வெள்ளி, 29 மார்ச், 2013

நான் ஜெயிலுக்குப் போனேன்.


நான் ஏதோ கொலைக்குற்றம், வழிப்பறி அல்லது பாலியற்குற்றம் புரிந்து விட்டு ஜெயிலுக்குப் போனதாக கற்பனை செய்யவேண்டாம். அதற்குத் தேவையான உடல், மன தைரியம் எனக்கில்லை. எனக்குத் தெரிந்த ஒரு பையன் ஒரு சிறு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விசரணைக் கைதியாக சிறைக்கு அனுப்ப்பபட்டான். ஜாமீன் வாங்குவதில் பல சிக்கல்கள். போலீஸ், கோர்ட்டு, சிறைச்சாலை, வக்கீல்கள் இவர்கள் பக்கம் போகாமல் இருந்தால் நீங்கள் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் பெரும்பாலானோருக்கு இது தெரியாது.

ஆனால் நரகத்தைப் பார்த்தால்தான் சொர்க்கம் என்றால் என்ன என்று புரியும்.  இந்த நான்கு இடங்களையும் பார்த்தால் நரகம் என்றால் என்ன என்பது தெளிவாகப் புரியும்.

அந்தப் பையனின் பெற்றோர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லலாமென்று அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர்கள் வெளியில் புறப்படுவதற்கான ஆயத்தத்தில் இருந்தார்கள். வெளியில் புறப்படுகிறமாதிரி இருக்கிறதே என்றேன். ஆமாங்க, பையனைப் பார்த்து விட்டு வரலாமென்று புறப்படுகிறோம் என்றார்கள். அந்தப்பையனை நன்றாகத் தெரியுமாதலால் நானும் வரட்டுமா என்றேன். அவர்கள் வாங்களேன் என்று சொன்னார்கள். நாங்கள் மூவரும் அவர்கள் காரில் சென்றோம்.

கார் முதலில் ஒரு பழக்கடைக்கு சென்றது. இங்கு எதற்கு செல்கிறார்கள் என்று யோசிக்கும்போது, பையனுக்கு கொஞ்சம் தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பதற்காக இங்கே வந்தோம் என்றார்கள். அப்படியா என்று நினைத்துக்கொண்டேன். எனக்கும் ஒரு பழஜூஸ் வந்தது. அவர்கள் ஏதேதோ வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

பிறகு எல்லோரும் சிறைச்சாலைக்குப் போனோம். அங்கு முதல் கேட்டில் ஒரு விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்தோம். அதை ஒரு ரிஜிஸ்டரில் பதிவு செய்து எங்கள் மூவருடமும் கைரேகை வாங்கினார்கள். ஒருவன் என்ன படித்திருந்தாலும் அவர்களைப் பொருத்தவரையில் அவன் கைநாட்டுதான்.

அங்கே இருக்கும் இன்னொரு ரூமில் நாம் வாங்கிக்கொண்டு போயிருக்கும் தின்பண்டங்களைப் பரிசோதித்து, சிலவற்றை ஏற்றுக்கொள்ளாமல், மீதி இருப்பவற்றை ஒரு ஜெயில் பையில் போட்டு, அதற்கு ஒரு நெம்பர் கொடுத்து, நம்மிடம் ஒரு டோகன் கொடுக்கிறார்கள்.

பிறகு அங்கே இருக்கும் இன்னொரு ரூமில் நம்மிடம் ஏதாவது வெடிகுண்டு இருக்கிறதா என்று தடவித்தடவி பரிசோதிக்கிறார்கள். அவர்கள் சந்தேகம் தீர்ந்தவுடன் நம்மைப் போக அனுமதிக்கிறார்கள். பணம் 50 ரூபாய் மட்டுமே கொண்டு செல்லலாம். இந்தப் பணத்தை நாம் பார்க்கப் போகிறவர்களுக்கு கொடுத்துவிட்டு வரலாம். இதற்கென்று ஒருவர் இருக்கிறார். அவர் அந்தப் பணத்தை இந்தப் பக்கம் இருந்து வாங்கி அந்தப் பக்கம் கொடுப்பதற்கு சிரம பரிகாரமாக 20 ரூபாய் எடுத்துக்கொள்வார்.

அங்கிருந்து இரண்டு பர்லாங் தூரத்தில் இன்னொருவர் மேஜை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் போய் நம் விண்ணப்பத்தைக் கொடுத்தால் அவர் இன்னொரு ரிஜிஸ்டரில் எழுதி நம்மிடம் இன்னொரு முறை கைநாட்டு வாங்குவார்.

எந்த இடத்திலும் ஜனங்கள் உட்காருவதற்கு பெஞ்ச் அல்லது வேறு இருக்கைகளோ இல்லை. ஒரு வேப்பமரமும் ஒரு புளியமரமும் இருக்கின்றன. அதன் நிழலில் மண் தரையில் உட்கார்ந்து கொண்டு நம் விதியை நொந்தபடி இருக்கவேண்டியதுதான்.

அந்த விண்ணப்பங்களை எல்லாம் அவர் உள்ளே இருக்கும் காவலருக்கு அனுப்புகிறார். அவர் நாம் பார்க்கப்போகும் நபர் அந்த இன்டர்வியூ ஹாலுக்கு வந்து விட்டாரா என்று செக்கப் செய்வார். இதற்கு எப்படியும் அரை அல்லது ஒரு மணி நேரம் ஆகின்றது. நாம் பார்க்கப்போகும் நபர் ரெடியானவுடன் நம்மைக் கூப்பிடுகிறார்கள்.

இன்னொரு முறை வெடிகுண்டு சோதனை நடைபெறுகின்றது. பிறகு ஒரு நடைபாதை வழியே போனால் இன்டர்வியூ ஹால் வருகிறது. மீன்கடை இரைச்சல் என்று சொல்லுவார்கள். அந்த மாதிரி இரைச்சல் அந்த ஹாலில் இருக்கிறது.


ஏனென்றால், அந்த ஹாலில் இரண்டு இரும்புத் தடுப்புகள் போட்டிருக்கிறார்கள். இரண்டுக்கும் இடையே நான்கு அடி இடைவெளி. விசாரணைக் கைதிகள் ஒரு பக்கம். பார்க்கப்போகிறவர்கள் இந்தப் பக்கம். நாங்கள் போகும்போது கைதிகள் பக்கம் ஒரு நூறு பேரும் பார்வையாளர்கள் பக்கம் ஒரு இருநூறு பேர்களும் இருந்தார்கள். அவர்கள ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அந்த இரைச்சலில் ஒருவர் பேசுவதும் அடுத்தவர்களுக்கு சரியாக காதில் விழுவதில்லை. ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் குரலை உயர்த்திப் பேசுகிறார்கள். மொத்தத்தில் சந்தைக்கடைதான். என்னால் எதுவும் பேட முடியவில்லை. நான் பார்க்கப்போன பையனைப் பார்த்து கையசைத்ததோடு சரி. ஒரு ஓரமாக நின்றுகொண்டு வேடுக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை. புருஷனைப் பார்க்க வந்திருக்கும் கைக் குழந்தைக்காரி. மகனைப் பார்க்க வந்திருக்கும் நடக்கமுடியாத பாட்டி. அரசியல்வாதியைப் பார்க்க வந்திருக்கும் கட்சிக்காரர்கள். இப்படி பலதரப்பட்ட மக்கள். எல்லோர் முகங்களிலும் சோகம். ஒருவர் முகத்திலாவது மலர்ச்சி என்பது மருந்துக்குக் கூட இல்லை.

வாழ்கையின் மறு பக்கத்தை இங்கே பார்த்தேன். மனது மிகவும் கனமாகிப்போனது. இவர்களுக்கெல்லாம் எப்போது விசரணை நடந்து முடிந்து எந்த விதமான தண்டனை கிடைக்கும் என்று கற்பனை செய்ய முடியவில்லை. அப்படி தண்டனை பெற்றவர்கள் தண்டனைக் காலம் முடிந்து சிறையை விட்டு வெளியில் வரும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?உலகம் அவர்களுக்கு எந்த விதமான வரவேற்பு கொடுக்கும்? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்?

பதில் சொல்ல முடியாத கேள்விகள்.

19 கருத்துகள்:

  1. இந்தியா என்றில்லாமல் எல்லா நாட்டிலும் இந்த கதைதான் என்று நினைக்கிறேன். பாப்பில்யான் - தமிழில் பட்டாம்பூச்சி - படித்திருக்கிறேன். 50 ரூபாயை இப்பக்கத்திலிருந்து அப்பக்கம் மாற்ற 20 ரூபாய் கமிஷன்...ஹூம்! சிறை நடைமுறைகளை மாற்ற முடியுமா? மிகக் கஷ்டம்.

