செவ்வாய், 20 நவம்பர், 2012

இருசக்கர வாகனங்களும் விபத்துகளும்.

செய்தித்தாள்களைப் படித்தால் அனுதினமும் தவறாமல் கண்ணில் படும் செய்தி என்னவென்றால் இரு சக்கர வாகன விபத்துகள்தான். இரண்டு அல்லது மூன்று விபத்துகள் தவறாமல் நடக்கின்றன.

நான் ரோட்டில் போகும்போது இந்த இருசக்கர வாகன ஓட்டிகள் எவ்வாறு ஓட்டுகிறார்கள், விபத்துகள் ஏன் நடக்கின்றன என்று கவனிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அப்படிக் கவனித்ததில் எனக்குப்பட்ட சில குறிப்புகளை இங்கு கொடுக்கிறேன்.

கல்லூரி செல்லும் 21 வயது முதல் 24 வயது வரை உள்ள மாணவர்கள் இரவு 9 மணிக்கு மேல்தான் ரோட்டிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு அப்போது ரோடு "ரேஸ் டிராக்" மாதிரி தெரியும் போல. அவர்கள் வைத்திருக்கும் வாகனம் அதிக பட்சமாக  என்ன வேகத்தில் போகும் என்று டெஸ்ட் செய்வார்கள். கூடவே போட்டிக்கு இன்னும் இரண்டு வண்டிகள் இருக்கும். ஒவ்வொரு வண்டியிலும் மூன்று மூன்று பேர் இருப்பார்கள். பாம்புகள் நெளிந்து ஓடுகிற மாதிரிதான் இவர்கள் வண்டி ஓட்டுவார்கள். இவர்கள் வண்டிகளெல்லாம் நேர்க்கோட்டில் போகாது என்று நினைக்கிறேன்.

போதாததிற்கு எல்லோரும் சோமபானம் அருந்தியிருப்பார்கள். ஹெல்மட் போடமாட்டார்கள். விபத்திற்கு வேறு காரணங்கள் வேண்டுமா?

அடுத்த ஜாதி, இருசக்கர வண்டி எவ்வளவு பேர்களைத் தாங்கும் என்று டெஸ்ட் செய்பவர்கள். இவர்கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். கல்யாணம் ஆகி  இரண்டு குழந்தைகள் இருக்கும். நான்கு பேரும் வண்டியில் போகும்போது வண்டியின் சக்தி குறையும். பேலன்ஸ் கிடைக்காது. ஆனால் அதைக் கவனிக்காமல் இவர்கள் வண்டி ஓட்டுவார்கள். பெரிய வண்டிகளில் மோதி விபத்து ஏற்படுத்துவார்கள்.

இன்னொரு ஜாதி. ரோட்டின் ஓரத்தில் போய்க் கொண்டிருப்பார்கள். சைடு மிர்ரரைக் கவனிக்க மாட்டார்கள். பின்னால் ஏதாவது பெரிய வண்டி வந்து கொண்டிருக்கும். அதைப் போக விடமாட்டார்கள். அந்த வண்டி மகவும் பக்கத்தில் வந்த பிறகு பயந்து போய் வேகத்தைக் குறைப்பார்கள். பெரிய வண்டியின் இடது மூலை இரு சக்கர வாகனத்தை லேசாகத் தொடும். வாகனம் கவிழ்ந்து வாகனத்தில் செல்பவர்கள் தலை குப்பர விழுவார்கள். தலையில் அடிபட்டு பரலோகம் போவார்கள்.

அப்புறம் இந்த செல்போன்கள் இருக்கிறதே, அதை யமதர்மன்தான் கண்டுபிடித்து இந்த உலகிற்கு அனுப்பியிருப்பான் என்று நம்புகிறேன். செல்போன் பேசும்போது புற உலகில் என்ன நடக்கிறது என்று இவர்களுக்குத் தெரியுமா?

இந்த மாதிரி விபத்துகள் நடந்த பிறகு அவர்களின் தாய் தகப்பனின் நிலை எப்படியிருக்கும் என்று இவர்கள் ஒரு நொடியாவது சிந்தித்தால் இப்படி விபத்துகள் நடக்குமா?

இவர்களெல்லாம் எப்போது திருந்துவார்களோ?

(படங்கள் கூகுள் உதவி)

13 கருத்துகள்:

  1. சென்னையில் மாணவர்கள் ரேஸ் விடுவார்கள் பாருங்கள். ஹெவி ட்ராபிக் நடுவே ரேஸ் விடுவதுதான் சாகசம் என்று, அதிலும் பெட் வைத்துக் கொண்டு அநியாயம் செய்வார்கள். ரோடில் நடந்து செல்லும் அப்பாவிகள் எத்தனையோ பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் கேரள வாலிபரின் சாகசப் பயணம் படித்தீர்கள்தானே?!

