புதன், 29 பிப்ரவரி, 2012

செயல் திட்டம் (புராஜெக்ட் வொர்க்) என்றால் என்ன?


நேற்று நடைப் பயிற்சிக்காக போகும்போது தெரு முனையில் ஒரு பது விளம்பரத்தைப் பார்த்தேன். Final Year Projects இங்கே கிடைக்கும் என்று எழுதியிருந்தது. என்னவென்று விசாரித்தேன். அந்த விசாரணையில் தெரிய வந்ததை உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்.

இப்போதுள்ள பாடத்திட்டங்களின்படி ஏறக்குறைய எல்லா தொழில் நுட்பப் படிப்புகளுக்கும் அந்தப் படிப்பின் கடைசி வருடத்தில் ஒரு புராஜெக்ட் வேலை கொடுத்து அதை முடித்து வருமாறு சொல்வார்கள். முன்பெல்லாம் இது முதுகலைப் பட்டப் படிப்புகளுக்குத்தான் இருந்தது. அதை தீஸிஸ் சமர்ப்பித்தல் என்று சொல்லுவார்கள்.

அந்த தீஸிஸ் வேலை என்றால் என்னவென்றால், ஒவ்வொரு மாணவனும் ஒரு ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக சமர்ப்பிக்க வேண்டும். இதை ஒரு ஆய்வாளர் பரிசீலித்து, படிக்கும் படிப்புக்கு ஏற்றதாக இருக்கிறது என்றால்தான் அந்த மாணவனுக்கு அந்தப் பட்டம் கிடைக்கும். இந்த தீஸிஸ் வேலையில் அந்த மாணவனை வழி நடத்த ஒரு அனுபவம் உள்ள ஆசிரியரை வழிகாட்டியாக நியமிப்பார்கள். அவர் அந்த மாணவர் எழுதும் தீஸிஸ் அவராகவே புள்ளிவிபரங்கள் சேகரித்து அவராலேயே எழுதப்பட்டது என்று சான்று கொடுக்கவேண்டும். அப்போதுதான் அந்த தீஸிஸ் முழுமையானதாகக் கருதப்படும்.

இந்த வேலை எதற்காக என்றால், ஒரு முதுகலைப் பட்டப்படிப்பு படித்த மாணவனிடம் ஒரு வேலை கொடுத்தால், அந்த வேலையை எவ்வாறு திட்டமிட்டு, அதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரித்து அந்த வேலையை முடித்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்கும் திறமையை வளர்ப்பதற்காகத்தான். அப்போதுதான் அவன் எந்த வேலையில் சேர்ந்தாலும் தன்னம்பிக்கையுடன் அந்த வேலையைச் செய்வான்.
நமது கல்வித் திட்டங்களில் மாற்றங்கள் அவ்வப்போது கொண்டு வருவார்கள். அது எதற்காக என்றால் அப்போதுதான் நமது மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்குமாம். இந்த மாற்றங்களில் எல்லா வித தொழில் படிப்புகளுக்கும் இந்த செயல் திட்டத்தை கட்டாயமாக்கினார்கள். நல்ல, உயரிய நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட மாற்றம்தான் இது.

ஆனால் கால ஓட்டத்திலே இந்த முறை சீரழிந்து, வெறும் சடங்காக மாறிவிட்டது. இது மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயமாக தற்போது இருக்கிறது. ஒவ்வொரு கல்லூரிக்குப் பக்கத்திலும் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டர்கள் இந்த செயல்திட்ட அறிக்கையை ரெடிமேடாக தயார் செய்து ஒரு விலை போட்டு கொடுக்கிறார்கள். மாணவர்களும் அதை வாங்கி அப்படியே கல்லூரியில் கொடுத்து விடுகிறார்கள். அவர்களை மேற்பார்வை பார்க்கும் ஆசிரியர்களும் சான்று கொடுத்து விடுகிறார்கள்.  

ஆக மொத்தம் செயல் திட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதில்லை. காலத்தின் மாற்றத்தினால் ஏற்படும் சீரழிவு இது. எங்களைப் போல் வாழ்வின் இறுதியில் இருக்கும் ஆசிரியர்கள் புலம்பத்தான் முடியும்!




7 கருத்துகள்:

  1. ஆக மொத்தம் செயல் திட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதில்லை. காலத்தின் மாற்றத்தினால் ஏற்படும் சீரழிவு இது.

    அந்த மாணவனை நம்பி ஒப்படைக்கப் படும் பொறுப்பை எண்ணிப்பார்த்தால்தான் மனம் திகைக்கிறது.....

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் சார். எல்லாமே வியாபாரமாகி விட்ட நிலையில் இதுவும் வியாபாரமாகி விட்டது. இதில் பல மாணவர்கள் ஏமாற்றப்படவும் செய்கிறார்கள். கல்லூரிகள் தகுந்த நடவடிக்கையில் ஈடுபட்டால் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும்.

    பதிலளிநீக்கு
  3. ஒரு சில விரிவுரையாளர்கள் தான் இதற்கு காரணமும் கூட.நான் கல்லூரி படிக்கும் போது "project" செய்ய மிக ஆவலாய் இருந்தது..அதற்காக நான் கொடுத்த ப்ராஜெக்ட் நிராகரிக்கப்பட்டது . காரணம் - IEEE ப்ராஜெக்ட் தான் பண்ண வேண்டுமாம்..வேறு ஒருவர் முன்னரே செய்து விட்டதை நாம் ஏன் திரும்ப செய்ய வேண்டும்??.. விருப்பமே இல்லாமல் ஒரு டைட்டில் யை தேர்வு செய்து வெளியில் வாங்கி கொண்டு வந்து வைத்தேன்.

    பதிலளிநீக்கு
  4. முற்றிலும் உண்மை தான்! எத்தனையோ மாற்றங்களின் மூலத்தினை மறந்து விட்டு சடங்காக பாவிக்கும் மனநிலை தான் உள்ளது. தனியார் கல்லூரிகளிலோ தங்கள் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டில் தான் குறியாக உள்ளனரே தவிர அவர்களின் அறிதல் புரிதல்களில் அல்ல என்பது கசப்பான உண்மை!

    பதிலளிநீக்கு
  5. ஐயா நானும் கல்லூரி இறுதி ஆண்டு மாணவன் தான்...பிராஜெக்டை கடைகளில் கொடுத்து செய்ய கோரும் மாணவர்களில் நானும் ஒருவன், இந்த நிலை மாற வேண்டும் என்றால் தொழில் படிப்புகள் தொழில் படிப்புகளாக சொல்லித்தரப்பட வேண்டும்.தொழில் கல்வி,கல்வித்தொழிலாக மாறியதன் விளைவு தான் இது.என் பிராஜெக்டை சொந்தமாக நானே செய்ய எனக்கு ஆசை தான் ஆனால் அதற்கான உதவிகளும்,அறிவும் கல்லூரியில் கிடைப்பதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மாதிரி முயற்சியும் ஆசையும் உள்ள மாணவர்களுக்கு ஆதரவு இல்லை என்கிறபோது மனது வேதனையடைகிறது.

      நீக்கு
  6. உங்களது இந்தப் பதிவு என்னை எங்கோ இழுத்துச் செல்கிறது. அது ஒரு பதிவுக்கான செய்தி. பின்னூட்டமாக எழுதினால் நீண்டு பொக்கும். கூடிய விரைவில் பகிர்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு