புதன், 1 ஏப்ரல், 2015

அக்ரி காலேஜ் ஆபீசர்ஸ் கிளப் - தொடர்ச்சி - 2

                                         
                                            Image result for சீட்டாட்டம்

எங்கள் கிளப்பில் ஒரு குறிப்பிட்ட சில அங்கத்தினர்கள் காசு வைத்து ரம்மி விளையாடுவார்கள். ஒரு பத்து பேர் இருக்கும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அல்லக்கைகள். மாலை 6 மணிக்கு ஜமா சேர்ந்து விடும். கிளப் மூடும் 9 மணி வரைக்கும் விளையாடுவார்கள். ஆட்ட சுவாரஸ்யத்தில் சில சமயம் நேரத்தைப் பற்றி கவலைப்படாமல் விளையாடுவார்கள். அவர்களை வெளியேற்றி கிளப்பை மூடுவதற்கு கிளப் பாய் படாதபாடு படவேண்டியிருக்கும்.

லீவு நாட்களில் கிளப் சட்ட திட்டங்கள் சற்று வளைக்கப்படும். பண்டிகை நாட்களில் இரவில் கிளப்பை மூடவே மாட்டார்கள். கச்சேரி விடிய விடிய கன ஜோராக நடக்கும். ஒரு தடவை வெள்ளிக்கிழமை 1 ம் தேதி. சம்பளநாள். அடுத்து சனிக்கிழமை ஏதோவொரு லீவு. அப்போதெல்லாம் வாரத்தில் ஆறு நாள் வேலை. ஞாயிற்றுக்கிழமை வார லீவு. திங்கட்கிழமை தீபாவளி லீவு.

என் நண்பன் ஒருவன் வெள்ளிக்கிழமை மாலை சம்பளம் மற்றும் தீபாவளி அட்வான்ஸ் (ஏறக்குறைய 300 ரூபாய் - 1960 களில் இது ஒரு பெரிய தொகை, இன்றைய மதிப்பில் ஒரு லட்சம் இருக்கலாம்) வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போகாமல் அப்படியே கிளப்புக்குப் போனான். தீபாவளி மற்றும் லீவு நாட்கள் என்பதால் கச்சேரி வெள்ளி இரவு, சனி பகல், சனி இரவு, ஞாயிறு பகல், ஞாயிறு இரவு, திங்கள் காலை வரையில் தொடர்ந்து நடந்து, திங்கள் காலை தீபாவளி கங்காஸ்நானம் செய்யவேண்டுமென்பதால் கலைந்தது.

என் நண்பனின் பர்சில் அப்படி கலைந்து போகும்போது ஒரு சில ரூபாய்கள் மட்டுமே இருந்தன. மறு நாள் இந்தச் செய்தி கல்லூரி முழுவதும் பரவிவிட்டது. ஏண்டா இப்படி செய்தாய் என்று நாங்கள் கேட்டதற்கு அவன் முரட்டுத்தனமாக, "அவரவர்கள் அவரவர்கள் வேலையைப் பாருங்கள்" என்று முகத்திலடித்தாற்போல் பதில் சொன்னான். நாங்கள் எல்லோரும் வாயை மூடிக்கொண்டோம். அவன் வருத்தம் அவனுக்கு.

இப்படி விடிய விடிய ஜமா நடக்கும்போது பசிக்குமல்லவா? அதற்கு அந்த ஆபீசர்ஸ் மெஸ் கான்ட்ராக்டர் ஸ்பெஷல் ஐட்டங்கள் அவ்வப்போது சூடாகத் தயார் பண்ணிக் கொடுப்பார். ஆடுபவர்கள் ஆட்டத்திலிருந்து பாதியில் எழுந்து வெளியில் போக முடியாதல்லவா? அதனால் சிறிய ஸ்டூல்கள் தயார் செய்து வைத்திருந்தார்கள். அதைப் பக்கத்தில் போட்டு அதில் அந்த தின்பண்டங்களை வைத்துக்கொண்டு சாப்பிடுவார்கள். இடது கையில் சீட்டுகள். வலது கையில் சாப்பிடுவது. ஒரு ஆட்டம் முடிந்து அடுத்த ரவுண்ட் சீட்டு போடும் இடைவெளியில் போய் கை கழுவி விட்டு வந்து விடுவார்கள். இப்படியாக ஆட்டம் தொய்வில்லாமல் நடக்கும்.