    பதிலளிநீக்கு
  2. நன்றாக கவனித்திருக்கிறீர்கள்.இவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்கிறீர்களே!

    பதிலளிநீக்கு
  3. மனித உயிர்களுக்கு மதிப்பு (அவரவர் தன் மேல் வைத்திருக்கும் மதிப்பு) எப்போதே போய் விட்டது...
    tm4

    பதிலளிநீக்கு
  4. ‘இளங்கன்று பயமறியாது’ என்ற பழமொழியை இளைஞர்கள்தான் மெய்ப்பிக்கிறார்கள் என்றால் மற்றவர்கள் ஏன் வாகனம் ஓட்டும்போது சாலை விதிகளை மதிப்பதில்லை என்பது இன்னும் விளங்காத புதிராக இருக்கிறது.நீங்கள் முத்தாய்ப்பாய் சொன்னதுபோல் ‘இவர்களெல்லாம் எப்போது திருந்துவார்களோ?’ என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. செல்போனில் பேசிக்கொண்டே சாலைகளைக் கடக்கும் மடையர்களையும் ரோட்டில் நடக்கும் பிகர்களைப் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டும் விடலைப் பசங்களையும் விட்டுவிட்டீர்களே... நல்ல பதிவு... நன்றி...

    பதிலளிநீக்கு
  6. ஐயா, வண்டியில் போகும்போது செல்பேசியில் அவுட்கோயிங் கால் டயல் செய்தவாறு, ஃபோனில் ஒரு கை, வண்டியில் ஒரு கை, ஃபோனில் ஒரு கண், சாலையில் ஒரு கண் என்று செல்பவர்களை என்ன சொல்கிறீர்கள்?

    சரவணன்

    பதிலளிநீக்கு
  7. நன்றாகச் சொன்னீர்கள்.

    விபத்துக்கள் பற்றிய விழிப்பு குறைவாகவே இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  8. நீங்க சொல்லியுள்ளது அனைத்துமே மிகச்சரியானவை.


    என்று தான் திருந்துவார்களோ?

    பதிலளிநீக்கு
  9. ஐயா என்ன ஒரு கருத்து பதிவு.வகை வகையா ,ரகம் ரகமா தேர்ந்தெடுத்து ஒரு பதிவை போட்டு இருக்கிறீர்கள்.குசும்பு பதிவெழுத தங்களால் மட்டுமே முடியும்.அப்பறம் ஐயா ரோட்டுலா போய்கிட்டே இருக்கும் போது முன் வண்டி காரன் சடன் ப்ரேக் மாறி சடன் இன்டிகேட்டர் போட்டு திரும்புவாங்கே..போய் இடித்து விட்டோம்னா சட்டம் பேசு வாங்கே.. நான்தான் இன்டிகேட்டர் போட்டுதானே வந்தேன் உன் மேல தான் தப்புன்னு ! என்ன செய்ய சொல்லுரிங்க ஐயா?

    திரும்புற இடத்திற்கு முன்னலெயே இன்டிகேட்டர் போடனும்னு ஏன் தோனமாட்ங்குதுனே தெரியல்லை.

    பதிலளிநீக்கு
  10. //கல்லூரி செல்லும் 21 வயது முதல் 24 வயது வரை உள்ள மாணவர்கள் இரவு 9 மணிக்கு மேல்தான் ரோட்டிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு அப்போது ரோடு "ரேஸ் டிராக்" மாதிரி தெரியும் போல. அவர்கள் வைத்திருக்கும் வாகனம் அதிக பட்சமாக என்ன வேகத்தில் போகும் என்று டெஸ்ட் செய்வார்கள். கூடவே போட்டிக்கு இன்னும் இரண்டு வண்டிகள் இருக்கும். ஒவ்வொரு வண்டியிலும் மூன்று மூன்று பேர் இருப்பார்கள். பாம்புகள் நெளிந்து ஓடுகிற மாதிரிதான் இவர்கள் வண்டி ஓட்டுவார்கள். இவர்கள் வண்டிகளெல்லாம் நேர்க்கோட்டில் போகாது என்று நினைக்கிறேன்.//

    ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் , இது பற்றி விவாதிக்கப்பட்டது. இளைஞர்கள் சர்வசாதாரணமாக தங்களுக்கு கெத்துக்காக இதைச் செய்வதாகக் கூறினார்கள்;
    என்ன? கெத்து தன்,மற்றவர் உயிருடனா? எதுவுமே புரியவில்லை.
    அடுத்தவரையும்,சட்டங்களையும் மதிக்கும் மனநிலையை இளமையிலே உருவாக வேண்டும்.

    பதிலளிநீக்கு

  11. உண்மைதான், அதிகமாக இளைஞர்கள்தான் இதுபோல் விபத்துகளில் பாதிக்கப்படுகிறார்கள்.உண்மையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு