திங்கள், 9 மார்ச், 2015

இட்லி சாப்பிடுவது எப்படி?

                                      Image result for இட்லி

தமிழ் நாட்டின் அடையாளச் சின்னம் இட்லிதான். இட்லியைக் கண்டுபிடித்தவன்(ள்) நிச்சயம் அதிமேதாவியாக இருக்கவேண்டும். இன்று அவன்(ள்) இருந்திருந்தால் நிச்சயம் புதுக் கண்டு பிடிப்புகளுக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கும்.

இட்லியில் இன்று பலவகைகள் வந்து விட்டன. ஆனாலும் வழக்கமான வட்ட வடிவிலான மல்லிகைப்பூ இட்லியை வெல்லும் அளவிற்கு எந்த இட்லியையும் யாரும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

இட்டிலி அல்லது இட்லியைச் சாப்பிடுவது எப்படி என்று சொல்வதற்கு முன் இட்லி எப்படிச் சுடவேண்டும் என்று பார்ப்போம். இட்லி நன்றாக இருந்தால்தான் அதைச் சாப்பிட்ட பின் முழுத் திருப்தி கிடைக்கும்.

இட்லி மாவு தயாரிப்பது பற்றியும் இட்லி சுடுவது பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் நமக்குன்னு ஒரு ஸ்பெஷல் பக்குவம் ஒண்ணு இருக்கில்ல. அதைப் பற்றி இங்கு சொல்கிறேன்.

இப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு ரெடிமேட் இட்லி மாவுக் கடைகள் வந்து விட்டன. அதை சில குடும்பத் தலைவிகள் வாங்கி உபயோகப் படுத்துகிறார்கள். அது இட்லி மாதிரியான போலி சரக்கு. அதைச் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு நான் இந்தப் பதிவில் சொல்லும் முறையில் தயார் செய்த இட்லி பிடிக்காது.

இட்லி தயாரிக்க நல்ல புழுங்கரிசி தேவை. அரிசியெல்லாம் அரிசி ஆகாது. இட்லிக்கென்று சில ரகங்கள் இருக்கின்றன. அந்த ரக அரிசிதான் நல்ல இட்லி தயாரிக்க உதவும். வெள்ளைக் கார் என்று ஒரு ரகம் இருக்கிறது. அதுதான் இட்லிக்குச் சிறந்தது.

பின்பு நல்ல உளுந்துப் பருப்பு வேண்டும். வடைக்கு ஆட்டின மாதிரியான பருப்பு இல்லை. அதை விட நல்ல பருப்பு வேண்டும். உளுந்துப் பருப்பு நான்கு வகைகளில் கிடைக்கும்.

1. முழு கருப்பு - உளுந்து. இது நமக்காகாது.

2. முழு வெள்ளை உழுந்து -  இது முழு கருப்பு உளுந்தின் தோலை நீக்கியது. இதுவும் நமக்கு பிரயோஜனமில்லை.

3. உடைத்த வெள்ளை உளுந்தப் பருப்பு -  நமது இல்லத்தரசிகள் இதைத்தான் இட்லி செய்ய பெரும்பாலும் விரும்புவார்கள். ஆனால் இதைப் பயன்படுத்தி சுடும் இட்லி நம் தரத்திற்கு வராது. பிரயோஜனமில்லை.

4. உடைத்த கருப்பு உளுந்துப் பருப்பு - இதுதான் இட்லி செய்ய உத்தமம். ஆனால் இதை ஊறப்போட்டு, இதன் தோலை நீக்குவது ஒரு பெரும் வேலை. அதனால்தான் நம் இல்லத்தரசிகள் இதை விரும்புவது இல்லை. ஆனால் இதை உபயோகித்தால்தான் நல்ல, நாம் விரும்பும் தரமுள்ள இட்லி கிடைக்கும். நோகாம நோம்பி கும்பிட முடியுமா?

இட்லி மாவு தயார் செய்யும் முறை:

ஒரு லிட்டர் இட்லி அரிசி எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு அந்த அரிசி நன்கு மூழ்கி, அதற்கு மேலே மூன்று விரற்கடை அளவு தண்ணீர் இருக்குமாறு தண்ணீர் ஊற்றவும். இந்த தண்ணீரில்தான் இருக்குது சூட்சுமம். எந்த தண்ணீரையும் ஊற்றக்கூடாது. சில கிணற்று நீர் உப்பாக இருக்கும். அந்த தண்ணீர் கூடாது. நல்ல தெளிந்த ஆற்றுத் தண்ணீர் அல்லது சிறுவாணித் தண்ணீர் ஊற்றுவதுதான் உத்தமம்.

ஒரு லிட்டர் அரிசிக்கு கால் லிட்டர், கூடக் கொஞ்சம் ஒரு உள்ளங்கையளவு, உடைத்த கருப்பு உளுந்துப்பருப்பு எடுத்துக் கொண்டு அதையும் ஒரு பாத்திரத்தில் போதுமான தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். அரிசியும் உளுந்தும் குறைந்தது எட்டு மணி நேரம் ஊறவேண்டும். காலையில் டிபன் சாப்பிட்டவுடன் இந்த வேலையைச் செய்தால் மாலையில் காப்பி குடித்து விட்டு இவைகளை ஆட்ட சௌகரியமாக இருக்கும்.

