திங்கள், 7 ஜூலை, 2014

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டர்நெட்டும் நானும்


நான் ஐந்து வருடங்களாக பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டர்நெட் உபயோகித்து வருகிறேன். பிளான் பெயர்   BSNL FN COMBO 500.
இந்த பிளான் எனக்கு மிகவும் சௌகரியமாக இருந்தது. எப்படியென்றால் இந்த பிளானில் காலை 2 மணி முதல் 8 மணி வரை இன்டர்நெட் உபயோகத்திற்கு கட்டணம் இல்லை. காலை 8 மணி முதல் மறுநாள் காலை 2 மணி வரையிலான உபயோகத்திற்கு 1.5 GB இலவசமும் அதற்கு மேல் உபயோகித்தால் ஒரு MB க்கு 20 பைசா என்றும் கட்டணம் நிர்ணயித்திருந்தார்கள். இன்டர்நெட் நல்ல வேகமும் கூட ( 2 MBPS).

என்னைப்போல் ஜாமக்கோடங்கிகளுக்கு இது மிகவும் உபயோகமாக இருந்தது. காலை 3 மணிக்கு எழுந்திருந்து 8 மணிக்குள் இன்டர்நெட் வேலைகளையெல்லாம் முடித்து விடுவேன். பகல் நேரத்தில் இன்டர்நெட் மிகவும் அத்தியாவசியமாக இருந்தால் ஒழிய உபயோகிப்பதில்லை. பகல் நேர உபயோகத்தை இலவச லிமிட்டை தாண்டாமல் உபயோகித்து வந்தேன்.

இரவு நேர இலவச உபயோகத்தில் மாதத்திற்கு ஏறக்குறைய 50-60 GB உபயோகித்து விடுவேன். இது மிகவும் சலீசான பிளானாக இருந்தது. இதைப் பொறுக்காத யாரோ ஒரு பிஎஸ்என்எல் ல் வேலை பார்க்கும் பொறாமைப் பிண்டம், மேலிடத்திற்குப் போட்டுக்கொடுத்து விட்டார்கள் போல இருக்கிறது. பிஎஸ்என்எல் ஏற்கனவே எதிலெல்லாம் ரேட்டை உயர்த்தலாம் என்று கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு காத்திருந்தார்கள். காரணம் பிஎஸ்என்எல் நஷ்டத்தில் ஓடுகிறதாம். மந்திரிகள் போன் பில்லை வசூல் செய்வதே இல்லை. அப்புறம் என்ன லாபம் வரும்?


வெறும் வாயை மெல்லுபவனுக்கு அவல் கிடைத்து விட்டது. சும்மா இருப்பார்களா? இரவு இலவசத்திற்கு வேட்டு வைத்து விட்டார்கள். அதற்குப் பதிலாக சலுகை கட்டணம் வழங்கப் போகிறார்களாம். எவ்வளவு தெரியுமா?
ஒரு  MB க்கு வெறும் 15 பைசாதானாம். அப்போ ஒரு  GB க்கு எவ்வளவு ஆகிறது என்று பார்த்தால் வெறும் 150 ரூபாய்தான். என்னுடைய மாத உபயோகமான 50  GB க்கு சும்மா 7500 ரூபாய் கொடுத்தால் போதும்.

ஒரு பிளாக்கருக்கு வந்த சோதனையைப் பாருங்கள். இந்த ரேட்டில் நான் என் தலையை அடகு வைத்தால் கூட டெலிபோன் பில் கட்டமுடியாது. என் தலையை எவன் அடகு வாங்குவான் என்பது வேறு விஷயம்.

உடனே வேறு மாற்று ஏற்பாடு செய்தாகவேண்டுமே. பிஎஸ்என்எல் ஆபீசுக்கு ஓடினேன். இந்த மாதிரி கஸ்டமருக்கு சொல்லாமல் பிளானை மாற்றுவது நியாயமா என்று கேட்டேன். அங்கிருந்தவர்கள் அப்படியா, ஏதோ நைட் பிளானை மாற்றுவதாக ஒரு பேச்சு அடிபட்டது, மாற்றி விட்டார்களா என்று என்னையே திருப்பிக் கேட்டார்கள். இது எப்படி இருக்கு பாருங்க.

உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று அடுத்த கேள்வி. நான் தினமும் காலையில் கம்ப்யூட்டரை ஆன் பண்ணினதும் இன்டர்நெட் உபயோகக் கணக்கை பார்த்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பேன். இதனால் கணக்கில் ஏதோ தவறு மாதிரி தெரிந்ததும் உஷாராகி விட்டேன். இப்போது இந்தப் பிரச்சினைக்கு என்ன பண்ணலாம் என்று கேட்டேன்.

நீங்கள் இன்டர்நெட் பிளானை மாற்றி விடுங்கள், அது ஒன்றுதான் வழி என்றார்கள். பேய்க்கு வாழ்க்கைப் பட்டு விட்டு புளியமரம் ஏறமாட்டேன் என்றால் எப்படி? இருக்கிற பிளானில் என் பர்சுக்கு ஏற்றமாதிரி எனக்கு கண்ணில் பட்ட ஒரு பிளானுக்கு மாற்றித் தரும்படி கேட்டேன். ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடுத்து விட்டுப் போங்கள். நாளைக்கு மாற்றி விடுகிறோம் என்றார்கள். அப்படியே எழுதிக்கொடுத்து விட்டு வந்தேன்.

சொன்னபடி அடுத்த நாள் மாற்றி விட்டார்கள். எஸ்எம்எஸ் என் செல் போனுக்கு வந்தது. நான் மிக உற்சாகமாகி கம்ப்யூட்டரை ஆன் பண்ணி இனடர்நெட்டை ஓபன் செய்தேன். தலையில் கல் விழுந்தது போல் உணர்ந்தேன். காரணம் இன்டர்நெட் ஆமை வேகத்தில் நகர்கிறது. போன் பண்ணிக் கேட்டால், நாங்கள்தான் அப்போதே சொன்னோமே, வேகம் குறைவாக இருக்கும் என்று, நீங்கள் சரியென்று மண்டையை ஆட்டினீர்களே என்று என் தலை மீது இன்னொரு கல்லைப் போட்டார்கள்.

அவர்கள் கொடுத்திருந்த லிஸ்ட்டில் பார்த்தால் வேகம் அதிகமுள்ள பிளான்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் விலை போட்டிருக்கிறது. என்ன ஒரே ஆறுதல் என்றால் நான் வாங்கிய பிளான் அன்லிமிடெட் டவுன்லோடு உள்ள பிளான். நேற்று ஒரு டவுன்லோடை டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். முன்பு ஒரு மணி நேரத்தில் முடிந்த டவுன்லோடு இப்போது ஒரு இரவில் முடிந்து விட்டது.

நான் வாங்கிய பிளான். 650 C Home ULD. மாதம் 650 ரூபாய். வரிகள் தனி.

கழுதைக்கு தாலி கட்டி கூட்டிக்கொண்டு வந்தாயிற்று. எப்படியாவது குடித்தனம் பண்ணித்தான் ஆகவேண்டும். விதி வலியது என்று சும்மாவா சொன்னார்கள் !

ஞாயிறு, 29 ஜூன், 2014

தமிழன் என்று ஓர் இனம்.


தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. ஆஹா, எப்படிப்பட்ட வார்த்தைகள். இவ்வார்த்தைகளைக் கேட்கும்போதே புல்லரிக்கிறது, மயிர்க்கால்கள் சிலிர்க்கின்றன, தலை தானாக உயர்கிறது.

தமிழினத்தைப் போல் தன்மானமுள்ள இனம் இவ்வுலகில் கிடையாது. ஒரே சிக்கல் என்னவென்றால், அதை அவன் அடிக்கடி மறந்து விடுவான். தற்காலக் கலாச்சாரக் காவலர்களான திராவிட அரசியல்வாதிகள் அவனுக்கு இதை அடிக்கடி நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.

இலங்கையில் பிரபாகரன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்தபோது "ஆஹா, எங்கள் சகோதரர்களை இலங்கை அரசு படுகொலை செய்து கொண்டிருக்கிறது, இதை ஏன் இந்திய அரசு கண்டும் காணாதது போல் இருக்கிறது? இதை வன்மையாக எதிர்க்கிறோம்" என்று தமிழனின் தன்மான உணர்வை தூசு தட்டி எழுப்பி ஒரு சில தீக்குளிப்பு வரை கொண்டு சென்றது யார்?

இந்த அரசியல் வாதிகள் இல்லாவிட்டால் தமிழனுக்கு, தான் ஒரு பாரம்பரியம் மிக்க, தன்மானத்திற்குப் பெயர் போன இனம் என்பது மறந்து போயிருக்கும். ஈழத் தமிழர் பிரச்சின் ஒரு வழியாக ஓய்ந்த பிறகு அவர்களுக்கு மெல்லுவதற்கு ஒன்றும் இல்லாமல் போயிற்று.

நல்ல காலம், மோடி வந்தார். அவர் ஏதோ இந்தி பற்றி அறிக்கை விட்டிருக்கிறார். உடனே நம் அரசியல்வாதிகள் " பழைய குருடி, கதவைத்திறடி" என்றபடி இந்தி எதிர்ப்புக் கோஷங்களை கூவுகிறார்கள். தமிழா, மோடி உன் தமிழை அழித்து விட முடிவு செய்து விட்டார், நீ வீறு கொண்டு எழு என்று உசுப்பி விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

நம்மூர் அரசியல்வாதிகளுக்கு அவ்வப்போது ஏதாவது ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கட்சி உயிரோடு இருப்பது மக்களுக்கு எப்படித் தெரியும்? அதற்கு ஏதாவது நொண்டிச் சாக்கு வேண்டும். அவ்வளவுதான். இப்போது மோடி சிக்கிக்கொண்டார். அவர் இன்று சென்னை வரும்போது இரண்டொரு கட்சிகள் கருப்புக்கொடி காட்டினாலும் காட்டுவார்கள். அவர்களை  கைது என்ற பெயரில் உடனே ஒரு கல்யாண மண்டபத்திற்கு கூட்டிக்கொண்டு போய் நல்ல பிரியாணி போட்டு மாலையில் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.

முன்னூறு வருடங்களுக்கு முன் இங்கிலீஷ்காரன் நம்மூருக்கு வியாபாரத்திற்கென்று வந்து நம்மை ஆள ஆரம்பித்த கதை எல்லோருக்கும் தெரியும். அப்போது இங்கிலீஷ் தெரிந்தால் அவனிடம் சேவகம் செய்யவும் கொஞ்சம் காசு பார்க்கவும் முடியும் என்பதினால் நம் ஆட்கள், குறிப்பாக தமிழர்கள் இங்கிலீஷ் படித்து காசு பண்ணினார்கள்.

அவன் நம் நாட்டைவிட்டுப் போய் 70 ஆண்டுகள் ஆன பின்பும் நாம் இங்கிலீசை விடவில்லை. ஏன் என்றால் இங்கிலீஷ் இன்றைக்கும் காசு கொடுக்கிறது. இல்லையென்றால் எப்படி அமெரிக்கா செல்ல முடியும்? இந்திக்கு அவ்வளவு மவுசு இல்லை. இருந்தாலும் பலர் வடநாட்டுக்கு உத்தியோகம் பார்க்கப்போவதால் இந்தி படிக்கிறார்கள். (இந்தியை கொள்கை ரீதியாக எதிர்ப்பவர்கள் உட்பட).

தமிழனின் தன்மானம் எந்த அளவிற்கு இருக்கிறதென்றால், தன் பிள்ளைகளுக்கு வேத வியாஸ், தினேஷ், பிரபு விகாஷ் என்று பெயர் வைப்பதில் இருக்கிறது. தமிழ் இனம் அழிகிறதா, எப்படி அழியும்? அழிய விட்டு விடுவோமா? அமெரிக்காவில் ஊர்ஊருக்கு எவ்வளவு தமிழ்ச் சங்கங்கள் வைத்து தமிழ் கலாச்சாரத்தை பேணிக் காக்கிறோம், ஒவ்வொரு கலாசார நிகழ்ச்சி முடிந்தவுடன் பீஸ்ஸா சாப்பிட்டு கோக் குடித்து எவ்வளவு பாடு படுகிறோம். தமிழ் கலாச்சாரத்தை அழிய விடுவோமா?

தமிழனே, எப்போதும் தன்மானத்தைக் காக்க புரட்சி செய்யத் தயாராக இரு. வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்.

திங்கள், 23 ஜூன், 2014

ரயில் கட்டணம் அதிகரிப்பு - மக்கள் கவலை!


சமீபத்தில் மோடி அரசு ரயில் கட்டணங்களை அதிகரித்துள்ளது. இது மிகவும் நியாயமான ஒரு நடவடிக்கை. ரயில்வே நிர்வாகம் தினமும் 30 கோடி ரூபாய் அளவில் நஷ்டத்தை சந்திக்கிறதாம். எந்த ஒரு ஸ்தாபனத்தையும் இப்படி நஷ்டத்தில் நடத்த முடியாது. ஆகவே மோடி கட்டணங்களை அதிகரித்ததில் எந்த வித தவறும் கிடையாது.

ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் மாநில ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இட்லி ஒரு ரூபாய்க்கு கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு பணம் எங்கிருந்தாவது வர வேண்டுமல்லவா? இப்படி மத்திய அரசு செய்வதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தால் அப்புறத் மத்திய சர்க்கார் எப்படி நடக்கும்?

சரி, அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஒரு சம்பிரதாயமான கடமை. மருமகள் கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம் என்பது போல், மத்திய சர்க்கார் என்ன செய்தாலும் அதை எதிர்த்து ஒரு அறிக்கை விடுவது மாநில சர்க்காரின் பிறப்புரிமை. தினமும் தூங்கி எழுவது போல் இது ஒரு "நித்தியானுஷ்டானம்". ("நித்தியானுஷ்டானம்" அப்படீன்னா என்னன்னு கேட்கப்படாது. எனக்குத் தெரியாததைக் கேட்டால் நான் என்ன பண்ண முடியும்?)

இது புரிகிறது. ஆனால் இந்த பொது ஜனம் என்று சொல்லப்படுகின்ற ஜந்து எதற்காக ஊளையிடுகிறது என்று புரியவில்லை? தென்னாட்டில்தான் இந்த ஓலம். வடநாட்டில் இப்படி யாரும் ரயில் கட்டண உயர்விற்காக ஓலமிடுவதாய் தெரியவில்லை. அதனால்தான் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொல்கிறார்கள்.

வட மாநில மக்கள் ஏன் ரயில் கட்டண உயர்வைப்பற்றி ஓலமிடவில்லை என்பது வட மாநிலங்களுக்குப் போய் வந்தவர்களுக்குத் தெரியும். டிக்கட் வாங்கி ரயில் பயணம் செய்பவர்களுக்குத்தான் ரயில் கட்டண உயர்வைப் பற்றி கவலை. வட மாநில மக்கள் எப்போதும் ரயிலில் செல்வதற்கு டிக்கட் வாங்குவதில்லை. (சில அரசியல் வாதிகள் உட்பட.) நம் அரசின் ரயில், நாமெல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், நாம் எதற்கு டிக்கட் வாங்க வேண்டும்? இது அவர்கள் கொள்கை.

வாழ்க மத்திய அரசு.

திங்கள், 16 ஜூன், 2014

நான் 100/100 வாங்குவது எப்போது?


வாழ்க்கையில் 100 என்ற எண்ணுக்கு எப்போதுமே ஒரு தனி மதிப்பு உண்டு.

மாணவனுக்கு அனைத்து பரீட்சைகளிலும் 100 க்கு 100 வாங்கவேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கும். இந்தக் காலத்தில் அது சாத்தியமாகவும் இருக்கிறது. நான் படித்த காலத்தில் 60 மார்க் போடவே ஆசிரியர்கள் மிகவும் தயங்குவார்கள்.

எல்லோரும் 100 வயது வரை வாழ விரும்புகிறார்கள். சமீபத்தில் நான் கேட்ட ஒரு டாக்டரின் பிரசங்கத்தில் அவர் ஒவ்வொரு மனிதனும் 100 ஆண்டுகள் வாழுமாறுதான் பிறப்பிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் மனிதன்தான் தன் வேண்டாத பழக்கங்களினால் தன் ஆயுளைக் குறைத்துக்கொள்கிறான் என்று கூறினார்.

100 சதம் உத்திரவாதம் என்று பலவற்றிற்கு வியாபாரிகள் கூசாமல் கூறுகிறார்கள். இதை நம்பி பலர் அந்தப் பொருளை வாங்குகிறார்கள். வியாபாரம் அமோகமாக நடக்கிறது.

ஆக மொத்தத்தில் ஒரு காரியம் 100 சதம் முடிந்து விட்டது என்றால் அந்தக் காரியம் வெற்றி என்று பொருள். பதிவுலகில் நானும் அப்படி ஒரு வெற்றி பெற ஆசைப்படுகிறேன்.

அது இதுதான். நான் இந்த இடத்தைப் பிடிக்கவேண்டும்.


நான் இப்போது இருப்பது இந்த இடத்தில்.


நான் இந்த இடத்திற்கு வருவதற்கு உதவிய அனைத்து வாசக நேயர்களுக்கும் நன்றி. என்னுடைய உழைப்பும் இதில் பெரித கலந்திருக்கிறது. இருந்தாலும் வாசகர்களின் பங்களிப்பே அதிகம்.

இவ்வளவு நாள் ஒத்துழைப்பு நல்கியது போலவே வருங்காலத்திலும் கொடுத்தால் நான் என்னுடைய குறிக்கோளை விரைவில் எட்ட ஏதுவாக இருக்கும். பிறகு நான் என் குறிக்கோளை எட்டிய திருப்தியில் ஓய்வு பெறுவேன்.

உங்கள் ஒத்துழைப்பை வெகுவாக எதிர் பார்க்கிறேன்.

திங்கள், 9 ஜூன், 2014

பூதம் காத்த புதையல்


ஆசைகளில் தீராத ஆசை பணத்தின் மேல் உள்ள ஆசைதான். இந்த ஆசை எல்லாவற்றையும் முற்றும் துறந்ததாகக் கூறிக்கொள்ளும் இந்நாள் மாடர்ன் சாமியார்களையும் விடவில்லை. அப்படியிருக்க நான் எம்மாத்திரம்?

நான் ஒரு சராசரி மனிதன். ஏதோ கொஞ்சம் ஆன்மீகத்தில் பரிச்சயம் உண்டு. ஆசையே மனிதனின் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று பல குருமார்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவர்களும் பிரசங்கம் முடிந்தவுடன் சீடர்களை தட்டுடன் வசூலுக்கு அனுப்புவதையும் பார்த்திருக்கிறேன்.

சில சமயம் நானும் சன்னியாசம் வாங்கிக்கொண்டு, எல்லாவற்றையும் துறந்து விட்டு இமயமலைக்குப் போய்விட்டால் என்ன என்று யோசித்ததுண்டு. ஆனால் இன்னும் தைரியம் வரவில்லை. இப்போது கிடைக்கும் சௌகரியங்களெல்லாம் அங்கு வெறும் கையுடன் போனால் கிடைக்குமா என்பது பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

எங்கு சென்றாலும் பணம் இல்லாமல் ஒன்றும் நடப்பதில்லை என்பதை கண்கூடாகப் பார்த்திருப்பதால் இப்போது அனுபவிக்கும் சுகங்களை விட்டு விட்டு புதிதாக வேறொரு இடத்திற்குப் போவானேன் என்ற சிந்தனையும் மூளையின் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

என் இளம்பிராயத்தில் என்னிடம் பணம் எப்போதும் இருந்ததில்லை. யாராவது சொந்தக்காரர்கள் வந்து போகும்போது காலணா அரையணா கொடுப்பார்கள். அதை வாங்கும்போதே அம்மாவிடம் அர்ச்சனை வாங்கவும் தயாராகிக் கொள்ளவேண்டும். ஏண்டா அவர்களிடம் காசு வாங்கினே என்று ஆரம்பித்து சில சமயம் அடிகளும் கூடக் கிடைக்கும். எப்படியோ, என்ன நடந்தாலும் அந்தக் காசு லாபம்தானே. சில சுகங்களுக்காக சில தியாகங்கள் செய்துதான் ஆகவேண்டும்.

கொஞ்சம் பெரிய பையன் ஆன பிறகு நான் கமிஷன் ஏஜண்ட் ஆனேன். அதாவது கடைகளுக்கு ஏதாவது பொருட்கள் வாங்க அனுப்பினால் அதில் கொஞ்சம் காசு கமிஷனாக எடுத்துக் கொள்வது. இதில் ஒரு நியாயத்தைக் கடைப்பிடித்தேன். காலணா அல்லது அரையணாவிற்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு மேல் எடுத்துக்கொண்டால் அது தெரிந்துபோய் அப்பாவிடம் புகார் சென்று விடும். அப்புறம் நடப்பதை எல்லாம் எழுதினால் இந்தப் பதிவு கிரைம் நாவலாகிவிடும். வேண்டாம்.

நான் தொழிலதிபராக உருவெடுத்ததை முன்பு ஏதோ ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். புக் பைண்டிங்க் செய்திருக்கிறேன். காப்பிக்கொட்டை வறுத்திருக்கிறேன். இதிலெல்லாம் ஏதோ கொஞ்சம் சில்லறை நடமாட்டம் இருந்தது. கல்லூரி படித்து முடித்தவுடன் அரசு வேலைக்கு ஆர்டர் வந்து விட்டது. ஆரம்ப சம்பளத்தை சொல்ல வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு சரித்திரம் என்றால் உண்மையை அறிவிக்க வேண்டுமல்லவா.

மாத சம்பளம் நூறு ரூபாய். பஞ்சப்படி இருபத்திநான்கு ரூபாய். (1956 ம் வருடம்). இப்படியாக இருந்து படிப்படியாக உயர்ந்து நான் ஓய்வு பெறும்போது (1994)  பெற்ற சம்பளம் ஆறாயிரம் ரூபாய். அதில் பாதி மூவாயிரம் ரூபாய் பென்ஷன் கொடுத்தார்கள். இருபது வருடம் கழித்து பென்ஷன் அதைப்போல் பல மடங்கு வாங்குகிறேன். இதனால்தான் அன்றே பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். காலணா உத்தியோகம் என்றாலும் கவர்மென்டு உத்தியோகம் வேண்டும் என்று.

இப்படியான வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், கையில் காசில்லாதவன் வாழ்வில் நடைப்பிணமே. ஆகவே என்னால் முடிந்த அளவு சேமிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச கொஞ்சமாக சேமித்தது இப்போது கணிசமாக வளர்ந்துள்ளது. ஆனாலும் இன்னும் சேர்க்கவேண்டும் என்ற ஆசையைத் தவிர்க்க முடியவில்லை.

சேமித்த பணத்தை எதற்காவது செலவு செய்யலாம் என்றால் மனம் அதற்கு இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. இந்த சேமிப்பினால் எனக்கு ஏதும் பயன் இல்லை என்றாலும் அது ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. ஏதாவது இன்னல் வந்தால் யார் கையையும் எதிர் பார்க்காமல் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தை அளிக்கிறது.

அதற்காகவே பூதம் காப்பது போல் இந்தப் பணத்தைக் காத்துக்கொண்டு இருக்கிறேன். வேறு வழிகள் யாருக்காவது தெரிந்திருந்தால் தெரிவிக்கவும்.

திங்கள், 26 மே, 2014

இணையத்தின் மூலமாக பணம் சம்பாதிக்க !


கண்காட்சிகளைப் பார்த்திருப்பிர்கள். ஒரு இடத்தில் நாலு நண்பர்கள் நின்று பேசிக்கொண்டு இருந்தால் உடனே அங்கு ஒரு கூட்டம் சேர்ந்துவிடும். அங்கு என்னவோ நடக்கிறது, அதில் நாமும் சேர்ந்து கொள்ளலாமே என்ற மனப்பான்மை மனிதர்களுக்கு இயற்கையாகவே வேறூன்றி இருக்கிறது.

இலவசம் அல்லது சும்மா கிடைக்கிறது என்றால் அதற்காக உயிரைப் பயணம் வைத்து அதைப் பெற்றுக்கொள்ள அடித்துக் கொள்வார்கள். இத்தகைய நிகழ்வுகள் நம் தங்கத் தமிழ்நாட்டில் பலமுறை அரங்கேறியுள்ளன.

உங்கள் பணம் 100 நாளில் இரட்டிப்பாகும் அல்லது மூன்று மடங்காகும் என்றால் முன்பின் யோசிக்காமல் பணத்தைக் கொண்டுபோய் கொட்டுபவர்களில் தமிழர்களை மிஞ்ச யாரும் இல்லை. நகைச்சீட்டு, புடவைச்சீட்டு, தீபாவளி பலகாரச்சீட்டு என்று அந்தந்த சீசனுக்கு தகுந்தாற்போல சீட்டுகள் நடக்கும். எல்லாம் ஏமாற்று வேலைகள்தான்.

இந்த வகையில் தற்போது தோன்றியிருப்பது "இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம்" என்ற கோஷம். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் பல பதிவுகள் இதை ஊக்கப்படுத்துகின்றன. இணையத்தில் பதினைந்து நிமிடங்கள் செவழித்தால் போதும். மாதம் 30000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று தடாலடியாக எழுதுகிறார்கள்.

நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பணம் என்பது ஒருவன் தன் உழைப்பைக்கொட்டி சம்பாதிக்க வேண்டும். அதுதான் உண்மையான சம்பாத்தியம். கானல்நீரைக்கண்டு ஏமாந்து போகாதீர்கள்.

திங்கள், 19 மே, 2014

எனது பெங்களூரு விஜயம்

திரு GMB யைப் பார்க்க நான் செய்த முஸ்தீபுகளை போன பதிவில் எழுதியிருந்தேன். நான் புறப்படுவதற்கு முன் தினம் அவர் அனுப்பிய செய்தியில் என்னை ரயில் நிலையத்திற்கே வந்து அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார். நான் மிகவும் மகிழ்வுற்றேன். ஏனெனில் இப்போது பெங்களூரு பூதாகாரமாக வளர்ந்துள்ளது என்று கேள்விப்பட்டிருந்தேன். நண்பர் வீட்டிற்கு எப்படி போய்ச்சேரப் போகிறோம் என்ற கவலை மனதினுள் அரித்துக் கொண்டிருந்தது. அவர் அனுப்பிய செய்தியினால் அந்தக் கவலை மறைந்தது.

ஆனால் வேறு கவலைகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. "தெனாலி" படத்தில் கமலஹாசன் சொல்லுவாரே அந்த மாதிரி கவலைகள்.

நான் போகும் ரயில் இரவு 1 மணிக்கு. நான் நேரத்தோடு ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். இல்லாவிட்டால் பஸ் கிடைக்காது. அப்படி நேரத்தோடு ஸ்டேஷன் போய்விட்டால், ரயில் வரும்போது தூங்கிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை.

அப்படி ரயில் வரும்போது நான் விழித்திருந்து என் கம்பார்ட்மென்டில் ஏறின பிறகு என்னுடைய பெர்த் காலியாக இருக்குமா? அதில் யாராவது படுத்துக் கொண்டிருந்தால் அவருடன் வாக்குவாதம் செய்யவேண்டி வருமோ என்ற கவலை.

அப்படி நடக்காமல் பெர்த் கிடைத்த பிறகு ரயில் விபத்தில்லாமல் பெங்களூரு போய்ச்சேருமா என்ற கவலை.

டிடிஆர் உடனே வந்து டிக்கெட்டைச் செக் செய்யவில்லையானால் அவருக்காக விழித்துக்கொண்டிருக்கவேண்டுமே என்ற கவலை.

நடுவில் எங்காவது ரயில் கொள்ளைக்காரர்கள் வந்து என் உடமைகளைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற கவலை. என்ன உடமைகள்? இரண்டு செட் பழைய டிரஸ்கள். பணத்தை ஜட்டியில் இருக்கும் பாக்கெட்டில் பாலிதீன் கவரில் போட்டு பத்திரமாக வைத்து ஒரு சேப்டி பின் குத்திவிட்டு புறப்படுவதுதான் என் மாமூல் வழக்கம். ஆகவே பணத்தைப் பற்றி அதிகம் கவலை இல்லை.

பாத்ரூம் போனால் திரும்பி வருவதற்குள் என் பேக்கை யாராவது தூக்கிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற கவலை.

நடுவில் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து மேல் லோகம் போய் விட்டால் என் உடலை யார், எப்படி என் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்ற கவலை.

செல்போன் சார்ஜ் தீர்ந்து போனால் என்ன செய்வது என்ற கவலை.

பெங்களூர் ஸ்டேஷனுக்கு திரு GMB  வராமல் போனால் என்ன செய்வது என்ற கவலை.

இப்படிப் பலவிதமான கவலைகளுடன் ஸ்டேஷனில் தூக்கம் வராமல் உட்கார்ந்து கொண்டிருந்தபோது நான் செல்லவேண்டிய ரயில் வந்து சேர்ந்தது. என்னுடைய பெர்த் காலியாக இருந்தது. என் பேக்கையே தலையணையாக வைத்துக்கொண்டு படுத்தேன் ஏனென்றால் தூங்கும்போது பேக்கை யாரும் களவாடக் கூடாதல்லவா?

முன்பு டிடிஆர் என்று ஒரு கருப்புக்கோட்டு போட்ட ஆசாமி வந்து பயணிகளை வாதித்துக்கொண்டு இருப்பார். ஒழுங்காக டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருந்தாலும் அவர் வந்து நம் டிக்கெட்டை செக் பண்ணிவிட்டுப் போகும் வரையிலும் ஒரு இனம் தெரியாத பயம் மனதிற்குள் இருக்கும். அதாவது ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ரயில்வே டிபார்ட்மென்டை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் அந்த அதிகாரிகளின் மனதில் வேறூன்றி இருக்கும். அது போலத்தான் நடந்துகொள்வார்கள்.

இப்போதெல்லாம் ரயில்வே டிபார்ட்மென்டுக்கு தங்கள் பயணிகள் மேல் அசாத்திய நம்பிக்கை வந்து விட்டது போல் இருக்கிறது. நான் சென்ற ரயிலில் ஒரு டிடிஆரையும் காணவில்லை. திரும்பி வரும்போதும் அப்படியே. என்ன ஒரு நம்பிக்கை. மக்களும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் பயணித்துக்கொண்டு இருந்தார்கள்.

ரயில் வந்தவுடன் நான் என் கேரேஜை கண்டு பிடித்து ஏறி என் சீட்டைத் தேடினேன். என் சீட் லோயர் பெர்த். மாமூலாக யாராவது அதில் படுத்துக்கொண்டு இருப்பார்கள். எழுப்பி இது என்னுடைய பெர்த் என்று சொன்னால், என்னுடையது அப்பர் பெர்த், அதில் படுத்துக்கொள்ளுங்களேன் என்று புத்திமதி கூறுவார்கள். நம்முடைய உரிமையை நிலை நாட்ட ஒரு வாக்குவாதம் நிகழ்த்த வேண்டும்.

இந்த மாதிரி வாக்குவாதம் செய்து அதில் ஜெயித்து நம் பெர்த்தை நாம் அடைந்தோமானால் வாதத்தில் வெற்றி பெற்ற எண்ணம் மட்டுமே மிஞ்சும். தூக்கம் போய்விடும். அந்த மாதிரி எதுவும் நடக்காமல் என் பெர்த் காலியாக இருந்தது. எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். பெர்த்தில் என்னுடைய பேக்கை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தேன். ஏனெனில் பேக்கை நான் தூங்கும்போது யாரும் திருடிக்கொண்டு போய்விடக்கூடாதல்லவா?

பிறகு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் பெங்களூர் போய்ச் சேர்ந்தேன். ரயிலை விட்டு இறங்கினால் பிளாட்பாரத்தில் ஒரே திருவிழாக்கூட்டம். நண்பரை எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறோம் என்ற புதுக்கவலை என்னை பிடித்துக்கொண்டது. என் நல்ல காலம் ஒரு நிமிஷத்தில் திரு.GMB  என் அருகில் வந்து என் கையைப் பிடித்துக்கொண்டார். இருவருமாக ஸ்டேஷனுக்கு வெளியில் வந்தோம். ஆட்டோ புக் செய்யும் இடத்திற்குச் சென்று ஒரு ஆட்டோ பிடித்து அவர் வீட்டிற்கு போய் சேர்ந்தோம்.

அங்கு சென்றதிலிருந்து மாலை அவர் வீட்டை விட்டு புறப்படும் வரை நடந்தவைகளை திரு.GMB அவர்கள் தன்னுடைய பதிவில் விவரமாக எழ்தியிருக்கிறார் அதை மறுபடியும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. அதில் நான் ஒரு கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தம்பதியினர் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு என்னை உபசரித்து தங்கள் அன்பு வெள்ளத்தில் என்னை திக்குமுக்காடச் செய்து விட்டனர். இந்த அன்புக்கு நான் எப்படி எந்த ஜன்மத்தில் கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.


திருGMB தம்பதியினர்

பிற்பகலில் திரு GMB தம்பதியினர் என்னை தும்கூர் ரோட்டில் 15 கி. மீ. தூரத்திலுள்ள பகவத் கீதா மந்திருக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள். பகவத் கீதை ஸ்லோகங்கள் முழுவதையும் நான்கு பாஷைகளில் அங்கு கருங்கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். நடுவில் விஷ்ணுவின் விஸ்வரூப சிலை ஒன்றும் இருக்கிறது. கீழ் தளத்தில் காயத்ரி தேவியின் சந்நிதி இருக்கிறது. கண்ணன் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த காட்சியை தத்ரூபமாக வடித்திருக்கிறார்கள். நான் அங்கு எடுத்த சில போட்டோக்கள்.







திரு GMB எனக்கு அன்பளிப்பாக கொடுத்த ஓவியம். இது அவரே கைப்பட வரைந்தது. 65 வயதில் தஞ்சாவூர் பெயின்டிங்க் போட தானாகவே பழகி பல படங்கள் வரைந்துள்ளார்.(அதிகாலையில் போட்டோ எடுத்த போது தூக்கக் கலக்கத்தில் காமிராவின் கைப்பிடியும் போட்டோவில் சேர்ந்துவிட்டது.)


திரு GMB அவர்கள் எழுதி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு ஒன்றை எனக்கு அன்பளிப்பாக கொடுத்து கௌரவப்படுத்தினார்கள்.

16 சிறு கதைகள் கொண்ட தொகுப்பு இது. மணிமேகலைப்பிரசுரம் பிரசுரித்துள்ளது. நடைமுறை ழ்க்கையில் நாம் சந்திக்கும், சந்தித்தபின் அவைகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் போகும் நிகழ்வுகளை அருமையாக சிறுகதை வடிவில் தொகுத்திருக்கிறார். படித்த பின் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள்.

இந்த இரண்டு அன்பளிப்புகளும் ஆத்மார்த்தமாக கொடுக்கப்பட்டவை. அவைகளை பெரும் பொக்கிஷமாக கருதி பாதுகாப்பேன். என் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

மாலையில் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்படும்போது திருமதி GMB  தன் கையால் செய்த இனிப்புகள் கொண்ட ஒரு டப்பாவை என்னிடம் கொடுத்தார்கள். கோவை வந்தவுடன் அதைத் திறந்து பார்த்தேன். அருமையான பொரிவிளங்காய் உருண்டைகள். பாதிக்கு மேல் நானே சாப்பிட்டேன். மிகவும் ருசியாக இருந்தன. சர்க்கரை, நெய்யுடன் அன்பும் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பல்லவா அவை.

ஒரு இனிய நண்பருடன் ஒரு நாள் கழித்த நினைவுகள் என்றும் என் மனதில் பசுமையாகத் தங்கியிருக்கும்.

சனி, 17 மே, 2014

நானும் GMB யும்.


திரு GMB  யின் பிளாக்கை அறியாதவர்கள் பதிவுலகை அறியாதவர்கள் என்றே கூறலாம். தன்னுடைய எழுத்துக்களினாலும் எந்த ஊருக்குச்சென்றாலும் அந்த ஊரிலுள்ள பதிவர்களைச் சந்திப்பதிலும் அவர் தனித்து நிற்கிறார். அவர் பதிவுலகத்தில் கால் பதித்த நாட்களிலிருந்து அவர் பதிவுகளை ரசித்து வந்திருக்கிறேன். மத்திய அரசு நிறுவனமான BHEL ல் வேலை பார்த்து ஓய்வு பெற்று பெங்களூரில் வசித்து வருகிறார்.

ஒரு முறை அவர் கோவைக்கு வந்திருந்தபோது என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். நான் இதிலென்ன கஷ்டம் தாராளமாக வாருங்கள் என்று பதில் போட்டிருந்தேன். அவர் என் வீட்டை கண்டுபிடித்து தம்பதி சமேதராக வந்தே விட்டார். நேரம் போறாமையினால் சிறிது நேரமே இருந்து விட்டுப் புறப்பட்டார். இது நடந்து ஏறக்குறைய மூன்று வருடம் இருக்கும்.

போன வருடம் நானும் என் நண்பர் ஒருவரும் பெங்களூர் போகவேண்டி இருந்தது. நான் இவரை சந்திக்க ஆவல் கொண்டு அவருடைய வீட்டு விலாசம், டெலிபோன் நெம்பர் எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். ஆனால் பெங்களூரில் நாங்கள் எங்களை வரவேற்ற நண்பரின் அன்புப் பிடியில் சிக்கி விட்டபடியால் இவருடைய வீட்டிற்கு செல்ல இயலாமல் போனது. போன் செய்து என் இயலாமையைக் குறிப்பிட்டு சந்திக்க முடியாததற்கு மன்னிப்பு கேட்டிருந்தேன்.  அவரும் பெரிய மனதுடன் மன்னித்தேன் என்றார்.

ஆனால் இந்த நிகழ்வு அவருடைய மனதிலிருந்து மறையவில்லை என்று பிற்பாடுதான் தெரிய வந்தது. அது எப்படியென்றால், சென்ற மாதம் நான் திருச்சிக்கு என் பேரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்குப் போயிருந்தேன். அப்போது ஒரு இடைவெளி கிடைத்ததைப் பயன்படுத்தி
திரு.வைகோ. அவர்களைப் பார்த்துவிட்டு வந்தேன். அவரை அறியாதவர்களும் யாரும் இருக்கமாட்டார்கள்.

{ஒரு முக்கிய குறிப்பு: பிரபல பதிவர்கள் ஆகவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த மாதிரி (என்னையும் சேர்த்து?!) பிரபல பதிவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அதைப்பற்றி பதிவுகள் போடவேண்டும்.}

நிற்க, நான் வைகோவை சந்தித்தது பற்றி ஒரு பதிவில் எழுதியிருந்தேன். அதைப் படித்த திரு GMB. என் மீது ஒரு அஸ்திரம் ஏவிவிட்டார். அது என் நடு மனத்தில் ஆழமாகப் பாய்ந்து விட்டது. "பெங்களூர் வந்திருந்தும் என்னைப் பார்க்காது போய்விட்டீர்களே" என்ற அஸ்திரம்தான் அது.

இனி என்ன செய்வது என்று யோசித்தேன். அப்போதுதான் எங்கோ படித்திருந்த ஒரு பொன்மொழி நினைவிற்கு வந்தது. பாக்கி வைக்காமல் தீர்க்கவேண்டிய சமாசாரங்கள் மூன்று உண்டு. 1. மனிதனின் கடமைகள். 2. தான் வாங்கிய கடன். 3. எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு. இவைகளைத் தீர்க்காவிட்டால்
அவை மீண்டும் வளர்ந்து ஒருவனை கஷ்டத்திற்குள்ளாக்கும். ஆகவே GMB யை சந்திக்கவேண்டிய கடமை இருக்கிறது. அதை தீர்க்கவேண்டும். அதுவும் எனக்கு வயதாகிக்கொண்டு இருப்பதால் அதை தள்ளிப்போட முடியாது என்று முடிவு செய்து, உடனடியாக பெங்களூருக்கு போகவர ரயில் டிக்கட் புக் செய்து விட்டு இவருக்கு செய்தி அனுப்பினேன்.

உங்கள் வீட்டு விலாசமும் வரும் வழியையும் தெரிவியுங்கள் என்று பல முறை மெயில் அனுப்பியும் மனுஷன் பதிலே போடவில்லை. சரி என்ன ஆனாலும் ஆகட்டும், பிளான் பிரகாரம் பெங்களூர் போவோம் என்று முடிவு செய்திருந்தேன். நான் புறப்படும் தினத்திற்கு முதல் நாள் இவர் ஒரு மெயில் அனுப்பினார். அதில் என்ன சொல்லியிருந்தார் என்றால்............

மீதி அடுத்த பதிவில்.

திங்கள், 12 மே, 2014

கட்டைப் பேனாக்கள்

நாம் எழுத்தாணி உபயோகப்படுத்திக்கொண்டிருந்தபோது ஐரோப்பாவில் இறகுப் பேனாவை பயன்படுத்தினார்கள். பேப்பர் கண்டுபிடிக்காதபோது அவர்கள் மரப்பட்டைகளை உபயோகப்படுத்தினார்கள்.
இதிலிருந்து மாறி வந்தது தான் கட்டைப் பேனாக்கள். இவை 1960 ம் வருடத்திற்கு முன் மிகவும் பிரபலமாக இருந்தன.


இவைகளை தொட்டு எழுதும் பேனாக்கள் என்றும் கூறுவார்கள். சர்க்கார் ஆபீசுகளில் ஒவ்வொரு மேஜையிலும் தவறாது இடம் பெற்றிருக்கும்.
இந்தப் பேனாவை உபயோகித்து எழுதுவதற்கு நல்ல திறமையும் அனுபவமும் வேண்டும். அப்டிப்பட்ட அனுபவஸ்தர்கள் எழுதினால் எழுத்துக்கள் ஒரே சீராக இருக்கும். இல்லையென்றால் வரி ஆரம்பிக்கும்போது இங்க் அதிகமாகவும் வரி முடியும்போது எழுத்து மங்கலாகவும் இருக்கும்.

நான் இந்தப் பேனாக்களை உபயோகப்படுத்தியிருக்கிறேன். இதற்கு உபயோகிக்க இங்க் வில்லைகள் அந்தக்காலத்தில் பெட்டிக்கடைகளில் கிடைக்கும். ஒரு வில்லை காலணா (ஒன்றரை நயா பைசா) என்று ஞாபகம். காலணா என்பது நான் சிறுவனாக இருந்தபோது ஒரு கணிசமான தொகை. அதை வைத்துக்கொண்டு ஒரு இலந்தை வடகம் வாங்கலாம். ஒரு தேங்காய் பர்பி வாங்கலாம். அன்று ஒரு சிறுவன் கையில் காலணா இருந்தால் அவன் அன்று பள்ளியில் ஒரு பெரிய ஹீரோ.

இந்தப் பேனாக்கள் மரக்கட்டையினால் தயாரிக்கப்பட்டவை. ஒரு முனையில் நிப் சொருக ஒரு அமைப்பு இருக்கும். அந்த நிப்பை சொருகி பின் மைக்கூட்டில் மையைத் தொட்டு எழுதவேண்டும். இதன் பின்னால் கண்டு பிடிக்கப்பட்டதுதான் பவுன்டன் பேனா என்று சொல்லப்படுபவை. இதில் இரண்டு வகை உண்டு. கழுத்தைத் திருகித் திறந்து இங்க் ஊற்றும் வகை. இன்னொன்று தானே இங்க் நிரப்பிக்கொள்ளும் வகை.

பேனாவின் கழுத்தைத் திருகித் திறந்து இங்க் ஊற்றுவது ஒரு பெரும் யுத்தம். இங்க்கை கீழே சிந்தாமல் இங்க் ஊற்றிய சிறுவர்கள் அநேகமாக இல்லை. அப்படி செய்து " அம்மாவிடம் "கடங்காரா" பட்டம் வாங்காதவர்கள் இல்லை. இத்தகைய பேனாக்கள் கூட அன்று மேலை நாட்டிலிருந்துதான் இறக்குமதியாகிக்கொண்டிருந்தன.  பிளேக் பேர்டு, ஸ்வேன், பார்க்கர், பைலட், ஷெஃபீல்டு ஆகியவை அன்று பிபலமானவை.

இந்தியா சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் பேனா தயாரிப்பு இங்கு தொடங்கியது. இங்குகளும் தயாரிக்கப்பட்டன. "கேம்லின்" தயாரிப்புகள்தான் இன்று மார்க்கெட்டில் நிரம்பிக்கிடக்கின்றன. நடுவில் சைனாவிலிருந்து "ஹீரோ" பேனாக்கள் திருட்டுத்தனமாக வர ஆரம்பித்தன. சும்மா சொல்லக்கூடாது. அந்தப் பேனாக்கள் உண்மையிலேயே நன்றாக இருந்தன. இன்றும் நன்றாக இருக்கிறது.


அந்தக் காலத்தில் "ஹீரோ" பேனா வைத்திருப்பதுதான் பேஷனாக இருந்தது.இப்போது அதன் மவுசு பெரிதும் குறைந்து விட்டது. விதம் விதமான ஹீரோ பேனாக்கள் வாங்கி சேமித்து வைத்திருந்தேன். அதை எல்லாம் இப்போது பேரன்களுக்கு கொடுத்து விட்டேன்.

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் பால்பாய்ன்ட் பேனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தன. அவை வந்த புதிதில் அவைகளின் தரம் இன்று இருப்பதைப்போல் இருக்கவில்லை, எந்தப் புதிய கண்டு பிடிப்பு வந்தாலும் அதை எதிர்ப்பவர்கள் நம் நாட்டில் உண்டுதானே. குறிப்பாக பேங்க் ஆசாமிகள்.

செக்குகளில் பால் பாய்ன்ட் பேனாவால் கையெழுத்துப் போட்டால் செல்லாது என்றார்கள். அதற்கு அவர்க்ள கொடுத்த வியாக்யானம்தான் வேடிக்கை. பால்பாய்ன்ட் பேனாவால் எழுதும்போது கொஞ்சம் அழுத்தி எழுத வேண்டும். அப்படி அழுத்தி செக் புக்கில் எழுதினால் கீழே இருக்கும் செக்கிலும் அந்தக் கையெழுத்தின் அடையாளம் விழுந்து விடும். அதை வைத்து யாராவது வேற்று ஆட்கள் அந்தக் கையெழுத்தை ஒரிஜினல் மாதிரி போட்டு பணத்தைக் களவாண்டு விடுவார்கள், அதனால் பால்பாய்ன்ட் பேனா உபயோகப்படுத்தக்கூடாது என்றார்கள்.

அப்படி சொன்னவர்கள் இன்று எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. பேங்குகளில் இங்க் பேனாவை மருந்துக்குக்கூட காண முடிவதில்லை. எல்லோரும் பால் பாய்ன்ட் பேனாவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

இன்று பால்பாய்ன்ட பேனாக்களில் எத்தனை வகை இருக்கறது என்று யாராலும் சொல்ல முடியாதென்று நினைக்கிறேன். ஒரு சமயம் பள்ளிச் சிறுவர்கள் சொல்லக்கூடும். அவர்களுக்குத்தான் லேட்டஸ்ட் சமாச்சாரங்கள் தெரியும். கடைகளில் போய் இங்க் பேனா வேண்டும் என்றால் மேலும் கீழும் பார்க்கிறார்கள்.

இப்போது கம்ப்யூட்டர் வந்து விட்டது. பேப்பரில் எழுதுவது என்பதே ஏறக்குறைய மறந்து போக ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் இன்னும் கொஞ்ச காலத்திற்கு பேனாக்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.

நான் இன்னும் ஹீரோ பேனாவும் கேம்லின் இங்க்கும் வைத்திருக்கிறேன். அவைகளை அவ்வப்போது உபயோகப்படுத்தவும் செய்கிறேன்.

சனி, 3 மே, 2014

ஒரு வில்லங்கமான சந்தேகம்.

பாரம்பரியமாக சொல்லப்படுகின்ற அல்லது நடைமுறையில் இருப்பவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது பொதுவான பெரியோர்களின் கருத்து. ஏனெனில் அவைகளில் பல உட்பொருள்கள் மறைந்திருக்கலாம். அதை நாம் அறியாமல் இருக்கலாம். ஆகவே அவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஆனாலும் இந்த மாதிரி விஷயங்களில் எனக்கு சில சந்தேகங்கள் அவ்வப்போது தோன்றுகின்றன. புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் தோன்றிய மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். (நம்ம அரச மரத்தைத்தான் போதி மரம் என்று புத்தர்கள் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?)

இந்த மாதிரி சந்தேகங்கள் வருவது பாவ லிஸ்டில் சேருமா  என்று நான் அறியேன். சித்திரகுப்தனை ஒரு நாள் பார்த்து இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும்.

கீழே கொடுத்துள்ள படத்தைப் பாருங்கள். பார்வதி கல்யாணப்படம். பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்க பரமசிவன் தானம் வாங்கிக்கொள்கிறார்.


இந்த படம் எனக்கு சமீபத்தில் வந்திருந்த ஒரு கல்யாண அழைப்பிதழில் இருந்தது. செல்போன் கேமராவினால் எடுக்கப்பட்டது. படம் அவ்வளவு துல்லியமாக வரவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு வந்த கல்யாணப் பத்திரிக்கைகளிலும் இருக்கலாம்.

இந்த தானம் கொடுப்பதைப்பற்றி ( தாரை வார்ப்பது என்றாலும் தானம் கொடுப்பது என்றாலும் ஒன்றுதான்) எனக்குத் தெரிந்த ஐதீகம் என்னவென்றால், தானம் கொடுப்பவர் கை உயர்ந்து இருக்கவேண்டும். அடுத்த படியில் அதாவது அதற்குக் கீழே தானம் கொடுக்கப்படும் பொருள் இருக்கவேண்டும். அதற்குக் கீழே தானம் வாங்குபவரின் கை இருக்கவேண்டும். சரிதானே.

இப்போது படத்திற்கு வாருங்கள். பெருமாளின் கை மேலே இருக்கிறது. அவர் கெண்டியிலிருந்து நீர் வார்க்கிறார். தானம் கொடுக்கும்போது இந்த மாதிரி நீர் வார்ப்பது அவசியம்.

மகாபாரதத்தில் குருக்ஷேத்திர யுத்தத்தில் இந்திரன் பிராமண வேடத்தில் கர்ணனை அணுகி அவனுடைய புண்ணியங்களை தானமாக கொடுக்கும்படி கேட்கிறான். அப்போது அங்கு தண்ணீர் இல்லாததால் தன் உடம்பிலிருந்து வழியும் ரத்தத்தையே வார்த்து தானம் கொடுத்ததாக கதை படித்திருப்பீர்கள்.

இப்படி பெருமாள் நீர் வார்க்கும்போது மேலே பார்வதியின் கையும் அதன் கீழே ஈஸ்வரனின் கையும் இருப்பதுதானே முறை. ஆனால் இந்த மாதிரி பல படங்களில் ஈஸ்வரன் கை மேலேயும் பார்வதியின் கை கீழேயும் இருப்பது மாதிரி காட்டப்படுகிறது. இது சரியல்ல என்பது என்னுடைய கருத்து. 

இந்தப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த நுணுக்கத்தைப் பார்த்துப் பார்த்து எனக்கு இந்தப் படங்களின் மேல் இருக்கும் மரியாதை குறைந்து கொண்டே வருகிறது. என் கருத்து சரிதானா என்று வாசகர்கள் சொல்லுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திங்கள், 28 ஏப்ரல், 2014

பேனாக்களும் நானும்


பேனாக்கள் வளர்ந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. பழங்காலத்தில் தமிழ் நாட்டில் பனை ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள் என்று கேட்டிருக்கிறோம். நான் அப்படி எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பார்த்திருக்கிறேனே தவிர அப்படி எழுதுபவர்களைப் பார்த்ததில்லை. இந்தப் பழக்கம் தமிழ் நாட்டில் மட்டும்தான் இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இங்குதான் பனை மரங்கள் உண்டு. மற்ற தேசங்களில் எப்படி எழுதினார்க்ள என்பதற்கு ஒரு ஆராய்ச்சிதான் செய்யவேண்டும். அந்த ஆசை எனக்கு இப்போது இல்லை.


நான் ஒரு முறை காரைக்குடிக்குப் போயிருந்தபோது அங்கு செட்டிநாட்டு பழம் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடைக்குப் போயிருந்தேன். பல கலைநயம் பொருந்திய பழங்காலத்து பொருட்கள் அங்கு இருந்தன. அவை செட்டிநாட்டு நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் பொருட்கள். அதில் ஒரு எழுத்தாணியையும் பார்த்தேன். நான் அதற்கு முன் எழுத்தாணியைப் பார்த்தது இல்லை. அது ஒரு பக்கம் கத்தியும் மற்றொரு பக்கம் ஒரு கூரான ஊசியும் கொண்டு ஒரு பேனாக் கத்தியைப் போல் இருந்தது. இது என்ன என்று கடைக்காரரிடம் கேட்டதற்கு அவர் இதுதான் எழுத்தாணி என்று சொன்னார்.


உடனே அதன் விலையைக் கேட்டு அதை வாங்கிக்கொண்டேன். நான் ஒரு கம்பனாக மாறிவிட்டதாக ஒரு கற்பனை தோன்றியது. பழங்காலத்து நாகரிகத்தை பேணிக்காக்கும் ஒரு பெருமிதம் மனதில் உண்டானது. இப்போதும் அதை என் வீட்டு ஷோகேசில் வைத்திருக்கிறேன். பல முறை அதை என் சகதர்மிணி தூக்கிப் போடப் பார்த்தும் என் கவனத்தினால் அது காப்பாற்றப்பட்டு இன்று வரை தமிழனின் நாகரிகச் சின்னமாக, நானும் ஒரு தமிழன் என்று பறை சாற்றிக்கொண்டு இருக்கிறது.

தொடரும்...

வியாழன், 17 ஏப்ரல், 2014

சுற்றுலா போகலாம் வாங்க


இங்கு கொடுத்திருக்கும் லிங்க் பல மாதங்களுக்கு முன் திரு GMB அவர்கள் எனக்கு அனுப்பினது. இதில் குறிப்பிட்டுள்ள ஊர்களின் பெயரை கர்சரால் சொடுக்கினால் ஒரு லிங்க் தோன்றும். அந்த லிங்க்கை சொடுக்கினால் அந்த ஊர்களுக்கு செலவில்லாமல் போய் வரலாம். இல்லை, நான் அந்த மாதிரி ஓசியில் டூர் செல்ல மாட்டேன் என்று நினைப்பவர்கள் தாங்கள் விரும்பும் தொகையை எனக்கோ அல்லது  திரு GMB அவர்களுக்கோ அனுப்பலாம்.



Spectacular Panoramas and 3D Tours.

Enjoy Panoramic Views
...click on any one place and enjoy.. .... what a wonderful way to tour the world from your computer chair!
UN Plaza Hotel, New York, USA   •   Oahu, Hawaii, USA   •   Las Vegas, Nevada, USA   •   Millennium UN Plaza Hotel, New York, USA   •   Golden Gate Bridge, USA   •   Statue of Liberty, New York, USA   •   Manhattan, New York, USA   •   Hollywood, California, USA   •   San Juan and Colorado rivers, USA   •   Goosenecks, Utah, USA   •   Mono Lake, California, USA   •   Millennium UN Plaza Hotel, New York, USA   •  Chicago, Illinois, USA   •  Los Angeles, California, USA   •   Kiev, Ukraine   •   Ay-Petri, Ukraine   •  Dubai, UAE   •   Dubai, Islands, UAE   •   Palm Jumeirah, Dubai, UAE   •  Bangkok, Thailand   •   Sankt-Moritz, Switzerland   •   Cape Good Hope, South Africa   •   Cape-Town, South Africa   •   Moscow, MSU, Russia   •  Moscow, Kremlin, Bolotnaya Square , Russia   •   Moscow, Russia   •  Moscow Kremlin, Russia   •   55.748765;37.540841, Russia   •   Moscow City, Russia   •   Kremlin, Moscow, Russia   •   Moscow City, Russia   •  Trinity Lavra of Sait Sergius, Russia   •   Saint-Petersburg, Russia  •   New Jerusalem Monastery, Russia   •   Saint Petersburg, Russia   •  Novodevichy Convent. Moscow, Russia   •   Ramenki,Moscow, Russia   •  MKAD, Moscow, Russia   •   Moscow, Russia   •  Moscow, Russia   •  Krokus Expo Center, Moscow, Russia   •   Moscow Region, Russia   •  Moeraki Boulders, New Zealand   •   Fiordland, New Zealand   •   Nepal, Nepal   •   Maldives, Maldives   •  Kuala-Lumpur, Malaysia   •   Grimsvotn, Iceland   •   Amsterdam, Holland   •   Neuschwanstein Castle, Germany   •  Egyptian Pyramids, Egypt   •   Hong Kong, China   •   The Iguassu Falls, Brazil   •  Twelve Apostles Marine National Park, Australia   •   Sydney, Australia   •   Buenos Aires, Argentina   •   .


திங்கள், 14 ஏப்ரல், 2014

புத்தாண்டில் இன்பமாக வாழ்வோம்.


எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டு பிறந்தாலே கூடவே புத்தாண்டு சபதங்களும் வந்து விடும். சபதங்களை காப்பாற்றுகிறோமோ இல்லையோ, அவை நம் மனதின் ஆசைகளை வெளிப்படுத்தும் எண்ணங்களாகும். கடந்த கால வாழ்க்கையில் நாம் தவறென்று கருதுபவைகளை மாற்ற விரும்பும் நம் ஆழ்மனதின் வெளிப்பாடே ஆகும்.

நாம் மாறவேண்டும் என்று நினைப்பதே நாம் முன்னேறுவதற்கான முதல் படி. இந்த முயற்சிகளில் நாம் இன்பமாக வாழவேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம். நான் என் அனுபவத்தால் உணர்ந்த ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

கடனில்லா வாழ்வே மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அடிப்படைத்தேவை. பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் கடன் இல்லாமல் இருப்பதே ஆனந்தம். தான் சம்பாதிக்கும் வருமானத்திற்குள் வாழ்வதே புத்திசாலித்தனம்.

எல்லோரும் புத்தாண்டில் கடனற்ற இன்ப வாழ்வு வாழ ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

வியாழன், 10 ஏப்ரல், 2014

இது என்ன மாயவேலை?

நான் திருச்சியில் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை சந்திக்கச் சென்றது உங்களுக்குத் தெரியும். அப்போது அவர் கேமராவில் நாங்கள் இருவரும் சேர்ந்திருப்பதை படம் எடுத்தார். படம் கீழே காண்க.


இந்தப் படத்தில் திடீரென்று ஒரு மூன்றாவது நபர் நுழைந்திருக்கிறாரே, அவர் யார் என்று என்னைக் கேட்டார். படம் பார்க்க.


படம் அவருடைய கேமராவினால் எடுக்கப்பட்டது. என்னால் இது எப்படி நடந்தது என்று சொல்ல முடியவில்லை. யாராவது பாஸ்வேர்டு தெரிந்தவர்கள் இப்படி செய்திருக்கலாம் அல்லது ஏதாவது கம்ப்யூட்டர் வைரஸ் செய்த வேலையாயிருக்கலாம். நண்பர்களே, உங்களில் யாருக்காவது இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?

திங்கள், 7 ஏப்ரல், 2014

திருச்சியில் ஒரு இளைஞர்


இந்தப் பதிவு மிகவும் தாமதாகப் பதிவிடுகிறேன். காரணம் சோம்பல் மற்றும் உடல் சோர்வு.

திருச்சி பதிவர் வை.கோபாலகிருஷ்ணனைத் தெரியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். தற்போது இவருடைய சிறுகதைகளுக்கு ஒரு விமர்சனப் போட்டி நடத்திக்கொண்டு இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.

பல நாட்களாகவே இவரைச் சந்திக்கவேண்டும் என்று ஆவலாக இருந்தேன். குறிப்பாக இவர் வீட்டு ஜன்னலைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசைதான் அதிகம். இந்த ஜன்னலைப் பற்றி இவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். போன வாரம் திருச்சி போகவேண்டிய அவசியம் ஒன்று ஏற்பட்டது. அங்கு மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் பேரன் படிப்பை முடித்து விட்டான்.

இப்போது வாழ்க்கையில் பல புது கலாச்சாரங்கள் தோன்றியிருக்கின்றன. அவைகளில் கல்லூரிகளில் படிப்பு முடிந்தவுடன் பட்டமளிப்பு விழா நடத்துவதும் ஒன்று. ஆனால் இது உண்மையில் பட்டமளிப்பு விழா அல்ல. பட்டமளிப்பு விழா பல்கலைக் கழகம்தான் நடத்த முடியும். ஆனால் அது போன்ற ஒரு மாயை விழாவை இறுதி வைபவமாக கல்லூரிகள் நடத்துகின்றன. அதைப் பார்க்க மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் வருகிறார்கள்.

