செவ்வாய், 20 நவம்பர், 2012

இருசக்கர வாகனங்களும் விபத்துகளும்.

செய்தித்தாள்களைப் படித்தால் அனுதினமும் தவறாமல் கண்ணில் படும் செய்தி என்னவென்றால் இரு சக்கர வாகன விபத்துகள்தான். இரண்டு அல்லது மூன்று விபத்துகள் தவறாமல் நடக்கின்றன.

நான் ரோட்டில் போகும்போது இந்த இருசக்கர வாகன ஓட்டிகள் எவ்வாறு ஓட்டுகிறார்கள், விபத்துகள் ஏன் நடக்கின்றன என்று கவனிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அப்படிக் கவனித்ததில் எனக்குப்பட்ட சில குறிப்புகளை இங்கு கொடுக்கிறேன்.

கல்லூரி செல்லும் 21 வயது முதல் 24 வயது வரை உள்ள மாணவர்கள் இரவு 9 மணிக்கு மேல்தான் ரோட்டிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு அப்போது ரோடு "ரேஸ் டிராக்" மாதிரி தெரியும் போல. அவர்கள் வைத்திருக்கும் வாகனம் அதிக பட்சமாக  என்ன வேகத்தில் போகும் என்று டெஸ்ட் செய்வார்கள். கூடவே போட்டிக்கு இன்னும் இரண்டு வண்டிகள் இருக்கும். ஒவ்வொரு வண்டியிலும் மூன்று மூன்று பேர் இருப்பார்கள். பாம்புகள் நெளிந்து ஓடுகிற மாதிரிதான் இவர்கள் வண்டி ஓட்டுவார்கள். இவர்கள் வண்டிகளெல்லாம் நேர்க்கோட்டில் போகாது என்று நினைக்கிறேன்.

போதாததிற்கு எல்லோரும் சோமபானம் அருந்தியிருப்பார்கள். ஹெல்மட் போடமாட்டார்கள். விபத்திற்கு வேறு காரணங்கள் வேண்டுமா?

அடுத்த ஜாதி, இருசக்கர வண்டி எவ்வளவு பேர்களைத் தாங்கும் என்று டெஸ்ட் செய்பவர்கள். இவர்கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். கல்யாணம் ஆகி  இரண்டு குழந்தைகள் இருக்கும். நான்கு பேரும் வண்டியில் போகும்போது வண்டியின் சக்தி குறையும். பேலன்ஸ் கிடைக்காது. ஆனால் அதைக் கவனிக்காமல் இவர்கள் வண்டி ஓட்டுவார்கள். பெரிய வண்டிகளில் மோதி விபத்து ஏற்படுத்துவார்கள்.

இன்னொரு ஜாதி. ரோட்டின் ஓரத்தில் போய்க் கொண்டிருப்பார்கள். சைடு மிர்ரரைக் கவனிக்க மாட்டார்கள். பின்னால் ஏதாவது பெரிய வண்டி வந்து கொண்டிருக்கும். அதைப் போக விடமாட்டார்கள். அந்த வண்டி மகவும் பக்கத்தில் வந்த பிறகு பயந்து போய் வேகத்தைக் குறைப்பார்கள். பெரிய வண்டியின் இடது மூலை இரு சக்கர வாகனத்தை லேசாகத் தொடும். வாகனம் கவிழ்ந்து வாகனத்தில் செல்பவர்கள் தலை குப்பர விழுவார்கள். தலையில் அடிபட்டு பரலோகம் போவார்கள்.

அப்புறம் இந்த செல்போன்கள் இருக்கிறதே, அதை யமதர்மன்தான் கண்டுபிடித்து இந்த உலகிற்கு அனுப்பியிருப்பான் என்று நம்புகிறேன். செல்போன் பேசும்போது புற உலகில் என்ன நடக்கிறது என்று இவர்களுக்குத் தெரியுமா?

இந்த மாதிரி விபத்துகள் நடந்த பிறகு அவர்களின் தாய் தகப்பனின் நிலை எப்படியிருக்கும் என்று இவர்கள் ஒரு நொடியாவது சிந்தித்தால் இப்படி விபத்துகள் நடக்குமா?

இவர்களெல்லாம் எப்போது திருந்துவார்களோ?

(படங்கள் கூகுள் உதவி)

திங்கள், 19 நவம்பர், 2012

பின்னூட்டம் போட இடைஞ்சல்கள்

ஒரு பதிவப் படிச்சா நல்லா இருந்தா, பின்னூட்டம் போடலாமுன்னு விரும்புகிறோம்.

முக்கால்வாசி பதிவுகளில் இது ஒரு பிரச்சினை இல்லை. பின்னூட்டம் போட்டமா, பப்ளிஷ் பட்டனை அமுக்கினமா, வெளியில வந்தமான்னு இருக்குது. இந்த மாதிரி பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவது ஒரு சுகமான அனுபவம். அந்தப் பதிவர் கமென்ட் மாடரேஷன் வச்சிருந்தா வச்சுக்கட்டும். பின்னூட்டம் போடுவதில் அது ஒரு பிரச்சினை இல்லை.

சில பதிவுகளில் IAS  பரீட்சை மாதிரி இந்தப் படத்திலுள்ள எழுத்துகளை இந்தக் கட்டத்தினுள் எழுது என்று வைத்திருக்கிறார்கள். இது ஏன் என்று என்னுடைய களிமண் மூளைக்குப் புரியவில்லை. தங்களுடைய பதிவிற்குப் பின்னூட்டம் வேண்டாமென்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.

அப்புறம் இந்த வேர்டுபிரஸ் பதிவுகளுக்குள் போனால் பின்னூட்டம் போடுவதற்கு உங்கள் ஏழு தலைமுறை ஜாதகத்தைக் கேட்கிறது. அந்த அளவு பொறுமை எனக்கு இல்லை. என்னால் முடியவில்லை.

ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன். விடிகிற அப்போ விடியட்டும்.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

கணினி மென்பொருட்கள் - தரவிறக்கப்போகிறீர்களா?

கணினி மென்பொருட்கள் - தரவிறக்கப்போகிறீர்களா? கொஞ்சம் நில்லுங்கள். நான் சொல்லும் கருத்துகளை கேட்டுவிட்டு பின்பு தரவிறக்கத்தைத் தொடருங்கள்.

1. நீங்கள் தரவிறக்கப்போகும் மென்பொருள் உங்களுக்கு மிகமிக அவசியமா?

2. அந்த மென்பொருள் வேலையை உங்கள் கணினியில் ஏற்கனவே இருக்கும் மென்பொருட்கள் செய்யாதா?

3. அதை விலை கொடுத்து வாங்க்ப்போகிறீர்களா அல்லது இலவசமாக வேண்டுமா?

4. இலவசமாக கிடைக்கிறதென்றால் அது 30 நாள் டிரையல் வெர்ஷனா அல்லது நிரந்தர வெர்ஷனா?

5. அதைத் தரவிறக்கும்போது கொசுறாக வேறு வேண்டாத மென்பொருட்களை உங்கள் தலையில் கட்டுகிறார்களா?

6. உங்களிடம் நல்ல ஆன்டிவைரஸ் இருக்கிறதா? அதன் மூலம் நீங்கள் தரவிறக்கும் மென்பொருளை சோதித்தீர்களா?

7. யாரோ சொன்னார்களென்று சும்மா டெஸ்ட்டுக்காக அந்த மெனபொருளைத் தரவிறக்குகிறீர்களா?

இந்த கேள்விகளை மனதில் நன்றாக சிந்தித்து, பிறகும் அந்த மென்பொருள் வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால், பிறகு தரவிறக்கம் செய்யுங்கள்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

கோவையில் நீங்கள் கார் ஓட்டுகிறீர்களா? ஜாக்கிரதை


கோவைவாசிகளுக்கு ஒரு எச்சரிக்கை. நீங்கள் கார் ஓட்டுபவராக இருந்தால் என் நண்பரின் இந்த அனுபவத்தைப் படியுங்கள்.

கோவையில் பல முக்கியமான சாலைச் சந்திப்புகளில் தானியங்கி சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது கூடவே ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரியும் நிற்பார்.

நம் தமிழ்நாட்டு மக்கள் சட்டத்திற்கு மிகவும் மரியாதை கொடுப்பவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். போலீஸ்காரர் இருக்கிறார் என்றால் கரெக்ட்டாக பச்சை லைட் வரும்போதுதான் வண்டியை ஓட்டுவார்கள். சிகப்பு லைட் எரிந்தால் வெள்ளைக்கோட்டுக்கு முன்பே வண்டியை நிறுத்து விடுவார்கள். போலீஸ்காரர் இல்லையென்றால் அவர்கள் நடந்துகொள்வது வேறு விதம். சிவப்பு லைட் பச்சையாக மாறுவதற்கு சில நொடிகள் முன்பே வண்டியை எடுத்து விடுவார்கள். அடுத்த பக்கம் இருந்து வருபவர்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் ஒரு விபத்து நிச்சயம்.

இதைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு சிக்னல் இருக்குமிடத்திலும் தானியங்கி காமிராவைப் பொறுத்தியிருக்கிறார்கள். சிவப்பு விளக்கு எரியும்போது வண்டியை எடுப்பவர்களை அது தானாகவே போட்டோ எடுத்து போலீஸ் கன்ட்ரோல் அறைக்கு அனுப்பி வைக்கும்.

இந்த விபரங்கள் கோவையில் வண்டி ஓட்டுபவர்கள் அனைவருக்கும் தெரியும். என் நண்பர் ஒருவர் இந்த மாதிரி ஒரு சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. அங்கே நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர், என் நண்பரைப் போகுமாறு சைகை காட்டியிருக்கிறார். அப்போது சிவப்பு லைட் எரிந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் போலீஸ்காரர் போகச்சொல்கிறாரே என்று என் நணபர் சிக்னலைத்தாண்டிப் போய்விட்டார்.

இரண்டு நாள் கழித்து ஒரு போலீஸ்காரர் வீட்டுக்கு வந்து ஒரு போட்டோவைக் காட்டி, இது நீங்கள் ஓட்டும் வண்டிதானே என்று கேட்டிருக்கிறார். நண்பரும் ஆமாம் என்று சொல்லியிருக்கிறார். அந்தப் போலீஸ்காரர் நீங்கள் இரண்டு நாள் முன்பு இந்த இடத்தில் சிவப்பு லைட் எரிந்து கொண்டிருக்கும்போது சிக்னலைக்கடந்து போயிருக்கிறீர்கள். அதற்கு இந்த போட்டோ ஆதாரம். அபராதத்தை இங்கேயே கட்டுகிறீர்களா அல்லது கோர்ட்டில் கட்டுகிறீர்களா என்று கேட்டிருக்கிறார்.

நண்பர் அங்கிருந்த போலீஸ்காரர் போகச்சொன்னதால்தானே போனேன், இப்போது அபராதம் கட்டச்சொல்கிறீர்களே, இது என்ன நியாயம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் போலீஸ்காரர், அதெல்லாம் நீங்கள் கோர்ட்டில் வந்து சொல்லிக்கொள்ளுங்கள், சார்ஜ் ஷீட் போடட்டுமா இல்லை அபராதம் கட்டிவிடுகிறீர்களா என்று கேட்டிருக்கிறார்.

நண்பர் பார்த்தார். கோர்ட், கேஸ், வக்கீல், அலைச்சல் இந்த தொந்திரவுகளெல்லாம் வேண்டாம், பணத்தோடு இந்த தொல்லை ஒழியட்டும் என்று அந்தப் போலீஸ்காரர் கேட்ட அபராதத்தைக் கொடுத்து அவரை அனுப்பி விட்டார்.

இந்தப் பிரச்சினையை வேறு எந்த விதமாகத் தீர்க்க முடியும்? எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. அந்த சிக்னலில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர், இந்த கேமரா போட்டோ பிடிக்கும் சமாசாரத்தைத் தெரிந்துகொண்டேதான் நண்பரைப் போகச்சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் கேமிரா வைத்த பிறகு எவ்வளவு கேஸ் பிடித்திருக்கிறீர்கள் என்ற கணக்கை ஆய்வுக் கூட்டங்களில் சொல்லவேண்டியிருக்கும். ஒரு கணிசமான கணக்கு காட்டாவிட்டால் போலீஸ்காரர்கள் சரியாக வேலை செய்வதில்லை என்ற கமென்ட் வரும். அதற்காக இப்படி செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது.

இனி மேல் வண்டி ஓட்டும்போது இப்படிப்பட்ட நிலை வந்தால் போலீஸ்காரரை கண்டு கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் அப்போதும் அந்த போலீஸ்காரர் வேறு ஏதாவது நாம் செய்யாத கற்பனைக் குற்றத்திற்காக நம் மேல் கேஸ் புக் பண்ணலாம்!

வியாழன், 15 நவம்பர், 2012

தொழில் நுட்ப பதிவு - ரேஷன் கடை


ரேஷன் கடை நடத்துவது பற்றி நான் எழுதுவது எல்லோரும் அறிவீர்கள். இந்த அனுபவங்கள் அனைத்தும் 1976ல் ஏற்பட்டவை. அந்த அனுபவங்களுக்கும் இன்றைய காலகட்ட நடைமுறைகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று முழு மனதுடன் நம்புகிறேன். அதற்குப்பின் வந்த அரசுகள் மக்களின் நல்வாழ்வுக்காக  பல சீர்திருத்தங்கள் கொண்டுவந்துள்ளார்கள். அதனால் இந்த தில்லு முல்லுகள் இப்போது இல்லை என்று உண்மையாக நம்புகிறேன். படிப்பவர்களும் இந்த கால வித்தியாசத்தை நன்கு உணர்ந்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ரேஷன் அரிசி தயாராகும் முறையை விவரமாகப் பார்த்தோம். இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. தஞ்சாவூர் மாவட்டம் தவிர இதர மாவட்டங்களில் கொள்முதல் செய்யும் நெல் இந்த மாதிரி ஈரத்துடன் இருக்காது. அங்குள்ள சில "வெள்ளைச்சோள" மில்காரர்கள் அந்த நெல்லை எப்போதும்போல் வேகவைத்து, காயவைத்து, அரைத்து அனுப்புவார்கள். இந்த அரிசி நன்றாகவே இருக்கும். இந்த மாதிரி லோடு வந்தவுடன் சிவில் சப்ளை கோடவுனில் இருக்கும் கலாஸ்காரர்கள் அதை மோப்பம் பிடித்து அந்த மூட்டைகளை தனியாக அடுக்கிவைத்து விடுவார்கள்.

ரேஷன் அரிசியை சாப்பிடும் முறைபற்றி தோழர் வலிப்போக்கன் எழுதியுள்ளதை இந்தப் பதிவில் பார்க்கவும்.

தனியார் ரேஷன் கடைக்காரர்களுக்கு இந்த விஷயம் தெரியும். அவர்கள் கலாஸ்காரர்களுக்கு "சம்திங்க்" கொடுத்து இந்த மூட்டைகளில் நான்கைந்தை வாங்கிக்கொள்வார்கள். அவர்களின் ரேஷன் கடைக்குப்போகும் வழியில் ஏதாவது ஒரு ஓட்டல்காரரிடம் அக்ரீமென்ட் இருக்கும். இந்த மூட்டைகளை அங்கு இறக்கிவிட்டுப் போய்விடுவார்கள். அப்படியே ஓரிரு சர்க்கரை மூட்டைகளும் "தானாகவே" அங்கே இறங்கிக்கொள்ளும்.

இப்படி சரக்குகள் குறைந்தால் ரேஷன் கடை கணக்குகளை எப்படி சரி செய்வது? அந்தக் காலத்தில் நிறைய கணக்குப்புலிகள் இருந்தார்கள். அவர்களுக்கு ஆடிட்டர்கள் என்று பெயர். ஆனைக்கு அல்வா வாங்கின கணக்கையும் கூட சரி செய்யக்கூடிய சாமர்த்தியசாலிகள் அந்தக் காலத்தில் உண்டு. இதற்கு மேல் இந்த விஷயத்தின் உள் வயணத்தைச் சொல்ல எனக்கு கூச்சமாக இருக்கிறது. ஏனென்றால் நானும் அப்படி செய்திருக்கிறேன்.

ரேஷன் கடைகளில் எடை குறைவாகப் போடுவது என்பது காலம் காலமாக வந்த ஒரு நடைமுறை. ஒரு 200 கிராம் எடைக்கல்லை சாமான் போடும் தட்டின் கீழ் புளியை வைத்து ஒட்டி விட்டால் அது பாட்டுக்கு தன் வேலையை செய்து கொண்டிருக்கும். ஒரு கிலோ போடும்போது 200 கிராம் குறைந்தால் அப்பட்டமாகத் தெரிந்து விடும். அதனால் ஒரு கிலோ போடும்போது தாராளமாகப்போடுவது போல் அதிகமாகப்போடுவார்கள். நாலு கிலோ போடும்போது 200 கிராம் குறைந்தால் தெரியாது. யாராவது அதிகாரிகள் வந்தால் அதை நைசாக எடுத்து விடலாம். இந்த விஷயத்தில் ஒரு தார்மீக நியாயமும் இருக்கிறது.

சர்க்கரை மூட்டை ஒன்று 100 கிலோ. இந்த எடை சாக்கையும் சேர்த்து உண்டான எடை. சாக்கு ஒன்றரை கிலோ. ஆக சர்க்கரை 98.5 கிலோதான் இருக்கும். இதை எப்படி நூறு கிலோவாக பில் போடமுடியும்? தவிர இந்த சில்லரை வியாபாரத்தின் இன்னொரு நுணுக்கம்- நூறு கிலோ சரக்கை ஒவ்வொரு கிலோவாக நிறுத்து விற்றால் 97 அல்லது 98 கிலோதான் வரும். அதற்குக் காரணம்- ஒரு கிலோவை தங்கம் எடை போடுகிறமாதிரி அவ்வளவு துல்லியமாகப் போட முடியாது. அப்படிப் போட்டால் வாங்குகிறவர்கள் சண்டைக்கு வருவார்கள். ஒரு பத்துப் பதினைந்து கிராம் கூடப் போய்விடும். இப்படி நூறு கிலோவிற்கு ஒன்றிரண்டு கிலோ குறைபாடு வந்துவிடும்.

ஆக மொத்தம் 100 கிலோ சர்க்கரை மூட்டையைப் பிரித்தால் 97 கிலோதான் விற்க முடியும். இதை சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. நூறு கிலோவிற்கும் பில் போடவேண்டும். இது எப்படி சாத்தியமாகும்? மறுபடியும் கணக்குப்புலிகளின் கிருபைதான்.

மண்ணெண்ணை விற்பனை இன்னும் மோசம். கொஞ்சம் ஏமாந்தால் எண்ணை வழிந்துவிடும். அந்த எண்ணையை ஒன்றும் செய்யமுடியாது. தவிர எண்ணை ஆவியாகிக்கொண்டே இருக்கும். எவ்வளவு ஜாக்கிரதையாக அளந்து விற்பனை செய்தாலும் 200 லிட்டர் பேரலுக்கு 5 லிட்டர் எண்ணை கணக்கில் வராது. இந்த 5 லிட்டருக்கு யார் பணம் கட்டுவது? மறுபடியும் புலிகள்தான்.

இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். மேல் விபரங்கள் தேவைப்படின் நேரில் வரவும். 

புதன், 14 நவம்பர், 2012

நான் நடத்திய ரேஷன் கடை - பாகம் 2


//இங்குதான் ரேஷன் கடை தில்லு முல்லுகள் ஆரம்பிக்கின்றன. எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போமா. //

என்னுடைய போன பதிவில் இப்படி முடித்திருந்தேன். இந்தப் பதிவு எழுது முன் பல சந்தேகங்கள் என்னுடைய மனதில் தோன்றின. அதாவது உண்மை எப்போதுமே கசக்கும். பலருக்கு சங்கடங்களை உண்டு பண்ணும். அதில் ஒரு சிலருக்கு போலீஸ் கமிஷனரைத் தெரிந்து இருக்கலாம்.  இந்தப் பதிவைப் பற்றி அவரிடம் சொன்னால், என் கைகளுக்கு காப்பு வருவது நிச்சயம். 

இது வரை நான் கையில் கடிகாரத்தைத் தவிர வேறு எதுவும் போட்டதில்லை.  கடைசி காலத்தில் இந்த பரிசோதனைகளெல்லாம் வேண்டுமா என்று இரவு முழுவதும் சிந்தித்தேன். ஆகவே நான் சொன்ன பதிவுக்குப் பதிலாக ஒரு கதை சொல்லலாம் என்று முடிவு செய்து இந்தப் பதிவை எழுதுகின்றேன்.

இந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் கரிகால் சோழன் காலத்தில் நடந்ததாக கற்பனை செய்திருக்கிறேன். அவை முற்றிலும் கற்பனையே. 

 இதில் கூறப்பட்ட செய்திகள் மாதிரி இந்தக்காலத்திலும் நடக்கலாம். சரித்திரம் திரும்பவும் வரும் என்று ஒரு பிரபல ஆங்கிலப் பழமொழி உண்டு. அப்படி ஏதாவது சம்பவங்களில் ஒற்றுமை தெரிந்தால் அது படிப்பவர்களின் கண் கோளாறுதானே தவிர அதில் அணுவளவும் உண்மை இல்லை என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கரிகால் சோழன் பெரிய படை வைத்திருந்தான். அதில் காலாட்படைதான் மிகவும் பெரிது. அவர்களுக்கு சாப்பாட்டுக்காக வாரம் ஒரு முறை அரிசி கொடுப்பான். இப்படி அரிசி கொடுப்பதற்காக ஒரு மந்திரியும் அவருக்கு உதவியாக பல சிப்பந்திகளும் இருந்தார்கள். அரிசியை மொத்தமாக வாங்கி ஒரு கிட்டங்கியில் சேமித்து வைப்பார்கள். அங்கிருந்து படைவீரர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு அரிசி வாங்கிக்கொள்வார்கள்.

இந்த அரிசி தயார் செய்வதற்கு ஒரு பெரிய வியாபாரி இருந்தான். அவன் நெல் கொள்முதல் செய்து அதை வேகவைத்து அரைத்து அரிசியாக்கி இந்த கிட்ங்கிகளுக்கு அனுப்பிவிடுவான். அரிசியை நன்றாக காயவிடமாட்டான். ஈரத்துடனேயே அனுப்பிவிடுவான். கிட்டங்கியில் படைவீரர்களுக்கு ஒரு வருடத்திற்கு வேண்டிய அரிசியை இருப்பு வைத்திருப்பார்கள். புதிதாக வரும் அரிசி மூட்டைகளையும் இதனுடன் வரிசையாக அடுக்கி வைத்து விடுவார்க்ள.

