வியாழன், 19 செப்டம்பர், 2013

ரூபாயின் மதிப்பு ஏன் குறைகிறது?


நான் பொருளாதார நிபுணன் இல்லை. இருந்தாலும் ஓரளவிற்கு பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்திய ரூபாயின் மதிப்பு சமீப காலத்தில் மிகவும் குறைந்துள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஏன், எதனால் என்பது பலருக்குத் தெரியாது.

ஒரு குடும்பம் செழிப்பாக இருக்கிறது என்று எதை வைத்து சொல்கிறோம்? அந்தக் குடும்பத்தில் எல்லோரும் உழைக்கிறார்கள். வருமானம் ஈட்டுகிறார்கள். சிக்கனமாகச் செலவு செய்து மிச்சம் பிடிக்கிறார்கள். பகட்டுக்காக எதுவும் செய்வதில்லை. மீதியாகும் பணத்தை நல்ல முதலீடுகளில் போடுகிறார்கள். கடன் எதுவுமில்லை.

இன்னொரு குடும்பம். பரம்பரைப் பணக்காரர்கள். ஆனால் இப்போது அவர்கள் சொத்துகள் பலவாறாகச் சிதறிக்கிடக்கின்றன. அவைகளிலிருந்து வருமானம் மிகக் குறைவாகவே வருகிறது. குடும்பத்தில் யாரும் வேலைக்குப் போவதில்லை. இன்னொருவரிடம் வேலைக்குப் போய் கை நீட்டி சம்பளம் வாங்குவது கேவலம் என்ற எண்ணம் கொண்டவர்கள். பரம்பரை பகட்டை விடமுடியவில்லை. கடன் வாங்கி செலவு செய்கிறார்கள்.

இதில் எந்தக் குடும்பம் உயர்ந்த குடும்பம்? நான் சொல்லவேண்டியதில்லை.

நாடுகளும் இப்படித்தான். நாட்டில் இருக்கும் எல்லோரும் உழைக்கவேண்டும். உற்பத்தி பெருகவேண்டும். அப்படி பெருகிய உற்பத்தியை வெளிநாடுகளில் சந்தைப் படுத்த வேண்டும். அந்நிய செலாவணி சேரவேண்டும். உள் நாட்டில் கட்டமைப்புகள் வலுவாக இருக்கவேண்டும். தனி மனிதன் மற்றும் பெரிய ஸ்தாபனங்கள் தங்களுடைய பொருளாதாரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும். செல்வம் வீண் போகக் கூடாது. அதை எப்பொழுதும் பயனுள்ள வழிகளிலேயே பயன்படுத்த வேண்டும்.

கடன் வாங்கு முன் அதை திருப்பிக் கட்டமுடியுமா என்று யோசித்து கடன் வாங்கவேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் உபயோகிக்கும் பொருளின் மதிப்பை உணர்ந்து உபயோகிக்கவேண்டும்.

இது எப்படி சாத்தியமாகும்? அந்தந்த நாட்டின் அரசுக் கொள்கைகளே இந்த நடைமுறையை சாத்தியமாக்கும். நம் நாட்டின் அரசாங்க கொள்கைகள் எதை சாதிக்கின்றன? இலவசங்கள் மூலம் சோம்பேறிகளை வளர்க்கிறது. லஞ்சத்தின் மூலம் செல்வம் வீணாகப் போக அனுமதிக்கிறது. கடன் வாங்கி ஆடம்பரம் செய்கிறோம். நாடு முன்னேறுவதற்கான எந்த திட்டத்தையும் ஒழுங்காக நிர்வகிப்பதில்லை.

நாடு சறுக்கிக்கொண்டு இருக்கிறது என்று உலக நாடுகளுக்கெல்லாம் தெரிகிறது. அப்புறம் நம் நாட்டிற்கு உலக சந்தையில் என்ன மரியாதை இருக்கும்? ரூபாயின் மதிப்பு குறையாமல் என்ன செய்யும்?

12 கருத்துகள்:

  1. இந்தப் பதிவையும் பாருங்கள்.

    http://vitrustu.blogspot.in/2013/09/blog-post_18.html

    50 சதம் மானியத்துடன் வங்கிக்கடன், எந்த உத்தரவாதம் இல்லாமல் வங்கிக் கடன் நாங்கள் வங்கித் தருகின்றோம், எங்கள் அல்லது வீட்டிலியே இருங்க உங்களைத் தேடி வங்கிக் கடன் கடன் இப்படி விதம் விதமாய் கடன் வாங்கித் தருகின்றோம் என்று தமிழகத்தில் அதுவும் மகளிர் குழுக்களை மையமாக வைத்து ஒரு மெகா மோசடி தமிழகத்தில் ஓசையின்றி நடக்கிறது இதில் தாதாக்களின் கைகள் மூலம் காவல்துறை ஆசியும் கிடைப்பதால் துணிச்சலுடன் தோழில் ஜோராக நடந்து வருகின்றது.

    பதிலளிநீக்கு
  2. நாட்டில் இருக்கும் எல்லோரும் உழைக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  3. கடன் வாங்கு முன் அதை திருப்பிக் கட்டமுடியுமா என்று யோசித்து கடன் வாங்கவேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் உபயோகிக்கும் பொருளின் மதிப்பை உணர்ந்து உபயோகிக்கவேண்டும்.

    பொறுப்பான பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
  4. ரூபாயின் மதிப்பு குறைவதில் ஆளும் கட்சி, எதிர்கட்சி ஏன் பொதுமக்களாகிய நமக்கும் கூட பெரும் பங்கு உண்டு. பெட்ரோல் இறக்குமதி குறைக்கப்படவேண்டிய ஒன்று. அதற்க்கு அரசு சில கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும். எத்தனால் கலந்து விற்றால் ஓரளவிற்க்கு சமாளிக்கலாம். ஆனால் இது குறித்து ஆளும் கட்சி, எதிர்கட்சி எவருமே பேச மாட்டேனென்பது ஏன்? அடுத்து தங்கம்? அடுத்து பல்வேறு சலுகைகளுடன் உள்ளே வந்து நம் நாட்டு சொத்தை கபளீகரம் செய்யும் வெளிநாட்டு கம்பெனிகள். டாலர் மயக்கம் நமக்கு போக வேண்டும். பல துணிச்சலான நடவடிக்கைகள் தேவை! எந்த எதிர்ப்பையும் சட்டை செய்யாது அதிரடியாக செய்ய வேண்டும். இதெல்லாம் இந்தியாவில் முடியுமா?

    பதிலளிநீக்கு
  5. ஐயா! மிகவும் தெளிவாக அனைவரும் எளிமையாக அறிந்து கொள்ள தங்கள் பதிவு உதவும் என்பதில் ஏதும் ஐயமில்லை!

    பதிலளிநீக்கு
  6. ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கான காரணங்கள் பல. நீங்கள் கூறியதும் அவற்றில் ஒன்று. கடன் வாங்குவதில் தப்பில்லை. ஆனால் வாங்கிய கடனை தனி மனிதனாகட்டும் அல்லது ஒரு நாடாகட்டும், வீண் செலவு செய்து அதை விரயமாக்காமல், பொருட்களை உற்பத்திசெய்ய உபயோகித்தாலே வீடும் நாடும் முன்னேறும். தேவையானவற்றைவை மட்டும் இறக்குமதி செய்துவிட்டு ஏற்றுமதியை அதிகரித்தாலே போதும் தற்போதைய நிலை மாறும்.

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் கூறியிருப்பது மிக, மிக, அடிப்படையான கருத்துக்கள். இந்த விவகாரம் அத்தனை எளிதானதும் அல்ல, அடிப்படையானதும் அல்ல. இருப்பினும் உங்களால் முடிந்த அளவுக்கு கூறியிருக்கிறீர்கள். மேலும் நீங்கள் துவக்கத்திலேயே நான் ஒரு பொருளாதார நிபுணன் அல்ல என்று கூறிவிட்டதால் மேலே சொல்ல ஒன்றுமில்லை.

    பதிலளிநீக்கு
  8. சரியாக சொன்னீர்கள்! சோம்பேறிகளை வளர்த்தால் நாடு எங்கே உருப்படும்?

    பதிலளிநீக்கு

  9. காரணங்கள் பல இருந்தாலும் அவற்றை எதிர்கொள்வதில் பல் வேறு அபிப்பிராயங்கள். . பெட்ரோல் விலை ஏறினாலும் நடக்கவோ பொது வாகனத்தை உபயோகிக்கவோ பலரும் முன் வருவதில்லை.

    பதிலளிநீக்கு
  10. கடன் வாங்கு முன் அதை திருப்பிக் கட்டமுடியுமா என்று யோசித்து கடன் வாங்கவேண்டும்.

    பதிலளிநீக்கு