வியாழன், 19 ஜனவரி, 2012

பதிவுலகத்தின் சமீபத்திய சாபக்கேடு



பதிவுலகத்திற்குள் காலடி எடுத்துவைக்கும் புதிய பதிவர்கள் அனைவரும் ஒருவித எதிர்பார்ப்புடன் வருகிறார்கள். தங்கள் எழுத்துக்கு உண்டான ஒரு கௌரவம் கிடைக்கும் என்று நம்பி வருகிறார்கள். ஆனால் நடப்பதென்னவோ அவர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் எதிர்மாறாக இருக்கிறது.

பொதுவாக பதிவர்கள் எழுதும் சமாசாரங்கள் அவரவர்களுடைய தினசரி வாழ்க்கையை ஒட்டியேதான் இருக்கும். ஆன்மீகம், சினிமா, வாழ்க்கைச் சம்பவங்கள், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாக அமைகின்றன. சிலர் கவிதை ஒன்றே எழுதுவார்கள். இந்தக் கவிதைகளில் பெரும்பாலும் உரைநடையை கவிதை மாதிரி சந்தி பிரித்துப் போடுவதுதான் நடக்கிறது. கவிதை நயத்தோடு இருக்கும் கவிதைகள் அரிது.  ஈழப்பதிவர்களுக்கு வன்னிப் போராட்டமே முக்கிய கருப்பொருள்.


அபூர்வமாக அரசியல் அல்லது சமுதாயப் பிரச்சினைகள் பற்றி ஒரு சிலர் ஆழமாக எழுதுவது உண்டு. ஆனால் அவை மிகவும் நீளமாக இருந்து விடுவதால் படிப்பவர்கள் குறைவு. மற்ற பதிவுகளையும் படிப்பவர்கள் பல காரணங்களினால் குறைந்துகொண்டே வருகிறார்கள். காரணம் என்னவென்று பார்த்தால், நல்ல கருத்துகளைக் கொண்ட பதிவுகள் குறைந்துகொண்டே போகின்றன.


இதைப் பற்றி நான் யோசித்ததில் சில உண்மைகள் புலனாகின. நல்ல பதிவுகள் எழுதிய சீனியர் பதிவர்கள் இன்று பதிவு எழுதுவதில்லை. பதிவுலகை விட்டே ஏறக்குறைய விலகி விட்ட நிலையில் இருக்கிறார்கள். புதிய பதிவர்களும் சில மாதங்கள் பதிவு எழுதிய பின் பதிவுலகம் சலிப்பூட்டுகிறது. அதனால் பதிவுலகத்தை விட்டு விலகி விடுகிறார்கள். இதற்கு பல காரணங்களைக் கூறலாம்.


முதல் காரணம் நல்ல எழுத்துகளுக்கு ஆதரவு இல்லை. பின்னூட்டம் இடுபவர்கள் பதிவின் நல்ல கருத்துகளுக்காகவோ அல்லது விவாதிக்கும்  பொருளுக்காகவோ பின்னூட்டம் இடுவது இல்லை. தங்களுக்குப் பிடித்த பதிவுகளுக்கே/பதிவர்களுக்கே பின்னூட்டமிடுகிறார்கள். மொக்கைப் பதிவு என்று சொல்லப்படுபவைகளுக்கு பதிவு இட்டு சில மணி நேரத்திலேயே நூறு பின்னூட்டங்களுக்கு மேல் இடப்படுகின்றன. அவைகளே திரட்டிகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றன.


இத்தகைய நிலை தொடர்வதால் புதிய, பழைய பதிவர்களின் ஆர்வம் குறைந்து போகின்றது. வருங்காலத்தில் பதிவுலகம் ஆதரவு இல்லாமல் மங்கிப்போகும். இது காலத்தின் கோலம். மாற்று வழிகள் ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. நடப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
முகநூல், டிவிட்டர் போன்றவை பதிவுலகத்தைவிட சுவையாக இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். எனக்கு நேரடி அனுபவம் இல்லை. பல பதிவர்கள் அந்த மாதிரி தளங்களுக்குப் போய்விட்டதாக ஒரு தகவல்.


பின்னூட்டங்கள், திரட்டிகளின் ரேங்க்குகள் இவைகளை மட்டும் நினைத்து பதிவு போடுபவர்களுக்கு இனி இங்கு இடம் இருக்காது. அப்படி பின்னூட்டங்கள், ரேங்குகள் கிடைக்கும் பதிவர்கள் மட்டும்தான் இனிமேல் பதிவுலகில் இருப்பார்கள். அவர்களின் பதிவுகளும் மொக்கையாகத்தான் இருக்கும். நானும் இந்த கால சுழற்சியில் விதிவிலக்கல்ல.

55 கருத்துகள்:

  1. நல்ல பதிவு ஐயா..அருமையான வரிகள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  2. முற்றிலும் உண்மை. தங்களின் கருத்து ஏற்புடையதே.

    பதிலளிநீக்கு
  3. சினிமா பதிவு, நடிகைகளின் கவர்ச்சிப்படம் போட்டால் மட்டுமே ஒரு 200 பேராவது வந்து பார்கிறார்கள்..மற்ற பதிவுகளுக்கு அப்படி இல்லை..நிறைய பதிவர்களை காக்கா பிடித்து வைத்தால் எவ்வளவு மொக்கையான பதிவுக்கும் நீங்கள் கூறுவது போல நூற்றுக்கும் மேல் பின்னூட்டங்கள் வருகிறது...ஹ்ம்ம் என்னதான் சொல்வது..

    பதிலளிநீக்கு
  4. சார், எதுக்கு சார் ஃபீல் பண்ணிக்கிட்டு? நம்மகூட சேர்ந்துக்கோங்க! எல்லாம் நல்லபடியா நடக்கும்! ஃபீல் பண்ணாதீங்க சார்!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்!
    அய்யா தங்கள் சலிப்பு நியாயமானதுதான். என்ன செய்வது, சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலாரையே “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என்று சலிக்கச் செய்தவர்கள் நம் தமிழ் மக்கள்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கருத்து முற்றிலும் உண்மை பாஸ் இதுதான் என் கருத்தும்

    ஆனால் அதிகளவான வாசகர்கள் பெரும்பாலும் சினிமா,கிரிக்கெட்,மொக்கை,பதிவுகளுக்குத்தான் வருகின்றார்கள்,அதற்காக காத்திரமான பதிவுகளுக்கு வாசகர்கள் வருவதில்லை என்று சொல்லவில்லை இதனுடன் ஓப்பிடும் போது மிக மிக குறைவு.

    நான் பல காத்திரமான பதிவுகள் எழுதியிருக்கேன் ஆனால் அந்த பதிவுக்கு வரும் வாசகர்களைவிட கிரிக்கெட்,சினிமா பதிவுக்கு அதிகளவு வாசகர்கள் வருகின்றார்கள்

    ஆனாலும் காத்திரமான பதிவுகளையும் சுவாரஸ்யமாக சொன்னால் நிச்சயம் வாசகர்களை கவறும் என்பதில் சந்தேகமில்லை

    நல்ல பதிவுகள் அங்கிகரீக்கப்பட வேண்டும்

    நல்ல பகிர்வு பாஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தம்தான் மிஞ்சுகிறது. ஆனால் நாம் தனியாக ஒன்றும் செய்ய முடியாது. உலகத்தோடு சேர்ந்துதான் போகவேண்டியிருக்கிறது.

      நீக்கு
  7. அருமையான கருத்தை
    அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்
    அய்யா...........

    பதிலளிநீக்கு
  8. சார், விபரமாகவும் சரியாகவும் எழுதியிருக்கீங்க.