வீரர்களுக்கு எப்போதும் பழைய அரிசியையே தருவார்கள். ஏனென்றால் அந்த அரிசியை அதற்கு மேல் வைத்திருந்தால் தாங்காது. புதிதாக வந்த அரிசியை வீரர்களுக்குக் கொடுக்க ஒரு வருடம் ஆகும். இதுதான் நடைமுறை.

அதில் ஒரு சில வீரர்கள் மட்டும் சாப்பிடும் சாப்பாடு வித்தியாசமாக இருந்தது. அது எப்படி என்று மற்ற வீரர்கள் ஆராய்ந்தார்கள். கிட்டங்கியிலேயே சில அரிசி மூட்டைகளில் நல்ல தரமான அரிசி இருக்கும். அந்த வியாபாரி கவனிக்காதபோது சில நல்ல அரிசி மூட்டைகளும் இவ்வாறு இந்த கிட்டங்கிகளுக்கு வய்துவிடும். கிட்டங்கி சிப்பந்திகளுக்கு இந்த விவரம் தெரியும். அவர்கள் தங்களுக்கு வேண்டிய வீரர்களுக்கு தகுந்த கையூட்டு வாங்கிக்கொண்டு அந்த நல்ல அரிசியைக் கொடுப்பார்கள். இது பரம ரகசியமாக நடக்கும்.

ஆனால் யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கையூட்டு அனைவருக்கும் பங்கிடுதலால் ஒருவரும் வாயைத்திறக்க மாட்டார்கள்.

அவ்வளவுதான் கதை. எல்லோரும் தூங்கப்போங்க.

செவ்வாய், 13 நவம்பர், 2012

ரேஷன் அரிசி தயாராகும் விதம்.


எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ரேஷன் அரிசிக்கு என்று தனி நெல் ரகம் இருக்குன்னுதான் டவுனில் குடியிருக்கும் பெரும்பான்மையான மக்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களில் சிலர் நெல் காய்க்கும்  "மரத்தை" பார்த்தே இருக்கமாட்டார்கள்.

அப்படி ரேஷன் அரிசிக்கு தனி நெல் ஒன்றும் இல்லை. அதே நெல்லை வீட்டில் நாம் பதப்படுத்தி அரைத்தால் அந்த அரிசி சூப்பராய் இருக்கும். அப்படியானால் அதே நெல்லிலிருந்து எப்படி ரேஷன் கடைகளில் விற்கும் அல்லது விலையில்லாமல் கிடைக்கும் நாற்றம் பிடித்த அரிசியை தயார் செய்கிறார்கள் என்பது ஒரு சிதம்பர ரகசியம். அதை நான் இப்போது உங்களுக்கு கூறப்போகிறேன்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் ஜில்லாவில்தான் சிவில் சப்ளை டிபார்ட்மென்டின் நெல் கொள்முதல் 90 சதம் நடைபெறுகிறது. குறிப்பாக குறுவை நெல் மகசூல் முழுவதும் சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் கொள்முதல் செய்துகொள்கிறது. குறுவை நெல் அறுவடை சமயத்தில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும். அறுத்த நெற்பயிரை அப்படியே அடித்து வரும் நெல்லை சாக்கில் பிடித்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

நெல்லில் ஈரம் 10/15 சதம் இருக்கும். இதற்குக் கூடவே இருந்தாலும் இருக்கலாம். அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் இவைகளின் பல போராட்டங்களால் இந்த ஈர நெல்லை அப்படியே கொள்முதல் செய்ய அரசு ஆணையிட்டிருக்கிறது. நெல்லில் ஊரப்பதம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு விலையில் குறைத்துக்கொள்வார்கள். ஈரப்பதத்தை அளக்க புதுமையான கருவிகள் எல்லாம் உண்டு. இந்த கணக்கெல்லாம் போட்டு விவசாயி கொண்டுவந்த நெல்லைக் கொள்முதல் செய்வார்கள்.

இப்படிக் கொள்முதல் செய்த நெல் அப்படியே நெல் அரைவை மில்களுக்குப் போய்விடும். சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் இந்த மில்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும். ஈரப்பசைக்கான கழிவுகள் போக மிச்சமிருக்கும் நெல்லில் 68 சதம் அரிசி உற்பத்திசெய்து கொடுக்கவேண்டும். அதாவது இது புழுங்கல் அரிசிக்கான கணக்கு.

சாதரணமாகவே புழுங்கல் அரிசி தயார் செய்யும்போது 70 சதம் அரிசி கிடைக்கும். புழுங்கலரிசி தயார் செய்ய நெல்லை ஒரு முறை வேக வைப்பார்கள். ஆனால் இந்த மில்காரர்கள் இந்த நெல்லை இரு முறை வேகவைப்பார்கள். அப்போது அரிசி அவுட்டர்ன் 73 அல்லது 74 சதம் கிடைக்கும். ஆகவே சிவில் சப்ளை ரூல்படி 68 சதம் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் மீதி 6 சதம் மில்காரர்களுக்கு உபரி லாபம். தவிர ஈரப்பசை கணக்கில் பல குளறுபடிகள் செய்து அதிலும் லாபம் வரும்.

இப்படி தயார் செய்த அரிசி ஏறக்குறைய ஊறவைத்த அரிசி மாதிரி ஈரமாகத்தான் இருக்கும். அந்த அரிசியை சாக்கில் பிடித்து சிவில் சப்ளை கோடவுனுக்கு அனுப்பி விடுவார்கள். அந்த கோடவுன்களில் எப்போதும் 6 மாத ரேஷன் தேவைக்கான அரிசி ஸ்டாக் வைத்திருப்பார்கள். புதிதாக வந்த அரிசி மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அட்டி போட்டு அடுக்கி வைப்பார்கள். இப்படி வந்த அரிசி ரேஷன் கடைகளுக்குப் போக எப்படியும் 6 மாதம் ஆகும். சில சமயம் அதற்கு மேலும் ஆகலாம்.

நாம் வீட்டுக்கு அரிசி வாங்கி வந்தால், நம் வீட்டுப் பெண்கள் அந்த அரிசியை ஒரு ஓரமாக கொட்டி பரத்தி வைப்பார்கள். இரண்டு நாட்கள் கழித்து அதை ஏதாவது பாத்திரத்தில் எடுத்து வைப்பார்கள். அப்போதுதான் அந்த அரிசியில் உள்ள ஈரப்பதம் போய் அரிசி கெடாமல் இருக்கும். அரிசி வாங்குவதில் அனுபவம் உள்ளவர்கள் அரிசி வாங்கும்போது இரண்டு அரிசியை எடுத்து வாயில் போட்டு கடித்துப் பார்ப்பார்கள். கடிக்கும்போது "கடுக்" என்று சத்தம் வரவேண்டும். அப்போதுதான் அந்த அரிசி நன்றாகக் காய்ந்த அரிசி என்று பொருள். அந்த அரிசியையே இரண்டு நாள் ஆறவைத்து பிறகுதான் எடுத்து வைப்பார்கள்.

சிவில் சப்ளை கோடவுனுக்கு வரும் அரிசி ஏறக்குறைய இட்லிக்கு ஊறவைத்த அரிசி மாதிரிதான் இருக்கும். இதை காற்றோட்டம் இல்லாத கோடவுனில் பத்துப்பனிரெண்டு மூட்டைகளாக அட்டி போட்டு ஆறு மாதம் வைத்திருந்தால் என்னென்ன மாறுதல்கள் அந்த அரிசியில் உண்டாகும் என்று யோசித்துப் பாருங்கள். அந்த அரிசி மக்கி, பூசணம் பிடித்து, கம கம என்று ஒரு ஸ்பெஷல் வாசனை ஏற்பட்டு மஞ்சள் கலராக மாறி இருக்கும். இதுதான் ரேஷன் அரிசி தயாரிக்கும் முறை.  

திங்கள், 12 நவம்பர், 2012

நான் நடத்திய ரேஷன் கடை - பாகம் 1


சமீபத்தில் வந்த ஜெயதேவ் அவர்களின்

 "பூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்." என்ற  பதிவில்  அவர் எழுதியிருந்த ஒரு வாசகம்.

நீங்கள் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும்போது [கம்பியூட்டர் எல்லாம் பார்க்கிறீங்க, நீங்க எங்கே வாங்கியிருக்கப் போறீங்க..........!!] 

இதற்கு என்னுடைய பின்னூட்டம்
என்னங்க இப்படிச் சொல்லிப்புட்டீங்க? நான் ரேஷன் கடையே நடத்தீருக்கேன். அது பற்றி ஒரு தனிப் பதிவு போடுகிறேன்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வீராப்பா பின்னூட்டம் போட்டுட்டேன். பதிவு எழுதித்தானே ஆகணும்.


என்னுடைய உத்தியோகத்திற்கும் ரேஷன் கடைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் சம்பந்தம் உண்டாகி விட்டது. எப்படியென்றால் எனக்கு 1976 ல் மதுரை விவசாயக் கல்லூரிக்கு உத்தியோக உயர்வுடன் மாற்றல் வந்தது. மிகுந்த மனக் கஷ்டத்துடன் போய் வேலையில் சேர்ந்தேன். மனக்கஷ்டத்திற்கு காரணம் சில குடும்ப சூழ்நிலைகள். பிற்பாடு அவைகள் சரியாகிவிட்டன. மதுரையில் வேலை செய்த காலம் பொற்காலம் என்று நினைக்குமளவிற்கு சூழ்நிலைகள் மாறிவிட்டன.

மதுரை விவசாயக்கல்லூரி மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் ஒத்தக்கடை என்னும் இடத்தில் யானைமலை அடிவாரத்தில் இருக்கிறது.இங்கு பணி புரியும் அலுவலர்களுக்கு குடியிருப்புகள் உண்டு. தவிர சுமார் ஆயிரம் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். இவர்களுக்கு வேண்டிய அன்றாடத்தேவைக்கான பொருள்களை வாங்க வேண்டுமென்றால் மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒத்தக்கடை என்னும் கிராமத்திற்குத்தான் போகவேண்டும்.

இவர்களுக்கு உதவுவதற்காக கல்லூரி வளாகத்திலேயே ஒரு கூட்டுறவு பண்டகசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சிறிய பொட்டிக்கடை மாதிரிதான் இருக்கும். இங்கு சோப்பு, பேஸ்ட், பிரஷ், பேனா, பென்சில், பலசரக்கு சாமான்கள் இத்தியாதி பொருட்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். இங்கேயே ரேஷன் பொருட்களும் விற்பதற்கு அனுமதி வாங்கி, அந்த விற்பனையும் நடந்து கொண்டிருந்தது. ஆகவே அந்த ஸ்டோர் ஒரு பலசரக்கு மற்றும் ரேஷன் கடையாக பயன்பட்டுக் கொண்டிருந்தது. இதை நடத்துபவர் அங்கு குடியிருப்பில் வசிக்கும் ஏதாவது ஒரு பேராசிரியர். அவருக்கு அந்த ஸ்டோருக்கு செக்ரடரி என்று பதவிப்பெயர். ஊதியம் இல்லா கௌரவப் பதவி.

நான் அங்கு போய் வேலைக்கு சேருவதற்கு முன்பே,, அங்குள்ள கல்லூரித் தலைவர் எனக்கு அந்த வேலையைக் கொடுப்பதென்று முடிவு செய்திருக்கிறார். இந்த விஷயம் பிற்பாடுதான் எனக்குத் தெரிந்தது. அவர் எனக்கு ஆசிரியரும் கூட. அதனால் அவருடைய விருப்பத்தை என்னால் மறுக்கமுடியவில்லை. அங்கு போய் சில நாட்களிலேயே இந்தப் பதவி எனக்கு கொடுக்கப்பட்டது.

மாலை 6 மணி முதல் 8 மணி வரை கடையின் விற்பனை நேரம். ஆபீசிலிருந்து வீட்டுக்குப் போய் காப்பி குடித்து விட்டு கடைக்குப் போவேன் எனக்கு உதவிக்காக இன்னொரு பேராசிரியரையும் கல்லூரித்தலைவர் போட்டிருந்தார். எடுபிடி வேலைக்காக இரண்டு உதவியாளர்களை நாங்கள் நியமித்துக்கொண்டோம். எல்லாம் கல்லூரியில் வேலை செய்யும் நபர்கள்தான். 

ஸ்டோர் பதவி எடுத்துக்கொண்டவுடன் வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். சரக்கு கொள்முதல் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில்தான் வாங்கவேண்டும். அதுதான் சிறு கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு உண்டான சட்டம். அங்கு இல்லாத பொருட்களை வெளியில் வாங்கிக்கொள்ளலாம். ரேஷன் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணை இவைகளை சிவில் சப்ளை டிபார்ட்மென்டிலிருந்து வாங்கிக்கொள்ளவேண்டும்.

இதில் இந்த ரேஷன் வியாபார நுணுக்கங்களை மட்டும் பார்க்கலாம். ரேஷன் அரிசி என்பது ஒரு தனி ரகம். அதை எவ்வளவு பேர் சாப்பிட்டுப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அதை சாப்பிடுவதற்கு தனி தைரியம் வேண்டும். உடல் உழைப்புத் தொழிலாளிகள் இந்த சாப்பாட்டைத்தான் சாப்பிடுவார்கள்.  அதுதான் அவர்களுக்குக் கட்டுப்படியாகும்.

இந்த அரிசி ஏன் இப்படிப்பட்ட மகத்துவம் பெற்றது என்பது ஒரு தனிக்கதை. அதையும் எழுத ஆசைதான். ஆனால் தேசத்துரோகி என்று பிடித்து உள்ளே போட்டு விடுவார்களோ என்ற பயத்தினால் எழுதவில்லை.

இந்த ரேஷன் பொருட்களை வாங்க முதலில் சிவில் சப்ளை ஆபீசில் பணம் கட்டிவிட்டு கோடவுனுக்குப் போகவேண்டும். பணம் கட்டின ரசீதைக் காட்டினால் அங்குள்ள சிப்பந்திகள் அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகியவைகளை நாம் கொண்டு போயிருக்கும் வாகனத்தில் ஏற்றி விடுவார்கள். ஏற்றுக்கூலி தனியாகக் கொடுத்து விடவேண்டும். இதை இந்தப் பொருள்களின் விற்பனை விலையில் சேர்த்தக்கூடாது. சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் நிர்ணயித்துள்ள விலையில்தான் ரேஷன் பொருட்களை விற்கவேண்டும்.

கூட்டுறவு விற்பனை நிலையங்கள் தங்கள் மற்ற வியாபாரத்திலிருந்து வரும் லாபத்திலிருந்துதான் இந்தச் செலவை ஏற்றுக் கொள்ளவேண்டும்.  கூட்டுறவு விற்பனை நிலையங்கள் இந்தச் செலவை இவ்வாறு சரிக்கட்ட முடியும். ஆனால் தனியார் நடத்தும் ரேஷன் கடைகளில் எப்படி இந்த செலவை சமாளிக்க முடியும்?

இங்குதான் ரேஷன் கடை தில்லு முல்லுகள் ஆரம்பிக்கின்றன. எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போமா. 

வியாழன், 8 நவம்பர், 2012

நாம் சாப்பிடும் உணவில் என்னென்ன இருக்கிறது?


தமிழ் நாட்டில் நாம் சாப்பிடுவது பெரும்பாலும் அரிசி, பருப்பு, எண்ணை மற்றும் காய்கறிகள் கலந்த உணவுகள்தான். இவைகளைப் பலவிதங்களில் சாப்பிடுகிறோம். இந்த உணவுகள் நம் இரைப்பையில் ஜீரணமாகி நம் உடலில் எவ்வாறு சேர்கின்றன, அவைகளின் வேலை என்ன என்பதைத் தெரிந்து கொள்வது சில தவறான கருத்துகளை மாற்ற உதவும்.

அரிசி, பருப்பு, எண்ணை மற்றும் காய்கறிகள்

இவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அரிசி: இதில் தானியவகை உணவுகள் அனைத்தும் அடங்கும். கோதுமை, அரிசி, ராகி, சோளம், கம்பு, மற்றும் இவைகளிலிருந்து தயார் செய்யப்படும் அனைத்து உணவு வகைகளையும் இந்த குரூப்பில் சேர்த்துக் கொள்ளவும்

இந்த வகை உணவுகளில் உள்ள பொருள் ஸ்டார்ச்சு என்று சொல்லப்படும் கார்போஹைட்ரேட். கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் என்ற மூன்று கனிமங்கள்தான் இவைகளில் இருப்பதால் “கார்போஹைட்ரேட்ஸ்” என்ற பெயர் வந்தது. இந்த வகை உணவுகள்தான் நாம் உயிர் வாழவும், வேலை செய்யவும் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன.

இந்த ஸ்டார்ச்சு சத்தானது மனிதர்களில் இரைப்பையில் ஜீரணமாகி குளுகோஸ் ஆக மாறுகிறது. இந்த குளுகோஸ் குடல்வால்களின் மூலமாக உறிஞ்சப்பட்டு இரத்தத்துடன் கலக்கிறது. இரத்த ஓட்டத்தின் மூலமாக குளுகோஸ் உடலின் எல்லா பாகங்களுக்கும் போகிறது. இந்த குளுகோஸ் உடலிலுள்ள செல்களின் உள்ளே சென்று ரசாயன மாற்றங்கள் அடைந்து சக்தியாக மாறுகிறது. உடல் அவயவங்கள் ஓய்வில்லாது இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த இயக்கத்திற்கு சக்தி அவசியம். அந்த சக்தி இவ்வாறுதான் கிடைக்கிறது.

இது தவிர, மனிதர்கள் வேலை செய்யும்போது அந்த உழைப்பிற்கும் சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியும் இவ்வாறு செல்களில் குளுகோஸ் மாற்றம் அடைவதால்தான் கிடைக்கிறது. சாப்பிட்ட உணவு முழுவதும் ஜீரணமாகி இவ்வாறு சக்தியாக மாறி செலவான பிறகு உடலுக்கு சோர்வு உண்டாகிறது. அப்போது உடலுக்கு சற்று ஓய்வும் உணவும் தேவைப்படுகின்றது. உணவு உண்டவுடன் மறுபடியும் இந்த சுழற்சி மூலம் சக்தி கிடைக்கிறது.

இதுதான் அரிசி, மற்றும் அதுபோன்ற தானிய உணவுகளின் பயன். இந்த தானியங்களில் சிறிதளவு புரதச்சத்தும், எண்ணைச் சத்தும் இருக்கும். ஆனால் அவை உடலின் தேவைக்குப் போதாது. அந்தத் தேவையை ஈடுகட்ட பருப்பு வகை உணவுகளும் எண்ணை வகை உணவுகளும் தேவை.

பருப்பு: எல்லாவிதமான பருப்புகளும் இதில் அடங்கும். துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பீன்ஸ் கொட்டைகள், கொள்ளு, பாசிப்பயறு முதலான பருப்புகளை நாம் சாப்பிடுகிறோம். இந்த பருப்புகளில் 
உள்ள முக்கிய பொருள் புரதச்சத்து ஆகும். புரதத்தில் நைட்ரஜன் தனிமம் ஒன்று 
அதிகப்படியாக இருக்கும். இந்த நைட்ரஜன் எல்லா உயிர்களுக்கும் 
இன்றியமையாத ஒரு தனிமம் (Element). அனைத்து ஜீவராசிகளின் செல்களின் கருக்களும் புரொட்டீனால் (புரதம்) ஆனவை. புரொட்டீன் இல்லையென்றால் உயிர் இல்லை. அந்த அளவிற்கு இது முக்கியமானது. எல்லா பருப்புகளிலும் சுமார் 25 சதம் புரொட்டீன் இருக்கும்.

ஜீவராசிகளின் செல்களுக்கு ஒரு குணம் என்னவென்றால், அவை 14 முதல் 24 நாட்களுக்கு ஒரு முறை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும். மனிதனும் இந்த தத்துவத்திற்கு விலக்கல்ல. ஆகவே நாம் ஒவ்வொருவரும் 24 நாட்களுக்கு ஒரு முறை புது அவதாரம் எடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். இப்படி செல்கள் புதுப்பித்துக்கொள்ள புரொட்டீன் அவசியம் தேவைப்படுகின்றது. செல்களில் உள்ள பழைய புரொட்டீன் அழிக்கப்பட்டு யூரியாவாக மாறி சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.

இப்படி புது செல்கள் உருவாகத் தேவைப்படும் புரொட்டீன்கள், பருப்பு வகை உணவுகளிலிருந்து கிடைக்கிறது. உடம்பின் ஒரு கிலோ எடைக்கு அரை கிராம் புரொட்டீன் வேண்டும் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். அப்படியானால் 60 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 30 கிராம் புரொட்டீன் வேண்டும். பருப்பு மற்றும் மற்ற உணவுகளில் உள்ள புரொட்டீன் 40 முதல் 50 சதம்தான் உடலில் சேரும். ஆகவே இவ்வொரு மனிதனும் ஏறக்குறைய 60 கிராம் புரொட்டீன் இருக்கும் உணவுகளை ஒவ்வொரு நாளும் சாப்பிடவேண்டும்.

எண்ணை வகைகள்:   எண்ணை என்றாலே கொழுப்பு என்றுதான் எல்லோரும் நினைக்கின்றனர். அது ஓரளவிற்குத்தான் சரி. அதிக கொழுப்பு சாப்பிடுபவர்கள் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேரும் என்பது உண்மைதான். ஆனால் தினமும் உணவில் கொழுப்பு சத்து அளவாகச் சேரவேண்டும்.

இது இரண்டு விதத்தில் உடலுக்கு உதவுகிறது. ஒன்று நம் உடலிலுள்ள கொழுப்பை புதுப்பிக்கத் தேவைப்படுகிறது. இரண்டாவது உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கிறது.

