ஞாயிறு, 31 மே, 2015

அந்தக் காலத்து சினிமாத் தியேட்டர்கள்.

                                                      Image result for விஸ்வாமித்திரர் மேனகை

முன்னொரு காலத்தில் சினிமா மட்டுமே மக்களின் முழுமையான பொழுது போக்கும் வழியாக இருத்தது. வேறு பொழுது போக்கும் வழிகள் கிளப்பில் சீட்டாடுவது அல்லது கிளப்பில் ஏதாவது விளையாட்டுகள் விளையாடுவது, வீட்டிலுள்ள பெண்கள் தாயக்கட்டம், அல்லது பல்லாங்குழி விளையாடுவது உண்டு.

ஆனாலும் சினிமா பார்ப்பது மட்டுமே அதிகமாக பயன்பாட்டில் இருந்தது. இந்தப் பொழுது போக்குகளின் முக்கிய அம்சம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியோன்னியமாகப் பேசிப் பழகிக்கொண்டு இருந்தார்கள். ஒருவரின் மனப்போக்கு என்னவென்று கூடப் பழகுபவர்களுக்குத் தெரியும்.

இன்று தங்கள் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என்று தந்தைக்குத் தெரியாது. அவன் என்னமோ கம்ப்யூட்டரில் விளையாடுகிறான் என்ற அளவிற்குத்தான் தெரியும். இது காலத்தின் கட்டாயம். குடும்பத்துடன் ஒரு சினிமா பார்த்துவிட்டு ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு வரும் அனுபவம் குடும்ப அங்கத்தினர்களிடையே ஒரு புரிதலையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.

அந்தக்காலத்தில் சினிமா தியேட்டர்கள் புதிதாக கட்டும்போது அந்த ஊரில் இருக்கும் தியேட்டர்களைவிட நூதனமாக இருக்கவேண்டும் என்று பல உத்திகளைக் கையாண்டார்கள். கோயமுத்தூரில் திரைப்படத்துறையில் முன்னோடியாக விளங்கிய பிரபல சினிமா புள்ளி திரு. சாமிக்கண்ணு வின்சென்ட் ஆவார். நகரத்தின் மையத்தில் வெரைட்டி ஹால் என்று ஒரு தியேட்டர் கட்டி வெற்றிகரமாக நடத்தினார். இந்த தியேட்டர்தான் அந்தக்காலத்தில் தென்னிந்தியாவிலேயே கட்டப்பட்ட முதல் தியேட்டர் என்று சொல்லப்படுகிறது. இங்கு முதலில் ஊமைப் படங்கள்தான் திரையிடப் பட்டிருக்கின்றன. அந்த தியேட்டர் இருந்த ரோடுக்கே வெரைட்டி ஹால் ரோடு என்று பெயர் நிலைத்து விட்டது.

அவர்  ஆர்.எஸ். புரம் பகுதியில் புதிதாக வின்சென்ட் லைட்ஹவுஸ் என்ற பெயரில் 1945-46 ல் ஒரு தியேட்டர் கட்டினார். அதில் பல கலை நுட்ப அலங்காரங்களைப் பயன் படுத்தியிருந்தார். சுவர்களில் பல ஓவியங்கள் வரையப் பட்டிருந்தன. விஸ்வாமித்திரர் மேனகையுடன் சல்லாபித்து பிறந்த குழந்தையை நிராகரிக்கும் காட்சி தத்ரூபமாக திரைக்கு ஒரு பக்கம் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தது. அலங்கின் பின் சுவற்றில் சாகுந்தலத்திலிருந்து பல காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தன.

இதில் முதல் படமாக நாகையா நடித்த "தியாகையா" என்ற தெலுங்கு படம் திரையிடப்பட்டது. அப்போது எனக்கு 12 வயது. அடுத்த படமாக மிஸ்ஸியம்மா திரையிடப்பட்டது. அதை நான் என் அத்தையுடன் பார்த்தேன். தியேட்டரின் அமைப்பும் அலங்காரங்களும் பிரமிப்பூட்டுவதாக இருந்தன. படமும் மிகவும் உணர்ச்சி வசமான காட்சிகள் நிறைந்த படம். "வாராயோ வெண்ணிலாவே" என்ற பாட்டு இன்றும் ரசிகர்கள் மனதை விட்டு அகலாத ஒரு பாட்டு.

அந்தக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சினிமா பார்த்த பிறகு ஏற்படும் ஒரு மன நிறைவு இன்று வெளியாகும் பெரும்பாலான படங்களில் கிடைப்பதில்லை என்பது ஒரு சோகமே.                        



அப்போது கோயமுத்தூரில் 9 தியேட்டர்கள்தான் இருந்தன. அவைகள் ஒவ்வொன்றிலும் வழக்கமாக சில பேனர் படங்கள் மட்டுமே திரையிடப்படும். ஜெமினி படங்கள் ராயல் தியேட்டரிலும் ஏவிஎம் படங்கள் கர்னாடிக் தியேட்டரிலும் வழக்கமாக வெளியாகும். அந்தக் காலத்து சினிமா வியாபாரம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் ஒவ்வொரு பேனர் படங்களுக்கும் வழக்கமாக ஒரே விநியோகஸ்தர்தான் இருப்பார். புரோடியூசர், டிஸ்ட்ரிபியூட்டர், தியேட்டர்காரர், இந்த மூன்று பேருக்கும் நல்ல புரிதல் இருந்தது.

வியாபாரத்தில் எந்த சிக்கலும் வந்த மாதிரி எனக்கு நினைவில்லை. அந்தக் காலத்தில் படம் வெளியாகும் தினத்தன்று எல்லா முக்கிய செய்தித் தாள்களிலும் முதல் பக்கத்தில் முழு பக்க விளம்பரம் வெளியாகும். அதுபோக நகரத்தின் முக்கிய பகுதிகளில் விளம்ப பேனர்கள் வைப்பார்கள். இது தவிர முக்கிய வியாபார ஸ்தலங்களில் மூன்றடிக்கு இரண்டடி சைசில் தட்டி பேனர்கள் வைப்பார்கள். இதற்காக அந்த கடைக்காரர்களுக்கு ஒரு ஷோ சினிமா பார்க்க ஒரு பாஸ் கொடுப்பார்கள். அதற்கு "தட்டிப் பாஸ்" என்றே பெயர்.

இது தவிர நான்கைந்து சிறுவர்களை வைத்து ஒரு தள்ளு வண்டி, முக்கோண வடிவில் இருக்கும், அதில் சினிமா போஸ்டர்களை ஒட்டி கோஷம் போட்டுக்கொண்டு முக்கிய வீதிகளில் வலம் வருவார்கள். அவர் போடும் கோஷமே அலாதியானது. ஒருவன் கேள்வி கேட்பான். மற்றவர்கள் கோரஸாக அதற்குப் பதில் சொல்லுவார்கள்.

என் நினைவில் இருக்கும் கோஷங்களைக் கூறுகிறேன்.

கேள்வி: கோபாலா
பதில்: ஏன் சார்?

கே: எங்கே போற?
ப:  சினிமாவுக்குப் போறேன்.

கே: என்ன சினிமா?
ப:    மிஸ்ஸியம்மா சினிமா

கே:   எந்த தியேட்டர்ல?
ப:  வின்சென்ட் லேட்ஹவுஸ் தியேட்டர்ல

கே: யாரு நடிக்கிறாங்க
ப:  ஜெமினி கணேசனும் சாவித்திரியும்.

இப்படியாக கோஷம் போட்டுக்கொண்டே அந்த சிறுவர்கள் வீதி வீதியாகப் போவார்கள்.

அப்போது டிக்கட்டுகள் நான்கு வகையாக இருக்கும். தரை, பெஞ்சு, சேர், பாலகனி. அவ்வளவுதான். வின்சென்ட் லைட் ஹவுசில் பாக்ஸ் என்று ஒரு அமைப்பு உருவாக்கியிருந்தார்கள். நான்கு பேர் உட்கார்ந்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இது மாதிரி அப்போது எங்கும் இல்லை. ஊர் முழுவதும் இதே பேச்சாக இருந்தது.

பிற்காலத்தில் ஊர் ஊருக்கு இந்த மாதிரி புது தினுசுகளில் தியேட்டர்கள் வர ஆரம்பித்தன. மதுரை தங்கம் தியேட்டர் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. தூத்துக்குடியில் சார்லஸ் தியேட்டரும் அது போலவே பிரபலமானது.

இப்படியாக தியேட்டர்களும் சினிமாக்களும் வளர்ந்து இன்றைக்கு சினிமாத் தொழில் படு கேவலமாக ஆகி வருவதைப் பார்த்தால்  காலத்தின் தாக்கம் புரிகிறது.

16 கருத்துகள்:

  1. சாமிக்கண்ணு வின்சென்ட் தமிழகத்துக்கு முதன்முதலில் சினிமாவைக் கொண்டு வந்தவர்.

    மிஸ்ஸியம்மா போல ஒரு படமும் இனி வருமோ?

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை. படிக்கப் படிக்க ஒரே சுவாரஸ்யம். குடும்பத்தோடு தியேட்டருக்கு போனது அந்தக் காலம். குடும்பத்தோடு ஹோம் தியேட்டரில் வீட்டினுள்ளேயே பார்ப்பது இந்தக் காலம்.

    உங்கள் கோவையில் ’வெரைட்டி ஹால்’ கட்டிய சாமிக்கண்ணு வின்சென்ட் எங்கள் திருச்சிக்காரர்.

    கறுப்பு வெள்ளையிலேயே அடிக்கடி கண்டு கேட்டு ரசித்த “வாராயோ வெண்ணிலாவே” என்ற ‘மிஸ்ஸியம்மா’ பாடலை வண்ணத்தில் ரசிக்கும் போது வித்தியாசமாகவே இருந்தது.

    இன்னும் எழுதவும்.

    த.ம.3

    பதிலளிநீக்கு
  3. சிறு வயதில் மண் தரையில் அமர்ந்து படம் பார்த்த நினைவுகள் வருகின்றன ஐயா.
    ஒரு படத்திற்கு நான்கு முறைகளுக்கு மேல் இடைவேளை விடுவார்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  4. அந்தக்கால சினிமா தியேட்டர்களையும், அவர்களின் விளம்பர யுக்திகளையும் வெகு அழகாகவும் தெளிவாகவும் சொல்லி மகிழ்வித்துள்ளீர்கள்.

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ! :)

    என் பள்ளிப்பருவத்தில் எங்கள் ஊர் பிரபாத் தியேட்டருக்கு நண்பர்களுடன் படம் பார்க்க நடந்தே சென்று நடந்தே வருவேன். அன்று அங்கு குறைந்தபட்ச கட்டணம் 29 நயாபைசா மட்டுமே.

    பெரும்பாலும் அந்தத்தியேட்டரில் சிவாஜி கணேசன் நடித்த படங்களே வெளியாகும். அந்த பிரபாத் தியேட்டரே சிவாஜிக்குச் சொந்தமானது என்று கேள்வி. இப்போ அங்கு அந்த தியேட்டர் இல்லை. அதே இடத்தில் சிவாஜிக்கு அங்கு சிலை எழுப்பியுள்ளார்கள்.

    மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    பதிலளிநீக்கு
  5. அந்த கால நினைவுகள்... இனியதோர் பாடலோடு எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அந்தக் காலத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தினீர்கள்.
    நன்றி.

    God Bless YOu

    பதிலளிநீக்கு
  7. ஐயா...

    அந்தக்கால மலரும் நினைவுகளை மீண்டும் நினைவு படித்திவிட்டீர்கள். என்னுடைய அந்தக் காலத்து சினிமாத் தியேட்டர்கள்:
    - 5ஆம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வு முடிந்த அன்று காரியாபட்டியில் (மதுரை அருகே) இருந்த ஒரே திரை அரங்கில் பார்த்த “தேன் கிண்ணம்”. (1973)
    - 7ஆம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வு முடிந்த அன்று தேவகோட்டையில் சரஸ்வதி திரை அரங்கில் பார்த்த “புது வெள்ளம்”. (1974/75)
    - சாத்தூர் நடராஜா திரை அரங்கில் பார்த்த “உத்தமன்”. (1976/77)
    - மதுரை பரமேஸ்வரியில் பார்த்த யாதோங்கி பாராத் மற்றும் ஷோலே (1977)
    - மதுரை சிந்தாமணியில் பார்த்த தீபம் மற்றும் தியாகம் படங்கள். (1977/78)
    - மதுரை தேவியில் பார்த்த சபாஷ் மீனா (1977/78)
    - மதுரை தங்கம் திரை அரங்கில் பார்த்த இளைய தலைமுறை (1977/78)
    - மதுரை நியு சினிமா திரை அரங்கில் பார்த்த தசாவதாரம் (1977/78)
    - திருநெல்வேலி பார்வதி/பூர்ணகலாவில் (எதோ ஒன்றில்) பார்த்த திரிசூலம் (1979)
    - திருநெல்வேலி பார்வதி/பூர்ணகலாவில் (எதோ ஒன்றில்) பார்த்த நினைத்தாலே இனிக்கும் (1979)
    1980-1983 வரை:
    - கோவை ரெயின்போவில் பார்த்த Five Man Army, The Great Escape, (1980)
    - கோவை ராயல் திரை அரங்கில் பார்த்த மரோசரித்ரா
    - கோவை கீதாலயாவில் பார்த்த ஒரு தலை ராகம்
    - கோவை (சாய் பாபா காலனி) சிவசக்தியில் பார்த்த நிழல்கள்
    - கோவை சென்ட்ரல்/ரெயின்போ/ஸ்ரீபதி திரை அரங்கில் பார்த்த மிக அதிகமான ஆங்கில திரைப்படங்கள்.
    - கோவை கென்னடி, கர்நாடிக், ராஜா, நாஸ், ராயல், கே.ஜி, அர்ச்சனா/தர்ஷனா, அசோகா, திரை அரங்கில் பார்த்த திரைப்படங்கள்.

    - மதுரை சினிப்ரியா/மினிப்ரியாவில் பார்த்த கோபுரங்கள் சாய்வதில்லை, பரிட்ஷைக்கு நேரமாச்சு திரைப்படங்கள்..

    இன்னும் பலப்பல..

    அன்புடன்,
    சங்கர நாராயணன். தி

    பதிலளிநீக்கு
  8. டூரிங் டாக்கீஸ் என்று வகைப் படுத்தப்பட்ட திரை அரங்குகளும் இருந்தனவே. என் சினிமா நினைவுகள் நான் பார்த்து ரசித்தவை இன்னும் பின்னோக்கியதாகத் தோன்றுகிறதுஹரிதாஸ், சிவகவி. நாம் இருவர், ஸ்ரீவள்ளி போன்றவை. ஓ அது அந்தக்காலம் .

    பதிலளிநீக்கு
  9. கோவை தியேட்டர்கள் பற்றி சிறப்பான பதிவு. ரெயின்போ தியேட்டர் இருந்த இடம் இன்று தொகுப்பு வீடுகள் ஆகிவிட்டது. இதுபோல் கண்ணன் சூப்பர் மார்க்கெட் ( திருச்சி ரோடில் ) இருப்பதும் முன்பு தியேட்டர்தான் என்று என் கணவர் சொன்னார். அவர் கோவையிலேயே வளர்ந்தவர். :) தியேட்டர்கள் & தற்காலத்திய சினிமாக்கள் பற்றி சரியா சொல்லி இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பழமையான தகவல்கள் அருமை ஐயா
    தமிழ் மணத்தில் நுழைக்க 7

    பதிலளிநீக்கு
  11. பொள்ளாச்சியில் பணி புரிந்தபோது ஒவ்வொரு சனியன்று மாலையும் கோவை வந்து நண்பர்களுடன் வெரைட்டி ஹால், நாஸ்,GP,ராஜா, சென்ட்ரல், டிலைட், ஸ்ரீநிவாஸ், ராயல்,,கென்னடி போன்ற திரை அரங்குகளில் திரைப்படம் பார்த்ததை தங்கள் பதிவு நினைவூட்டுகிறது.இப்போது அந்த திரைஅரங்குகளெல்லாம் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  12. எனக்கும் வந்தன அந்த கால நினைவுகள்!

    பதிலளிநீக்கு
  13. அக்கால நினைவுகளை தாங்கள் எங்களுக்காகப் பகிர்ந்தமையறிந்து மகிழ்ச்சி. தாராசுரம் டூரிங் டாக்கீசில் மண் தரையில் உட்கார்ந்து பார்த்ததை மறக்கமுடியாது. தற்போது பிற துறைகளைப் போலவே இத்துறையிலும் வியாபாரம் நுழைந்துவிட்டதால் பின்னடைவைக் காணமுடிகிறது. இருப்பினும் தற்போதும் ஆங்காங்கு சில நல்ல படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  14. பழையன கழிந்து புதியன வந்தாலும், ஓல்ட் இஸ் கோல்ட்தான். அருமையான சுவாரஸ்யமான, நாங்களும் எங்கள் சிறு வயதில் அனுபவித்தவை. கொட்டு அடித்துக் கொண்டு வண்டியில் சினிமா பேனர் வைத்துக் கொண்டு தெரு தெருவாக வந்து என்ன படம், எத்தனைக் காட்சிகள், எந்த தியேட்டர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு போவார்கள். நகைச்சுவைப் படம் என்றால் நகைச்சுவையாக, உணர்வுபூர்வமான படம் என்றால் அதற்கு ஏற்றாற் போல் என்று.

    தரை டிக்கெட்டுதான் அப்போது ....பெரும்பாலும் நாங்கள் பார்த்த படங்கள்....பின்னர் பெஞ்ச் பின்னர் நாற்காலி ....பால்கனி அப்போது போனதில்லை.....தியேட்டர் என்பதை விட எங்கள் கிராமங்களில், டூரிங்க் டாக்கீஸ் என்பார்கள்....பழைய நினைவுகளை மீட்டெடுத்த அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
  15. தூத்துக்குடி சார்லஸ் தியேட்டரைப்பற்றிச் சொன்னீர்கள். அங்குதான் பாக்ஸ், டியூக்ஸ் என்று மேல்வகுப்பு டிக்கட்கள்.

    நான் ஒரேயொரு டூரிங் டாக்கீஸில் படம் பார்த்ததுண்டு. ஆனால், நான் பார்த்த வெகுநாட்களுக்குப்பின் அத்தியேட்டரின் பாவமன்னிப்பு படம் திரையிடப்பட்டபோது (1979ல்) தியேட்டர் எரிந்து 450 பேர்கள் இறந்துவிட்டார்கள். நான் ஊரில் இல்லாததால், பி பி சி இரவுச்செய்தியின் மூலமாக அறிந்தேன்.

    பெருத்த சோகம். இறந்தவர்கள் அனைவருமே கூலி வேலைபார்ப்பவர்கள். கடற்கரையோரம் இருந்தபடியால் வீசிய காற்றால் வெகுவேகமாகப்பரவி அனைவரும் எரிந்து போனார்கள். ஷார்ட் சர்க்யூட்டில் தீ. அது திரைக்குப்பின்னர் அப்போது படத்தில் ஒரு தீவிபத்து காட்டப்படும். பார்வையாளர் அத்தீயையும் நிஜத்தீயையும் ஒன்றாக நினைத்து அமர...!

    பதிலளிநீக்கு