சில நவநாகரிக மங்கையர்கள், எப்படியும் அரிசி மாவையும் உளுந்து மாவையும் ஒன்றாகத்தானே கலக்கி வைக்கப் போகிறோம்? ஆகவே அரிசியையும் உளுந்தையும் ஒன்றாகவே ஊறவைத்து விடலாமே என்று கருதி, இவைகளை ஒன்றாகவே ஊறவைத்து ஒன்றாகவே ஆட்டுவார்கள். இவர்கள் கருப்பு உளுந்துப் பருப்பிற்குப் பதிலாக வெள்ளை உளுந்துப் பருப்பைப் பயன்படுத்துவார்கள்.

இந்த முறை நமக்கு ஒத்து வராது. இது முழு சோம்பேறித்தனத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட முறை. இந்த முறையில் தயாரிக்கப்படும் இட்லியில் நாம் எதிர்பார்க்கும் தரம் வராது.

தமிழ்நாட்டு ஓட்டல்கள், மற்றும் ஆந்திரா, கர்னாடகா, மகாராஷ்ட்ரா ஓட்டல்களில் இன்னொரு முறை கடைப்பிடிக்கிறார்கள். அரிசியை அரவை இயந்திரத்தில் அதாவது மெஷினில் கொடுத்து மாவாக்கி வைத்துக் கொள்வார்கள். உளுந்தை மட்டும் கிரைண்டரில் ஆட்டி அதற்குள் இந்த அரிசி மாவைத் திட்டமாகப் போட்டு புளிக்க வைத்து இட்லி சுடுவார்கள். இவ்வகை இட்லிகள் பிய்க்கும்போதே  உதிரி உதிரியாக உதிர்ந்து விடும். அங்கு ஓட்டல்களில் இட்லி சாப்பிட்டவர்கள் இதை அனுபவித்திருப்பார்கள்.

இதற்காகவே மளிகைக் கடைகளில் அரிசி மாவு விற்கப் படுகிறது. பெரும்பாலான வீடுகளிலும் இந்த மாவையே உபயோகப் படுத்துகிறார்கள். இது இட்லி அல்ல. ஆகவே இதை விட்டு விடுவோம்.

இப்படி காலையில் ஊறவைத்த உளுந்தையும் அரிசியையும் மாலையில் ஆட்ட வேண்டும். ஒரிஜினல் இட்லி வேண்டுமென்றால் இவைகளை கல்லுரலில்தான் ஆட்டவேண்டும். முதலில் உளுந்தை நன்கு பொட்டுகளெல்லாம் போகுமாறு களைந்து மறுபடியும் நல்ல தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு அந்த உளுந்தை ஆட்டுரலில் போட்டு நன்றாக நைசாக ஆகும் வரை ஆட்டவேண்டும். அவ்வப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவேண்டும்.

ஆட்ட ஆட்டத் தான் உளுந்து மாவு உபரியாக வரும். அப்போதுதான் நாம் எதிர் பார்க்கும் மல்லிகைப்பூ இட்லி கிடைக்கும். உளுந்து மாவு நன்றாக நைசாக ஆட்டிய பின் அதை எடுத்து ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும். இப்போது ஊறவைத்த அரிசியையும் தண்ணீர் வடித்து விட்டு இன்னும் இருமுறை நல்ல தண்ணீர் விட்டுக் கழுவி விட்டு ஆட்டுக்கல்லில் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு ஆட்டவும்.

அரிசியை கொஞ்சம் கரகரப்பான பக்குவத்திற்கு ஆட்டினால் போதுமானது. இதை ஆட்டி முடித்த தும் இதை எடுத்து உளுந்து மாவிற்குள் போடவும். முழுதும் போட்டு முடித்தவுடன் தேவையான அளவு உப்பு போடவும். கல்லுப்புதான் போடவேண்டும்  டேபிள் சால்ட் உதவாது. இப்போது இந்த மாவை நன்கு கையால் கலக்கி, மூடி போட்டுப் பிறகு ஒரு ஓரமாக யாரும் அதைத் தொந்திரவு செய்யாத இடத்தில் வைக்கவும்.

சமையலில் கைப் பக்குவம் பற்றிக் கேளவிப்பட்டிருப்பீர்கள். சமையலுக்கு வேண்டிய அத்தனை சாமான்களும் செய்முறையும் ஒன்றாக இருந்தால் கூட ஒவ்வொருவர் சமையல் ஒவ்வொரு பக்குவத்தில் இருக்கும். சிலது நன்றாக இருக்கும் சிலது வாயில் வைக்க விளங்காது. இந்தக் கைப்பக்குவம் இட்லி தயார் செய்யும்போது நன்றாக வெளிப்படும். சிலர் மாவு ஆட்டி வைத்தால் புளிக்காது. சிலர் ஆட்டினால் அதிகம் புளித்து விடும். சில கைகளுக்குத்தான் இட்லிமாவு சரியான அளவில் புளித்து இட்லி நன்றாக வரும்.  அதனால்தான் மாவைக் கையால்தான் கலக்கவேண்டும்.

இதைச் செய்து முடிக்க எப்படியும் பொழுது சாய்ந்து விடும்.  இந்த மாவு எடுத்து வைக்கும் பாத்திரம் கொஞ்சம் பெரிதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். இல்லாவிட்டால் மாவு புளிக்கும்போது பொங்கி வெளியில் வழிந்து விடும். அதுவும் வெய்யில் அதிகமான காலத்தில் இது சீக்கிரமாக நடக்கும். அப்படி மாவு வெளியில் வந்து விட்டால் பிறகு அதில் சுடும் இட்லி அவ்வளவு நன்றாக இருக்காது. ஆகவே மாவுப் பாத்திரத்தை வீட்டின் குளிர்ச்சியான பகுதியில் வைக்கவும்.

