ஞாயிறு, 26 ஜூலை, 2015

நைனா கீதா?

                                  Image result for சென்னை
இந்த தலைப்பு என்னன்னு புரியுதா? புரிஞ்சா நீங்க நிச்சயம் வேலூர், கடலூர்க்காரரா இருக்க வேண்டும். மற்றவர்களுக்காக, "நைனா கீதா" அப்படீன்னா "அப்பா இருக்கிறாரா?" என்று அர்த்தம். கோயமுத்தூர்ல கிராமத்தில போய் இப்படிக் கேட்டா என்னமோ இந்தப் பய நம்மளைத் திட்டறான்னுதான் நினைப்பாங்க.

கோயமுத்தூர்ல இந்த வார்த்தை கிடையாது. இது ஒரு வட்டார வழக்கு. குறிப்பாக வேலூர் பக்கம் இது மிகவும் மரியாதை கலந்த வார்த்தை. ஆனால் அது கோயமுத்தூர்க்காரனுக்கு விளங்காது. அவனை இப்படிக் கூப்பிட்டால் அவனுக்கு எரிச்சல்தான் வரும். இங்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம் ஏறக்குறைய காலேஜ் பசங்க ஒருத்தருக்கொருவர் "மச்சீ" அப்படீங்கறாங்களே அந்த மாதிரி.

இப்படியான வட்டார வழக்குகளுக்கு அந்தந்த வட்டாரங்களில்தான் மரியாதை. இப்படியான பல வட்டார வழக்குகளைக் கண்டு நான் குழம்பியிருக்கிறேன். சென்னையில் "இன்னா நாய்னா" என்பது ஒரு வகை மக்களின் அன்பான உரையாடல். "இன்னா சார்" என்றால் அது மிகப்பெரிய மரியாதை. கோயமுத்தூரில் இதற்கு சரியான வார்த்தை "என்னங்க ஐயா" என்பதாகும்.

நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது  சுற்றுலா போகும்போது கடலூர் பக்கம் ரயிலில் போய்க்கொண்டிருந்தோம். அப்போது அங்கு சில விவசாயிகள் சாக்கில் ஏதோ கட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். சும்மா ஆர்வத்தில் சாக்கில் என்ன இருக்கிறது என்று கேட்டோம். அவர்கள் "மல்லாட்டெ" என்று பதில் சொன்னார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சாக்கைத் தொட்டுப் பார்த்தோம். அதற்குள் இருப்பது நிலக்கடலை என்று தெரிந்தது. ஆனால் இவர்கள் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று எங்களுக்குள் விவாதித்தோம்.

அப்போது அந்த வட்டரத்தைச் சேர்ந்த எங்கள் வகுப்புத் தோழன் ஒருவன் சொன்னான். மல்லாக் கொட்டை என்பதைத்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்க்ள என்றான். அப்புறம் விவாதித்து அந்தப் பெயர் வந்த காரணத்தைக் கண்டு பிடித்தோம். நிலக்கடலை முதலில் "மணிலா" என்ற நாட்டிலிருந்துதான் இந்தியாவிற்கு வந்து இருக்கிறது. அதனால் மக்கள் அதை மணிலாக்கொட்டை என்று அழைத்தார்கள். அது நாளாவட்டத்தில் மருவி மல்லாக் கொட்டை என்று ஆகி பிறகு மல்லாட்டெ ஆகியது.

அப்புறம் அங்கு அடிக்கடி கேட்ட வார்த்தை "க்கீதா". இருக்கிறதா என்பதுதான் மருவி "க்கீதா" ஆகிற்று என்று வெகு நேரம் ஆராய்ச்சி செய்ததில் புரிந்தது.

மருதைக்கு மாற்றல் ஆகிப்போன புதிதில் அலுவலகத்தில் வேலை செய்த ஒரு பையனைக் கூப்பிட்டு வீட்டுக்குப் போய் ஒரு பைய வாங்கிட்டு வா என்று அனுப்பினேன். நான் அலுவலகத்திலிருந்து அப்படியே கடைவீதிக்குப் போய் சில பொருட்கள் வாங்கவேண்டியிருந்தது. அதற்காக அவனை வீட்டிற்கு அனுப்பினேன்.  பையன் போனவன் போனவனே. அடுத்த நாள்தான் வந்தான்.

