செவ்வாய், 17 மார்ச், 2015

வாழைக்காய் வடை

                                            
உளுந்து வடை தெரியும், மசால் வடை தெரியும், இது என்னங்க வாழைக்காய் வடை, வாழைக்காய் மாதிரி வடையா என்று குழப்பிக் கொள்ளவேண்டாம். இங்கு கொடுத்துள்ள குறிப்புகளைப் படித்து அதே மாதிரி செய்து சாப்பிடவும். (அம்மா செய்ய ஐயா சாப்பிடுவார். ஆளுக்கு ஒரு வேலை) அப்புறம் எனக்கு "சமையல் சக்கரவர்த்தி" என்னும் பட்டமே கொடுத்து விடுவீர்கள்.

போனவாரம் என் சம்பந்தி தோட்டத்திற்குப் போயிருந்தோம். அவர் அப்போதுதான் ஒரு முற்றின வழைத்தார் வெட்டி வைத்திருந்தார், மொந்தன் வாழைத்தார். மொந்தன் வாழைக்காய்கள் கறி செய்வதற்குத்தான் பயன்படும். பழுக்காது. நாங்கள் திரும்பி வரும்போது ஒரு சீப்பு (வாழைக்காய் சீப்புங்க, தலை சீவற சீப்புன்னு நெனக்காதீங்க) கொடுத்தனுப்பினார்.

அதை வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தோம். அடுத்த நாள் அவைகளில் லேசாக மஞ்சள் நிறம் தட்டியது. அவை நல்ல முத்தின காய்களாக இருந்த தால் பழுக்க ஆரம்பிக்கிறது என்று புரிந்தது. அத்தனை காய்களையும் உடனே கறி செய்து சாப்பிட முடியாது. தவிர வாழைக்காய் கறி கொஞ்சம் திகட்டிப்போய் விட்டது.

என் தங்கைக்கு யாரோ எப்போதோ சொல்லியிருந்த குறிப்பு நினைவிற்கு வந்தது. வாழைக்காய் வடை சுடலாமா என்று ஒரு மந்திராலோசனை செய்து அந்த யோசனை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று நான் பகல் தூக்கத்தை முடித்துவிட்டு எழுந்திருக்கும்போதே கமகமவென்று மசால் வாசனை மூக்கைத் துளைத்தது.

அவசர அவசரமாக முகத்தைக் கழுவி விட்டு வந்தால் ஒரு தட்டில் வடை மாதிரி நாலைந்து சமாச்சாரம் இருந்தது. ஒன்றைப் பிய்த்து வாயில் வைத்தேன். அப்படியே கரைந்து வயிற்றுக்குள் போய்விட்டது. இது என்னடா என்று அடுத்ததைப் பிய்க்காமல் வாயில் போட்டேன். கொஞ்ச நேரம் வாயில் இருந்தது. அப்போதுதான் அதன் ருசி நாக்கிற்கு உரைத்தது.

இது வரை நான் அப்படிப்பட்ட ஒரு வடை ருசியை அனுபவித்ததில்லை. கொஞ்சம் மொறுமொறுப்பு. கொஞ்சம் இனிப்பு சுவை. லேசான காரம். ஒரு பக்கத்தில் மசால் வாசனை. வடையில் வழக்கமாக க் காணப்படும் எண்ணையே இல்லை. இந்த ருசியை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

இதுதான் வாழைக்காய் வடை என்றார்கள். நான் முதலில் கொடுத்த வடைகளைச் சாப்பிட்டவுடன் அடுத்து ஒரு ஐந்து வடை கொடுத்தார்கள். அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து ஒரு ஐந்து வடை. .............................
இப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று வடை சப்ளை நின்று விட்டது. என்ன என்று கேட்டேன். அவ்வளவுதான் சுட்டவடைகள் எல்லாம் தீர்ந்து விட்டன என்று பதில் வந்தது.

எத்தனை வடை சாப்பிட்டேன் என்று நினைவிற்கு வரவில்லை. அப்படியான ஒரு சுவை. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த மனப்பான்மையில் அந்த வடை சுடுவதின் ரகசியங்களைக் கேட்டறிந்து உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்ல முற்றின வாழைக்காய்கள் ஒரு பத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவைகளை அப்படியே இட்லிப்பானையில் வைத்து வேகவையுங்கள். நன்றாக வேகவேண்டும். ஆனால் குழைந்து போகக்கூடாது. அவைகளை ஆறின பிறகு எடுத்து தோல்களை உறித்து விடவும். தோல்கள் வேண்டாம். அவைகளைக் கடாசிவிடவும்.

