செவ்வாய், 8 ஜனவரி, 2013

மருமகன்களுக்குப் பிடித்த மாமனார் எப்படியிருப்பார்?


வர வர பதிவுகளுக்கு சப்ஜெக்ட் தேத்தறது கஷ்டமாப் போச்சுதுங்க. எத்தனை நாட்களுக்கு விவகாரமில்லாத சப்ஜெக்டுகளை வைத்தே காலத்தை ஓட்டறது? அதனால கொஞ்சம் வெவகாரமான சப்ஜெக்டைப் பிடித்திருக்கிறேன். நண்பர் ஸ்ரீராம் தன் பின்னூட்டத்தில் ஒரு சப்ஜெக்ட் கொடுத்து உதவியிருக்கிறார்.

இது பெரிய உதவி அல்லவா? அவருக்கு மிக்க நன்றி.

பதிவிலிருந்து விலகி ஒரு கேள்வி... ஏன் மாமனாருக்கும் மருமகன்களுக்கும் ஒத்துக் கொள்வதேயில்லை?!! அதுபோலவே நாத்தனார் Vs அண்ணி..!

நான் மருமகனாக இருந்து இப்போது மாமனாராக இருக்கிறேன். எனக்கு மூல நட்சத்திரம் ஆனதால் மாமனார் இல்லாத வீட்டில் பெண்ணைக் கட்டினேன். ஆகவே எனக்கு மாமனாரை விரட்டும் பாக்கியம் இல்லாமல் போயிற்று.

எனக்கு இரண்டு பெண்கள். ஆகவே இரண்டு மாப்பிள்ளைகள்.

பொதுவாக அனைத்து தகப்பனார்களுக்கும் பெண் குழந்தைகள் பேரில்தான் பாசம் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டும் பெண்கள் என்பதால் இந்த வித்தியாசத்தை நான் அனுபவித்ததில்லை.

இந்த இயற்கையினால், பெண்ணுக்கு கல்யாணம் ஆகும்போது தன் சொத்தைப் பறிகொடுத்தது போல், ஒவ்வொரு தகப்பனும் உணருவான். தாய்க்கு அந்த உணர்வு வராது. ஏனென்றால், அவள் இந்த நடைமுறையை நன்கு அனுபவித்திருக்கிறாள்.

சொத்தைப் பறிகொடுத்தவனுக்கு, அந்தச் சொத்தை பிடுங்கி அனுபவித்துக் கொண்டிருப்பவனைப் பார்த்தால் எரிச்சல் வருவது இயல்புதானே. இதுதான் மருமகனுக்கும் மாமனாருக்கும் இடையில் வரும் பிரச்சினை.

அது போக, மாமனாரிடம் இருக்கும் மற்ற சொத்துக்ளையும் ஏன் நமக்கே, இப்பொழுதே  கொடுக்கக்கூடாது என்று ஒவ்வொரு மருமகனுக்கும் தோன்றுவது இயற்கை. இது மேலும் மேலும் பிரச்சினைகளை வளர்க்கிறது. இப்போதெல்லாம் பெண் பார்க்கப் போகும்போதே, மாமனாரின் உடல் நிலையையும் ஒரு நோட்டம் போட்டுவிடுகிறார்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருந்தால் வேறு இடம் பார்க்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

இதே மாதிரிதான் நாத்தனார்-அண்ணி பிரச்சினையும். இவ்வளவு நாளாக தங்கைக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்த அண்ணன்காரன், தனக்கு கல்யாணமானவுடன் தன் பெண்டாட்டிக்குத்தான் எல்லாம் வாங்கிக் கொடுப்பான். தங்கையை புறக்கணித்து விடுவான். இதனால் நாத்தனாருக்கு அண்ணி பேரில் பொறாமை வந்து விடுகிறது.

இது உலக இயற்கை. இந்த மனத்தாங்கல்கள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

இப்போ தலைப்புக்கு வருவோம்.

எல்லா மருமகன்களுக்கும் பிடித்த மாமனார் சொத்தையெல்லாம் மருமகன் பேரில் எழுதி வைத்துவிட்டு இப்படித்தான் சுவரில் தொங்கிக்கொண்டு இருப்பார்.



திங்கள், 7 ஜனவரி, 2013

ஒரு மனதைத் தொடும் கதை


இந்தக் கதை இன்று எனக்கு ஈமெயில் மூலம் வந்தது. அதனுடைய உருக்கம் என்னை கண் கலங்க வைத்தது. நீங்களும் அந்த உருக்கத்தை உணர, அந்தக் கதையை அப்படியே ஆங்கிலத்தில் கொடுக்கிறேன்.

This is great. Take a moment to read it; it will make your day!

The ending will surprise you.


Take my Son.....


A wealthy man and his son loved to collect rare works of art. They had everything in their collection, from Picasso to Raphael. They would often sit together and admire the great works of art..

When the Vietnam conflict broke out, the son went to war. He was very courageous and died in battle while rescuing another soldier. The father was notified and grieved deeply for his only son.


About a month later, just before Christmas,

There was a knock at the door. A young man stood at the door with a large package in his hands..



He said, 'Sir, you don't know me, but I am the soldier for whom your son gave his life. He saved many lives that day, and he was carrying me to safety when a bullet struck him in the heart and he died instantly... He often talked about you, and your love for art.' The young man held out this package. 'I know this isn't much. I'm not really a great artist, but I think your son would have wanted you to have this.'


The father opened the package. It was a portrait of his son, painted by the young man. He stared in awe at the way the soldier had captured the personality of his son in the painting. The father was so drawn to the eyes that his own eyes welled up with tears. He thanked the young man and offered to pay him for the picture.. 'Oh, no sir, I could never repay what your son did for me. It's a gift.'


The father hung the portrait over his mantle. Every time visitors came to his home he took them to see the portrait of his son before he showed them any of the other great works he had collected.


