புதன், 15 ஜூன், 2016

அரசியல் கட்சி ஆரம்பித்து வளர்ப்பது எப்படி?

                           

நான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் என்று யோசித்தேன். அதற்குக் காரணம் இப்போது இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் அக்-மார்க் சுயநலவாதிகளால் நடத்தப்படுகிறது என்ற எண்ணம் என் மனதினுள் தோன்றியதே. இந்த நாட்டிற்கு நம்மாலான சேவை செய்யாவிட்டால் நாம் பிறந்ததிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று என் மனச்சாட்சி சொல்லியது.

இதற்காக ஒரு ஆராய்ச்சி செய்தேன். அரசியல் கட்சியில் சேர்ந்து வளர்ந்தவர்களின் கதைகளை எல்லாம் விசாரித்து அறிந்தேன். அந்த ஆராய்ச்சியில் நான் அறிந்தவைகளை எல்லோரும் தெரிந்து பயனடையட்டும் என்று இங்கே பதிவு செய்கிறேன்.

அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன் நீங்கள் இப்போது இருக்கும் ஏதாவதொரு கட்சியில் தொண்டனாகச் சேரவேண்டும். அப்படி தொண்டனாகச் சேருவதற்கு அந்தக் கட்சியில் இப்போது இருக்கும் ஒரு முக்கியப் புள்ளியிடம் அடியாளாகச் சேரவேண்டும். அடியாள் என்றால் என்னவென்று உங்களுக்கு இன்னேரம் புரிந்திருக்க வேண்டும்.

ஓரிரு ஆண்டுகள் இவ்வாறு சேவை புரிந்தபின் நீங்களே ஒரு தலைவனாக மாறவேண்டும். இதற்கான வழி முறைகள் இந்த இரண்டாண்டு அடியாள் பயிற்சியில் தெரிந்து கொண்டிருக்கவேண்டும். தலைவன் என்றால் உங்களுக்கு கீழே நாலைந்து அடியாட்கள் இருக்கவேண்டும்.

அடியாட்களுக்கு தினமும் பிரியாணியும் குவார்ட்டரும் சப்ளை செய்யவேண்டும். அதற்கு நிதி வசதி வேண்டும். இந்த நிதி வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்கு சில யுத்திகள் உண்டு. முதலில் உங்கள் மனச்சாட்சியை அழித்து விடவேண்டும். உங்கள் பகுதியில் இருக்கும் வியாபார ஸ்தலங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று ஒரு சந்தா வசூலிக்கவேண்டும். அந்தப் பகுதியில் என்ன அடிதடி நடந்தாலும் நீங்கள் அங்கே தவறாமல் ஆஜராகி கட்டைப் பஞ்சாயத்து நடத்தி தீர்ப்பு சொல்லவேண்டும். இதற்கு மாமூல் வசூலிக்கவேண்டும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஏதாவதொரு கட்சியின் எம்எல்ஏவைப் பிடித்துக்கொள்ளவேண்டும். கட்சி கூட்டங்களுக்கெல்லாம் நீங்கள் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அவருக்குச் செலவு வைக்காமல் ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் மூலமாக அப்படியே ஒரு மந்திரியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்படி உங்கள் செல்வாக்கு பெருகியவுடன் உள்ளாட்சித் தேர்தல்களில் நின்று கவுன்சலராகி விட வேண்டும்.

அடுத்த படி சட்டசபைத்தேர்தலில் நின்று ஒரு எம்எல்ஏ ஆகிவிடவேண்டும். இதற்குள் உங்களுக்கு உள்ளூரில் ஏகப்பட்ட தொண்டர்களும் அடியாட்களும் சேர்ந்திருப்பார்கள். அடுத்த சட்டசபைத் தேர்தல் வரும்போது உங்கள் இனமக்களை வளைத்துப்போட்டு ஒரு தனிக்கட்சி ஆரம்பித்து விடுங்கள்.

அவ்வளவுதான். அரசியல் கட்சி ஆரம்பித்தாயிற்று. நீங்கள் தலைவர் ஆகிவிட்டீர்கள். இனி செய்யவேண்டியது ஸ்விஸ் பேங்கில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டியதுதான்.

12 கருத்துகள்:

  1. இன்னும் சிலதை(!) விட்டுவிட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  2. இதுவரை ஓக்கே! அரசியல் கட்சி ஆரம்பித்த பின் கைச்செலவுக்கு நிறைய தேவைப்படுமே!

    பதிலளிநீக்கு
  3. கிறுக்கர்கள் சங்கத்துக்குப் பின் இதுவா?

    பதிலளிநீக்கு
  4. என்னாங்க சார், அரசியல் கட்சி ஒன்று தொடங்குவதை இவ்வளவு சுளுவா, ஏதோ கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்வதைப் போல சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஐயா யாரையும் மனசுல வச்சுக்கிட்டு உள்குத்து குத்தவில்லையே...?
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  6. கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்வது மாதிரி - ஹா.ஹா.... நல்ல உவமை.

    சங்கத்திற்குப் பிறகு இப்போது கட்சி..... ம்ம்ம்ம்ம் . நடத்துங்க நடத்துங்க.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்ன கோவில்பட்டி கடலை மிட்டாய் மாதிரி? அது அவ்வளவு சுலபமா, என்ன?

      நீக்கு
  7. ஹஹஹஹஹஹ் அரசியல் கட்சி ஆரம்பித்தபின் தான் இருக்கு தக்க வைத்துக் கொள்ள ஆகும் செலவு....அந்தச் செலவுக்கு தலைவர் பதவியுடன் கூடவே ரௌடி எனும் பதவியும் வேண்டுமே. வடிவேலு சொல்லுவாரே ஒரு படத்தில் நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான் என்று...ஸ்விஸ் பேங்குல அக்கவுன்ட் ஓபன் பண்ணினீங்கனா நடுவணாக இருப்பவர் ஒழிப்பதில் சேர்ந்துவிடுமே

    பதிலளிநீக்கு
  8. உண்மை தற்போது அரசியல் இப்படித்தான் உள்ளது

    பதிலளிநீக்கு