காலையில் மாவுப் பாத்திரத்தைத் திறந்தால் இட்லி நன்கு புளித்து பொங்கியிருக்கும். இப்போது அந்த மாவை கரண்டியால் நன்கு கலக்கினால் இட்லி மாவு தயார்.

இட்லி சுடுவது எப்படி?

இதுதான் எங்களுக்குத் தெரியுமே என்று ஒரு சினிமாவில் வந்த மாதிரி சொல்லப்படாது. இட்லி மாவை ஆவியில் வேகவைத்தால் இட்லி தயார்தான். ஆனால் அதற்குத்தான் எத்தனை வகையான சாதனங்கள்?

என் பாட்டி எனக்கு மண் பானையில் இட்லி சுட்டுத் தருவார்கள். இட்லின்னா அதுதான் இட்லி. பஞ்சு மாதிரி மெதுவாக இருக்கும். அதன் மேல் நல்ல நெய் ஊற்றி, அப்போதுதான் கல்லுரலில் அரைத்த தேங்காய்ச் சட்னி தொட்டு சாப்பிட்டால்.........ஆஹா, அதுவே சொர்க்கம். அதுதான் இட்லி சாப்பிட்டதற்கு அடையாளம்.

                                          Image result for மண் இட்லிப் பானை

மண் இட்லிப்பானையின் அமைப்பை எனக்குத் தெரிந்தவரையில் கூறுகிறேன். ஒரு சுமாரான அளவில் வாயகன்ற ஒரு மண் பானை. அதை மூடுவதற்கான சரியான அளவில் ஒரு மூடுசட்டி. இந்தப்  பானையின் வாயை ஒரு துணியால் கட்டவேண்டும். அது குழிந்து இருக்கும். அதில் இரண்டு கரண்டி இட்லி மாவு ஊற்றவேண்டும். பிறகு அந்த பானையின் வாய் மேல் மூங்கில் தப்பையில் கூட்டல் வடிவில் கட்டப்பட்ட ஒரு சாதனத்தை வைத்து அதன் மேல் ஒரு துணி விரிக்கவேண்டும். இப்போது அந்த துணியில் நான்கு பாகங்கள் இருக்கும். ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு கரண்டி இட்லி மாவு ஊற்றி, மேல் மூடியை வைத்து மூடவேண்டும். பிறகு இந்த இட்லிப் பானையை விறகு அடுப்பில் வைத்து அடுப்பை எரிக்கவேண்டும்.

அந்தக் காலத்தில் விறகு அடுப்புத்தான் உண்டு. வேறு அடுப்புகள் கிடையாது. பத்துப் பதினைந்து நிமிடங்களில் இட்லி வெந்து விடும். பானை மூடியைத் திறந்து இட்லிகளை எடுக்க வேண்டியதுதான். ஒரு பெரிய இட்லியும் நாலு சிறிய இட்லியும் கிடைக்கும். பார்க்கவும் சாப்பிடவும் அது போல் இட்லி கிடைக்காது.

பிற்காலத்தில் இந்த அமைப்பில் பித்தளை, அலுமினியம், எவர்சில்வர் ஆகிய உலோகங்களில் இட்லிப் பானைகள் செய்ய ஆரம்பித்து உபயோகத்திற்கு வந்து விட்டன. ஆனாலும் இட்லிப் பானை என்கிற பெயர் மட்டும் அப்படியே நிலைத்து இருக்கிறது. இந்தப் பாத்திரங்களிலும் துணி போட்டு அதன் மீது இட்லி சுடுவதுதான் வழக்கமாக இருந்தது. அந்த இட்லிகளும் ஓரளவு பழைய மண்பானை இட்லியின் சுவையுடன் இருந்தன.

ஆனால் இக்காலத்து நாகரிக யுவதிகள் அந்தத் துணிகளைக் கண்டு வெறுப்புற்றார்கள். காரணம் அவைகளை சுத்தம் செய்து பராமரிப்பது கொஞ்சம் கடினமான வேலை. ஆகவே துணி இல்லாமலேயே இட்லி சுடும் பழக்கம் வந்து விட்டது. அதுவும் பிரஷர் குக்கரில் வைக்கும் இட்லித் தட்டுகள் வந்த பிறகு இந்த ஆடையில்லா இட்லி வழக்கமாகி விட்டது. அந்தத் தட்டுகளில் லேசாக எண்ணை தடவி அதன் மேல் இட்லி மாவை ஊற்றி குக்கருக்குள் வைத்து கேஸ் அடுப்பில் வைத்தால் வெகு சீக்கிரம் இட்லிகள் தயாராகி விடுகின்றன. ஆனால் இவை ருசியில் இரண்டாம் தரம்தான்.

கல்யாண வீடுகளில் நூற்றுக் கணக்கான இட்லிகளை சில நிமிடங்களில் சுடுவதற்குத் தோதாக ஸ்டீம் இட்லி குக்கர்கள் வந்து விட்டன. பத்து நிமிடத்தில் சில நூறு இட்லிகளைத் தயார் செய்து விடலாம். ஆனாலும் கல்யாணப் பந்தியில் நமக்குக் கிடைப்பதோ ஆறின இட்லிதான். ஏன் சூடான இட்லிகளைப் பரிமாறுவதில்லை என்பது கல்யாண சமையல்காரர்களுக்கே வெளிச்சம்.