மாமிச உணவுகளில் (மீன் தவிர) பொதுவாக கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறது. அசைவம் அதிகமாக சாப்பிடுபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். தாவர எண்ணை வகைகளில் எல்லா வகை எண்ணைகளையும் நம் முன்னோர்கள் உபயாகித்து வந்திருக்கிறார்கள். அவைகளை நாமும் உபயோகிக்கலாம். தவறு எதுவுமில்லை. ஆனால் அளவாக உபயோகிக்கவேண்டும். விளம்பரங்களில் பயங்காட்டுவது போல பயப்பட வேண்டியது அவசியம் இல்லை.

காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள்.
இவைகள் மனித உடலுக்கு வேண்டிய தாதுக்களையும், நார்ச்சத்தையும் கொடுக்கின்றன. தாதுக்கள் மனித உடம்பிற்கு வேண்டிய வைட்டமின்கள், என்சைம்கள், ஹார்மோன்கள் ஆகியவைகளை உற்பத்தி செய்வதற்கு அவசியமாகிறது. நார்ச்சத்து மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கும்.

எந்த வகை உணவையும் தனியாக சாப்பிட்டு வந்தால் நாளடைவில் உடல் க்ஷீணிக்கும். ஆகவே எல்லா வகை உணவுகளையும் கலந்து சரியான விகிதத்தில் சாப்பிட்டு வரவேண்டும். இதைத் தான் சரி விகித உணவு என்று சொல்கிறார்கள். மனிதன் ஆரோக்கியமான வாழ்வு வாழ சரி விகித உணவு அவசியம். 

புதன், 7 நவம்பர், 2012

TNAU இன்னொரு படம் - டெஸ்ட்டுக்காக

மக்கள் மன்னிக்கவும். இது இன்னொரு தளத்தில் உண்டாக்கியது. என்னுடைய நினைவுக்காக பதிந்திருக்கிறேன். தளத்தின் பெயர்: http://www.dermandar.com/


வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியைச் சொடுக்கினால் போட்டோ முழு ஸ்கிரீனிலும் தெரியும்.

செவ்வாய், 6 நவம்பர், 2012

தனி மனித சுதந்திரம்




 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 


*

திங்கள், 5 நவம்பர், 2012

தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் - 360 டிகிரி போட்டோ

கடந்த பல வருடங்களாக போட்டோகிராபியில் பல நூதன தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. அவைகளில் ஒன்றுதான் 360 டிகிரி போட்டோக்கள். கூகுள் மேப்பில் இந்த மாதிரியான படங்கள் உள்ளன.

இதில் என்ன விசேஷம் என்றால், நாம் ஒரு இடத்தில் இருந்து கொண்டு 360 டிகிரியில் சுற்றிப்பார்த்தால் எந்த மாதிரி தெரியுமோ அது மாதிரி போட்டோவில் தெரியும். அம்புக்குறிகளையோ மவுஸையோ பயன்படுத்தி இந்த போட்டோக்களை சுற்ற வைக்கலாம்.

இது என்னமோ பெரிய இந்திர ஜால வித்தை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பொழுது போகாமல் கூகுளை மேய்ந்து கொண்டிருந்தபோது இதைப்பற்றி ஆராய்ந்தேன். இந்த மாதிரி செய்து கொடுப்பதற்கு ஒரு தளம் கண்ணில் பட்டது.

http://www.panomonkey.com/

இந்த தளத்தில் சொல்லியுள்ள மாதிரி போட்டோக்கள் எடுத்து அந்த தளத்தில் அப்லோடு செய்தால் 360 டிகிரி போட்டோ செய்து கொடுக்கிறார்கள். அப்படி செய்த ஒரு போட்டோவை இங்கு இணைத்திருக்குறேன். நான் இதை காசு கொடுத்து வாங்காகததால் முதல் 100 பேருக்கு மட்டும்தான் தெரியுமாம். பார்த்து நன்றாக இருக்கிறதென்று நீங்கள் கருதினால் காசு கொடுத்து வாங்கி விடுகிறேன்.



வலது மேல் மூலையில் உள்ள Expand  அம்பை சுட்டினால் முழு ஸ்கிரீனிலும் தெரியும். நான் படித்து வேலை பார்த்து ஓய்வு பெற்று இன்று அமைதியான வாழ்க்கை வாழ உதவிய பல்கலைக்கழகம்.

வெள்ளி, 2 நவம்பர், 2012

சுகப்பிராப்தியும் துக்க நாஸ்தியும்

[இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து அதை பராமரிக்கும் ஒரு சக்தி இருக்கலாம். ஆனால் அது என்ன என்று மனிதன் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. அதுவரையிலும் நாம் இந்த சாஸ்திரங்களையுக் புராணங்களையும் இதிகாசங்களையும் படித்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அவைகளை எவ்வளவு நம்பலாம் என்பதை, அவைகளின் தோற்றங்களை ஆராய்ந்து பிறகு முடிவு எடுங்கள்.]



சுகம் - உலகில் பிறந்துள்ள அத்துணை ஜீவராசிகளும் இதைத்தான் விரும்புகின்றன. அதாவது துன்பமில்லாத, இன்ப வாழ்வு. ஆனால் இத்தகைய வாழ்வு தேவலோகத்தில் வாழ்பவர்களுக்குக் கூட கிடைப்பதில்லை என்றுதான் பல புராணங்கள் மூலமாக அறிகிறோம்.

அசுரர்களுக்கு மும்மூர்த்திகள் அவர்கள் கேட்ட வரங்களை முன்பின் யோசியாமல் தருவதும், பிறகு அதனால் வரும் துன்பங்களை மும்மூர்த்திகளில் இன்னொருவர் தீர்ப்பதுவும், காலங்காலமாக நடந்துவரும் தொடர்கதை. இராவணனுக்கு வரம் கொடுப்பது ஏன், பிறகு அவனால் ஏற்படும் இன்னல்களுக்கு, ராமாவதாரம் எடுத்து அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து அவனைக் கொல்வானேன்?

இந்தப் புராணக்கதைகளைக் கேட்கும்போது சுஜாதாவின் துப்பறியும் கதைகள் எனக்கு ஞாபகம் வருவதைத் தடுக்க முடிவதில்லை. மனித வாழ்வில் ஏற்படும் அத்தனை திருப்பங்களும், வக்கிரங்களும், கடவுளர்களின் வாழ்க்கையிலும் ஏற்பட்டுள்ளதாக, இந்தப் புராணங்கள் கூறுகின்றன. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கடவுளர்கள் மனிதனைப்போல் நடந்து கொள்வதுதானே இயல்பு. புராணங்களில் மனிதனின் வக்கிர நடவடிக்கைகள் அனைத்தையும் கடவுள்களும் செய்திருப்பதாகத்தான் எழுதியிருக்கிறது. இப்படிப்பட்ட கருத்துகளை நான் எழுதுவதால் ஆஸ்தீகர்கள் என் மேல் வருத்தப்படலாம். ஆனால் நான் சொல்பவை பொய்யென்று சொல்லமுடியாது. ஆகவே மெய்யன்பர்களே, சிந்தியுங்கள். மெய்ஞ்ஞானம் பெறுங்கள். கடவுள் சிந்தாந்தத்தை, அதன் அடிப்படையை ஆராயுங்கள்.

நமக்கு மேல் உள்ள சக்தியைக் கண்டு பயப்படுவது மனிதனின் இயற்கை. அதனால்தான் ஆதி காலத்தில் சூரியன், சந்திரன், காற்று, மழை இவைகளைக் கண்டு பயந்தான். அவைகளைக் கடவுளாக எண்ணி வழிபடவும் செய்தான். நாளாவட்டத்தில் சிந்தனாவாதிகள் பல கடவுள்களை உற்பத்தி செய்தார்கள். நன்றாகக் கவனிக்கவும். கடவுள் மனிதனை உற்பத்தி செய்தாரோ என்னமோ, நமக்குத் தெரியாது. ஆனால் நாம் இன்று வழிபடும் கடவுள்களை உற்பத்தி செய்தது மனிதன்தான்.

இந்து மதத்தின் அடிப்படையான வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் மனிதனால்தான் கற்பனையில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதை நான் உறுதியாகச்சொல்லக் காரணம், இந்த உலகம் தோன்றி பல்லாயிரக் கணக்கான வருடங்கள் சென்ற பிறகுதான் மனிதன் தோன்றினான். மனிதன் தோன்றினபொழுது அவனுக்குப் பேசத் தெரிந்திருக்கவில்லை. நாளாவட்டத்தில்தான் மொழி தோன்றியது. மொழி தோன்றி பல காலம் கழித்துத்தான் வரிவடிவங்கள் தோன்றியிருக்கவேண்டும். அதன் பிறகுதான் இந்தக் கதைகள் உதித்திருக்கவேண்டும்.

கடவுள் ஆதாமை தோற்றுவித்தார். அவனுடைய விலா எலும்பிலிருந்து ஏவாளைத் தோற்றுவித்தார் என்னும் கதைகளை நம்புபவர்கள் இருக்கலாம். ஆனால் இன்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளுக்கு இந்தக் கதைகள் எவ்விதத்திலும் ஒத்துப் போகவில்லையே? இராவணன் புஷ்பக விமானத்தில் சீதையைக் கடத்தினான், ஆகவே பாரத நாட்டில் அன்றே இண்டியன் ஏர்லைன்ஸ் விமான சர்வீஸ் இருந்தது என்று அரசமரத்தடித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பேசுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

இப்படி சர்வ சக்தி வாய்ந்த கடவுளர்களே துக்கங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. இது எப்படி என்று யோசிக்கவேண்டும். இவைகளிலிருந்து ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது. உலகில் பிறந்த எல்லோரும் சுகம், துக்கம் இரண்டையும் அனுபவிக்கத்தான் வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது என்பதே. இதை உணர்ந்த மனிதன் தான் கற்பனை செய்த கடவுளர்களும் அப்படியே சுகம் துக்கம் இரண்டையும் அனுபவிக்குமாறு செய்துவிட்டான்.

ஆகவே, நண்பர்களே, கடவுளர்களின் கதைகளைக் கேட்கும்போது கொஞ்சம் நம் புத்தியையும் செலவிட வேண்டும்.

புதன், 31 அக்டோபர், 2012

விண்டோஸ் 8 Pro. நிறுவினேன்.



சில நாட்களுக்கு முன் விண்டோஸ் 7 Home Basic வாங்கி என் கம்ப்யூட்டரில் நிறுவினேன். விண்டோஸ் 7 நிறுவினவர்களுக்கு விண்டோஸ் 8 Pro. சலுகை விலையில் கொடுப்பதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்திருந்தது. இதற்கு முன்பே “விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ” நிறுவி அதில் ஈடுபாடு வந்துவிட்டது. ஆகவே விண்டோஸ் 8 ஜ விலை கொடுத்து வாங்கிவிடுவது என்ற ஆசை வந்தது.

அக்டோபர் 26 ம் தேதி விண்டோஸ் 8 ரிலீஸ் பண்ணினார்கள். நம் ஊரில் 27 ம் தேதி 00.01 AM முதல் கிடைக்க ஆரம்பித்தது. அதாவது இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளவேண்டும். அதற்கு நம் கம்ப்யூட்டரில் ஒரிஜினல் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் XP நிறுவியிருக்கவேண்டும். நாம் விண்டோஸ் 8 டவுன்லோடு செய்ய முதலில் இன்டர்நெட்டில் பணம் கட்டவேண்டும். (1999 ரூபாய்). முதல் நாள் என்னுடைய ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை. அடுத்த நாள் என் பெண்ணின் கிரெடிட் கார்டை உபயோகித்தேன். பணம் மைக்ரோசாஃப்ட் கம்பெனிக்கு போனவுடன் விண்டோஸ் 8 டவுன்லோடு செய்ய விண்டோஸ் கீ வந்து விட்டது.