    கமென்ட், ஓட்டு, ரேங் மற்றும் ஹிட்ஸ் பற்றி கவலைப்படாமல் நம் மனதில் தோன்றுவதை எழுதி வந்தால் பிரச்னை ஒன்றும் கிடையாது.

    எனக்கு பிளாக் பல வகைகளில் பயன்படுகிறது. பிளாக்கில் எழுத ஆரம்பிக்கும் முன்,நாட்டு நடப்புப் பற்றி என்னுடையக் கருத்துக்களை நண்பர்களிடமும் உறவுகளிடமும் சொல்லுவேன். அவர்களும் வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், இப்பொழுது பிளாக்கில் எழுதிவிடுவதால், அவர்கள் தப்பித்தார்கள். அவர்களும் முன்பைவிட இப்பொழுது என்னுடன் அன்போடு பழகுகிறார்கள்.

    எது எப்படியோ பிளாக்-ஐ ஒரு டையிரியாக நினைத்து எழுதினால் தொடர்ந்து எழுதும் ஆர்வம் குறையாது என்று 'நான்' நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிளாக்கை ஒரு டைரியாகத்தான் உபயோகிக்க வேண்டும். சரியான கருத்து. நன்றி, அமைதி அப்பா.

      நீக்கு
  9. Dear Sir,
    You are touching the correct border..99% people uses their communicate to write or to view as prostitution.of course its doing same.
    Ali. Thailand

    பதிலளிநீக்கு
  10. என்னுடைய 8 வருட பதிவுலக வாழ்க்கையில் 2010ம், 2011ம்தான் மிகவும் மோசமான ஆண்டு.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ஐயா.
    தாங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.
    நான் வலையெழுத விரும்பியதும்,ஆரம்பித்ததும் நல்ல சிறந்த படைப்புக்களை எழுதவேண்டும் என்ற ஆசையில்தான்.
    அவ்வாறு மிகச்சிறப்பாக எழுதுவதற்கு இந்த வலைப்பூவை ஒரு பயிற்சிக்களமாகக்கூட பயன்படுத்தலாம் என்று நினைத்தேன்.
    ஆனால்,இங்குள்ள நிலை வேறு.

    இப்போதும் ஆர்வத்தினால் பொழுதுபோக்காக எழுதிய சில ஆக்கங்களையோ/ படித்து சுவைத்தவற்றையோ கூட தளத்தில் வெளியிட தயக்கமிருக்கிறது.காரணம்,வருகையாளர்கள் குறைந்துவிடுவார்கள் என்ற எண்ணமே.

    பதிவர்கள் அனைவரும் நினைத்தால் இதை மாற்ற முடியும்.ஆனால்,யார் நினைக்கப்போகிறார்கள்?

    இருந்தாலும் ஐயா, ஒட்டுமொத்தமாக அனைவரையும் இதே வகைக்குள் அடக்கிவிட முடியாது.மற்றவர்களை ஊக்குவித்து,வெளிக்கொணரும் வகையில் செயற்படும் பலரும் வலையுலகிலுள்ளார்கள்தான்.ஆனால்,அவ்வாறானவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்கிறதே!

    என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்முடைய மனத்திருப்திக்காகத்தான் எழுத வேண்டியிருக்கிறது, நண்பரே.

      நீக்கு
  12. வணக்கம் ஐயா,
    நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
    பதிவுலகின் அண்மைக்கால நகர்வுகளை உன்னிப்பாக அவதானித்து சிறப்பான கருத்துக்களை உள்ளடக்கி பதிவினை எழுதியிருக்கிறீங்க.

    // சிலர் கவிதை ஒன்றே எழுதுவார்கள். இந்தக் கவிதைகளில் பெரும்பாலும் உரைநடையை கவிதை மாதிரி சந்தி பிரித்துப் போடுவதுதான் நடக்கிறது. //

    கவிதையில் நான் மரபுக் கவிதை, புதுக் கவிதை, வசன கவிதை ஆகிய மூன்றுடன்,
    உரை நடையினையும் அவ்வப் போது பதிவுலகில் கையாண்டு வருகிறேன்.

    ஆனால் சிலரோ...ஏய் மனிதா என்று இன்னமும் பழைய பல்லவி கவிதைகளை பாடுகின்றார்கள்.


    அப்புறம ஈழப் பதிவர்களில் ஐடியாமணி, நிரூபன் ஆகியோர் தான் இப்போது வன்னிப் பிரச்சினை பற்றி எழுதுகிறார்கள்.ஏனையோர் தொழில்நுட்பம் மற்றும் கிரிக்கட் சினிமா என்று இதர விடயங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

    இப்போதைய சூழலில் அனைத்துப் பதிவர்களும் ஒரே மாதிரியான அலைவரிசை கொண்ட பதிவுகளைத் தவிர்த்து, வெவ்வேறான ட்ராக்கில் பதிவுகளை எழுதுவதனைத் தான் விரும்புகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, நிரூபன். ஏதோ சில பதிவர்கள்தான் உங்களைப்போல் எழுதிகிறார்கள். அதனால்தான் இன்னும் வலையுலகத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கிறேன். உங்கள் பணி தொடர்ந்து சிறக்கட்டும்.

      நீக்கு
    2. நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான் நிரூ. நானும் இலங்கையை சேர்ந்தவனானாலும் ஈழத்து வன்முறை, வன்னிப் பிரச்சினை போன்றவற்றில் கேள்வி ஞானம் மட்டுமே உண்டு. அதனால் தான் எனக்கு தெரிந்த விடயமான ஆங்கில சினிமா விமர்சனங்களை பகிர்ந்து வருகிறேன்.

      பொது விடயங்கள் சார்ந்த பதிவுகளை போடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

      நீக்கு
  13. என்ன செய்வது ரத்னவேல், பதிவெழுதவே சலிப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. என்ன செய்வது ஐயா. வெறும் பகட்டுக்கு இருக்கும் கவர்ச்சி உண்மைக்கு என்றுமே இல்லை! டயரியாக பாவித்தால் வெறுமை தோன்றாது!

    பதிலளிநீக்கு
  15. உண்மையைச் சொல்லியுள்ளீர்கள். இது சமீபத்தியதல்ல! சில வருடங்களாகிவிட்டது.
    திருந்த வாய்பில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது, யோகன் பாரிஸ். பிடித்தால் இருந்து கொள்ளலாம். பிடிக்காவிட்டால் உங்கள் மாதிரி வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கலாம்.

      நீக்கு
  16. உண்மை யை புட்டு புட்டு வைத்துள்ளீர்கள் .தங்களின் கருத்து எனக்கும் உண்டு

    பதிலளிநீக்கு
  17. கால சுழற்சியில் எதுவும் விதிவிலக்கல்ல தான்.

    பதிலளிநீக்கு
  18. //மொக்கைப் பதிவு என்று சொல்லப்படுபவைகளுக்கு பதிவு இட்டு சில மணி நேரத்திலேயே நூறு பின்னூட்டங்களுக்கு மேல் இடப்படுகின்றன. அவைகளே திரட்டிகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றன.
    //

    100% true

    பதிலளிநீக்கு
  19. இது தான் தமிழ், தமிழர், தமிழ்நாடு அனைத்திற்கும், எல்லா விவகாரங்களுக்குமான தலையெழுத்து!! இதை மாற்ற வேண்டும். மாற்றம் வேண்டும்!!

