சனி, 7 செப்டம்பர், 2013

பதிவர் சந்திப்பு அனுபவங்கள்

கடந்த செப்டம்பர் 1 ந்தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு, மகாநாடு, திருவிழா நடந்தது அனைத்து பதிவர்களும் அறிந்ததே. இந்த நிகழ்வினால் என்ன பயன் விளைந்தது என்று பலருக்கு ஐயப்பாடு இருக்கிறது.

பதிவர் சந்திப்பினால் பின் வரும் பயன்கள் ஏற்படும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது வழக்கம்.

1. புதிய பதிவுலக நண்பர்கள் கிடைப்பார்கள்.

2. பழைய நண்பர்களைச் சந்தித்து அளவளாவலாம்.

3. புது பதிவுலக உத்திகளை அறிமுகப்படுத்துவார்கள்.

4. நல்ல தியான யோக அனுபவம் கிட்டும்.

5. மதியம் ஒரு விருந்து கிடைக்கும்.

6. ஒரு நான்கைந்து பதிவுகளுக்கான மேட்டர் தேத்தலாம்.

இந்த நோக்கங்கள் எல்லாம் நிறைவேறின. ஆனால் எல்லா பதிவர்களுக்கும் எல்லா நோக்கங்களும் நிறைவேறியிருக்காது.

என்னைப் பொருத்த வரை சில புதிய பதிவர்களை சந்திக்க முடிந்தது. பல பழைய பதிவர்களை சந்திக்க முடிந்தது.

சந்தித்த புதிய பதிவர்கள்:

ரஞ்சனி நாராயணன்.

வெளங்காதவன்

உமாமகேஸ்வரி

மாதங்கி மாலி.

சுப்புத் தாத்தா

கேபிள் சங்கர்

சேட்டைக்காரன்

முருகானந்தம் (கைலாய யாத்திரை)

ஆரூர் மூனா செந்தில்

சந்தித்த பழைய பதிவர்கள்.

புலவர் ராமானுஜம்

வெங்கட் நாகராஜ்

ஜாக்கி சேகர்

சதீஷ் சங்கவி (எங்க ஊரு)

திண்டுக்கல் தனபாலன்

ஜோதிஜி

தருமி

இந்த லிஸ்ட்டில் பல பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவேண்டும்.

இந்த அறிமுகங்களில் எனக்கு ஒரு பெரிய சங்கடம் உண்டு. மனித மூளையில் இரு பகுதிகள் உண்டு என்பதும் அதில் ஒரு பகுதியில்தான் இந்த மனித முகங்களையும் பெயர்களையும் சேமித்து வைக்கும் ஆற்றல் உண்டு என்றும் படித்திருக்கிறேன். என்னுடைய மூளையில் இந்தப் பகுதி ரொம்ப வீக். ஒருவரைப் பார்த்து அரை மணிநேரம் பேசிவிட்டு வீட்டுக்குப் போனதும் அவர் பெயர் என்னவென்று ஒரு மணி நேரம் யோசித்தாலும் நினைவிற்கு வராது.

இது புதிதாகப் பார்த்தவரைப் பற்றிய அனுபவம். வரவர நெடுநாள் பழகியவரின் பெயர் கூட உடனே நினைவிற்கு வருவதில்லை. இது வயதானதின் கோளாறு. இதில் கூடுதல் வம்பு என்னவென்றால், பதிவர்கள் ஒவ்வொருவரும் (சிலரைத்தவிர) எல்லோரும் ஒவ்வொரு புனை பெயர் வைத்திருக்கிறார்கள். அவர்களின் தளங்களின் பெயர்கள். பிறகு அவர்களின் நிஜப் பெயர்கள். அவர்களின் ஊர், தொழில். அவர்களின் முகங்கள். இத்தனை சமாசாரங்களையும் சந்தித்து ஓரிரு நிமிடங்களில் மனதில் பதிய வைத்து, பின்பு நினைவு கூர்வது என்ன பெரிய பிரம்ம வித்தை.

சைனாக்கார்ர்கள், ஜப்பான்காரர்கள் இவர்களைப் பார்க்கும்போது எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் எனக்குத் தெரிகிறார்கள். உங்களில் பலரும் இந்த அனுபவம் பெற்றிருப்பீர்கள். அந்த ஊரில் ஒருவருக்கொருவர் எப்படி அடையாளம் கண்டு பிடிப்பார்கள் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமே. இப்போது என்ன ஆகிவிட்டதென்றால், இன்றைய இளைஞர்களும் அதேபோல் ஒன்றுபோல் தெரிகிறார்கள். ஒரேமாதிரி தாடி, ஒரே மாதிரி ஜீன்ஸ் பேன்ட்டும் டி ஷர்ட்டும்.

இவர்களை வித்தியாசப் படுத்தி அடையாளம் கண்டு கொள்ள என்னால் முடிவதில்லை. அதிலும் ஒரே சமயத்தில் நூற்றுக் கணக்கானவர்களைப் பார்க்கும்போது எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. இதுவும் வயசானதினால்தான் என்று நினைக்கிறேன்.

ஆகவே இப்படித்தான் என்னுடைய பதிவர்கள் சந்திப்பு நடந்தது.

பதிவுலகத்தில் புது உத்திகளை ஏதாவது அறிமுகப் படுத்துவார்களா என்று பார்த்தேன். யாரும் அதில் ஆர்வம் காட்டின மாதிரி தெரியவில்லை.

தியானயோக வகுப்புகள் எல்லாம் முன்தினம் இரவே முடிந்து விட்டதாகக் கூறி விட்டார்கள். எனக்கு மிகுந்த ஏமாற்றமாய்ப் போய்விட்டது. அடுத்த பதிவர் சந்திப்புக்கு இரண்டு நாள் முன்னதாகவே போய்விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

எனக்கு மிகவும் ரசிக்க முடிந்தது மதிய விருந்துதான். அப்படியொரு பிரியாணியை நான் இதுவரை சாப்பிட்டதில்லை. இருப்பதிலேயே உயர்ந்த ரக பாசுமதி அரிசியில் மிகவும் பக்குவமாக செய்யப்பட்டிருந்த பிரியாணி. வயிற்றுக்கு எந்த உபத்திரமும் செய்யவில்லை. விழாக்குழுவினருக்கு என் தனிப்பட்ட பாராட்டுகள்.

அநேகமாக எல்லாப் பதிவர்களும் தலா நான்கு பதிவுகளாவது போட்டோ விட்டார்கள். பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளாதவர்களும் பதிவர் சந்திப்பைப் பற்றி பதிவு போட்டுவிட்டார்கள். இன்னும் போடுவார்கள். ஆகவே பதிவுலகின் நோக்கமே பதிவு போடுவதுதானே. அந்த நோக்கம் மிக இனிதாக நிறைவேறியது என்பது ஒரு போற்றத்தக்க விஷயம்.

அடுத்த பதிவர் சந்திப்புக்காக காத்திருப்போம்.

42 கருத்துகள்:

  1. அடுத்தமுறை இரண்டு நாள் முன்னதாகவே வந்து விடுங்கள்... ஜமாச்சிடலாம்... நீங்களும் ஒரு மேட்டரை தேத்தி விட்டீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தாமதமாக வந்திருந்ததால் பலரை அறிமுகப் படுத்திக் கொள்ள முடியாமல் போய் விட்டது. வந்திருந்தவர்க்ளில் பலர் யார் என்று தெரியாமல் போய் விட்டது. புதிதாக ஒரு சிலரை மட்டுமே அறிமுகப் படுத்திக் கொள்ள முடிந்தது.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  3. இந்த வயதிலும் தியானம் யோகமா? ஆச்சர்யம். பிரியாணி வயிற்றை பாதிக்கவில்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டு மறுபடி பாராட்டியிருப்பது சிறப்பு. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயசுக்கும் தியான யோகத்திற்கும் என்னங்க சம்பந்தம்? அது வேறு, இது வேறு.

      நீக்கு
    2. நடைப் பயிற்சியாகட்டும், யோகாவாகட்டும் என்னால் தொடர்ந்து ஒருமாதம் கூட தொடர முடியவில்லை. சோம்பேறித்தனம் வந்து விடுகிறது. அதனால் எனக்கு ஆச்சர்யம்!

      நீக்கு
    3. ஸ்ரீராம், ரொம்பவும் பச்சப் புள்ளயா இருக்கீங்களே, உங்களை என்ன பண்றது? நான் சொன்ன தியானயோகம் வேற. யாராவது சின்ன வயசுப் பதிவரிடம் கேட்டு தெரிஞ்சுக்குங்க.

      நீக்கு
    4. பதிவர் சந்திப்பு நடத்தறதே இதுக்குத்தான்னு ஊர்ஜதமாகாத வதந்தி.

      நீக்கு
    5. அய்யா வணக்கம், உங்களுக்கு நக்கல் கொஞ்சம் ஜாஸ்தி. கோயமுத்தூர்காரராச்சே இல்லாமல் இருக்குமா. நான் தான் மகாதியான வகுப்புகளின் குரு. யாருக்கு எந்த சந்தேகம் மகாதியானத்தைப் பற்றி என்றாலும் என்னையோ அல்லது மகாதியான ஆசிரம தொடர்பாளர்களையோ தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு கம்பெனிக்கு நிறையபேர் இருக்கிறார்கள். எனவே அடுத்த வருடம் கவலைப்படாமல் கலந்து கொள்ளவும்.

      கிலி கிலி பிலி பிலி ஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.

      நீக்கு
  4. தங்களை முதன்முறையாக சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா...

    பதிலளிநீக்கு
  5. ஐயய்யோ நல்ல பிரியாணியை மிஸ் பண்ணிட்டேனோ, அடுத்த முறை ப்ளைட் பிடித்தாவது வந்திடணம் பிரியாணிக்காகவாது. அவ்வ்வ்.

    பதிலளிநீக்கு
  6. பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு இருந்தால் தங்களை சந்தித்து உரையாடி இருக்கலாம். அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டேன். அதனாலென்ன ஈரோடில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  7. அடுத்த முறை தியான வகுப்‌பு கண்டிப்பா கலந்துக்கங்க ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக கலந்துக்கறேன். ஆனா நமக்கு சோடியா கம்பெனி கொடுக்க யாராச்சும் வேணுமே?

      நீக்கு
  8. தங்களை நான்தான் முதலில் வரவேற்றேன்.மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  9. என்கிட்ட பேசினீங்க ஐயா! அதாவது நினைவிருக்கா?!

    பதிலளிநீக்கு
  10. தங்களின் மறதியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பவர்களில் நானும் ஒருவன் அய்யா !

    பதிலளிநீக்கு
  11. முன் (பதிவுலக) அறிமுகம் இல்லாததால் உங்களை கண்டும் பேசாமல் வந்தது வருத்தமளிக்கிறது.என்னுடைய பதிவில் உங்களை குறிப்பிட்டுள்ளேன்.
    http://salemdeva.blogspot.com/

    தியான யோக மார்க்கத்தில் நீங்கள் செலுத்தும் ஆர்வம் போற்றத்தக்கது. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் குறிப்பிட்ட தியான யோக வகுப்புகளைப் பற்றி யாராவது நல்ல இளம் பதிவரிடம் ட்யூஷன் எடுக்கவும்.

      நீக்கு
  12. தங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா.

    பதிலளிநீக்கு
  13. என் பெயரை மறந்து விட்டீர்கள் ஐயா... விழா ஆரம்பிக்கும் முன்னமே சந்தித்து பேசியதால் மறந்துட்டிங்க போல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை (உன்னை என்றே சொல்லலாம், அவ்வளவு சின்னப்பிள்ளையாகத்தான் இருந்தாய்) மனதில் இருந்தது. வெளியில் வரவில்லை. உங்கள் வீட்டுக்காரருடன் வந்திருந்தீர்கள் அல்லவா?

      நீக்கு
  14. Intha vayasula thiyanama, eeswara!

    Ungal palaya blogla, per masakoundan kirukalgalnu ninaikaren, kongu tamila gramathu vaalkai, sambrathayam pathi eluthitu iruntheenga, interestinga irunthathu. Antha mathiri appo appo oru pathivu podavum.

    பதிலளிநீக்கு
  15. த்யான யோகம் வழி காட்ட நித்யானந்தா , ஜெயேந்திரன் போன்றார் உண்டா? இருந்தால் அடுத்த முறை நிச்சயம் ஆஜர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நித்யானந்தா, ஜெயேந்திரர் எல்லாம் ஜுஜபி. அவங்களுக்கே வழிகாட்டறவங்க பதிவுலகில இருக்காங்க.

      நீக்கு
  16. சந்தித்துப் பேசியதில் மிக்க மகிழ்ச்சி ஐயா.

    பதிலளிநீக்கு
  17. என்னையும் மறந்துவிட்டீர்கள். மதிய உணவு அருந்திவிட்டு தனியாக நின்றுக்கொண்டிருந்தபோது உங்களை நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்... என்னுலகம் என்பது என்னுடைய பதிவி பெயர். இதுவரை என்னுடைய பதிவுக்கு நீங்கள் வந்ததில்லை என்றும் நினைக்கிறேன். ஹாலில் கூட உங்களுக்கு அருகில்தான் அமர்ந்திருந்தேன். நானும் தருமியும் நீண்ட கால நண்பர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை நன்றாக நினைவிருக்கிறது. கருப்பு கலர் பேன்ட் போட்டிருந்தீர்கள் என்று நினைவு. எல்லோர் பெயரையும் நினைவிற்கு கொண்டு வர முடிவதில்லை.

      நீக்கு
  18. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா. நினைவு வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நான் வெங்கட்டின் மனைவி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னங்க நீங்க, எங்க ஊரு ஆச்சே. மறக்கமுடியுமா? உங்கள் தளம் கோவை to டில்லி மறக்கமாட்டேன். உங்கள் பெண்ணின் பெயர் நினவிற்கு வரவில்லை.

      நீக்கு
    2. ஐயா எங்கள் மகளின் பெயர் ரோஷ்ணி.

      நீக்கு
  19. என்னை நினைவில் வைத்துக் கொண்டு பெயர் போட்டதற்கு நன்றி, ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெற்றிவேல் என்று உங்கள் சித்தப்பா பையன் ஒருவர் இருக்கிறார் என்று சொன்ன நினைவு. சரிதானா?

      நீக்கு
  20. அருமையான அனுபவங்கள். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

    //ஒருவரைப் பார்த்து அரை மணிநேரம் பேசிவிட்டு வீட்டுக்குப் போனதும் அவர் பெயர் என்னவென்று ஒரு மணி நேரம் யோசித்தாலும் நினைவிற்கு வராது.//

    மிகவும் நிம்மதியான விஷயம், ஐயா. இதற்கெல்லாம் ஓர் கொடுப்பிணை வேண்டும். அது உங்களுக்கு உள்ளதே என எனக்கு சற்றே பொறாமையாக உள்ளது, ஐயா.

    என்னால் சிலரின் சந்திப்புக்களையும், சில நிகழ்வுகளையும் எவ்வளவு கஷ்டப்பட்டு ரப்பர் போட்டு அழித்தாலும் அழிக்கவே முடிவது இல்லை. ;(

    பதிலளிநீக்கு
  21. இந்த தியான யோகம் என்றால் என்ன.? இதைத் தெரிந்து கொள்ள இளம் பதிவர்கள் பலரைச் சந்திக்க அடுத்தவருடம்வரை காத்திருக்க வேண்டுமா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில "நல்ல" சமாச்சாரங்களைத் தெரிந்து கொள்ள சரியான காலம், நேரம், குரு அமையவேண்டும். இல்லாவிட்டால் தீட்சை பலிக்காது. அடுத்த வருஷம் என்பது என்ன, சீக்கிரம் வந்து விடும். இரண்டு நாள் முன்பாக நேராக கோவை வந்து விடுங்கள். ஈரோடு பக்கம்தான். எல்லா சௌகரியங்களையும் நான் பார்த்துக்கொள்கிறேன். அங்கே உங்களுக்கு தீட்சை அளிக்கப்படும்.

      நீக்கு
  22. பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ஐயா!

    பதிலளிநீக்கு
  23. பதிவுலகம், நட்புலகாய் விரிந்து செல்ல வாழ்த்துக்கள், மன்னிக்கவும், தவறவிட்டதற்கு

    பதிலளிநீக்கு