இட்லி சாப்பிடுவது எப்படி?
                                         
                                       Image result for மண் இட்லிப் பானை
இட்லியைத் தனியாகச் சாப்பிடுவதில்லை. குழந்தைகளுக்கு இட்லிமேல் சிறிது நெய் ஊற்றி லேசாக உப்பு போட்டு சாப்பிடக் கொடுப்பார்கள்.வளர்ந்த குழந்தைகளான நாம் இட்லி சாப்பிட பல வழிகள் கண்டு பிடித்து வைத்திருக்கிறோம். தேங்காய்ச் சட்னிதான் எல்லாவற்றிற்கும் டாப். இதில் பலவகைகள் இருக்கின்றன. ஆனாலும் பல காலமாக இருந்து வரும் பொட்டுக் கடலைபோட்டுச் செய்யும் தேங்காய் சட்னிதான் பிரபலம். இதை நல்ல கல்லுரலில் கையால் ஆட்டினால்தான் அதன் முழுச் சுவையும் தெரிய வரும். மிக்சியில் அரைக்கும் சட்னியில் ஒரிஜினல் சுவை இருக்காது.

சூடான இட்லியின் மேல் நல்ல புத்துருக்கு நெய் அல்லது மரச்செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணை, இரண்டில் ஏதாவது ஒன்றை ஊற்றிக்கொண்டு, தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிடுவதுதான் இட்லி சாப்பிடும் ஒரே முறை. மற்றவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

                                      Image result for இட்லி சாம்பார்

அடுத்ததாக இரண்டாம் தர முறை ஒன்று இருக்கிறது. சின்ன வெங்காயம், துவரம் பருப்பு போட்டு அரைத்து விட்டுச் செய்யும் சாம்பாரும் ஒரு நல்ல உத்திதான். ஆனால் இதற்குச் சில வரையறைகள் இருக்கின்றன.

ஒரு குடும்பத்திற்கு வேண்டிய சாம்பார் ஒரு சின்ன அண்டா நிறைய செய்து கொள்ளவேண்டும். அதில் நான் முன்பு ஒரு பதிவில் கூறியபடி ஒரு 50 உளுந்து வடைகள் சுட்டு, வெந்நீரில் போட்டு எடுத்து இந்த அண்டா சாம்பாருக்குள் போட்டு விடவேண்டும். சாம்பார் மிகவும் கெட்டியாக வைக்கவேண்டாம். ரசத்தைவிடக் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் போதும்.

இரண்டு இட்லிகளை ஒரு குழியான தட்டில் எடுத்துக்கொள்ளவேண்டும். இட்லி நன்றாக மூழ்கும் அளவு சாம்பார் ஊற்றவேண்டும். சாம்பார் அந்த அளவிற்கு லேசாக இருக்கவேண்டும். கூடவே ஒரு வடையையும் எடுத்துப் போட்டுக்கொள்ளவேண்டும். இட்லிகளையும் வடையையும் ஒரு ஸ்பூன் கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி சாம்பாருடன் சேர்த்து சாப்பிடவேண்டும். நடுவில் சாம்பார் குறைந்து விடும். அப்போது மேலும் சம்பார் ஊற்றிக்கொள்ளவேண்டும்.

இப்படியாக ஒரு அரை டஜன் இட்லிக்கு (கூட மூன்று வடை) ஒரு அரை வாளி சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும். இப்படிச் சாப்பிட்ட பிறகு நமது ஸ்பெஷல் மருந்து (யூனிஎன்ஜைம்) நான்கு சாப்பிட்டு இரண்டு டம்ளர் வெந்நீர் குடித்து விட்டு ரெஸ்ட் எடுக்கவேண்டியதுதான். இந்த ஸ்பெஷல் இட்லி-வடை-சாம்பார் சாப்பிடுவதை ஞாயிற்றுக் கிழமைகளில் வைத்துக் கொள்வது விசேஷம். ஏனென்றால் காலையில் இட்லி சாப்பிட்ட பிறகு தேவையான ஓய்வு யாருடைய தொந்திரவும் இல்லாமல் எடுக்க வசதியாயிருக்கும். அன்று வெளியூர் போவதாகத் தெரிந்தவர்களுடன் சொல்லி விடுவது உத்தமம்.

என்ன, இந்த முறையில் இட்லியின் சுவை குறைந்து சாம்பாரின் சுவைதான் தூக்கலாக இருக்கும். வேறு வழியில்லை. ஒரு இன்பத்தைத் தியாகம் செய்தால்தான் அடுத்த இன்பத்தை அடைய முடியும்.

கலிகாலமானதால் இப்போது இட்லிக்குத் தொட்டுக்கொள்ள பலவகையான சட்னிகள், கொத்சுகள், பொடிகள் வந்து விட்டன. ஆனால் ஒரிஜினல் இட்லிப் பிரியர்கள் யாரும் அவைகளைக் கண்ணால் கூடப் பார்க்கமாட்டார்கள். அதே மாதிரி இட்லி மீந்து போனால் அவைகளைப் பொடித்து வெங்காயம் கடுகு தாளித்து உப்புமா பண்ணலாம். எங்க ஊரில் அன்னபூர்ணாவில் செய்வது போல் கத்தியால் வெட்டி மஞ்சள் பூசி தாளித்து ஒரு ஸ்பெஷல் ஐட்டமாகப் பண்ணலாம்.

