புதன், 8 மே, 2013

கடன் வாங்கி கார் வாங்கினீங்களா?


இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

பேங்கிலோ அல்லது தனியார் நிதி நிறுவனங்களிலோ கடன் வாங்கி கார் அல்லது பைக் வாங்கியுள்ளீர்களா? அதில் உள்ள நுணுக்கங்களைத் தெரிந்திருக்கிறீர்களா? பெரும்பாலானவர்கள் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. இந்த விவகாரத்தில் உள்ள வில்லங்கங்களை தெரிந்து கொள்வது நல்லது.

காருக்கு கடன் வாங்கும்போது பேங்க் ஆக இருந்தால், ஒரு பத்து கையெழுத்துகளும் தனியார் நிதி நிறுவனமாக இருந்தால் ஒரு நூறு கையெழுத்துகளும் வாங்கியிருப்பார்கள். புது கார் அல்லது பைக் வாங்கும் கிளுகிளுப்பில் நீங்கள் அவர்கள் காட்டிய இடத்திலெல்லாம், ஏதோ நீங்கள்தான் ரிசர்வ் பேங்க் கவர்னர் என்ற நினைப்பில், கையெழுத்து போட்டிருப்பீர்கள்.

ஒவ்வொரு கையெழுத்தும் ஒவ்வொரு கண்ணிவெடி என்பது பின்னால்தான் உங்களுக்குத் தெரியவரும். கார் அல்லது பைக் உங்கள் பேரில்தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உங்கள் பெயர்தான் ஆர்.சி. புஸ்தகத்தில் (இப்போது புஸ்தகம் ஏது, வெறும் ஒரு சிங்கிள் ஷீட்தான்) இருக்கும். நீங்களும் ஆஹா, நம் கார் என்ற மாயையில் சந்தோஷப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். இதுதான் ஒரிஜினல் மாயை. அந்தக் காரின் நிஜ சொந்தக்காரன், அந்த பேங்கோ அல்லது நிதி நிறுவனமோதான்.

அவர்கள் நீங்கள் எப்போது தவணை கட்ட மறக்கிறீர்கள் என்று கண் கொத்திப் பாம்பாக காத்திருப்பார்கள். ஒரு தவணை கட்ட மறந்தீர்களோ, உங்கள் காரைப் பிடுங்கிக்கொள்வார்கள். நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது. சட்டம் அவர்கள் பக்கம். இந்த மாதிரி தவணை கட்டாதவர்களின் காரைப் பிடுங்க ஒரு தனி ஏஜென்சி வைத்திருக்கிறார்கள். அவர்கள் உங்களைக் கண்காணித்து, நீங்கள் ஆள் அரவமில்லாத ரோட்டில் தனியாகப் போய்க் கொண்டிருக்கும்போது, நான்கு பேராக வந்து உங்களை காரிலிருந்து இறக்கி விட்டு விட்டு, காரை ஓட்டிக்கொண்டு போய்விடுவார்கள்.

பிறகு நீங்கள் அவர்களிடம் நடையாய் நடந்து, பல ஏச்சுகள் வாங்கி, தண்டங்கள் பல அழுது உங்கள் காரைத் திருப்பி எடுத்து வரவேண்டும்.

பிறகு நீங்கள் தவறாமல் தவணைகளைக் கட்டி முடித்து விடுவீர்கள். ஆஹா, கார் நம்முடையதாகி விட்டது என்று சந்தோஷப்படுவீர்கள். அது அற்ப சந்தோஷம் என்று உணறுங்கள். நீங்கள் தவணைகளை முழுவதும் கட்டி முடித்து விட்டாலும், கார் சட்டப்பிரகாரம் அவர்களுடையதுதான். பழைய கால ஓட்டல்களில் "இந்த டம்ளர் ஆனந்தபவனில் திருடியது" என்று என்கிரேவ் செய்திருப்பார்கள். அதுபோல  ஆர்.சி. புத்தகத்தில் அந்த பேங்கின் பெயரைக் குறிப்பிட்டு, இந்தக் கார் இந்த பேங்க்கிற்கு அடமானமாக வைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.

இதற்கு "ஹைபாதெகேஷன்" என்று பெயர். இதை கேன்சல் செய்தால்தான் கார் உங்களுடையது என்று உறுதியாகும். பலர் இந்த விவரம் நெரியாமல் இருப்பார்கள். இந்த "ஹைபாதெகேஷன்" ஐ கேன்சல் செய்வது என்பது ஒரு மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போன்ற வேலை.

இதற்கு அந்த நிதி நிறுவனம் அல்லது பேங்கில் இருந்து NOC அதாவது No Objection Certificate வாங்கவேண்டும். அதில் இந்த காருக்கான தவணைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டாம். இந்த காரின் "ஹைபாதெகேஷன்" ஐ கேன்சல் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று குறிப்பிட்டிருப்பார்கள். கூடவே Form 35 என்று ஒன்று இருக்கிறது. அதை அவர்கள் உங்கள் கையெழுத்துடன் நீங்கள் முதலில் கடன் வாங்கும்போதே வாங்கி வைத்திருப்பார்கள். அதையும் அவர்கள், தங்கள் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும்.

இந்த இரண்டையும் நீங்கள் வெற்றிகரமாக வாங்கி விட்டீர்களானால், பாதி கிணறு தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம். உடனே ஆர்டிஓ ஆபீசுக்கு ஓடிவிடாதீர்கள். இன்னும் பல படிகள் இருக்கின்றன. கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவை.

1. Form 35 இரண்டு காப்பிகள் (இது பேங்கில் கொடுத்திருப்பார்கள்)
2. NOC (இதற்கு இரண்டு ஜீராக்ஸ் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னால் தேவைப்படும்.
3. ஒரிஜினல் ஆர்சி புக் (ஷீட்)
4. இன்சூரன்ஸ் சர்டிபிகேட் ஜீராக்ஸ் காப்பி
5. உங்களுடைய அட்ரஸ் புரூப் (ரேஷன் கார்டு அல்லது ஒட்டர் ஐடி கார்டு) ஜீராக்ஸ் காப்பி
6. உங்களுடைய பேன் (Pan) கார்டு ஜீராக்ஸ் காப்பி
7. காரின் புகைச் சான்றிதழ் ஜீராக்ஸ் காப்பி
8. பேங்க் அல்லது நிதி நறுவனத்தின் விலாசம் எழுதப்பட்ட, 35 ரூபாய் தபால் ஸ்டாம்ப் ஒட்டிய கவர்

அனைத்து ஜீராக்ஸ் காப்பிகளையும் ஒரு கெஜட்டட் ஆபீசர் அல்லது நோட்டரி பப்ளிக் அவர்கள் அட்டெஸ்ட் செய்யவேண்டும். எல்லா ஒரிஜினல்களையும் கூடவே எடுத்துச்செல்லுங்கள்.

இவைகளை ஒன்றாகப் பின் பண்ணி எடுத்துக்கொண்டு உங்கள் ஆர்டிஓ ஆபீசுக்குப் போகவேண்டும். சுற்றுலாத் தலங்களில் கைடுகள் உங்களை மொய்ப்பார்களே அந்த மாதிரி, இங்கும் தரகர்கள் உங்களை மொய்ப்பார்கள். உங்களால் ஆர்டிஓ ஆபீஸ் கெடுபிடிகளை சமாளிக்க தைரியம் இல்லாவிட்டால் இந்த தரகர்களின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆளைப் பொறுத்து, வண்டியைப் பொறுத்து நூறு ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை சார்ஜ் பண்ணுவார்கள்.

நீங்கள் கார் வாங்கிய பின் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தீர்களானால் அதை விட வேறு வினை வேண்டியதில்லை. அந்த நிலையை டீல் பண்ணுவது இன்னொரு பதிவிற்கான விஷயம். அதை அப்புறம் பார்க்கலாம்.

நான் எப்பொழுதும் நேரடியாகத்தான் ஆர்டிஓ ஆபீசை டீல் பண்ணுவது வழக்கம். இந்த மாதிரி கவர்மென்ட் ஆபீசுகளுக்குப் போகும்போது கீழ்க்கண்டவைகளைக் கொண்டு போவது நல்லது.

1.ஸ்டேப்ளர், போதுமான அளவு பின்கள் இருக்கிறதா என்று செக் பண்ணிக்கொள்ளுங்கள்.
2. திக்காக எழுதும் ஸ்கெட்ச் பேனா, சாதாரணப் பேனாக்கள் இரண்டு, சிகப்பு இங்க் பேனா ஒன்று
3. பெவிஸ்டிக் கோந்து
4. குண்டூசிகள்
5. கெட்டி நூலும் அதற்குத் தகுந்த ஊசியும்.

ஆர்டிஓ ஆபீசுக்குள் முதல் முறையாகச் செல்லுகிறீர்க்ள என்றால் அங்குள்ள நடைமுறைகள் தலையும் புரியாது வாலும் புரியாது. கொஞ்சம் நிதானமாக நாலு பேரை விசாரித்து, உங்களுக்கான பணம் வாங்கும் கவுன்டரைக் கண்டு பிடியுங்கள். அங்கு இருக்கும் க்யூவில் சேர்ந்து கொள்ளுங்கள். க்யூவின் நீளம் உங்கள்  அதிர்ஷ்டத்தைப் பொருத்து பெரிதாகவோ சிறிதாகவோ இருக்கும்.

