ஞாயிறு, 19 ஜூலை, 2015

நான் ஒரு பக்காத் திருடன்.

                                              Image result for thief

நண்பர் திரு நடனசபாபதி அவர்கள் அவருடைய வகுப்புத் தோழர் ஒருவருக்கு ஏற்பட்ட தொல்லைகளைப் பற்றி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார்.

என் வகுப்புத்தோழர் ஒருவர் வேளாண் விரிவாக்க அலுவலராக பணி ஆற்றியபோது, ஆண்டு இறுதிக்குள் நிலக்கடலை விதைகளை வாங்க அனுமதிக்கப்பட்ட தொகையை அவர் செலவழிக்கவேண்டும் என்று அவரது மாவட்ட வேளாண் அலுவலர்
கட்டாயப்படுத்தியிருக்கிறார். விதை கிடைக்காத நிலையில் ஒரு விவசாயி ஒரு மாதம் கழித்து அறுவடை செய்து தருவதாக சொன்னதின் பேரில் அவரிடம் வாங்கியதுபோல் கணக்கு காட்டி அதை இருப்பில் ஏற்றிக்கொண்டு அவரது பெயருக்கு காசோலை வழங்கவும் செய்துவிட்டார். பின்பு அந்த விவசாயி சொன்னபடி விதைக்கடலையை கொடுக்க மறுத்ததும் அதற்கான பணமான ரூபாய் 4000 த்தை இவர் கட்டவேண்டியதாகிவிட்டது. அப்போது (1966-67) அவருக்கு மாத சம்பளமே ரூபாய் 303 தான்.
நீங்கள் சென்ற பதிவுக்கான பின்னூட்டத்தில் சொன்னதுபோல் அதிர்ஷ்டமும் துணை புரிய வேண்டும். 

இதில் அந்த வேளாண் அலுவலருக்குப் போதிய அனுபவம் இல்லாததினால் இந்த மாதிரி சிக்கலில் சிக்கிக்கொண்டார். அவர் இந்த நடவடிக்கையை எப்படிச் செய்யவேண்டும் என்று அவருடைய மேலதிகாரியிடமே ஆலோசனை கேட்டிருக்கவேண்டும். அல்லது அந்த ஆபீசில் இருக்கும் ஆபீஸ் தலைமை கிளார்க்கிடம் கேட்டிருக்கலாம். அல்லது ஒரு மூத்த சக பணியாளரிடம் ஆலோசனை செய்திருக்கலாம். எப்படியோ தவறு நேர்ந்து விட்டது.

அலுவலக நடவடிக்கைகளின் விதி முறைகளை அவர் நன்கு அறிந்து வைக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த விவகாரத்தில் என்ன நடந்திருக்குமென்றால், அந்த விவசாயி, அரசு விவசாய இலாக்காவின் நடைமுறைகளை நன்கு அறிந்தவராக இருந்திருப்பார். அந்த வேளாண் அலுவலர்களின் உதவி அலுவலர்களே செக் வந்த விஷயத்தை அவரிடம் கூறியிருப்பார்கள். அந்த விவசாயியை அலுவலகத்திற்கு வந்து செக்கை வாங்கிக் கொள்ளுமாறு தூண்டியிருக்கலாம்.

அந்த விவசாயி ஆபீஸ் நடைமுறைகளை நன்கு அறிந்தவராதலால் இந்த மாதிரி செக் வந்த பிறகு அதை உரியவர்களிடம் கொடுக்காமல் தள்ளிப்போடுவது விதி முறைகளுக்கு எதிரானது என்று அறிந்து வைத்திருப்பார். அவர் விவசாய அலுவரிடம் வந்து பவ்யமாக செக் வந்து விட்டதாமே, அதைக் கொடுத்தால் என்னுடைய அறுவடைக் கூலி கொடுப்பதற்கு வசதியாயிருக்கும். அறுவடை முடிந்ததும் நான் கடலையை சப்ளை செய்து விடுகிறேன் என்று சொல்லியிருப்பார், இந்த விவசாய அலுவலர் மறுத்திருந்தால் அந்த விவசாயி இவரை மிரட்டியிருக்கலாம்.

எப்படி மிரட்டியிருப்பார் என்றால், உங்கள் ஆபீஸ் ரெக்கார்டுகள் பிரகாரம் நான் கடலை சப்ளை செய்து பில் கொடுத்ததாக பதிவு செய்திருக்கிறீர்கள். அந்தப் பில்லுக்கான செக் இப்போது உங்கள் மேல் ஆபீசிலிருந்து வந்திருக்கிறது. அதை நீங்கள் எனக்கு இப்போது கொடுக்காவிட்டால் நான் அந்தச் செக்கைக் கொடுப்பதற்காக லஞ்சம் கேட்கிறார் என்று உங்கள் பேரில் உங்கள் பெரிய அதிகாரிக்கும் உங்கள் மந்திரிக்கும் பெட்டிஷன் எழுதுவேன். உங்கள் வேலை போய்விடும் என்று மிரட்டியிருப்பார். இவர் பயந்து போய் செக்கைக் கொடுத்திருப்பார்.