என்னடா விஷயம் என்று கேட்டால் "நீங்கதானே வீட்டிற்குப் போய்விட்டு "பைய" வரச்சொன்னீங்க என்கிறான். வெகு நேரம் பேசின பிறகுதான் எனக்கு விளங்கியது. மருதையில் "பைய" என்றால் மெதுவாக என்று அர்த்தமாம். நான் பையை வாங்கிக்கொண்டு வரச் சொன்னதை அவன் மெதுவாக வரச்சொன்னதாகப் புரிந்து கொண்டான். அப்புறம்தான் தெரிந்தது. நான் பைக்கட்டு வாங்கி வா என்று சொல்லியிருக்க வேண்டும்.கோயமுத்தூரில் அப்படிச்சொன்னால் அவன் ஒரு கட்டுப் பையைக் கொண்டு வருவான்.

அப்பறம் ஒரு நாள் ஒரு கடையில் உட்கார்ந்து கொண்டு இருந்த போது அந்தக் கடை முதலாளி அந்தக் கடையில் வேலை செய்யும் ஒரு ஆளைக் கூப்பிட்டு ஒரு வேலைக்காக வெளியில் அனுப்பினார். வேலை விவரம் சொல்லி விட்டு கடைசியாக எப்படியாவது இந்த வேலையைக் கோளாறா முடிச்சிட்டு வந்திரு என்று சொல்லி அனுப்பினார். எனக்கு ஒரே குழப்பம். வேலையை ஏன் கோளாறு பண்ணச்சொல்றாரு என்று புரியவில்லை. எங்க ஊர்ல கோளாறு என்றால் கெடுத்தல் அல்லது தகராறு என்று அர்த்தம்.

அப்புறம் விசாரித்ததில் மருதையில் கோளாறு என்றால் கெட்டிக்காரத்தனம் என்று பொருளாம். எப்படி இருக்கிறது பாருங்கள்.

கோயமுத்தூர் பாஷை என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியும். அது மற்ற மாவட்டங்களில் கேலிக்குரியதாகி விட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து கோயமுத்தூருக்கு வந்து வேலை செய்யும் நண்பர்கள் எங்களுக்கு கோயமுத்தூர் பாஷை நல்லாத் தெரியுமே. எதற்கெடுத்தாலும் ஒரு "ங்க" சேர்த்தால் அது  கோயமுத்தூர் பாஷை என்பார்கள்.

அவர்களுக்கு நான் ஒரு பரீட்சை வைப்பேன். நான் சொல்கிற வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் சொல்லுங்க பார்ப்போம் என்று சொல்லி இந்த வார்த்தைகளைக் கூறுவேன்.

அம்மணி, அந்த அங்கராக்குச் சோப்பில தொரப்புக்காய் இருக்குது, எடுத்துட்டு வா அம்மணி.

எல்லோரும் திருத்திருவென முளிப்பார்கள்.  பார்க்கலாம் உங்களில் எவ்வளவு பேருக்கு இதன் அர்த்தம் தெரிகிறதென்று. கோயமுத்தூர்க்காரர்கள் சும்மா இருக்கோணும்.

36 கருத்துகள்:

  1. அம்மையயீர்! அங்கிருக்கும் பிறையில் சாவி இருக்கிறது. எடுத்து வாருங்கள்!

    பதிலளிநீக்கு
  2. நைனா, நல்லா கீது நைனா! இவ்வளவு பல் வலிக்கு இடையிலும் ( மன்னிக்கவும் 32 பல் இல்லாத நிலையிலும்) படா தமாஷா பதிவெல்லாம் போடுறீங்க. இன்று காலையில் உங்கள் பதிவைப் படித்ததும் எனது கஷ்டத்தையெல்லாம் மறந்து சிரித்து விட்டேன். ( படிக்கும் காலத்தில் சந்திரபாபு, சோ போன்ற மெட்ராஸ் பக்கிரிகளின் திரைப்படங்களில் அவர்கள் பேசிய மெட்ராஸ் பாஷையை ரசித்தவன் நான்) த.ம. வில் ஓட்டு போட்டதை சொன்னால் உங்களுக்கு கோபம் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //த.ம. வில் ஓட்டு போட்டதை சொன்னால் உங்களுக்கு கோபம் வரும்.//

      ஏன்?

