வியாழன், 21 மார்ச், 2013

8. இந்திய நிதி அமைச்சருடன் சந்திப்பு.

(இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும், சம்பவங்களில் வரும் அனைத்து நபர்களும் கற்பனையே)

மறுநாள் சரியாக 10 மணிக்கு பிரதம மந்திரியும் நிதி அமைச்சரும் வந்தார்கள். அவர்களை வரவேற்று கான்பரன்ஸ் ரூமுக்குப் போனோம்.


நிதி அமைச்சர் எங்களைக் கூப்பிட்ட விஷயம் என்ன? என்றார்.

நான் இருவரையும் பார்த்துச் சொன்னேன். தற்போது நமது நாட்டு நடப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. வெளிநாட்டுக்காரர்கள் நம்மைக் கேவலமாக மதிப்பீடு செய்கிறார்கள். இதையெல்லாம் மாற்றி நம் நாட்டை உலகின் ஒன்றாம் நெம்பர் நாடு என்று மாற்றவேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்றேன்.

எங்களுக்கும் அது விருப்பமே. ஆனால் அதை எப்படி நிறைவேற்றுவது என்றுதான் தெரியாமல் விழிக்கிறோம் என்றார்கள். நான் சொன்னேன், என்னிடம் இப்போது ஏராளமான செல்வம் மற்றும் சகல வல்லமைகளும் இருக்கின்றன. நீங்கள் சரி என்று சொன்னால் என் திட்டங்களை விவரிக்கிறேன், என்றேன். அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு,  பிறகு சொன்னார்கள். எங்களுக்கு விருப்பமே, ஆனால் பாருங்கள், இதில் எங்கள் கட்சித் தலைவரும் சம்பந்தப் பட்டிருக்கிறார். அவர் அனுமதி இல்லாமல் நாங்கள் எந்த முடிவும் எடுக்கமுடியாதே, என்றார்கள்.

அப்படியானால் அவரையும் கூப்பிட்டுக்கொள்வோம் என்றேன். அவர்கள் செல்போனில் பேசினார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அவரும் வந்தார். அவரை மிக மரியாதையாக வரவேற்று அமரச்செய்தாம். அவருக்கும் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர் எனக்கும் சில நீண்ட காலத் திட்டங்கள் இருக்கின்றன. அதை நீங்கள் நிறைவேற்றுவதானால் எனக்கு உங்கள் திட்டத்தில் ஆட்சேபணை இல்லை என்றார்கள்.

அதற்கென்ன, அப்படியே செய்து விட்டால் போகிறது என்று சொல்லிவிட்டு என் முதல் கேள்வியைக் கேட்டேன். இப்போது நமது இந்திய அரசுக்கு கடன் எவ்வளவு இருக்கிறது என்றேன். நிதி அமைச்சர் உள்நாட்டிலா, வெளி நாட்டிலா என்றார். இரண்டையும் சொல்லுங்களேன் என்றேன்.

உள் நாட்டுக்கடன் பத்தாயிரத்தெட்டு லட்சம் கோடி ரூபாய்கள், வெளிநாட்டுக் கடன் இருபத்தி இரண்டாயிரத்து மூன்று லட்சம் கோடி டாலர்கள் என்றார். இது போக வட்டி தனி என்றும் சொன்னார். இந்தத் தொகையைக் கேட்டு நான் கொஞ்சம் அசந்து விட்டேன்.

சரி, நிதி அமைச்சரே, இந்தத் தொகையை மொத்தமாக நான் தேவலோக பேங்கிடமிருந்து ஒரே தவணையில் தானமாகக் கொடுக்கச் சொல்கிறேன். இந்தக் கடன்களையெல்லாம் பட்டுவாடா செய்து முடிக்க எவ்வளவு நாட்களாகும் என்று கேட்டேன். ஒரு வாரத்தில் முடித்து விடுவோம் என்றார்.

குபேரனைக்கூப்பிட்டு, இவர் கேட்கும் பணத்தைக் கொண்டுபோய் டில்லியில் இவருடைய ஆபீசில் கொடுத்து விட்டு வாருங்கள் என்றேன் அவன் சரியென்று போய்விட்டான். இத பாருங்க நிதி அமைச்சரே, இதில் எந்த சொதப்பலும் இருக்கக்கூடாது. அடுத்த வாரம் இதே நாள் நாம் எல்லோரும் இங்கே கூடுவோம். அப்போது எந்தக் கடனும் நிலுவை இருக்கக் கூடாது, பார்த்து செய்யுங்கள், என்றேன். அவர்கள் மூவரும் சரியென்று தலை ஆட்டிவிட்டுப் புறப்பட்டார்கள்.

