செவ்வாய், 26 நவம்பர், 2013

ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 2


பழைய தொடர்ச்சி  ("எதற்கும் டெஸ்ட் செய்து பார்த்து விடலாம் என்று  அந்த லாக்கரில் சொன்ன பணத்தைப் போட்டு நெம்பரை செட் செய்து லாக்கர் கதவை இழுத்தேன்.")

லாக்கர் கதவு வெண்ணையில் கத்தி இறங்குவது போல் நைசாகத் திறந்தது. ஒன்றும் பிரச்சினை பண்ணவில்லை. அப்போதுதான் மூளையில் ஒரு பொறி தட்டியது. அடடா, இப்போ போட்ட காசு கோவிந்தாதான் அப்படீன்னு பட்டது. இனி என்ன செய்ய முடியும்? பேசாமல் திரும்பவும் நெம்பரை செட் செய்து லாக்கரை சாத்தினேன். நெம்பரை அந்த டயலில் மாற்றி வைத்தேன். பிறகு இழுத்துப்பார்த்தேன். திறக்கவில்லை. அப்பாடா என்று பெருமூச்சு விட்டு விட்டு அடுத்தவேலைக்குத் தயாரானேன்.

இந்த லாக்கர்களை ஒருவர் 48 மணி நேரம்தான் பயன்படுத்தலாம். அதற்கு மேல் டயம் ஆகிவிட்டால் லாக்கர் ஆட்டோமேடிக்காக லாக் ஆகிவிடும். இப்படி அந்த லாக்கரில் எழுதியிருந்தது. என் முதல் புரோக்ராம் வேகனிங்கன் போவது. இரண்டாவது புரொக்ராம் அங்கு போய் வந்தபின் இரண்டு நாள் ஆம்ஸ்டர்டாமில் தங்குவது. 

ஒரு மனக்கணக்கு போட்டுப் பார்த்தேன். வேகனிங்கன் போய்விட்டு 48 மணி நேரத்தில் திரும்பிவிடலாம் என்று தெரிந்தது. சரி, அப்போது ஒரு தடவை திறந்து மூடினால் சரியாய்ப்போய்விடும் என்று முடிவு செய்து வேகனிங்கன்  புறப்பட்டேன். இதைப்பற்றி முன்பே பதிவிட்டு விட்டபடியால் அந்தக் கதை மறுபடியும் வேண்டியதில்லை.

வேகனிங்கனிலிருந்து திரும்ப வந்து லாக்கரைத் திறந்து மூடி விட்டு ஆம்ஸ்டர்டாம் ஓட்டலுக்குப் புறப்பட்டேன். ஓட்டல் விலாசம் மட்டும் தெரியும். அங்கு எப்படி போகவேண்டும் என்று தெரியாது. வல்லவனுக்கு ஆயுதம் வாயிலே என்று பெரியவர்கள் சொன்னதை நினைவில் கொண்டு அங்கு இருந்த ஒரு செக்யூரிடியிடம் விசாரித்தேன். அவர் ரயிலில் இன்ன ஸ்டேஷன் வரை சென்று, அங்கு ஒரு பஸ்சைப் பிடித்து அந்த டிரைவரிடம் சொன்னால் அந்த ஓட்டலுக்குப் பக்கத்தில் இறக்கி விடுவார் என்று சொன்னார். தேங்க்ஸ் சொல்லிவிட்டு ரயில்வே பிளாட்பாரத்திற்கு வந்தேன். 

ஏர்போர்ட்டிலிருந்து லக்கேஜ் வண்டியைத் தள்ளிக்கொண்டே பொடி நடையாய் ஒரு பத்து நிமிடம் நடந்தால் ரயில்வே பிளாட்பாரம் வந்துவிடும். நம் சென்னையிலும் அப்படி ஏர்போர்ட்டிலிருந்து திரிசூல் ஸ்டேஷனுக்குப் போகிற மாதிரி ஏற்பாடு செய்தால் வசதியாயிருக்கும்.

