ஞாயிறு, 3 மே, 2015

இந்திய நாட்டின் புற்று நோய்

                                        Image result for தலித் குடியிருப்புகள்
நாட்டிற்கே நோய் வருமா? வரும். வந்து வெகு காலம் ஆகி விட்டது. இன்னும் இருந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நம்மில் பல பேர் அதை உணராமல் அல்லது நம் ஆறுதலுக்காக அதை மறந்து விட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நம் வீடுகளில் யாராவது ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண் ஓடிப்போய் விட்டாள் என்று வைத்துக் கொள்வோம். நம் வீட்டில் நடக்காத வரையில் இதைப் பற்றிக் கேள்விப்பட்டால் "அடப் பாவமே, அப்படியா நடந்து விட்டது" என்று கூறுவதோடு அதை மறந்து போகிறோம். நமக்கு வேண்டியவர்களாக இருந்தால் நேரில் போய் துக்கம் விசாரித்து விட்டு வருவதோடு சரி.

நமக்கு வேண்டாதவர்களாய் இருந்தால் "பெண்ணை வளர்த்த லட்சணத்தைப் பார்" என்று வாய் கூசாமல் பேசுவோம். இதே காரியம் நம் வீட்டிலேயே நடந்திருந்தால் நாம் கூனிக் குறுகிப் போய் விடுவோம். அதைப் பற்றிப் பேசவே வெட்கப்படுவோம். இது நம் குடும்பத்திற்கு ஒரு அவமானச் சின்னமாக ஆகி விடும். வெளி விசேஷங்களில் கலந்து கொள்ள மாட்டோம். மற்றவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழக மாட்டோம்.

இப்படிப்பட்ட ஒரு அவமான உணர்ச்சியை அனுபவித்தால்தான் அது எவ்வளவு கொடுமையானது என்று தெரியும். அப்படிப்பட்ட ஒரு அவமானச்சின்னத்தைச் சுமந்து கொண்டு இந்நாட்டில் 20 சதம் மக்கள் வாழ்கிறார்கள். இந்த உண்மையை நாம் என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? இல்லையே?

திடீரென்று இந்த ஞானோதயம் எனக்கு எப்படி உதயமானது என்று கேட்கிறீர்களா? என்னுடைய ஒரு பதிவில் என்னுடைய கம்யூனிடி சர்ட்டிபிகேட்டைப் பிரசுரித்திருந்தேன். அது ஒரு தற்செயலாக நடந்த செயல். மற்ற சர்ட்டிபிகேட்டுகளுடன் இதுவும் சேர்ந்து விட்டது. இதைப் பார்த்த ஒருவர் உங்கள் ஜாதியைச் சொல்லவேண்டிய அவசியம் என்ன வந்தது, இதே மாதிரி தலித் மக்கள் அவர்கள் ஜாதியைச் சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தார்.

அப்போதைக்கு ஏதோ சப்பைக் கட்டு பதில் சொன்னேனே தவிர, என் மனதில் இதைப் பற்றி தீவிரமான சிந்தனை ஓடிக்கொண்டு இருந்தது. கூகுளில் தலித்துகளைப் பற்றி ஏதாவது கருத்துகள் இருக்கிறதா என்று தேடினேன். சில கிடைத்தன. அவைகளைப் படித்த போதுதான் நம் நாட்டில் இத்தகைய புற்று நோய் இருப்பதை உணர்ந்தேன். நான் என்னமோ திடீரென்று தலித்துகளுக்கு ஆபத்பாந்தவனாக ஏன் மாறினேன் என்று கேள்விகள் கேட்டால் எனக்கு பதில் சொல்லத் தெரியாது. ஆனாலும் இந்த அவலம் என் மனதில் பல நாட்களாக இருந்து உறுத்திக்கொண்டு வருகிறது.

நம் நாடு சுதந்திரம் பெற்று ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வளவு பெரிய நாட்டின் அரசே இதை ஒழிக்க எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. இருந்தாலும், இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் இந்த தீண்டாமை எனும் புற்று நோயை ஒழிக்க முடியவில்லையே. ஏன் ? இது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. இதற்கு இந்நாட்டின் அனைத்து தரப்பினரும் காரணமே. இருந்தாலும் இந்த நோய்க்குத் தீர்வு என்னவென்று புரியவில்லை? சமூக ஆர்வலர்கள் இதைப் பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்று நான் ஆராயவில்லை. என் மனதில் பட்டதைக் கூறியிருக்கிறேன்.

19 கருத்துகள்:

  1. சொல்ல வந்ததை முழுதுமாகச் சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயமாக இருக்கிறது. ஏனெனில் இந்த சப்ஜெக்டில் எது எல்லை என்பது வரையறுக்கப்படவில்லை. சில வார்த்தைகளை உச்சரிப்பதே சட்ட விரோதமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் சில ட்வீட்டர்களுக்கு ஏற்பட்ட கதியை நான் எதிர்கொள்ள விரும்பவில்லை.

      நீக்கு
  2. சுதந்திரம் பெற்று 70ஆண்டுகள் ஆகியும் நிலைமை மாறவில்லை ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  3. ஒற்றுமையும், மனித நேயமும் இறந்து விட்டதே காரணம்...

    பதிலளிநீக்கு
  4. சரியாகச் சொன்னீர்கள். தீண்டாமை - இந்திய நாட்டின் புற்று நோய் . தீராத நோய். உலகில் புற்றுநோய்க்கு சரியான மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. தீண்டாமை எனும் இந்த புற்று நோயை ஒழிக்க முடியவில்லையே தவிர அது தற்சமயம் குறைந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. நகரங்களில் அது இல்லை என்றாலும் இன்னும் சில கிராமங்களில் அது இருப்பது உண்மை. . ஆனால் காலப்போக்கில் அனைவருக்கும் கல்வி கிடைக்கும்போது அது மறைவது உறுதி, அந்த நாள் விரைவில் வரும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  6. என்னுடைய வரும்பதிவு இனி ஒரு விதி செய்வோம் படியுங்கள் மனசளவில் இதை ஒழிக்க எனக்குத் தோன்றியதை எழுதி இருக்கிறேன் எல்லோரும் இப்படி மாற வேண்டும் என்பதே என் அவா.

    பதிலளிநீக்கு
  7. இல்லாதவர்கள் இருப்பவர்களை தீண்டாமையாக நடத்தும் காலம் வந்து விட்டது. தீண்டாமை தலிதுக்குள் மட்டுமல்ல ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் உள்ளது

    பதிலளிநீக்கு
  8. சிக்கலான விஷயம் எப்படி சொன்னாலும் குற்றம் கண்டுபிடிக்க முடியும். காலமும் கல்வியும் மட்டுமே ஜாதியை ஒழிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சரியாகச்சொல்லியுள்ளீர்கள். ஆனால் ஒன்று. கல்விக்காக தலித்துகளுக்கு கொடுக்காத சலுகைகளா? ஆனாலும் அவர்கள் எல்லோராலும் கல்வி கற்க ஏன் முடியவில்லை? இதற்கான காரணங்களை ஆராய வேண்டும்.

      நீக்கு
  9. //நம் நாடு சுதந்திரம் பெற்று ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆகின்றன.//

    மேலும் ஒரு 70 ஆண்டுகளுக்குள்ளாவது இந்தப்பிரச்சனைகள் எல்லாம் முற்றிலும் தீர்ந்துவிடும் என நாம் நம்புவோமாக !

    பதிலளிநீக்கு
  10. உண்மையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை பள்ளியிலேயே உருவாகி விடுவதே இதற்க்கு அடிப்படை காரணம் ஐயா.

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்
    1. தமிழ்மணம் தங்கள் தளத்தில் ஏதாவது சீர்திருத்தம் செய்து கொண்டிருந்திருப்பார்கள். இப்போது சரியாக இருக்கிறது. கில்லர்ஜி.

      நீக்கு
  12. மீண்டும் மீண்டும் என்னை எழுத தூண்டியிருக்கிறீர்கள் ஐயா! இந்த அளவுப்பதிவே போதுமெனக்கு ஊக்கம் தரும் பதிவாகத்தான் நான் இதை பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லவும். ஜாடையெல்லாம் வேண்டாம்.

      நீக்கு
  13. தீண்டாமை புற்று நோய்க்கு முடிவு கட்டாமல் இந்திய வல்லரசாகப் போவதில்லை .வெளியே பார்த்தா தளம் பூவாம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது !

    கில்லர்ஜி த ம வாக்கு போட முடிகிறதே !
    என் தளத்தில்தான், போட முடியவில்லை என்று புலவர் ராமாநுஜன் அய்யா கருத்தைக் கூறியுள்ளார் .இதுவும் ஒரு தீண்டாமை? :)

    பதிலளிநீக்கு
  14. தாழம் பூவாம் என்று திருத்தி வாசிக்க கேட்டுக் கொள்கிறேன் !

    பதிலளிநீக்கு
  15. விடுதலை பெற்று இவ்வளவு ஆண்டாகியும் இந்த நோயை அகற்றுவது என்பது சிரமமாக இருப்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. விரைவில் இதற்கு ஒரு முடிவு வருகிறதா என்று நம்புவோம்.
    ஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.html

    பதிலளிநீக்கு