புறப்படும்போது அவர்கள் மூவருக்கும் ஒவ்வொரு சூட்கேஸ் பரிசளித்தேன். இதில் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். நீங்கள் இந்த மீட்டிங்க்கில் கலந்து கொண்டதற்கான தினசரி அலவன்ஸ் என்றேன். சரி என்று வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். அந்த சூட் கேசுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தேன்.

ஆடற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடற மாட்டை பாடி கறக்கவேண்டும், அல்லவா?

17 கருத்துகள்:

  1. கடைசியாகச் சொன்னீங்களே, அது!. கடனைத் தீர்த்தார்களா என்பது இன்னும் ? தான்.

    இதுவரைக்கும் ஒரு மாடு கூட ஆடியோ பாடியோ பார்த்ததே இல்லைங்க.

    பதிலளிநீக்கு
  2. //அந்த சூட் கேசுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தேன்.//

    இப்படி தினசரி படி தருகிறீர்கள் என்றால் நம் அரசியல்வாதிகள் தினம் கூட்டம் கூட்டினாலும் வந்துவிடுவார்கள்.
    நீங்கள் மொத்த கடனையும் அடைக்க பணம் கொடுத்ததன் நோக்கம், சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க திட்டம் தான் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவை அப்படியே ஒரு விலை பேசி வாங்கிடலாம்னுதான் எண்ணம். இப்பவே அப்படித்தான் வச்சிருக்கேன்.

      நீக்கு
  3. கொடுக்க வேண்டியதை கொடுத்தால் தானே காரியம் நடக்கிறது...

    எங்கே சார் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித்தான் தமிழ்மணம் அடிக்கடி அவங்கம்மா ஊட்டுக்கு போயிடுதுங்க. இப்ப போயி புடிச்சு, நாலு சாத்து சாத்தி கொண்டு வந்திருக்கனுங்க, இருக்கா பாருங்க.

      நீக்கு

  4. எனக்கு ஏனோ விவசாயக் கடன் தள்ளுபடி ஆனது நினைவுக்கு வருகிறது....!

    பதிலளிநீக்கு
  5. இப்போதான் கதை சூடு பிடிச்சிருக்கு!

    பதிலளிநீக்கு
  6. ஆடற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடற மாட்டை பாடி கறக்கவேண்டும், அல்லவா?
    //அந்த சூட் கேசுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தேன்.//

    கொடுக்குற மாட்டுக்கு கொடுத்தும் .....

    பதிலளிநீக்கு
  7. ஆடற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடற மாட்டை பாடி கறக்கவேண்டும்...
    அதானே... சூடு பிடிக்கிறது கதையில்...

    பதிலளிநீக்கு
  8. //அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு, பிறகு சொன்னார்கள். எங்களுக்கு விருப்பமே, ஆனால் பாருங்கள், இதில் எங்கள் கட்சித் தலைவரும் சம்பந்தப் பட்டிருக்கிறார். அவர் அனுமதி இல்லாமல் நாங்கள் எந்த முடிவும் எடுக்கமுடியாதே, என்றார்கள்//

    நிதர்சனமான உண்மை.
    இவர்கள் எப்படி பிரதம மந்திரியாகவும் நிதி மந்திரியாகவும் நீடிக்கிறார்கள் என்பது புரிந்ததா
    அவனன்றி ஓர் அணுவும் அசையாது - அந்தக்காலம்
    கட்சி தலைவரன்றி ஓர் அணுவும் அசையாது - இந்தக்காலம்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  9. //உள் நாட்டுக்கடன் பத்தாயிரத்தெட்டு லட்சம் கோடி ரூபாய்கள், வெளிநாட்டுக் கடன் இருபத்தி இரண்டாயிரத்து மூன்று லட்சம் கோடி டாலர்கள் என்றார். இது போக வட்டி தனி என்றும் சொன்னார். இந்தத் தொகையைக் கேட்டு நான் கொஞ்சம் அசந்து விட்டேன்//