டவுன்லோடுக்கு இரண்டு மணி நேரம் ஆயிற்று. அந்த பைல், ISO வடிவில் இருக்கிறது. அதை DVD யில் ஏற்றவேண்டும். அதன் பிறகு அந்த DVD ஐ கம்ப்யூட்டரில் போட்டு விண்டோஸ் 8 ஐ நிறுவ வேண்டும். அதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. மொத்தமாக நான்கு மணிநேரம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் கரன்ட் கட் ஆகாமல் வேறு தொந்திரவுகள் வராமல் இருக்கவேண்டும். கடவுள் புண்ணியத்தில் எந்த தொந்திரவும் இல்லாமல் விண்டோஸ் 8 ஐ நிறுவி விட்டேன்.


விண்டோஸ் 8 உடன் “விண்டோஸ் மீடியா சென்டர்” என்ற புரொகிராமை இலவசமாக கொடுக்கிறார்கள். அதற்கு தனியாக ஈமெயில் அனுப்பி, தனி கீ வாங்கவேண்டும். அப்படியே செய்து, அதன் கீ வந்தவுடன் அதையும் டவுன்லோடு செய்து நிறுவினேன்.  “விண்டோஸ் மீடியா சென்டர்”  என்ற புரொக்ராம் எல்லா வகையான ஆடியோ, விடியோ பைல்களையும் பிளே பண்ணுகிறது. இது ஒரு நல்ல புரொக்ராம்.


விண்டோஸ் 8 புரொக்ராமில் Antivirus சேர்ந்திருக்கிறது. தனியாக Antivirus மென்பொருள் வாங்க வேண்டியதில்லை.

இப்படியாக இந்த இரண்டு மாதங்களில் மென்பொருட்களுக்காக ஏறக்குறைய பத்தாயிரம் ரூபாய் செலவு ஆகிவிட்டது.

பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இதற்கு முந்தைய விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் XP ஐ விட விண்டோஸ் 8 ல் பிரமாதமாகச் சொல்வதற்கு ஏதுமில்லை. விண்டோஸ் 77ஏழுக்கு ஒரு புது டிரஸ் மாட்டியிருக்கிறார்கள், அவ்வளவுதான். நான் கம்ப்யூட்டர் வைத்திருப்பது இந்த மாதிரியான கிறுக்குத்தனங்கள் பண்ணுவதற்காகத்தான். அதனால்தான் விண்டோஸ் 8 ஐ வாங்கினேன். குழந்தைகள் ஒரு பொம்மை பழசாகிப் போனால் வேறு புது பொம்மை வாங்குகிறார்கள் அல்லவா? அதுமாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அன்றாடத் தேவைகளுக்கு இந்த விண்டோஸ் 8, ஒன்றும் புதிதாக தரப்போவதில்லை.

திங்கள், 29 அக்டோபர், 2012

முக்காத் துட்டுக்கு கருப்பட்டி வாங்கீட்டு வாடோய்!


அந்தக் காலத்தில இந்த சொல்லை அடிக்கடி கேட்கலாம். பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோரும் சொல்லக் கூடிய வாக்கியம் இது.

இதனுடைய உட்பொருள் ஒரு உதாரணம் சொன்னால்தான் சரியாக விளங்கும். ஊர்ல செல்வாக்கான ஒருத்தர், அவருக்கு வேண்டாதவனைப் பற்றி ஏதோ திட்டி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். எல்லா ஊர்களிலும் நாரதர்கள் இருப்பார்கள். அதில் ஒருத்தன் அந்த திட்டப்பட்டவனிடம் போய் வத்தி வைப்பான். அவனுக்கும் கோபம் வந்து இவனைப்பற்றி ஏதாவது மோசமாகச் சொல்லுவான். இந்த நாரதர் திரும்ப வந்து இவரிடம் ஒண்ணுக்கு ரெண்டாக பத்த வைப்பான்.

இத பாருங்க அவன் உங்க கையை வெட்டறேனுங்கறானுங்க என்பான். இவருக்கும் கோபம் வரும். அப்போது அவர் வழக்கமாகச் சொல்லும் வார்த்தை என்னவென்றால், ஊம், அவனுக்குப் பயந்துகிட்டு நான் எறும்புக் குழியிலதான் ஒளிஞ்சுக்கோணும், போயி முக்காத்துட்டுக்கு கருப்பட்டி வாங்கிட்டு வா, என்பார். கருப்பட்டி எதற்கென்றால், கருப்பட்டிய வாசல்ல போட்டா, அதைத்தேடி எறும்புகள் வரும், அப்போ எறும்புக்குழி எங்க இருக்குன்னு தெரியும், அதுல போயி ஒளிஞ்சுக்கப்போறேன் என்று பொருள். எறும்புக்குழிக்குள் மனிதன் ஒளிய முடியாதென்று நன்றாகத் தெரியும். ஆனாலும் ஒரு எகத்தாளத்திற்காக சொல்லும் வார்த்தை இது.

இந்த பீடிகை எதற்கென்றால், நான் இனிமேல் ஒரு பதிவு போட்டவுடன் முக்காத்துட்டுக்கு கருப்பட்டி வாங்கீட்டு வந்து வச்சுக்கப்போறேன். யாராச்சும் என் பதிவில அது சொத்தை இது சொத்தைன்னு போலீஸ்ல புகார் செஞ்சா, உடனே அந்த எறும்புக் குழிக்குள்ள போயி ஒளிஞ்சக்கப் போறேன். எல்லாப் பதிவர்களும் இப்படியே செய்யவும்.

பின்குறிப்பு: அந்தக் காலத்தில ரூபாய் அணா பைசாக்கள் புழக்கத்தில் இருந்தது பெரியவங்களுக்கு ஞாபகம் இருக்கும். அப்போ ஒரு துட்டு என்பது நாலு பைசா அதாவது இன்றைய இரண்டு நயா பைசாவுக்கு சமம். முக்காத்துட்டு என்பது மூன்று பைசா அதாவது காலணா. புழக்கத்தில் இருக்கும் மிகச்சிறிய நாணயம். அதுக்கே இரண்டு அச்சு வெல்லம் கொடுப்பார்கள்.

ஒரு பணம் என்பது நான்கு அணா, கால் ரூபாய். கோமணத்தில ஒரு பணம் இருந்தா கோழி கூவறப்ப பாட்டு வரும் என்பது அந்தக் காலத்து பழமொழி.

கணக்குப்புலிகளுக்கு: இந்தக் கணக்கை மனக்கணக்காகப் போடவேண்டும். பேப்பர், பேனா வைத்துப் போடக்கூடாது.

காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் கத்தரிக்காய் என்றால் காசுக்கு எத்தனை கத்தரிக்காய்?


வியாழன், 25 அக்டோபர், 2012

ஒத்துங்கோ, தீப்பொறி பறக்குது!


நான் பதிவுகள் எழுத வந்தது முதல் அவ்வப்போது பதிவுலகத்தில் புயலடிப்பது வழக்கம்தான். கொஞ்ச நாளா, என்னடா பதிவுலகத்தில ஒண்ணும் விறுவிறுப்பா இல்லியேன்னு யோசிச்சிட்டு இருந்தேன். இப்போ பெரிய புயலா அடிக்குது. அதப்பத்தி நான்  (பிரபல பதிவர் - பாருங்க, நானே சொல்லவேண்டியிருக்கிறது, என்ன பண்றது, வேற யாரும் சொல்ல மாட்டேங்குறாங்களே)  ஒண்ணும் சொல்லாம இருந்தா அது எனக்கு எப்பேர்ப்பட்ட அவமானம்?

நான் சின்ன வயதாயிருக்கும்போது ஒரு நாள் "ஐயோடா" என்று எதற்கோ சொல்லிவிட்டேன். என் அப்பா என்னைக் கண்டித்தார். அந்த வார்த்தையை சொல்லக்கூடாது என்று சொன்னார். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அந்த வார்த்தை ஒன்றும் கெட்ட வார்த்தையில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

பின்னாளில்தான் தெரிந்தது. அந்த வார்த்தை என். எஸ். கிருஷணன் ஒரு சினிமாவில் அடிக்கடி சொன்ன வார்த்தை என்று. நான் அந்த வார்த்தையை சொன்ன காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.கே.தியாகராஜ பாகவதரும் லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கில் கைதாகி சிறையில் இருந்தார்கள். அதனால் அந்த வார்த்தை தீண்டத்தகாத வார்த்தையாகி விட்டிருந்தது.

அந்த மாதிரி, இப்போ, ஒரு வார்த்தை ஆகிவிட்டிருக்கிறது. அந்த வார்தையைச் சொன்னால் ஜெயிலில் போட்டுடுவாங்களாமே? அப்படீன்னுதான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அதனால் அந்த வார்த்தையை நான் இங்கு சொல்லமாட்டேன். அது தெரிய வேண்டுபவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசுக்குச் சென்றால் சொல்லி விட்டு, உங்களையும் கொஞ்ச நாள் அங்கேயே வைத்து ஸ்பெஷல் சாப்பாடு கொடுத்து உபசரிப்பார்கள்.

பல புயல்கள் வீசின என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போனால் எப்படி என்று கேட்பீர்கள். அதற்காக எனக்குத் தெரிந்த சில புயல்களின் பெயர்கள்.

1. போலி பதிவர் விவகாரம்.
2. பூக்காரி மேட்டர்
3. பதிவர் மூக்குடைந்த கதை.
4. பிரபல பதிவர் "சேட்" (chat)

இவைகளைப் பற்றிய பதிவுகளை கூகுளில் தேடிப் படித்து இன்புறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

புதன், 24 அக்டோபர், 2012

ஆயுத பூஜையும் நானும்

ஒரு மாதமாகவே வீட்டில் என் இல்லத்தரசி பண்ணுகிற அட்டகாசம் தாங்கமுடியவில்லை. காலையில் எழுந்தவுடன் இன்றைக்கு உங்கள் புஸ்தகங்களை எல்லாம் எடுத்து தூசி தட்டி, அலமாரிக்கு வேறு ஷீட் போட்டு, புத்தகங்களைத் திரும்பவும் அடுக்கி வையுங்கள் என்று ஆர்டர். புஸதகங்களைத் திரும்பவும் அலமாரியில் வைப்பதானால் அவைகளை ஏன் வெளியே எடுக்கவேண்டும் என்பது என் வாதம். ஆனால் அந்த வாதம் எடுபடவில்லை.

தானும் சும்மா இருக்கமாட்டாள். வேலைக்காரியைப் பிடித்து வைத்துக் கொண்டு தினம் ஒரு ரூமாக கிளீன் பண்ணவும், மெத்தைகளை வெயிலில் போட்டு எடுக்கவும், பரணில் சிவனே என்று கிடந்த சாமான்களை இறக்கி, கழுவி, திரும்பவும் பரணில் வைக்கவுமாக ஏகப்பட்ட கந்தரகோளங்கள் செய்த வண்ணமாகவே இருந்தாள். என்னை மதியம் தூங்க விடவில்லை.

இவைகள் எல்லாம் இந்த ஆயுத பூஜைக்கான முஸ்தீபுகள். ஒரு வழியாக நேற்றுடன் ஆயுத பூஜை களேபரங்கள் முடிவுக்கு வந்தன. இனி பொங்கல் சமயத்தில் இந்த களேபரங்கள் மறுபடி ஆரம்பிக்கும்.

கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இந்துக்கள் மத்தியில் இந்த பண்டிகைகள் நீங்காத இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பொங்கல் விவசாயிகளின் நன்றித்திருவிழா. ஆயுத பூஜை நாம் செய்யும் தொழிலுக்குச் செய்யும் பூஜை. தீபாவளி புதுத் துணிகள் வாங்கி அணியவும், பலகாரங்கள் செய்து சாப்பிடவும், புது மாப்பிள்ளைகள் கல்யாணத்தில் விட்டுப்போன  சீர்வரிசைகளை மாமனாரிடமிருந்து பிடுங்கவும் ஏற்படுத்தப்பட்ட பண்டிகை.

எல்லாப் பண்டிகைகளும்,  நாம் தெய்வத்தை முன்னிலைப் படுத்தி கொண்டாடினாலும், நமக்கு அன்றாட இயந்திர வாழ்க்கையிலிருந்து ஒரு மாறுபட்ட விழாவாக அமைகிறது. இந்த மாறுதல் மனிதனுக்கு அவசியமாகிறது. ஆகவே சமூக ரீதியாக இத்தகைய விழாக்கள் பல நன்மைகள் தருகின்றன.

எங்கள் வீட்டிலும் இந்த விழாக்களைத் தவறாமல் கொண்டாடுகிறோம். எங்கள் வீட்டு ஆயுத பூஜை படங்கள் சில.



என் புத்தக அலமாரி - நானே கிளீன் செய்தது.


என்னுடைய வொர்க் டேபிள் அதாவது வேலை செய்யும் இடம். என்ன வேலை என்று கேட்கப்படாது. இருந்தாலும் சொல்லுகிறேன். படித்தல். என்னென்ன படிப்பேன் என்று கேட்கிறீர்களா? செய்தித்தாள்கள், கல்யாணப் பத்திரிகைகள், பேங்க் பாஸ் புத்தகங்கள், இவைகள்தான். ரிடைர்டு ஆன 78 வயசு இளைஞன் வேறென்ன படிக்கவேண்டும்?


எல்லோருக்கும் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.


செவ்வாய், 23 அக்டோபர், 2012

பதிவுகளின் நோக்கங்கள்.


பதிவுலகம் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழில் எழுதுபவர்கள் நிலையாக இல்லை. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற தொல்காப்பிய விதிப்படி பதிவுலகம் இயங்குகிறது.

நீண்ட காலமாக எழுதி வந்தவர்களும் கூட பல காரணங்களினால் காணாமல் போகிறார்கள். புதிதாக எழுத வருபவர்களும் நிறைய வருகிறார்கள். பலதரப்பட்டபதிவுகள் எழுதப்படுகின்றன. பதிவுகளின் தன்மைகளைப் பார்த்துக்கொண்டு இருந்ததில் எனக்குப் புலப்பட்ட சில கருத்துகளை இங்கே பதிகின்றேன்.

கதைகள், நகைச்சுவை, தகவல்கள், செய்திகள், விமரிசனங்கள், விவாதங்கள், அரசியல், சமூகப் பிரச்சினைகள், தனிநபர் பிரச்சினைகள் என்று பதிவு வகைகளின் பட்டியல் நீண்டதாக இருக்கிறது. எல்லாவற்றையும் பார்க்கும்போது பொதுவான ஒரு நோக்கம் தெரிகிறது. முதலாவதாக, மக்கள் தங்கள் நினைவுகளை எழுத்தில் வடிக்க ஆசைப்படுகிறார்கள். வேறு வகையில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நல்ல ஊடகங்கள் இல்லாமையினால் இந்தப்பதிவு ஊடகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு ஆக்க பூர்வமான செயலே ஆகும்.

இரண்டாவது அப்படி அவர்களது ஆக்கங்கள் பதிவில் வெளியாகும்போது அதற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவேண்டுமென்றும் விரும்புகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாக ஒரு அங்கீகாரம் தேவைப்படுகின்றது. பதிவுலகில் பின்னூட்டங்கள், வருகைகள், திரட்டிகளில் ஓட்டுகள் இப்படி அங்கீகாரங்கள் கிடைக்கின்றன. இதற்காக சில பல உத்திகளைக் கையாளுகிறார்கள். அப்படி அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பலர் தொடர்ந்து எழுதுகிறார்கள்.

மூன்றாவது காரணம் அல்லது விளைவு முக்கியமானதாகும். பதிவுகள், படிப்பவர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. அந்த விழிப்புணர்வு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுகிறது. உதாரணத்திற்கு, இன்கம்டாக்ஸ் ஆபீசில் இருந்து வருவது போன்ற கடிதங்களை நம்பி ஏடிஎம் கார்டு நெம்பர்களைக் கொடுத்தால், உங்கள் கணக்கிலிருந்து பணம் எப்படித் திருடுகிறார்கள் என்று ஒரு பதிவு வெளியாகியது. இதைப் படித்தவர்கள் தங்களுக்கு இப்படி கடிதம் வந்தால் உஷாராகி விடுவார்கள் அல்லவா.

இப்படிப்பட்ட பதிவுகள் அதிகரிக்கவேண்டும். இப்படிப்பட்ட பதிவுகள்தான் சமுதாயத்திற்கும் தனி மனிதனுக்கும் உதவும். இப்படிப்பட்ட பதிவுகள் அவசியமானவை. ஆனால் அதனால் பெரிய சமுதாய மறுமலர்ச்சி நிகழ்ந்து விடும் என்று எண்ணவேண்டாம். காரணம் தமிழ்ப்பதிவர்கள் மொத்தமே பத்தாயிரத்திற்குள்தான். தினம் சுமாராக 300200இருநூறு பதிவுகள் போடப்படுகின்றன. இவைகளை ஏறக்குறைய மொத்தமாக ஒரு லட்சம் பேர் படிக்கக்கூடும்.

இந்த வாசகர்கள், சமுதாயத்தில் பெரிய மாற்றம் விளைவிக்கப் போதுமானதில்லை. இருந்தாலும் தமிழ் மக்களில் ஒரு சில பேராவது பயன் பெறுவார்கள் என்று நம்பித்தான் பதிவுகள் எழுதப்படுகின்றன. நானும் அந்த நம்பிக்கையில்தான் பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை. வாழ்க பதிவுலகம்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

தமிழ் நாட்டுக் கோவில்கள்


22-10-12 தேதிய பின் குறிப்பு: எல்லோரும் அறிவதற்காக முன்குறிப்பாக போட்டுள்ளேன். நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் ஒரு மிக நல்ல லிங்க் பின்னூட்டத்தில் கொடுத்துள்ளார். தினமலர் தொகுத்த தமிழ்நாட்டுக் கோவில்களின் 360 கோணப் படங்கள். அருமையான செய்தி. எல்லோரும் உபயோகித்து பயன் பெற வேண்டுகிறேன். நண்பர் தனபாலனுக்கு மிக்க நன்றி.



பல நாட்களுக்கு முன் நண்பர் GMBalsubramanian அல்லது V.Gopalakrishnan அவர்கள் ஒரு இணையப் பக்கத்தின் லிங்க் அனுப்பியிருந்தார்கள். அந்த லிங்கில் போய்ப் பார்த்தால் மைசூர் மகாராஜா அரண்மனையின் முழு வியூவும் 360 டிகிரி கோணத்தில் தத்ரூபமாகப் பார்க்க முடிந்தது. என் கம்ப்யூட்டர் திருவிளையாடல்களில் அந்த லிங்கைத் தொலைத்து விட்டேன். யாருக்காவது அந்த லிங்க் தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவித்தால் அவர்களுக்கு நான் ஏழு தலைமுறைக்கும் நன்றியுடையவனாக இருப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். (எட்டாவது தலைமுறையில் நன்றி தெரிவிக்க மாட்டேன். ஏனென்றால் அப்போது நான் என்னவாகப் பிறவியெடுப்பேன் என்று தெரியாது.)

இந்த லிங்கை கூகுளில் தேடிக்கொண்டிருந்தபோது இன்னொரு லிங்க் கிடைத்தது. தமிழ்நாட்டிலுள்ள அநேகக் கோவில்களின் 360 டிகிரி வியூ அந்த தளத்தில் இருக்கிறது. இதோ அந்த லிங்க்:

http://view360.in/gallery.html

இந்த 360 டிகிரி தொழில் நுட்பம் ஒரு அருமையான போட்டோகிராபி டெக்னிக். இதனுடைய நுணுக்கங்களை நமது தொழில் நுட்பப் பதிவர்கள் யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும். இந்த தொழில் நுட்பத்தில் அநேக இடங்களைப் படம் பிடித்துப் போட்டிருக்கிறார்கள்.

நமது தமிழ் நாட்டிலுள்ள கோவில்களுக்குப் போக முடியாதவர்கள் அல்லது ஏற்கனவே பார்த்தவர்களும் இந்தப் போட்டோக்களைப் பார்த்தால் பரவசமடைவர். மற்ற மாநிலக் கோவில்களின் லிங்க்கும் இந்த தளத்தில் இருக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் சென்று பார்த்து பயனடைய வேண்டிக்கொள்கிறேன்.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

இனிமையான வியாதி

இனிப்பானதெல்லாம் இன்பமானதல்ல. அதில் ஒன்றுதான் சர்க்கரை நோய். உலகில் பெரும்பாலானவர்கள் வைத்திருக்கும் நோய். இந்திய நாடு இதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆயுர்வேதத்தில் “மதுமேகம்” என்று அழைக்கப்படுகின்ற இந்த நோய் இந்தியர்களுக்குப் பல காலமாகப் பரிச்சயமான நோய். இந்த நோயைப் பற்றிய சரியான விழிப்புணர்வு அவசியம்.


முதலில் புரிந்து கொள்ளவேண்டியது – இது ஒரு நோய் அல்ல. உடலில் ஏற்படும் ஒரு குறைபாடு. வயது ஆகிவிட்டால் தலை நரைக்கிறது. பல் விழுகிறது. பசி குறைகிறது. காது கேட்பதில்லை. அந்த மாதிரிதான் சர்க்கரை வியாதியும். இது ஒரு ஜீரண மாறுபாடு. இந்நோய் பற்றிய மருத்துவத் தகவல்கள் டாக்டர் முருகானந்தம் அவர்கள் ஒரு பதிவில் அருமையாக விளக்கியுள்ளார். தையும் படியுங்கள்.

தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று முதன்முதலில் தெரியும்போது எல்லோரும் அதிர்ச்சியடைவது இயல்பு. அவர்கள் கற்பனை சிறகடித்துக்கொண்டு பறக்கும். ஓ, இனி ஆயுளுக்கும் இனிப்பு சாப்படக்கூடாது, காப்பிக்கு சர்க்கரை போடாமல் குடிக்கவேண்டும், சப்பாத்தி மட்டுமே சாப்பிடவேண்டும், இப்படி வாழ்வது என்ன வாழ்க்கை, செத்துப் போய்விடலாமா என்றெல்லாம் கற்பனை பண்ணுவார்கள். இந்தக் கற்பனைகள் எல்லாம் தேவையற்றவை. நீங்களும் எல்லோரையும் போல் வாழலாம். நல்ல காப்பி குடிக்கலாம். கல்யாண வீட்டில் வெளுத்துக் கட்டலாம். அரிசிச் சாப்பட்டை விட வேண்டியதில்லை. எப்படி என்று பார்க்கலாம்.

நம் உடம்பின் அவயவங்கள் இயங்குவதற்கும், நாம் வேலை செய்வதற்கும் சக்தி தேவைப்படுகிறது. (ஆபீசில் வேலை செய்பவர்கள் இதிலிருந்து விதிவிலக்கு - ஏனென்றால் அவர்கள் வேலை என்பது தூங்குவதுதானே). இந்த சக்தியானது நாம் சாப்பிடும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் சாப்பாடு அப்படியே சக்தியாவதில்லை. பலவிதமான வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் உணவு சக்தியாக மாறுகின்றது. அப்படி ஏற்படும் மாற்றங்களில் முக்கியமானது நம் உணவிலுள்ள ஸ்டார்ச்சு சத்து குளுகோஸ் சர்க்கரையாக மாறுவது. இது நமது இரைப்பையில் நடக்கிறது.

இந்த குளுகோஸ் சர்க்கரை குடல்களில் உள்ள குடல் வால்களின் மூலமாக உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் சேருகிறது. இந்த குளுகோஸ் சர்க்கரைதான் உடலின் பல பாகங்களுக்கும் சென்று அந்த திசுக்களுக்கு சக்தியைத் தருகிறது. குளுகோஸ் திசுக்களில் எப்படி சக்தியாக மாறுகிறது என்பதை வேறு ஒரு பதிவில் பார்ப்போம். ( நான் படிச்சதையெல்லாம் உங்களுக்குச் சொல்லி கட்டாயம் உங்கள் கழுத்தை அறுக்கப் போகிறேன்.)

நாம் எல்லோரும் பொதுவாக ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவோம். அதற்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களைக் கணக்கில் சேர்க்க வேண்டாம். நாம் சாப்பிட்ட உணவு ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகி, அந்த குளுகோஸ் முழுவதும் ரத்தத்தில் சேர்ந்து விடும். அப்போது ரத்தத்தில் குளிகோஸின் அளவு அதிகமாக இருக்கும். அப்படி அதிகமாக இருப்பது நல்லதல்ல. ஏனென்றால் நமது உடம்புக்கு சக்தி ஒரு அளவில் நீடித்து, அதாவது அடுத்த வேளை உணவு உண்ணும் வரை வேண்டும். ஆகவே ரத்தத்தில் இருக்கும் அதிக சர்க்கரையை ஓரிடத்தில் சேமித்து வைத்துப் பிறகு உடலுக்குத் தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் நல்லதல்லவா? கடவுள் இதற்கான ஒரு வழியை ஏற்பாடு செய்திருக்கிறார்.

ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்போது, அந்த சர்க்கரையானது கல்லீரலில் சேமிக்கப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, கல்லீரலிலிருந்து ரத்தத்திற்கு திரும்பவும் கொடுக்கப்படுகிறது. அதாவது ஆறுகளில் வெள்ளம் வரும்போது அதை அணைக்கட்டுகளில் சேகரித்து ஆற்றில் நீரை ஒரே அளவில் விடுகிறோம் அல்லவா? அதே போல் கல்லீரல் சர்க்கரைக்கு ஒரு அணைக் கட்டாக செயல்படுகிறது. இப்படி இல்லாவிட்டால் ஆற்று வெள்ளம் அது பாயும் இடங்களிலெல்லாம் சேதம் விளைவித்து விடும் அல்லவா? அது போல்தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் உடலின் பல அவயவங்களுக்குத் தீமை வந்து சேரும். இவ்வாறு நடக்காமல் இருக்க கல்லீரல் ஒரு அணையாக வேலை செய்கிறது.

இன்னொரு சமாச்சாரம். சர்க்கரை ரத்தத்திலிருந்து கல்லீரலுக்குள் போவதற்கும் மறுபடி கல்லீரலுக்குள் இருந்து ரத்தத்திற்கு வருவதற்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகின்றது. பல காரணங்களினால் இந்த இன்சுலின் பலருடைய உடம்பில் பற்றாக்குறையாகி விடுகிறது. அப்போது சாப்பிட்டவுடன் ரத்தத்தில் அதிக அளவில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்குள் போகாமல் ரத்தத்திலேயே இருந்து விடுகிறது. அதனால்தான் இதை சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம்.

சரி, அப்படி ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே என்று நினைப்பவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. அதிக சர்க்கரை ரத்தத்தில் இருந்தால், கிட்னி அதை வெளியேற்றப் பார்க்கும். அப்போது சிறுநீரில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இப்படி சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேறிவிட்டால் கொஞ்ச நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது கல்லீரலிலிருந்து சர்க்கரை ரத்தத்திற்கு வராது. வேலை செய்ய சக்தி குறையும். அதை ஈடுகட்ட மூளை சாப்பிடு என்று சொல்லும். பசி எடுக்கும். அப்போது சாப்பிடவேண்டும்.

இப்படி சாப்பிடுவதும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் இருந்து சிறுநீர் வழியாக சர்க்கரை வெளியேறுவதுமாக இருந்தால் உடல் நிலை க்ஷீணித்து பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். இதற்கு தீர்வு உடலில் இன்சலின் செயலை அதிகரிக்கவேண்டும். இதை இரண்டு விதத்தில் டாக்டர்கள் செய்வார்கள். ஒன்று மாத்திரைகள், இரண்டு இன்சுலின் இஞ்செக்ஷன். ஆனால் இவை முழுமையான தீர்வுகள் அல்ல. டாக்டர் முருகானந்தம் சொல்லியுள்ள வழி முறைகளை தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும்.

புதன், 17 அக்டோபர், 2012

காணாமல் போன பூனைக்குட்டிகள்.

எங்கள் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்த நான்கு பூனைக்குட்டிகள் எங்கு போயின என்று தெரியாமல் வருந்திக்கொண்டிருந்தேன் அல்லவா. இப்போது கிடைத்த ஒரு நல்ல செய்தி.

எங்கள் வீட்டிலிருந்து ஒரு ஏழெட்டு வீடுகள் தள்ளி, ஒரு வீட்டில் ஒரு முஸ்லிம் பாய் கோழி மற்றும் மட்டன்  பிரியாணிகள் செய்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். பார்சல் மட்டும்தான். பல இடங்களில் விற்பனை மையங்கள் உள்ளன. எங்கள் வீட்டுக்கு வரும் வேலைக்கார அம்மா அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் குடியிருக்கிறார்கள்.

நேற்று அவர்கள் சொன்ன தகவல். இந்த காணாமல் போன நான்கு பூனைக்குட்டிகளும் அந்த பிரியாணி கடையில்தான் இருக்கின்றனவாம். என் மாப்பிள்ளையும் அந்த வழியாகப் போகும்போது இவைகளைக் கண்டிருக்கிறார். நான் இன்னும் நேரில் பார்க்கவில்லை. ஆகவே, இந்த பூனைக்குட்டிகள் நல்ல வசதியான இடத்தில் இருக்கின்றன என்ற தகவல் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

தாய்ப் பூனை வேகாத இறைச்சிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குட்டிப்பூனைகளுக்கு பிரியாணியே கிடைப்பது ஆண்டவன் திருவிளையாடலே.

இந்த சம்பவத்தில் ஒரு அதிசயம் என்னவென்றால், முதலில் மூன்று குட்டிகள்தான் காணாமல் போயின. அவை பிரியாணிக் கடைக்குப் போய்விட்டன என்று இப்போது தெரிகிறது. அடுத்த நாள் காணாமல் போன ஒரு பூனைக்குட்டியும் எப்படி சரியாக அந்தப் பிரியாணிக் கடைக்கே சென்று மற்ற குட்டிகளுடன் சேர்ந்தது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்! ஒரு சமயம் அந்த மூன்று குட்டிகளில் ஒன்று திரும்பி வந்து, நல்ல இடம் கிடைத்திருக்கிறது என்று சொல்லி, இந்த நாலாவது குட்டியையும் கூட்டிக்கொண்டு போயிருக்குமோ?

இப்போது என் மனதை வாட்டும் விஷயம் என்னவென்றால், இந்த தாய்ப்பூனை தினமும் மூன்று வேளை எங்கள் வீட்டிற்கு வந்து தன் குட்டிகளைத் தேடுகிறது. அதன் குட்டிகள் பிரியாணிக்கடையில் வசதியாக இருக்கின்றன என்ற செய்தியை அதற்குப் புரிய வைப்பது எப்படி? யாருக்காவது பூனை பாஷை தெரிந்திருந்தால் உடனே என்னைத்தொடர்பு கொள்ளவும். ஒரு சமயம் டோண்டு ராகவனுக்குத் தெரிந்திருக்குமோ?

செவ்வாய், 16 அக்டோபர், 2012

என் கேள்விக்கு என்ன பதில்?


அன்புள்ள நண்பர்களே,

நமது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இரண்டு சாதாரண சம்பவங்களை இங்கே நான் விவரிக்கிறேன்.  உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவைகளுக்கு என்ன முடிவு எடுப்பீர்கள் என்று யோசியுங்கள். (உங்களுக்கு வயது 70 ஐத் தாண்டி விட்டது என்று வைத்துக்கொள்வோம்.)

சம்பவம் ஒன்று:

நீங்கள் உங்கள் ஊரிலிருந்து டில்லிக்குப் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் நண்பர் டில்லியிலிருக்கும் தன் மகளுக்கு ஒரு விலை உயர்ந்த நகை ஒன்றைக் கொடுத்தனுப்புகிறார். அவருடைய மகள் நீங்கள் வரும் ரயில் அல்லது விமானத்திற்கே வந்து அந்த நகையை வாங்கிக்கொள்வாள், உங்களுக்கு சிரமம் வைக்கமாட்டாள் என்று உங்கள் நண்பர் உறுதி கூறுகிறார்.

பிரயாணத்தின்போது அந்த நகை வைத்திருந்த பெட்டி காணாமல் போகிறது என்று வைத்துக்கொள்வோம். உங்கள் நிலை என்ன?

சம்பவம் இரண்டு:

நீங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கிறீர்கள். உங்கள் நண்பர் வந்து உங்களை அவர் வேலையாக ஒரு ஊருக்குப் போவதற்கு உங்களைத் துணைக்கு அழைக்கிறார். நீங்களும் சரியென்று போகிறீர்கள். போகும்போது அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி உங்களுக்கு பலமான அடி பட்டு விடுகின்றது. உங்களை ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். உங்களை யார் கவனிப்பார்கள்? கண்டிப்பாக உங்கள் குடும்பத்தார்கள்தான். இந்த நிலையில் அவர்கள் என்ன சொல்வார்கள்?

தவிர, உங்கள் வைத்தியச்செலவு சில லட்சங்கள் ஆகிறது. இதை யார் கொடுப்பார்கள்?

இந்தக்கேள்விகளுக்கு எனக்கு விடை சொல்லத் தெரியவில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்? நன்றாக யோசியுங்கள்.