செவ்வாய், 1 ஜனவரி, 2013

புதுவருடத் தீர்மானங்கள்


புது வருடம் என்றால் புது வருடத் தீர்மானங்கள் மிக அவசியம். மனிதன் தன்னை எப்பொழுதும் உயர்த்திக்கொள்ளவே விரும்புகிறான். அதற்கு இந்த புது வருடத் தீர்மானங்கள் மிகவும் உதவுகின்றன.

நான் ஒவ்வொரு வருடமும் இந்த மாதிரி புது வருடத் தீர்மானங்கள் போடுவது வழக்கம். இத்தனை வருடங்காக நான் போட்ட தீர்மானங்களை எல்லாம் நடைமுறைப் படுத்தியிருந்தால் நான் இப்போது கடவுளர் வரிசையில் இருக்க வேண்டும். ஆனால் விதி வலியது. அந்த மாதிரி எதுவும் நடக்காமல் அந்தக் கடவுள்தான் காப்பாற்றினார்.

அதற்காக புது வருடத்தில் தீர்மானம் போடாமல் இருக்க முடியுமா? ஆகவே என்னுடைய புது வருடத் தீர்மானங்களை உங்கள் மேலான பார்வைக்கு வைக்கிறேன்.

கருப்பு எழுத்தில் இருப்பது என் தீர்மானம்.

சிவப்பு எழுத்தில் இருப்பது நிஜத்தில் நடக்கப்போவது.


1. பெண்டாட்டி சொல்வதைத் தட்டக்கூடாது.

(அதாவது காதில் விழுந்தால். காதுதான் டமாரமாகி பல வருடம்                                                                                                                                                             ஆகிவிட்டதே.) 

2. கோபத்தை ஒழிக்க வேண்டும்.

கார் ஓட்டும்போது பின்னால் வருபவன் ஹார்ன் அடிக்காதவரை.

3. அளவாக சாப்படவேண்டும்.

கல்யாண விருந்துகள் எக்செப்ஷன்.

4. தினமும் டைரி எழுதவேண்டும். முதல் பக்கத்தில் இந்த தீர்மானங்களை எழுதி வைத்து, தினமும் படிக்கவேண்டும்.

டைரியை ஒன்றாம் தேதி மூடி வைத்தால் அடுத்த வருடம் வரையில் திறக்கக் கூடாது.

5. நாட்டு நடப்புகளை கண்டும் காணாதது போல் இருக்கவேண்டும்.

முடியலையே. ஏதாவது சொல்லணும் போல் அரிக்குதே.

6. இந்த வருடம்  நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பதிவு எழுதவேண்டும்.

அநேகமா இந்தத் தளத்தில பதிவுகள் வராது என்று தினைக்கிறேன்.

7. டெம்ப்ளேட் கமென்ட்டுகள் போடக்கூடாது.

அதாவது மொத்தத்தில் கமென்ட்டுகள் போடக்கூடாது.

8. இந்த வருடத்தில் உலக மக்கள் எல்லோரும் நல்லவர்களாக   மாறவேண்டும்.

அதாவது இந்த வருடமும் மாயன்காரர்கள் உலகம் அழியும் என்ற புரளியை பரப்ப வேண்டும்.

9. கொலை, கொள்ளை, வழிப்பறி, பலாத்காரம் சம்பந்தப்பட்ட செய்திகளைப் படிப்பதில்லை.

அப்புறம் என்னத்துக்கு பேப்பருக்கு வீண் செலவு. நிறுத்திடவேண்டியதுதான்.

10. சாப்படுவதற்கு மட்டும்தான் வாயைத் திறக்கவேண்டும்.

வயிறு வீங்கி செத்துப் போயிடுவீங்க.


இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். இது போன்று வேறு நல்ல தீர்மானங்கள் நேயர்களுக்குத் தோன்றினால், பின்னூட்டத்தில் தெரிவித்தால், அவைகளையும் சேர்த்துக்கொள்கிறேன்.

திங்கள், 31 டிசம்பர், 2012

இந்திய நாடு எப்போது உருப்படும்?


வருடக் கடைசியில் திரும்பிப் பார்த்தால் விரக்தியே மிஞ்சுகிறது. மக்கள் திருந்தி, இந்திய நாடு மறுமலர்ச்சி அடையவேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறோம்.

ஆனால் அப்படி நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இன்றைய நடைமுறையில் இருக்கிறதா? பல பதிவர்கள் மிக நம்பிக்கையுடன் பதிவுகள் எழுதுகிறார்கள். இந்தியா மறுமலர்ச்சி அடையும், அடைந்தே தீரும், என்றெல்லாம் எழுதுகிறார்கள். இந்தியா கண்டிப்பாக மறுமலர்ச்சி அடையும். எப்போது?

அடிப்படையிலிருந்து ஆரம்பமாக வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல தலைவர்கள் வேண்டும். எப்போது நல்ல தலைவர்கள் உண்டாவார்கள். மக்கள் சகிக்க முடியாத துன்பங்களுக்கு ஆளாகும்போது அப்படிப்பட்ட தலைவர்கள் ஏற்படுவார்கள்.

ஆனால் நம் நாடு இவ்வளவு சீர்கெட்டிருந்தாலும் மக்களுக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம் கிடைக்கிறது. இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் விழிப்புடன் இருக்கிறார்கள். அடிமட்ட மக்களின் தேவைகள் எப்படியாவது அவர்களுக்கு கிடைக்கும்படியான திட்டங்களை நடைமுறைப் படுத்தி விடுகிறார்கள்.

அப்படி தங்களுடைய ஆதாரத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவை எந்தக் கஷ்டமும் இல்லாமல் கிடைத்து விடுவதால் அவர்கள் இந்த அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பாற்பட்டவைகளைத் தேட ஆரம்பித்து விடுகிறார்கள். அதில் சேர்ந்ததுதான் பலாத்காரம். வழிப்பறி, கொலை, கொள்ளை ஆகியவை.

கனவு காண்பதில் உள்ள சுகம் தனியானதுதான். திரு. அப்துல் கலாம் அவர்கள் இதற்கு வழிகாட்டிவிட்டுப் போயிருக்கிறார். நாமும் அந்த வழியில் சென்று இன்புறுவோம்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

பயமாக இருக்கிறது.


Father and son on an antique motorcycle; both dressed in shorts and T-shirt
Foto afkomstig van: de Luie Motorfiets site.

நாட்டு நடப்புகளைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.

சட்டங்கள் சாதாரண மனிதர்களைப் பாதுகாக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் காவல் துறைக்கு ஒரு புகார் கொடுக்கப்போனால் என்னென்ன கஷ்டங்கள் உண்டாகும் என்பது அனுபவித்தால்தான் தெரியும்.

நேற்று நான் ஒரு ரோட்டில் கார் ஓட்டிக்கொண்டு வந்தேன். ரோடு நல்ல அகலம். மணி காலை 11.30. ரோட்டில் டிராபிக் அதிகமில்லை. நான் 40 கி.மீ. வேகத்தில்தான் வந்து கொண்டிருந்தேன். எதிரில் வந்த ஒரு கார் வலது புறம் திரும்புவதற்காக சிக்னல் போட்டு ஹெட்லைட்டையும் போட்டு விட்டான். நான் காரை நிறுத்தினேன்.

பின்புறம் டமால் என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. சரி, வம்பு வந்து விட்டது என்று கீழே இறங்கிப் பார்த்தேன். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவன் கீழே விழுந்து கிடக்கிறான். உடனே அங்கு கூடியவர்கள் அவனை கைத்தாங்கலாக எழுப்பி குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார்கள்.

என்ன நடந்திருக்கிறது என்றால், அவன் கூட இன்னொரு பைக்கில் வந்து கொண்டிருந்த தன் நண்பனுடன் பேசிக்கொண்டே வந்திருக்கிறான். நான் காரை நிறுத்தியதைக் கவனிக்கவில்லை. நேரே பைக்கைக் கொண்டுவந்து என் காரில் மோதியிருக்கிறான். அவன் பிரேக் கூட போடவில்லை. அவ்வளவு அஜாக்கிரதையாக பைக் ஓட்டியிருக்கிறான். ஹெல்மெட்டும் இல்லை.

நான் இந்த விபத்துக்கு எள்ளளவும் காரணமில்லை. அவன் கூட வந்தவர்கள் இதை உணர்ந்து கொண்டதாலும், அவனுக்கு இரத்தக்காயம் எதுவும் ஏற்படாததாலும், அவன் மயக்கமடையாமல் நல்ல நினைவுடன் இருந்ததாலும் என்னைப் போகவிட்டார்கள்.

வீட்டிற்கு வந்தவுடன்தான் காருக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தேன். பின்புற பம்பர் கழன்று விட்டது. இன்சூரன்ஸ் கிளெய்ம் போட்டு மாற்றினாலும் எனக்கு ஆயிரம் ரூபாய் செலவாகும். அடுத்த வருஷம் இன்சூரன்ஸில் "நோ க்ளெய்ம்" போனஸ் கிடைக்காது. அதில் ஒரு 1500 ரூபாய் போகும். ஆக மொத்தம் 2500 ரூபாய் தண்டம்.

ஆனால் நான் திருப்திப் பட்டுக்கொண்டேன். வந்த சனியன் இந்த 2500 ரூபாயோடு போயிற்றே, இல்லாமல் அந்த மடையனுக்கு தலையில் அடிபட்டு மயக்கமாயிருந்தால் நான் அந்த இடத்தை விட்டு வந்திருக்க முடியாது. போலீஸ் வரவேண்டும். அடிபட்டவனை ஆஸ்பத்திரியில் சேர்க்கவேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஸ்டேட்மென்ட் கொடுக்கவேண்டும். ஜாமீனுக்கு ஆள் பிடிக்கவேண்டும்.

அடிபட்டவன் பிழைத்து விட்டால் ஓரளவிற்கு எனக்கு வழி பிறக்கும். அப்போதும் அவன் நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் கேஸ் போடுவான். போலீஸ் அவனுக்குச் சாதகமாகத்தான் ரிப்போர்ட் எழுதுவார்கள்.  வருடக்கணக்கில் கேஸ் நடக்கும். நான் கோர்ட்டுக்கும் வக்கீல் வீட்டிற்கும் நடந்து கால் செருப்பு தேய்ந்து போகும். ராத்திரியில் தூக்கம் வராது. முக்கியமாக பதிவுகள் எழுதும் ஆர்வம் போய்விடும். (பதிவுலகத்திற்கும் உங்களுக்கும் எவ்வளவு நஷ்டம்!!!!!!)

அடிபட்டவன் துரதிர்ஷ்டவசமாக இறந்து விட்டான் என்றால் அவ்வளவுதான். நான் மண்டையைப் போடும் வரைக்கும், அதன் பிறகு என் வாரிசுகளையும் இந்த ஏழரை நாட்டுச் சனி விடாது.

இந்த விளைவுகளை நினைக்கும்போது, இந்த 2500 ரூபாய் செலவு ஒன்றுமே இல்லை என்று தோன்றுகிறது.

இப்படி என்னைக் காப்பாற்றிய அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். 

சனி, 29 டிசம்பர், 2012

பயமும் ஒழுக்கமும்


மனிதன் ஆதிகாலத்திலிருந்தே பயத்தை அறிந்திருக்கிறான். பயம் ஒரு தற்காப்பு உணர்ச்சி என்று கண்டு கொண்டிருக்கிறான். அவனுடைய வாழ்வில் பல ஆபத்துகளை வெல்ல இந்தப் பயம் தேவைப் பட்டிருக்கிறது.

நெருப்பு, வெள்ளம், காற்று இவைகள் அவனுடைய வாழ்வில் மிகுந்த சேதத்தை விளைவித்தன. ஆகவே அவைகளைக் கண்டு பயப்பட்டான். அவைகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வழிகளைக் கண்டு பிடித்தான். அவன் வாழ்வு நீண்டது.

காலம் மாற மாற, அவன் பயப்படும் பொருள்களும் மாறிக்கோண்டே வந்தன. தனக்குப் புரியாதவைகள் பயத்தை உண்டு பண்ணிவதால் அவைகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தான். புரிந்து போனதும் பயமும் விலகி விட்டது.

ஆனால் அன்றும் இன்றும் அவனைப் பயத்துக்குள்ளாக்கும் சில விஷயங்கள் மாறாமலேயே இருக்கின்றன. அதில் ஒன்று இருட்டு. ஏனெனில் இருட்டில் எதிரி ஒளிந்திருந்தால் ஆவனைப் பார்க்க முடிவதில்லை. அந்த எதிரி ஆபத்தைக் கொடுக்க முடியும். ஆகவே மனிதன் இருட்டைக் கண்டு இன்றும் பயப்படுகிறான்.

அடுத்தது, புதிதாக இருப்பவைகளைப் பார்த்து பயந்தான். புது மனிதர்கள், புது இடம், புது சூழ்நிலைகள் இவைகளைக் கண்டு பயந்தான். இந்த பயம் அவனுடைய தற்காப்புக்கு உதவியது.

அவன் நாகரிகமடைந்து சமுதாயமாக மாறிய பிறகு, சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினான். அந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை சமுதாயம் ஒதுக்கி வைத்தது. மற்றவர்கள் தன்னை மதிப்பதற்காக மனிதன் அந்தக் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டான். இதை ஒருவனின் மனச்சாட்சி என்று கூறினோம். மனச்சாட்சி பிரகாரம் நடப்பவன்தான் மனிதன் என்று ஒரு காலத்தால் இருந்தது.

பிறகு சட்டங்கள் வந்தன. சட்டத்தை இயற்றுபவர்கள், சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் என்று இருவகையான அமைப்புகள் இருக்கின்றன. இந்த இரு அமைப்புகளும் சரியாக இருந்தால்தான் ஒரு சமுதாயம் ஆரோக்யமாக இருக்கும்.

ஆனால் இன்று யாரும் சட்டத்திற்கு பயப்படுவதில்லை. காரணம் சட்டத்தை இயற்றியவனே அதை மதிப்பதில்லை. சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவன் தன்னுடைய இச்சைப்படி அமுல்படுத்துகிறான். அவனை அந்த நிலைக்கு, சட்டம் இயற்றுபவர்கள் தள்ளி விட்டார்கள்.

மக்களின் பிரதிநிதிகள், நாட்டு மக்களுக்கு உதாரண புருஷர்களாக இருக்கவேண்டியவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படித்தான் அந்த நாட்டின் கடைசி குடிமகனும் இருப்பான். அதுதான் இன்று நடக்கிறது.

தனி மனிதனுக்கு மனச்சாட்சி இல்லை, சட்டத்திடம் பயமும் இல்லை. எதனிடமும் பயம் இல்லை. அப்புறம் நாட்டில் எப்படி ஒழுக்கத்தை எதிர் பார்க்க முடியும்?

வெள்ளி, 28 டிசம்பர், 2012

பெருகி வரும் வன்முறைகளும் போராட்டங்களும்



நாடெங்கிலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், ஆள் கடத்தல், வழிப்பறி, சாலை விபத்துகள் ஆகியவை அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. வளர்ந்து வரும் ஒரு சமுதாயத்தில் இத்தகைய நிகழ்வுகள் அந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமைகிறது.

நாட்டிலுள்ள மக்கள் இத்தகைய நிகழ்வுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். இத்தகைய போராட்டங்களினால் என்ன பயன் விளையும் என்று எனக்குத் தெரியவில்லை. தனி மனிதன் தன்னை மாற்றிக்கொண்டால் தவிர, இத்தகைய குற்றங்களை எவ்வாறு தடுக்க முடியும்?

அவன் எப்போது மாறுவான்? அப்படி மாறுவானா என்பதே ஒரு கேள்விக்குறியாக அல்லவா இருக்கிறது. போராட்டங்களை முன்னின்று நடத்தும் பல்வேறு அமைப்புகள் இந்த முயற்சியில் என்றும் ஈடுபடுவதில்லை. போராட்டம் நடத்த எங்கு என்ன காரணம் கிடைக்கும் என்று கழுகு போல் காத்திருக்கிறார்கள். அந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தால் போதும், அதற்காக போராட்டம் ஆரம்பித்து விடுவார்கள்.

பலருக்கு போராட்டங்கள் அவர்களின் அடங்கிக்கிடந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் அமைகிறது. இத்தகைய போராட்டங்களில் அவர்கள் என்ன செய்தாலும் யாரும் கேட்பதில்லை. பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல், கடைகளைச் சூறையாடுதல், பொது வாழ்வைச் சீர்குலைத்தல் ஆகியவை சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இத்தகையோர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

இத்தகைய போராட்டங்கள் ஓரிரு நாட்கள் நடந்து பின்பு முடிந்து விடும். அதன் பிறகு இந்த மாதிரியான இன்னொரு சம்பவம் நடந்தால் அதற்கு ஒரு போராட்டம் ஆரம்பிக்கும். இந்த தொடர்கதை நடந்து கொண்டேதான் இருக்கிறது. போராட்டம் முடிந்தவுடன் அனைவரும் அந்த சம்பவத்தை மறந்து விட்டு தங்கள் வழக்கமான வேலையைக் கவனிக்கப் போய்விடுகிறார்கள்.

இந்தப் போராட்டங்களில் ஈடுபடுகிறவர்கள் அனைவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் போராடும் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்பது சந்தேகமே. உதாரணத்திற்கு டில்லியில் இப்போது போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் மாணவர்கள், குற்றவாளிகளை உடனே தூக்கில் போடுங்கள் என்று கேட்கிறார்கள். இதே மாணவர்கள் செய்யும் ரேக்கிங்கில் ஒரு மாணவர் உயிரிழந்தால், உடனே அதில் சம்பந்தப்பட்ட மாணவர்களை தூக்கில் போட உடன்படுவார்களா?

வட இந்தியப் பெண்கள் தங்கள் கழுத்தில் அரை பவுனில், கண்ணுக்குத் தெரியாமல் ஒரு செயின் போட்டிருப்பார்கள். தமிழ் நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் குறைந்தது ஒரு ஐம்பது பவுனாவது போட்டுக்கொண்டுதான் விசேஷங்களுக்குப் போகிறார்கள். ஐம்பது பவுன் நகை இன்றைக்கு தங்கம் விற்கும் விலையில் ஏறக்குறைய பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகிறது. இதைப் பார்க்கும் ஒரு சாதாரண குற்றவாளி கூட கொலை செய்யும் அளவிற்குத் துணிந்து விடுகிறான்.

வீட்டில் லட்சக் கணக்கில் பணத்தைப் பீரோவில் வைத்து விட்டு அவன் ஊருக்குப் போய்விடுகிறான். பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து திருடுபவர்கள் இன்று பெருகிப்போய் விட்டார்கள். இந்தப் பணம் அன்று இரவே திருட்டுப் போய்விடுகிறது.

இதை எவ்வாறு மாற்ற முடியும் என்று மக்கள் யோசிக்கவேண்டும். வெறும் போராட்டங்களினால் எந்தப் பயனும் ஏற்படாது என்பதை மக்கள் என்று உணர்வார்களோ அன்றுதான் நம் நாடு முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைக்கும்.

வியாழன், 27 டிசம்பர், 2012

வெளியூர் செக்குகள் பணமாகும் விதம்

இந்தப் பதிவு நைஜீரியாவிலிருந்து வரும் செக்குகளைப் பற்றியதல்ல. இந்திய நாட்டிற்குள் ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு அனுப்பப்படும் செக்குகளைப் பற்றியது.

உங்கள் மாமனார் டில்லியிலிருந்து உங்களுக்கு தீபாவளிக்காக ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செக் அனுப்பியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நீங்களும் ஆனந்தப்பட்டு (ஆனந்தப்படாவிட்டால் உங்கள் மனைவி உங்களை பார்வையாலேயே எரித்து விடுவார்) அந்தப் பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்யலாம் என்ற கற்பனையில் மூழ்குவீர்கள்.

உங்களுக்கு அப்போது தெரியாதது,  உங்களை ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கிறதென்ற விஷயம். அந்த சங்கதி பிறகுதான் தெரியும்.

நீங்கள் ஆனந்தமாக அடுத்த நாள் அந்தச் செக்கை உங்கள் அக்கவுன்டில் போட்டுவிடுவீர்கள்.

பேங்கில் இந்த மாதிரி வெளியூர் செக்குகளை எல்லாம் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். அந்தந்த வாரக்கடைசியில் அந்த செக்குகளை எல்லாம் சேர்த்து, உங்கள் செக் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறதோ அந்த ஊரிலிருக்கும் அவர்களுடைய பேங்கிற்கு அனுப்புவார்கள். நமது தபால் இலாக்காவின் சாமர்த்தியம் எல்லோருக்கும் தெரியும். உங்கள் அதிர்ஷ்டம் சரியாக இருந்தால் உங்கள் செக் சரியாகப் போய்ச் சேர்ந்து விடும்.

அந்த ஊரில் இருக்கும் பேங்க் அலுவலர் இந்த மாதிரி செக்குகளைப் பிரித்து அந்தந்த பேங்குகளுக்கு அனுப்புவார். அதை வாங்கும் பேங்க் அதை பாஸ் செய்து அந்த விபரத்தை இந்த பேங்குக்கு அனுப்பும். அங்கிருந்து அந்த செக் பாஸான விபரம் நீங்கள் செக் போட்ட பேங்க்குக்கு தபால் மூலமாக வரும்.

இதற்கு சுமாராக 15 முதல் 45 நாட்கள் வரை ஆகலாம். இதுதான் பழைய நடைமுறை. அதுவரை நீங்கள் தினமும் பேங்கிற்குப் போய் செக் பாஸாகி வந்து விட்டதா என்று விசாரித்துக் கொண்டிருக்க வேண்டும். இப்போது இந்த விபரங்கள் இன்டர்நெட் மூலமாக வரலாம். அப்படி வந்தால் செக் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும் நாட்கள் குறையும்.

அதற்குப் பிறகு அந்தச் செக்கின் பணம் உங்கள் கணக்கில் போடப்படும். ஆயிரம் ரூபாய்க்கு ஏறக்குறைய நூறு ரூபாயை கமிஷன் என்று பிடித்துக் கொள்வார்கள்.

உங்கள் மாமனார் ஊரில் உங்கள் பேங்கின் கிளை இருந்தால் நீங்கள் தப்பித்தீர்கள். ஏதாவது சிறிய ஊராக இருந்து, உங்கள் பேங்க்கின் கிளை அந்த ஊரில் இல்லையென்றால், நீங்கள் பேசாமல் அந்த செக்கை கிழித்துப் போட்டுவிடலாம். ஏனென்றால் அது ஒழுங்காக பாஸ் ஆகி வராது. செக் என்ன ஆயிற்று என்றும் தெரியாது. முக்கால்வாசி சமயங்களில் அந்த செக் அபேஸ் ஆகி, உங்கள் மாமனார் பணத்தை ஊர் பேர் தெரியாத உங்கள் சகலை சாப்பிட்டுக்கொண்டிருப்பார்.

இப்போது பல பேங்குகளில் மல்டிசிட்டி செக்குகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். அந்த செக்குகள் அந்தந்த ஊரிலேயே பாஸ் ஆகிவிடும். தவிர இப்போது புதிதாக வரப்போகும் சிடிஎஸ் 2010 செக்குகள் நடைமுறைக்கு வந்து விட்டால் இந்தச் சிக்கல்கள் ஏறக்குறைய மறைந்து போகும் என்று நம்பலாம். அந்த நன்னாளை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

புதன், 26 டிசம்பர், 2012

குருவும் சிஷ்யனும்.


நான் ஞானியல்ல. ஆதலால் ரூம் போட்டு யோசித்ததில் நினைவிற்கு வந்த ஒரு கதையை உங்களுடன் பகிர்கிறேன்.

ஒரு ஊரில் ஒரு குரு வசித்து வந்தார். அவருக்கு ஒரு சிஷ்யன். ஒரு நாள் அவர்கள் இருவரும் ஒரு வேலையாக வெளியூருக்குப் போனார்கள். அப்போது அவர்கள் சென்ற பாதையில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆறு நிறைய வெள்ளம் போய்க்கொண்டிருந்தது.

ஆற்றின் அக்கரையில் ஒரு பரிசல் இருந்தது. ஆனால் பரிசல்காரனைக் காணோம். அந்தப் பக்கத்தில் சில குடிசைகள் இருந்தன. பரிசல்காரன் அந்தக் குடிசைகளில் ஏதாவதொன்றில் இருக்கலாம் என்று குரு யூகித்தார்.

சிஷ்யனைப் பார்த்து "உனக்கு நீச்சல் தெரியுமல்லவா, நீ ஆற்றைக் கடந்து போய் அந்த பரிசல்காரனைக் கூட்டுக்கொண்டு வா" என்றார். சிஷ்யன் மளமளவென்று ஆற்று நீரின் மேல் நடந்து அக்கரைக்குப் போய் பரிசல்காரனைக் கூட்டிக்கொண்டு வந்தான்.

குருவிற்கு மகா ஆச்சரியம். நம் சிஷ்யன் எப்படி ஆற்றின் மேல் நடந்து சென்றான் என்று அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். சிஷ்யன் திரும்பி வந்தவுடன் இதைப் பற்றிக் கேட்டார். சிஷ்யன் "குருவே, உங்கள் பெயரைச் சொல்லிக்கொண்டே ஆற்றின் மேல் நடந்து போனேன். அவ்வளவுதான்" என்றான்.

குருவிற்கோ மிக்க ஆச்சரியம். ஆஹா, நம் பெயருக்கு இவ்வளவு சக்தி இருக்கா, அப்படியானால் நானும் ஆற்றின் மேல் நடக்கலாமே என்று முடிவு செய்தார். அவர் பெயர் "தேவானந்தா". அந்தப் பெயரைச் சொல்லிக்கொண்டே ஆற்றின் மேல் நடக்கப் பார்த்தார். ஆற்றில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்தக் கதையின் நீதி, எவ்வளவு சிந்தித்தும் எனக்குப் புலப்படவில்லை. இதைப் படிக்கும் அன்பர்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

திங்கள், 24 டிசம்பர், 2012

500 வது பதிவு


இது என்னுடைய 500 வது பதிவு.

நான் பதிவுலகில் 2009 ம் ஆண்டு அடியெடுத்து வைத்தேன். நான்கு வருடத்தில் 500 பதிவுகள் போட்டிருக்கிறேன். இதை ஒரு சாதனையாக நான் நினைக்கவில்லை. பொழுது போக்குவதற்கு வேறு நல்ல உருப்படியான வேலை ஒன்றும் கிடைக்காததினால்  இது நடந்துள்ளது. அவ்வளவுதான்.

ஆனால் சாதனை என்று சொல்லிக் கொள்ளும்படியான சில காரியங்கள் நடந்திருக்கின்றன. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அவை முற்றிலும் என் பதிவைப் படிக்கும் பார்வையாளர்கள் செய்த சாதனை. அதற்கு நான் எந்த விதத்திலும் என் வெற்றி அல்லது என் சாதனை என்று உரிமை கொண்டாட முடியாது.

உங்கள் சாதனைகள்.

பின் தொடர்பவர்கள்  -    459

மொத்தப் பின்னூட்டங்கள்  -         7618

திரட்டிகளின் தரவரிசைகள். (ஸ்கிரீன் ஷாட்)


இந்த தளத்தைப் படிக்கும், பின் தொடரும், பார்வையிடும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சனி, 22 டிசம்பர், 2012

அப்பவே நான் சொன்னேன், கேட்டீர்களா?


உலகம் அழியாதுன்னு நான் அன்னைக்கே சொன்னேன். ஒருத்தரும் கேக்கலே.  (http://swamysmusings.blogspot.com/2012/12/blog-post_14.html)

இப்ப பாருங்க உலகம் அப்படியே இருக்கு. முந்தி இருந்த அக்கிரமங்கள் எல்லாம் அப்படியே இருக்கு. இதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அழிஞ்சு போயிடுங்களா?

எப்படியோ, இன்னும் கொஞ்சம் பாவங்கள் செய்ய கடவுள் அவகாசம் கொடுத்திருக்கார். ஆகவே மக்களே, அடுத்த உலக அழிவு அறிவிப்பு வரும் வரையிலும், கவலை இல்லாமல் தொடர்ந்து உங்கள் கடமைகளை (என்ன கடமை, மேலும் பாவம் செய்வதுதான்) தொடர்வீர்களாக.

எல்லோருக்கும் 2013 க்கான புது வருட வாழ்த்துக்கள்.



வியாழன், 20 டிசம்பர், 2012

பதிவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

போனால் வராது. இன்றே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பதிவர்களே, இப்பேர்ப்பட்ட வாய்ப்பு இனி உங்கள் ஆயுட்காலத்தில் வரப்போவதில்லை. இன்று அந்த வாய்ப்பை பயன்படுத்தினால் உண்டு. இல்லையென்றால் உங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும்.

பதிவெழுதும் ஒவ்வொருவருக்கும் தெரியும், பதிவெழுத கருப்பொருள் கிடைப்பது மிகவும் கடினம். நான் உங்களுக்கு ஒன்றல்ல, இரண்டு பதிவுகளுக்கான தலைப்புகளைக் கொடுக்கிறேன். உபயோகித்துக்கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம். பின்னால் வருத்தப்பட்டு பயனில்லை.

1. உலகம் 21 ம் தேதி அழியாது. இதுக்கு நான் கேரண்டி.

           இது இன்று போடவேண்டிய பதிவு.

2. அப்பவே நான் சொன்னேன், பார்த்தீர்களா.

          இது 22 ம் தேதி போடவேண்டிய பதிவு.

சிலர் கேட்கக்கூடும்? அப்படி 21 ம் தேதி உலகம் அழிந்து போனால் என் கேரண்டி என்ன ஆகிறது? அட, கூமுட்டையே, அப்படி 21 ம் தேதி உலகம் அழிஞ்சு போச்சுன்னா உன்னைக் கேக்கறதுக்கு யாரு இருப்பா? நீயே இருக்க மாட்டியே, அப்புறம் என்னத்துக்கு பினாத்தறே?

பதிவுலகத்திற்கு உலகம் அழியறதுக்கு முன்னால ஏதோ என்னால் ஆன சேவையைச் செய்துவிட்டேன். அப்புறம் மாயன் விட்ட வழி.

புதன், 19 டிசம்பர், 2012

இலவச கம்ப்யூட்டர் மென்பொருட்கள்

இலவசம் என்றாலே மக்களுக்கு ஒரு ஆர்வம் வந்து விடுகிறது. அது தேவையோ இல்லையோ, வாங்கிக்கொள்வார்கள். அதிலும் ஒன்றுடன் திருப்தி அடையமாட்டார்கள். இரண்டு, மூன்று என்று எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவிற்கும் ஆசைப்படுவார்கள். ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் கொடுக்கப்படும் இலவச பைகளை இன்னொன்று என்று கேட்டு வாங்காதவர்கள் அபூர்வம். (நானும் அப்படித்தான்). இலவச சேலைகளுக்கு ஆசைப்பட்டு கூட்டத்தில் சிக்கி உயிர்த்தியாகம் செய்த பெண்மணிகளின் கதைகள் தமிழ்நாட்டில் அநேகம்.

கம்ப்யூட்டருக்கான பல இலவச மென் பொருட்கள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன. இவைகளைப் பற்றி நம் பதிவுலகத் தோழர்களும் அவ்வப்போது எழுதி வருகிறார்கள். இந்த மென்பொருட்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்.

பல மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பதன் காரணம் அந்த தளங்கள் விளம்பரங்களை வெளியிடுகின்றன. அதிலிருந்து வருமானம் கிடைத்து விடுகிறது. இந்த இலவச மென்பொருட்கள்,  தங்கள் தளத்தை அதிக வாசகர்கள் பார்க்கட்டும் என்பதற்காகத்தான்.

சில தளங்கள் தங்கள் இலவச மென்பொருட்களுடன் வேறு சில புரொக்ராம்களையும், உங்களுக்குத் தேவை இல்லாவிட்டாலும் கொடுத்து விடுவார்கள். அந்த புரொக்ராம் ஆபத்தில்லாமலும் இருக்கலாம், சில சமயம் ஆபத்துடனும் இருக்கலாம். ஆகவே இலவச மென்பொருட்களைத்  தரவிறக்கும்போது இந்த கூடுதல் மென்பொருட்களும் சேர்ந்து வராமலிருக்க ஜாக்கிரதையாக இருக்கவும்.

உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய மற்றும் உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தனிப்பட்ட விவரங்கள் பல கம்பெனிகளுக்கு பல காரணங்களுக்காகத் தேவைப்படுகின்றன. இந்த மாதிரி விவரங்களைச் சேகரிப்பதற்காகவும் பல இலவச மென்பொருட்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

பெரிய மென்பொருள் தயாரிக்கும் கம்பெனிகள் கூட அவர்களின் லீகல் வெர்ஷனை உபயோகிக்கிறார்களா இல்லை பைரேடட் வெர்ஷனை உபயோகப்படுத்துகிறார்களா என்று கண்டு பிடிக்க இலவசமாக சில மென்பொருட்களைக் கொடுப்பார்கள். அவைகள் இந்த உளவு வேலையையும் செய்யும்.

தவிர இந்த மென்பொருட்களை விளம்பரத்திற்காகவும், 30 நாட்கள் அல்லது 60 நாட்களுக்கு இலவசமாகக் கொடுப்பார்கள். அதை உபயோகப்படுத்திப் பார்ப்பவர்களில் ஒரு சதம் நபர்கள் அந்த மென்பொருளை விலைக்கு வாங்கினாலும் அவர்களுக்கு லாபமே.

ஆகவே இலவச மென்பொருட்களைத் தரவிறக்குமுன் யோசியுங்கள்.

1. அந்த மென்பொருள் உங்களுக்கு அவசியமா?

2. அந்த வேலையைச் செய்யும் மென்பொருள் உங்களிடம் ஏற்கெனவே இல்லையா?

3. அந்த மென்பொருளை உங்கள் நண்பர்கள் யாரேனும் உபயோகப்படுத்தி பயனடைந்திருக்கிறார்களா?

4. உங்கள் கம்ப்யூட்டரில் நல்ல ஆன்டிவைரஸ் புரொக்ராம் நிறுவியிருக்கிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் "ஆம்" என்ற பதில் வந்தால் அந்த மென்பொருளைத் தரவிறக்குங்கள்.

இலவசமாக கிடைக்கிறது என்பதால் எனக்கு ஒன்று, எங்க ஆத்தாளுக்கு ஒன்று என்று ஆசைப்பட வேண்டாம்.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

புரதச்சத்தின் அவசியமும் மருந்துக் கம்பெனிகளின் ஏமாற்று வித்தைகளும்

மனிதன் உயிர் வாழ உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அத்தியாவசியத் தேவைகள் என்பதை அனைவரும் அறிவோம். இந்த மூன்றில் நீரும் காற்றும் இயற்கை அன்னை நமக்கு இலவசமாகக் கொடுக்கிறது என்பதையும் அறிவோம். இலவசமாகக் கிடைக்கும் எதையும் மனித இனம் எப்படி பயன்படுத்தும் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.

காசு கொடுத்து வாங்கும் உணவில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்பதை முன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். இருந்தாலும் நினைவுக்காக இன்னொரு முறை கூறுவதில் தவறு இல்லை.

1. கார்போஹைட்ரேட்ஸ்
2. புரதச்சத்து
3. கொழுப்புச் சத்து
4. வைட்டமின்ஸ் மற்றும் ஹார்மோன்கள்
5. கனிமச்சத்துகள்.

இதில் புரதச்சத்து சம்பந்தமாக சில உண்மைகளை ஆராய்வோம். புரதச் சத்து என்பது நைட்ரஜன் சேர்ந்த ஒரு கூட்டுப்பொருள்.

மனித உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லுக்குள்ளும் "ந்யூக்ளியஸ்" என்றொரு பாகம் இருக்கிறது. இது முற்றிலும் புரதச்சத்தினால் ஆனது. மனிதனின் செல்களின் ஆயுள் காலம் 15 முதல் 25 நாட்கள் மட்டுமே. ஏறக்குறைய 25 நாட்களுக்கு ஒரு முறை நாம் புது மனிதனாக மாறுகிறோம். ஆனால் எப்படி அதே பழைய விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன என்பதுதான் நம்மைப் படைத்தவன் நிகழ்த்தும் அதிசயம்.

இப்படி இந்தப் பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும்போது ஏற்படும் மாற்றங்களைப் பார்ப்போம். பழைய செல்கள் அழியும்போது அதன்  "ந்யூக்ளியஸ்" ல் உள்ள புரதங்கள் அழிந்து யூரியாவாக மாறுகிறது. இது ரத்தத்தில் கலந்து கிட்னிக்குப் போகும்போது பிரிக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. விவசாயத்தில் பயிர் வளர்ச்சிக்காக "யூரியா" என்ற உரம் போடுவது உங்களுக்குத் தெரியும். பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜனை இந்த யூரியாதான் கொடுக்கிறது.

அழிந்து போன செல்களுக்குப் பதிலாக புதிய செல்கள் உருவாகும்போது அவைகளுக்கு  புரதச்சத்து தேவைப்படுகிறது. மனித உடம்பின் ஒரு கிலோ எடைக்கு அரை கிராம் புரதம் தினந்தோறும் தேவை. அறுபது (60) கிலோ எடையுள்ள ஒரு மனிதனுக்கு தினந்தோறும் 30 கிராம் புரதம் தேவை.

நாம் சாப்பிடும் முக்கிய உணவுகளில் இருக்கும் புரதச்சத்தின் அளவுகள் வருமாறு.

பருப்பு - 40 %
பால்     -  6%
அரிசி   -   3%
மட்டன், மீன் - 30%
முட்டை -  30%
காய்கறிகள் - 1 அல்லது 2%

நாம் சாப்பிடும் இந்த உணவுகளில் இருக்கும் புரதச்சத்து முழுவதும் அப்படியே உடலுக்குக் கிடைப்பதில்லை. 50 லிருந்து 60 சதம் மட்டுமே உடலுக்கு கிடைக்கிறது. ஆகவே ஒரு மனிதன் கிட்டத்தட்ட 100 கிராம் புரதம் ஒரு நாளில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

சில மருந்துக் கம்பெனிகளின் ஏமாற்று வித்தைகள்:

இவைகளை ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்காகத்தான் இந்தப் பதிவு.

சில கடல் தாவரங்களில் புரதச்சத்து 50 % வரை இருக்கிறது. தவிர இந்தப் புரதச்சத்துகள் 50 -60 % வரை உடல் எடுத்துக்கொள்கிறது. இந்த வகையில் இவை மிகவும் நல்ல உணவுதான். சந்தேகமே இல்லை. ஆனால் மனிதனுக்கு தினமும் வேண்டிய 100 கிராம் புரதச்சத்தை இத்தகைய உணவுகளின் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாமே என்று தோன்றினால் அது தவறு. முதல் காரணம் அவைகளின் கிடைக்கும் அளவு. எல்லோருக்கும் வேண்டிய அளவு கடல் தாவரங்களை சந்தைப்படுத்த முடியாது. கடலில் அவ்வளவு தாவரங்கள் இல்லை.

இரண்டாவது மனிதன் ஒரே வகையான உணவை தினந்தோறும் சாப்பிடமுடியாது. ருசியைத் தவிர ஒரே வகை உணவைச் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கெடும்.

மூன்றாவது அவைகளின் விலை. அதிகமாக கிடைக்காததால் அவற்றின் விலை அதிகமாக இருக்கும். சாதாரண ஜனங்களால் வாங்கி உபயோகப்படுத்த முடியாது.

"ஸ்பிருலினா" என்பது இத்தகைய தாவரங்களில் ஒன்று. இயற்கையாக இவை கடலில் வளர்கின்றன. ஆனால் செயற்கையாக இவைகளை உள்நாட்டிலும் வளர்க்க முடியும். இவைகளில் உள்ள புரதம் மிகவும் நல்ல வகையைச் சேர்ந்தது. ஆகவே சில பரிசோதன்களில் மனித உடலுக்கு இது நல்லது என்று ஆராய்ச்சியில் கண்டு பிடித்தார்கள்.

இந்த முடிவை சில மருந்துக் கம்பெனிகள் ஆதாரமாக வைத்துக்கொண்டு "ஸ்பிருலினா" மாத்திரைகள் மற்றும் கேப்சூல்கள் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தார்கள். டாக்டர்களும் இந்த மாத்திரைகளைப் பரிந்துரைத்தார்கள். இதில் எல்லாம் ஒன்றும் ஏமாற்று வித்தைகள் இல்லை.

ஆனால் இந்த மாத்திரைகளை என்ன விலைக்கு விற்றார்கள், அதில் எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பதுதான் நாம் அறிந்து கொள்ளவேண்டிய செய்தி.

ஒரு "ஸ்பிருலினா" கேப்ஸ்யூலில்" ஐந்நூறு (500) மில்லி கிராம், அதாவது அரை கிராம் ஸ்பிருலினா எக்ஸ்ட்ராக்ட் இருக்கிறது. அதில் ஒரு 300 மில்லிகிராம் புரதம் இருக்கும். தினம் 3 அல்லது 4 கேப்ஸ்யூல் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு மனிதனின் அன்றாட புரதத் தேவையில் ஏறக்குறைய நூற்றில் ஒரு பங்கு ஆகும். இதற்கு செலவு, ஒரு கேப்ஸ்யூல் 5 ரூபாய் வீதம் 15 அல்லது 20 ரூபாய் ஆகும்.

மக்களே, யோசித்துப் பாருங்கள்.

சுமார் 5 கிராம் (இன்றைய விலையில் 50 பைசா)  துவரம் பருப்பிலிருந்து கிடைக்கக் கூடிய புரதச்சத்திற்கு 20 ரூபாய் விலை வைத்து மருந்துக் கம்பெனிகள் விற்கின்றன. நம் உணவில் கிடைக்காத. நோய் தீர்க்கும் மருந்துகளுக்கு நாம் அதிக விலை கொடுக்கிறோம். அதிலாவது ஓரளவு நியாயம் இருக்கிறது.

நம் அன்றாட உணவில் கிடைக்கக் கூடிய புரதச்சத்திற்கு இவ்வளவு விலை வைத்து விற்கிறார்களே, இதில் உள்ள உள்வயணம் தெரியாமல் நம் மக்களும் வாங்கிச் சாப்பிடுகிறார்களே, இந்தக் கொள்ளைக்கு சில டாக்டர்களும் துணை போகிறார்களே என்று நினைக்கும்போது என் வயிறு பற்றியெரிகிறது. தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் அதில் இந்த மாத்திரைகளில் இருப்பதைவிட பல மடங்கு புரதம் கிடைக்கும். (10 -15 கிராம்). முட்டை சாப்பிடாதவர்கள் தினம் 50 கிராம் "சோயா மீல்மேக்கர்" எடுத்துக்கொண்டால் அதில் 15 -20 கிராம் புரதம் கிடைக்கும். அது எல்லாம் வேண்டாம், தினம் ஒரு 20 கிராம் (உள்ளங்கை அளவு) பொட்டுக்கடலையை எடுத்து சாப்பிட்டால் அதில் 10 கிராம் புரதம் கிடைத்துவிடும்.

ஜனங்கள் 500 மில்லி கிராம் என்றால் ஏதோ பெரிய அளவு என்று நினைக்கக் கூடும்.. சிறிது யோசித்தால் 500 மில்லி கிராம் என்பது 1/2 கிராம்தான் என்று  புரியும். அரை கிராம் தங்கம் வேண்டுமானால் 1500 ரூபாயாக இருக்கலாம். அரை கிராம் கடல் பாசிக்கு 5 ரூபாய் கொடுப்பது அநியாயத்திலும் அநியாயம்.