கடைசியில் ஒன்றும் பண்ண முடியாவிட்டால் கடலை மாவுடன் சேர்த்துப் பிசைந்து பக்கோடா செய்யலாம். அடுத்த நாள் ஆட்டும் இட்லி மாவுடன் சேர்த்து விடலாம். இப்படி என்னென்னமோ செய்யலாம். வெளி நாடுகளிலும் இந்த இட்லியானது பல நாமதேயங்களுடன் தயார் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. என்ன இருந்தாலும் நம்ம ஊர் இட்லி சட்னிக்கு இணையானது எதுவும் இல்லை.

                                  Image result for மண் இட்லிப் பானை

46 கருத்துகள்:

  1. இட்லியைச் சும்மாப் புட்டுப் புட்டுக் கொடுத்து அசத்திட்டீங்க ! பாராட்டுக்கள்.

    ஆனால் எனக்கு இப்போ விடியற்காலமே பசி எடுத்துடுச்சு, சார் !!

    பதிலளிநீக்கு
  2. ருசித்துப் படித்தேன், ச்சே.. ரசித்துப் படித்தேன் ஸார்!

    பதிலளிநீக்கு
  3. இதை விட விளக்கம் யாராலேயும் கொடுக்க முடியாது... ஹா... ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  4. பலே அடுத்து
    1. அரிசி ஊறவைப்பது எப்படி
    2. அப்பளம் சுடுவது எப்படி
    3. வெந்நீர் தயாரிப்பது எப்படி
    4. வெங்காயம் உரிப்பது எப்படி
    என்கிற வரிசையில் பல பதிவுகளை எதிபார்க்கிறோம்.
    தம +1

    பதிலளிநீக்கு
  5. இட்லி மகாத்மியம் - மல்லிகைப் பூ இட்லி மாதிரியே சுவையானது! :)

    ஒவ்வொரு விவரங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

  6. //நல்ல தெளிந்த ஆற்றுத் தண்ணீர் அல்லது சிறுவாணித் தண்ணீர் ஊற்றுவதுதான் உத்தமம்.//

    ஐயா சென்னையில் இவை இரண்டுமே கிடைக்காது. என் செய்ய?

    //ஏன் சூடான இட்லிகளைப் பரிமாறுவதில்லை என்பது கல்யாண சமையல்காரர்களுக்கே வெளிச்சம்.//

    விடியற்காலையிலேயே (அதாவது சாப்பிடுவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கே முன்பே ) அவைகளை சுட்டு அடுக்கிவிடுவதால் அவைகள் சூடாக இருப்பதில்லை.

    இட்லி மாவு தயாரிப்பது பற்றியும், இட்லியை சுட்டு எப்படி சாப்பிடுவது என்பது பற்றியும் விரிவாக விளக்கியமைக்கு நன்றி! ஆனால் இன்றைய இயந்திர உலகில் நம் மக்களால் இது போன்று செய்யமுடியுமா எனபது ஐயமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகில் எல்லாவற்றையும் உயர் இலக்கை எதிர்பார்த்துச் செய்ய முடியாது என்பது உண்மை. ஆனால் உயர் இலக்கு என்னவென்றாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

      நீக்கு
  7. Kaiyile araik kilo arisi eduthukinu siruvattu thannikkaka taxi le poyittu irukken.
    Eppa oora vachu eppa aatti eppa suttu eppa thinga poren theryalla .
    Ada ! Saravana bhavan hotel kannukkuunnaadi theryuthe . anga irangi 15 saambaar idli sappitta pinne payanathai thpdarvom.
    Subbu thatha
    Super pathovu.ponga

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்புத் தாத்தா சொல்வது என்னவென்றால் -

      கையிலே அரைக்கிலோ அரிசி எடுத்துக்கிட்டு சிறுவாணித் தண்ணிக்காக டாக்சியிலே போய்க்கிட்டிருக்கேன்.

      எப்ப ஊறவச்சு, எப்ப ஆட்டி, எப்ப சுட்டு, எப்ப திங்கப் போறேன் தெரியல. அடடா, சரவணபவன் ஓட்டல் கண்ணுக்கு முன்னாடித் தெரியுது. அங்க இறங்கி 15 சாம்பார் இட்லி சாப்பிட்ட பின்னே பயணத்தைத் தொடர்வோம்.

      15 சாம்பார் இட்லி சாப்பிட்டா உங்க ஒடம்பு தாங்குமா?

      நீக்கு
    2. //15 சாம்பார் இட்லி சாப்பிட்டா உங்க ஒடம்பு தாங்குமா?//

      ஒருசில ஹோட்டல்களில் [நாம் வீட்டில் பொதுவாக ஓரிரு பெரிய இட்லிக்குக் கரண்டியில் எடுக்கும் அளவு மாவையே], ஸ்பூனில் எடுத்து, பதினைந்து சிறிய இட்லியாக்கி, ’சாம்பார் இட்லி மினி சைஸ்’ என்று பெயர் கொடுத்து அளிக்கிறார்கள்.

      சாம்பாரில் மிதந்து ஊறிய அவற்றை ஸ்பூன் + முள் கரண்டிகளால் குத்திக்குத்தி சாப்பிடாமல் அப்படியே ஒவ்வொன்றாக முழுசாகச் சாப்பிடவும் எளிதாக உள்ளது.

      ஒருவேளை இவர் அதைச்சொல்கிறாரோ என்னவோ !

      நீக்கு
  8. //மாலையில் மாவுப் பாத்திரத்தைத் திறந்தால் இட்லி நன்கு புளித்து பொங்கியிருக்கும். இப்போது அந்த மாவை கரண்டியால் நன்கு கலக்கினால் இட்லி மாவு தயார்.//

    இட்லிக்கு மாவைக் கலக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். கலக்கினால் இட்லி பூப்போல வராது. எங்களுக்கு சமைக்க தெரியாம இருக்கலாம். அதுக்காக குறை சொல்ல முடியாதுன்னு நினைச்சுடாதீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, என் பதிவில் ஒரு தவறு ஏற்பட்டுவிட்டது. இந்த இடத்தில் காலையில் என்று இருக்கவேண்டும். மாலையில் என்று தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும்.

      பின்னூட்டப்பெட்டி இருப்பதே நிறைகுறைகளைச் சுட்டிக் காண்பிப்பதற்குத்தானே? அதனால் குறைகளைத் தாராளமாகத் தெரிவிக்கலாம். நான் வருத்தப்படமாட்டேன்.

      மாவைக் கலக்கலாமா, கூடாதா என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. காலையில் மாவுப் பாத்திரத்தில் பொங்கியிருக்கும் மாவில் மேலாக இருப்பதில் உளுந்து மாவு அதிகமாக இருக்கும். அதனால் அந்த மாவில் சுடும் இட்லி அதிகம் பூப்போல இருக்கலாம்.

      நீக்கு
    2. ஐயா, பதிவில் குறை சொல்லவில்லை. சமையலில், குறையிருந்தால் மட்டுமே சொல்லுவோம் என்றுதான் கூறினேன்.

      நீக்கு
    3. U r one hundred percent correct. Kalakkaama anni annikku konjam maavu eduthu idli pannumbothu ulundhu mele arisi maavu keezhe poyidum. 2 or 3days appuram seyyara dosai ellam gettiyya irukkum so dhinasai nalla kalakkivittu pinne maavu eduthu dosai seyvathuthaan uthamm.
      Subbu thatha
      Btw my tamil software npt working on ipad so writing in english transcript

      நீக்கு

  9. இவ்வளவு எழுதிய நீங்கள் குஷ்பு இட்லியை மறந்தது ஏனோ?
    சரவண பவன் சாம்பார் இட்லி என்பது ஒரு ஸ்பூன் மாவில் ஒரு இட்லி செய்வது. அது புட்டு சாப்பிட வேண்டியதில்லை. அப்படியே ஒவ்வொரு இட்லியாக வாயில் போட வேண்டும். 15 இட்லி ஒரு பெரிய இட்லிக்கு சமம்.
    அந்தக்கால சினிமாக்களில் அனாதை பெண்கள் இட்லி கடை வைத்து பிழைப்பார்கள். உ-ம் பராசக்தி.

    அடுத்ததாக காஞ்சிபுரம் இட்லி, MTR ரவா இட்லி, பாலக்காடு ராமாபுரம் இட்லி பற்றி ஒரு செயல் விளக்கம் எதிர்பார்க்கிறேன்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். எதுவுத் அதனுடைய அளவிற்கு மீறிப் பெரிதாக இருந்தால் அதற்கு மதிப்பு கம்மி. யானை பெரிதாக இருக்கலாம். பூனை அப்படி இருக்கலாமா? குஷ்பு இட்லி பார்ப்பதற்குத்தான் கொழுக்-மொழுக் என்று இருக்கும். ஆனால் தரத்தில் அப்படி இல்லை. (நான் குஷ்புவைச் சொல்லவில்லை. இட்லியைத்தான் சொல்லுகிறேன். குஷ்பு ரசிகர்கள் சண்டைக்கு வராதீர்கள்.)

      நீக்கு
    2. உங்களுக்கு கொழுப்பு ரொம்பவும் அதிகம்
      இப்படிக்கு
      குஷ்பு ரசிகன்

      நீக்கு
    3. இல்லீங்க, போன வாரம்தான் எல்லா டெஸ்ட்டும் செய்தனுங்க. டோட்டல் கொழுப்பு கம்மியா இருக்கிறதா ரிப்போர்ட் வந்திருக்குங்க.

      நீக்கு
  10. நல்ல விளக்கம். இட்லியை ” விழுந்து விழுந்து” (உளுந்து உளுந்து பார்த்து) எப்படி செய்தாலும், அதனோடு சேர்க்கும் சாம்பார், சட்னிதான் பிரதானம். அந்த காலத்தில் ஆட்டுக்கல்லில், அம்மியில் அரைத்த சட்னியில் இருந்த சுவை இன்றைய மிக்ஸியில் அரைத்த சட்னியில் இல்லை.

    பதிலளிநீக்கு
  11. எனக்கு ஒரு அடிப்படை சந்தேகம் இட்லியை சுடுகிறோமா அவிக்கிறோமா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சினிமாவில் கவுண்டமணி ஒரு ஜோக் சொல்வார். அதுதான் என் நினைவிற்கு வருகிறது. "கோழி குருடா இருந்தா என்ன, கொழம்பு ருசியா இருந்தாப் போதும்" அப்படீம்பார். இட்லியைச் சுட்டால் என்ன, அவித்தால் என்ன, ருசியாக இருந்தால் சரி.

      நீக்கு
  12. இந்த பதிவு நல்லா இருக்கு....அடுத்த பதிவில் குலாஜாப்மூன் எப்படி செய்வார்கள் என்பதை சொல்லுங்கள்......உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி....