    பதிலளிநீக்கு
  2. கமெண்ட் மாடரேஷன் எடுத்து விட்டீர்களா? அட!

    பதிலளிநீக்கு
  3. //நான் செய்தது சரிதானா,ஸ்ரீராம்? //

    அது அனுபவத்தைப் பொறுத்தது! 'எங்களு'க்கு மாடரேஷன் கிடையாது எப்போதும்! சமீப காலங்களில் ஒரு தொல்லை போருக்க முடியாமல் அனானி கமெண்ட் ஆப்ஷன் மட்டும் நிறுத்தி வைத்துள்ளோம்! :)

    பதிலளிநீக்கு
  4. பொறுக்க 'போருக்க' ஆனதற்கு மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  5. நான் ஒரு முறை செல்லில் இருந்துருக்கேன். ஆனால் ஜெயில் உள்ளே போய்ப் பார்க்கலை:(

    http://thulasidhalam.blogspot.com/2008/11/blog-post_03.html

    பதிலளிநீக்கு
  6. வாழ்கையின் மறு பக்கத்தை இங்கே பார்த்தேன். மனது மிகவும் கனமாகிப்போனது.

    பதிலளிநீக்கு
  7. நான் ஒரு முறை, ஆகஸ்ட் 15 ஆம் நாள் ரோட்டரி நண்பர்களோடு சேலம் சிறைச்சாலையில் உள்ளோருக்கு இனிப்பு வழங்க சென்றிருந்தேன். ரோட்டரி சங்கம் என்பதால் உள்ளே செல்ல கெடுபிடி ஏதும் இல்லை. சிறையில் உள்ள அனைவரையும் திறந்தவெளி மைதானத்தில் வரிசையாய் அமர வைத்த பின் எங்களை இனிப்பை வழங்க சொன்னார்கள். அந்த இனிப்பை பெறும்போது அவர்கள் முகத்தில் பார்த்த ஏக்கம் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை. யாருமே சிறைக்கு செல்லாமல் இருப்பது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகுந்த வேதனைக்குரிய சமாச்சாரம். ஆனால் இன்றைய சமூகத்தில் அவசியமாகிப்போனது.

      நீக்கு
  8. படிக்க ஆரம்பித்தவுடன் தோன்றிய புன்னகை (உங்கள் நகைச்சுவை எழுத்துக்களால்) போகப்போக மறைய ஆரம்பித்தது. கடைசியில் நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளால் வாயடைத்துப் போனேன்.

    பதிலளிநீக்கு
  9. சிரம பரிகாரம் 20 ரூபாய்...!!!

    மனதளவில் கண்டிப்பாக பாதிப்பு இருக்கும்... அது அவரவர் குடும்பத்தினரை பொறுத்து... நல்லபடியாக மாறுவதற்கு இன்றைய... இன்றைய... இன்றைய சமூகம் விடாது...

    பதிலளிநீக்கு
  10. தப்பு பண்ணவங்களுக்கு தண்டனை நிச்சயம் இருக்கணும். பல பேர் தண்டனையில் இருந்து தப்பித்து சுகமாக வெளியில் இருக்கிறார்களே அதை நினைத்தால்தான் மனம் கனக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. உங்கள் அனுபவம் உன்மையிலேயே மனதை உருக்குவதாக உள்ளது. நான் ஜெயிலுக்குப் போனபோது வேறுமாதிரி அனுபவம்.http://imayathalaivan.blogspot.com பாருங்கள், நேரம் கிடைக்கும்போது.

    பதிலளிநீக்கு
  12. இன்றைய உலக நடைமுறை என்னவென்றால் 2 இலட்சம் கோடி கறுப்புப் பணம் வைப்போம்! 1 இலட்சம் கோடி ஊழல் செய்வோம்! ஆனால் குற்றங்களை குறைப்பதற்கோ அல்லது குற்றவாளிகளை திருத்த்வோ ஒரு நயா பைசா செலவு செய்ய மாட்டோம்! அமெரிக்காவின் ஜனத் தொகை உலக ஜனத்தொகையில் 5% மட்டுமே. ஆனால் இங்குள்ள ஜெயில்களில் இருக்கும் குற்றவாளிகள் உலக அளவிலான குற்றவாளிகளில் 25% ஆகும்.

    http://en.wikipedia.org/wiki/United_States_incarceration_rate

    அமெரிக்காவில் ஏன் இப்படி என்றால், ஒரு குற்றவாளி உருவாக அவன் சார்ந்திருக்கும் சமூகமும் ஒரு காரணம் தான் என்ற உண்மையை மக்கள் நம்ப மறுப்பதுதான். ஜெயில்களுக்கு செலவிடும் தொகையை குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கு செலவிடலாம் என்றால் வலது சாரிகள் அதற்கு எதிர்ப்பு.

    அமெரிக்கவைப் பார்த்து காப்பியடிக்கும் இந்தியா இதே போல் இப்போது மாறி வருகிறது என்பது ஒரு கசப்பான உண்மை.


    ஒரு குற்றவாளி ஒரு குற்றம் செய்யும் வரை, எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று தான் இச்சமுகம் இருக்கிறது. அவன் ஒரு குற்றம் செய்த மறுகணமே மொத்தச் சமூகமும் அவன் மேல் விழுந்து பிடுங்குகிறது! இந்த மனநிலை மாறாத வரையில் குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை!

    - சின்னசாமி. USA.

    பதிலளிநீக்கு
  13. இன்னொரு புள்ளி விபரத்தையும் ஆராய வேண்டியுள்ளது.

    அமெரிக்காவில் ஒரு இலட்சம் பேருக்கு 716 பேர் ஜெயிலில் இருக்கிறார்கள். இந்தியாவில் அது 30 பேர் மட்டுமே. அப்படின்னா..இந்தியாவில் குற்றங்கள் குறைவா? அல்லது குற்றவாளிகள் பிடிபடுவது குறைவா?

    இரண்டாவதுதான் என நான் நினைக்கிறேன்!

    - சின்னசாமி.

    பதிலளிநீக்கு
  14. இந்த தொல்லைக்கு பயந்துதானா உள்ளே போகும் தாதாக்கள் எவ்வளவு ? செலவு ?????????(யாருக்கு ) பண்ணியாவுது மொபைல் போன் வரவழைத்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன் . உங்கள் பதிவை படித்த பிறகு நானும் வேண்டிகொள்கிறேன் , யாருக்கும் ஜெயில் போகும் நிலை வரக் கூடாது என்று .

    பதிலளிநீக்கு
  15. பலர் வெளிய சிலர் உள்ளே
    சிலர் உள்ளே பலர் வெளியில்
    வீதியெனும் பாம்பு எந்த நேரத்தில் மதி எனும் பொந்தில் நுழைந்து
    சதி எனும் செயல் புரிகிறது ஓ யார் அறிவார் .............
    மனம் என்பது பாம்பு புற்று என இல்லாமல்
    வேம்பு நீழல் என இருந்தால் வீதியெனும் பாம்பு வருவதை அறிந்து நகரலாம் ..........
    அறியாததை அறிய வைக்கும் அறிவு எனும் வேலவனே கந்தசுவாமி பிரபுவே
    எனது மனம் என்பதை உனது அறிவு எனும் வேல் கொண்டு இனி நீ நடத்து
    ஓம் வேலவனே போற்றி போற்றி ,,,,,,,,,,,,,,
    தவறு செய்தவன் திருந்த வாய்ப்பு தர வேண்டும்
    சிறை வேறு வகை ஆசிரமம் ........................வேலவா அந்த மானுடனை உனது அறிவுஎனும் வேல் கொண்டு திருத்து ........................

    பதிலளிநீக்கு
  16. பலர் வெளிய சிலர் உள்ளே
    சிலர் உள்ளே பலர் வெளியில்
    வீதியெனும் பாம்பு எந்த நேரத்தில் மதி எனும் பொந்தில் நுழைந்து
    சதி எனும் செயல் புரிகிறது ஓ யார் அறிவார் .............
    மனம் என்பது பாம்பு புற்று என இல்லாமல்
    வேம்பு நீழல் என இருந்தால் வீதியெனும் பாம்பு வருவதை அறிந்து நகரலாம் ..........
    அறியாததை அறிய வைக்கும் அறிவு எனும் வேலவனே கந்தசுவாமி பிரபுவே
    எனது மனம் என்பதை உனது அறிவு எனும் வேல் கொண்டு இனி நீ நடத்து
    ஓம் வேலவனே போற்றி போற்றி ,,,,,,,,,,,,,,
    தவறு செய்தவன் திருந்த வாய்ப்பு தர வேண்டும்
    சிறை வேறு வகை ஆசிரமம் ........................வேலவா அந்த மானுடனை உனது அறிவுஎனும் வேல் கொண்டு திருத்து ........................

    பதிலளிநீக்கு