வழி சொன்னவர் குறிப்பிட்ட ஸ்டேஷனில் இறங்கி, வெளியில் வந்து பஸ் பிடித்தேன். அந்த டிரைவரிடம் நான் போகவேண்டிய ஓட்டலின் பெயரைக் காட்டியதும் அங்கு இறக்கி விடுவதாகச் சொன்னார். நல்ல மனுஷன். அங்கெல்லாம் பஸ்களுக்கு டிரைவர் மட்டும்தான். கண்டக்டர் கிடையாது. கூட்டமும் கிடையாது.

டிரைவர் இறக்கிவிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் ஓட்டல் தெரிந்தது. அங்கு போய் என் பெயரைச் சொன்னவுடன் ரூம் கொடுத்து விட்டார்கள். எனக்கு டூர் ஏற்பாடு செய்தவர்கள் எவ்வளவு கவனத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள் பாருங்கள். ரூம் சாவி என்று ஒரு கிரெடிட் கார்டு மாதிரி, அதைவிடப் பெரிய சைஸில் ஒரு அட்டை கொடுத்தார்கள். அதில் ஓட்டை ஓட்டையாக டிசைன் போட்டிருந்தது. இது என்ன என்று கேட்டேன். இதுதான் ரூம் சாவி. இதை ரூம் கதவில் உள்ள துவாரத்தில் செருகினால் கதவு திறக்கும் என்றார்கள்.

எல்லாம் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்த கதைதான். ரூமிற்குச் சென்று செட்டில் ஆனேன். ரூமை விட்டு வெளியில் வந்த பிறகு கதவைச்சாத்தினால் அதுவே பூட்டிக்கொள்ளும். சாவியை எடுக்காமல் வெளியில் வந்து கதவைச்சாத்தினால் பிறகு உள்ளே போக முடியாது. இதில் நான் ஜாக்கிரதையாகவே இருந்தேன்.

இத்தகைய சாவிகள் பெரிய ஓட்டல்களில் கம்ப்யூட்டர் மூலமாக அவ்வப்போது தயார் செய்கிறார்கள். ஒருவர் ஒரு ரூமில் தங்கிவிட்டுப் போனபிறகு அடுத்தவர் வரும்போது அதே ரூமிற்கு வேறு சாவி தயார் செய்து கொடுக்கிறார்கள். இதேபோல் மலேசியாவில் ஜென்டிங்க் ஹைலேண்ட்டில் உள்ள பர்ஸ்ட் வர்ல்டு ஓட்டலிலும் செய்வதை அங்கு சென்றவர்கள் பார்த்திருக்கலாம். சாவியில் ஒரு வித்தியாசம். டிசைன் ஓட்டைகளுக்குப் பதிலாக மேக்னடிக் ஸ்ட்ரிப் வைத்துள்ளார்கள். டெக்னாலஜி முன்னேற்றம்.

கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு ஊரைச்சுற்றிப்பார்க்கலாம் என்று வெளியில் வந்தேன். முன் ஜாக்கிரதையாக சாவியை எடுத்துக்கொண்டுதான் ரூம் கதவைச் சார்த்தினேன். எதற்கும் முன்ஜாக்கிரதையாக திறந்து பார்த்து விடலாமே என்று திறக்க சாவியை துவாரத்தில் போட்டேன். கதவு திறக்கவில்லை.
பகீரென்றது.

மீதி அடுத்த பதிவில். இப்படியேதான் இந்தத் தொடர் பதிவு சஸ்பென்ஸ்களுடன் முடியும். பழைய காலத்து கிரைம் நாவல்கள் நம் வாரப்பத்திரிக்கைகளில் வந்திருப்பதைப் படித்திருப்பீர்கள். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் ஒரு சஸ்பென்ஸ்சில் நிறுத்துவார்கள். சுஜாதா கடைப்பிடித்த உத்தி. இப்போது பதிவுலகில் "பரம(ன்) ரகசியம்" எழுதும் கணேசன் தவறாமல் இந்த உத்தியைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். ஆகவே நான் புதிதாக ஒன்றும் கண்டு பிடிக்கவில்லை. மற்றவர்களைக் காப்பிதான் அடிக்கிறேன்.