சீட்டாடுபவர்களைப் பற்றி ஒரு கதை கேள்விப் பட்டிருப்பீர்கள். அது சும்மா வேடிக்கைக்கு சொல்லப்படுவது என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள் ஆனால் இது நடக்கக்கூடிய சம்பவமே என்பதை சீட்டாட்டத்தில் பழகியவர்கள் அறிவார்கள்.

 கிராமத்தில் ஒருவன் கூட்டத்தோடு ஒரு வீட்டுத் திண்ணையில் சீட்டாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒருவன் வந்து அவனிடம் அவன் பெண்டாட்டி இறந்து விட்டதாகத் தெரிவித்தான். இவன் அப்படியா என்று கேட்டுவிட்டு, சரி, நான் உடனே வந்து என்ன செய்யப் போகிறேன்,  போய் அடக்கம் செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நான் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு திரும்பவும் சீட்டு விளையாட்டில் மூழ்கி விட்டான்.

கொஞ்ச நேரம் கழித்து அவன் திரும்பவும் வந்து எல்லாக் காரியங்களும் ஆகிவிட்டன, நீங்கள் வந்த பிறகு சவத்தைப் பாடையில் வைக்கலாமென்றிருக்கிறோம், வாருங்கள் என்றான். அதுக்கு நான் என்னத்துக்கு, பாடையிலே வச்சு சுடுகாட்டுக்கு இந்த வழியாகத்தானே போவீங்க, அப்ப நான் சேந்துக்கிறேன் என்று சொல்லி அவனை அனுப்பி விட்டான்.

கொஞ்ச நேரம் கழித்து சவ ஊர்வலம் அந்த வழியாக வந்தது. சரி. இத்தனையெல்லாம் செய்து விட்டீர்களல்லவா, இனி சுடுகாட்டுக்கு வந்து நான் என்ன செய்யப்போகிறேன், நீங்களே கொண்டு போய் அடக்கம் செய்து விடுங்கள் என்றானாம். எல்லோரும் அவனைக் காறித்துப்பி விட்டு சுடுகாட்டிற்குப் போனார்களாம்.

இது முற்றிலும் கற்பனையாக இருக்கலாம். ஆனால் இதில் நிறைய உண்மை இருக்கிறது. இதைப்பற்றி பின்னால் கூறுகிறேன்.

இந்த சீட்டாடும் குரூப் கொஞ்சம் கொஞ்சமாக அதிக ரவுஸ் விட ஆரம்பித்தார்கள். சத்தமாகச் சிரிப்பதும் பேசுவதுமாக கிளப்பை சந்தைக் கடை போல் ஆக்கி விட்டார்கள். எங்கள் தலைவர் பார்த்தார். இவன்களை இப்படியே விட்டால் கிளப்பை நாற அடிச்சு விடுவார்கள். ஏதாச்சும் பண்ணலாம் என்றார். நாங்கள் எல்லோரும் ஒத்துப் பாடினோம். நாங்கள் அதற்குத்தானே இருக்கிறோம்.

அடுத்த நாளே இவர்கள் ஆடிக்கொண்டிருக்கும் இடத்திற்குப் பக்கத்திலேயே எங்களுக்கும் ஒரு டேபிள் போட்டோம். நாங்கள் பத்துப் பேர். என்ன ஆட்டம் ஆடலாம் என்று யோசித்து கடைசியில் கழுதை ஆட்டம் ஆடலாம் என்று முடிவு பண்ணி ஆட ஆரம்பித்தோம்.  இந்த ஆட்டம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். யாரிடம் கடைசியில் நிறைய சீட்டு இருக்கிறதோ அவரே கழுதை.

ஒரு ஆட்டம் பத்துப் பதினைந்து நிமிடங்களில் முடிந்து விடும். ஆட்டம் நடக்கும்போதே அதைப்போடாதே, இதைப் போடாதே என்று அல்லக்கைகள் கூக்குரலிடும். ஆட்டம் முடிந்தவுடன் கழுதையானவனைப் பார்த்து ஒரே கத்தல்தான். நாங்கள் போடும் சத்தத்தைப் பார்த்து வழக்கமாக ஆடுபவர்கள் அரண்டு போனார்கள். ரோட்டில் போகிறவர்கள் எல்லாம் நின்று இங்கே என்ன அடிதடி என்று கேட்க ஆரம்பித்தார்கள். நிலவரம் கட்டுக்கடங்காமல் போனது.