The man died a few months later. There was to be a great auction of his paintings. Many influential people gathered, excited over seeing the great paintings and having an opportunity to purchase one for their collection.


On the platform sat the painting of the son. The auctioneer pounded his gavel. 'We will start the bidding with this picture of the son. Who will bid for this picture?'


There was silence...


Then a voice in the back of the room shouted, 'We want to see the famous paintings. Skip this one.'

But the auctioneer persisted. 'Will somebody bid for this painting? Who will start the bidding? $100, $200?'


Another voice angrily. 'We didn't come to see this painting. We came to see the Van Gogh's, the Rembrandts. Get on with the Real bids!'


But still the auctioneer continued. 'The son! The son! Who'll take the son?'


Finally, a voice came from the very back of the room. It was the longtime gardener of the man and his son. 'I'll give $10 for the painting...' Being a poor man, it was all he could afford.


'We have $10, who will bid $20?'

'Give it to him for $10. Let's see the masters.'


The crowd was becoming angry. They didn't want the picture of the son.

They wanted the more worthy investments for their collections.

The auctioneer pounded the gavel.. 'Going once, twice, SOLD for $10!'


A man sitting on the second row shouted, 'Now let's get on with the collection!'


The auctioneer laid down his gavel. 'I'm sorry, the auction is over.'


'What about the paintings?'


'I am sorry. When I was called to conduct this auction, I was told of a secret stipulation in the will... I was not allowed to reveal that stipulation until this time. Only the painting of the son would be auctioned. Whoever bought that painting would inherit the entire estate, including the paintings.

The man who took the son gets everything!'


Money is not EVERYTHING.

This may surprise few but is a fact.




வியாழன், 3 ஜனவரி, 2013

பதிவில் வரியின் இடைவெளியை அதிகப்படுத்த



இது ஒரு மீள் பதிவு. பிளாக்கர் டெம்ப்ளேட்டுகள் மாறியிருப்பதால் அவைகளுக்கு ஏற்ப குறிப்புகளை மாற்றியிருக்கிறேன்.


இந்த இரண்டு பதிவுகளையும் பாருங்கள்.(Screen shots)

ஒன்று:

இரண்டு:

இரண்டாவது பதிவு படிப்பதற்கு சௌகரியம். உங்கள் பதிவை இப்படி மாற்றவேண்டுமா? மேலே படியுங்கள்.


முதலில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு அமெச்சூர். கம்ப்யூட்டரின் எல்லா தொழில் நுட்பங்களும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் குருட்டாம்போக்கில் சில நுட்பங்களைக் கற்றிருக்கிறேன். அவைகளில் ஒன்று பதிவில் வரிகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை அதிகப்படுத்தல். நான் எழுதியிருப்பவைகளை அப்படியே செய்தால் விரும்பிய விளைவுகள் ஏற்படும்.  பல முறை படித்துவிட்டு அப்படியே செய்யவும்.
  
1.   முதலில் பதிவின் டேஷ்போர்டுக்குப் போகவும்.
2.   அங்கு பென்சில் மார்க்குக்கு வலது பக்கத்தில் சதுரமாக கருப்பாக ஒரு பட்டன் இருக்கும். அதன் மேல் கர்சரை வைத்தால் Go to post list என்று  தோன்றும். அதை அழுத்தவும்.
3.   இப்போது தோன்றும் ஸ்கிரீனில் இடது பக்கம் Template என்று இருப்பதை அழுத்தவும்.
4.   இப்போது தெரியும் ஸ்கிரீனில் வலது பக்கம் Back up/Restore Template என்கிற இடம் தெரியும். அந்த இடத்தை நன்றாக, முழுவதும் சுற்றிப் பார்த்து என்னென்ன இருக்கிறது என்று நன்றாகப் பார்த்துக்கொள்ளவும்.
5.   இப்போது Back up/Restore Template என்று இருப்பதை அழுத்தவும்.
6.   இப்போது Template  ›  Backup / Restore  என்று ஒரு விண்டோ வரும்.
7.   அதில் Download full template என்று ஒரு பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
8. இப்போது Save as………. என்று ஒரு ஸ்க்ரீன் வரும். அதில் Save ஐ செலக்ட் செய்யவும்.
9.   இப்போது உங்கள் டெம்ப்ளேட் பத்திரமாக உங்கள் Download folder இல் ஸ்டோர் ஆகியிருக்கும். இது எதற்கென்றால் நீங்கள் நான் சொன்னபடி செய்யாமல் உங்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்திருந்தீர்களென்றால் வம்பு வந்துவிடும் அப்போது அந்த வம்பிலிருந்து மீண்டு வர இது உதவியாயிருக்கும்.
10. இப்போது Template  ›  Backup / Restore  விண்டோவை close செய்யவும்.
11.   அடுத்து Edit Template ஐ அழுத்தவும்.
12. இப்போது Template  ›  Edit HTML ன்று ஒரு ஸ்கிரீன் வரும். அதற்கு கீழ் Expand Widget Templates என்று ஒரு கட்டம் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
13. இப்போது தெரியும் ஒரு சதுரக் கட்டத்தினுள் என்னென்னவோ எழுதியிருக்கும். அதைப்பார்த்து பயப்படாதீர்கள். அந்தக் கட்டத்திற்குள் கர்சரை வைத்து ஒரு லெப்ட் கிளிக் செய்யவும். இப்போது கர்சர் ஒரு கோடாக உள்ளே கண் சிமிட்டிக்கொண்டிருக்கும்.
14.  அப்படிக் கண் சிமிட்டிக்கொண்டிருந்தால் இது வரை நீங்கள் செய்தது சரியென்று அர்த்தம். இப்போது Ctrl  என்று ஒரு கீ உங்கள் கீபோர்டில் இடது கோடியில் கீழே இருக்கும். அதை அழுத்திக்கொண்டு கூடவே F கீயையும் அழுத்தவும். அழுத்திவிட்டு கையை கீ போர்டிலிருந்து எடுத்து விடவும்.
15. இப்பொது ஸ்கிரீனில் வலது மேல் கோடியில் ஒரு நீள்சதுரக் கட்டம் தெரியும். அந்தக் கட்டத்தில் line-height  என்று டைப் அடிக்கவும். இப்போது இந்த எழுத்துக்கள் டெம்ப்ளேட்டில் ஹைலைட் ஆகித் தெரியும்.