ஈயடிச்சான் காப்பி அடிக்கும் கலையில் பிஎச்டி பட்டம் வாங்கினவனாக்கும் நான்!!!

22 கருத்துகள்:


  1. முதலில் ஜவ்வு மிட்டாய் இப்ப சஸ்பென்ஸ் நாளை என்ன?

    பதிலளிநீக்கு
  2. உண்மையிலேயே பி.எச்டி பட்டம் வாங்கியவர்தான் நீங்கள். அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  3. //அப்போதுதான் மூளையில் ஒரு பொறி தட்டியது. அடடா, இப்போ போட்ட காசு கோவிந்தாதான் அப்படீன்னு பட்டது. //

    அட ராமா ! இது முன்னாடியே பொறி தட்டியிருக்கக்கூடாதோ ;)

    பதிலளிநீக்கு
  4. //ஈயடிச்சான் காப்பி அடிக்கும் கலையில் பிஎச்டி பட்டம் வாங்கினவனாக்கும் நான்!!!//

    ஈயடிச்சான் காப்பி என்றால் என்னவென்று தெரியாதவர்கள்

    http://gopu1949.blogspot.in/2012/03/5.html

    இந்த இணைப்புக்குப் போய் அதில் உள்ள இறுதிப்பகுதியைக் காப்பி அடித்துக்கொள்ளவும்::

    பதிலளிநீக்கு
  5. அந்தக்காலத்திலேயே நல்ல விவராமான ஆளாத்தான் இருந்திருக்கீங்க ஐயா...

    பதிலளிநீக்கு
  6. //ஈயடிச்சான் காப்பி அடிக்கும் கலையில் பிஎச்டி பட்டம் வாங்கினவனாக்கும் நான்!!!//

    ஐயா நீங்கள் வேளாண் வேதியலில் முனைவர் பட்டம் பெற்றவர் என அறிவேன். இதிலுமா?

    அடுத்து என்ன நடக்கும் என அறிய தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. உத்திதான் பழசு. நீங்கள் வைக்கும் ‘சஸ்பென்ஸ்’ புதுசுதான்.

    பதிலளிநீக்கு
  8. கணேசன் சாரின் பரமன் ரகசியத்தை வாரம் இரு முறை அப்டேட் செய்ய வாசகர்கள் வற்புறுத்துவது போல் நானும் உங்களை நாளையே அப்டேட் செய்ய சொல்லி வேண்டுகிறேன். சஸ்பென்ஸ் தாங்கவில்லை.

    பதிலளிநீக்கு
  9. அட.... ஒவ்வொரு பகுதியிலும் சஸ்பென்ஸா.... நடத்துங்க!

    பதிலளிநீக்கு
  10. பஸ்களில் கண்டக்டர் கிடையாது. டிக்கட் ட்ரைவர் கொடுப்பாரா இல்லை மெஷினா.?மொழிப் பிரச்சனை இல்லையா. ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிரைவர் டிக்கட் கொடுப்பார்.

      பிரான்ஸ் தவிர மற்ற ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் தெரிகிறது. அதனால் பிரச்சினை இல்லை.

      நீக்கு
  11. ஐயா சஸ்பென்ஸாக முடித்திருக்கிறார்...
    அருமை... காத்திருக்கிறோம்... அடுத்த பகிர்வுக்காக...

    பதிலளிநீக்கு
  12. சொல்லிச் செல்லும் விதமும்
    நிறுத்தும் இடமும் பதிவின் அளவும்
    பதிவை சுவாரஸ்யப்படுத்துப்போகின்றன
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. வழக்கம்போல இங்கேயும் உங்கள் நகைச்சுவை மிளிர்கிறது.
    CARD KEY - முறை இங்கு திருச்சியிலும் வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  14. சென்னை, திருச்சி எல்லா இடங்களிலும் இப்போ CARD KEY - முறைதான்!!!

    பதிலளிநீக்கு
  15. அந்த சஸ்பென்ஸ் முடிந்தது என்று இங்கு வந்தால் இங்கு இன்னொன்றா?
    எப்படியோ சுவராஸ்யம் தான்.

    பதிலளிநீக்கு