      நீக்கு
    2. “ நான் விடுதலை ஆகிறேன். “ என்ற உங்களுடைய பதிவினில் http://swamysmusings.blogspot.com/2015/01/blog-post_27.html இதற்கான விடை இருக்கிறது

      நீக்கு
  3. வட்டார வழக்கு பல புதிய சொற்களைஅறிந்தேன் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. திரு. நடனசபாபதியிடம் கொஞ்ச நாள் குருகுல வாசம் செய்யவும்.

      நீக்கு
  5. சோப்புல தொரப்புக்காயிக்கு பர்த்தி வேலிமுட்டி போத்தல்ல இருக்கவுட்டு கரைச்சலாயிடப் போவுது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதையெல்லாம் அப்படி எனகரமத்து சோப்புல வைப்பமாக்கும்?

      எனகரமத்து = ? பாக்கலாம் உங்க சாமர்த்தியத்தை?

      வேலிமுட்டி = சாராயம். போத்தல் = பாட்டில். கரைச்சல்= வம்பு, கலாட்டா.

      நீக்கு
  6. நீங்கள் கன்னியாகுமரி மாவட்டம் பக்கம் வந்ததில்லை என்று தெரிகிறது. புத்திமுட்டு சம்சாரம் வையா போன்றவற்றை அறிவீர்களோ?

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தி முட்டு என்றால் முட்டாள்தனம். சம்சாரம் வையா என்றால் பொண்டாட்டி திட்டறா என்பது பொருள். உங்க ஊட்ல எப்படி?

      நீக்கு
    2. புத்திமுட்டு = சிரமம்
      சம்சாரம் = மனைவி
      வையா = சோர்வு (tired)
      --
      Jayakumar

      நீக்கு
  7. வட்டார வழக்கில் தாங்கள் பயன்படுத்தியவற்றில் சில சொற்களை நான் அறிவேன். இருந்தாலும் தாங்கள் போட்ட புதிருக்கு மறுமொழி கூறமுடியவில்லை. தம+1

    பதிலளிநீக்கு
  8. ‘இந்தாம்மா! அந்த சட்டைப்பையில் சாவி இருக்கு எடுத்து வாம்மா.’

    ஐயா. நான் சொன்னது சரிதானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லையே. கோயமுத்தூர்ல ஒழுங்கா வேலை செஞ்சிருக்கீங்க. அதனாலதான் கரெக்ட்டா புடிச்சிட்டீங்க.

      நீக்கு
  9. ஒரு முறை பேரூந்து நிலையத்தில் கேட்டது. ஒருவர் இன்னொருவரிடம் “நைனா, ஆம்பூர் பஸ்ஸு பூட்சா க்கீதா.?” என்று கேட்டார். இவர் போகவில்லை இருக்கிறது என்னும் பதிலை அதே மொழியில் கூறினார் .என்ன சொல்லி இருப்பாரென்று நீங்களே அனுமானித்துக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  10. அந்த அந்த வட்டார வழக்கில் பல சொற்கள்! உதாரணமாக சென்னையில் மனைக்கட்டை (உட்காரும் பலகை) திருச்சி, மற்றும் கரூரில் பலகா கட்டை, பலாக்கட்டை என்று சொல்ல படுகிறது. என் திருமணத்தின் போது திருமணம் செய்து வைத்தவர் மனைக்கட்டை கொண்டுவா என்றபோது அங்கிருந்தவர்கள் முழித்தனர். அப்புறம் பலாக்கட்டையா என்று கொண்டுவந்து கொடுத்தனர். பதிவு படா ஷோக்கா கீது நைனா! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க ஊர்ல மணைப் பலகையை "இருப்பிலிப் பலகை" என்று சொல்வோம்.

      நீக்கு
  11. :)))

    நான் வந்து சொல்வதற்குள் பதில் வந்திடுச்சு! :)

    பதிலளிநீக்கு
  12. வையா என்றால் செய்ய முடியாது என்ற அர்த்தம் கூட உண்டு.

    பதிலளிநீக்கு
  13. அரங்க ராசு தோப்பில சுரக்காய் எடுத்துட்டு வா
    அதானே ஐயா.

    பதிலளிநீக்கு
  14. சட்டை பையில் இருக்குர சாவி எடுத்துட்டு வானு அர்ததமா ஐயா

    பதிலளிநீக்கு