திங்கள், 25 மார்ச், 2013

10. மறுமலர்ச்சிகள் - விவசாயம்

அடுத்த வாரம் மீட்டிங் கூட்டினபோது பிரதம மந்திரியின் முகம் வாட்டமடைந்திருந்தது. ஏன் இப்படி டல்லாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். மக்கள் எல்லோரும் என்னைக் குறை கூறுகிறார்கள் என்றார். பெரும்பான்மை மக்களுக்கு நன்மை செய்யும்போது சிறுபான்மையினர் வருத்தப்படுவது இயற்கைதானே, நீங்கள் இதற்கெல்லாம் வருந்தலாமா, எது வந்தாலும் நான் இருக்கிறேன், உங்களை ஒரு பயலும் ஒன்றும் செய்ய முடியாது, சிறிது நாட்கள் கழித்து எல்லாம் சரியாகிவிடும் என்று அவருக்கு ஆறுதல் சொன்னேன்.

நிதி மந்திரியிடம் நாம் இப்போது மூன்று விஷயங்களை ஆலோசித்து தீர்மானங்கள் எடுக்கவேண்டும். அவை விவசாயம், கல்வி, தொழில் ஆகியவை. இந்த மூன்றிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும். அப்போதுதான் இந்தியா வல்லரசாக முடியும் என்றேன். அவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.


முதலில் விவசாயத்தைப் பார்ப்போம். இதில் முக்கியமான சங்கடம் என்னவென்றால், விவசாயத்திற்கு வேண்டிய நீர்வளம் இல்லை. இரண்டாவது விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. மூன்றாவது விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. இது தவிர வேறு பிரச்சினைகள் உண்டா என்றேன். நிதி மந்திரி, சில சமயங்களில் அதிகமாக விளையும் பொருட்களுக்கு மார்க்கெட் இல்லாமல் போகிறது என்றார்.

இவை எல்லாவற்றிற்கும் நாமே தீர்வு கண்டுபிடிப்பதை விட விவசாய நிபுணர்கள், விவசாயிகள், அந்தந்த மாநில விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாய மந்திரி ஆகியவர்கள் இருந்தால் நலமாக இருக்குமே என்றேன். பிரதம மந்திரி அதுதான் சரியாக இருக்கும் என்றார். அப்டியானால் டில்லி போனதும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்புங்கள். அந்தந்த மாநிலங்களில் இருக்கும் பிரச்சினைகளையும் அவற்றிற்கு என்ன தீர்வு இருக்கிறது என்றும் அவர்கள் மீட்டிங் போட்டு தீர்மானிக்கட்டும். அடுத்த வாரம் இங்கு நமது தூதரகத்தில் அதில் முக்கியமானவர்களை எல்லாம் வரச்சொல்லி முடிவு எடுப்போம் என்றேன்.

அவர்கள் அதற்கு சரி, இது நல்ல யோசனை என்றார்கள். நான் அப்படியே கல்வி, தொழில் இது சம்பந்தமாகவும் மீட்டிங்குகள் போட்டு அதைப்பற்றி கான்பரன்ஸ் போடவும் ரெடியக இருக்கச்சொல்லுங்கள். விவசாய கான்பெரன்ஸ் முடிந்ததும், அடுத்தடுத்து இந்த இரண்டு கான்பெரன்ஸ்சுகளையும் வைத்துக்கொள்ளலாம் என்றேன்.

அவர்கள் சரி என்றார்கள். அவர்களைப் போகச் சொல்லிவிட்டு, நான் ஓய்வு எடுக்கப்போனேன்.

மறுவாரம் விவசாய மகாநாடு தேவலோக தூதரகத்தில் தொடங்கியது. அனைத்து மத்திய மந்திரிகள், மாநில முதலமைச்சர்கள், விவசாய மந்திரிகள், விவசாயத்துறை முக்கிய அதிகாரிகள், விவசாயிகள்,  விவசாயப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள், விவசாய விஞ்ஞானிகள், நீர்ப்பாசனத்துறை மந்திரிகள், அதிகாரிகள், கால்நடைத்துறை மந்திரிகள், அதிகாரிகள், இப்படியாக ஏறக்குறைய பத்தாயிரம் பேர் வந்து விட்டார்கள்.

இத்தனை பேரை வைத்துக்கொண்டு என்ன உருப்படியான முடிவுகள் எடுக்க முடியும் என்ற சந்தேகம் வந்தது. சரி பார்ப்போம் என்று மகாநாட்டைத் துவங்கினோம். பொது வரவேற்புரை வாசித்தார். நான் மகாநாட்டின் நோக்கத்தைக்குறித்து பேசினேன்.

அப்போது நான் சொன்னேன். இந்த மகாநாடு கூட்டப்பட்டதன் நோக்கம் இந்தியா விவசாய நாடென்று சொல்லப்பட்ட பொதும் விவசாயத்தில் மிகவும் பின் தங்கியிருக்கிறது. விவசாயம் செய்து ஒரு விவசாயி தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறான். இப்படியே போனால் இந்தியவில் விவசாயமே அழிந்து போய்விடும்போல் இருக்கிறது.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவுகள் எடுப்பதற்காகவே இந்த மகாநாட்டைக் கூட்டினோம். நீங்கள் எல்லோரும் இதைப் பற்றி உங்கள் மாநிலத்தில் பேசி சில முடிவுகளுடன் வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் அவர்கள் மாநிலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி எடுத்துரைப்பார்கள். ஒவ்வோருவரும் 15 நிமிடங்களில் அவர்கள் சொல்லவேண்டியதை சொல்லி முடித்தால் நல்லது.

பிறகு பிரதம மந்திரியின் தலைமையில் மகாநாடு தொடங்கியது. மாநில முதலமைச்சர்கள் பேசினார்கள். ஒவ்வொருவரும் 1 மணி நேரம் முதல் 1 1/2 மணி நேரம் வரை பேசினார்கள். 15 நிமிடம் கழித்து பிரதம மந்திரி மணி அடித்துப் பார்த்தார். ஒரொவரும் அந்த நேரத்திற்குள் பேச்சை முடிக்கவில்லை. முன் அனுபவம் காரணமாக அவர் இரண்டாவது தடவை மணி அடிக்கவில்லை.

காலை 11 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரையில் ஏழு முதல் மந்திரிகள் மட்டுமே பேசி முடித்தார்கள். நான் பிரதம மந்திரியிடம் சொன்னேன். அனைத்து மாநில முதலமைச்சர்கள் பேசி முடிக்கும் வரை மகாநாடு தொடரட்டும் என்றேன். அவரும் சரியென்றார். இப்படியாக மகாநாடு நான்கு நாட்கள் நடந்து அனைத்து முதல் மந்திரிகளும் பேசி முடித்தார்கள். அவர்கள் பேசியது முழுவதும் அரசியல்தானே ஒழிய விவசாயத்தைப் பற்றி ஒன்றும் இல்லை.

இதைப் பார்த்த நான் அன்று இரவு நான்கைந்து விவசாய நிபுணர்களையும் பத்து விவசாயிகளையும் தனியாக அழைத்துப்போய், இந்த முதல் அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கட்டும். அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நீங்கள் தனியாக உட்கார்ந்து என்ன தீர்மானங்கள் போடலாம் என்று விவாதித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அவைகளை மகாநாட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றி விடுவோம் என்றேன். அவர்களும் சரியென்று அவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள ரூமுக்குப் போய்விட்டார்கள்.

ஐந்தாம் நாள் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் நாள். என்னென்ன தீர்மானங்கள் நிறைவேறின என்று அடுத்த பதிவில் பார்க்கவும்.


23 கருத்துகள்:

  1. அரசியல்வாதிகள் எதற்கான கூட்டமோ அதைவிட்டு அரசியல் தான் பேசுவார்கள் என்பதைச் சரியாக புரிந்து கொண்டீர்கள்! :)))

    என்ன தீர்மானம் செய்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
  2. ஐந்தாம் நாளன்று என்னென்ன தீர்மானங்கள் நிறைவேறின என அறிய ஆவலோடு அடுத்த பதிவை எதிர்நோக்கி இருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவசாயம் பற்றிய என் மனத்தில் பட்ட சில முடிவுகள் சொல்கிறேன், இந்த தீர்மானங்களையெல்லாம் எடுக்க முடியுமா என்று பாருங்களேன்.
      1. முதலில் வயல் வரப்பு சண்டைகளை நிறுத்த கூட்டுறவு முறை விவசாயத்தை அமுல் படுத்தவேண்டும். 1/2 ஏக்கர், 1 ஏக்கர் என்றெல்லாம் இல்லாமல் 50 பேராவது ஒன்று சேர்ந்து குறைந்தது 25 ஏக்கரில் பயிர் செய்ய ஆரம்பிக்க வேண்டும். புதிய விவசாய முறைகளை புகுத்த, பேங்க் கடன் வாங்க, விவசாய கூலிகளை அரேஞ் செய்ய என்று பலவற்றிக்கு உதவியாக இருக்கும்.
      2. சமீபத்தில் நாளிதழ்களில் வெளிவந்த செய்தி இது. 30% குளங்கள் காணாமல் போய் விட்டனவாம் பழைய வரை படங்களை வைத்து காணாமல் போன குளங்களைக்கண்டு பிடித்து அங்கே என்ன கட்டடங்கள் இருந்தாலும் இடித்து தரை மட்டமாக்க வேண்டும். அதற்கு நீர் வர வேண்டிய வழித்தடங்கள் என்னவோ அதை திரும்ப கொண்டு வரவேண்டும்.
      3. நூறு நாள் வேளையில் வாய்கால்கள், நீர்ப்பாதைகள் அனைத்தையும் தூர் வார வேண்டும்.
      4. குஜராத்தில் செய்தது போன்று, நீர் ஆவியாவதை தடுக்க நீர்ப்பாதைகள் மேல் சோலார் பேனல்கள் அமைக்க வேண்டும்
      5. அனைத்து அதிகாரங்களும் இப்போது இருப்பதால் நீண்ட நாள் கோரிக்கையான அணைத்து நதி இணைப்பு திட்டம் செயல் படுத்த வேண்டும்
      6. நதி நீரை மத்திய அரசு அதிகாரத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்.
      7. அனைத்து மினரல் வாட்டர் தொழிற்சாலைகளை உடனே மூட வேண்டும்.
      8. ஆற்று நீரை மாசு படுத்தும் அனைத்து தொழிற்சாலைகளையும் உடனயாக மூட வேண்டும் அல்லது மாசு நீக்கு முறைகளை அமல் படுத்த தேவையான ஆயத்தங்களை அரசே செய்ய வேண்டும்.

      மற்றபடி நீங்கள் விவசாய பேராசிரியர் ஆகையால் என்னென்ன செய்தால் விவசாயம் முன்னேறுமோ அத்தனையும் செய்து விடுங்கள்.

      சேலம் குரு

      நீக்கு
  3. மகா நாட்டில் நீங்கள் சொன்னதும், முதல் மந்திரிகள் பேசியதும்... நடக்கிற உண்மைகள்...

    ஆவலுடன் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. //முன் அனுபவம் காரணமாக அவர் இரண்டாவது தடவை மணி அடிக்கவில்லை.//

    ஒரு முறை அனுபவித்ததே போதும் என்று நினைத்து விட்டாரோ
    இதுதான் அனுபவம் பேசுகிறது என்பதற்கு நல்ல உதாரணம்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  5. //இப்படியாக மகாநாடு நான்கு நாட்கள் நடந்து அனைத்து முதல் மந்திரிகளும் பேசி முடித்தார்கள். அவர்கள் பேசியது முழுவதும் அரசியல்தானே ஒழிய விவசாயத்தைப் பற்றி ஒன்றும் இல்லை//

    ஏதாவது தெரிந்தால்தானே பேசுவதற்கு.
    எதை பேசினாலும் கை தட்ட ஒரு கும்பல் (காசும் குவார்ட்டரும் கொடுத்து கூட்டி வந்த கும்பல்தானே. எனவே கணடிப்பாக கை தட்டி விடும்).

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை பற்றி படித்தவுடன் எனக்கு ஒரு ஞாபகம் வந்தது.
      எனக்கு அலுவலக உயர் அதிகாரி ஒருவர் இருந்தார். ஒரு மணி நேரம் பேசுவதென்றால் உடனே பேசலாம் என்பார். ஏனென்றால் நாம் சொல்ல வேண்டியதை சொல்ல நிறைய நேரம் இருக்கிறது. அதுவே 1/2 மணி நேரம் என்றால் உரையை தயாரிக்க 2 மணி நேரம் எடுத்துகொள்வார். ஏனென்றால் 1/2 மணி நேரத்துக்குள் சொல்ல வேண்டியதை சொல்லியாக வேண்டிய கட்டாயம்.
      5 நிமிடம்தான் பேச வேண்டும் என்றால் பேச வேண்டிய உரையை தயாரிக்க ஒரு நாள் எடுத்துக்கொள்வார். ஏனென்றால் ஐந்தே நிமிடத்தில் சொல்லவேண்டியதை ஆணித்தரமாக சொல்லியாக வேண்டுமே என்பார். அத்தகைய attitude என்றைக்கு நமது அரசியல்வாதிகளுக்கு, முக்கிய அதிகாரிகளுக்கு வருகிறதோ அன்று நாடு கண்டிப்பாக முன்னேறிவிடும்.

      சேலம் குரு

      நீக்கு
  6. //நீங்கள் தனியாக உட்கார்ந்து என்ன தீர்மானங்கள் போடலாம் என்று விவாதித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அவைகளை மகாநாட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றி விடுவோம் என்றேன்//

    இதுதான் டெமாக்ரடிக் வே ஆப் இம்ப்ளிமெண்டிங் ஆடோக்ரடிக் டிசிசன்ஸ் (democratics way of implementing autocratic decisions) என்பார்கள்.
    நம் நாட்டில் முக்காவாசி முடிவுகள் இப்படித்தான் எடுக்கப்படுகின்றன என்பது ஒரு சிலருக்கே தெரியும். ஆனால் நீங்கள் செய்வது நல்லதற்கு என்பதால் OK

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  7. என்னடா இது பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் சொல்கிறீர்களே செய்வாரா என்ற சந்தகம் இருந்தது. இப்போது கொஞ்சம் அந்த சந்தேகம் குறைந்துள்ளது. பின்னூட்டங்கள் அனுப்பியவுடனேயே வெளியாகிற மாதிரி செய்து விட்டீர்களே. இதே வேகத்தில் போட்ட திட்டங்கள் எல்லாம் செயல் படுத்தி விட்டால் அப்புறம்
    "ஆனந்தம் ஆனந்தமே என்றென்றும் ஆனந்தமே" என்று பாட வேண்டியதுதான்.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  8. //இரண்டாவது விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.//

    முதலில் நூறு நாள் வேலையை நிறுத்துங்கள். தானாக விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பார்கள்.
    நூறு நாள் வேலை நல்லதுதான். ஆனால் அதில் பாதி நாள் வேலை பார்த்தால் போதும். விவசாயி மாதிரி அதிகாலை எழுந்து செல்ல வேண்டியதில்லை. வெயிலில் வேர்வை சிந்த வேண்டியதில்லை. நாள் முழுக்க வேலை செய்ய வேண்டியதில்லை. கூழ் கஞ்சி என்று குடிக்க வேண்டியதில்லை.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இத்தகைய கருத்தைத்தான் கொண்டிருந்தேன். ஒரு நாள் நூறு நாள் வேலை செய்யும் இடத்திற்கு போய் பார்த்தேன். நீங்கள் சொல்வது போல பாதி நேரம்தான் வேலை. ஆனால் வெயில். அவர்களிடம் பேசும்போது சொன்னது கீழே கொடுத்திருக்கிறேன்.
      "நூறு நாள் வேலை திட்டத்தை பற்றி சரியாக அறியாமல் பேசுகிறீர்கள் போலிருக்கிறது.
      அநேகமாக நீங்கள் அரசு வேலையில் இருப்பவர் என்று நினைக்கிறேன். அதனால்தான் வேலையில்லாமல் இருக்கும் எங்களை போன்றவர்களின் நிலைமை புரியவில்லை. சாப்பிடுவதற்கு வழியில்லாமல் இருந்த எங்களுக்கு இந்த நூறு நாள் வேலை எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் தெரியுமா? இப்போது கொஞ்சமாவது சாப்பிடுகிறோம்.
      செயல் திட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்".
      ரொம்ப கிளியராக பேசினார்கள்.

      சேலம் குரு

      நீக்கு
    2. எல்லாமே சரிதான். ஆனால் விவசாய வேலை நடக்கும் பொது நூறு நாள் வேலை நிறுத்தினால் ஒழிய விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பது கடினமே. ஆறு மாதம் நூறு நாள் வேலை பார்க்கட்டும் மீதி ஆறு மாதம் விவசாய வேலை பார்க்கட்டுமே.
      அல்லது நூறு நாள் வேலைத்திட்டத்திலேயே விவசாயத்தை கொண்டு வந்து விடலாமே.
      முதல் முக்கியத்துவம் விவசாயத்திற்கு அதற்கு போகத்தான் மற்ற வேலைகள் என்று முடிவெடுக்கலாமே.
      நீங்கள் சொல்வது போல நூறு நாள் வேலை என்பது வேலை இல்லாமல் இருக்கும், அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருக்கும் ஆட்களுக்கு கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான். அனால் அது ஏற்கனவே விவசாய கூலி வேலை செய்பவர்களை அல்லவா உறிஞ்சி விடுகிறது. இது சரியில்லை அல்லவா?
      அதுதான் என் ஆதங்கம். மற்றபடி நூறு நாள் வேலை பல பேருக்கு சாப்பாடு போடுகிறது (அதை நூறு நாள் வேலை அரேஞ் செய்யும் காண்ட்ராக்டர் சுரண்டுகிறார் என்பது வேறு விசயம்) எம்பதில் ஐயமே இல்லை. விவசாய தொழிலாளர்களை விவசாய வேலை பார்க்கவிடாமல் இழுத்து விடுகிறது என்பதுதான் பிரச்சனையே.

      திருச்சி அஞ்சு

      நீக்கு
    3. இலவசங்களை ரத்து செய்தபோதே நூறு நாள் வேலையும் போய்விட்டதே. தீர்மானங்களைப் பாருங்கள்.

      நீக்கு
  9. //இந்த முதல் அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கட்டும். அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை//

    இதை சொல்ல மகா தைரியம் வேண்டும்
    உண்மைதான் என்றாலும் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வருவதற்கே தைரியம் வேண்டும்தான்.
    ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற எண்ணத்துடன் போய்கொண்டிருக்கும் மக்கள் மத்தியிலே நீங்கள் ஒரு வித்தியாசமானவர் அய்யா
    தொடருங்கள் கனவிலாவது நாம் எதிர் பார்க்கும் இந்தியாவை காணலாம்.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  10. விவசாயத்தில் மட்டுமல்ல சமையலிலும் அப்படியே தான்.விளையாட்டிலும் அப்படிதான். ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. கிரிகெட் மட்டும் தான் கவணம் பெறுகிறது. வேற வெளையாட்டெல்லாம் குரங்கு பெடல் போட வேண்டிருக்கு. செட்டிநாட்டு சமையல்னு கொண்டாடுறாங்க அப்பென்ன கொங்கு நாட்டில் யாருமெ சமைப்பதே இல்லையா ....கோதுமை உப்புமா தயிர் காம்பினேஷனுக்கு முன்னால் எந்த உனவாவது அசால்ட் கொடுக்க முடியமா....

    இருபது வருஷத்துக்கு முன்னாடிதான் செட்டிநாட்டு சமையலை ஊக்கப்படுத்தினாங்க. இன்னைக்கு 3 நட்சத்திர ஹோட்டலில் இருந்து 5 நட்சத்திர ஹோட்டல்கள் வரைக்கும் செட்டிநாட்டு சமையல் வந்திருக்கு. லண்டனில் இரண்டாவது இடத்தில் செட்டிநாட்டு சமையல் இருக்கு. அதேமாதிரி தமிழ்நாட்டில் நிறைய சமையல் வெரைட்டி இருக்கு. ஒவ்வொரு கம்யூனிட்டிக்கும் ஒரு சமையல் இருக்கு. செட்டியார்களுக்கு மட்டும்தான் கம்யூனிட்டி சமையல் இல்லை. செட்டிநாட்டு சமையலும் அவங்களுக்கே உரிய சமையல் இல்லை. செட்டியார்கள் நல்லா சாப்பிடக்கூடியவங்க. சமையலில் நிறைய வெரைட்டியை எதிர்பார்ப்பாங்க. நிறைய வேலைப்பாடுகள் இருக்கணும்னு நினைப்பாங்க. அதனால்தான், செட்டிநாட்டு சமையலில் கோலா உருண்டை, பனியாரம், ஆப்பம், இடியாப்பாம்னு நிறைய அயிட்டங்கள் இருக்கு. அவங்களுக்கு ஒரேமாதிரி சாப்பிடுவது பிடிக்காது. செட்டிநாட்டு சமையல் பிரபலம் ஆனதற்கு இப்படி ஏகப்பட்ட வெரைட்டிகள் இருந்ததும் ஒரு காரணம். இதேமாதிரி நிறைய கம்யூனிட்டியோட சமையல் தமிழ்நாட்டில் இருக்கு. அதை யாருமே கண்டுக்கிறதாகவே இல்லை. எத்தனை நாளைக்குத்தான் 'செட்டிநாடு... செட்டிநாடு...'ன்னு சொல்லிட்டு இருக்கப்போறோம்..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
      மக்களுக்கு, நாட்டுக்கு எது வேணும் என்பது முக்கியமில்லை.
      என் தலைவனுக்கு பிடித்தது என்னவோ அதுதான் என்ற நிலைதான் இதற்கு காரணம்.

      எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
      அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு - இது திருக்குறள்

      எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
      அப்பொருள் யார் வாய்பொருள் காண்பதறிவு - என்பது இன்றைய நிலைக்கேற்ற குறள்.

      யார் சொல்கிறார்களோ அதை பொறுத்தே அந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. சொல்பவர் அந்த துறையில் பெரியவராக இருந்தாலும் பரவாயில்லை. ஒத்து கொள்ளலாம்.

      ஆனால் யார் பெரியவர் என்பது இன்றைய சூழ்நிலையில் பணத்தையும் அடியாட்கள் பலத்தையும் யாரோடு தொடர்பு வைத்துள்ளார் என்பதையும் பொறுத்தே முடிவு செய்யபடுவதால்தான் இத்தகைய மோசமான நிலைமை.

      ஆனால் ஒன்று. மக்களும் எது நடந்தால் எனக்கென்ன என்னை அபக்ட் பண்ணாமலிருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்ததுதான் முக்கிய காரணம்.

      "ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன" மற்றும் "நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன என்னை கடிக்காமல் விட்டால் போதும்" போன்ற பழமொழிகள் மக்களை ரொம்பதான் மாற்றி விட்டன.

      மக்கள் மாறினால் ஒழிய இந்த நிலை மாறாது. அய்யா அவர்களின் பதிவிலாவது நல்லதொரு இனிய பாரதத்தை காண்போம்.

      சேலம் குரு

      நீக்கு
    2. //கோதுமை உப்புமா தயிர் காம்பினேஷனுக்கு முன்னால் எந்த உணவாவது அசால்ட் கொடுக்க முடியமா....//

      நன்றாக அனுபவித்து சாப்பிட்டிருக்கிறீர்கள். நான் சிறுவனாக இருக்கும்போது எங்கள் பெரியம்மா தோட்டத்தில் கோதுமை சாகுபடி செய்வார்கள். சம்பா கோதுமை என்று பெயர். அதில் ரவை அரைத்து உப்புமா கிண்டி சாப்பிட்டால் அதன் ருசியே தனி. இன்றைக்கு அந்த மாதிரி ரவை கிடைப்பதில்லை.

      நீக்கு
  11. //பிரதம மந்திரியின் முகம் வாட்டமடைந்திருந்தது. ஏன் இப்படி டல்லாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். மக்கள் எல்லோரும் என்னைக் குறை கூறுகிறார்கள் என்றார்/

    யார் நம்ம பிரதமரை பற்றியா கூறுகிறீர்கள்
    ஒன்பது வருடங்களாக அவர் பேசா மடந்தையாகதானே இருந்திருக்கிறார். இப்போது மட்டும் என்ன பீலிங்.

    புரிந்து கொள்ள முடிகிறது. எவ்வளவு காலம்தான் பீலிங்கை அடக்கி வைக்க முடியும். ஒரு நாள் வெளியே வந்துதானே ஆக வேண்டும்.
    அவரும் மனுசன்தானே.

    நீங்கள் சரியான ஆறுதல் சொன்னீர்கள்.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு

  12. முதலமைச்சர்களைப் பேசவிடாமல் மணி அடித்தால் பேசிமுடித்துவிட்டு பேசவிடவில்லை என்று வெளி நடப்பு நிகழலாம்....!

    பதிலளிநீக்கு
  13. காலையில் பதிவு போட்டோமே, இன்னும் ஒரு பின்னூட்டத்தையும் காணோமே என்று நினைத்தபோதுதான் கமென்ட் மாடரேஷனை நீக்கிய விவரம் ஞாபகத்திற்கு வந்தது.

    கமென்ட் போடும்போது அது உடனே பதிவில் தெரிந்தால் கமென்ட் போடுபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி உண்டாகும். எதிர் மறையான கமென்ட் வந்தால் வரட்டுமே. இனிப்பையே சாப்பிட்டால் திகட்டிப்போய்விடும் அல்லவா?

    பதிலளிநீக்கு
  14. அடுத்த தீர்மானங்கள் படிக்க வருகின்றேன்......

    பதிலளிநீக்கு
  15. ஐந்தாம் நாள் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் நாள்.

    என்ன தீர்மானங்கள் என்று தீர்மானமாகிவிட்டதா?

    பதிலளிநீக்கு