"ஹைபாதெகேஷன்" கேன்சல் செய்ய கட்டணம் 125 ரூபாய். சரியான சில்லறை கொண்டுபோவது அவசியம். பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு கம்ப்யூட்டர் ரசீது கொடுப்பார்கள். அது இரண்டு பாகமாக இருக்கும். ஒரு பாதியை கிழித்து உங்கள் Form 35 ல் ஒட்டவும். பிறகு இதைக்கொண்டு போய் எந்த கவுன்டரில் கொடுக்கவேண்டுமென்று விசாரித்து அங்கே கொடுக்கவும். அங்கேயும் க்யூ இருக்கும். அங்குள்ள நபர் உங்களை ஒரு நொடியில் எடை போட்டு விடுவார். சரி, ஒன்றும் பெயராது என்று முடிவு கட்டி, உங்கள் விண்ணப்பத்தை வேண்டா வெறுப்பாக வாங்கி வைத்துக் கொள்வார்.

மறு நாள் 5 மணிக்கு வந்து உங்கள் ஆர்சி புக்கை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்வார். அவரிடம் அதற்கு மேல் ஒன்றும் கேட்க முடியாது. அவ்வளவுதான். மறுநாள் மாலை 5 மணிக்குப் போய், இதற்குண்டான கவுன்டரை விசாரித்து அறிந்து அங்கு போனால் அந்தக் கவுன்டரில் உள்ள ஆள் அப்போதுதான்   டீ சாப்பிடப்போயிருப்பார். அரை மணி நேரம் கழித்து அவர் வருவார். வந்து என்ன வேண்டும் என்று நம்மை பார்வையாலேயே கேட்பார்.

நாம் ஆர்சி புக் என்று இழுத்து, ரசீதைக் காண்பித்தால் பத்து நிமிடம் தேடி அதை எடுத்துக் கொடுப்பார். அதை வாங்கிக்கொண்டு அப்பாடா என்று வீட்டிற்குத் திரும்ப வேண்டியதுதான். ஆனால் இந்த விஷயம் இத்துடன் முடியவில்லை.

"ஹைபாதெகேஷன்" கேன்சல் செய்யப்பட்ட ஆர்சி புக்கின் ஜீராக்ஸ் காப்பியும் NOC யின் ஒரு காப்பியையும் இணைத்து உங்கள் காரை இன்சூரன்ஸ் செய்திருக்கும் கம்பெனிக்கு அனுப்பவேண்டும். அவர்களிடம் இருந்து இதற்கான ஒப்புதல் வரவேண்டும். அப்போதுதான் இந்த விவகாரம் முடிந்தது என்று அர்த்தம்.

இந்த வேலை செய்தவர்கள், வீடு கட்டுவதோ, கல்யாணம் நடத்துவதோ கஷ்டம் என்று சொல்லவே மாட்டார்கள்.

திங்கள், 6 மே, 2013

ஒரு இனம் எப்படி முன்னேறும்?


இந்தியாவில் இனப் பாகுபாடு எப்படி தோன்றியது, அதை யார் வளர்த்தார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் கண்டு பிடிப்பது சிரமம் தவிர அதனால் பெரிய பலன் ஏற்படப்போவதுமில்லை. இன்று நம்மிடையே இந்த பேதங்கள் இருக்கின்றன என்பது நிதரிசனம்.

ஒரு சில இனங்கள் முன்னேறுவதையும் மற்றவர்கள் அப்படி முன்னேறாததையும் நாம் பார்க்கிறோம். ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று சமூகவியல் வல்லுநர்கள் ஆராயவேண்டும்.

சமீப காலங்களில் இரண்டு இனங்கள் தங்களை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கின்றன. அந்த சமூகத்தில் தோன்றிய தலைவர்கள் இந்த மாறுதலைத் தோற்றுவித்துள்ளார்கள். மற்ற இனத்தவர்களை வசை பாடாமல் அமைதியாக முன்னேறியுள்ளார்கள். அவர்கள் நாடார் சமூகத்தினரும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சமூகமும் ஆகும்.

மற்ற இனத்தவர் ஏன் இந்த மாதிரியைப் பின்பற்றி முன்னேறவில்லை என்று பார்த்தால் அந்த இனங்களில் தோன்றிய தலைவர்கள் சுயநலத்தோடு இருந்ததால் என்று தோன்றுகிறது. தங்கள் இனத்தவர்களை முன்னேறாமல் வைத்திருந்தால்தான் தாங்கள் கோலோச்சமுடியும் என்று உணர்ந்து அவர்கள் அந்த சமூகத்தினரின் உணர்ச்சிகளை மட்டும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

இந்த இழிநிலை மாறாத வரை அந்த சமூகங்கள் முன்னேற மாட்டா.

சனி, 4 மே, 2013

செலவு 300 ரூபாய் வரவு 3 லட்சம்


பேராசையே பல சங்கடங்களுக்குக் காரணம் என்று பல அனுபவங்கள் மூலமாக உணர்ந்திருந்தாலும், மனிதன் அதற்கு சில சமயங்களில் இடம் கொடுத்து விடுகிறான். அதற்கு உண்டான பலனையும் உடனே அனுபவிக்கிறான்.

==================================================================
3-5-2013 தினத்தந்தி செய்தி

மதுரை திருநகரில் ஆட்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் சம்பவம்.

வங்கி முன்பு, அ.தி.மு.க. பிரமுகரிடம் 3 லட்சம் கொள்ளை.

மதுரை, மே 3.

மதுரை திருநகரில் வங்கி முன்பு, ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு, நூதனமுறையில் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அ.தி.மு.க. செயலாளர்.

மதுரை திருநகர் 6 வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜ். நேற்று காலை இவர் திருநகர், சித்ரகலா காலனியில் உள்ள ஒரு வங்கிக்குச் சென்றார். வங்கியில் 3 லட்சம் பணத்தை எடுத்து ஒரு பேக்கில் வைத்துக்கொண்டு, தனது காருக்குத் திரும்பினார்.

காரின் பின் சீட்டில் பணப்பையை வைத்துவிட்டு, காரை எடுப்பதற்காக முன் சீட்டுக்கு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருநபர்கள், ரோட்டில் 100 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடப்பதை காட்டி, "இந்த ரூபாய் உங்களுடையதா பாருங்கள்" என்று கூறினர். அதைப் பார்த்த செல்வராஜ் தனது பணப்பையில் இருந்து சிதறாயிருக்குமோ என்று நினைத்து சிதறிக்கிடந்த மூன்று 100 ரூபாய் தாள்களையும் எடுத்தார். இதை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், காரின் பின் சீட்டில் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

சிதறிக்கிடந்த பணத்தை எடுத்தபின் காருக்கு வந்த செல்வராஜ், பின் சீட்டில் இருந்த பணப்பை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம மனிதர்கள் கீழே சில ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு தனது கவனத்தை திசை திருப்பி, பணப்பையை எடுத்துச்சென்றதை உணர்ந்தார்.

300 ரூபாயை எடுத்து முடிப்பதற்குள் 3 லட்சத்தை இழந்துவிட்டதை நினைத்து திகைத்துப்போனார்.

====================================================================

இந்தச் செய்தியில் எனக்குப் புரியாத ஒரு பாய்ன்ட். நூதனமுறையில் இந்த திருட்டு நடந்தது என்று தினத்தந்தி குறிப்பிட்டிருக்கிறது. இந்த திருட்டில் நூதனம் எங்கே வந்தது? காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் அரதப்பழசான டெக்னிக்தானே இது.

அடுத்து ஒரு பாய்ன்ட் - இது நல்ல பிசினஸ் மாதிரி தெரிகிறது. ஆர்வமுள்ள பார்ட்னர்ஸ் விண்ணப்பிக்கவும்.

வெள்ளி, 3 மே, 2013

20. கனவு கலைந்தது.


ஆஹா, இந்திய நாடு சீக்கிரமே வல்லரசாகப்போகிறது என்ற நினைப்பில் ஆனந்தமாக இருந்தேன். திடீரென்று ஒரு இடிச்சப்தம் கேட்டது. உடனே மழையும் பெய்ய ஆரம்பித்தது.

என்னடா இது, வேளை கெட்ட வேளையில் மழை பெய்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, என் மனைவியின் குரல் ஓங்கி ஒலித்தது. ரிடையர் ஆனாலும் ஆனீங்க, எப்பப் பாரு தூக்கம்தானா, எழுந்திரீங்க, வாசல்ல யார் யாரோ வந்து நிக்கறாங்க, என்னன்னு போய்ப்பாருங்க, என்றாள்.

அப்பத்தான் நான் இவ்வளவு நேரமும் கனவு உலகத்தில் இருந்திருக்கிறேன் என்று புரிந்தது. எழுந்து முகம் கழுவி விட்டு வாசலுக்கு வந்தேன். அங்கு கார்ப்பரேஷன் பிளம்பர் நின்று கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று கேட்டேன். நாளைக்கு உங்கள் ரோட்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்போகிறோம், உங்கள் பைப் கனெக்ஷன் உடைந்தாலும் உடையலாம் என்றார்.

சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றேன். கொஞ்சம் சம்திங் கொடுத்தால் அந்தப் பசங்களை உங்கள் பைப்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறேன் என்றான். சரியென்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு திரும்பினால் இன்னொருவன்.

நீங்க யாருங்க என்றேன். நான் டெலிபோன் டிபார்ட்மென்டுங்க. நாளைக்கு ரோடைத் தோண்டும்போது உங்கள் டெலிபோன் வயர் அறுந்தாலும் அறுகலாம் என்றான். அய்யய்யோ, டெலிபோன் இல்லாவிட்டால் இன்டர்நெட் இருக்காதே. அத்துடன் நம் உயிரும் இருக்காதே என்று நினைத்து அதற்கு என்ன பண்ணலாம் என்றேன். வயர் அறுகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை கொஞ்சம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றான்.

சரி என்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பினால் இன்னொருத்தன். நீ யாரப்பா என்றேன். நான் எலெக்ரிசிட்டி டிபார்ட்மென்ட்டுங்க என்று தலையைச் சொறிந்தான். எனக்கு விஷயம் புரிஞ்சு போச்சு. அவனுக்கும் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு வந்து காபி குடித்தேன்.

நம் நாடு என்னவாகும் என்று யோசனையில் மூழ்கினேன். நம் மக்கள் என்ன கஷ்டம் வந்தாலும் விதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று வாழ்வார்கள் என்று புரிந்தது. கனவில் வரும் ஒரு மாற்றத்தைப் பற்றிய பதிவைப் படிப்பதற்கே பயப்படும் ஒரு இனம், நிஜ வாழ்வில் மாற்றங்களைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள் என்பது என் மர மண்டையில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

(எங்க வீட்டு ரோஜாப்பூ)

புதன், 1 மே, 2013

19. அவசரச் செய்தி

வந்த அவசரச்செய்தி என்னவென்றால், அனைத்து மாநிலங்களிலும் சில ஓட்டுச் சாவடிகளை "பூத் கேப்சர்" செய்வதற்காக குண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே.

இந்தக் குண்டர்களை ஓட்டுச் சாவடியில் இருக்கும் நமது கிங்கரர்களே கவனித்துக்கொள்வார்கள் என்றாலும் ஓட்டுச் சாவடிக்குப் பக்கத்தில் சலசலப்பு எதற்கு என்று, அவர்கள் அனைவரையும் நமது தூதரகத்திற்கு கொண்டுவரச் சொன்னேன்.

எல்லோரும் வந்து மீட்டிங் ஹாலில் உட்கார்ந்தார்கள். எதற்காக பூத் கேப்சர் பண்ண முயன்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒவ்வொரு எலெக்ஷன் நடக்கும்போதும் இதுதான் எங்களுக்கு வேலை. இந்தந்த பூத்துகளை கேப்சர் செய்யுங்கள் என்று வேட்பாளர்கள் சொல்லுவார்கள். அதன்படி செய்வோம். அடுத்த எலெக்ஷன் வரும்வரை நாங்கள் வாழ்வதற்கான செலவிற்கு பணம் கொடுப்பார்கள். அதை வைத்து பிழைத்துக்கொண்டிருந்தோம்.

இந்த எலெக்ஷனில் எங்களை ஒருவரும் கூப்பிடவில்லை. எங்களுக்குத் தெரிந்த தொழில் இது ஒன்றுதான். அதனால்தான் இந்த வேலைக்குக் கிளம்பினோம் என்றார்கள்.

அப்படியா சேதி, உங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பணம் கொடுக்கப்படும். நீங்கள் அனைவரும் எல்லைக் காவல் படையில் சேர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளம் உங்கள் வீட்டில் கொடுக்கப்படும் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.

பிறகு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்தது. 98 சதம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. நடக்க முடியாதவர்களும் ஆஸ்பத்திரியில் இருந்தவர்களையும் தவிர அனைவரும் ஓட்டுப்போட்டிருந்தார்கள்.

மறு நாள் காலையில் ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்தது. மதியத்திற்குள் முடிவுகள் வெளியாகிவிட்டன. தேசீயக் கட்சி, எதிர் பார்த்தது போல் 90 சதம் இடங்களில் வெற்றி பெற்றார்கள். எதிர்க்கட்சிகளுக்கு 10 சதம் இடங்கள் கிடைத்தன. இது எப்படி நடந்தது என்று அனைத்து மக்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அந்த ரகசியம் தேவலோக தூதரகத்தில் இருக்கும் சூபர் கம்ப்யூட்டருக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்.

மாநில சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதினைந்து நாள் பயிற்சி கொடுக்கப்பட்டது. அவர்களின் கடமைகள் என்ன, உரிமைகள் என்ன, மாநில அரசின் பொறுப்புகள் என்ன, அவைகளை நிறைவேற்றுவது எப்படி ஆகிய விஷயங்களில் அவர்களுக்குத் தீவிரப் பயிற்சி கொடுக்கப்பட்டது.

அதே மாதிரி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. எல்லோரும் நாட்டை ஆளுவதற்கு தயாராகி விட்டார்கள்.

இந்தப் பயிற்சிகளில் வலியுறுத்தப்பட்ட அம்சங்கள் வருமாறு.

1. இந்திய நாட்டில் இனி லஞ்சம் எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது.

2. இலவசங்கள் எந்த ரூபத்திலும் இல்லை.

3. அனைவரும் வேலை செய்யவேண்டும்.

4. தொழிற்சாலைகள் தரமான பொருள்களையே உற்பத்தி செய்யவேண்டும்.

5. நாட்டில் பிச்சை எடுப்பது ஒழிக்கப்பட்டு விட்டது.

6. எல்லோரும் சமம். யாருக்கும் எந்தவிதமான சலுகைகளும் இல்லை.

7. பொருட்களுக்கு உற்பத்தி செலவிற்கு மேல் 30 சதம் லாபம் உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்கப்படும்.

8. வியாபாரத்தில் வாங்கும் விலைக்கு மேல் 10 சதம் மட்டுமே அதிகப் படுத்தி விற்கலாம்.

9. அனைத்து அரசு நிறுவனங்களும் மக்களின் சேவைக்காகவே தரமாக பணியாற்றும்.

10. ரயில்கள் குறித்த நேரத்தில் ஓடும்.

11. போக்குவரத்து நெரிசலான நேரங்களில் நகரின் மையப் பகுதிகளில்  தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

12. நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் அரசு அலுவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.

13. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து விதிகள் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும்.

14. கல்விக்கூடங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும். தனியார் கல்விக்கூடங்களை அமைப்பது தடுக்கப்படுகிறது.

15. போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும்.

16. பாராளுமன்ற, சட்டசபை உறுப்பினர்களுக்கு எந்த ஆடம்பர வசதிகளும் தரப்படமாட்டாது. மத்திய மந்திரிகள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்யலாம்.

17. டில்லியில் மீட்டிங் வைத்து மாநிலங்களிலிருந்து மந்திரிகளையும், செயலர்களையும் கூப்பிடும் வழக்கம் அடியோடு நிறுத்தப்படுகிறது.

இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவைகளை எனக்குத் தெரிவிக்குமாறு எல்லோருக்கும் அறிவித்தேன். பாராளுமன்றமும் சட்டசபைகளும் செயல்பட ஆரம்பித்தன. நாடு ஒழுங்கான பாதையில் போக ஆரம்பித்தது.


திங்கள், 29 ஏப்ரல், 2013

18. நாட்டின் தலைவிதி மாறியது

பிரதம மந்திரி. நிதி அமைச்சர், கட்சித்தலைவர் ஆகியார் குழு வந்தார்கள். பொதுத் தேர்தலை எப்படி நடத்துவது என்பதைப்பற்றி தீவிரமாக விவாதித்தோம்.

நான் சில கருத்துகளைக் கூறினேன்.

1. இப்போது உள்ள தேசீயக் கட்சியே வேட்பாளர்களை நிறுத்தும். இதில் 33 சதம் பெண்கள். இந்த  வேட்பார்களே 90 சதம் வெற்றி பெறுவார்கள்.

2. எதிர்க் கட்சிக்கு 10 சதம் இடம் கொடுப்போம். ஏனெனில் எதிர்க்கட்சி இல்லாவிடில் அதை ஜனநாயக நாடு என்று ஒருவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

3. பாராளுமன்றத்திற்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். இப்போதுள்ள நாடாளுமன்றம், அனைத்து சட்டசபைகளையும் கலைப்பதற்கு ஜனாதிபதியிடம் உத்திரவு வாங்கி அமுல்படுத்துங்கள்.

4. தேர்தலுக்கான அறிவிப்புகளும் வேட்பாளர் தேர்வும் உடனடியாக ஆரம்பிக்கட்டும்.

5. தேர்தலை இன்னும் மூன்று மாதத்தில் நடத்தி முடித்து விடவேண்டும்.

இந்த கருத்துகளுக்கு அவர்கள் ஏகமனதாக ஒத்துக்கொண்டார்கள்.

நிதி அமைச்சர் மட்டும் ஒரு சந்தேகம் எழுப்பினார். நம் வேட்பாளர்கள் 90 சதம் வெற்றி பெறுவார்கள் என்று கூறினீர்களே, அது எப்படி சாத்தியமாகும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். சந்தோஷத்துடன் அவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. எல்லொரும் மும்முரமாக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தார்கள். தேசீயக் கட்சி வேட்பாளர்கள் சீக்கிரம் முடிவு செய்யப்பட்டு அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து விட்டார்கள். எதிர்க்கட்சிகளுக்கு வேட்பாளர்கள் யாருமே முன்வரவில்லை. அவர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கும் வேட்பாளர்களை நானே ஏற்பாடு செய்தேன்.

வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு ஓட்டுச் சீட்டுகள் அடித்தாகிவிட்டது தேர்தல் பிரசாரம் என்பதே மருந்துக்குக்கூட இல்லை. ஆங்காங்கே விளம்பரத் தட்டிகள் வைத்ததோடு சரி. அனைத்து ஓட்டர்களும் கண்டிப்பாக ஓட்டுப் போடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். அனைவருக்கும் ஓட்டுப் போட்டவுடன் பிரியாணி விருந்து கட்சி பேதமில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன்.

தேர்தல் நாளைக்கு முன்தினம் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டுப்பதிவிற்கான அனைத்து சாதனங்களும் தேர்தல் அதிகாரிகளும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வைக்கப்பட்டிருந்த அனைத்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும் "வை-ஃபி" முறையில் தேவலோகத் தூதரகத்திலுள்ள சூபர் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் நாள் வந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒவ்வொரு யம கிங்கரனைக் காவலுக்குப் போட்டிருந்தேன். எந்தச்சாவடியிலும் எந்த விதமான சலசலப்பும் இல்லை. மக்கள் ஒழுங்காக வந்து ஓட்டுப்போட்டு விட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.

மாலை 5 மணிக்கு பத்து நிமிடம் இருக்கும்போது ஒரு அவசரச்செய்தி.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

நான் வருமானவரி கட்டப் போன கதை.


நான் ஏறத்தாழ 40 வருடங்களாக வருமானவரி கட்டிக்கொண்டு வருகிறேன். மார்ச் 31 தேதிக்குள் அந்த வருடத்திற்கான வரியை பேங்கில் கட்டி விடுவேன். ஏப்ரல் முதல் வாரத்தில் வருமான வரி ரிடர்ன் தயார் செய்து 15ம் தேதிக்குள் வருமான வரி ஆபீசில் தாக்கல்செய்து விடுவேன்.

நானும் என் நண்பர்கள் சிலரும் இவ்வாறுதான் வருடா வருடம் செய்து வந்தோம். வருமான வரி படிவத்திற்கு என்றும் தட்டுப்பாடு ஏற்பட்டது கிடையாது. வருமான வரி ஆபீசில் கேட்டால் தாராளமாக கொடுப்பார்கள். இரண்டு மூன்று படிவங்கள் என் பைலில் எப்போதும் இருக்கும்.

போன வருடம் இந்த மாதிரி வழக்கம்போல் ஒரு படிவத்தில் விவரங்களைப் பதிவு செய்து வருமானவரி ஆபீசுக்கு சென்றோம். அவர்கள் இந்த பழைய படிவங்கள் செல்லாது, புதிய படிவங்கள் இன்டர்நெட்டில் இருக்கிறது, டவுன்லோடு செய்து அதில் விவரங்களைப் பூர்த்தி செய்து கொண்டு வாருங்கள் என்றார்கள். நீங்களே படிவங்கள் தருவீர்களே, அந்த முறை என்ன ஆயிற்று என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், நாங்கள் கொடுப்போம், இப்பொழுதுதான் படிவங்களை அச்சாபீசுக்கு கொடுத்திருக்கிறோம், அவை வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும், உங்களுக்கு அவசரமில்லையென்றால் காத்திருங்கள் என்றார்கள். எங்களுக்கு இந்த சனியன் பிடித்த வேலையை சீக்கிரம் முடித்து விட்டால் ஒரு தொல்லை தீருமே என்ற எண்ணம்.

வீட்டிற்கு வந்து இன்டர் நெட்டில் தேடி அந்தப் படிவத்தைக் கண்டுபிடித்து டவுன்லோடு செய்து ஜீராக்ஸ் சென்டருக்குப் போய் பிரின்டவுட் எடுத்து பூர்த்தி செய்து, வருமானவரி ஆபீசில் சேர்த்துவதற்குள் தாவு தீர்ந்து விட்டது.

இந்த வருடமும் அவ்வாறே மார்ச் 31 க்குள் வரி முழுவதையும் கட்டிவிட்டு பழைய படிவத்தில் விவரங்கள் பூர்த்தி செய்து எடுத்துக் கொண்டு வருமானவரி ஆபீசுக்குப் போனோம். அங்கே இந்தப் படிவம் வாங்கும் கவுன்டரில் இரண்டு பேர் ஈ ஓட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

அவர்களிடம் இந்த மாதிரி வருமானவரி படிவம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொன்னோம். அவர்கள் எங்கள் படிவங்களை ஏறெடுத்தும் பாராமல், இந்த வருடம் புது படிவம் வரப்போகிறது, அதில்தான் நீங்கள் ரிடர்ன் தாக்கல் செய்யவேண்டும் என்றார்கள். சரி, புது படிவங்கள் எப்பொது கிடைக்கும் என்று கேட்டோம். மூன்று மாதங்களில் அநேகமாக கிடைக்கும் என்றார்கள், அதாவது ஜூன் மாதக் கடைசியில் வரும் என்றார்கள்.

இன்டர்நெட்டில் இப்போது கிடைக்குமா என்று கேட்டதற்கு, இன்டர்நெட்டிலும் ஜூன் மாதம்தான் கிடைக்கும் என்றார்கள். இப்போது தினம் இன்டர்நெட்டைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.

அவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்பிய கேள்வி வாய் வரையில் வந்து விட்டது. இருந்தாலும் அதைக்கேட்கவில்லை. அந்தக்கேள்வி- வருமானவரிப் படிவங்கள் வருவதற்கு இன்னும் மூன்று மாதம் ஆகும். அதுவரையில் நீங்கள் என்ன செய்து கிழிக்கப்போகிறீர்கள்? சேரைத் தேய்ப்பதற்கா உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்?   இடம், பொருள், ஏவல் கருதி அந்தக் கேள்விகளை அப்படியே விழுங்கி விட்டு வந்தேன்.

இந்த மேட்டரில் எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், இந்திய அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் வருமானவரித்துறை மிக முக்கிய இடம் வகிக்கின்றது. ஏப்ரல் 1 ம் தேதியானால் வருமானவரி ரிடர்ன் கொடுக்க மக்கள் வருவார்கள் என்பது இந்த மடச்சாம்பிராணி டிபார்ட்மென்டுக்கு நன்றாகத்தெரியும். ஒரு மாதம் முன்பே இந்தப் படிவங்களை தயார் செய்து வைத்தால் என்ன?

வருடம் ஏறக்குறைய இரண்டு லட்சம் கோடி வருமானம் வசூலிக்கும் ஒரு அரசுத்துறையின் அவலத்தை என்னவென்று சொல்வது?

புதன், 24 ஏப்ரல், 2013

சமையலறை அமைப்பது எப்படி?


சமையலறையில்தான் இந்தியப் பெண்கள் அவர்கள் வாழ்நாளில் பாதியைக் கழிக்கிறார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம். இப்போது காலம் மாறிவிட்டது. இருந்தாலும் ஒரு வீட்டில் சமையலறை மிகவும் முக்கியமானதுதான். யார் சமைக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

சமையலறை சமைப்பதற்காக என்ற அடிப்படை உண்மையை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஆகவே அதற்கான அமைப்புகள் அங்கு இருக்கவேண்டியது அவசியம். முதலில் சமையலறையின் அளவு. குறைந்தது 10 அடிக்கு 10 அடி இருப்பது அவசியம்.

முதலில் அடுப்பு.

கேஸ் அடுப்புதான் இப்போது மாமூல். விறகு அடுப்பு, குமுட்டி அடுப்பு, கெரசின் ஸ்டவ் அப்படீன்னு ஒரு காலத்தில் இருந்தது, என்னைப்போன்ற கிழம் கட்டைகளுக்கு ஞாபகம் இருக்கும். கேஸ் அடுப்பில் பலவகை இருக்கிறது. கேஸைத் திருகினால் தானாகவே பொருத்திக்கொள்ளும் மாடல்தான் இப்ப பாபுலர்.


