்படித்தானுங்க நடைமொறை. நீங்க நெனைக்கிற மாதிரி இல்லீங்க.

    பதிலளிநீக்கு
  15. ஹைய்யோ:-))))

    நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க!!!

    பதிலளிநீக்கு
  16. நல்ல விளக்கம், விமானப் பயணத்தில் இவ்வளவு நடைமுறை இருக்கே?

    //சில சமயம் ஏர் பாக்கெட்டுகள் என்பது வரும். அதாவது ஆகாய வெளியில் காற்றே இல்லாத ஒரு வெற்றிடம் எங்காவது ஒரு பகுதியில் இருக்கும். அந்தப் பகுதியில் விமானம் பறக்கும்போது விமானத்தைத் தாங்கிப்பிடிக்க காற்று இல்லாததால் விமானம் தொபுக்கடீரென்று கீழே சரியும். அப்போது கட்டை வண்டியில் போகும் உணர்வும், ஆஹா, நம் ஆயுள் இன்றோடு முடிந்தது என்ற பயமும் ஒன்றாக வரும்.//

    இந்தச் செய்தியை உங்கள் மூலம்தான் அறிகிறேன். எத்தனையோ நண்பர்கள் விமானப்பயணம் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த செய்தியை யாரும் என்னிடம் தெரிவித்ததில்லை.
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  17. அமைதி அப்பா சொன்னது:

    //இந்தச் செய்தியை உங்கள் மூலம்தான் அறிகிறேன். எத்தனையோ நண்பர்கள் விமானப்பயணம் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த செய்தியை யாரும் என்னிடம் தெரிவித்ததில்லை.
    நன்றி சார். //

    இந்த மாதிரி ஏர் பாக்கெட்டுகள் இருப்பது ரேடார் மூலம் பைலட்டுகளுக்கு முன்பே தெரிய வரும். அவர்கள் உடனே உஷாராகி, எல்லோரையும் சீட் பெல்ட் போடச்சொல்லி விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  18. தருமி சொன்னது:

    //பாருங்க:

    http://dharumi.blogspot.com/2005/09/63.html //

    நான் ரொம்ப லேட்டுன்னு சொல்லுங்க. 2005 ல எனக்கு பிளாக்குன்னா என்னன்னே தெரியாதுங்க.

    பதிலளிநீக்கு
  19. //நான் ரொம்ப லேட்டுன்னு சொல்லுங்க. //

    நீங்க லேட்டுதான் .. ஆனா லேட்டஸ்ட்!!

    பதிலளிநீக்கு
  20. நிறைய தகவல் புதிதாக செல்பர்களுக்கு பயனுள்ளதாக அமையும்... அப்பிடியே விமானத்துல போய்ட்டு வந்த உணர்வு இருக்கு....

    பதிலளிநீக்கு
  21. Engineering said:

    //நிறைய தகவல் புதிதாக செல்பர்களுக்கு பயனுள்ளதாக அமையும்... அப்பிடியே விமானத்துல போய்ட்டு வந்த உணர்வு இருக்கு.... //

    கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம். ரொம்ப நல்லா சொல்லியிருக்கிங்க. அதிலும் இந்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் இருக்கே. அதில் பணிபுரியும் பென்கள் நம்ம இந்தியன்ஸ் நிற்ய்ய பேர் பயணம் செய்வார்கள். அதுவும் அமெரிக்காவிற்க்கு தான் நிற்ய்ய. இப்ப்வெல்லாம் அதில் நம்ம இந்தியன்ஸை அவங்க கண்டுக்கவே மாட்டங்க. எல்லா இநித்யன்ஸுக்கும் இருக்கிற குறை இது தான்.

    பதிலளிநீக்கு
  23. Vijiskitchen said:

    //வணக்கம். ரொம்ப நல்லா சொல்லியிருக்கிங்க. அதிலும் இந்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் இருக்கே. அதில் பணிபுரியும் பென்கள் நம்ம இந்தியன்ஸ் நிற்ய்ய பேர் பயணம் செய்வார்கள். அதுவும் அமெரிக்காவிற்க்கு தான் நிற்ய்ய. இப்ப்வெல்லாம் அதில் நம்ம இந்தியன்ஸை அவங்க கண்டுக்கவே மாட்டங்க. எல்லா இநித்யன்ஸுக்கும் இருக்கிற குறை இது தான்//

    வாங்கம்மா, வணக்கம். நான் சர்வீஸ்ல இருக்கறப்ப பல ஏர்லைன்ஸ்கள்ல போயிருக்கேன். நம்ம ஊரு ஏர் ஹோஸ்டஸ்களுக்கே இந்த மாதிரி அலட்சியம் இருக்குன்னா வெளி நாட்டுக்காரிகளைப் பத்தி சொல்லவா வேணும்.

    யார் கண்டா, நாம இறங்கினதுக்கப்புறம் நாம உக்காந்திருந்த சீட்களையெல்லாம் ஸ்பெஷலா பினாயில் போட்டு கழுவுவாங்களோ என்னமோ, தெரியல. நம்மளைக்கண்டா அத்தனை இளக்காரம்.

    பதிலளிநீக்கு
  24. நானே சென்ற மாதிரி இருந்தது சார், சொன்ன நம்ப மாட்டீங்க //கொஞ்ச தூரம் ஸ்பீடாப் போயி அப்பிறம் பிளேன்பறக்க ஆரம்பிக்கும். பிளேன் மேல ஏறிம்போது அடிவயிறு நெஞ்சுக்குவந்துடும். வயித்துக்குள்ள இருக்கறது வெளிய வர மாதிரி இருக்கும்.ஜன்னல் ஓர சீட்டா இருந்தா பூமி கொஞ்சம் கொஞ்சமா நம்மை விட்டுதள்ளிப்போவது நன்றாகத்தெரியும். வீடுகள் சின்னதாய் ஆகி, புள்ளியாய்மாறி, அப்புறம் கண்ணுக்கே தெரியாமல் போகும் // இந்த இடத்தில் நீங்க சொன்ன உணர்வு எனக்கு என் வீட்டிலேயே தோனுச்சு.....

    பதிலளிநீக்கு