    நாங்களும்தான்.
    இவ்வளவு எதிர்பார்க்கவில்லை.
    120 கோடி பேருக்கு இவளவு என்றால் ஒருவருக்கு
    26.67 கோடி கடன் வருகிறதே.
    யம்மாடி என் வீட்டில் நான், எனது மனைவி, இரு குழந்தைகள் என நால்வருக்கு 100 கோடிக்கு மேல் கடனிருக்கிறதே. வட்டி தனி.
    ஆனாலும் ஒரு சந்தோசம். என்னையும் நம்பி 100 கோடி கடன் கொடுக்கும் இளிச்ச வாயன் இந்த உலகத்தில் இருக்கிறான் என்றால் சந்தோசமாகத்தான் இருக்கிறது.
    நானும் ரவுடிதான் பாணியில் நானும் கோடீஸ்வரன்தான்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  10. //சரி, நிதி அமைச்சரே, இந்தத் தொகையை மொத்தமாக நான் தேவலோக பேங்கிடமிருந்து ஒரே தவணையில் தானமாகக் கொடுக்கச் சொல்கிறேன். இந்தக் கடன்களையெல்லாம் பட்டுவாடா செய்து முடிக்க எவ்வளவு நாட்களாகும் என்று கேட்டேன். ஒரு வாரத்தில் முடித்து விடுவோம் என்றார்.//

    கொடுத்த தானம் முழுவதும் ஒரு பைசா குறையாமல் அப்படியே மீண்டும் ஸ்விஸ் வங்கியில் ஏதாவது ஒரு இந்தியன் பெயரில் சென்று சேர்ந்து விடப்போகிறது. நிதி அமைச்சர் கூடவே செக்கையோ இல்லை பொதுவையொ அனுப்பி வைத்தால் தேவலை.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  11. //நீங்கள் இந்த மீட்டிங்க்கில் கலந்து கொண்டதற்கான தினசரி அலவன்ஸ் என்றேன். சரி என்று வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். அந்த சூட் கேசுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தேன்.//

    ஆனாலும் நீங்கள் அநியாயத்துக்கு நல்லவராக இருக்கிறீர்கள்.
    ஒரு நாளைக்கு ஒரு கோடி அலவன்ஸ் என்றால் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு கூப்பிட்ட இடத்திற்கு நம் ஆட்கள் வருவார்களே.
    ஆடுற மாட்டை நல்லாவே ஆடித்தான் கறக்கிறீர்கள்.
    ஆனால் அவர்கள் அரசியல்வாதிகள். யாரென்று பார்க்காமல் ஆப்பு அடிப்பவர்கள். அவர்களிடம் சற்றே ஜாக்கிதையகே இருங்கள். நம்பி விடாதீர்கள். ஒரு கண் அவர்கள் மேல் இருந்து கொண்டே இருக்கட்டும்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  12. //சரி, நிதி அமைச்சரே, இந்தத் தொகையை மொத்தமாக நான் தேவலோக பேங்கிடமிருந்து ஒரே தவணையில் தானமாகக் கொடுக்கச் சொல்கிறேன்.//

    உலக வங்கியிலிருக்கும் பணத்தை விட அதிகமாக தேவ்லோக் வங்கியில் இருக்கும் போலிருக்கிறதே.
    பார்த்து. நிதி அமைச்சரும் பிரதம மந்திரியும் (கட்சி தலைவரை வேறு கூப்பிட்டிருக்கிறீர்கள்) குபேரனை கரெக்ட் செய்து, தேவ்லோக் வண்டியை ஸ்வாஹா பண்ணி விட போகிறார்கள்

    பதிலளிநீக்கு
  13. அனைத்தும் நம்ப முடியாமல் இருக்கிறதே.
    27 பிப்ரவரியில் ஆரம்பித்த மாற்றங்கள்.
    ஒரு மாதம் கூட ஆகவில்லை.
    இந்திரனை பதவி இறக்கம் செய்த விதமென்னே,
    தேவ லோகத்தில் புரட்சிகர மாறுதல்களை கொணர்ந்ததென்னே, தேவ்லோக் வங்கி ஆரம்பித்ததென்னே,
    இந்தியாவில் தமிழகத்தில் தூதரகம், அதுவும் நம்மூர் ஸ்டைலில் மந்திரிகளை வைத்து திறந்ததென்னே,
    இந்தியாவின் கடனை ஒரே ஸ்ட்ரோக்கில் அடைக்க ஏற்பாடு செய்ததென்னே
    எல்லாம் உடோபியன் ட்ரீமாக அல்லவா இருக்கிறது.
    சாதரணமான மனிதன் நினைப்பதை எல்லாம் வரிசையாக செய்து வருகிறீர்கள்.
    உண்மையாகவே இப்படி எல்லாம் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சரி சரி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் சொல்வது போல முதலில் கனவு காணலாம். பிறகு அதை நனவாக்க முயற்சிப்போம்.
    கனா காண ஆரம்பித்துள்ள அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு