செவ்வாய், 13 மார்ச், 2012

இட்லி சாப்பிடுவது எப்படி?


என்னய்யா இது? தமிழ் நாட்டுல பொறந்தவனுக்கு இட்லி கூட சாப்பிடத் தெரியாதா? இதுக்கு ஒரு பதிவான்னு கேக்கறவங்கவெல்லாம் கொஞ்சம் தள்ளி நில்லுங்க. உண்மையில் இட்லியை முழுவதுமாக அனுபவித்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களெல்லாம் முன்னால வாங்க.

நான் சொல்றத கவனமாக் கேட்டுக்குங்க.

மொதல்ல மாலை நேரத்தில் இட்லி மாவை ஆட்டுக்கல்லில் ஊறவைத்த அரிசியையும், உளுந்துப்பருப்பையும், கையால் ஆட்டி மண் சட்டியில் எடுத்து வைக்கவும். மறுநாள் காலையில் அதை இட்லியாக சுடவும். இட்லி சுடுவதற்கு மண் பானைதான் பயன்படுத்தவேண்டும். இந்த டெக்னிக் தெரியாதவர்கள் 80 வயதுக்கு மேல் உயிருடன் இருக்கும் பாட்டிமார்களை அணுகித் தெரிந்து கொள்ளவும்.

நல்ல முற்றின தேங்காயாக எடுத்துக்கொண்டு அதைச் சிதறி, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், உப்பு, புளி, இஞ்சி, கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து ஆட்டுக்கல்லில் நன்றாக அரைக்கவும். இப்போது தேங்காய்ச் சட்னி தயார். அதில் கடுகு, உளுத்தம்பருப்பை நல்லெண்ணையில் தாளித்துக்கொட்டவும்.

ஒரு அரை லிட்டர் துவரம்பருப்பு வேகவைத்து சின்னவெங்காயம் நிறைய சேர்த்து சாம்பார் வைத்துக்கொள்ளவும்.

வீட்டில் பக்குவமாகத் தயார் செய்த இட்லிப்பொடி ஒரு 200 கிராம் எடுத்து தேவையான செக்கில் ஆட்டிய நல்லெண்ணை விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அதே (செக்கில் ஆட்டிய)  நல்லெண்ணை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது அப்போதுதான் சுட்ட சூடான இட்லி நான்கை ஒரு தட்டில் போட்டுக்கொள்ளவும். இரண்டு இட்லியின் மேல் இரண்டிரண்டு ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றவும். அந்த இட்லிகளை பிய்த்து சட்னியில் முக்கி வாயில் போட்டு மென்று சாப்பிடவும். ருசியை அனுபவிக்கவும்.

மீதி இருக்கும் இரண்டு இட்லிகள் முங்கும் அளவிற்கு சாம்பார் ஊற்றவும். குழி பிளேட்டாயிருந்தால் உத்தமம். ஒரு ஸ்பூன் உபயோகப்படுத்தி அந்த இரண்டு இட்லியையும் சாம்பாருடன் கலக்கி சாப்பிடவும்.

இப்போது ஒரு இட்லி மிச்சம் இருக்கும். அது இட்லிப்பானையின் அடித்தட்டில் வெந்த இட்லி. அதற்கு இட்லிப்பொடியைத் தொட்டுக்கொண்டு சாப்பிடவும்.

இதுதான் முதல் ரவுண்டு. குறைந்தது மூன்று ரவுண்டாவது சாப்பிட்டால்தான் இட்லி சாப்பிட்டதன் பலன் தெரியும்.


29 கருத்துகள்:

  1. படிக்கும்போதே சாப்பிட்டதுபோல இருக்கிறது...

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு
  2. "புளி, இஞ்சி, கருவேப்பிலை, மல்லித்தழை " சேர்த்தால் தேங்காய்ச் சட்டினியாக இருக்காதே!
    டிஃபன் சாம்பார் செய்வது எப்படி என்றும் சொல்லியிருக்கலாமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் கொஞ்சம் கொஞ்சம்தான் சேர்க்கணும்.

      சாம்பார் வைப்பது பெரிய கலை. தனிப்பதிவு போடுகிறேன்.

      நீக்கு
  3. ஒரு அரை லிட்டர் துவரம்பருப்பு வேகவைத்து
    >>>>
    எங்க ஊருலலாம் துவரம்பருப்பு லிட்டர்ல தராம கிலொஒகிராம் கணக்கில்தான் தருவாங்க. வாட் ஐ டூ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கிலோ பருப்பு வாங்கி வீட்ல லிட்டர் படி இருக்கும். அதில அளந்து போடுங்க. தெரியலைன்னா ஒரு போன் போடுங்க, இங்கதானே இருக்கேன், ஒரு நடை வந்து சொல்லிக்கொடுக்கிறேன். பிளேன் சார்ஜ் மட்டும் கொடுத்தாப்போதும.

      நீக்கு
    2. என்னது? சென்னிமலைல ஏர்போர்ட் இருக்கா?
      #டவுட்டு...

      நீக்கு
    3. பிளேன் சார்ஜ் கொடுக்கறதுக்கும் ஏர்போர்ட்டுக்கும் என்னங்க சம்பந்தம்? ஒஹோ, நீங்க கவர்ன்மென்ட்டில வேலை பாத்தது இல்லையோ? அதனாலதான் இந்த நுணுக்கமெல்லாம் தெரியல.

