வியாழன், 4 ஆகஸ்ட், 2016

நின்று போன கல்யாணங்கள்

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் அந்தந்த வீட்டுப்பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்டது. குடும்ப பாரம்பரியத்தைப் பார்த்து மட்டுமே கல்யாணங்கள் நிச்சயிக்கப்பட்ட காலம் அது. கல்யாணத்தில் தாலி கட்டும் வரை பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க மாட்டார்கள்.

கல்யாணம் முடிந்து விட்டால் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றுதான் அந்தக் காலத்துப் பெண்கள் வாழ்க்கை நடத்தினார்கள். மணவாழ்வில் பெரிதாக ஏதும் பிரச்சினைகள் அந்தக் காலத்தில் உருவாகவில்லை. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலம் அது. வாழ்க்கையில் சிக்கல்கள் தோன்றாதிருந்த காலம் அது. அப்படி சிக்கல்கள் தோன்றினாலும் வீட்டுத் தலைவரின் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப் படுவார்கள்.

உடல் ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் பல மாறுதல்கள் உண்டு. பெண் சீக்கிரம் முதிர்ச்சி அடைகிறாள். ஆண் அவ்வளவு சீக்கிரம் முதிர்ச்சி அடைவதில்லை. அறுபது வயது ஆண் இளமையாகத் தெரிவான். ஆனால் அறுபது வயது பெண்ணின் உருவ மாற்றம் வெகுவாகத் தெரியும். இதனால்தான் கல்யாணத்தின்போது அந்தக் காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வயது வித்தியாசம் எட்டிலிருந்து பத்து வரை இருக்குமாறு பார்த்துக்   கொண்டார்கள்.

காலங்கள் எவ்வளவு வேகமாக மாறுகின்றன. இன்றைய கல்யாண சந்தையில் கல்யாணத்திற்கு பெண்ணோ மாப்பிள்ளையோ பார்க்க வேண்டுமானால் அதற்கென்று உள்ள திருமண தகவல் மையங்களில் பதிவு செய்ய வேண்டும். அல்லது ஒரு நல்ல புரோக்கரைப் பிடிக்க வேண்டும். முன்பெல்லாம் பெண்ணுக்கு வரன் அமைவதுதான் சிரமம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது பையனுக்குப் பெண் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது.

ஏனெனில் பெண்கள் இப்போது படித்து நல்ல சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கிறார்கள். அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்பத்தான் மாப்பிள்ளை பார்க்க வேண்டியிருக்கிறது. பெண்ணுக்கு பையனைப் பிடித்தால்தான் மேற்கொண்டு சம்பந்தம் பேச முடியும். பையனுடைய வயது பெண்ணின் வயதை விட ஒன்று அல்லது இரண்டு வருடங்கள்தான் அதிகமாக இருக்கலாம் என்று இன்றைய யுவதிகள் விரும்புகிறார்கள்.

கல்யாணம் முடிந்த பிறகு கூட்டுக் குடும்பத்தில் அவர்கள் இருக்க மாட்டார்கள். பையனுக்கு சகோதர சகோதரிகள் இருக்கக்கூடாது. மாமியார் இருக்கலாம். மாமனார் இல்லாமல் இருந்தால் நல்லது. ஒரு ஐந்து வருடங்களுக்கு குழந்தைகள் கூடாது. இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள். இவை எல்லாம் சரியாக இருந்து கல்யாணம் நிச்சயம் செய்த பிறகும் பெண்கள் தங்கள் முடிவுகளை மாற்றலாம். மாற்றுகிறார்கள்.

எனக்குத் தெரிந்து அப்படி நின்று போன கல்யாணங்கள் சிலவற்றைப் பற்றிக் கூறுகிறேன். ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே காதலன் மூலம் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தப் பெண்ணையும் ஒருவன் திருமணம் செய்ய முன் வருகிறான். நிச்சயதார்த்தம் முடிந்தது. கொஞ்ச நாள் கழித்து அந்தப் பெண் பையனை சினிமாவுக்குப் போகலாம் என்று கூப்பிடுகிறாள். அவன் இன்று எனக்கு ஆபீசில் வேலை இருக்கிறது, நாளை போகலாம் என்று சொல்லியிருக்கிறான். அந்தப் பெண் "ப்ளெடி ஃபூல்" என்று சொல்லி விட்டு போனை வைத்து விடுகிறாள்.

அந்தப் பையன் என்ன செய்ய முடியும்? வீட்டிற்கு வந்தவுடன் அவன் அம்மாவுடன் இந்தப் பெண்ணுடன் என்னால் வாழ்க்கை நடத்த முடியாது என்று சொல்லி விட்டான். கல்யாணம் நின்று விட்டது.

இன்னொரு நிகழ்ச்சி. கல்யாணம் முடிந்து விட்டது. பெண்ணும் மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டிற்குப் போய் சாப்பிட்டிருக்கிறார்கள். மாப்பிள்ளை சாப்பிட்ட பிறகு கையை நக்கியிருக்கிறான். திரும்ப கல்யாண மண்டபத்திற்கு வந்தவுடன் பெண் தாலியைக் கழட்டி மாப்பிள்ளையிடம் கொடுத்து விட்டு இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

இப்படியெல்லாம் உலகில் நடக்கிறது. கல்யாணம் பண்ணப் போகும் மாப்பிள்ளைகள் ஜாக்கிரதையாகப் பெண் பார்க்கவும்.

13 கருத்துகள்:

  1. [[[பெண்ணும் மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டிற்குப் போய் சாப்பிட்டிருக்கிறார்கள். மாப்பிள்ளை சாப்பிட்ட பிறகு கையை நக்கியிருக்கிறான். திரும்ப கல்யாண மண்டபத்திற்கு வந்தவுடன் பெண் தாலியைக் கழட்டி மாப்பிள்ளையிடம் கொடுத்து விட்டு இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.]]]

    Moral of the Story!
    கல்யாணம் ஆன ஆண்கள் கையை 'மட்டும்' நக்கக் கூடாது?

    பதிலளிநீக்கு
  2. இதையெல்லாம் கடந்து வந்த நமக்கு ஏன் கவலை . நம்மால் சரிசெய்ய முடியுமா

    பதிலளிநீக்கு
  3. // இப்போது பையனுக்குப் பெண் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது.//

    ஆமாம். ஐயா.காலம் மாறிப் போச்சு.

    போகிற போக்கை பார்த்தால் இனி பெண்கள் சுயம்வரம் நடத்தித் தான் தங்கள் வாழ்க்கை துணைவரை தேர்ந்தெடுப்பார்கள் போலும்.

    பதிலளிநீக்கு
  4. கலி காலம் என்பது நிருபணமாகிறது.

    பதிலளிநீக்கு
  5. //பெண்ணும் மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டிற்குப் போய் சாப்பிட்டிருக்கிறார்கள். மாப்பிள்ளை சாப்பிட்ட பிறகு கையை நக்கியிருக்கிறான். திரும்ப கல்யாண மண்டபத்திற்கு வந்தவுடன் பெண் தாலியைக் கழட்டி மாப்பிள்ளையிடம் கொடுத்து விட்டு இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்//

    இதற்காக எல்லாம் மாப்பிள்ளை வேண்டாம் என்றால் நாளை வாழ்க்கையை எப்படி நகர்த்துவது ?
    த.ம. 1

    பதிலளிநீக்கு
  6. மாமியார் இருக்கலாம். மாமனார் இல்லாமல் இருந்தால் நல்லது.- சார்.. இப்படி இல்லையே.. மாமனார் இருக்கலாம். மாமியார் கூடாது என்றுதானே பெண்கள் கண்டிஷன் போடுவார்கள். ஒருவேளை இப்போ, சீரியல் கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள மாமியாரை எதிர்பார்க்கிறார்களோ?

    பெண்களைக் கிள்ளுக்கீரையாக நடத்தியது ஒரு காலம். இப்போது பெண்களின் காலம். மாற்றம் என்பது மானிடத்தத்துவம்தானே.

    இன்னும் நிறைய காரணங்கள் சில மாதங்களுக்கு முன்பு மங்கையர் மலரிலோ கல்கியிலோ போட்டிருந்தார்கள். (1. ஹோட்டலுக்கு கணவனுடன் சென்றாள். கணவன், அம்மாவுக்குப் போன்பண்ணி என்ன சாப்பிடலாம் என்று ஆலோசனை கேட்டான். பொண் டைவர்ஸ் பண்ணிவிட்டாள். காரணம் இவருக்கு சுயமான முடிவு எடுக்கும் திறமை இல்லை 2. நிச்சயம் ஆகிவிட்டது. கல்யாணத்துக்கு சில வாரங்கள்தான். வரப்போகும் கணவன், உனக்குச் சமைக்கத் தெரியுமா, நான் உன் சமையலைத்தான் எதிர்பார்க்கிறேன் என்றான். பெண் கல்யாணத்தை கேன்சல் செய்துவிட்டாள். இதுபோன்று பல அற்பக் காரணங்கள்). இறைவா.. பல வருடங்களுக்கு முன்னால் எனக்குத் திருமணம் நடக்கச் செய்ததற்கு நன்றி. ஒரு பையன் இருக்கானே.. அவனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை (பின்னால்) கிடைக்கணுமே... அதற்கு அருள் செய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமையல் செய்ய மாமியார் இருந்தால்தானே சௌகரியமாக இருக்கும். மாமனார் சும்மா சாப்பாட்டு ராமன்தானே.

      நீக்கு
  7. நின்றுபோன திருமணங்கள்
    மட்டுமல்ல இது போன்ற அற்பக் காரணங்களுக்காக
    முறிந்து போகிற திருமணங்களும்
    அதிகமாகிக் கொண்டுதான் இருக்கின்றன

    பதிலளிநீக்கு
  8. //கல்யாணம் முடிந்து விட்டால் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றுதான் அந்தக் காலத்துப் பெண்கள் வாழ்க்கை நடத்தினார்கள்.//

    யார் கண்டார்கள்? விஷயங்கள் வெளியில் வரவோ, அல்லது மனத்தைக் கெடுக்கவோ இப்போது இருப்பது போல மீடியாக்கள் இல்லாத காலம்!


    இப்போதெல்லாம் திருமணம் செய்வதற்கு சம வயதுப் பெண்கள் அல்லது சற்று வயதில் பெரிய பெண்கள் கூட இருக்கலாம் என்று திருமணங்கள் நடக்கின்றன. அது நல்லதுதான் என்று டாக்டர் ஷாலினி கூட விகடனில் சொல்லி இருந்தார்!

    வட இந்ததியாவில் ஒரு பெண் மணமேடையில் மணமகனிடம் மூன்றும் ஐந்தும் எவ்வளவு என்பது போல சில சிறிய கணக்குகள் போட்டிருக்கிறார். அவருக்கு விடை தெரியவில்லை என்றதும் திருமணத்தை நிறுத்தி விட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னால் செய்தித் தாளில் படித்தது.

    பதிலளிநீக்கு
  9. மாற்றங்கள்..... நல்லதா கெட்டதா என்பது தெரியவில்லை.

    ஆனாலும் இப்போதெல்லாம் இப்படித்தான் நிறைய திருமணங்கள் முறிந்து போகின்றன.

    பதிலளிநீக்கு
  10. JI IT IS A SWEET REVENGE
    I HAVE SEEN IN MANY HOMES THAT A SEVENTY YEAR OLD MAN WILL A:LWAYS BE SEATED IN AN EASY CHAIR
    WHILE HIS SIXTY FIVE YEAR OLD LADY WOULD BE ALWAYS STANDING BEFORE HIM
    WHEN ANY DISCUSSION TAKES PLACE>
    MEN DESERVE THIS TREATMENT JI

    பதிலளிநீக்கு