புதன், 28 நவம்பர், 2012

சட்டமும் மனிதாபிமானமும்

சட்டம் பெரிதா? மனிதாபிமானம் பெரிதா?

நீதி அறிந்தவர்கள் எப்பொழுதும் மனிதாபிமானத்திற்கே முதலிடம் கொடுத்துள்ளார்கள். இந்திய நீதித்துறையின் கோட்பாடுகளின்படி, சட்டத்திலுள்ள ஓட்டைகளினால் 99 சதம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பித்தாலும் சரி, ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான். அதனால்தான் பெரிய குற்றங்களில் கூட குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெறுவதில்லை.

மாவட்ட ஆட்சியர்களுக்குள்ள வரம்பற்ற அதிகாரங்களைப் பற்றி சாதாரண குடிமகன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த அதிகாரங்களை அவர் சாதாரண நேரங்களில் பயன் படுத்துவதில்லை. பேரிடர் காலங்களில் மட்டுமே பயன்படுத்துவார். இது முற்றிலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் செயல்பட அவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள்.

ஒவ்வொரு உயர் அதிகாரிக்கும் இப்படிப்பட்ட அதிகாரங்கள் உண்டு. ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் பயம். நாளைக்கு யாராவது கேள்வு கேட்டால் என்ன சொல்வது என்ற பயம். இன்ன காரணத்திற்காக பொது நன்மைக்காக அல்லது ஒரு தன் மனிதனின் உரிமையைக் காக்க, இந்த முடிவை நான் எடுத்தேன் என்று சொல்லக்கூடிய தார்மீக பலம் அவர்களுக்கு இல்லை.

சமீப காலத்தில் பல கொலைகளில், அவை தற்காப்பிற்காக செய்யப்பட்டவை என்று பட்டவர்த்தனமாகத் தெரிந்தபோது உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை அரெஸ்ட் கூட செய்யாமல் விட்டிருக்கிறார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் சட்டத்தை விட மனிதாபிமானம்தான் உயர்ந்தது என்று அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் சரித்திரம் நினைவு கொள்கிறது.

என் சர்வீசில் நடந்த ஒரு சம்பவம். நான் தஞ்சாவூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் இரவு 8 மணிக்கு ஆபீஸ் ஜீப்பில் என் இருப்பிடத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தேன். நான் அப்போது தஞ்சாவூர் அவுட்டரில் ஒரு வீட்டில் குடியிருந்தேன். அப்பாது லேசாக மழை தூறிக்கொண்டு இருந்தது. மின்சாரமும் இல்லை. ரோடு முழுவதும் இருட்டு.

என் வீட்டிற்கு சமீபத்தில் வந்து கொண்டிருக்கும்போது ஒரு வயதான அம்மா கையைக் காட்டி என் வண்டியை நிறுத்தினார். நான்தான் ஜீப்பை ஓட்டிக்கொண்டு வந்தேன். நான் வண்டியை நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்கு அந்த அம்மா, "என் மகளுக்கு பிரசவ வலி வந்திருக்கிறது. உடனே ஆஸ்பத்திருக்குப் போகவேண்டும். இந்த இருட்டிலும் மழையிலும் ஒரு ஆட்டோ கூட இந்தப் பக்கம் வரவில்லை. நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்" என்றார்கள்.

அரசு வண்டியை சொந்தக் காரியங்களுக்கு பயன் படுத்தக்கூடாது என்பது சட்டம்.  ஆனால் அங்கு நான் எதிர்கொள்வது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. நான் அதிகம் யோசிக்கவில்லை. சரி, வாருங்கள் என்று அந்த அம்மாவின் வீட்டிற்குச் சென்று அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு, நான்கு கி.மீ. தூரத்திலுள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தேன். அந்த அம்மா பலமுறை நன்றி சொல்லிவிட்டு ஐந்து ரூபாய் கொடுத்தார்கள். நான் அந்தப் பணத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

நான் செய்தது சட்டத்திற்குப் புறம்பாயிருக்கலாம். ஆனால் என் மனச்சாட்சியின்படி அது ஒரு மனிதாபிமானச் செயல். அதை நான் செய்திருக்காவிடில் என் ஆயுள் முழுவதும் என் மனச்சாட்சி என்னைக் குத்திக்கொண்டு இருந்திருக்கும். இந்த காரியத்திற்காக எனக்கு ஏதும் தண்டனை வந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன். என்னுடைய பெரிய அதிகாரியை அடுத்த முறை சந்தித்தபோது இதைச் சொன்னேன். அவர் நீ செய்தது சரிதான், ஆனால் வண்டியின் லாக்புக்கில் எழுதாதே, பின்னால் ஆடிட்டர்கள் வீணாக தொந்திரவு செய்வார்கள் என்று சொல்லிவிட்டார்.

ஒவ்வொரு உயர் அதிகாரியும் இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக, மனிதாபிமான அடிப்படையில், முடிவுகள் எடுக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதே நிதரிசனம்.

16 கருத்துகள்:

  1. பட்டவர்த்தனமாய் இது அனுதாபம் காட்ட வேண்டிய விஷயம் என்று தெரிந்தால் மட்டுமே அதிகாரிகள் மனிதாபிமானப் பக்கத்தைக் காட்ட நேருவதற்கு, ஆடிட்டுகளும் எப்படி இருந்தாலும் கேள்வி கேட்போரும்தான் காரணம். சமீபத்தில் மதுரையில் ஒரு மனைவி கணவனைக் கொன்ற வழக்கில் அவர் காவல்துறை அதிகாரியால் விடுவிக்கப் பட்டது ஆட்சியாளராலேயே கேள்விக்குள்ளாகியிருக்கிறதே....

    அடேடே... தஞ்சையிலும் இருந்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  2. மிகச் சரி
    சட்டத்தை உயர்வாக நினைப்பவர்களுக்கும்
    நீதியே உயர்வானது என நினைப்பவர்களுக்குமுள்ள
    வித்தியாசத்தை அருமையாக விளக்கியுளீர்கள்
    தெளிவூட்டும் பதிவு

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வாழ்வியல் சிந்தனைகளோடு , உங்கள் வாழ்க்கை அனுபவங்களும் பிறருக்கு எடுத்துக்காட்டாக உதவட்டும். தொடர்ந்து எழுதுங்கள்!

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொருவரும் மனிதாபிமான அடிப்படையில் உதவலாம். ஆனால் நாம் நாட்டில் சட்டதைக் காட்டி பயமுறுத்தும்போது மனிதாபிமானம் மறைந்துவிடுகிறது என்பதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு படிப்பினை !

    இவற்றை ஒவ்வொருவரும் மனதில் இருத்திக்கொண்டால் 'மனித நேயம்' வளரும்...

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. மனிதாபிமானம் நிச்சயம் சட்டத்தை விட உயர்ந்தது.
    நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  7. அந்த வயதான அம்மா உதவியை கேட்கும் போது, கண்டிப்பாக இந்த சட்டம், அது, இது என்று எதுவுமே உங்கள் மனதில் வந்திருக்காது... இப்போது உங்களைப் போல் யாரும் செயல்படுவார்களா...? என்று நினைக்கத் தோன்றுகிறது... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் சொல்வது உண்மைதான். நான் கூட ஒரு கலவரத்தில் மாட்டிக்கொண்டபோது, ஒரு அரசு அதிகாரி என்னை அவரது வாகனத்தில் ஏற்றி ஊர் கொண்டுபோயி சேர்த்தார். இது சட்டப்படி தவறேன்றாலும் மனிதாபிமானப்படி சரியே..... நல்ல பகிர்வு சார்.

    பதிலளிநீக்கு
  9. மனிதாபிமானம்தான் உயர்ந்தது ஐயா அதனால்தான் அன்றைய பஞ்சாயத்து முறைக்கு மக்கள் ஆதரவு அதிகமான இருந்தது...
    கொலைக்குக் கொலைதான் சட்டம் ஆனால் பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் அங்கு சட்டம் தோற்றுத்தானே போகிறது

    பதிலளிநீக்கு
  10. மனதில் ஈரம் இருந்தாலும் கூட செயல்படுத்துவதில் தைரியம் வேண்டும்.இங்கு தான் பலர் தயங்குகிறார்கள் .பாராட்டுகள் !

    பதிலளிநீக்கு
  11. \\சரி, வாருங்கள் என்று அந்த அம்மாவின் வீட்டிற்குச் சென்று அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு, நான்கு கி.மீ. தூரத்திலுள்ள ஆஸ்பத்திருயில் கொண்டு சேர்த்தேன்.\\ மிகச் சரியான முடிவு!!

    \\இந்த காரியத்திற்காக எனக்கு ஏதும் தண்டனை வந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன். என்னுடைய பெரிய அதிகாரியை அடுத்த முறை சந்தித்தபோது இதைச் சொன்னேன். \\ அநியாயத்துக்கு நியாயமா நடந்திருக்கீங்களே சார்!! இந்த உறுத்தல் நம்மை ஆள்பவர்கள் பெரும்பாலவர்கள் இடத்தில் துளி கூட இல்லை. இருந்திருந்தால் உலகில் அதிக கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் இந்த நாடு முன்னணியில் இருந்திருக்காது. அவங்க அப்படி இருக்கும்போது, கஷ்டப் படும் ஒருத்தருக்கு உதவிய நீங்க ஏன் சார் இப்படியெல்லாம் நினைக்கணும்?

    பதிலளிநீக்கு
  12. ஐயா,
    நல்ல அனுபவ பகிர்வு.
    உண்மை நேர்மைக்கும் கயமை பொய்மைக்கும் இடையிலான மனப்போராட்டங்களில், நல்லவை வெல்தலரிது. அவ்வாறு நடந்த மிகச்சில நிகழ்வுகளில் ஒன்றாக இதுவும் உள்ளது கண்டு மகிழ்ச்சி.

    சரி, இதில் ஏதும் உள் குத்து இல்லைதானே. ஏன் கேக்கறேன்னா, நீங்க கருப்பா இல்ல சிகப்பா னு இன்னும் define செய்யவில்லை , அப்புறம் அந்த உதவி தேவைப்பட்ட பெண்மணி கருப்பா இல்ல சிகப்பா னும் தெரியல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவு 8 மணியானதால் கருப்பு சிவப்பு தெரியவில்லை, நண்பரே. நான் கருப்பா சிவப்பா என்பது இந்தப் பதிவுக்கு அவசியமில்லை என்று கருதுகிறேன்.

      நீக்கு
  13. விதிகள் ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டுமே ஒழிய மனிதாபிமானத்தை உடைக்கும் படி இருக்கக்கூடாது. நான் பொது துறையில் இருந்தபோது என் அலுவலக உபயோகத்திற்கு எஸ் டி டி வசதியுள்ள தொலைபேசி கொடுத்திருந்தார்கள், என் பதவிக்கு அதற்க்கு எலிஜிபிலிட்டி இல்லை என்றபோதும் செய்த வேலை காரணமாக. ஒருமுறை ஒரு சக ஊழியர் உண்மையான எமெர்ஜென்சி காரணமாக எஸ் டி டி உபயோகிக்க அனுமதி கேட்டபோது ரொம்பவே தயங்கி கொடுத்தேன்! கொடுத்திருக்கா விட்டால் இன்னும் வருத்தப்பட்டிருப்பேன்!

    பதிலளிநீக்கு
  14. சட்டம் ஒரு கழுதை -

    சரியான வார்த்தை !!

    பின்னால் சென்றால் உதைப்பதும்
    முன்னால் வந்தால் உதைப்பதுமாக செயல்படுவது வேதனைக்குர்யது !

    பதிலளிநீக்கு