      நீக்கு
  4. ரசனையோடு சாப்பிடுவதில் தமிழர்களை யாராலும் அடிக்க முடியாது. எனக்கு முறையாக இட்லி சாப்பிட சொல்லிகொடுத்த அய்யாவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. இட்லியை வாழை இலையில் சூடாக வைத்துக்கொண்டு நல்லணெய் (அக்மார்க்), தேங்காய் சட்னி, வெங்காய சாம்பார், மிளகாய் பொடி.....அப்புறம் தக்காளி சட்னி, வெங்காய சட்னி என்று எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டு கடைசியில் ஒரு இட்லியின் மேலே கட்டி தயிரையும் சிறிது விட்டு அதையும் கபளீகரம் செய்த பின்னர், கடைசியில் சூடாக ஒரு டம்ளர் பில்டர் காப்பி ................ இட்லியும் பில்டர் காப்பியும் காதலனும் காதலியும் போல. ரெண்டும் சேர்ந்தால் ஒரே ஜாலிதான்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல முற்றின தேங்காயாக எடுத்துக்கொண்டு அதைச் சிதறி, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், உப்பு, புளி, இஞ்சி, கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து ஆட்டுக்கல்லில் நன்றாக அரைக்கவும். இப்போது தேங்காய்ச் சட்னி தயார். அதில் கடுகு, உளுத்தம்பருப்பை நல்லெண்ணையில் தாளித்துக்கொட்டவும்.
    //
    எல்லாம் கொட்டிட்டேன்... இப்ப
    வாங்கி வைத்த கோழியை எங்க கொட்டனும்னு சொல்லவேயில்லையே சார்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கூர்லைன்னா வீதில கொட்டுவோம். உங்க ஊர் சட்டமெல்லாம் எனக்குத்தெரியல. கண்ட எடத்துல கொட்டி மாட்டிக்காதீங்க.

      நீக்கு
  7. இட்லி பிளஸ் இஞ்சி சட்னி சூப்பரா இருக்கும்
    நாகு
    www.tngovernmentjobs.in

    பதிலளிநீக்கு
  8. ஆஹா, பதிவைப் படிக்கும் போதே சாப்பிட்ட உணர்வு வந்திச்சு! உணவைச் சமைப்பது பெரிய விஷயம் அல்ல! அதை முறைப்படி சாப்பிடவும் கத்துக்கணும்கறத உங்க பதிவு உணர்த்தியிருக்கு சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க, யார் வேணும்னா இட்லி சுட்டுடலாங்க, ஆனா அதை வகையா சாப்பிடத் தெரியணுமுங்க.

      நீக்கு
  9. நல்ல ரசனை தான் ஐயா.....இப்போதே இட்லி சாப்பிடும் ஆசை வந்து விட்டது. அரிசி உளுந்து ஊறவைத்து விட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. இட்லிக்கு பின்னால இவ்ளோ விஷயங்கள் இருக்கா...

    உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஆஹா என்ன ரசனை உங்களுக்கு... பாவம் உங்க வீட்டுக்காரம்மா....

    பதிலளிநீக்கு
  12. எனக்கென்னமோ அய்யா குஷ்புவை தாக்கியது போல போல இருக்கு...எப்பவுமே பெரியவங்களுக்கு தானே உண்மயான நிலவரம்(கலவரம்!) தெரியும்!

    பதிலளிநீக்கு
  13. பதிவைப் படிக்கும் போதே சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் வருதே!!
    வீட்டில் சொல்கிறேன்... செய்து தராங்களா என்று பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  14. மிளகாய் வற்றல் கலந்து அரைத்த வறுத்த நிலக்கடலைச் சட்னி கெட்டியாகவோ அல்லது ரசம் போலவோ வைத்து சூடான இட்லிக்குத் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  15. மனுஷன் பசில இருக்கும் போது போடுற பதிவா இது அவ்வ்வ் :)

    பதிலளிநீக்கு
  16. இட்லி எப்படி சாபிடுவது என்று நீங்கள் எழுதினீர்கள். இட்லிக்கு மாவு எப்படி நைசா ஆட்டுவது என்று நான் எழுதுகிறேன்!

    பதிலளிநீக்கு
  17. நீங்கள் சைவம் சாப்பிடுபவர் என நினைக்கிறேன்.
    இட்டிலிக்கு ஈழத்தில் என் வீட்டில் அம்மியில் அரைத்த சம்பல்(பலர் மாவாட்டும் கல்லுரலிலேயே சம்பலைச் சட்டினியாக்கிவிடுவார்கள்), கத்தரிக்காய், முருங்கைக்காயில் சாம்பார்.
    அத்துடன் சிலசமயம் முதல் நாள் பழைய மீன் குழம்பு. அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, யோகன்-பாரிஸ், நல்ல இருக்கறீங்களா? பழைய மீன் குழம்பின் ருசி தனிங்க. நான் மனுசனத் தவிர எல்லாத்தையும் சாப்பிடுவேனுங்க.

      நீக்கு