    மலர்

    பதிலளிநீக்கு
  13. பிரமாதம்! கலக்கிவிட்டீர்கள்.
    அப்படியே தமிழ்நாடு புகழ் குஷ்பு இட்லி தயாரிப்பு பற்றிய தங்கள்
    பதிவை எதிர்பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  14. இட்லியை வைத்து இவ்வளவு பெரிய பதிவா ? அசத்துங்க, அசத்துங்க...

    பதிலளிநீக்கு
  15. C R குண்டு அரிசி தான் இட்லிக்கு சரியாக வரும்.ஆட்டுக்கல்லில் அரைத்த உளுந்த வடையும் அருமையாக இருக்கும் . இட்லியின் அருமை வீட்டு சாப்பாட்டை தவறவிட்டவர்களுக்கே தெரியும்.🍩🍠😆

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனதை நோகடித்து விட்டேன் போலிருக்கிறதே, மன்னிக்கவும். ஊருக்கு வரும்போது எங்க வூட்டுக்கு வாங்க, இட்லியிலேயே உங்களைக் குளிப்பாட்டி விடுகிறேன்.

      நீக்கு
    2. ஆஹா, பேஷா வாங்கோ, என் வீட்டுக் கதவு உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும்.

      நீக்கு
  16. அய்யா எங்க ஊருல எல்லாம் நாங்க இட்லிய அவிக்கிறோம்ன்னு தான் சொல்லுவோம்... தோசையத்தான் சுடுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க எல்லாம் அந்தக் காலத்தில இருந்து பரம்பரை வீரர்கள். காட்டில் இறைச்சியைச் சுட்டுத் தின்று வளர்ந்தவர்கள். ஆகவே எதையும் நாங்கள் சுட்டுத்தான் பழக்கம்.

      நீக்கு
    2. ஆவியில் வேக வைப்பதனால் அவிக்கிறோம்ன்னு சொல்லுவோம் :-)

      நீக்கு
    3. வட்டார வழக்குகள் வித்தியாசமானவை. மதுரையில் நான் வேலை பார்த்தபோது, "அந்த வேலையை கோளாறா முடிச்சிடு" அப்படீன்னு அடிக்கடி கேளவிப்படுவேன். ஏன் அநுத வேலையைக் கெடுக்கச் சொல்றாங்கன்னு யோசிப்பேன். எங்க ஊர்ல கோளாறுன்னா பிரச்சினைன்னு அர்த்தம். ஆனா மதுரையில கோளாறுன்னா சாமர்த்தியமா செய்துடுன்னு அர்த்தம்ங்கிறது அப்புறம்தான் எனக்குப் புரிந்தது. சில சமயம் இந்த வட்டார வழக்குகள் விபரீதமாகக் கூட முடிந்து விடும். திருநெல்வேலியில் "பேசுதல்" என்ற வார்த்தை "ஏசுதல்" என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றது. அந்த ஊர்ல போய் நான் உங்களைப் பேசணும்னு சொன்னா என்ன நடக்கும்னு யோசித்துப் பாருங்க?

      நீக்கு
  17. ருசித்து.. அட ரசித்துப் படித்தேன் ஐயா...
    எப்படிப்பட்ட விளக்கம்... அருமை.

    பதிலளிநீக்கு
  18. கோயம்புத்துர்காரர்கிட்டே ஜாக்கிரைதையாக் இருக்கனும் போல இருக்குது....அவங்க எல்லாம் தீவிரவாதிகள் போல இருக்கு... அதுனாலதான் இட்டிலியை சுடுறாங்க....

    மதுரைக்காராங்க நாங்க அப்பாவி இட்லியை அவிக்கதான் செய்யுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுப்பை அவித்து விட்டால் அப்புறம் இட்லி எப்படி வேகும்?

      நீக்கு
  19. என்ன ஆளுங்க நீங்க உங்களுக்கு இட்லியை சுடுவது பற்றி கொஞ்சம் கூட தெரியவில்லை... நான் சொல்லுறேன் பாருங்க எப்படி சுடுவது என்று..

    முதலில் இட்லி விற்கும் பாட்டிகிட்ட போய் பாட்டி பாட்டி நீ ரொம்ப அழகாக இருக்கே அதனால் உன்னை பார்க்க ரஜினிகாந்த வந்து அங்கே வெயிட்டிங்க் பண்ணிகிட்டு இருக்கார்ணு சொல்லனும் அதை கேட்டு அந்த பாட்டி அங்கிருந்து நகரும் போது நாம் நமக்கு வேண்டியளவு இட்டிலியை சுட்டுகிட்டடு வந்திரணும்

    பதிலளிநீக்கு
  20. அடுத்ததாக பஜ்ஜி சுடுவது எப்படி என்ற பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். எத்தனையோ செய்முறைகள் இன்று இணையத்தில் கிடைக்கிற போதும் உங்களளவுக்கு விரிவாகவும்..சுவாராசியமாகவும் காணப்படுகிற எழுத்தை நான் இது வரை கண்டு பிடிக்கவில்லை. வடை,இட்லி என்று ஒரு பிடி பிடிக்கிறீர்கள். பஜ்ஜி...அப்புறம் காளானில் எல்லாம் ஒரு வித உணவுகள் செய்து வீதிகளில் விற்கிறார்களே..அது பற்றியெல்லாம் எழுதுங்கள். உங்கள் ருசிகர்கள் காத்திருக்கிறோம் ஐயா. - தீபிகா-

    பதிலளிநீக்கு
  21. ஆக மொத்தம் என்னை முழு நேரச் சமையல்காரனாகப் பண்ணீடறதுன்னு எல்லோருமாச்சேர்ந்து முடிவு கட்டிட்டீங்க! பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  22. இட்லி சுடும் விபரம் பற்றி என் துணைவியாரிடம் கந்தசாமி ஐயா சொல்லியிருக்காக என்று சொன்னேன்! நல்லாத்தானே சொல்லியிருக்காக!ஆண்களுக்கு சுகர் குறையனும்னு சொல்லியிருக்காங்க! அரிசி உழுந்து ஆட்டுரல் எல்லாம் வாங்கித்தாரேன் !மாவை தயார் பண்ணுங்க! சுகர் தன்னால குறையும்!வாக்கிங் போகவேண்டிய அவசியமில்லை என்றாள்! பழையபடியே கிரைண்டரில் அரைத்து சுடு என்று ஜகா வாங்கி விட்டேன்! ஆனாலும் பழைய காலத்து நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்!பசு நெய்யும் கட்டித்தயிரும் வடுமாங்காயும் எஙகே கிடைக்கும்? ஐயா !திருநெல்வேலியில் பேசுதல் என்பது சாதாரணமாக உரையாடுவதையும் ஏசுதல் என்பது கோபத்தில் கண்டிப்பதையும் குறிக்கும் !திருநெல்வேலிக்கு வாருங்கள்!வரவேற்கிறோம்!

    பதிலளிநீக்கு
  23. இட்லி சாப்பிட்டதுக்கு நேற்று காசு கொடுக்க மறந்து விட்டேன் அதனாலே 9 ரூபாய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில்லறையாக் கொடுத்தா சரி. நோட்டாக் கொடுத்தா, நீங்களே வச்சுக்குங்க.

      நீக்கு
  24. ஒரு சின்ன செய்தி

    தமிழனின் உணவு ஆரோக்கியமான உணவு

    உளூந்து சரிவிகத உணவு
    முதுகு தண்டுவடத்திற்கு மிகவும் நல்லது
    இட்லியை பொதுவாக உடல் சுகாவீனாமாக இல்லதவர்களுக்கு கொடுப்பது நம் வழக்கம்



    பதிலளிநீக்கு
  25. பெண்களுக்கு உளுந்து மிகவும் நல்லது மாதவிடாய் நேரத்தில் உளுந்து கஞ்சி சிறந்து

    கணினியில் வேலை செய்பவர்களுக்கு பயன் தரும்


    தமிழனின் ஏந்த உணவும் ருசிக்கும் மட்டும் அல்ல
    அது மருந்துமே

    கீரை முதல் இட்லி வரை


    பாஸ்ட் புட் கலாச்சரம் - அது விசம்

    பதிலளிநீக்கு
  26. தங்களது இட்லி பக்குவம் அதே அதே எங்கள் வீட்டிலும்! கறுப்பு உடைத்த உளுந்துதான்....என்ன சென்னைல ஃப்ளாட்ல இருக்கறதுனால (நாகர்கோயில், திருவனந்தபுரம், கோயம்புத்தூர்ல இருந்த வரை ஆட்டுக்கல்தான்) எங்கேங்க உரலுக்கு போறது....எல்லாம் க்ரைண்டர்தான்...அதுவும் நல்லாத்தான் வருது (அப்படினு சொல்லிக்குவோம்) துணி இட்லிதான்...ஆனா என்ன அந்த மண் சட்டி எல்லாம் இங்க இல்லைங்க...அதனால இட்லி கொப்பரைலதான்....

    அடுத்தது தண்ணி...கோயம்பத்தூர்ல இருந்தப்ப கூட, பீளமேட்டுல அந்த பிஎஸ்ஜி டெக்குக்குள்ளாற இருந்தப்ப எங்கேங்க சிறுவாணித் தண்ணி? ஒரு 5 குடம் நல்ல தண்ணினு கீழ வைச்சுட்டுப்போவாங்க.....இல்லைனா ஒரு சப்பைத் தண்ணிதான்....இப்ப சென்னைல சிறுவாணித் தண்ணிக்கு எங்க போறது...ம்ம்

    எங்க வீட்டுக்கு வாங்க ஐயா, உங்களுக்கு அதே மல்லிப்பூ இட்லி, தேங்காச் சட்னி, சின்ன வெங்காயச் சாம்பார் (திருநெல்வேலி) எல்லாம் செஞ்சு தரலாம்..திருனெல்வேலின உடனே அல்வா குடுத்து இட்லி தராம விட்டுருவமோனு நினைக்காதீங்க...ஏமாத்தாம நல்ல இட்லி தரப்படும்.

    கடைசியா சொன்னீங்க பாருங்க...// இந்த ஸ்பெஷல் இட்லி-வடை-சாம்பார் சாப்பிடுவதை ஞாயிற்றுக் கிழமைகளில் வைத்துக் கொள்வது விசேஷம். ஏனென்றால் காலையில் இட்லி சாப்பிட்ட பிறகு தேவையான ஓய்வு யாருடைய தொந்திரவும் இல்லாமல் எடுக்க வசதியாயிருக்கும். அன்று வெளியூர் போவதாகத் தெரிந்தவர்களுடன் சொல்லி விடுவது உத்தமம்.// அது!!!

    கீதா (எங்கள் தளத்தில் நாங்கள் இருவர் எழுதுகின்றோம் ஐயா! துளசிதரன், கீதா நட்புக்கள். துளசி பாலக்காட்டில், கீதா சென்னையில். )

    பதிலளிநீக்கு