கிளப் நிர்வாகம் தலையிட்டு பஞ்சாயத்து பண்ணினார்கள். எங்கள் தரப்பினரின் வாதம், முதலில் சத்தம் போட்டது அவர்கள்தான், அவர்களை அடக்குங்கள், நாங்களும் நிறுத்தி விடுகிறோம் என்றோம். ஒருவாறாக இரு தரப்பினரும் சமாதானமாகி, இனி விளையாடும்போது சத்தம் போடுவதில்லை என்ற ஒப்பந்தத்திற்கு வந்தோம்.

ஆனாலும் எங்கள் கழுதையாட்டம் தொடர்ந்தது. ஆறு மாதம் கழித்து இந்தக் கழுதையாட்டம் சலித்துப்போய்விட்டது. ஆகவே நாங்களும் ரம்மி ஆட ஆரம்பித்தோம். மிகவும் குறைவான தொகையையே பந்தயப்பணமாக வைத்தோம். ஒரு மாலை முழுவதும் ஆடித் தோற்றால் கூட நாலணாத்தான் நஷ்டமாகி இருக்கும். சீட்டு விளையாட வேண்டும் என்பதற்காகத்தான் ஆடினோமே தவிர பெரிதாக பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை.

ஆனாலும் இப்படி ஆறு மாதம் விளையாடிய பிறகு இந்தச் சீட்டாட்டம் என்னைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. மாலை 5 மணி ஆனாலே மனசுக்குள் ஒரு பதட்டம் வந்து விடும். உள்ளங்கையெல்லாம் அரிக்கும். மாலை 6 மணிக்கு எப்படியும் சீட்டாடப் போயே ஆகவேண்டும் என்ற உந்துதல் வந்து விடும்.

நாளாக நாளாக இந்த சீட்டாட்டம் ஒரு போதையாகி விட்டது. டவுனில் ஏதாவது வேலை இருந்தால் அதைத் தள்ளிப்போடுவேன். அல்லது முன்னாலேயே போய் அந்த வேலையைப் பார்த்து முடித்து விட்டு 6 மணிக்கு கிளப்பிற்கு வந்து விடுவேன். அப்போதுதான் அந்த பெண்டாட்டி செத்த கதை நிஜமாக இருந்தாலும் இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அப்போது எனக்கு கல்யாணம் ஆகியிருக்கவில்லை.

பிறகு கல்யாணம் ஆன பின்பும் கொஞ்ச நாள் இந்த சீட்டாட்டம் தொடர்ந்தது. சொந்தக்காரர்கள் என்னைப் பார்க்க கிளப்புக்கே வரத்தொடங்கினார்கள். அப்போது எனக்கு பதவி உயர்வு வந்தது. நான் குடியிருந்த குவார்ட்டர்ஸைக் காலி பண்ணவேண்டிய கட்டாயம். என் புது வேலைக்கான குவார்ட்டர்ஸ் காலி இல்லை.

அதனால் வெளியில் வீடு பார்த்து குடி போக வேண்டிய அவசியம் நேரிட்டது. இதனால் கிளப்பிற்கு வர முடியவில்லை. மெதுவாக கையரிப்புக் குறைந்தது. சீட்டாட்டத்தை அடியோடு மறந்தேன்.

என் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டது என்னவென்றால் சூதாட்டம் என்பது, சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் தனி மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் வலிமை கொண்டது. ஆனானப்பட்ட தர்ம ராஜாவின் கதையே ஒரு உதாரணம். இளைய சமுதாயம் இந்த வலையில் சிக்காமல் பாதுகாப்பது பெரியவர்களாகிய நம் கடமை.

21 கருத்துகள்:

  1. என் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டது என்னவென்றால் சூதாட்டம் என்பது, சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் தனி மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் வலிமை கொண்டது. ஆனானப்பட்ட தர்ம ராஜாவின் கதையே ஒரு உதாரணம். இளைய சமுதாயம் இந்த வலையில் சிக்காமல் பாதுகாப்பது பெரியவர்களாகிய நம் கடமை. = நிஜம் தான். அருமை சார்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல கருத்து. எங்கள் வீட்டில் எல்லோரும் சீட்டாடுவார்கள். இப்போது கௌதமன் சென்னை வந்தால் கொண்டாட்டம்தான் 56 ஆடுவார்கள். நான் சீட்டாட்டம் கற்றுக் கொள்ளவில்லை. நல்லதுக்குத்தான்!

    பதிலளிநீக்கு
  3. சீட்டு ஆடி செல்வத்தையும் வாழ்க்கையையும் தொலைத்தவர்கள் பற்றி நான் அறிவேன். எப்போது விளையாட்டு சூதாட்டமாக மாறுகிறதோ அப்போதே அழிவு ஆரம்பமாகிவிடும். நல்ல வேளை உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்து வேறு இடத்திற்கு குடி போய் விட்டதால் தப்பித்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஐயா

    நீங்கள் கத்தலை அடக்கக் கைகொண்ட யுக்தி தீ அணைக்க தீ பயன்படுத்தவது போன்றது. காட்டு தீ அணைக்க எதிர்வசம் தீ உண்டாக்கி விடுவார்கள். இரண்டு பக்கம் தீயும் ஒன்று சேரும்போது எரிக்க ஒன்றும் இல்லாமையால் அணைந்து விடும். நல்ல ஐடியா மன்னர் தான் நீங்க.

    நானும் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ரம்மி ஆடினவன். பாயிண்டுக்கு ஒரு பைசா. இதற்க்கு என்றே தனி அக்கௌன்ட் நோட் போட்டு அவரவர் கணக்கில் பிளஸ் மைனஸ் வைத்து கடைசியில் ஒன்றாம் தேதி கணக்கை முடிப்போம். சராசரியாக எனக்கு மாதம் 5Rs நஷ்டமாகும். பின்னர் எனக்கு டிரான்ஸ்பர் கணினி துறையில் போட்டதால் சீட்டு ஆட்டம் தீர்ந்தது.


    --
    Jayakumar


    பதிலளிநீக்கு
  5. இந்த சீட்டாட்டம் ஒரு போதைதான் என்று அதில் மாட்டிக்கொண்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். நான் வேலையில் சேர்ந்த போது தங்கும் விடுதியில் நண்பர்கள் அனைவரும் ஞாயிற்றுகிழமை ஆனால் போதும் சீட்டு விளையாட ஆரம்பித்து விடுவார்கள். என் உறவினர் ஒருவர் இந்த மாதிரி சீட்டாட்டத்தில் சிக்கி திண்டாடி கடைசியில் வீடு வாசலை எல்லாம் விர கதையை பார்த்ததால் நான் வேலைக்கு சேரும் போது என் தாய் உயிரே போனாலும் நான் சீட்டாடக்கூடாது என்று சத்திய வாக்கு வாங்கிகொண்டதால் என்னால் இந்த தங்கும் விடுதியில் நடக்கும் சீட்டாட்டத்தில் பங்கு கொள்ள முடியவில்லை. தன்னந்தனி ஆளாக என்ன செய்ய முடியும். எனவே நான் எல்லா நண்பர்களுக்கும் ஸ்கோர் எழுத ஆரம்பித்தேன். இப்படியாக அம்மாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டேன். ஆனால் முப்பது வருடங்கள் கழித்து இன்றைக்கும் நண்பர்கள் யாராவது என்னை பார்த்தால் நோட் புக் எங்கே பேனா எங்கே இன்றைக்கு ஸ்கோர் எழுதவில்லையா என்று கிண்டல் செய்வார்கள்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  6. //இளைய சமுதாயம் இந்த வலையில் சிக்காமல் பாதுகாப்பது பெரியவர்களாகிய நம் கடமை.//

    இந்த சீட்டாட்டமாவது காசோடு போகும். ஆனால் அரசு நடத்தும் டாஸ்மாக் காசுடன் உடம்பையும் அல்லவா கெடுத்துக்கொண்டிருக்கிரது. யார் இதை தடுத்து நிறுத்த முடியும் என்று தெரியவில்லை.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  7. //இளைய சமுதாயம் இந்த வலையில் சிக்காமல் பாதுகாப்பது பெரியவர்களாகிய நம் கடமை.//

    இந்த சீட்டாட்டமாவது காசோடு போகும். ஆனால் அரசு நடத்தும் டாஸ்மாக் காசுடன் உடம்பையும் அல்லவா கெடுத்துக்கொண்டிருக்கிரது. யார் இதை தடுத்து நிறுத்த முடியும் என்று தெரியவில்லை.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  8. நான் அப்போது வேலை விஷயமாக போபால் போயிருந்தேன். கூடவே ஒரு சக அதிகாரி. மாலை அதிகாரிகளின் கிளப்புக்குப் போனோம். அங்கு சீட்டு ஜமா நடந்துகொண்டிருந்தது/ சக அதிகாரி சீட்டாடும் பழக்கம் உள்ளவர். அறிமுகப் படுத்திக் கொண்டு சீட்டாடத்தொடங்கினார். அன்று அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. கொஞ்ச்ம் கொஞ்சமாகத் தோற்றுக் கொண்டுவந்தவர் ஒரு சமயம் பணம் இல்லாமல் என்னிடம் கேட்டார். அதுதான் நல்ல சமயமென்று தெரிந்து பணம் கொடுக்காமல் அவரைக்கூட்டி வந்தேன். என்னுடன் கோபித்துக் கொண்டு நாங்கள் பணி நிமித்தம் சென்ற வேலை முடியும் வரை என்னுடன் பேசவில்லை. சீட்டாட்டம் ஒரு நட்பை முறிக்கக் காரணமாக இருந்தது. மஹாபாரதம் படித்தவர்கள் சூதாட்டத்தின் விளைவுகளைத் தெரிந்து கொண்டிருப்பார்கள். நல்ல பதிவு. நல்ல அறிவுரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய ஒரு நட்பும் சீட்டாடப் பணம் கொடுக்கு மறுத்ததினால் முறிந்து போயிற்று.

      சீட்டாடப் பணம் கேட்பவர்கள் என்ன பொய்க் காரணம் வேண்டுமானாலும் சொல்வார்கள், பெண்டாட்டி செத்து விட்டாள் என்று கூடச் சொல்லத் தயங்கமாட்டார்கள்.

      நீக்கு
  9. THIS IS A REVISED COMMENT [THE OLD ONE NEED NOT BE PUBLISHED]

    தாங்கள் இங்கு சொல்லியிருப்பது எல்லாமே மிக அருமை.

    என்னால் அனைத்தையும் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.

    ஏனெனில் நானும் இந்த போதைக்கு ஒரு காலத்தில் என் இளமைப்பருவத்தில் அதுவும் ஒருசில ஆண்டுகள் மட்டுமே அடிமையாகிப்போனவனே.

    அப்போதெல்லாம் வேறு எந்தப் பொழுது போக்குமே கிடையாது. T.V., Cell Phone, Internet போன்ற எதுவுமே கிடையாது. ரேடியோ, டெலிஃபோன் போன்றவைகள் கூட இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒருசில செல்வந்தர் வீடுகளில் மட்டுமே இருந்த காலம் அது.

    என் வீட்டுக்குள் ஆண்கள் பெண்கள் என அனைவருமே சீட்டு விளையாடுவோம். மரியாதை நிமித்தமாக மட்டும், சில குறிப்பிட்ட ஆண்கள் ஆடும் போது மட்டும், சில குறிப்பிட்ட பெண்கள் கலந்துகொள்ள மாட்டார்கள்.

    3 கட்டு சீட்டுக்களுடன் ரம்மி, ஒரு கட்டு சீட்டுக்களுடன் ஆஸ் விளையாட்டு தவிர மெயில் என்ற விளையாட்டும் ஒன்று உண்டு. ஒரே ஒரு சீட்டுக்கட்டில் ஜோக்கர்களை நீக்கிவிட்டு, கட்டாயமாக 5 பேர்கள் கூடி ஆளுக்கு 10 சீட்டு வீதம் போட்டு, மீதி இரண்டு சீட்டில் ஒன்றை ஓபனாகவும் ஒன்றை மூடி தெரியாத படியாகவும் போட்டுக்கொண்டு விளையாடுவது. அதில் படு ஸ்பீடாக மெயில் [ரயில்] வேகத்தில், ஒரு சீட்டைக் கீழே நிமிர்த்தியோ அல்லது கவிழ்த்தோ போட்டுவிட்டு, அதன் பிறகே, கீழேயுள்ள ஒரு சீட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல பொழுதுபோக்காகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும்.