நானும் என் மனைவியும் இந்த விழாவிற்காக திருச்சி செல்வதென்று முடிவு எடுத்தோம். அப்போது எனக்கு எப்படியாவது "வைகோ" வை (அரசியல்வாதி வைகோ அல்ல) சந்தித்து விடுவது என்று முடிவு செய்தேன். பல விதமான பிரயாணத்திட்டங்கள் தீட்டினதில் விழா அன்று காலை காரில் சென்று விட்டு மறு நாள் திரும்புவது என்று முடிவாயிற்று.


ஆண்டார் தெரு ஆரம்பம்

இந்த திட்டத்தின் பிரகாரம் திருச்சியில் எனக்கு மதியம் 1 மணி முதல் 4 மணி வரை ஒரு இடைவெளி கிடைத்தது. சரி, இந்த இடைவெளியில் வைகோவை சந்தித்து விடலாம் என்று முடிவு செய்து அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் பகல் 12 மணியிலிருந்து இரவு 12 மணி வரை எனக்கு எப்போது வந்தாலும் சௌகரியமே என்று கூறினார்.


வைகோ வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் மதுரா ஹோட்டல்

காரில் செல்வதற்கு டிரைவர் இல்லை. நானே ஓட்டிக்கொண்டு போக  பயமாக இருந்தது. திருச்சி எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஊராக இருந்தாலும் நான் திருச்சியைப் பார்த்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். புது ரோடுகள், மேம்பாலங்கள் என்று திருச்சி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறது. ஆகவே டவுன் பஸ்சில் போய் வந்து விடுவது என்று முடிவு செய்தேன்.

இங்கு நான் ஒன்றைக் கவனிக்க மறந்து விட்டேன். அது கதிரவனின் கருணை. மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் கோடை காலங்களில் இருந்திருக்கிறேன். ஆனால் அது இருபது வருடங்களுக்கு முன். இப்போது எனக்கு இருபது வயது கூடியிருக்கிறது என்பது ஞாபகத்திற்கு வரவில்லை. நான் பார்க்காத திருச்சி வெய்யிலா என்ற மமதையுடன் கிளம்பி விட்டேன்.

நான் செய்த சமீப காலத் தவறு இதுதான். வெயில் தாக்கத்தில் நா வரண்டு போகிறது. நடை தள்ளாடுகிறது. எங்கே மயங்கி விழுந்து விடுவேனோ என்ற பயம் வந்து விட்டது. பஸ்சில் போய் மெயின் கார்டு கேட்டில் இறங்கி வைகோ வீட்டிற்கு ஒரு பத்து நிமிடம் நடக்கவேண்டும். அப்போதுதான் இந்த அனுபவம். வழியில் ஒருவன் கரும்புச் சாறு விற்றுக்கொண்டிருந்தான். ஒரு கிளாஸ் ஜூஸ் வாங்கி பக்கத்தில் ஒரு கடை வாசலில் உட்கார்ந்து குடித்தேன். கொஞ்சம் தெம்பு வந்தது.


வைகோ வசிக்கும் காம்ப்ளெக்சின் முன்புறத்தோற்றம்

பின்பு நடையைக் கட்டினேன். வைகோ வசிக்கும் வடக்கு ஆண்டார் தெரு வந்தது. இந்த இடங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பரிச்சயமானவைதான். ஆகவே வைகோ வீட்டைக் கண்டு பிடிப்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.
நான் அவர் வசிக்கும் காம்ளெக்ஸ் வாசலில் நுழையும்போதே "வாங்கோ வாங்கோ" என்று ஒரு அசரீரி கேட்டது. குரல் வரும் திசை நோக்கி மேலே பார்த்தேன். வைகோ தனது இரண்டாவது தளத்தில் இருந்து என்னைப் பார்த்து விட்டு வரவேற்பு கொடுத்திருக்கிறார்.

லிப்டில் ஏறி இரண்டாவது தளத்திற்குப் போனேன். லிப்டு கதவிற்கே வந்து என்னை வரவேற்று தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றார். அவரது துணைவியாரும் வீட்டு வாசலிலேயே என்னை வரவற்றார்கள். வீட்டுக்குள் என்னை அவருடைய பெட்ரூம் கம் ஆபீஸ் ரூமிற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏசி வைத்திருக்கிறார். வெய்யிலில் வந்ததற்கு ஏசி சுகமாக இருந்தது.


வைகோ தம்பதியினர்

குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். திருச்சியில் இப்போது கடும் தண்ணீர் பஞ்சம் போலிருக்கிறது. திருச்சி வரும் வழியில் காவிரியைப் பார்த்த போது அதில் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லை. மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. ஆயிரக் கண்க்கான லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லுகிறார்கள். அதனால் திருமதி வைகோ எனக்கு மாம்பழ ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அம்மா எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் நிறுத்தினார்கள்.


இரு "பிரபல" பதிவர்கள்

கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்றதற்கு மிகவும் தயங்கி ஒரு லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். பிறகு பரஸ்பரம் குடும்ப க்ஷேமங்கள் குறித்து விசாரித்தோம். ஒரு ஐந்து நிமிடம் பேசுவதற்குள் ஆறு தடவை சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுத்துக்கொண்டே இருந்தார்க்ள. இருபது வருடத்திற்கு முன்பாக இருந்தால் அவை அனைத்தையும் கபளீகரம் செய்திருப்பேன். இப்போது முடியவில்லை.

நான் அவரைத் தொடர்பு கொண்டபோதே எனக்கு அய்யர் விட்டு டிகிரி காப்பி வேண்டும் என்று சொல்லியிருந்தேன். திருமதி வைகோ நான் கேட்டுக்கொண்டபடி, கொஞ்ச நேரம் கழித்து கொண்டு வந்து கொடுத்தார்கள். பழைய கால முறைப்படி டவரா டம்ளரில் காப்பி வந்தது. டம்ளரைப் பார்த்து நான் பயந்தே போனேன். உண்மையிலேயே டம்ளர் ஆதி காலத்துதான். கால் லிட்டர் கொள்ளளவு கொண்டது. நான் திருமதி வைகோ அவர்களிடம் கெஞ்சி அதல் பாதியை எடுத்துக் கொள்ளச் செய்தேன். உண்மையிலேயே டிகிரி காப்பிதான்.


வைகோ வீட்டு ஜன்னலில் இருந்து தெரியும் மலைக்கோட்டை

வைகோ அவருடைய பதிவுகளில் குறிப்பிட்டபடி அவர் வீடு இருக்குமிடத்திலிருந்து பார்த்தால் மலைக்கோட்டை துல்லியமாகத் தெரிகிறது. ஸ்வாமி ஊர்வலங்கள் வந்தால் வீட்டை விட்டு நகராமலேயே ஸ்வாமியைத் தரிசித்துக் கொள்ளலாம். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவருடன் அளவளாவிக்கொண்டு  விடை பெற்றேன். அந்த ஒரு மணி நேரமும் அவர்கள் காட்டிய அன்பையும் விருந்தோம்பலையும் என்னால் என் வாழ்நாளில் மறக்க முடியாது.

நான் அவர்களிடமிருந்து பிரியா விடை பெற்றுக்கொண்டு நான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தேன். இந்த சந்திப்பு நான் மறக்க முடியாத சந்திப்பு. நாங்கள் பிரிந்து இரண்டு மணி நேரத்திலேயே இந்த சந்திப்பைப் பற்றி பதிவு போட்டு விட்டார். லிங்க் இதோ.

http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html

என்னால் அப்படிப்போட முடியவில்லை. அவருடைய சுறுசுறுப்பிற்கும் உழைப்பிற்கும் முன்னால் நான் ஒரு வாழைப்பழச்சோம்பேறி. அதனால்தான் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் இது ஒரு தாமதமான பதிவு என்று குறிப்பிட்டேன்.

வைகோ தம்பதியினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

ஒரு அவசர (அவசிய) பதிவு

                                             
என் பதிவைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

என்னுடைய கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் 500 GB  கொண்டது. இதில் C,D,E ஆகிய பிரிவுகள் இருக்கின்றன.

நான் பாட்டுகள், மகாபாரத விடியோக்கள், கதைகள், வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி போன்ற கட்டுரைகள், சமையல் குறிப்புகள், பிரயாணக் கட்டுரைகள் என்று பலவற்றை டவுன்லோடு செய்து வைத்துள்ளேன். இந்த வயதிற்குப் பின் (80) என்ன முன்னேற்றம் காணப் போகிறீர்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. இளம் வயதில் இந்தக் கட்டுரைகளைப் படித்திருந்தால் நாம் எவ்வளவு முன்னேறியிருப்போம் என்று ஒரு பகல் கனவு காண்பதற்காகத்தான் இவைகளை சேகரிக்கிறேன்.

சமையல் குறிப்புகள் எதற்காக சேமிக்கிறேன் என்றால் இவைகளை என் மனைவி பார்த்து ஒரு நாளாவது அது போல் செய்து கொடுக்க மாட்டார்களா என்ற நப்பாசைதான் காரணம். இரண்டாவது காரணம் இந்தக் குறிப்புகளை யூட்யூப்பில் சொல்லும் சமையல் நிபுணிகள் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.

ஹார்டு டிஸ்கின் கொள்ளளவு குறைந்து கொண்டே வருகிறது. என்ன செய்யலாம் என்று வயதானபின் மிகவும் செயல் குறைந்து போன என் மூளையை கசக்கி யோசித்ததில் ஒரு வெளியிலிருந்து செயல்படும் ஹார்டு டிஸ்க் வாங்கிக்கொண்டால் சௌகரியமாக இருக்கும் என்று தோன்றியது. இதற்குக் காரணம் இன்டர்நெட்டில் பல இடங்களில் வந்த கட்டுரைகளைப் படித்ததின் விளைவு..

என் ஆஸ்தான கம்ப்யூட்டர் டாக்டரும் அவ்வாறே அபிப்பிராயப்பட்டார். ஒரு வேகத்தில் நேற்று கம்ப்யூட்டர் கடைக்குப் போய் Seagate 1 TB அளவுள்ள ஒரு எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவ் வாங்கிக்கொண்டு வந்து விட்டேன். ஒரு அனாமத்து கணக்கில் வந்த ஐயாயிரம் ரூபாய் பாக்கெட்டில் துள்ளிக்கொண்டு இருந்ததும் மற்றொரு காரணம். இதன் விலை 5300 ரூபாய் ஆயிற்று.

ஆக மொத்தம் இன்னொரு வெள்ளை யானையை வாங்கியாயிற்று. இரவு முழுவதும் இந்த யானையை எப்படி பராமரிப்பு செய்வது என்ற கவலையில் தூக்கத்தைத் தொலைத்தேன். (முதலிலேயே தூக்கம் வருவதில்லை என்பது வேறு விஷயம்.)

இந்த விஷயத்தில் நம் பதிவுலக நண்பர்கள் உதவுவார்கள் என்கிற என் ஆழ்ந்த நம்பிக்கையின் பேரில் இந்த விஷயத்தை இங்கு பதிவிடுகிறேன். உங்களுக்குத் தெரிந்த யோசனைகளை பின்னூட்டத்தில் தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

திங்கள், 31 மார்ச், 2014

நாய் பெற்ற தங்கப் பழம்


தங்கப் பழம் ஒரு விலை மிகுந்த பொருள்தான். ஆனால் ஒரு நாய்க்கு அது கிடைப்பதால் அதற்கு என்ன பயன்? அதுபோல் நான் பலவற்றைச் சேமித்து வந்தேன். பைகளைச் சேர்த்த கதையை சென்ற பதிவுகளில் பார்த்தோம். இப்போது அது போக சேகரித்த மற்றவை என்னவென்று பார்ப்போம்.

சிறு வயதில் மகாத்மா காந்தியின் சுய சரிதையைப் படித்திருக்கிறேன். சத்திய சோதனை என்பது அதன் பெயர். அது போக அவரைப்பற்றிய பல துணுக்கு செய்திகளையும் படித்திருக்கிறேன். அதில் என் மனதில் தைத்த ஒரு செய்தி - அவர் எந்தப் பொருளையும் வீண் பண்ணமாட்டார் என்பதே.

உடுத்தும் வேஷ்டி கிழிந்து விட்டால் அதை கிழித்து துண்டாக உபயோகப்படுத்துவார். அதுவும் கிழிந்தால் அதை இன்னும் சிறிய துண்டுகளாக்கி கைக் குட்டையாகப் பயன்படுத்துவார்.

அதே மாதிரி, எழுதும் காகித விஷயத்திலும் அவர் எந்தவொரு துண்டுக் காகிதத்தையும் வீணாக்க மாட்டார். தபால்கள் வரும் உறைகளையும் கூட கிழித்து அதன் உள் பக்கத்தை எழுதுவதற்கு உபயோகப்படுத்துவார்.

நான் மகாத்மா காந்தியின் சீடன் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவருடைய கொள்கைகளை கடைப்பிடிப்பவன் அல்ல. இருந்தாலும் இந்த காகிதம், துணி விஷயங்கள் என்னை உடும்புப்பிடி போல் பிடித்துக்கொண்டன.

ஒரு பக்கம் காலியாக இருக்கும் காகிதங்கள், நன்றாக இருக்கும் கவர்கள், பழைய நோட்டுகளில் எழுதாமல் இருக்கும் காகிதங்கள், பழைய டைரியில் காலியாக இருக்கும் காகிதங்கள், ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட பிட் நோட்டீசுகள், சாமான் வாங்கிய பில்கள், இப்படி எந்தக் காகிதத்தைப் பார்த்தாலும் அவைகளை சேகரித்து, ஒரே அளவாக வெட்டி, அதை நூலால் தைத்து பின்னால் உபயோகப்படும் என்று வைத்துக் கொள்வேன்.

இப்படியே சில கம்பெனிகள் ரெடி மேடாக சிறிய, நடுத்தர சைசில் நோட்டுப் புத்தகங்கள் போட்டு தங்கள் கஸ்டமர்களுக்கு கொடுப்பார்கள். அத்தகைய நோட்டுகள் கிடைத்தால் விடுவதில்லை. முடிந்தால் இரண்டு அல்லது மூன்று வாங்கி விடுவது வழக்கம். இவைகளையும் சேமித்து வைத்துக் கொள்வேன்.

எங்காவது வெளியூர் போனால் அங்கு பிளாட்பாரக் கடைகளில் இந்த மாதிரி சிறிய பாக்கொட் நோட்டுகள், குறிப்பெடுக்கும் நோட்டுகள் விற்பதைப் பார்த்தால், அந்த இடத்தை விட்டு கால்கள் நகருவதில்லை. இரண்டு மூன்று ஐட்டங்கள் வாங்கினால்தான் மனம் அமைதிப்படும். இவ்வாறு சேமித்த நோட்டுகள் ஏராளம்.

ஆபீஸ் விஷயமாக பல மீட்டிங்குகள் நடக்கும். அந்த மீட்டிங்குகளில் எழுதுவதற்காக நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பார்கள். இவைகளை விடுவதில்லை.(கூடவே ஒரு பால் பாய்ன்ட் பேனாவும் கொடுப்பார்கள் - பேனாக்கள் கதை தனிக்கதை, அடுத்த பதிவில் கூறுகிறேன்)

வெளி நாடுகள் போகும்போது அங்கு ஆபீசில் கிடைக்கும் நோட்டுகளை ஒன்றுக்கு நான்காக லவட்டிக் கொண்டு வருவேன்.

புது வருட ஆரம்பத்தில் கம்பெனிகள் டைரி கொடுப்பது உங்களுக்குத் தெரியும். இப்படி நமக்கு யாராவது டைரி கொடுக்க மாட்டார்களா என்று ஏங்கியிருந்த காலம் போய், வருடத்திற்கு குறைந்தது அரை டஜன் டைரிகள் வரும் பொற்காலம் துவங்கியது. டைரிகள் எல்லாம் கோல்டு கில்ட் போட்டவைகள். பொதுவாக டைரிகளை பத்து நாளைக்கு மேல் எழுதுபவர்கள் மனித இனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.

நான் சாதாரண மனிதன். வந்த டைரிகளில் சாதாரணமாக இருக்கும் ஒன்றில் வெகு வேகமாக டைரிக் குறிப்புகள் எழுதுவேன். பத்து நாள் இது நடக்கும். அத்தோடு நின்று விடும். மற்ற டைரிகளை பத்திரமாக அலமாரியில் வைத்துக்கொள்வேன். ஏன் அப்படி டைரிகளை சேகரித்தேன் என்று இன்று யோசித்தால் ஒரு விடையும் கிடைக்க மாட்டேன் என்கிறது. எது கிடைத்தாலும் சேகரித்து வைத்துக் கொள்ளும் பைத்தியக்காரன் போல்தான் நடந்து கொண்டிருக்கிறேன்.

இப்படி சேர்த்த டைரிகள், நோட்டுப் புத்தகங்களை நான் ஒழுங்காக எந்த வேலைக்கும் பயன்படுத்திய ஞாபகமே இல்லை. பின்னால் உபயோகப்படும், அதனால் இப்போது வேண்டும். அவ்வளவுதான்.

இப்படிச்சேர்த்த நோட்டுப் புத்தகங்கள் இரண்டு மூன்று பெட்டிகள் ஆகி விட்டன. இப்போது அலமாரி, மற்றும் அட்டாலிகளை (Loft) சுத்தம் செய்யும்போது திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது. இவைகளை இனிமேல் என்ன செய்யப்போகிறோம்? என் சிற்றறிவிற்கு எட்டியவரையில் எந்த உபயோகமும் தெரியவில்லை. அப்புறம் எதற்கு இந்தக் கண்றாவிகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று பட்டது.

இதில் என்ன கஷ்டம் வந்தது என்றால் இவைகளை என்ன செய்வது என்பதுதான். சிலவற்றை எதிரில் உள்ள மளிகைக் கடையில் கொண்டு போய் அவர்கள் பில் போட உதவுமென்று கொடுத்தேன். கொஞ்சம் நன்றாக இருப்பவைகளை அக்கம் பக்கம் இருக்கும் பள்ளிக்குழந்தைகளுக்குக் கொடுத்தேன். இப்படியாக எப்படியோ கஷ்டப்பட்டு எல்லா நோட்டுப் புத்தகங்களையும் தானம் கொடுத்து முடித்தேன்.

டைரிகள் மட்டும் இன்னும் என் புத்தக அலமாரியில் இருக்கின்றன. அவைகளை கொடுத்துவிட்டால் அப்புறம் அலமாரி காலியாக இருக்கும். ஒரு முனைவர் பட்டம் வாங்கின ஆராய்ச்சியாளரின் அலமாரி காலியாக இருந்தால் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்? இவருடைய மேல் மாடியும் காலிதான் போலிருக்கிறது என்று நினைக்க மாட்டார்களா? வக்கீல் வீட்டு அலமாரியில் சட்டப் புத்தகங்கள் இல்லாவிட்டால் அந்த வக்கீலுக்கு கேஸ்கள் வருமா? ஆகவே டைரிகள் இன்னும் இருக்கின்றன.

நோட்டுப் புத்தகங்களை தானம் கொடுத்து முடித்தவுடன் ஏதோ தலைமேல் இருந்த பெரிய சுமை இறங்கினது போல் உணர்ந்தேன். அடுத்த பதிவில் நான் துணிகள் வாங்கி சேகரித்த கதை (உண்மைக் கதைதான்) சொல்கிறேன்.

திங்கள், 24 மார்ச், 2014

என் பள்ளி அனுபவம்


என் பதிவைப் படித்து வரும் நண்பர்களுக்கு என் நினைவில் நீங்காமல் நிற்கும் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த சம்பவம்தான் நான் போன பதிவில் கூறிய பைகள் சேமிப்புக்கான ஆரம்பம்.

எங்கள் குடும்பம் ஒரு கீழ் நடுத்தர வகை. அதாவது மூன்று வேளையும் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும். அதற்கு மேல் எந்த ஆடம்பரமும் கிடைக்காது. அந்த உணவும் எனக்குப் பிடித்ததாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. "என்ன தினமும் இதேதானா" என்று கேட்டால் வரும் ஸ்டேண்டர்ட் பதில் - "பிடித்தால் சாப்பிடு, பிடிக்கவில்லையானால் எழுந்து போ".

அப்போது நான் செகண்ட் பாரம் அதாவது ஏழாவது கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பள்ளிக்கு ஒரு கித்தான் பையில்தான் புஸ்தகம், நோட்டுகள் ஆகியவற்றைப் போட்டுக்கொண்டு போகவேண்டும். எங்கள் வீட்டில் அந்த ஒரு பைதான் இருந்தது. நான் மாலை பள்ளியிலிருந்து திரும்பியதும் அதை பையைத்தான் காய்கறி வாங்க என் அம்மா எடுத்துக் கொண்டு போவார்கள்.

மறுநாள் நான் பள்ளிக்கு எடுத்துப் பொக அந்தப் பையை எடுத்தால் அதற்குள் வெங்காயச் சருகு, கருவேப்பிலை இலைகள், சில சமயம் சிறு கத்தரிக்காய் இப்படி பலது இருக்கும். பொதுவாக நான் அவைகளை அப்புறப்படுத்தி விட்டு பள்ளிக்கு கொண்டு போவேன். சில சமயம் அவசரத்தில் மறந்து போய் அந்தப் பையை அப்படியே கொண்டு போய் விட்டால் சக மாணவர்கள் இந்த காய்கறி மிச்சங்களைப் பார்த்து என்னைக் கலாட்டா செய்வார்கள்.

இதனால் மனம் வெறுத்து விட்டது. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் அப்பாவிடம் போய் முறையிட்டேன். அந்தக் காலத்தில் பையன்கள் அப்பாக்களிடம் நேருக்கு நேர் நின்று பேசும் வழக்கம் இல்லை.

நான் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையை அம்மா காய்கறி வாங்க எடுத்துக்கொண்டு போய் அழுக்காக்கி விடுகிறார்கள். அதனால் அந்தப் பையை பள்ளிக்கு எடுத்துக்கொண்டு போக வெட்கமாய் இருக்கிறது. அதனால் எனக்கென்று தனியாக ஒரு பை வாங்கித்தரவேண்டும் என்று சொன்னேன்.

என் அப்பா என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு சொன்ன பதில்தான் என் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை.

அவர் சொன்ன பதில்;

"இப்படி ஆள்ஆள் விதமாக பை வாங்கித்தர என்னால் முடியாது. உனக்கு சௌகரியப்பட்டால் பள்ளிக்கூடம் போ, இல்லாவிட்டால் நின்றுகொள்".

அவ்வளவுதான், மேட்டர் முடிந்தது. இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. மரியாதையாக அந்தப் பையையே வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போனேன். பெயிலாகாமல் படித்தேன். வேலைக்குப் போனேன். சம்பாதித்தேன். பைகளை எங்கு பார்த்தாலும் வாங்கி சேமித்தேன். இன்று அவைகள் சுமையாகி விட்டபடியால் வேண்டியவர்களுக்கெல்லாம் தானமளிக்கிறேன்.

வியாழன், 20 மார்ச், 2014

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


ஆரம்பப் பள்ளிப் பாடத்தில் படித்த இந்த வாசகம் "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்ற வாசகம் என்னுடைய உள் மனதில் ஆழமாகத் தைத்திருந்தது. இதன் கூடவே இன்னொரு வாசகமும் தைத்திருந்தது. அது "எந்தப் பொருளையும் வீணாக்காதே" என்பதாகும்.

இந்த இரண்டு வாசகங்களும் உண்மையில் பொன்மொழிகளாகக் கருதப்பட வேண்டிய தகுதி உடையவை. ஆனால் பொன்மொழிகள் ஏட்டில் பொன்னெழுத்துகளால் பொறித்து சட்டம் போட்டு வைக்கத்தான் லாயக்கே தவிர வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்காக அல்ல என்ற உண்மையை நீங்கள் கற்றிருப்பீர்கள்.

என் வாழ்வில் இந்த பொன்கொழிகளைக் கடைப்பிடித்ததின் விளைவுகளை சொல்கிறேன். வருடத்தில் இரண்டு முறை எங்கள் வீட்டைத் திருப்பிப் போட்டு சுத்தம் செய்வதை என் சகதர்மிணி வழக்கமாகக் கொண்டுள்ளாள். தமிழ் வருடப் பிறப்பிற்கும் ஆயுத பூஜைக்கும் இரண்டு தடவை. பொதுவாக இந்த நாட்களில் நான் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஒரு வாரம் வெளியூர் போய்விடுவது வழக்கம்.

இந்த முறை அப்படி செய்ய உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. பொறியில் சிக்கிய எலி போல் மாட்டிக்கொண்டேன். இங்க பாருங்க, உங்க கப் போர்டை எல்லாம் சுத்தம் செய்வது உங்கள் பொறுப்பு, கொஞ்சம் கொஞ்சமாகச் செய்தால் போதும் என்று உத்திரவு போட்டு விட்டாள். சுப்ரீம் கோர்ட்டு உத்திரவை அலட்சியம் செய்ய நானென்ன மத்திய அரசு மந்திரியா என்ன, ஆகவே ஒழுங்காக சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.

முதல் நாள் ஒரு கப்போர்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அதில் பல காலமாக வாங்கின சாமான்கள் பேக் செய்து கொடுத்த பிளாஸ்டிக் பைகள் கட்டு கட்டாக இருந்தன. பின்னால் எதற்காகவாவது வேண்டியிருக்கும் என்று சேமிக்கப்பட்டவை அவை. கல்யாண வீட்டில் கொடுக்கப்படும் தாம்பூலப் பைகளும் இதில் அடக்கம். கரப்பான் பூச்சிகள் அங்கு பல தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கும் போலத் தோன்றியது.

இது எல்லாம் வேண்டுமா என்று பார்யாளைக் கேட்டேன். எனக்கு வேண்டாம் உங்களுக்கு வேண்டுமா என்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்று முடிவை என்னிடம் விட்டு விட்டாள்.

நான் எப்போதோ படித்த இன்னொரு பொன்மொழி ஞாபகத்திற்கு வந்தது. "எந்த ஒரு பொருளையும் 6 மாதம் நீங்கள் உபயோகப்படுத்த வில்லையானால் அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையில்லை என்று அர்த்தம்." இதுவும் மனதில் தைத்த ஒரு வாசகம்.

இந்த அளவுகோலில் பார்த்தால் இந்தப் பைகளை பல வருடங்களாக உபயோகப் படுத்தவில்லை. ஆகவே இவை நம் வாழ்விற்குத் தேவையில்லை என்று முடிவு செய்தேன். அவைகளை எல்லாம் தூக்கி வெளியே போட்டேன். கரப்பான் பூச்சிகள் மிகவும் ஆட்சேபணை தெரிவித்தன. எல்லாவற்றிற்கும் "ஹிட்" ஸ்ப்ரே கொடுத்தேன். எல்லாம் தங்கள் ஆட்சேபணையை வாபஸ் வாங்கிக்கொண்டன.

தொடரும்...

செவ்வாய், 11 மார்ச், 2014

என் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு வந்த சோதனை


போன வாரத்திலிருந்தே என் கம்ப்யூட்டருடைய மானிட்டர் உயிரை விடுவதற்கான அறிகுறிகளைக் காண்பிக்க ஆரம்பித்தது. மானிட்டர் லைட் விட்டு விட்டு எரிந்தது. பிறகு ஒரேயடியாக அணைந்து விட்டது.

எனக்குத் தெரிந்த கை வைத்தியம் ஒன்றே ஒன்றுதான். அது கேபிள்களை கழட்டி மாட்டுவதுதான். அதை செய்தேன். மானிட்டரும் சாதுவாக வேலை செய்தது. இப்படி இரண்டு நாள் செய்தது. மூன்றாம் நாள் திரும்பவும் மக்கர் செய்தது.

கூகுளில் தேடினேன். சிபியுவில் குப்பைகள் இருந்தாலும் இப்படி செய்யும் என்று போட்டிருந்தது. சிபியூ புதிதாக வாங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆயிற்று. சரி, அதையும் செய்து பார்த்து விடலாமென்று ஒரு மாலைப்பொழுதில் சிபியுவை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.

சிபியுவை சுத்தம் செய்வது ஒரு பெரிய இந்திர ஜால வேலை என்பது உங்களுக்குத் தெரியும். முதலில் அதில் செருகியிருக்கும் ஒரு டஜன் கேபிள்களை பிடுங்க வேண்டும். பிடுங்குவது சுலபம். மாட்டும்போதுதான் அதில் உள்ள வம்பு புரியும். எந்த கேபிளை எங்கு மாட்டுவது என்பதில் குழப்பம் ஏற்படும்.

முன் அனுபவம் காரணமாக கேபிள்களை கழட்டும்போதே அவற்றிற்கு ஒவ்வொன்றிற்கும்  லேபிள் எழுதி அது அதில் சொருகி வைத்து விட்டேன்.
பிறகு வேகுவம் கிளீனரை எடுத்து வைத்துக் கொண்டேன். சிபியுவில் உள்ள சைடு கதவைத் திறந்தேன். அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. இரண்டே ஸ்க்ரூதான். திறந்தால் உள்ளே ஏகப்பட்ட தூசு, குப்பைகள் மண்டிக்கிடந்தன.

நல்ல காலம் இந்த வேலையை வீட்டு வாசலில் வைத்து செய்தேன். வீட்டிற்குள் இந்த வேலையைச் செய்திருந்தால் வீட்டு அம்மாள் சிபியுவை அப்படியே தூக்கி எறிந்திருப்பார்கள். முதலில் ஒரு பழைய துணியைக் கொண்டு முடிந்த வரை துடைத்தேன். பிறகு வேகுவம் கிளீனரில் புளோயரை ஆன் செய்து புளோயர் நாசிலை சிபியுவின் உள்ளே எல்லா இடங்களிலும் காண்பித்தேன்.

உள்ளேயிருந்து அவ்வளவு தூசிகள் வெளியேறின. வீட்டுக்குள் வைத்திருக்கும் கம்ப்யூட்டருக்குள் இவ்வளவு தூசிகள் எப்படி புகுந்தன என்பது ஒரு ஆச்சரியமான விஷயமே. அவைகளை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு மறுபடியும் புளோயரால் கிளீன் செய்தேன். இப்படி நாலைந்து முறை செய்த பின் உள்ளேயிருந்து தூசிகள் வருவது நின்று விட்டது.

பிறகு உள்ளேயிருக்கும் விசிறிகளைக் கவனித்தேன். அதில் இறக்கைகளுக்குப் பின்னால் தூசிகள் அடை அடையாய் ஒட்டிக்கொண்டு இருந்தன. அவைகளை எல்லாம் நைசாக ஒரு குச்சியின் மூலம் அகற்றி வெளியே எடுத்தேன். பிறகு அந்த விசிறிகளுக்கு புளோயர் மூலம் காற்று அடித்தேன். மேலும் தூசிகள் வெளியே வந்தன.

இந்த விசிறிகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அப்போதுதான் சிபியுவில் காற்றோட்டம் சரியாக ஏற்பட்டு டெம்பரேச்சர் கன்ட்ரோலில் இருக்கும். இல்லையென்றால் டெம்பரேச்சர் அதிகமானால் சிபியு ஸ்ட்ரைக் செய்து விடும். இப்படி சிபியுவை வருடம் ஒரு முறையாவது சுத்தம் செய்வது அவசியம்.

இப்படி சிபியூவை சுத்தம் செய்த பிறகு எல்லா கேபிள்களையும் சிபியுவில் மாட்டினேன். ஒரு கேபிளும் அநாமத்தாக கிடக்கவில்லை என்று சுற்றுமுற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டேன். பிறகு சிபியுவிற்கு கரண்ட் கனெக்ஷன் கொடுத்தேன். பழைய குருடி கதவைத்திறடி என்ற கதையாக மறுபடியும் மானிடர் வம்பு செய்தது.

ஓஹோ, இது கொஞ்சம் சீரியசான விவகாரம் போல இருக்கிறது என்று அப்போதுதான் ஞானோதயம் ஏற்பட்டது. இனி ஸ்பெஷலிஸ்ட்டைக் கூப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்தேன்.

எனக்கு என்று ஒரு ஆஸ்தான வித்வான் இருக்கிறார். அவரைக் கூப்பிட்டு விவரம் சொன்னேன். நான் வந்து பார்க்கிறேன் என்று சொன்னார். இரண்டு மணி நேரத்தில் வந்து பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். வந்தது வம்பென்று நினைத்துக் கொண்டு என்னவென்று கேட்டேன். அவர் ஒன்றுமில்லை, இதை இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் (வொர்க் ஷாப்பில்) சேர்த்து ஒரு ஆபரேஷன் செய்தால் சரியாய்ப்போகும் என்றார்.

சரி, அப்படியே செய்யுங்கள் என்றேன். அவர் மானிட்டரை எடுத்துச்சென்று விட்டார். எனக்கு ஒரு கை ஒடிந்தது போல் ஆயிற்று. விடிந்ததும் கம்ப்யூட்டர் முகத்தில் விழித்தே பழக்கமாகிப் போனதால் இப்போது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஏறக்குறைய பைத்தியம் பிடிக்காத குறைதான்.

எப்படியோ மூன்று நாட்களுக்குப் பிறகு மானிட்டர் நேற்று மாலை வந்து சேர்ந்தது. கம்ப்யூட்டர் மெக்கானிக் எல்லாவற்றையும் இணைத்து பவர் ஆன் செய்தார். கம்ப்யூட்டர் பழையபடி வேலை செய்ய ஆரம்பித்தது. போயிருந்த என் உயிர் திரும்ப வந்தது.

திங்கள், 10 மார்ச், 2014

An accident

I am sorry to report that my monitor developed a serious ailment and had to be hospitalised. Hence I could not write my post today. This post is written from my mobile and hence in English.



 

ஞாயிறு, 2 மார்ச், 2014

பேங்க் விவகாரங்கள் - கடைசி பகுதி


ஏன் தலைப்பில் விவகாரங்கள் என்று போட்டேன் என்றால், பேங்க் கணக்குகளில் ஏதாவது குளறுபடி வந்து விட்டது என்றால் அதைத் தீர்ப்பதற்குள் உங்கள் தாவு தீர்ந்து விடும். எப்போது குளறுபடி வரும்? அது உங்கள் தலையெழுத்தைப் பொருத்தது.  ஆகவே இறைவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு கணக்கைத் தொடருங்கள்.

எனக்கு ஒரு முறை என்னுடைய பிபிஎப் கணக்கில் வட்டியைத் தவறுதலாக கணக்கிட்டு விட்டார்கள். சில ஆயிரங்கள் விட்டுப்போயின. சும்மா இருக்க முடியுமா? போய்க்கேட்டேன். எழுதிக்கொடுங்கள் என்றார்கள். எழுதிக்கொடுத்தேன். பாஸ் புக் நகல் எடுத்துக் கொடுங்கள் என்றார்கள். எடுத்துக் கொடுத்தேன். சில நாட்கள் ஆகும், பொறுத்திருங்கள் என்றார்கள்.

ஒரு மாதம் கழித்துப் போய் கேட்டேன். அப்படியா, எழுதிக்கொடுங்கள் என்றார்கள். முன்பே எழுதிக்கொடுத்தேனே என்றேன். அது அந்த மேனேஜர் மாற்றலாகிப் போய்விட்டார், அதனால் பழைய விண்ணப்பங்களும் அவருடன் போய் விட்டன. நீங்கள் ஒன்று செய்யுங்கள். இப்போது புதிதாக ஒரு விண்ணப்பம் கொடுத்து விடுங்களேன் என்றார்கள். புதிதாக ஒரு விண்ணப்பம் எழுதி பாஸ் புக் காப்பியுடன் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றார்கள்.

இரண்டு வாரம் கழித்து போனேன். திரும்பவும் விண்ணப்பம் கொடுத்தீர்களா என்றார்கள். என்னடா இது, திரும்பவும் முதலிலிருந்தா என்று யோசித்தேன். விண்ணப்பம் எழுதி பத்து காப்பி சீராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டேன். கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு காப்பியாக கொடுத்து வந்தேன். ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி விட்டது. மூன்று மேனேஜர்கள் மாறி விட்டார்கள்.

புதிதாக வந்த மேனேஜருக்கு என்ன தோன்றியதோ, ஒரு நாள் இன்று மாலை 4 மணிக்கு வாருங்கள் சார் என்றார். மாலை 4 மணிக்குப் போனேன். கம்ப்யூட்டரில் என்னமோ பண்ணி பத்து நிமிடத்தில் கணக்கை நேர் செய்து விட்டார். மிகவும் நன்றி என்று சொல்லி விட்டு என் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

இதிலிருந்து தெரிந்து கொள்ளும் நீதி என்னவென்றால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பொறுமை, விடாமுயற்சி, சாதுர்யம் என்பவை எல்லாம் தேவை என்பதே. இரண்டு பேங்கில் கணக்கு வைத்திருந்தீர்களானால் இவையெல்லாம் உங்களுக்கு கை வந்து விடும். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.