இதன் கூட ஒரு டம்ளர் பொட்டுக்கடலை, அரைமூடி தேங்காய் துருவின தேங்காய்த் துருவல், ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு துண்டு லவங்கப்பட்டை, இரண்டு தேக்கரண்டி மிளகாய்த்தூள், அளவான உப்பு, கொஞ்சம் கருவேப்பிலை, சொஞ்சம் கொத்தமல்லித் தழை இவைகளைச் சேர்த்து கல்லுரலில் போட்டு நைசாக வரும் வரை ஆட்டிக் கொள்ளவும். ஆட்டும்போது தேவையான தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். ஆட்டின மாவு வடை சுடும் பக்குவத்திற்கு ஆட்ட வேண்டும்.

அவ்வளவுதான். இந்த மாவை சிறு சிறு வடைகளாக எண்ணையில் பொரித்தெடுக்கவும்.

இந்த வேலைகளை எல்லாம் வீட்டுக்கார அம்மா செய்யும்போது நீங்கள் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கவும். ஒவ்வொரு அடைசலாக சுட்டவுடன் தட்டில் உங்களுக்கு வரும். டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடவும். ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும். அப்போது எழுந்திருந்து போய் கைகளைக் கழுவிவிட்டு வரவும். பிறகு காப்பி வரும். அதைக் குடித்துவிட்டு ஓய்வு எடுக்கவும்.

இதுதாங்க வாழைக்காய் வடை சுடும் சாப்பிடும் பக்குவம். எப்படி ஆண்களும் பெண்களும் வீட்டு வேலைகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பதை இந்தப் பதிவில் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளேன் என்பதை ரசிக்கவும்.

62 கருத்துகள்:

  1. // ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும்... // ஹா... ஹா.... ஆமாம், ஸ்பெஷல் மருந்து (யூனிஎன்ஜைம்) தேவையில்லையா...?

    பதிலளிநீக்கு
  2. வாழைக்காய் பஜ்ஜி கேள்விபட்டிருக்கிறேன்
    வாழைக்காய் வடை புதிதாக அல்லவா இருக்கிறது ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  3. இந்த உலகத்தில் சீப்பாக கிடைப்பது இரண்டே இரண்டு உருப்படிகள்தான். ஒன்று தலை வாரும் சீப்பு. இன்னொன்று வாழை சீப்பு. இதை இவ்வளவு அழகாக நகைச்சுவையோடு சொல்ல அய்யாவால்தான் முடியும்.
    ஆனாலும் இந்த வயதில் தலையில் முடி போய்விட்டதால் தலை வாரும் சீப்பு - உபயோகமில்லை.
    வயிறு தொந்திரவு செய்வதால் வாழை சீப்பும் (இந்த மாதிரி வாழை வடை, வாழைக்காய் பஜ்ஜி போன்றன) உபயோகமில்லை.
    அய்யா அவர்களின் பதிவில் படித்து சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீப்பு என்றால் தமிழிலும் இவை மட்டும்தான். ஆங்கிலத்தில் cheap (சீப்பு) என்றாலும் இவை மட்டும்தான். வேறு எந்த பொருள் இன்று சீப்பாக (ஆங்கில சீப்பு) கிடைக்கிறது? முன்பெல்லாம் ஒரு பிரச்சினை என்றால் "வா ஒரு காபி சாப்பிட்டுக்கொண்டே பிரச்சனை பற்றி பேசலாம்" என்று சொல்லுவோம். ஒரு காபி விலை 15 ரூபாய் எனும்போது இன்று அந்த காபி சாப்பிடுவதே பிரச்சனை ஆகிவிட்டதே. இதில் சீப்பு cheap என்று நாம் பேசி நகைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

      காயத்ரி மணாளன்

      நீக்கு
    2. எங்க ஊரு அன்னபூர்ணா ஹோட்டலில் ஒரு காப்பி விலை 25 ரூபாய். வடை 26 ரூபாய். இரண்டு பேர் வடை காப்பி சாப்பிட்டால் 110 ரூபாய் காலி.

      நீக்கு
  4. மீண்டும் சமையல் பற்றிய பதிவு என்றவுடன், சென்ற இல்லாள் இன்னும் திரும்ப வில்லையோ என்று நினைத்தேன். "அம்மா சுட அய்யா சாப்பிட" என்று பதிவில் படித்தவுடன்தான் மனது சாந்தி அடைந்தது.
    இருவரும் சேர்ந்து வாழ்க பல்லாண்டு.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  5. //(அம்மா செய்ய ஐயா சாப்பிடுவார். ஆளுக்கு ஒரு வேலை)//

    நீங்கள்தான் அய்யா பெண்ணியக்கத்தின் பெரிய ஆதரவாளர். அவனவன் 33% க்கே பெண்களை சுற்றலில் விடும்போது நீங்கள் எவ்வளவு அழகாக பாதி வேலை ஆம்படையாளுக்கும் பாதி வேலையை நீங்களும் எடுத்துக்கொண்டு 50% பங்களுக்கு விட்டு கொடுத்துள்ளீர்கள். உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கதை கேள்விப்பட்டதில்லையா? நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வாறேன். இரண்டையும் கலக்கி இரண்டு பேரும் ஊதி ஊதித் தின்னலாம். இதில் நான் செய்த முன்னேற்றம். இரண்டையும் கலக்கி நீ ஊது, நான் திங்கறேன். இது எப்படியிருக்கு?

      நீக்கு
    2. என்ன கிண்டல் செய்கிறீர்களா? சமையல் வேலையை பெண்களிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்த இடத்தில் சாப்பிடும் வேலையை மட்டும் செய்யும் ஆண்களை கிண்டலா செய்கிறீர்கள்? எந்த ஒரு புது ஐட்டம் செய்தாலும் சோதனை விலங்கு (கினியா பிக்) ஆண்கள்தானே. புது ஐட்டத்தை சந்தோசமாக செய்து விடலாம். என்ன வருமோ எப்படி வருமோ என்றே தெரியாமல் நடுங்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கும், சாப்பிட்ட பின் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அருமை அருமை எல்லாம் உன் கைப்பக்குவம் என்று பெரிய பொய்யை சொல்ல வேண்டிய நிலையில் இருக்கும் ஆண்களை இப்படிடும் கிண்டல் செய்வீர்கள் இதற்கு மேலும் கிண்டல் செய்வீர்கள்.

      காயத்ரி மணாளன்

      நீக்கு
  6. // நாங்கள் திரும்பி வரும்போது ஒரு சீப்பு (வாழைக்காய் சீப்புங்க, தலை சீவற சீப்புன்னு நெனக்காதீங்க) கொடுத்தனுப்பினார்//

    சம்பந்தி வாழைத்தார் கொடுத்தனுப்புவது இருக்கட்டும்.
    நீங்கள் கொண்டு போனது என்ன என்று சொல்லவே இல்லையே.
    அதை பற்றி தனி பதிவு போடலாம் என்று நினைத்திருந்தால் அதை படிக்க ஆவலோடு உள்ளோம்.

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  7. //மொந்தன் வாழைக்காய்கள் கறி செய்வதற்குத்தான் பயன்படும். பழுக்காது........அவை நல்ல முத்தின காய்களாக இருந்த தால் பழுக்க ஆரம்பிக்கிறது என்று புரிந்தது.//

    அய்யா எனக்கு ஒரு சந்தேகம். மொந்தன் வாழைக்காய்கள் பழுக்குமா பழுக்காதா?
    இளசா அல்லது முத்திய மொந்தனா என்று எப்படி கண்டு பிடிப்பது?

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு விவசாயக் கல்லூரியில பி.எச்.டி படிப்பு படிக்கணும்?

      நீக்கு
  8. ஐயா

    நீங்கள் விரிவாக எழுதியதைச் சுருக்கமாகச சொல்கிறேன். வாழைக்காய் புட்டில் கொஞ்சம் பொட்டுக்கடலை அல்லது கடலை மாவு, உப்பு, அளவான மசாலா மற்றும் மிளகாய்பொடி சேர்த்து மசால் வடை மாதிரி சுடவும் (எண்ணெயில் பொரித்தெடுக்கவும்).

    ஆனால் வாழக்காய் விலை தான் கொஞ்சம் ஆலோசிக்க வைக்கிறது.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு ஜெயகுமார் அவர்களே
      பன்னிரண்டை "ஒரு டசன்" என்றும் சொல்லலாம்.
      அல்லது "பத்தோடு பதினொன்னு அத்தோடு இதவும் ஒன்னு" என்றும் சொல்லலாம்.
      டசன் என்று சொன்னால் ஓஹோ அப்படியா சரி சரி என்று தலையாட்டிவிட்டு போய்விடுவோம்.
      பத்தோடு பதினொன்னு அத்தோடு இதவும் ஒன்னு என்று சொன்னால் முதலில் வந்த பத்து என்ன அதனோடு ஏன் பதினொன்று சேரனும் அத்தோடு சேர்ந்த இந்த ஒன்று எப்படி இருக்கும் என்று சுவையும் ஆர்வமும் கூடும்.
      மற்றபடி ரெண்டும் ஒன்றுதான். சொல்கிற விதத்தில்தான் வித்தியாசம்.

      சேலம் குரு

      நீக்கு
  9. //மந்திராலோசனை செய்து ...//

    நீங்கள் சாண்டில்யனின் பரம ரசிகர் என்பது புரிந்து விட்டது.
    மந்திராலோசனை போண்டர் வார்த்தை பிரயோகங்கள் எல்லாம் அவருக்கே உரித்தான trade mark வார்த்தைகள்.
    அவரை பற்றிய பதிவுகள் சிலது உங்களிடம் எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  10. //மந்திராலோசனை செய்து...........அவைகளைக் கடாசிவிடவும்.//

    மந்திராலோசனை - பழைய சரித்திர கால வார்த்தை
    கடாசி - இன்றைய கால சென்னை பாஷை

    இரண்டையும் ரொம்ப சுலபமாக உபயோகிக்கிறீர்களே.
    உங்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை

    குருப்ரியா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதிலொன்றும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லையே.
      மந்திராலோசனை - படித்ததில் பிடித்தது
      கடாசி - கேட்டதில் படித்தது.
      சரிதானே அய்யா?

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  11. //இது வரை நான் அப்படிப்பட்ட ஒரு வடை ருசியை அனுபவித்ததில்லை. கொஞ்சம் மொறுமொறுப்பு. கொஞ்சம் இனிப்பு சுவை. லேசான காரம். ஒரு பக்கத்தில் மசால் வாசனை. வடையில் வழக்கமாக க் காணப்படும் எண்ணையே இல்லை. இந்த ருசியை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்//

    கேட்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. அடா அடா ஒரு சிலருக்குத்தான் பார்த்ததை, சாப்பிட்டதை இப்படி வர்ணனை செய்ய வரும். படிக்கும் போதே அப்படியே வாழைக்காய் வடை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  12. //நான் முதலில் கொடுத்த வடைகளைச் சாப்பிட்டவுடன் அடுத்து ஒரு ஐந்து வடை கொடுத்தார்கள். அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து ஒரு ஐந்து வடை. .//

    சுடுவது அவர்கள் வேலை. சாப்பிடுவது நமது வேலை. . நமது வேலையை நாம் சரியா செய்ய வேண்டுமல்லவா? அருமை அருமை. கொடுக்க கொடுக்க உள்ளே தள்ளிக்கொண்டே இருந்தது பிரமாதம் என்றால் அதை சொன்ன விதம் இன்னும் பிரமாதம்.
    என்னதான் இருந்தாலும் " தனக்கு மிஞ்சிதான் தான தர்மம்" அது வாழைக்காய் வடையாகவே இருந்தாலும் சரி என்று கர்ம சிரத்தையுடன் காரியமாற்றிய உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  13. ஆமாம் ஐந்தைந்தாக உள்ளே தள்ளிக்கொண்டே இருந்தது சரி.
    "யூனிஎன்ஜைம்" எல்லாம் பஜ்ஜிக்கு மட்டும்தானா? வடைக்கு இல்லையா? இல்லை சாப்பிட மறந்து விட்டீர்களா? (ஐயா அவர்கள் மேல் எனக்கு எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா?)

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுல எண்ணை அதிகம் இல்லை. அதனால் யூனிஎன்ஜைம் வேண்டியதில்லை.

      நீக்கு
  14. //திடீரென்று வடை சப்ளை நின்று விட்டது.//

    இதை விட சுவையாக யாராலும் சுட்ட வடை அனைத்தையும் ஒருவராகவே சாப்பிட்டு முடித்ததை சொல்லி விட முடியாது.
    அத்தனைக்கும் வயிற்றில் இடம் இருந்ததா?

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்கப்படாது.

      நீக்கு
    2. சுரைக்காய் கூட்டும் பாகற்காய் பொரியலும் செய்து கொண்டு வந்து வைத்தால் வந்த பசியும் போய்விடும். இப்படி வாழைக்காய் வடை மொறு மொறு என்று லேசான இனிப்புடன் சற்றே காரத்துடன் பார்க்க எண்ணையே இல்லாமல் இருந்தால் வயிறு தானாக பெரிதாகிவிடும். சுரைக்காய்க்கும் பாகற்காய்க்கும் நான் எதிரி இல்லையென்றாலும் வாழைக்காய் வடை என்று வரும்போது மற்றவை இரண்டாம் பட்சம்தான் இல்லையா?

      சேலம் குரு

      நீக்கு
  15. //திடீரென்று வடை சப்ளை நின்று விட்டது. என்ன என்று கேட்டேன். அவ்வளவுதான் சுட்டவடைகள் எல்லாம் தீர்ந்து விட்டன என்று பதில் வந்தது.//

    இப்போது நீங்கள் சமையல் அறை பக்கம் எட்டி கிட்டி பார்த்து விடாதீர்கள். கஷ்டப்பட்டு வடை சுட்டால் ஒரு பேச்சுக்காவது நீ ஒன்று சாப்பிட்டாயா என்று கூட கேட்காமல் அனைத்தையும் பகாசுரன் மாதிரி ஸ்வாஹா செய்து விட்ட உங்களை தன பார்வையாலே பஸ்மம் செய்யும் அளவுக்கு கோபத்துடன் உங்கள் ஆம்படையாள் சமையல் அறை உள்ளே இருப்பார்கள். ஜாக்கிரதை.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  16. // இந்த வேலைகளை எல்லாம் வீட்டுக்கார அம்மா செய்யும்போது நீங்கள் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கவும்//

    சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. இந்த காட்சியை நினைத்துப்பார்த்தேன். மீண்டும் சிரிப்புதான். இந்த மனுசனுக்கு என்னாகிவிட்டது என்று என் சகதர்மிணி பயத்துடன் எட்டி பார்த்த பிறகுதான் எனது சிரிப்பு நின்றது.

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  17. //ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும். அப்போது எழுந்திருந்து போய் கைகளைக் கழுவிவிட்டு வரவும்.//

    "பிறகு கடைக்கு சென்று இன்னொரு சீப்பு மொந்தன் வாழை வாங்கி வரவும். வீட்டுக்காரம்மாவின் கோபத்தை தணிக்க - பின்னே சுட்ட வடை எல்லாவற்றையும் ஒருவரே தின்று தீர்த்துவிட்டால், கோபம் வராமல் பின் என்ன வரும் - வீட்டுக்காரம்மாவை ஹாலில் உட்காரவைத்துவிட்டு நாம் சென்று வாழைக்காய் வடை சுட்டுக்கொண்டு வந்து மனைவிக்கு கொடுக்க வேண்டும்" என்று நடந்த உண்மையை சொல்வீர்கள் என்று பார்த்தால் காபி குடித்தேன் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிரீர்களே.

    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில உண்மைகளை இல்லை மறைவு காய் மறைவாகத்தான் சொல்ல வேண்டியிருக்கும். இப்படி பட்டென்று போட்டு உடைக்கக்கூடாது.

      சேலம் குரு

      நீக்கு
  18. //ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும். அப்போது எழுந்திருந்து போய் கைகளைக் கழுவிவிட்டு வரவும். பிறகு காப்பி வரும். அதைக் குடித்துவிட்டு ஓய்வு எடுக்கவும்.//

    நிஜமாகவே மனைவிக்கு ஒன்று கூட கொடுக்காமலா சாப்பிட்டீர்கள்?அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஆண் பிள்ளை சிங்கம்தான். சுட்ட வடை அனைத்தையும் சிங்கிள் ஆளாகத்தின்று விட்டு காபியும் குடித்துவிட்டு ஓய்வு எடுப்பதற்கு ரொம்ப தைரியம் வேண்டும். எதற்கும் கையை கிள்ளி பார்த்துக்கொள்ளுங்கள். ஏதேனும் கனவு கினவாக இருக்க போகிறது

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு வடையையும் சிங்கிளாகத்தின்ற நமது அய்யா அவர்கள் கண்டிப்பாக ஆண்பிள்ளை சிங்கம்தான். ஏனென்றால் நமது சூப்பர் ஸ்டார் சொல்வது மாதிரி சிங்கம் எப்போதும் சிங்கிளாகத்தான் வரும்.

      சேலம் குரு

      நீக்கு
  19. //எப்படி ஆண்களும் பெண்களும் வீட்டு வேலைகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பதை இந்தப் பதிவில் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளேன் என்பதை ரசிக்கவும்.//

    அருமை அருமை இதை என் இல்லாளுக்கு படித்து காட்டினேன்.
    படிக்க படிக்க அப்படியே நான் இருக்கும் இடத்தில் வெப்பம் கூடிகொண்டே வந்தது. அடுப்பு எரிக்காமலேயே அந்த இடத்திலேயே வடை சுட்டு விடலாம் என்ற அளவுக்கு என் வீட்டுக்காரம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது. வாழைக்காய் சுடும் பக்குவம் இருக்கட்டும் இப்போது என் கைப்பக்குவத்தை பாருங்கள் என்றவுடன் தப்பித்தேன் பிழைத்தேன் என்று எடுத்தேன் பாருங்கள் ஓட்டம். வீடு திரும்புமுன் ஒரு டசன் வாழைக்காய் வடையுடன்தான் திரும்ப வேண்டும் என்றிருக்கிறேன். அதற்கு அய்யா அவர்கள்தான் உதவி செய்ய வேண்டும்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  20. //ஒவ்வொரு அடைசலாக சுட்டவுடன் தட்டில் உங்களுக்கு வரும். டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடவும். ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும். அப்போது எழுந்திருந்து போய் கைகளைக் கழுவிவிட்டு வரவும். பிறகு காப்பி வரும். அதைக் குடித்துவிட்டு ஓய்வு எடுக்கவும்.//

    யூனி என்சைம் மாத்திரையும் சாப்பிடாததால் ஓய்வு எங்கே எடுப்பது. டக்கென்று ஒரு ஆட்டோ பிடித்து பக்கத்தில் இருக்கும் டாக்டர் வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும்.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  21. // கல்லுரலில் போட்டு நைசாக வரும் வரை ஆட்டிக் கொள்ளவும்.//

    அப்படியென்றால் என்ன என்று என் சகதர்மிணி கேட்கிறாள்.
    மிக்சி தெரியும் கிரைண்டர் தெரியும் வடை மாவு ஆட்டுவதற்கு கல்லுரல் என்று ஒன்று இருந்ததா என்று கேட்கிறாள். அடுக்கு மாடி கட்டிடத்தில் புறாக்கூண்டு போல இருக்கும் ஒரு அபார்ட்மெண்டில் இருந்து கொண்டு கல்லுரலுக்கு நான் எங்கே போவேன்?

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு வாழைக்காய் வடை பிராப்தம் இல்லை. எங்காவது கிராமத்திற்கு அக்கா தங்கச்சி வீட்டுக்குப்போனா செஞ்சு குடுக்கச் சொல்லி சாப்பிடுங்கள்.

      நீக்கு
    2. "நம்ம வீட்டுக்கு வாரும். உங்க பேரை சொல்லி நானும் இன்னொரு தடவை வாழைக்காய் வடையை ஒரு பிடி பிடிக்கிறேன்" என்று சொல்வீர்கள் என்று பார்த்தால் கொடுப்பினை இல்லை பிராப்தம் இல்லை என்று சொல்லி ஏமாற்றி விட்டீர்களே.
      நான் ஒன்றும் சும்மா வர மாட்டேன். கண்டிப்பாக ஒரு ரெண்டு டசன் வாழைக்காய் நன்கு முற்றியதாக வாங்கிக்கொண்டுதான் வருவேன்.

      காயத்ரி மணாளன்

      நீக்கு
    3. அய்யய்யோ, நீங்க எல்லாம் நம்ம ஊட்டுக்கு வருவீங்களோ, மாட்டியளோ அப்படீங்கற நெனப்பில சொல்லீட்டனுங்க. எப்ப வேணும்னாலும் வாங்க, வாழைக்காய் வடையிலயே உங்களைக் குளிப்பாட்டிடறனுங்க.

      நீக்கு
  22. ஐயா

    புளிக்கும் என்று விட்டப்போ தமிழ் மணம் 8க்கு வந்துட்டீங்க. வெங்கட் நாகராஜ் பகவான்ஜி கில்லெர்ஜி எல்லாம் கொஞ்சம் வழி விடுறாங்க போலிருக்கு.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ உங்க மாதிரி மகராஜன்கள் புண்ணியத்தில இப்பத்தான் 11 வது ரேங்கிற்கு வந்திருக்கேன். தொடர்ந்து ஆதலவு கொடுத்தால் இன்னும் முன்னேறுவேன் என்று நம்புகிறேன். எல்லாம் உங்கள் கையில்.

      நீக்கு
  23. ஏய்! போராண்டி! ரம்பநாயகனே!.....இப்படி அருக்கிரீர்களே. போராண்டி!
    கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா போராண்டி?

    ஆள் வைத்து வைத்து பின்னோட்டம் என்ற பேரில் ஆள் வைத்து நீங்களும் உங்கள் அடிவருடிகளும் மாற்றி மாற்றி போடும் ரம்பத்தை ஆபாசத்தை விடுமையா!
    உங்க தற்புகழ்ச்சி தாங்க முடியல சாமி---ஹலோ! பழனிசாமி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது யாரடா, நம்மளைப் பேராண்டீன்னு கூப்படறாங்கன்னு பார்த்தேன். அப்பறம்தான் போராண்டின்னு புரிஞ்சுது.இந்தப்பேரும் நல்லாத்தான் இருக்கு.

      அப்புறம் வயித்து வலிக்காரரெல்லாம் வடை சாப்பிட ஆசைப்படலாமோ? எங்காச்சும் லேகியம் விக்கற எடத்துக்குப் போகோணும். ஒடம்பைப் பாத்துக்குங்க.

      நீக்கு
  24. வாழைப்பூ வடை சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதுவும் சுவையாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாக இருக்கும். சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதில் வாழைப்பூவை கிளீன் செய்வது ஒரு நச்சு வேலை.

      நீக்கு
  25. செய்து பார்த்து விட வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  26. வாழைப்பூ வடை கேள்விப்பட்டு இருக்கிறேன்! சுவைத்தும் இருக்கிறேன்! வாழைக்காய் வடை புதிதுதான்! ஆனால் நன்கு முற்றிய வாழைக்காய் விலைதான் பயமுறுத்துகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசுக்கேத்த தோசை சுவைக்கேத்த காசு.
      ஹோட்டலுக்கு போய் பில் என்ற பெயரில் - நாம் சாப்பிடும் பொது வராத வயிற்றெரிச்சல், பில்லை பார்க்கும் பொது கண்டிப்பாக வரும் -கொட்டிக்கொடுப்பதற்கு, விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் சரி என்று வாங்கி வந்து வீட்டில் சுத்தபத்தத்தோடு செய்து சாப்பிட்டால் வரும் சந்தோஷமே தனிதான்.
      காசு - உங்களிடம்.
      வாழைக்காய் - கடையில்.
      செய்முறை - அய்யாவின் பதிவில்.
      செய்ய வேண்டியது - உங்கள் மனைவி
      எனவே நேரத்தை வீண் செய்து கொண்டிருக்காமல் உங்கள் மனைவியை சற்றே சரி செய்யுங்கள். சுவையான வாழைக்காய் வடை சாப்பிடுங்கள்.