    ஸ்டோர் வாழ்க்கையில் 1960-1970 பொதுக் கிணற்றடி அருகே பொதுவாக ஓர் இடம் உண்டு. ஒரு 25 வாட் பல்பு மங்கலாக எரிந்துகொண்டு இருக்கும். அதன் கீழ் சுமார் 10 பேர்கள் கூடி பெரிய ஜமக்காளத்தை விரித்து, மூன்று சீட்டுக்கட்டுகளுடன் விடிய விடிய ஆடிக்கொண்டு இருப்பார்கள். நாக்-அவுட் 320 பாயிண்ட்ஸ்களுக்கு நாலணா [25 பைசா] என வைத்து ஆடுவார்கள். அதில் பாதிபேர்கள் சீட்டு சரியில்லை என்றால் ’ஸ்கூட்’ எனச் சொல்லி ஒதிங்கிக்கொள்வார்கள். அவர்களுக்கு மினிமம் 24 பாயிண்ட்ஸ் ஏறும். மீதி 4-5 பேர்கள் மட்டுமே ஆடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்கம் கொடுக்க சிலர் அருகே அமர்ந்திருப்பார்கள். சமயத்தில் கூச்சல் குழப்பம் ஏற்படும். அவர்களுக்குள் தகராறுகளும் வருவது உண்டு.

    அந்த நாட்களில், காசு வைத்து சீட்டு ஆடுவது குற்றம் என்ற சட்டம் உண்டு என்பதால் ஒரு நாள் வேறு யாரோ ஒரு குடியிருப்புவாசி ரகசியமாக போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்து விட்டதால், எல்லோரையும் அள்ளிக்கொண்டு போய் விட்டார்கள். நல்ல வேளை நான் அன்று அதில் கலந்துகொள்ளவோ, வேடிக்கை பார்க்கவோ செல்லாமல் வீட்டுக்குள் இருந்துவிட்டேன்.

    இந்த சம்பவத்திற்குப்பின் அவர்கள் விளையாடுவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விட்டது.

    //என் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டது என்னவென்றால் சூதாட்டம் என்பது, சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் தனி மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் வலிமை கொண்டது. //

    தாங்கள் சொல்வது 100% உண்மை.

    தாங்கள் சொல்லியுள்ளது ஏற்கனவே கேட்ட கதைதான் என்றாலும், தங்கள் மூலம் மீண்டும் கேட்டதில் மகிழ்ச்சி.

    மிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. தங்களது சொந்த அனுபவத்திலிருந்து ஒரு நல்ல அறிவுரையை இந்தத் தலைமுறையினருக்குக் கொடுத்திருக்கின்றீர்கள். அவசியாமான பதிவு.

    (கீதா: எங்கள் வீட்டில் நாங்கள் சிறியவர்கள், பெரியவர்கள் இப்போதும் கூட ஆடுவதுண்டு. ஆனால் சீரியஸாக இல்லை, சும்மா ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு....ஒரு மூன்று ரவுண்டு போவதற்குள் போரடித்து விடும் யாருக்கேனும் உடன் கலைந்துவிடும்....மாமனார் உயிருடன் இருந்தவரை நினைவுடன் இருந்தவரை கோடை விடுமுறையில் பேரன் பேத்திகள் எல்லோரும் இங்கு சென்னையில் அவரது வீட்டில் கூடினால் மாமனார், குழந்தைகள், மருமகள்களில் நானும், மற்றொருவரும், பின்னர் பையன் கள் என்று ஜாலியாகப் போகும். அது 5, 6 ரவுண்டு தான்...பின்னர் குழந்தைகளுக்குள் தோற்றலில் (கழுதையானால்) அழுகை வரும் உடனே கேரம் போர்ட் என்று கேம் மாறிவிடும்....இது சீரியசாக விளையாடததால் ஒரு விதத்தில் எல்லோரும் கூடி இருப்பதற்கான ஒரு வாய்ப்பைக் கொடுத்ததோ என்று தோன்றுகின்றது. இப்போது மாமனாரும் இல்லை, குழந்தைகள் அனைவரும் பெரியவர்களாகி ப்ரொஃபஷனல்ஸ் ஆகிவிட்டார்கள். எனவே எல்லோரும் கூடும் இந்த நல்ல தருணங்கள் என்பதே இல்லாமல் ஆகிவிட்டது. தனித் தனித் தீவுகளாகி.....)

    பதிலளிநீக்கு
  11. நல்ல வேலை அய்யா நீங்கள் தப்பித்தீர்கள். பதவி உயர்வும் வீடு மாற்றமும் உங்களை நல்ல பாதைக்கு திருப்பியிருக்கிறது.
    நல்ல பதிவு.
    த ம 6

    பதிலளிநீக்கு
  12. முடிவில் சிறந்ததொரு அறிவுரையை கொடுத்தமைக்கு நன்றி ஐயா.
    தமிழ் மணத்தில் நுளைக்க 7

    பதிலளிநீக்கு
  13. ஒரு நல்ல அறிவுரையை இந்தத் தலைமுறையினருக்குக் கொடுத்திருக்கின்றீர்கள்.
    நன்றி ஐயா
    தம+1

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள அய்யா,

    சீட்டாட்டம்... நல்ல அனுபவப் பதிவு. சீட்டாடுபவர்களைப் பற்றி ஒரு கதை... சூது கவ்வும்... உண்மைதான்.

    என்னுடைய பெரியப்பா சீட்டாடிக்கொண்டே இருப்பார். ஊர் நாட்டாண்மையாக இருந்தார். பணமும்...பொழுதும் வீணாகிறது... சீட்டை விட முடியாமல் ... இனி இதைக் தொடக்கூடாது என்று தன்னுடைய கட்டை விரலை வெட்டிக்கொண்டார்!

    முதலில் பொழுது போக்கிற்காக விளையாட ஆரம்பித்து... பிறகு காசு... பணம் வைத்து விளையாடி... இரவு பகல் வீணாகி... சீட்டாட்டமும் ஒரு வகையான போதைதான்.

    நன்றி.
    த.ம. 9.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற போதைகளுக்கு வைத்தியம் உண்டு. ஆனால் சீட்டாட்டப் போதைக்கு வைத்தியம் இல்லை. அவரவர் விதியில் எழுதியிருந்தால ஒழிய அவர்களுக்கு விமோசனம் கிடைக்காது.

      நீக்கு
  15. தில்லியில் இந்த சீட்டாடும் பழக்கம் பொதுவாக பலருக்கும் உண்டு. சீப் என்று பெயர் சொல்வார்கள் - பல சமயங்களில் சண்டைகளும் சச்சரவுகளும் உண்டாகும். நண்பர் ஒருவர் தனது கதையைச் சொன்னது நினைவுக்கு வருகிறது. கிராமத்தில் பகல் முழுவதும் இப்படி உட்கார்ந்து விளையாடி, மாலை/இரவு வீடு திரும்பினாராம். இரவு பன்னிரெண்டு மணிக்கு யாரோ கதவு தட்டும் சப்தம் கேட்க, வெளியில் சென்று பார்த்தால் இவருடன் சீட்டு விளையாடிய ஒருவர் நின்று கொண்டிருக்கிறார் - என்ன என்று கேட்க, அவர் சொன்னாராம் - “என்ன இருந்தாலும் நீ விளையாடியது தப்பு - நீ ராணியை கீழே போட்டதனால் தான் நான் தோற்றேன்!” என்று! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீட்டாடும் போதை எந்த ஆளவிக்குப் போகிறது பார்த்தீர்களா? நல்ல காலம், நான் இதிலிருந்து சீக்கிரத்தில் விடுபட்டு விட்டேன்.

      நீக்கு
  16. எங்கள் ஊர் குளக்கரை மரத்தடியில் சிறியவர் பெரியவர் பேதமில்லாமல் குடியுடன் சீட்டாட்டமும் தொடர்கிறது. நிறைய பெண்கள் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்! ஆனாலும் தொடர்கிறது. நீங்கள் சொல்வது போல இது ஒரு போதை! மீண்டுவர தைரியம் மட்டுமல்ல உறுதியும் வேண்டும்!

    பதிலளிநீக்கு