புதன், 11 மார்ச், 2015

இ.பி.கோ. செக்ஷன்கள் தெரியுமா?

                                    Image result for வரதட்சிணைக் கொடுமை
இ.பி.கோ. 406 செக்ஷன் அப்படீன்னா என்னன்னு தெரியுமா? தெரியாதவரைக்கும் நீங்கள் அதிர்ஷ்டசாலி. இதுதான் கணவன்களைப் பழிவாங்க மனைவிகள் பிரயோகிக்கும் ஆயுதம். என்னை, என் புருஷன் வரதட்சினைக் கொடுமை செய்கிறான் என்று போலீஸ் ஸ்டேஷனில் ஒரு பெண், புகார் கொடுத்தால் போதும். உங்களை இந்த இ.பி.கோ. 406 செக்ஷன் படி குற்றம் சாட்டி கம்பி எண்ண விட்டு விடுவார்கள்.

அதே மாதிரி வருமான வரிக்காரர்களும் பல செக்ஷன்கள் வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது செக்ஷன் 245 ம் 143 ம் ஆகும். அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று கேளவிப்பட்டிருப்பீர்கள். இந்த வருமான வரிக்காரர்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள். நின்றுதான் கொல்வார்கள்.

செக்ஷன் 245 என்பது கொலை செய்வதற்கான முன் அறிவிப்பு. செக்ஷன் 143 உங்களைக் கொலை செய்யப் போகிறோம் என்று சொல்லும் இறுதி அறிவிப்பு. வருமான வரிக்காரர்களுக்கும் ஆடிட்டர்களுக்கும் ஒரு எழுதாத உடன்படிக்கை இருக்கிறது. எப்படி நீதி மன்றத்தில் எதுவாக இருந்தாலும் ஒரு வக்கீல் மூலமாகத்தான் நீங்கள் உங்கள் வாதத்தைச் சொல்ல முடியுமோ அதே மாதிரி வருமான வரி இலாக்காவிலும் நீங்கள் எதைச் சொல்ல வேண்டுமென்றாலும் ஒரு ஆடிட்டர் மூலமாகத்தான் சொல்ல முடியும்.

உங்களுக்கு எத்தனை சட்டம் தெரிந்திருந்தாலும் சரி, நீங்கள் நேரில் போய் உங்கள் சமாச்சாரத்தைச் சொன்னால், நீங்கள் எதற்கு சார் அலைகிறீர்கள், ஒரு ஆடிட்டர் கிட்ட இதை விட்டுடுங்கோ, அவர் கவனிச்சுப்பார், என்பார்கள்.

நான் சமீபத்தில் இந்த 245 =143 செக்ஷன் விவகாரத்தில் சிக்கிக்கொண்டேன். எல்லாம் என்னுடைய கொழுப்பினால்தான். எப்படியோ எனக்கு கொலைக்கான உத்திரவு வந்து விட்டது. இது மூன்று வருடத்திற்கு முன்பு நான் சமர்ப்பித்த வருமானவரி கணக்கு சம்பந்தப்பட்டது.

வருமான வரி கட்டுவதில் ஒரு நுட்பம் பலரும் அறியாதிருக்கலாம். உங்கள் வருட வரி 10000 ரூபாய்க்கு அதிகமாக வரும் போலிருந்தால் அதை தவணை முறையில், செப்டம்பர், டிசம்பர், மார்ச் ஆகிய மாதங்களில் கட்டவேண்டும். அப்படிக் கட்டாவிட்டால் அதற்கு அபராத வட்டி கட்டவேண்டும்.

மாதாமாதம் சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த வரி மாதாமாதம் பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது. என்னை மாதிரி ஓய்வு பெற்றவர்கள் தாங்களாகவேதான் இந்த வரியைக் கட்டவேண்டும். நான் 10000 க்கு அதிகமான வரியை ஒரே தவணையில் கட்டினதால் அதற்கு அபராத வட்டி போட்டு 143 நோட்டீஸ் வந்து விட்டது. தொலைகிறது, கட்டி விடலாம் என்று கட்டி விட்டேன்.

