திங்கள், 12 ஜனவரி, 2015

எலும்பு முறிவு வைத்தியம்

                                            
மனித உடம்பு பெரும்பாலும் தனக்கு வரும் உபாதைகளைத் தானே சரி செய்து கொள்ளும் சக்தி பெற்றது ஆகும். அது அவ்வாறு தன்னைத்தானே சரி செய்து கொள்ளும்போது அதற்கு நாம் இடைஞ்சல் செய்யாமல் இருந்தால் போதும்.

அதே போல் எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களை அதற்கு துணை செய்தால் மட்டும் போதும், அவை தானாகவே சரியாய் விடும். ஆனால் அவ்வாறு சரியாக கொஞ்சம் நாட்கள் ஆகும். அதுவரை பொறுமையாக இருக்கவேண்டும்.

இந்த நுணுக்கத்தை நம் நாட்டின் பரம்பரை வைத்தியர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். குறிப்பாக நம் நாட்டின் நாவிதர்கள்தான் அந்தக் காலத்தில் வைத்தியர்களாகவும் இருந்தார்கள். மேல் நாட்டிலும் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.

பிற்காலத்தில் ஆங்கில மருத்துவம் (அலோபதி மருத்துவ முறை) பிரபலமாக ஆரம்பித்த பிறகுதான் எலும்பு முறிவு வைத்தியம் என்று ஒரு பிரிவு அந்த வைத்திய முறையில் உண்டாகியது. இதிலும் அந்தக் காலத்தில் நாட்டு மருத்துவர்கள் கடைப்பிடித்த முறைகளைத்தான் நவீனமான வழியில் பயன்படுத்தினார்கள். தற்காலத்தில்தான் ஆபரேஷன், பிளேட் வைத்தல் ஆகியவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

முறிந்த எலும்பை சரியான முறையில் வைத்து அதை அசையாதவாறு கட்டி வைத்திருந்தால் அது இயற்கையாகவே கூடி விடும். அந்த மாதிரி எலும்பைச் சரி செய்யும்போது ஏற்படும் வலியைத் தாங்கிக்கொள்ள ஆங்கில வைத்தியத்தில் மயக்க மருந்து கொடுப்பார்கள். நாட்டு வைத்திய முறையில் சாராயம் குடித்து விட்டு வரச்சொல்வார்கள்.

ஆனால் இந்த இரண்டு முறைகளிலும் தேவைப்படும் பணம் இருக்கிறதே, அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்திற்கு ஒப்பாகும்.

நாட்டு வைத்தியம் செய்து கொள்ள சில நூறு ரூபாய்கள் போதும். ஆனால் ஆங்கில முறைப்படி வைத்தியம் செய்ய பல ஆயிரம் ரூபாய்கள் தேவைப்படும்.

அப்படிப்பட்ட ஒரு நாட்டு வைத்தியசாலை கோவை மாவட்டத்தில் சத்தியமங்கலத்திலிருந்து கோபி போகும் வழியில் சிங்கிரிபாளையம் என்ற இடத்தில் இருக்கிறது.


அங்கு ஒரு பெண்மணி தன் பாதத்தில் ஏற்பட்டுள்ள சுளுக்குக்கு வைத்தியம் செய்து கொள்கிறார்.



இங்குள்ள வைத்தியர்கள் பெரும்பாலும் நாவிதப் பரம்பரையைச் சேர்ந்தவர்களே. எப்படிப்பட்ட சிக்கலான எலும்பு முறிவானாலும் அதை சரி செய்து விடுவார்கள். இங்கு வந்து குணமாகாமல் திரும்பினவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம்.

இவர்கள் உபயோகிக்கும் ஸ்பெஷல் எண்ணையை வேண்டுபவர்களுக்கு விலைக்கும் தருகிறார்கள். இது கைகால்களில் ஏற்படும் வலி, எலும்புகளில் லேசாக அடிபட்டு ஏற்படும் வலி ஆகியவைகளுக்கு கைகண்ட மருந்தாகும். 150 மில்லி கொண்ட பாட்டில் விலை வெறும் 70 ரூபாய் மட்டுமே. என் அனுபவத்தில் அயோடெக்ஸ் போன்றே குணம் தருகின்றது. 