அந்த விவசாயி மலை முழுங்கி மகாதேவனாக இருந்திருப்பான். இவரை நன்றாக ஏமாற்றி விட்டான். இந்த மாதிரி சிக்கலில் இருந்து சூதானமாகத் தப்பிக்க நீங்களும் ஒரு திருடனாக இருக்கவேண்டும். அதாவது திருடர்களின் குணங்களை நன்கு அறிந்திருக்கவேண்டும். இந்த வேளாண் அலுவலர் என்ன செய்திருக்கவேண்டுமென்றால்-

1. கடலை சப்ளை செய்த பில் அந்த விவசாயியிடம் இருந்து வாங்கும்போதே இன்னொரு கடிதத்தில் இந்த பில்லில் குறிப்பிட்டுள்ள கடலையை நான் இன்னும் சப்ளை செய்யவில்லை. அறுவடை முடிந்ததும் கடலையை சப்ளை செய்து விட்டு செக்கை வாங்கிக்கொள்கிறேன் என்று எழுதி அவரிடம் கையெழுத்து வாங்கி, இரண்டு சாட்சிகளிடமும் கையெழுத்து வாங்கி வைத்திருந்திருக்கவேண்டும்.

2. இவருடைய மேலதிகாரிதான் செக் போட அதிகாரம் பெற்றவராயிருப்பார். அவரிடம் , சார் இந்த பில்லுக்கு செக் போட்டு இங்கேயே வைத்திருங்கள். நான் அந்த விவசாயி கடலையை சப்ளை செய்த பிறகு வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கவேண்டும். பில் பாசாகி செக் போட்ட விவரம் யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கவேண்டும்.

அப்படி அந்த விவசாயி கடலையைக் கொடுக்காவிடில் அவரிடம் வாங்கிய கடிதத்தை வைத்து நடந்தவைகளை விவரமாக எழுதி மேலதிகாரிக்குத் தெரிவித்து விட்டால் வேலை முடிந்தது. அரசுக்கு எந்தப் பணமும் நட்டமாகவில்லை. நடைமுறைகளில் ஒரு தவறு ஏற்பட்டுவிட்டது. ஒரு எச்சரிக்கை கடிதம் வரும் அவ்வளவுதான்.

இந்த குயுக்தி எல்லாம் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஒருவரும் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் என்னுடைய அதிர்ஷ்டம் நான் முதல் முதலாகச் சேர்ந்த ஆபீசில் என் மேல் அதிகாரியே சில திருட்டுகளைச் சொல்லிக்கொடுத்தார்.

சென்னை மாநகராட்சியில் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் மஸ்டர் ரோல் ஊழல் என்று ஒன்று பிரபலமாகப் பேசப்பட்டது அநேகருக்கு நினைவிருக்கலாம். தினக்கூலி வாங்கும் ஆட்களுக்கு ஒரு பட்டியல் உண்டு. அதற்கு மஸ்டர் ரோல் என்று பெயர். சென்னை மாநகராட்சியில் தினமும் எப்படியும் இருநூறு முன்னூறு ஆட்கள் தேவைப்படும். அப்படி முன்னூறு ஆட்களை எடுக்கும்போது கூட இருபத்தைந்து ஆட்களை எடுத்ததாக கணக்குக் காட்டினால் யாரும் கண்டு பிடிக்க முடியாது.

இதை கூட்டாக எல்லோரும் சேர்ந்து செய்து, வெளியில் தெரிந்து பிரபலமாகப் பேசப்பட்டது. அப்போது நான் நினைத்துக் கொள்வேன். நான் பார்க்காத மஸ்டர் ரோலா, நான் செய்யாத ஊழலா என்று நினைத்துக் கொள்வேன். நான் பொள்ளாச்சியில் பண்ணை மேலாளராக இருந்தபோது தினம் எப்படியும் இருபது முப்பது பேரை வேலைக்கு எடுப்போம். கூட நாலைந்து பேரைச் சேர்த்தால் யாரும் கண்டுபிடிக்க முடியாது.