      சேலம் குரு

      நீக்கு
  27. நல்ல ருசியான பதிவு. வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டு இருக்கிறேன். வாழைக்காய் வடை பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறேன். உங்கள் புண்ணியத்தில் யாராவது ஒருவர் இந்த “வாழைக்காய் வடை” செய்முறையின்படி பிரமாதமாக சுட்டு, விற்று பெரிய ஆளாக வர வாய்ப்பு இருக்கிறது.
    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழைக்காய் வடை சுட்டு விற்று அவர் பெரிய ஆளாக ஆனார் என்றால் கண்டிப்பாக அய்யா அவர்களுக்கு ரெசிபிக்காக ராயல்டி தொகை ஒன்றை நன்றி மறவாமல் வழங்க வேண்டும்.
      அப்படியே அய்யா அவர்களுக்கு ஒரு ராயல்டி வருமானத்துக்கு ஒரு வழி சொன்னதால் ஒரு பர்சென்டேஜ் எனக்கும் அய்யா அவர்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

      துளசி மைந்தன்

      நீக்கு
  28. புதுவகையான வடையாக உள்ளது. அதைவிட தாங்கள் எங்களுடன் பகிர்ந்து பரிமாறிய விதம் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  29. #வாழைப்பூவை கிளீன் செய்வது ஒரு நச்சு வேலை.#இது அனுபவமா ,இல்லை சகதர்ம பத்தினி கஷ்டப் படுவதைப் பார்த்ததால் உண்டான பரிதாபமா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யாவின் இந்த வயதில் இது ஒரு கேள்வியே இல்லை. இருவரும் சேர்ந்துதான் வாழைப்பூவை ஆய வேண்டியிருக்கும். கீரையை சுத்தம் செய்வது போல வாழைப்பூவை ஆய்வதும் ஒரு பெரிய நச்சு பிடித்த வேலைதான். வெளிப்படையாக அய்யா சொல்லவில்லையே தவிர நமக்கு புரியாதா என்ன?

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  30. #வெங்கட் நாகராஜ் பகவான்ஜி கில்லெர்ஜி எல்லாம் கொஞ்சம் வழி விடுறாங்க போலிருக்கு.#
    வட போச்சேன்னு வருத்தப் படுபவன் நானில்லை ,இதோ ,இந்த பதிவே ,வாசகர் பரிந்துரையில் வரச் செய்யும் என் ஏழாவது வாக்கு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கீங்க, சரியா வழி விடமாட்டீங்கறாங்க. இதுக்கு ஒரு வழி சொல்லுங்க?

      நீக்கு
  31. வாழைக்காய் வடை ரெசிபியை ஒரு நாள் வீட்டில் செய்துவிட வேண்டியதுதான்.
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே மறக்காமல் ஒரு கணிசமான அளவில் சுட்ட வடைகளை அய்யா அவர்களுக்கு அனுப்பி வைக்கவும். சாப்பிட்டுக்கொண்டே இருந்தவர் வடை தீர்ந்து விட்டது என்று பார்யாள் சொன்னவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். எனவே தயவு செய்து அய்யாவுக்கு இந்த உதவியை மறக்காமல் செய்து விடவும்.

      சேலம் குரு

      நீக்கு
  32. பகவான் ஜி
    டாக்டர் எழுதி இருப்பது வாழைக்காய் பஜ்ஜிதானே. வாழைப்பூ பஜ்ஜி அல்லவே. சிரமம் இருக்காது/ செய்து தரச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  33. வாழைக்காய் பஜ்ஜி என்று தவறுதலாக தட்டச்சி விட்டேன் வடை என்று மாற்றி வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு
  34. யாராவது சுட்டுத் தந்தால் வடைஎன்னா பஜ்ஜிஎன்னா ,லபக் லபக்குன்னு விழுங்க நான் தயார் :)

    பதிலளிநீக்கு
  35. திடீரென்று வடை சப்ளை நின்று விட்டது. என்ன என்று கேட்டேன். அவ்வளவுதான் சுட்டவடைகள் எல்லாம் தீர்ந்து விட்டன என்று பதில் வந்தது.//
    ஹஹஹஹ் அப்படியென்றால் அதன் சுவை தானோ...புதிய வடை ரிசிப்பி நிச்சயமாகச் செய்து விட வேண்டியதுதான் ஐயா! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  36. //ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும். அப்போது எழுந்திருந்து போய் கைகளைக் கழுவிவிட்டு வரவும். பிறகு காப்பி வரும். அதைக் குடித்துவிட்டு ஓய்வு எடுக்கவும்.//

    அடடா ! ஓய்வு எடுக்கும் முன்பு நாம் எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டியது உள்ளது?

    சும்மா ஆட்டுவதும் சுடுவதும் மட்டும் அவர்கள் வேலையாக உள்ளதே ! மிகவும் அநியாயம். :)

    பதிலளிநீக்கு