முக்கிய குறிப்பு; இது வரையில் நீங்கள் செய்ததெல்லாம் உங்கள் பிளாக்கை ஒன்றும் செய்துவிடாது. இப்போது உங்களுக்குப் பயமாக இருந்தால் உங்கள் ஸ்கிரீனின் வலது கோடி டாப்பில் ஒரு சிகப்பு x இருக்கிறதல்லவா, அதை கிளிக் செய்துவிட்டு ஓடி வந்து விடலாம். பயப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் கூகுளாண்டவர் துணை நிற்பார்.

16. இப்போது தெரிபவை:
       .post-body {
        Font-size 110%
        Line-height 1.2;

17. இதில் லைன் ஹைட் 1.2 என்று இருப்பதை 1.8 என்று மாற்றுங்கள். எப்படியென்றால், கர்சரை 2 க்கு முன்னால் வைத்து 2 ஐ டெலீட் செய்துவிட்டு 8 என்று டைப் செய்யுங்கள். அவ்வளவுதான். வேறு எந்த கீயையும் உபயோகப்படுத்தவேண்டாம்.
18.  இப்போது டெம்ப்ளேட் சதுரத்தை விட்டு வெளியில் வாருங்கள். கட்டத்துக்கு அடியில் SAVE TEMPLATE என்று இருப்பதை அழுத்தவும். கண்களை மூடிக்கொண்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
19. இப்போது கண்களைத் திறந்து பாருங்கள். Your changes have been saved. View Blog என்று இருக்கும்.  View Blog ஐ அழுத்தவும். ஆஹா, உங்கள் பிளாக் இப்பொழுது அதிக இடைவெளியுடன் ஜ்வலிக்கும்.
20. இடைவெளியை இன்னும் அதிகப்படுத்த வேண்டுமானால் திரும்பவும் இதே மாதிரி செய்து லைன் ஸ்பேசிங்க்கை 2.0 க்கு மாற்றலாம். இதே மாதிரி எழுத்துகளின் சைஸையும் 120, 130 % என்று உங்களுக்குத் தேவையான அளவிற்கு மாற்றலாம்.

    இவைகளை எல்லாம் வெற்றிகரமாக செய்த பின், உடனே என்னுடைய இந்த பிளாக்குக்கு வந்து நன்றி தெரிவிக்கவும். இல்லாவிட்டால் குருவின் சாபத்திற்கு ஆளாக வேண்டி வரும். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

புதன், 2 ஜனவரி, 2013

நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி


இது ஒரு சீரியஸ் பதிவு. இந்தப் பதிவைப் படித்துவிட்டு யாரும் சிரிக்கக்கூடாது. அப்படி சிரிப்பவர்கள் அடுத்த ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப் படுத்தப்படுவார்கள்

எல்லா நாடுகளிலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சிக்கூடங்கள் இருப்பது நீங்கள் அறிந்ததே. அங்கே நடைபெரும் ஆராய்ச்சிகளுக்காக பெரிய வியாபார நிறுவனங்கள் அதிகமான நன்கொடை கொடுப்பார்கள்.

அந்த நன்கொடையைக் கொண்டு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து புதிது புதிதாக ஏதாவது கண்டு பிடிப்பார்கள். இத்தகைய கண்டுபிடிப்புகள்தான் மனித வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன.

அப்படி ஒரு ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி ஒரு பெரும் தொகையை தன்னுடைய ஆராய்ச்சிக்காகப் பெற்று அந்த ஆராய்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். அதாவது மனிதனுக்கு வியாதியே வராமல் தடுப்தற்காக ஒரு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி.

பலநாட்கள் கஷ்டப்பட்டு அந்த மருந்தைக் கண்டுபிடித்தார். அந்த மருந்து எப்படி செயல்படுகிறது என்று பார்க்கவேண்டுமல்லவா? அதற்காக நூறு எலிகளைப் பிடித்து கூண்டில் அடைத்து அவைகளுக்கு இந்த மருந்தை தினமும் கொடுத்து வந்தார்.

ஒரு வாரத்தில் அந்த எலிகள் எல்லாம் இறந்து விட்டன. சாதாரண விஞ்ஞானியாக இருந்தால் தன்னுடைய ஆராய்ச்சி தோற்றுவிட்டதே என்று மனதொடிந்து போயிருப்பார். ஆனால் இந்த விஞ்ஞானியோ மிகவும் புத்திசாலி (என்னை மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்).

என்ன செய்தார் தெரியுமா? மளமளவென்று காகிதத்தை எடுத்து " 100 சதம் வெற்றி" என்று தலைப்பை எழுதினார். அதன் கீழ் மிகவும் விரிவாக பத்து பக்கங்களுக்கு தான் அந்த மருந்தைக் கண்டுபிடித்த விதம், எலிகளுக்கு அதைக் கொடுத்தது எப்படி, அவை எவ்வாறு இறந்தன, இறந்த எலிகளை என்ன செய்தார் என்ற விவரங்களை விலாவாரியாக எழுதி, அந்த அறிக்கையை பணம் கொடுத்த நிறுவனத்திற்கும் அந்த ஆராய்ச்சி நிறுவனத் தலைவருக்கும் அனுப்பிவிட்டார்.

இத்தகைய ரிப்போர்ட்டுகளை ஆராய்ச்சி நிறுவனத்தில் யாரும் படிக்கமாட்டார்கள். தலைவர், கோப்பில் வைக்கவும் என்று எழுதிக் கையெழுத்து போட்டு ரிக்கார்டு ரூமுக்கு அனுப்பிவிடுவார். அங்கு அதை கரப்பான் பூச்சிகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.

இந்த ஆராய்ச்சிக்காக பணம் கொடுத்த நிறுவனத்தில் அவர்கள் செலவழித்த பணத்திற்கு இதுதான் அத்தாட்சி. அங்கு இந்த மாதிரி ரிப்போர்ட்டுகளைப் படித்து, ஏதாவது குறிப்புடன் ஆடிட் செக்ஷனுக்கு அனுப்புவார்கள். அவர்களும் இந்த ரிப்போர்ட்டுகளை முழுவதுமாகப் படிக்க மாட்டார்கள்.

அங்கு இதைப் பார்க்கும் ஆடிட்டர் "100 சதம் வெற்றி" என்கிற தலைப்பைப் பார்த்தவுடன் ஆஹா, நல்ல ஆராய்ச்சி என்று குறிப்பெழுதி, இந்த விஞ்ஞானிக்கு மேலும் ஆராய்ச்சிக்காக பணம் கொடுக்கலாம் என்று சிபாரிசு செய்வார்.

அந்த விஞ்ஞானியும் மேலும் இந்த மாதிரியான பல ஆராய்ச்சிகள் செய்து பேரும், புகழும், செல்வமும் அடைவார்.


செவ்வாய், 1 ஜனவரி, 2013

புதுவருடத் தீர்மானங்கள்


புது வருடம் என்றால் புது வருடத் தீர்மானங்கள் மிக அவசியம். மனிதன் தன்னை எப்பொழுதும் உயர்த்திக்கொள்ளவே விரும்புகிறான். அதற்கு இந்த புது வருடத் தீர்மானங்கள் மிகவும் உதவுகின்றன.

நான் ஒவ்வொரு வருடமும் இந்த மாதிரி புது வருடத் தீர்மானங்கள் போடுவது வழக்கம். இத்தனை வருடங்காக நான் போட்ட தீர்மானங்களை எல்லாம் நடைமுறைப் படுத்தியிருந்தால் நான் இப்போது கடவுளர் வரிசையில் இருக்க வேண்டும். ஆனால் விதி வலியது. அந்த மாதிரி எதுவும் நடக்காமல் அந்தக் கடவுள்தான் காப்பாற்றினார்.

அதற்காக புது வருடத்தில் தீர்மானம் போடாமல் இருக்க முடியுமா? ஆகவே என்னுடைய புது வருடத் தீர்மானங்களை உங்கள் மேலான பார்வைக்கு வைக்கிறேன்.

கருப்பு எழுத்தில் இருப்பது என் தீர்மானம்.

சிவப்பு எழுத்தில் இருப்பது நிஜத்தில் நடக்கப்போவது.


1. பெண்டாட்டி சொல்வதைத் தட்டக்கூடாது.

(அதாவது காதில் விழுந்தால். காதுதான் டமாரமாகி பல வருடம்                                                                                                                                                             ஆகிவிட்டதே.) 

2. கோபத்தை ஒழிக்க வேண்டும்.

கார் ஓட்டும்போது பின்னால் வருபவன் ஹார்ன் அடிக்காதவரை.

3. அளவாக சாப்படவேண்டும்.

கல்யாண விருந்துகள் எக்செப்ஷன்.

4. தினமும் டைரி எழுதவேண்டும். முதல் பக்கத்தில் இந்த தீர்மானங்களை எழுதி வைத்து, தினமும் படிக்கவேண்டும்.

டைரியை ஒன்றாம் தேதி மூடி வைத்தால் அடுத்த வருடம் வரையில் திறக்கக் கூடாது.

5. நாட்டு நடப்புகளை கண்டும் காணாதது போல் இருக்கவேண்டும்.

முடியலையே. ஏதாவது சொல்லணும் போல் அரிக்குதே.

6. இந்த வருடம்  நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பதிவு எழுதவேண்டும்.

அநேகமா இந்தத் தளத்தில பதிவுகள் வராது என்று தினைக்கிறேன்.

7. டெம்ப்ளேட் கமென்ட்டுகள் போடக்கூடாது.

அதாவது மொத்தத்தில் கமென்ட்டுகள் போடக்கூடாது.

8. இந்த வருடத்தில் உலக மக்கள் எல்லோரும் நல்லவர்களாக   மாறவேண்டும்.

அதாவது இந்த வருடமும் மாயன்காரர்கள் உலகம் அழியும் என்ற புரளியை பரப்ப வேண்டும்.

9. கொலை, கொள்ளை, வழிப்பறி, பலாத்காரம் சம்பந்தப்பட்ட செய்திகளைப் படிப்பதில்லை.

அப்புறம் என்னத்துக்கு பேப்பருக்கு வீண் செலவு. நிறுத்திடவேண்டியதுதான்.

10. சாப்படுவதற்கு மட்டும்தான் வாயைத் திறக்கவேண்டும்.

வயிறு வீங்கி செத்துப் போயிடுவீங்க.


இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். இது போன்று வேறு நல்ல தீர்மானங்கள் நேயர்களுக்குத் தோன்றினால், பின்னூட்டத்தில் தெரிவித்தால், அவைகளையும் சேர்த்துக்கொள்கிறேன்.

திங்கள், 31 டிசம்பர், 2012

இந்திய நாடு எப்போது உருப்படும்?


வருடக் கடைசியில் திரும்பிப் பார்த்தால் விரக்தியே மிஞ்சுகிறது. மக்கள் திருந்தி, இந்திய நாடு மறுமலர்ச்சி அடையவேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறோம்.

ஆனால் அப்படி நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இன்றைய நடைமுறையில் இருக்கிறதா? பல பதிவர்கள் மிக நம்பிக்கையுடன் பதிவுகள் எழுதுகிறார்கள். இந்தியா மறுமலர்ச்சி அடையும், அடைந்தே தீரும், என்றெல்லாம் எழுதுகிறார்கள். இந்தியா கண்டிப்பாக மறுமலர்ச்சி அடையும். எப்போது?

அடிப்படையிலிருந்து ஆரம்பமாக வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல தலைவர்கள் வேண்டும். எப்போது நல்ல தலைவர்கள் உண்டாவார்கள். மக்கள் சகிக்க முடியாத துன்பங்களுக்கு ஆளாகும்போது அப்படிப்பட்ட தலைவர்கள் ஏற்படுவார்கள்.

ஆனால் நம் நாடு இவ்வளவு சீர்கெட்டிருந்தாலும் மக்களுக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம் கிடைக்கிறது. இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் விழிப்புடன் இருக்கிறார்கள். அடிமட்ட மக்களின் தேவைகள் எப்படியாவது அவர்களுக்கு கிடைக்கும்படியான திட்டங்களை நடைமுறைப் படுத்தி விடுகிறார்கள்.

அப்படி தங்களுடைய ஆதாரத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவை எந்தக் கஷ்டமும் இல்லாமல் கிடைத்து விடுவதால் அவர்கள் இந்த அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பாற்பட்டவைகளைத் தேட ஆரம்பித்து விடுகிறார்கள். அதில் சேர்ந்ததுதான் பலாத்காரம். வழிப்பறி, கொலை, கொள்ளை ஆகியவை.

கனவு காண்பதில் உள்ள சுகம் தனியானதுதான். திரு. அப்துல் கலாம் அவர்கள் இதற்கு வழிகாட்டிவிட்டுப் போயிருக்கிறார். நாமும் அந்த வழியில் சென்று இன்புறுவோம்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

பயமாக இருக்கிறது.


Father and son on an antique motorcycle; both dressed in shorts and T-shirt
Foto afkomstig van: de Luie Motorfiets site.

நாட்டு நடப்புகளைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.

சட்டங்கள் சாதாரண மனிதர்களைப் பாதுகாக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் காவல் துறைக்கு ஒரு புகார் கொடுக்கப்போனால் என்னென்ன கஷ்டங்கள் உண்டாகும் என்பது அனுபவித்தால்தான் தெரியும்.

நேற்று நான் ஒரு ரோட்டில் கார் ஓட்டிக்கொண்டு வந்தேன். ரோடு நல்ல அகலம். மணி காலை 11.30. ரோட்டில் டிராபிக் அதிகமில்லை. நான் 40 கி.மீ. வேகத்தில்தான் வந்து கொண்டிருந்தேன். எதிரில் வந்த ஒரு கார் வலது புறம் திரும்புவதற்காக சிக்னல் போட்டு ஹெட்லைட்டையும் போட்டு விட்டான். நான் காரை நிறுத்தினேன்.

பின்புறம் டமால் என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. சரி, வம்பு வந்து விட்டது என்று கீழே இறங்கிப் பார்த்தேன். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவன் கீழே விழுந்து கிடக்கிறான். உடனே அங்கு கூடியவர்கள் அவனை கைத்தாங்கலாக எழுப்பி குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார்கள்.

என்ன நடந்திருக்கிறது என்றால், அவன் கூட இன்னொரு பைக்கில் வந்து கொண்டிருந்த தன் நண்பனுடன் பேசிக்கொண்டே வந்திருக்கிறான். நான் காரை நிறுத்தியதைக் கவனிக்கவில்லை. நேரே பைக்கைக் கொண்டுவந்து என் காரில் மோதியிருக்கிறான். அவன் பிரேக் கூட போடவில்லை. அவ்வளவு அஜாக்கிரதையாக பைக் ஓட்டியிருக்கிறான். ஹெல்மெட்டும் இல்லை.

நான் இந்த விபத்துக்கு எள்ளளவும் காரணமில்லை. அவன் கூட வந்தவர்கள் இதை உணர்ந்து கொண்டதாலும், அவனுக்கு இரத்தக்காயம் எதுவும் ஏற்படாததாலும், அவன் மயக்கமடையாமல் நல்ல நினைவுடன் இருந்ததாலும் என்னைப் போகவிட்டார்கள்.

வீட்டிற்கு வந்தவுடன்தான் காருக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தேன். பின்புற பம்பர் கழன்று விட்டது. இன்சூரன்ஸ் கிளெய்ம் போட்டு மாற்றினாலும் எனக்கு ஆயிரம் ரூபாய் செலவாகும். அடுத்த வருஷம் இன்சூரன்ஸில் "நோ க்ளெய்ம்" போனஸ் கிடைக்காது. அதில் ஒரு 1500 ரூபாய் போகும். ஆக மொத்தம் 2500 ரூபாய் தண்டம்.

ஆனால் நான் திருப்திப் பட்டுக்கொண்டேன். வந்த சனியன் இந்த 2500 ரூபாயோடு போயிற்றே, இல்லாமல் அந்த மடையனுக்கு தலையில் அடிபட்டு மயக்கமாயிருந்தால் நான் அந்த இடத்தை விட்டு வந்திருக்க முடியாது. போலீஸ் வரவேண்டும். அடிபட்டவனை ஆஸ்பத்திரியில் சேர்க்கவேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஸ்டேட்மென்ட் கொடுக்கவேண்டும். ஜாமீனுக்கு ஆள் பிடிக்கவேண்டும்.

அடிபட்டவன் பிழைத்து விட்டால் ஓரளவிற்கு எனக்கு வழி பிறக்கும். அப்போதும் அவன் நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் கேஸ் போடுவான். போலீஸ் அவனுக்குச் சாதகமாகத்தான் ரிப்போர்ட் எழுதுவார்கள்.  வருடக்கணக்கில் கேஸ் நடக்கும். நான் கோர்ட்டுக்கும் வக்கீல் வீட்டிற்கும் நடந்து கால் செருப்பு தேய்ந்து போகும். ராத்திரியில் தூக்கம் வராது. முக்கியமாக பதிவுகள் எழுதும் ஆர்வம் போய்விடும். (பதிவுலகத்திற்கும் உங்களுக்கும் எவ்வளவு நஷ்டம்!!!!!!)

அடிபட்டவன் துரதிர்ஷ்டவசமாக இறந்து விட்டான் என்றால் அவ்வளவுதான். நான் மண்டையைப் போடும் வரைக்கும், அதன் பிறகு என் வாரிசுகளையும் இந்த ஏழரை நாட்டுச் சனி விடாது.

இந்த விளைவுகளை நினைக்கும்போது, இந்த 2500 ரூபாய் செலவு ஒன்றுமே இல்லை என்று தோன்றுகிறது.

இப்படி என்னைக் காப்பாற்றிய அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். 

சனி, 29 டிசம்பர், 2012

பயமும் ஒழுக்கமும்


மனிதன் ஆதிகாலத்திலிருந்தே பயத்தை அறிந்திருக்கிறான். பயம் ஒரு தற்காப்பு உணர்ச்சி என்று கண்டு கொண்டிருக்கிறான். அவனுடைய வாழ்வில் பல ஆபத்துகளை வெல்ல இந்தப் பயம் தேவைப் பட்டிருக்கிறது.

நெருப்பு, வெள்ளம், காற்று இவைகள் அவனுடைய வாழ்வில் மிகுந்த சேதத்தை விளைவித்தன. ஆகவே அவைகளைக் கண்டு பயப்பட்டான். அவைகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வழிகளைக் கண்டு பிடித்தான். அவன் வாழ்வு நீண்டது.

காலம் மாற மாற, அவன் பயப்படும் பொருள்களும் மாறிக்கோண்டே வந்தன. தனக்குப் புரியாதவைகள் பயத்தை உண்டு பண்ணிவதால் அவைகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தான். புரிந்து போனதும் பயமும் விலகி விட்டது.

ஆனால் அன்றும் இன்றும் அவனைப் பயத்துக்குள்ளாக்கும் சில விஷயங்கள் மாறாமலேயே இருக்கின்றன. அதில் ஒன்று இருட்டு. ஏனெனில் இருட்டில் எதிரி ஒளிந்திருந்தால் ஆவனைப் பார்க்க முடிவதில்லை. அந்த எதிரி ஆபத்தைக் கொடுக்க முடியும். ஆகவே மனிதன் இருட்டைக் கண்டு இன்றும் பயப்படுகிறான்.

அடுத்தது, புதிதாக இருப்பவைகளைப் பார்த்து பயந்தான். புது மனிதர்கள், புது இடம், புது சூழ்நிலைகள் இவைகளைக் கண்டு பயந்தான். இந்த பயம் அவனுடைய தற்காப்புக்கு உதவியது.

அவன் நாகரிகமடைந்து சமுதாயமாக மாறிய பிறகு, சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினான். அந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை சமுதாயம் ஒதுக்கி வைத்தது. மற்றவர்கள் தன்னை மதிப்பதற்காக மனிதன் அந்தக் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டான். இதை ஒருவனின் மனச்சாட்சி என்று கூறினோம். மனச்சாட்சி பிரகாரம் நடப்பவன்தான் மனிதன் என்று ஒரு காலத்தால் இருந்தது.

பிறகு சட்டங்கள் வந்தன. சட்டத்தை இயற்றுபவர்கள், சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் என்று இருவகையான அமைப்புகள் இருக்கின்றன. இந்த இரு அமைப்புகளும் சரியாக இருந்தால்தான் ஒரு சமுதாயம் ஆரோக்யமாக இருக்கும்.

ஆனால் இன்று யாரும் சட்டத்திற்கு பயப்படுவதில்லை. காரணம் சட்டத்தை இயற்றியவனே அதை மதிப்பதில்லை. சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவன் தன்னுடைய இச்சைப்படி அமுல்படுத்துகிறான். அவனை அந்த நிலைக்கு, சட்டம் இயற்றுபவர்கள் தள்ளி விட்டார்கள்.

மக்களின் பிரதிநிதிகள், நாட்டு மக்களுக்கு உதாரண புருஷர்களாக இருக்கவேண்டியவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படித்தான் அந்த நாட்டின் கடைசி குடிமகனும் இருப்பான். அதுதான் இன்று நடக்கிறது.

தனி மனிதனுக்கு மனச்சாட்சி இல்லை, சட்டத்திடம் பயமும் இல்லை. எதனிடமும் பயம் இல்லை. அப்புறம் நாட்டில் எப்படி ஒழுக்கத்தை எதிர் பார்க்க முடியும்?

வெள்ளி, 28 டிசம்பர், 2012

பெருகி வரும் வன்முறைகளும் போராட்டங்களும்



நாடெங்கிலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், ஆள் கடத்தல், வழிப்பறி, சாலை விபத்துகள் ஆகியவை அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. வளர்ந்து வரும் ஒரு சமுதாயத்தில் இத்தகைய நிகழ்வுகள் அந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமைகிறது.

நாட்டிலுள்ள மக்கள் இத்தகைய நிகழ்வுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். இத்தகைய போராட்டங்களினால் என்ன பயன் விளையும் என்று எனக்குத் தெரியவில்லை. தனி மனிதன் தன்னை மாற்றிக்கொண்டால் தவிர, இத்தகைய குற்றங்களை எவ்வாறு தடுக்க முடியும்?

அவன் எப்போது மாறுவான்? அப்படி மாறுவானா என்பதே ஒரு கேள்விக்குறியாக அல்லவா இருக்கிறது. போராட்டங்களை முன்னின்று நடத்தும் பல்வேறு அமைப்புகள் இந்த முயற்சியில் என்றும் ஈடுபடுவதில்லை. போராட்டம் நடத்த எங்கு என்ன காரணம் கிடைக்கும் என்று கழுகு போல் காத்திருக்கிறார்கள். அந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தால் போதும், அதற்காக போராட்டம் ஆரம்பித்து விடுவார்கள்.

பலருக்கு போராட்டங்கள் அவர்களின் அடங்கிக்கிடந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் அமைகிறது. இத்தகைய போராட்டங்களில் அவர்கள் என்ன செய்தாலும் யாரும் கேட்பதில்லை. பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல், கடைகளைச் சூறையாடுதல், பொது வாழ்வைச் சீர்குலைத்தல் ஆகியவை சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இத்தகையோர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

இத்தகைய போராட்டங்கள் ஓரிரு நாட்கள் நடந்து பின்பு முடிந்து விடும். அதன் பிறகு இந்த மாதிரியான இன்னொரு சம்பவம் நடந்தால் அதற்கு ஒரு போராட்டம் ஆரம்பிக்கும். இந்த தொடர்கதை நடந்து கொண்டேதான் இருக்கிறது. போராட்டம் முடிந்தவுடன் அனைவரும் அந்த சம்பவத்தை மறந்து விட்டு தங்கள் வழக்கமான வேலையைக் கவனிக்கப் போய்விடுகிறார்கள்.

இந்தப் போராட்டங்களில் ஈடுபடுகிறவர்கள் அனைவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் போராடும் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்பது சந்தேகமே. உதாரணத்திற்கு டில்லியில் இப்போது போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் மாணவர்கள், குற்றவாளிகளை உடனே தூக்கில் போடுங்கள் என்று கேட்கிறார்கள். இதே மாணவர்கள் செய்யும் ரேக்கிங்கில் ஒரு மாணவர் உயிரிழந்தால், உடனே அதில் சம்பந்தப்பட்ட மாணவர்களை தூக்கில் போட உடன்படுவார்களா?

வட இந்தியப் பெண்கள் தங்கள் கழுத்தில் அரை பவுனில், கண்ணுக்குத் தெரியாமல் ஒரு செயின் போட்டிருப்பார்கள். தமிழ் நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் குறைந்தது ஒரு ஐம்பது பவுனாவது போட்டுக்கொண்டுதான் விசேஷங்களுக்குப் போகிறார்கள். ஐம்பது பவுன் நகை இன்றைக்கு தங்கம் விற்கும் விலையில் ஏறக்குறைய பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகிறது. இதைப் பார்க்கும் ஒரு சாதாரண குற்றவாளி கூட கொலை செய்யும் அளவிற்குத் துணிந்து விடுகிறான்.

வீட்டில் லட்சக் கணக்கில் பணத்தைப் பீரோவில் வைத்து விட்டு அவன் ஊருக்குப் போய்விடுகிறான். பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து திருடுபவர்கள் இன்று பெருகிப்போய் விட்டார்கள். இந்தப் பணம் அன்று இரவே திருட்டுப் போய்விடுகிறது.

இதை எவ்வாறு மாற்ற முடியும் என்று மக்கள் யோசிக்கவேண்டும். வெறும் போராட்டங்களினால் எந்தப் பயனும் ஏற்படாது என்பதை மக்கள் என்று உணர்வார்களோ அன்றுதான் நம் நாடு முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைக்கும்.

வியாழன், 27 டிசம்பர், 2012

வெளியூர் செக்குகள் பணமாகும் விதம்

இந்தப் பதிவு நைஜீரியாவிலிருந்து வரும் செக்குகளைப் பற்றியதல்ல. இந்திய நாட்டிற்குள் ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு அனுப்பப்படும் செக்குகளைப் பற்றியது.

உங்கள் மாமனார் டில்லியிலிருந்து உங்களுக்கு தீபாவளிக்காக ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செக் அனுப்பியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நீங்களும் ஆனந்தப்பட்டு (ஆனந்தப்படாவிட்டால் உங்கள் மனைவி உங்களை பார்வையாலேயே எரித்து விடுவார்) அந்தப் பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்யலாம் என்ற கற்பனையில் மூழ்குவீர்கள்.

உங்களுக்கு அப்போது தெரியாதது,  உங்களை ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கிறதென்ற விஷயம். அந்த சங்கதி பிறகுதான் தெரியும்.

நீங்கள் ஆனந்தமாக அடுத்த நாள் அந்தச் செக்கை உங்கள் அக்கவுன்டில் போட்டுவிடுவீர்கள்.

பேங்கில் இந்த மாதிரி வெளியூர் செக்குகளை எல்லாம் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். அந்தந்த வாரக்கடைசியில் அந்த செக்குகளை எல்லாம் சேர்த்து, உங்கள் செக் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறதோ அந்த ஊரிலிருக்கும் அவர்களுடைய பேங்கிற்கு அனுப்புவார்கள். நமது தபால் இலாக்காவின் சாமர்த்தியம் எல்லோருக்கும் தெரியும். உங்கள் அதிர்ஷ்டம் சரியாக இருந்தால் உங்கள் செக் சரியாகப் போய்ச் சேர்ந்து விடும்.

அந்த ஊரில் இருக்கும் பேங்க் அலுவலர் இந்த மாதிரி செக்குகளைப் பிரித்து அந்தந்த பேங்குகளுக்கு அனுப்புவார். அதை வாங்கும் பேங்க் அதை பாஸ் செய்து அந்த விபரத்தை இந்த பேங்குக்கு அனுப்பும். அங்கிருந்து அந்த செக் பாஸான விபரம் நீங்கள் செக் போட்ட பேங்க்குக்கு தபால் மூலமாக வரும்.

இதற்கு சுமாராக 15 முதல் 45 நாட்கள் வரை ஆகலாம். இதுதான் பழைய நடைமுறை. அதுவரை நீங்கள் தினமும் பேங்கிற்குப் போய் செக் பாஸாகி வந்து விட்டதா என்று விசாரித்துக் கொண்டிருக்க வேண்டும். இப்போது இந்த விபரங்கள் இன்டர்நெட் மூலமாக வரலாம். அப்படி வந்தால் செக் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும் நாட்கள் குறையும்.

அதற்குப் பிறகு அந்தச் செக்கின் பணம் உங்கள் கணக்கில் போடப்படும். ஆயிரம் ரூபாய்க்கு ஏறக்குறைய நூறு ரூபாயை கமிஷன் என்று பிடித்துக் கொள்வார்கள்.

உங்கள் மாமனார் ஊரில் உங்கள் பேங்கின் கிளை இருந்தால் நீங்கள் தப்பித்தீர்கள். ஏதாவது சிறிய ஊராக இருந்து, உங்கள் பேங்க்கின் கிளை அந்த ஊரில் இல்லையென்றால், நீங்கள் பேசாமல் அந்த செக்கை கிழித்துப் போட்டுவிடலாம். ஏனென்றால் அது ஒழுங்காக பாஸ் ஆகி வராது. செக் என்ன ஆயிற்று என்றும் தெரியாது. முக்கால்வாசி சமயங்களில் அந்த செக் அபேஸ் ஆகி, உங்கள் மாமனார் பணத்தை ஊர் பேர் தெரியாத உங்கள் சகலை சாப்பிட்டுக்கொண்டிருப்பார்.

இப்போது பல பேங்குகளில் மல்டிசிட்டி செக்குகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். அந்த செக்குகள் அந்தந்த ஊரிலேயே பாஸ் ஆகிவிடும். தவிர இப்போது புதிதாக வரப்போகும் சிடிஎஸ் 2010 செக்குகள் நடைமுறைக்கு வந்து விட்டால் இந்தச் சிக்கல்கள் ஏறக்குறைய மறைந்து போகும் என்று நம்பலாம். அந்த நன்னாளை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

புதன், 26 டிசம்பர், 2012

குருவும் சிஷ்யனும்.


நான் ஞானியல்ல. ஆதலால் ரூம் போட்டு யோசித்ததில் நினைவிற்கு வந்த ஒரு கதையை உங்களுடன் பகிர்கிறேன்.

ஒரு ஊரில் ஒரு குரு வசித்து வந்தார். அவருக்கு ஒரு சிஷ்யன். ஒரு நாள் அவர்கள் இருவரும் ஒரு வேலையாக வெளியூருக்குப் போனார்கள். அப்போது அவர்கள் சென்ற பாதையில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆறு நிறைய வெள்ளம் போய்க்கொண்டிருந்தது.

ஆற்றின் அக்கரையில் ஒரு பரிசல் இருந்தது. ஆனால் பரிசல்காரனைக் காணோம். அந்தப் பக்கத்தில் சில குடிசைகள் இருந்தன. பரிசல்காரன் அந்தக் குடிசைகளில் ஏதாவதொன்றில் இருக்கலாம் என்று குரு யூகித்தார்.

சிஷ்யனைப் பார்த்து "உனக்கு நீச்சல் தெரியுமல்லவா, நீ ஆற்றைக் கடந்து போய் அந்த பரிசல்காரனைக் கூட்டுக்கொண்டு வா" என்றார். சிஷ்யன் மளமளவென்று ஆற்று நீரின் மேல் நடந்து அக்கரைக்குப் போய் பரிசல்காரனைக் கூட்டிக்கொண்டு வந்தான்.

குருவிற்கு மகா ஆச்சரியம். நம் சிஷ்யன் எப்படி ஆற்றின் மேல் நடந்து சென்றான் என்று அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். சிஷ்யன் திரும்பி வந்தவுடன் இதைப் பற்றிக் கேட்டார். சிஷ்யன் "குருவே, உங்கள் பெயரைச் சொல்லிக்கொண்டே ஆற்றின் மேல் நடந்து போனேன். அவ்வளவுதான்" என்றான்.

குருவிற்கோ மிக்க ஆச்சரியம். ஆஹா, நம் பெயருக்கு இவ்வளவு சக்தி இருக்கா, அப்படியானால் நானும் ஆற்றின் மேல் நடக்கலாமே என்று முடிவு செய்தார். அவர் பெயர் "தேவானந்தா". அந்தப் பெயரைச் சொல்லிக்கொண்டே ஆற்றின் மேல் நடக்கப் பார்த்தார். ஆற்றில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்தக் கதையின் நீதி, எவ்வளவு சிந்தித்தும் எனக்குப் புலப்படவில்லை. இதைப் படிக்கும் அன்பர்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

திங்கள், 24 டிசம்பர், 2012

500 வது பதிவு


இது என்னுடைய 500 வது பதிவு.

நான் பதிவுலகில் 2009 ம் ஆண்டு அடியெடுத்து வைத்தேன். நான்கு வருடத்தில் 500 பதிவுகள் போட்டிருக்கிறேன். இதை ஒரு சாதனையாக நான் நினைக்கவில்லை. பொழுது போக்குவதற்கு வேறு நல்ல உருப்படியான வேலை ஒன்றும் கிடைக்காததினால்  இது நடந்துள்ளது. அவ்வளவுதான்.

ஆனால் சாதனை என்று சொல்லிக் கொள்ளும்படியான சில காரியங்கள் நடந்திருக்கின்றன. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அவை முற்றிலும் என் பதிவைப் படிக்கும் பார்வையாளர்கள் செய்த சாதனை. அதற்கு நான் எந்த விதத்திலும் என் வெற்றி அல்லது என் சாதனை என்று உரிமை கொண்டாட முடியாது.

உங்கள் சாதனைகள்.

பின் தொடர்பவர்கள்  -    459

மொத்தப் பின்னூட்டங்கள்  -         7618

திரட்டிகளின் தரவரிசைகள். (ஸ்கிரீன் ஷாட்)


இந்த தளத்தைப் படிக்கும், பின் தொடரும், பார்வையிடும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.