நான் இந்த வைத்தியர்களுக்கு ஏஜன்ட்டோ என்று சந்தேகப்படவேண்டாம். என் சொந்த அனுபவத்தில் நான் கண்ட உண்மையைப் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.

23 கருத்துகள்:

  1. இன்றைக்கும் ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் புத்தூர் என்ற ஊரில் எலும்பு முறிவுக்கு கட்டு போட்டு குணப்படுத்துகிறார்கள். சென்னையில் கூட அந்த வைத்திய சாலைக்கு கிளை உண்டு. இதுபோன்று நாட்டு வைத்திய சாலைகள் பல உண்டு. அவையெல்லாம் பரம்பரம்பரையாய் நடத்தப்படுபவை. எனினும் நாட்டு வைத்தியத்தால் எல்லா எலும்பு முறிவுகளையும் குணப்படுத்தமுடியுமா எனத் தெரியவில்லை.மருத்துவர்கள் தான் சொல்லவேண்டும். தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்தூரில் முதுகுதண்டுவட ஜவ்வு விலகலுக்கு கட்டு உண்டா சார்

      நீக்கு
  2. எல்லா வைத்திய முறைகளிலும், குணப்படுத்த முடியாத கேஸ்கள் என்று சில இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. வர இயலாதவர்களுக்கு வீடு வந்து வைத்தியம் செய்யப்படும்... தீனதயாளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குறிப்பிட்ட பிறகுதான் அந்த போர்டை சரியாகக் கவனித்தேன். அந்த வாசகம் இதற்கு முன் என் கண்ணில் படவேயில்லை.

      நீக்கு
  4. பயனுள்ள தகவல். தேவையானவர்களுக்கு உதவும்....

    பதிலளிநீக்கு
  5. தலைவரே (அய்யா என்பதில் இருந்து நீங்கள் இப்போது தலைவர் பதவிக்கு போய் விட்டீர்கள்). "போற்றுவோர் போற்றட்டும். புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற உயரிய நிலைக்கு நீங்கள் வந்து விட்டதால் (இந்த காலத்தில் இது அபூர்வம். கூட்டத்தோடு கோவிந்தா போடும் கூட்டம் பெருகி விட்ட இந்த நேரத்தில் உங்களைப்போன்றோர் அருகி வரும்போது உங்களைப்பாராட்டி பாராட்டு விழா ஒன்று எடுக்க முடியவில்லை என்றாலும்) தலைவரே என்று உரிமையுடன் மன மகிழ்ச்சியுடன் அழைக்கிறேன்.

    கீழ்கண்ட செய்தி ஒன்றை பழைய ஏட்டில் படித்தேன். இன்றைய களத்தில் இப்படி ஒன்று நடக்குமா என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி நடக்க என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று ஒரு பதிவு போடுங்களேன்.

    "பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் புரூசியா என்னும் தேசத்தை ஆண்ட மூன்றாம் பிரடெரிக் வில்லியம் என்னும் மன்னர் தன் நாட்டிற்கு ஷேமத்தை கொடுக்க விரும்பி எத்தனையோ முயற்சிகள் எடுத்தும், போர்கள், பஞ்சத்தின் விளைவாக ஒன்றுமே செய்ய முடியவில்லை.

    கடைசியில் அவர் தனது நாட்டு பெண்களுக்கு ஒரு உருக்கமான கடிதம் எழுதி, அதில் அவர்களிடமிருந்த வெள்ளி, பொன் நகைகளை அரசாங்கத்திற்கு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அப்படி கொடுப்பவர்களுக்கு, 'நான் கொடுத்த பொன்னிற்கு பதிலாக இரும்பை பெற்றேன்' என பொறிக்கப்பட்ட இரும்பில் செய்த ஒரு சிலுவையை கொடுத்தார்.

    அதை அன்புடன் பெற்றுக் கொண்ட அந்த பெண்கள் பெருமையுடன் அதை அணிந்துக்கொண்டனர். அந்த நாட்களில் பொன் அணிவதைவிட இந்த இரும்பு சிலுவை அணிவதே பெருமையாக எண்ணபட்டது. தங்களது நாட்டிற்காக தாங்கள் தியாகம் செய்தோம் என்ற பெருமையோடு அவர்கள் அதை அணிந்தார்கள்."

    இன்று கோடிக்கணக்கில் தங்கம் நகைகளாக எந்தவித பொருளாதார உபயோகத்துக்கும் பயனில்லாமல் நமது இந்திய மக்களிடம் குவிந்து கிடக்கிறதே. மேற்கண்ட நிகழ்வு மாதிரி இன்னொற்று நமது நாட்டில் நடந்தால் எப்படியிருக்கும்?

    ஸ்வீஸ் வங்கிகளில் அரசியல்வாதிகளின் கணக்குகள் அதிகரிக்கும் என்பதுதான் உண்மையில் நடக்கும் என்றாலும், பாசிடிவ் ஆகா சிந்தித்தால் என்ன நடக்கும் என்று ப்ரோ பதிவு போடுங்களேன்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பற்றிப் பதிவிடுவதற்கு பொருளாதாரத்தில் நன்கு தேர்ந்த வல்லுநர்களால் மட்டுமே முடியும். எழுதத் தெரியும் என்பதற்காக எனக்குத் தெரியாததைப் பற்றி மிகத் தெரிந்தவன் போல் எழுதக்கூடாதல்லவா? நான் அந்த த்தவறைச் செய்யமாட்டேன்.

      தலைவர் பதவி வேண்டாமே. அய்யா என்று அழைப்பதுதான் ஒரு அன்னியோன்னத்தைக் காட்டுகிறது.

      நீக்கு
    2. ஐயா அவர்கள் ஏற்கனவே குடும்ப பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை பற்றி எழுதி
      வாங்கிக் கட்டிக்கொண்டார். இன்னும் இது வேறு வேண்டுமா. போதும் (கந்த)சாமி.
      --
      Jayakumar

      நீக்கு
    3. திரு. ஜெயக்குமார்,

      கவுண்டமணி பாணியில் படிக்கவும்.

      "பதிவுலகில் இதெல்லாம் சகஜமப்பா"

      நீக்கு
  6. நீங்கள் சொல்வது போல அலோபதி வந்தவுடன் நமது பாரம்பரிய நாட்டு வைத்தியங்கள் வழக்கொழிந்து போயின என்பது உண்மையே.
    காரணம் x-ray, ECG, scan, MRI போன்றன அலோபதியில் வந்தது போல நாட்டு வைத்தியத்தில் வரவில்லை. முற்ற முழுக்கவும் வைத்தியரின் அனுபவத்தில் கண்டறியப்பட வேண்டிய நிலையில்தான் உள்ளது. இதனிடையில் போலி நாட்டு மருத்துவர்களின் கூட்டம் அதிகமாகி விட்டது. அலோபதி மருத்துவமனை நிறுவ தேவைப்படும் பணம் மிக அதிகம். ஆனால் நாட்டு வைத்தியருக்கு ஒரு அறையிருந்தால் போதும். எனவே போலி நாடு வைத்தியர்கள் மிக அதிகமாகி நாடு வைத்தியத்தின் மகத்துவம் குறைந்து போய் விட்டது.
    இன்னமும் இத்தகைய நாடு வைத்திய மருத்துவ மனைகள் உள்ளது என்று அறியும்போது மனது சந்தோஷமாக இருக்கிறது,
    அந்த எண்ணையை தபால் வழி பெற முடியுமா என்று தெரியவில்லை. அதைப்பற்றி கொஞ்சம் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  7. ஆங்கில மருத்துவர்களில் நல்ல மருத்துவர் மோசமானவர் இருப்பது போல நம்மூர் மருத்துவத்திலும் இருக்கிறார்கள். முடிந்தவரை மருத்துவர்களை அணுகாமல் இருக்க முடிந்தால் நலம்.
    இதனையும் பாருங்களேன்.

    http://puthu.thinnai.com/?p=22350

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவத்தின் மூலம் பலரும் குணம் கண்டறிந்த வைத்தியரிடம் போகவேண்டும்.

      நீக்கு
  8. நாட்டு வைத்தியம் பற்றிய சிறப்பான தகவல்கள் தந்தமைக்கு நன்றி. உங்களுக்கு என்ன நேரிட்டது, நாட்டு வைத்தியம் மூலம் எப்படி அதனை சரி செய்தீர்கள் என்றும் சொல்லி இருக்கலாம்.

    நானும் மாதம் ஒருமுறை இங்குள்ள பரம்பரை நாட்டு வைத்தியர் ஒருவரிடம் (துளாவூர் நுட வைத்தியம்) இரண்டு கைகள் மற்றும் விரல்களுக்கு எண்ணெய் மஜாஜ் செய்வது வழக்கம். அடிக்கடி கம்ப்யூட்டரில் டைப் செய்வதால் ஏற்படும் கை விரல்கள் வலிக்கு நல்ல நிவாரணம். மற்றபடி மற்றவைகளுக்கு நான் ஆங்கில (அலோபதி) வைத்தியம்தான்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அதற்காகவேதான் வாங்கி வந்தேன். மவுஸ் உபயோகிப்பதால் மணிக்கட்டில் வரும் வலிக்கு இந்தத் தைலம் போட்டால் உடனே இரண்டொரு நாட்களில் பலன் தெரிகிறது. வெகு நாட்களுக்கு முன் என் உறவினர் ஒருவருக்கு மாட்டு வண்டியில் இருந்து விழுந்து பல இடங்களில் எலும்பு முறிவு. அவருக்கு இங்கிலீஷ் வைத்தியம் பார்க்க வசதி இல்லை. இங்கு சென்றதில் 6 மாதத்தில் பூரண குணம் அடைந்து பழைய மாதிரி ஆகிவிட்டார். அவரைப் பார்க்கப் போனபோது எதற்கும் இருக்கட்டுமே என்று இந்தத் தைலம் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தேன். சின்ன சுளுக்கு, கால் விரல்களில் அடி இவைகளுக்கு உபயோகப்படுத்தியதில் நல்ல குணம் தெரிந்தது. எனது மணிக்கட்டு வலிக்குப்போட்டதில் வலி போய்விட்டது. அந்த தைலம் தீர்ந்து விட்டதால் இப்போது அந்தப் பக்கம் வேறு வேலையாகப் போக நேர்ந்ததால் இந்தத் தைலத்தையும் வாங்கி வந்தேன். அப்படியே ஒரு பதிவும் தேத்தினேன். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!

      நீக்கு
  9. உபாதைகள் பலவிதம் என்னும் பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்.இந்திய முறையானாலும் அலோபதி ஆனாலும் வைத்தியர்களிடம் dedication இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  10. எங்கள் பக்கத்திலும் எலும்பு முறிவுக்கு புத்தூர் கட்டு, திருநிலைக் கட்டு என்று நாட்டு வைத்தியம் செய்வதுண்டு. எலும்புகள் கூட பச்சிலை ஏதோ வைத்து கட்டுகிறார்கள். நல்ல முறையில் கூடுகிறது!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com


    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    பதிலளிநீக்கு
  12. சித்த மருத்துவம் , நாட்டு மருத்துவத்துக்கு முடியாது என்று ஒன்று இல்லை. சரியான அனுபவம் உள்ள வைத்தியரால் எலும்பு முறிவு மட்டும் இல்லை மற்ற பிரச்சிணைகளுக்கும் தீர்வு காண முடியும். இந்திய தேசத்தின் மருத்துவம் நம்பிக்கை மற்றும்,மிக நூட்பமான ஆன்மிக வல்லமையும் கொண்டு உருவாக்கப்பட்டது.இந்திய தேசத்தின் வைத்தியத்துக்கு இணையாக எதுவும் இல்லை.
    வாழ்க வமுடன்

    பதிலளிநீக்கு
  13. அய்யா வணக்கம் நான் திண்டுக்கல் வசிக்கிறேன் எனக்கு அச்சிடேன்ட் ஆகி 1வருடம் மேல ஆகிறது இது வரை 5ஆபரேஷன் மேல செய்து உள்ளேன் இன்னும் நடக்க முடியவில்லை ஏதேனும் சித்தவைத்தியம் மூலம் சரி செய்ய முடியுமா?? எனது போன் no 9843268948

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பி, எனக்கு சித்த வைத்தியத்தில் அனுபவம் இல்லை. எலும்பு முறிவுகளுக்கு நாட்டு வைத்தியம் செய்பவர்களிடம் முயற்சி செய்யவும்.

      நீக்கு