செவ்வாய், 31 மே, 2016

தமிழன் என்பது ஒரு நாடக வேடமே !

                           Image result for தமிழன் வரலாறு

பொது உறவு அதிகாரியாக இருக்க பிரபல பதிவர் ஒத்துக்கொண்டபடியால் அவரை உடனே அப்பதவிக்கு நியமனம் செய்து அவரும் உடனடியாக வேலையில் சேர்ந்து விட்டார். அவருக்கு நான் கொடுத்த முதல் வேலை என்னவென்றால் நம் சங்கத்தின் செயல்பாடுகளை நல்ல முறையில் மக்களிடம் போய்ச்சேறுமாறு நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதே. அவரும் சரியென்று சொல்லிவிட்டு தன் வேலையைக் கவனிக்கப்போய்விட்டார்.

ஒரு மாதம் சென்ற பிறகு அம்மா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் அவருடன் இரண்டு உதவிப் பேராசிரியர்களும் கூடவே பத்து ஆராய்ச்சி மாணவ, மாணவிகளும் வந்தார்கள். தேனீர் அருந்தியவுடன் விவாதத்தை ஆரம்பித்தோம்.

த.து.தலைவர்தான் ஆரம்பித்தார். கி.த.ச. தலைவரே, நீங்கள் கேட்ட விவரத்தைப் பற்றி சிந்தித்தேன். சிந்திக்க சிந்திக்க குழப்பம்தான் மிஞ்சுகிறதே தவிர ஒரு தெளிவு கிடைக்க மாட்டேனென்கிறது.

நான் -  இதிலென்ன குழப்பம். தமிழ் இனம் எவ்வளவு தொன்மையானது? இந்த இனத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் காண்பது அவ்வளவு கடினமா?

ததுத (அதாவது தமிழ்த்துறைத் தலைவர்) - மண்ணின் மைந்தர்கள் என்று பார்த்தால் வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசுபவர்கள்தான் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். அவர்களைத்தான் தமிழர் என்று ஏற்றுக்கொள்ள முடியும்.  தமிழ் நாட்டில் வசிக்கும் பலர் வெளியில் தமிழிலும் வீட்டிற்குள் தெலுங்கு, கன்னடம், மலயாளம், ஹிந்தி, மராட்டி, பஞ்சாபி என்று இப்படி பல மொழிகளில் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை எப்படி தமிழன் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

நான் - இது ஒரு சரியான குழப்பமான நிலைதான். அப்படி வீட்டிற்குள்ளும் வெளியிலும் தமிழ் மட்டுமே பேசக்கூடிய தமிழர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

ததுத - இந்தக் கணக்கை அரசு புள்ளி விவர ஏடுகளிலிருந்து சேகரித்தேன். அந்த விவரத்தைச் சொல்ல வெட்கமாக இருக்கிறது.

நான் - பலவாயில்லை, சொல்லுங்கள்

ததுத - அப்படிப்பட்டவர்கள் மொத்தம் 24 சதவிகிதம் மட்டுமே இருக்கிறார்கள்.

நான் - அப்போ தமிழ்நாட்டில் தமிழர்கள் ஒரு சிறுபான்மை சமூகம்தானா, இதென்ன அநியாயம் ?

ததுத - அது மட்டுமா? இந்த மாதிரி தமிழர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்து கொண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியே போனால் 2030 ல் தமிழ் நாட்டில் தமிழர்களே இருக்க மாட்டார்கள். எல்லோரும் அமெரிக்கா போயிருப்பார்கள். அங்கே அவர்கள் கிரீன் கார்டு வாங்கி அமெரிக்கர்களாக மாறியிருப்பார்கள்.

நான் - என்னய்யா இது அக்கிரமம்? தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்க மாட்டார்களா? அப்புறம் இங்கு இருப்பவர்கள் என்ன மொழி பேசுவார்கள்?

{இதற்குள் திமுதிமுவென்று ஒரு பதினைந்து பேர் விவாத அரங்கினுள் நுழைந்தார்கள். நான் "பொது" (அதாவது பொது உறவு அதிகாரி) யைப் பார்த்தேன். அவர் சொன்னார். நீங்கள் சொன்ன மாதிரி நமது கருத்துகள் மக்களுக்கு போய்ச்சேர நான்தான் இந்த பத்திரிக்கை நிருபர்களை வரச்சொன்னேன் என்றார். சரி அவர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து அமரச்சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு விவாதத்தைத் தொடர்ந்தோம்.}

ததுத - இதற்கு ஒரு வழி இருக்கிறது. மண்ணின் மைந்தர்கள் அல்லாதவர்களை தமிழ் நாட்டை விட்டு வெளியேற்றுவதுதான் அந்த வழி.

நான் - இதை சட்ட பூரவமாகச் செய்ய முடியாதே. மத்திய அரசு ஒத்துக்கொள்ளாதே.

ததுத -  இதற்கு வேறு ஒரு வழி இருக்கிறது. தமிழர்களை விட்டு ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாம். தமிழ் நாடு தமிழர்களுக்கே என்று கோஷம் போடலாம். அப்போது இந்த வந்தேறிகள் பயந்து கொண்டு அவரவர்கள் ஊருக்குப் போய்விடுவார்கள்.

நான் - இது ஒரு நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது. "பொது" வைப் பார்த்து இதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி விட்டு கூட்டத்தை முடித்தேன்.

எல்லோரும் மதிய விருந்து உண்டுவிட்டு கிளம்பிப்போனார்கள்.

4 கருத்துகள்:

  1. எசகு பிசகாய் இருக்கிறதே கற்பனை.....

    பதிலளிநீக்கு
  2. //தமிழ் நாடு தமிழர்களுக்கே என்று கோஷம் போடலாம். அப்போது இந்த வந்தேறிகள் பயந்து கொண்டு அவரவர்கள் ஊருக்குப் போய்விடுவார்கள்//

    ஐயா ஒட்டு மொத்தமாக திரைப்படத்துறையினருக்கு ஆப்பு இதில் எனக்கு சந்தோஷமே...
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  3. //என்னய்யா இது அக்கிரமம்? தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்க மாட்டார்களா?//
    உண்மை நிலையை உரக்க சொல்லியிருக்கிறீர்கள்.
    ‘பொது’வுக்கு இந்த பணி புதிதாய் இருந்திருக்குமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை எனக்குத் தெரிந்தவரையில் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறேன்.

      நீக்கு