அடுத்த அவசியம் கிச்சன் சிங்க்

சின்னச்சின்ன சாமான்களை கழுவ ஒவ்வொரு தடவையும் வெளியில் இருக்கும் பெரிய சிங்க்குக்குப் போக முடியாது. அதற்கு சமையல் மேடையிலேயே ஒரு சிங்க் வேண்டும். ஸ்டெய்ன்லெஸ் ஸடீலில் நவீன டிசைனில் பலவிதமான சிங்க்குகள் கிடைக்கின்றன.


எலெக்ட்ரிக் சிம்னி: 

இது பேஷனாக இருந்த காலம் போய் இன்று ஒரு அத்தியாவசியமாக ஆகிவிட்டது. பலதரப்பட்ட விலைகளில் கிடைக்கிறது. ஃபேபர் ஒரு நல்ல கம்பெனி. இதை வாங்கிப் பொருத்தவேண்டும்.


பிரிட்ஜ்:

இது இல்லாத வீடே இன்று இல்லை. அதை எப்படி பராமரிக்கிறார்கள் என்பது வேறு விஷயம். வாங்கும்போதே கொஞ்சம் பெரிய சைஸ் வாங்கிவிட்டால் நல்லது. பல கம்பெனிகள் இருக்கின்றன. உங்கள் பட்ஜெட்டைப் பொருத்து வாங்கலாம்.


கப்போர்டுகளும் டிராயர்களும்:

இன்று சமையலறை நாகரிகம் என்னவென்றால், நீங்கள் சமையலை முடித்து விட்டு வெளியில் வந்த பிறகு, யாராவது அந்த சமையலறையைப் பார்த்தால், இங்கு சமையல் செய்கிறார்களா என்று கேட்க வேண்டும். அப்படி கிளீனாக சமையலறை இருக்கவேண்டும். அதற்கு உதவுபவைதான் கப்போர்டுகளும் டிராயர்களும். அனைத்து பொருட்களும் இதற்குள்தான் இருக்கவேண்டும். அதுதான் பேஷன்.


இழுவை டிராயர்கள்:

இவை மிகவும் உபயோகமானவை. புழங்குவதற்கு எளிதானவை.


கப் போர்டுகள்:

கிச்சன் ஸ்லேப்பிற்கு கீழும், லாஃப்டுக்கு மேலும் இவைகளை அமைத்தால் பல பொருட்கள் அங்கு வைத்துக்கொள்ளலாம்.




அடுத்த அவசியம் - குடி தண்ணீர்:

சுத்தமான குடிதண்ணீரின் அவசியத்தை அனவரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே அக்வாகார்டு கட்டாயம் வேண்டும்.


பவர் பாயின்டுகள்:

மிக்சி, எலெக்ட்ரிக் கிரைண்டர் முதலியவை எல்லோர் வீடுகளிலும் சகஜமாகி விட்டன. அவைகளைப் பொருத்த, நல்ல பாதுகாப்பான பவர் பாயின்டுகள் அவசியம்.


நல்ல வெளிச்சம்:

சமையலறையில் நல்ல வெளிச்சம் இருப்பது அவசியத்தேவை.


சுவரில் டைல்கள்

தரையிலிருந்து சீலிங்க் வரைக்கும் கிளேஸ்டு டைல்ஸ் ஒட்டிவிட்டால் சமையலறையை கிளீன் செய்வது சுலபம்.


மைக்ரோ ஓவன்:

இது காலத்தின் கட்டாயம். ஒரு வாரத்திற்கு வேண்டிய இட்லிகளை ஒன்றாகச் சுட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு, அவ்வப்போது தேவையானவற்றை எடுத்து மைக்ரோ ஓவனில் சுட வைத்தால் புது இட்லி தயார். சாம்பார், ரசம் ஆகியவைகளும் இவ்வாறே.


தரை:

தரை துடைப்பதற்கு ஏதுவாகவும் பார்ப்பதற்கு நன்றாகவும் இருக்கவேண்டும். பலவகை டைல்கள் இருக்கின்றன, இங்கே காண்பது கிரேனைட் தரை.



கடைசியாக:

நாங்களெல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன் கை கழுவுவோம். உங்கள் வீட்டு வழக்கம் எப்படி என்று தெரியவில்லை. அப்படி கை கழுவுவதற்கான இடம்.


இப்படிப்பட்ட ஒரு சமையலறை அமைக்க ஏறக்குறைய மூன்று லட்சம் ரூபாய் தேவைப்படும். (கட்டிட செலவு போக)

திங்கள், 22 ஏப்ரல், 2013

17. ஆணும் பெண்ணும் சமம்.



இந்த தேர்தல்கள் முடிந்து எல்லோரும் பதவி ஏற்றுவிட்டார்கள். மகளிர் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மகளிருக்கு 33 சதம் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இந்த பஞ்சாயத்து உறுப்பினர் அனைவருக்கும் ஒரு வார காலப் பயிற்சி தேவலோகத் தூதரகத்தில் கொடுக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் நடைமுறை அலுவல்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களை நல்வழிப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன. மக்களின் நலவாழ்விற்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவைகளை செயல்படுத்தத் தேவையான வழிமுறைகளும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

இதேபோல் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் கடைசியாக ஒரு அறிவுரை வழங்கப்பட்டது. எல்லோருக்கும் அவர்கள் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தத் தேவையான ஊதியம் கொடுக்கப்படும். ஆகவே எந்த திட்டத்திலும் ஊழல் என்பதே தலைகாட்டக்கூடாது. அனைத்து நலத்திட்டங்களும் கச்சிதமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த செயல்பாடுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் நடக்கும். இந்த செயல்பாடுகளை ஒரு சூபர் கம்ப்யூட்டர் கண்காணிக்கும். எங்கு தவறு நடந்தாலும் அது என் தனிப்பட்ட கவனத்திற்கு வந்து விடும். அதற்கான தீர்வுகள் உடனடியாக எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

பஞ்சாயத்துகள் செயல்படுத்த வேண்டிய கிராம நலத்திட்டங்கள்:

   1.   எல்லோருக்கும் குடியிருக்க கழிவறை வசதியுடன் கூடிய வீடுகள்
   2.   அனைவருக்கும் வேண்டிய குடிநீர்
   3.   அனைவருக்கும் வேலை வாய்ப்பு 
   4.   கிராமத்திலேயே தரமான கல்வி
   5.   எல்லோருக்கும் மருத்துவ வசதி
   6.   நல்ல சாலைகள்
   7.   விளைபொருட்கள் கொள்முதல் நிலையங்கள்
   8.   மக்களுக்குத் தேவையான பொருட்களின் விற்பனை நிலையங்கள்
   9.   சமூக கூடங்கள்
10. வேலை வாய்ப்பு சுய உதவிக் குழுக்கள்.
11. விவசாயத்திற்கு முன்னுரிமை

இந்த வசதிகள் அனைத்தும் அந்தந்த கிராமங்களிலேயே மக்களின் தேவையை அனுசரித்து இருக்கும். கிராம மக்கள் பெரும்பாலான தேவைகளுக்கு கிராமத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

அனைத்து அரசு துறைகளும், அனைத்து கிராமங்களுக்கும் சென்று அந்த கிராமங்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை தயாரித்து அவைகளை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக நிறைவேற்றுவார்கள். இதற்கான நிபுணர்கள் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்படுகிறது. இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான போதிய நிதி வசதிகள் ஒவ்வொரு பஞ்சயத்திற்கும் தடையில்லாமல் வழங்கப்படும். எங்கும் எதிலும் இலவசம் என்ற பேச்சுக்கு இடமே கொடுக்கப்பட மாட்டாது.

இதற்கான நடைமுறை உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டு நாட்களில் அனைத்து உத்திரவுகளும் நடைமுறைக்கு வந்தன.

வேலை வாய்ப்பு சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் அமைக்கப்பட்டன. அந்தந்த தொழிலுக்குத் தேவையான வேலைகளை இந்த குழுக்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுக்கும். அந்தந்த குழுக்களுக்குத் தேவையான தொழில் நுட்ப பயிற்சிகள் தகுந்த நிபுணர்களால் கொடுக்கப்பட்டது. விவசாய வேலைகளுக்கு தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக இயந்திரங்களை வைத்துக்கொண்டு ஆட்களின் தேவைகளைக் குறைக்கும் தொழில் நுட்ப பயிற்சிகள் விரிவாக கொடுக்கப்பட்டன.

இதனால் குறிப்பாக விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற குறை தீர்ந்தது. அனைத்து விளைபொருட்களுக்கும் உற்பத்திச் செலவை அனுசரித்து விற்பனை விலை நிர்ணயிப்பதால் உற்பத்தியாளர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

கிராமங்கள் செழிப்படைய ஆரம்பித்தன. இந்நிலையில் நாட்டின் பொதுத் தேர்தலுக்கான நேரம் வந்து விட்டது. பிரதம மந்திரியின் குழுவை வரச்சொல்லி தகவல் அனுப்பினேன்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

சேவை அமைப்புகள்


சமீபத்தில் ஒரு சேவை அமைப்பின் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் என் நண்பர் ஒருவருக்கும் விருது கொடுத்து மரியாதை செய்வதாக இருந்ததால் என் நண்பர் என்னையும் நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார். நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு.

ஐந்தேமுக்காலுக்கே போய்விட்டேன். நிகழ்ச்சி சரியாக 6.25க்கு ஆரம்பித்தார்கள். அந்த சேவை அமைப்பின் பெயர் "தாய்மடி". அதாவது தாய்மடியில் உங்களுக்கு எந்த ஆதரவு கிடைக்குமோ அந்த ஆதரவு இந்த அமைப்பின் மூலம் கிடைக்கும் என்று அமைப்பின் பொறுப்பாளினி, தன் அறிமுக உரையில் சொன்னார்கள். இந்த சேவை அமைப்பு பிரபல ஜவுளி நிறுவனமான பி.எஸ.ஆர் ஸ்தாபனத்தின் ஆதரவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பலரிடம் பல திறமைகள் இருக்கலாம், ஆனால் வெளி உலகிற்கு அந்த திறமை தெரியாமல் இருக்கலாம், அப்படிப்பட்டவர்களை இந்த அமைப்பின் மூலம் வெளி உலகிற்குத் தெரிய வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம். நோக்கம் உன்னதமான நோக்கம். ஆனால் செயல்படுத்த அதிக பொருளும், நேரமும், உழைப்பும் தேவைப்படும்.


அன்று நடந்த நிகழ்ச்சி ஒரு அவியல் சுவையுடையதாய் இருந்தது. பலதரப்பட்ட திறமையாளர்களை மேடையேற்றி அவர்களை பலவாறாக கௌரவித்தார்கள். என் நண்பருக்கு "யோகா வல்லுநர்" என்ற பட்டமும், பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியும், ஒரு பொன்னாடையும் கொடுத்தார்கள். அவர் பேசுவதற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார், ஆனால் ஏதோ காரணத்தினால் அவரைப் பேச அழைக்கவில்லை.

அந்த நிகழ்ச்சியில் கடைசியாக பல மழலைகளைக் கொண்டு ஒரு நடன நிகழ்ச்சியும் வைத்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சி மூலமாக நான் கற்றுக்கொண்ட பாடம் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்பதுதான். அங்கு எடுத்த சில படங்களை இணைத்திருக்கிறேன்.


வந்திருந்தவர்கள்.


வியாழன், 18 ஏப்ரல், 2013

நான் சைக்கிள் ஓட்டின கதை


சைக்கிள் என்றால் முழு சைக்கிள் இல்லை. அந்தக் காலத்தில் முழு சைக்கிள் என்பது என்னைப் போன்ற சின்னப் பசங்களுக்கு எட்டாக்கனி. என் சித்தப்பா ஒரு சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருந்தார். அங்கு பழைய சைக்கிள் டயர் கிடைக்கும். அதுதான் அந்தக் காலத்தில் என்னைப் போன்ற சின்னப் பசங்களுக்கு சைக்கிள்.

அந்த பழைய டயரை ஒரு குச்சியால் லாகவகமாக அடித்தால் அது உருண்டு ஓடும். அதன் கூடவே நாமும் ஓடினால் சைக்கிள் ஓட்டுவதாக எண்ணம். அப்படி கற்பனை செய்து கொள்ள வேண்டும். நம்மால் ஓடமுடிந்த அளவு வேகத்தில் அந்த டயரை ஓட்டுவது நாளாவட்டத்தில் பழக்கமாகி விடும்.

சிலர் இந்த டயரை சைக்கிள் ரிம்முடன் சேர்து ஓட்டுவார்கள். அது லக்சரி எடிஷன். எல்லோருக்கும் கிடைக்காது. தவிர அதை ஓட்டுவது கொஞ்சம் சிக்கலானது.


நொங்கு சாப்பிட்ட பிறகு மிச்சமாயிருக்கும் பனம்பழத்துண்டுகள் இரண்டை எடுத்து அவைகளை ஒரு முக்கால் அடி குச்சியால் இணைத்து, ஒரு நீண்ட குச்சி, அதன் நுனியில் ஒரு கொக்கி மாதிரி அமைப்பு, இவைகளை வைத்தும் இந்த மாதிரி ஓட்ட முடியும். சிலர் ஒரு இரும்பு வளையத்தை இந்த மாதிரி ஒரு குச்சி வைத்து ஓட்டுவார்கள். ஆனால் இரும்பு வளையம் எல்லோருக்கும் கிடைக்காது. பனம்பழம் எப்போதும் கிடைக்காது. சைக்கிள் டயர்தான் எப்போதும் சுலபமாக கிடைக்கும். ஆகவே அதுதான் பாப்புலர்.

பள்ளிக்கூடத்திற்கு இந்தச் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போக முடியாது. ஏனெனில் பார்க்கிங் பிராப்ளம். பள்ளியில் இந்த சைக்கிளை பார்க் பண்ண முடியாது. யாராவது தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக இந்த சைக்கிளில் ஒரு ரவுண்டு போய்விட்டு வந்த பிறகுதான் மற்ற வேலைகள்.

வீட்டுக்கு ஏதாவது சில்லறை சாமான்கள் வாங்குவதற்கு அந்தக் காலத்தில் சின்னப் பசங்களைத்தான் அனுப்புவார்கள். நாங்களும் சைக்கிள் விட ஒரு சான்ஸ் கிடைத்தது என்று ஆர்வத்துடன் இந்த சைக்கிளை ஓட்டிக்கோண்டு போய் அந்த சாமானை வாங்கி வருவோம். ஒரு கையில் பையை பிடித்துக்கொண்டு அடுத்த கையால் இந்த டயரை ஓட்டிக்கொண்டு வருவது ஒரு நுண்கலை.

சிலர் இந்த சைக்கிளை ஓட்டும்போது வித விதமான சவுண்டு கொடுத்துக் கொண்டு ஓட்டுவார்கள். சில சமயம் இந்த பழைய சைக்கிள் டயர், காராகவும், சில சமயம் ஏரோப்ளேன் ஆகவும் கூட மாறும். அதற்குத் தகுந்த மாதிரி வேகமும் சவுண்டும் மாறும். அவ்வப்போது பாதசாரிகளுக்கு எச்சரிக்கையாக ஹாரனும் அடிக்கவேண்டும். ஏரோப்பிளேனில் போகும்போது இந்த ஹாரன் அவசியமில்லை.

இந்த சைக்கிள் ஓட்டும்போது அனுபவித்த ஆனந்தத்தை, பிற்காலத்தில் நிஜ சைக்கிள் ஓட்டினபோதோ அல்லது ஸ்கூட்டர் ஓட்டினபோதோ அல்லது கார் ஓட்டினபோதோ கூட அனுபவித்ததில்லை. இளம் வயது அனுபவங்களே அலாதியானவை.

இப்போது சிறுவர்கள் இந்த மாதிரி சைக்கிள் ஓட்டி நான் பார்த்ததில்லை. வாழ்க்கையில் எத்தனை ஆனந்தங்களை இன்றைய நம் சிறுவர்கள் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்க மனது வேதனைப்படுகின்றது.

                                 

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

என்னைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்கலாமா?

"ஆமாம். ..இப்போது உங்களுக்கு கோந்து எதற்கு.?"

என்னுடைய கோந்து பதிவின் பின்னூட்டத்தில் என் நெருங்கிய நண்பர் இந்த மாதிரி கேட்டு விட்டார். அவர் என்னை இந்தக் கேள்வி கேட்டதில் வருத்தமில்லை. ஆனால் அவர் என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் இந்தப் பதிவு எழுதுகிறேன்.

மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் என்று உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றைச் சொல்லுவார்கள். ஆனால் மனிதனுக்கு இந்த அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாலும் சில தேவைகள் இருக்கின்றன என்பதை அறிவாளிகள் அறிவார்கள். (நான் ஒரு அறிவாளி என்பதை எப்படி சூசகமாகச் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.) அவைகள்தான் வாழ்க்கையை முழுமையாக்குகின்றன.

 மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது,  ஆனால் எனக்கு கீழ்க்கண்ட ஐட்டங்கள் எனது டேபிளில் இல்லாவிட்டால் என்னால் உயிர் வாழ முடியாது. அதில் முக்கியமானது கோந்து. மற்றவை பற்றி முன்பே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். இருந்தாலும் அந்தப் பதிவை என்னாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அந்த லிஸ்ட்டை கடைசியில் கொடுத்திருக்கிறேன்.

கோந்து வேண்டியதற்கான காரணங்களை ஒரு பதிவில் சொல்லி முடியாது. ஆனாலும் முயற்சிக்கிறேன்.

மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவன் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களே. கட்டுப்பாட்டுடன் வாழும் வாழ்க்கையே ஒழுக்கமான வாழ்க்கை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்கள் மேஜையில் நீங்கள் வைத்த பொருட்கள் அப்படி அப்படியே, நீங்கள் வைத்த மாதிரியே இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? நீங்கள்தான் ஒழுக்கத்தின் சிகரம்.

மேஜையில் நேற்று ஆபீசிலிருந்து வந்தவுடன் வைத்த சாவியை, மறுநாள் காலை வீடு முழுவதும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து தேடுகிறீர்களா, நீங்கள் கொஞ்சம் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் திருத்தவேண்டும்.

நிற்க, கோந்துவிற்கு வருவோம். நீங்கள் ஒரு விடுமுறை நாளில் வீட்டில் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் புத்தகம் ஒன்றைப் படிக்க எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கம் பைண்டிங் விட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலானவர்கள் என்ன செய்வார்கள். அந்த குறையைக் கண்டுகொள்ளாமல் படிப்பார்கள்.

என்னால் அப்படி இருக்க முடியாது. அந்த விட்டுப்போன பைண்டிங்கை கோந்து போட்டு ஒட்டி, அது காய்ந்த பிறகுதான் அந்தப் புத்தகத்தைப் படிப்பேன். இது கொஞ்சம் ஓவராகத் தெரிந்தால், நீங்கள் இத்துடன் நிறுத்தி விட்டு வேறு பதிவைப் பார்க்கப் போகலாம்.

அடுத்து நீங்கள் டைரி எழுதும் பழக்கம் உள்ளவரானால் இந்த அனுபவம் உங்களுக்கு வந்திருக்கும். அதாவது ஒரு தேதியில் உங்கள் மனைவி பேரில் உள்ள கோபத்தை நேரில் காட்ட முடியாதாகையால், டைரியில் எழுதி வைப்பீர்கள். அந்தக்கோபம் இரண்டோரு நாளில் தணிந்த பிறகு அந்தப் பக்கத்தை மறைக்க வேண்டி வரும். இல்லாவிட்டால் அது டைம்பாம்ப் மாதிரி என்றைக்காவது ஒரு நாள் உங்கள் சகதர்மிணியில் கண்ணில் பட்டு வெடித்தால் உங்களால் அதை எதிர்கொள்ள முடியாது.

என்ன செய்யலாம்? அந்தப் பக்கத்தை கிழித்தீர்களானால் டைரியின் பைண்டிங்க் நெகிழ்ந்து விடும். இங்குதான் கோந்தின் அவசியம் தெரியும். அந்த வேண்டாத பக்கத்தில் கோந்தைத் தடவி, டைரியை மூடி வைத்து விட்டீர்களானால் இரண்டு நாட்களில் அந்தப் பக்கம் காணாமல் போய்விடும். நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.

தபால் எழுதினால் அந்தக் கவரை ஒட்ட, பிறகு ஸ்டாம்ப் ஒட்ட பலர் சமையலறை நோக்கிப் போவதைப் பார்த்திருக்கிறேன். எதற்கு? நாலு சோற்றுப் பருக்கை வாங்கிக்கொண்டு வந்து கவரையும் ஸ்டாம்ப்பையும் ஒட்டத்தான். இதுவாவது பரவாயில்லை. பலர் அந்தக் கவரையும் ஸ்டாம்ப்பையும் நாக்கால் எச்சில்படுத்தி ஒட்டுவார்கள். அவர்களுக்கெல்லாம் சித்திரகுப்தன் தனி தண்டனை வைத்திருக்கிறான்.

எல்லோரும் கேஸ் உபயோகிக்கிறோம். ஒரு சிலிண்டர் எத்தனை நாள் உபயோகித்தோம் என்பதில் அந்த சிலிண்டரை மாற்றும்போது ஒரு வாக்குவாதம் நடக்கும். புது சிலிண்டரை மாற்றும்பொழுது தினக் கேலண்டரில் இருந்து அன்றைய தேதி தாளைக் கிழித்து சிலிண்டரில் கோந்து போட்டு ஒட்டிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது.

கடிகாரங்களில் செல் மாற்றும்போது, இப்போதுதானே மாற்றினேன், அதற்குள் தீர்ந்துவிட்டதா என்று புலம்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். புது செல் போடும்போது ஒரு சிறிய பேப்பரில் அந்த தேதியை எழுதி அந்த செல்லில் ஒட்டிவிட்டால் போதுமே. எவ்வளவு நாள் உழைத்தது என்று செல் மாற்றும்போது சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

லைப்ரரியில் இருந்து லவட்டிக்கொண்டு வந்த புத்தகம், நண்பர்களிடமிருந்து வாங்கி வந்த புத்தகம் இவை எல்லாம் நம்முடையதே. இருந்தாலும் அதில் லைப்ரரி சீல் அல்லது நண்பர்களின் கையெழுத்து இருக்கும். அவற்றின் மேல் உங்கள் பெயர் எழுதின ஒரு துண்டுக் காகிதத்தை கோந்து போட்டு ஒட்டி விட்டால் பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் உங்கள் நணபர் எப்பொழுதாவது உங்கள் வீட்டுக்கு வந்து அந்தப் புத்தகங்களைப் பார்த்தால் திருப்பி எடுத்துக்கொண்டு போய்விடுவார்.

இப்படி எவ்வளவோ விஷயங்களுக்கு உபயோகப்படும் கோந்தை என் நண்பர் துச்சமாக எடை போட்டுவிட்டாரே என்று நினைக்கும்போது நெஞ்சு வெடித்துவிடும்போல் இருக்கிறது. கோந்து இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கக் கூட என்னால் இயலவில்லை.

ஒருவர் வாழ்க்கையில் இன்றியமையாதவை:

பென்சில்
பென்சில் ஷார்ப்னர்
ரப்பர்
குண்டூசி
ஜெம் கிளிப்
பரீட்சை கிளிப்
செல்லோடேப் + டிஸ்பென்சர்
கலர் பென்சில்கள்
துண்டுக் காகித பேட்கள்
டபுள் பன்ச்
சிங்கிள் பன்ஞ்
பேப்பர் கத்தி
சாதா கத்தி
கத்தரிக்கோல்
டாகுமென்ட் பைல்கள்
பல கலர்களில் பால்பாயின்ட் பேனா
பவுன்டன் பேனா
பவுன்டன் பேனா இங்க்
ரப்பர் ஸ்டாம்ப் பேட்
   "              "  "         இங்க்
ஊசி, நூல் - பல சைஸ்களில்
ரப்பர் பேண்ட்
காது குடையும் பட்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கனம் பொருந்திய சர்க்கார் வழிமுறைகள்



Penny wise, Pound foolish

இந்த ஆங்கில பழமொழி அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். “கடுகு போறதைப் பாத்துட்டு பூசனிக்காயை கோட்டை விட்டானாம்” என்பது ஏறக்குறைய இந்தப் பழமொழிக்கு சரியான தமிழ் பழிமொழி.
நமது அரசாங்க சட்டதிட்டங்கள் இந்த பழமொழிகளை நிரூபிக்கவே உண்டானவை. நான் சர்வீசில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம்.

“சர்க்கார்” வேலைகள் காகிதத்தால்தான் நடக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். பேப்பரும் பேப்பர் சம்பந்தமான பொருட்களும் இல்லாவிட்டால் சர்க்கார் வேலை ஸ்தம்பித்துவிடும். அந்தக் காலத்து சென்னை ராஜதானியின் விஸ்தீரணம் அநேகருக்குத் தெரியாது. ஆந்திராவிலுள்ள விஜயநகரத்திலிருந்து இன்றைய கர்னாடக மாநிலம் மங்களூர் வரை பரந்திருந்தது. ஏறக்குறைய அண்ணா கனவு கண்ட திராவிட நாடு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த ராஜதானியில் எவ்வளவு அரசு அலுவலகங்கள் இருந்திருக்கும்? அவைகளுக்கு பேப்பர் சம்பந்தமான பொருட்கள் எவ்வளவு தேவைப்பட்டிருக்கும்? இதை அந்தந்த ஆபீஸ்காரர்களே உள்ளூரில் வாங்கி உபயோகப்படுத்தட்டும் என்று விட்டிருக்கலாம். ஆனால் அப்படி தலைக்குத்தலை நாட்டாண்மை பண்ண விட்டால் தலைநகரிலிருக்கும் தலைமை ஆபீசர்களை இந்த குட்டி தேவதைகள் மதிக்குமா?

ஆகவே ஒரு அதி புத்திசிகாமணி என்ன செய்தான் என்றால், ராஜதானி முழுவதும் இவ்வளவு அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. அவைகளுக்கு வருடத்திற்கு இவ்வளவு காகிதமும், காகிதம் சம்பந்தமான பொருட்களும் தேவைப்படுகின்றன. அவைகளை மொத்தமாக, தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கினால் விலை சலீசாக இருக்கும். இங்கு தலைநகரில் அவைகளை வாங்கி வைத்துக்கொண்டு, அந்தந்த அலுவலகங்களுக்குத் தேவையானவற்றை அவ்வப்போது அனுப்பி விடலாம். மேன்மை தங்கிய சர்க்காருக்கு இவ்வளவு பணம் மிச்சமாகும் என்று கணக்குப்போட்டு ஒரு திட்டம் தீட்டி, அதை அந்தக் காலத்து (நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம்) தலைமை அலுவலருக்கு (கவர்னர்) அனுப்பினான்.

அவரும் இதைப் பார்த்து, “பேஷ், பேஷ், நல்ல யோசனையாயிருக்கிறது, உடனடியாக அமுல்படுத்துங்கள்” என்று உத்திரவு போட்டுவிட்டார். இப்படித்தான் Controller of Stationery and Printing என்ற அரசுத்துறை உருவாகியது. இதன் முக்கிய வேலை, அரசு அலுவலகங்களுக்குத் தேவையான காகிதம் மற்றும் காகித சம்பந்தமான பொருட்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு மற்ற இடங்களில் இருக்கும் அலுவலகங்களுக்குத் தேவையானவற்றை விநியோகிப்பது.

திட்டம் அருமையான திட்டம்தான். நடைமுறைப்படுத்தும்போதுதான் சிக்கல்கள் உருவாகின்றன. நாளாவட்டத்தில் இப்படிப்பட்ட சிக்கல்களை தீர்க்க பல சட்டதிட்டங்களை உருவாக்கினார்கள். அதில் முக்கியமானது, அரசு அலுவலகங்கள் வருடத்திற்கு ஒரு முறைதான் தங்களுக்கு வேண்டிய பொருட்களுக்கு கேட்பு (Indent) அனுப்பலாம். இதனால் தலைமை அலுவலகம் மேலும் சிறப்பாக பணியாற்ற முடியும் என்று ஒரு சட்டம் வகுக்கப்பட்டது. அதாவது தலைமை அலுவலகத்தில் வேலைப்பளுவை கணிசமாகக் குறைத்துவிட்டார்கள்.

இது தவிர, அலுவலகங்களில் அடிக்கடி உபயோகமாகும் கடிதங்களை வகைப் படுத்தி, அவைகளை படிவம் (Form) வடிவில் முறைப்படுத்ததி வைத்துக்கொண்டால் அலுவலகங்களில் வேலை கணிசமாகக் குறையும் என்று கண்டுபிடித்து அந்த மாதிரி படிவங்கள் தயார் செய்தார்கள். இந்த மாதிரி படிவங்கள் நூற்றுக்கணக்கில் பெருகவே, அவைகளை சடுதியாக அடையாளம் காண, அவைகளுக்கு நெம்பர்கள் கொடுத்தார்கள்.

கிளை அலுவலகங்கள் இத்தனாம் நெம்பர் படிவம் இவ்வளவு எண்ணிக்கை தேவை என்றால், அவ்வளவு எண்ணிக்கையில் படிவங்கள் அனுப்புவார்கள். நாளாவட்டத்தில் புது படிவங்கள் உருவாகின, பல பழைய படிவங்களுக்குத் தேவையில்லாமல் போயின. இதனால் படிவங்களுக்கு கொடுக்கப்பட்ட எண்கள் தாறுமாறாக ஆகிவிட்டன. இதை ஒழுங்குபடுத்துவதற்காக அனைத்து படிவங்களுக்கும் புது எண்கள் கொடுக்கப்பட்டன. ஒரு ஜாக்கிரதைக்காக பழைய எண்களையும் வைத்திருந்தார்கள். ஆகவே ஒவ்வொரு படிவத்திலும் பழைய எண், புது எண் ஆகிய இரண்டும் அச்சிடப்பட்டிருக்கும்.

நான் வேலை பார்த்த அலுவலகத்தில் இரண்டு படிவங்கள் தேவைப்பட்டன. அந்த இரண்டு படிவங்களும் ஒவ்வொரு காகிதத்தில் அச்சிடப்பட்டவை. ஒவ்வொன்றிலும் 200 பிரதிகள் தேவைப்பட்டன. அதற்கான கேட்பு படிவத்தை அனுப்பியிருந்தோம். அந்தக் கேட்பு மனுவில் படிவ எண் (புதிது) குறிப்பிட்டு அனுப்பியிருந்தோம்.

அந்த எண்களைக் கொண்ட பழைய படிவம் 200 தாள்களைக்கொண்ட ஒரு பெரிய லெட்ஜர். எங்கள் கேட்பு படிவத்தை நிர்வகித்த ஒரு புத்திசாலி, நாங்கள் கொடுத்த புது எண் படிவத்திற்கு பதிலாக, பழைய எண் படிவத்தை அனுப்ப ஏற்பாடு செய்து விட்டான். அதாவது நாங்கள் கேட்ட ஒரு தாள் படிவம் 200+200 க்கு பதிலாக 200 தாள்கள் கொண்ட லெட்ஜர்கள் 200 + 200 எண்ணிக்கை அனுப்பிவிட்டான்.

பத்துப் பத்து லெட்ஜர்களை ஒரு பண்டிலாக கட்டி, மொத்தம் 40 பண்டில்களை ரயில்வே பார்சலில் ஏற்றி அனுப்பிவிட்டு, அந்த ரசீதை (To Pay) எங்கள் ஆபீசுக்கு அனுப்பி விட்டான். அதாவது பார்சல் சார்ஜ் நாங்கள் கட்டி டெலிவரி எடுத்துக்கொள்ளவேண்டும். அரசு அலுவலர்கள் தங்கள் மூளையை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். அந்த லெட்ஜர்கள் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சின்ன ஆபீசுக்குத் தேவைப்படுமா என்று ஒரு நொடி கூட அவன் சிந்திக்கவில்லை.

இவ்வளவு எண்ணிக்கை பார்சலில் வருமாறு நாம் என்ன பொருட்கள் கேட்டோம் என்று நானும் என் மேல் ஆபீசரும் எங்கள் மூளையைக் கசக்கி யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை. ரயில்வே ஸடேஷனிலிருந்து பார்சல்கள் வந்து விட்டன, உடனே டெலிவரி எடுத்துக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் டெமரேஜ் போடுவோம் என்று போன் பண்ணிவிட்டார்கள்.

சர்க்கார் சட்டம் என்னவென்றால் பார்சல் கட்டணம் எவ்வளவானாலும் அதை அரசுப் பணத்திலிருந்து செலவு செய்யலாம், ஆனால் டெமரேஜ் ஒரு ரூபாய் ஆனாலும் அதை சம்பந்தப்பட்ட அலுவலர் தன் சொந்தப் பணத்திலிருந்துதான் செலவு செய்யவேண்டும். தலைமை அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு எழுதி, பதில் வருவதற்குள் ஏகப்பட்ட ரூபாய் டெமரேஜ் ஆகிவிடும். ஆகவே அந்தப் பார்சல்களைப் பணம் கட்டி எடுத்து, ஒரு இரட்டை மாட்டுவண்டி வைத்து ஆபீசுக்கு கொண்டு வந்தோம்.

ஒரு பார்சலைப்பிரித்து ஆராய்ந்ததில், படிவ எண் கோளாறினால் இப்படி நடந்திருக்கிறது என்று தெரிந்தது. சரி, இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம் என்று, நடந்த சமாசாரங்களை எல்லாம் விரிவாக தலைமை அலுவலகத்திற்கு எழுதி, இந்தப் படிவங்கள் எங்களுக்கு உபயோகமில்லாதவை, ஆதலால் அவைகளை திருப்பி அனுப்பி வைக்கட்டுமா என்று கேட்டோம்.

அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், நாங்கள் முதலில் கேட்ட ஒரு தாள் படிவங்களில் 200 + 200 அனுப்பிவிட்டு, அந்த மாறிப்போன படிவங்களை, படிவங்களா அவை, லெட்ஜர்கள், அங்கேயே வைத்திருங்கள், அவைகளை யாராவது கேட்கும்போது உங்களுக்குத் தெரிவிக்கிறோம், அங்கிருந்து நேராக அவர்களுக்குப் பார்சல் செய்து விடுங்கள், இப்போது அவைகளை எங்களுக்குத் திருப்பி அனுப்பினால் வீண் செலவுகள் வரும் என்று பதில் அனுப்பிவிட்டார்கள்.

தலைமை அலுவலகத்தில் ஒரு உத்திரவு போட்டுவிட்டால் அதை நிறைவேற்றத்தான் வேண்டுமே தவிர, அதை எதிர்த்து பதில் கேள்விகள் கேட்கக் கூடாது என்று ஒரு எழுதப்படாத சட்டம் அந்த்க காலத்தில் அமுலிலிருந்தது. வேறு வழியில்லை. அந்தப் பார்சல்களை குடோனில் ஒரு மூலையில் போட்டுவிட்டு, அதைக் கேட்டு யாராவது கேட்பு மனு அனுப்பமாட்டார்களா என்று சாதக பட்சி மழைக்காக காத்திருப்பது போல் காத்துக்கொண்டிருந்தோம்.

நான் அந்த ஆபீசில் இருந்த மூன்று வருட காலத்தில் ஒரு பயலும் அந்த லெட்ஜர்களைக் கேட்கவில்லை. இப்போது அந்த லெட்ஜர்களை அநேகமாக கரையான்கள் தின்று தீர்த்திருக்கும் என்று நம்புகிறேன். இப்படியாக சர்க்கார் பணம் சேமிக்கப்படுகிறது.