(சில பேர் தலைப்பு தப்பு, சரியான தலைப்பு “ஆணி புடுங்க சேர்ந்த கதை” ன்னு இருக்கவேண்டும் என்கிறார்கள். ஆனா நான் கடலை புடுங்கத்தான் போனேன். எது சரின்னு எனக்குத்தெரியலீங்க. நீங்களே முடிவு பண்ணிக்கோங்க)
திறந்து பார்த்தால், விவசாய இலாக்கா இயக்குனரிடமிருந்து வேலை நியமன உத்திரவு. இந்த மாதிரி கவர்மெண்ட்டு ஆர்டர்களை நான் முந்தி பிந்தி பாத்ததில்லை. ஒண்ணும் சரியா புரியலே. நாலுபேருகிட்ட காண்பித்த பிறகுதான் முழு விவரமும் புரிஞ்சது. இன்னும் 15 நாட்களுக்குள் ஆனைமலை நிலக்கடலை ஆராய்ச்சிப்பண்ணையில் “நிலக்கடலை ஆராய்ச்சி உதவியாளர்” பதவியில் சேரவேண்டும் என்று அந்த ஆர்டரில் குறிப்பிட்டிருந்தது.
வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம். எனக்கும் நாமும் சம்பாதிக்கப்போகிறோம் என்ற சந்தோஷம் இருந்தது. என்ன, கோயமுத்தூர் சர்வே வேலை கொஞ்சம் பாக்கி. சரி, வேலையில் சேர்ந்து விடவேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். இதில்தான் ஒரு சிக்கல் வந்தது. ஆனைமலை எங்கு இருக்கிறதென்பதில் குழப்பம். அது மலைமேல் இருக்கிறது என்று சிலரும், இல்லை இல்லை, அது சமவெளியில் உள்ள ஒரு ஊர்தான் என்று சிலரும் குழப்பினார்கள்.
சரி, எதற்கும் விவசாய காலேஜிலேயே விசாரித்து விடுவோம் என்று காலேஜுக்கே போனேன். அன்று பார்த்து, ஆனைமலையில் நான் வேலைக்கு ரிப்போர்ட் பண்ண வேண்டிய ஆபீசரே வந்திருந்தார். என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர் ஆனைமலைக்கு வரும் வழியெல்லாம் சொல்லி, சேரவேண்டிய கடைசி நாளன்று வந்தால் போதும் என்று சொன்னார். சரி என்று வீட்டுக்கு வந்தேன். சேரவேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 16 ம் தேதி (1956 ம் வருடம்).
பொள்ளாச்சியில் எனக்கு ஒரு மாமா இருந்தார். அவர் ஏபிடி பஸ் சர்வீசில் கோவை-பொள்ளாச்சி ரூட்டில் டிரைவராக இருந்தார். அதனால் போகும்போது அவரைப்பிடித்துக் கொள்ளலாம் என்று முடிவு ஆகியது. போய் அங்கே தங்குவதற்கு தேவையான தளவாடங்கள் தயார் செய்தேன். ஒரு ஜமக்காளம், ஒரு தலையணை, ஒரு பெட்ஷீட், இருக்கிற சட்டை பேண்ட்டுகள் (போட்டிருந்தது தவிர மூன்று செட்டுகள்), துண்டு, வேட்டி, சோப்பு, சீப்பு, இத்தியாதிகள். இதையெல்லாம் போட்டு எடுத்துக்கொண்டு போக “ஆளவந்தார்” பெட்டி சைசில் ஒரு தகரப்பெட்டி. புதுசாய் வாங்கினோம்.
அதென்ன ஆளவந்தார் பெட்டி என்கிறீர்களா? 1940க்கு முன் பிறந்தவர்களுக்கு ஆளவந்தார் கொலைக் கேஸைப்பற்றி நன்கு தெரிந்திருக்கும். அந்தக்காலத்தில் (1952) ல் மிகப்பிரபலமான கேஸ். (இப்போதைய நித்தி கேஸ் மாதிரி). என்ன, நித்தி கேஸ் பத்து நாளில் பிசுபிசுத்துப் போய்விட்டது. ஆளவந்தார் கேஸ் ஏறக்குறைய ஒரு வருடம் நடந்தது. 200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். கோர்ட்டு விசாரணை விபரங்கள் தினத்தந்தியில் இரண்டு முழு பக்கங்கள் வெளியாகும். கொஞ்சம் நேரங்கழித்து கடைக்குப்போனால் காப்பி தீர்ந்து விடும். சுஜாதாவின் துப்பறியும் நாவலுக்கு சற்றும் குறையாத விறுவிறுப்புடன் செய்திகள் வெளியாயின. அந்தக்காலத்தில் இரண்டு பேர் சந்தித்தால் முதலில் பேசுவது ஆளவந்தார் கொலைக் கேஸைப்பற்றித்தான்.
அந்தக்கேஸில் பிரபலமானது ஒரு டிரங்க் பெட்டி. அது மாதிரி ஒரு பெட்டியைத்தான் நான் வாங்கினேன்.
ஆளவந்தார் கேஸ் என்னவென்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலுடன் இருப்பீர்கள். இரண்டு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்.