அப்புறம் என்ன செய்யவேண்டும் என்றால் அதுதான் ஒரு குழப்பமான சமாச்சாரமாக இருக்கிறது. கூகுளில் தேடினால் ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். சரி, சாமியிடமே போயிடுவோம் என்று வருமானவரி ஆபீசுக்கே போனபோதுதான் இந்தக் கூட்டணி விவகாரம் தெரிந்தது.

நானும் ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தன் அல்லவா? அவ்வளவு சீக்கிரம் சர்க்கார் தர்பாரை விட்டு விடுவேனா என்ன? சர்க்கார் நடைமுறையில் ஒரு சூட்சுமம் என்னவென்றால் வாய் வார்த்தையாக என்ன பேசினாலும் பிந்நாளில் அது செல்லுபடியாகாது. நான் அப்படிச் சொல்லவேயில்லை என்று சாதித்து விடுவார்கள்.

ஆனால் எந்த சமாச்சாரமானாலும் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்து விட்டால் அது தன் பாட்டுக்கு தன் வேலையைச் செய்யும். ஆனால் அந்தக் காகிதம் கொடுத்ததற்கு நீங்கள் அத்தாட்சி வாங்கியிருக்கவேண்டும். இந்த நடைமுறையை நான் நன்கு அறிவேன்.

அதனால் நான் ஒரு கடிதம் எழுதி, நீங்கள் கேட்ட நிலுவையைக் கட்டிவிட்டேன், அதனால் என்னுடைய கொலைத் தண்டனையை ரத்து செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஒரு கடிதம் எழுதி, அதனுடன் நான் பணம் கட்டின அத்தாட்சியுடன் வருமானவரி ஆபீசில் கொடுத்து விட்டேன்.

ஆனாலும் வருமானவரி ஆபீசைச் சும்மா குறை சொல்லக்கூடாது. என்னுடைய கடிதத்தை வாங்கிக்கொண்டதாக ஒப்புதல் கொடுத்து விட்டார்கள். ஆனாலும் என்னுடைய கொலை நோட்டீஸ் சமாச்சாரம் இத்துடன் முடியுமா அல்லது ஒரு ஆடிட்டருக்கு கப்பம் கட்டித்தான் ஆக  வேண்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

9 கருத்துகள்:

  1. ஏ ஜி அலுவலகத்துக்கு அவர்கள் பக்கத்துக்குச் சென்று, ஈ மெயிலில் சும்மா என் குறையைச் சொல்லி ஒரு மெயில் தட்டினேன். 10 நாட்களில் பதில் வந்தது. 20 நாட்களில் அந்தக் குறை சரி செய்யப் பட்டது. அதுபோல இங்கும் காலம் மாறி, நல்லது சீக்கிரம் நடந்தால் நல்லதுதான்!

    பதிலளிநீக்கு
  2. தணிக்கையாளருக்கு நீங்கள் கப்பம் கட்டவேண்டிய சூழல் எழாது என்று தோன்றுகிறது. பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  3. எந்த சப்ஜெக்ட் ஆனாலும் என்னைப்போன்ற மிகச்சாதாரணமானவர்களுக்கும் எளிமையாகப் புரிந்துகொள்ளும்படியும், அதே சமயம் மிகவும் சுவைபடவும் எழுதுகிறீர்கள்.


    //ஆனாலும் என்னுடைய கொலை நோட்டீஸ் சமாச்சாரம் இத்துடன் முடியுமா அல்லது ஒரு ஆடிட்டருக்கு கப்பம் கட்டித்தான் ஆக வேண்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.//

    கொலை நோட்டீஸ் விடுவார்களே தவிர, கொலையெல்லாம் செய்யவே மாட்டார்கள் என நினைக்கிறேன். அதனால் கப்பம் ஏதும் கட்ட வேண்டியிருக்காது எனவும் நினைக்கிறேன்.

    எனக்கும் வருமான வரி பற்றிய சில சந்தேகங்கள் உள்ளன. தங்களை மெயில் மூலம் தொடர்பு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. ஒரே தவணையில் கட்டினாலும் இந்த பிரச்சனையா...? முருகா...!

    பதிலளிநீக்கு
  5. வருமான வரித்துறையினர் நாம் வரி கட்டவேண்டுமென்றால் இதுபோல் அறிக்கை விட்டு நம்மை பயமுறுத்திவிடுவார்கள். ஆனால் அவர்கள் திருப்பித்தருவதாக இருந்தால் எவ்வளவு கடிதம் எழுதினாலும் அவை ‘கிணற்றில் போட்ட கல்’ போலத்தான்!

    பதிலளிநீக்கு
  6. ஐயா

    எனக்கும் இது போன்று தண்டம் கொடுக்கவேண்டி வந்தது. நான் ரிடயர் ஆன வருடம் சம்பளம் பாதி வருடம், பென்ஷன் பாதி வருடம் வாங்கினேன். சம்பளத்தில் வருமான வரி பிடித்தார்கள். ஆனால் பென்சனில் வரி பிடிக்கவில்லை. ஆகவே ரிடர்ன் file செய்யும்போது சரியான வரியைக் கணக்கிட்டு வரியை எனக்கு சம்பளம் வந்த வங்கியில் கட்டிவிட்டேன். எல்லா அத்தாட்சிகளையும் வருமான வரி அலுவலகத்தில் சமர்ப்பித்து விட்டேன்.

    143 பிரகாரம் assessment ஆர்டர் வந்தது. அதில் நான் வட்டி, வட்டிக்கு வட்டி, அபராதம் எல்லாம் சேர்த்து 4010 ரூபாய் கட்டவேண்டும் என்று வந்தது. சரி என்று incometax சலான்
    எழுதி சம்பளம் வாங்கிய வங்கியில் கட்டி விட்டேன்.

    ஆனால் இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. கொஞ்ச நாள் கழித்து இந்த பணம் நிலுவையில் உள்ளதாக கணக்கு வந்தது.

    உறவினர் ஒருவர் வருமான வரி அலுவலகத்தில் இருந்ததால் இதைப் பற்றி விசாரித்தேன். அப்போது அவர் சலானில் உள்ள பெயர் என்னுடைய பாண் கார்டில் உள்ள பெயருடன் ஒத்துப் போகவில்லை என்றார். சலானில் ஜெயகுமார் என்ற பெயரை மாத்திரம் எழுதிவிட்டேன். பான் கார்டில் உள்ள முழுப்பெயர் ஜெயகுமார் சந்திரசேகரன் என்று எழுதவில்லை. எப்படியோ அது அவர் சரி செய்துவிட்டார்,

    நான் சொல்ல வருவது என்னவென்றால் நாம் எல்லா சட்டங்களையும் தெரிந்து அது பிரகாரம் சென்றாலும் அலுவலகத்தில் உள்ளவர்கள் எங்கேயாவது ஒரு ஓட்டையைக் கண்டுபிடித்து நம்மை சும்மா அலைக்கழிப்பார்கள். இது எல்லா அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. என்னைப்போன்ற அப்பாவிகள் தெரிந்து ''கொல்ல'' வேண்டிய தகவல்கள் ஐயா நன்றி
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  8. நல்ல தகவல் தான்....ஆனாலும் நம்மை எத்தனை முறை அலைய வைப்பார்கள் ஒரு சாதாரண கையெழுத்துக்காக.....அரசு அலுவலர்கள்...

    மலர்
    https://play.google.com/store/apps/details?id=com.aotsinc.tci.thousandpraises.english

    பதிலளிநீக்கு
  9. ஹைய்யோ நைனா உங்களுக்கு 143 தெரியாதா
    அட 143 கூட தெரியாதா
    நெசமா 143 தெரியாதா
    நேசமா கேக்குறேன் 143 தெரியாதா ?
    அப்ப 20 வருசத்துக்கு முன்ன வந்த ஆசை படம் பாருங்கோ.

    பதிலளிநீக்கு