    பதிலளிநீக்கு
  20. புதிய பதிவர்கள் எதிர்நோக்கும் ஆதரவின்மை
    மற்றும் பழைய பதிவர்கள் பற்றிய நிலைகளை
    சிந்தித்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
    பலருக்கும் நல்லதைச் செய்வோம் என
    உண்மையாக முயற்சித்தால் ஆதரவு வரும் என எண்ணுகிறேன்.
    ஆயினும் இப்பொழுது பதிவுகளும் பதிவர்களும்
    மிக வேகமாக அதிகரித்துவிட்டாதால்
    நல்லவற்றைத் தவறவிட்டுகிறோம் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  21. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    //மொக்கைப் பதிவு என்று சொல்லப்படுபவைகளுக்கு பதிவு இட்டு சில மணி நேரத்திலேயே நூறு பின்னூட்டங்களுக்கு மேல் இடப்படுகின்றன. அவைகளே திரட்டிகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றன.
    //

    100% true//

    ஆமா, இப்படி ஒத்த வரி கமெண்ட் போட்டு விட்டு
    சைக்கிள் கேப்பில உங்க ப்ளாக்கை விளம்பரம் செய்வதை எப்போ நிறுத்தப் போறீங்க?

    பதிவுலகில் மொக்கைப் பதிவு எழுதி நகைச்சுவையாக எல்லோரையும் சிரிக்க வைப்பவர் அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்கள் தான்.
    அவர் பதிவிற்கு மாத்திரம் தான் 100 கமெண்டிற்கு மேலே கிடைக்கும்.
    ஆனால் பதிவுலகில் ஏனைய பதிவர்கள் பெறும் 100 கமெண்டுகளில் என்னா மேட்டர் இருக்கு என்று எப்போவாச்சும் படிச்சுப் பார்த்தீங்களா ராஜா சார்?

    பதிலளிநீக்கு
  22. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    //மொக்கைப் பதிவு என்று சொல்லப்படுபவைகளுக்கு பதிவு இட்டு சில மணி நேரத்திலேயே நூறு பின்னூட்டங்களுக்கு மேல் இடப்படுகின்றன. அவைகளே திரட்டிகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றன.
    //

    100% true//


    என்னோட விவாதப் பதிவுகளில் 300 கமெண்டுகள் வரை இடப்பட்டு,
    விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
    அம் மாதிரியான பதிவுகளை தாங்கள் படித்திருக்கிறீங்களா? இல்லே கமெண்ட் போட்டிருக்கிறீங்களா?

    எங்கே போனாலும் விளம்பர லிங் போட்டுக்கிட்டு திரியுங்க.

    பதிலளிநீக்கு
  23. கந்தசாமி ஐயா,
    ஒரு அன்பு வேண்டுகோள். நீங்க தானே புத்தாண்டு சபதத்தின் போது
    பின்னூட்டங்களுடன் வரும் விளம்பர இணைப்பு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று சொன்னீங்க.

    அப்படீன்னா இதை எப்படி அனுமதிச்சீங்க? //
    "என் ராஜபாட்டை"- ராஜா said...
    நன்றி சொல்ல வந்தேன் ..

    பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )

    20 January 2012 11:23 AM//

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஐயா,
    //பதிவுலகத்திற்குள் காலடி எடுத்துவைக்கும் புதிய பதிவர்கள் அனைவரும் ஒருவித எதிர்பார்ப்புடன் வருகிறார்கள்//
    உண்மை,தாங்களும்,யாமுமே இதற்கு விதி விலக்கல்ல;ஆனால் அந்த எதிர்பார்ப்பு மனமகிழ்வோடு நிறைவடையாமல்; hitsக்கும்,பின்னூட்டங்களுக்கும்,ஏன் பணத்திற்கும் கூட நீண்டுகொண்டே செல்வது உள்ளபடியே சாபக்கேடுதான்.

    சினிமா,கவர்ச்சி,காமம் போன்ற கழிவகற்ற இணையத்தை ஒரு கழிவறையாய் பயன்படுத்தும் பலரில்;மொழியின் செழுமை,சமூகசிந்தனைகள்,அறிவியல் முனைவுகள்,மன விழிப்புணர்வு ஏற்பட என இணையத்தில் இணைவோர் சிலராய் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம்.

    //கவிதைகளில் பெரும்பாலும் உரைநடையை கவிதை மாதிரி சந்தி பிரித்துப் போடுவதுதான் நடக்கிறது. கவிதை நயத்தோடு இருக்கும் கவிதைகள் அரிது//என்று கூறிஇருப்பதும் சரியே,பெரும்பாலும்,கவிதை என்ற பெயரில் உள்ள பயனற்ற அசைகளைப் காணுஞ்சமயம்,தமிழர்களின் கவிநயமும்,மொழிஆளுமையும் மலடாகிக்கொண்டிருகிறதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

    கால சுழற்சியில் எதுவும் விதிவிலக்கல்ல தான் என்ற பின்னூட்டத்தைப் போல் இந்நிலையும் காலசுழற்சியில் மாறும் என நம்புவோம்.அங்ஙனம் நம்பும் நல்லுள்ளங்கள் எல்லாம்,நம்பிக்கையோடு நின்றிடாது,மேன்மேலும் நற்பதிவுகள் இயற்றிட முனைவோம்.

    நிதர்சனமான கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  25. கந்தசாமி தாங்கட்கு,
    உங்கள் எழுத்து சரியானதே.
    சட்டியில் இருந்தால் மட்டுமே அகப்பையில் வருமென்று சொல்வார்கள்.
    பதிவு தரத்தை எட்டும்போது மறுமொழி கிடைக்கும்.
    பதிவு தரம் தாழும்போது எதிர் மொழி கிட்டும்.
    பதிவு இயல்பாகவும் இயல்பின்றியும் அமையும்போது மறுமொழி வருவதில்லை.
    பதிவர் கும்பலாக இயங்கும்போது மறுமொழி மழையாக பொழியப்படும்.
    இயல்பான பதிவர் இதனை பொருட்டாக கருத தேவையில்லை.
    மறுமொழி தானாக வரும். சலிப்பு வேண்டாம!
    வில்லவன் கோதை

    பதிலளிநீக்கு
  26. இன்றைய உண்மையான நிலையை சொல்லி உள்ளீர்கள். ஆனால் கருத்துக்களை வைத்து ஒருவரின் பதிவின் தரம் நிர்ணயக்கப்படுவதில்லை என்பது என் கருத்து. என்னைப் பொறுத்தவரை அவ்வாறு நினைப்பதும் தவறு! பதிவு எழுதுவதே ஒரு டைரி மாதிரி. சில வருடங்கள் கழித்து நாமே நம் பதிவைப் படித்துப் பார்த்தால், சிரிக்கலாம். ஆச்சரியப்படலாம், நம்மை மேலும் சிந்திக்கவும் வைக்கலாம். இது அவரவர் பதிவைப் பொறுத்து மாறுபடலாம்.

    "இந்தப் பதிவில் பதியப்படும் கருத்துக்கள் என்னுடைய ஆத்ம திருப்திக்காகவும் படிப்பவர்கள் இன்புறவும் இடப்படுகின்றன." இது உங்களின் Blog Description! அதுவே என் கருத்தும்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  27. பதிவுலகை விட்டு விலக கருத்துக்கள், ஓட்டுக்கள் மட்டுமல்ல.. சொந்த வாழ்க்கையும் தாக்கம் செலுத்துகிறது. எத்தனையோ பிரபல பதிவர்கள், பிரபலமாய் இருக்கும் போதே, பதிவுலகை விட்டுச் சென்று விட்டனர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் திரு. முகமது ஃபைக், பதிவுலகம் ஒன்றும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒரு வேலை அல்ல. இது முற்றிலும் ஒரு பொழுதுபோக்கும் வழி. நமக்குத் தேவையானபோது உபயோகிக்கலாம். தேவையில்லாதபோது பழைய செருப்பைத் தூக்கி எறிகிற மாதிரி எறிந்துவிட்டு எந்த விதமான குற்ற உணர்வும் இல்லாமல் நம் நிஜ வாழ்க்கையைக் கவனிக்கலாம். இதை பதிவர்கள் எப்போதும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

      நீக்கு