இப்படி நானே, கைசுத்தம் என்று இன்றைக்குப் பீற்றிக்கொள்ளும் நானே, செய்திருக்கிறேன். ஆனால் அது எனக்காகச் செய்ததில்லை. என்னுடைய மேலதிகாரியே சொல்லி நான் செய்து அந்தப் பணத்தை அவரிடம் கொடுத்திருக்கிறேன். அதிலிருந்து ஒரு பைசா கூட நான் எடுத்ததில்லை. அங்குதான் நான் இந்த மஸ்டர் ஊழலைக் கற்றுத் தேர்ந்தேன்.

பிறகு முதுகலைப் பட்டம் பெற்று கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்டில் சேர்ந்த பிறகு பல ஊழல்களைப் பார்த்திருக்கிறேன். பிறகு நான் பதவி உயர்வு பெற்று ஸ்டோர்ஸ் ஆபீசர் என்ற பதவியில் இருந்திருக்கிறேன். பொருட்கள் வாங்குவதில் எப்படி எப்படி திருட்டுத்தனம் செய்வார்க்ள என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

ஒரு முறை எங்கள்  துணைவேந்தரே என்னைக் கூப்பிட்டு கெமிஸ்ட்ரி லேபில் கெமிகல்ஸ் வாங்காமலேயே பில் மட்டும் வாங்கி பாஸ் பண்ணமுடியுமா என்று கேட்டார். மற்றவர்களாயிருந்தால் அவருக்குப் பயந்து கொண்டு அப்படியெல்லாம் செய்ய முடியாது சார், என்று கூறியிருப்பார்கள். நான் உண்மையைக் கூற என்றும் பயந்ததில்லை. செய்யலாம் சார். கெமிகல்ஸ் வாங்காமலேயே வாங்கியதாக கணக்குக் காட்டி அந்த கெமிகல்ஸை கொஞ்சம் கொஞ்சமாக உபயோகப் படுத்தியதாகக் கணக்கு காட்டினால் யாராலும் கண்டு பிடிக்க முடியாது. இது அந்தந்த அலுவலகர்களின் நாணயத்தைப் பொறுத்தது என்று சொன்னேன். அவர் இதைக் கேட்டுக் கொண்டாரே தவிர எந்த அபிப்பிராயமும் கூறவில்லை.

அன்று நான் நினைத்திருந்தால் ஒரு பக்காத் திருடனாக இருந்திருக்கலாம். ஆனால் அப்படி இருந்திருந்தால் இன்று, அதாவது ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் கழித்தும் உடல் நலத்தோடும் மனநலத்தோடும் இருந்திருக்க முடியாது. படுக்கையில் படுத்தால் நான் செய்த திருட்டுகள்தான் கண்முன் வரும், தூக்கம் வராது. இப்போது படுக்கையில் படுத்தால் இரண்டு நிமிடத்தில் தூங்கி விடுகிறேன்.

12 கருத்துகள்:


  1. //இப்போது படுக்கையில் படுத்தால் இரண்டு நிமிடத்தில் தூங்கி விடுகிறேன்.//

    இந்த பாக்யம் எல்லோருக்கும் கிட்டாது. கவிப்பேரரசு வைரமுத்து சொல்வார். ‘படுத்தால் மனச் சிக்கலும் எழுந்தாலும் மலச் சிக்கலும் இல்லாதவனே மனிதன். என்று.

    பதிலளிநீக்கு
  2. இரண்டு நிமிடத்தில் தூக்கம் !
    அய்யா! இதுவல்லவோ நேர்மைக்கு கிடைக்கும் ஊக்கம்!
    ஆக்கம் அருமை!
    அனுபவ பதிவு அட்டகாசம் அய்யா!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  3. மனச்சாட்சியுடன் செயல்...

    முடிவு பத்தி உணர வேண்டிய பாடம்...!

    பதிலளிநீக்கு
  4. மனசு சுத்தமாக இருந்தால் மனுசனாக இருக்கலாம் ஐயா...
    எதற்கும் பயப்பட வேண்டியதில்லை...

    பதிலளிநீக்கு
  5. நான் பார்க்காத மஸ்டர் ரோலா, நான் செய்யாத ஊழலா?!!! Ethukku Nainaa vamba vilaikku vaangareenga ?

    பதிலளிநீக்கு
  6. படுக்கயில் படுத்தால் இரண்டு நிமிடத்தில் தூக்கம் வராத்தினால்தான் பல ஆடிட்டர்கள் (CA) மதுவை இரவில் நடுகிறார்கள் ?

    பதிலளிநீக்கு
  7. மனசாட்சியும், நேர்மையும் என்றும் நிம்மதியைத் தரும் என்பதற்கு நல்ல உதாரணம். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ஆம்
    நிச்சயம் படுக்கை பணம் வசதி வாய்ப்பு தராத
    தூக்கத்தை மன நிம்மதியும் மனத் தூய்மையும்
    தானே தர முடியும்
    சொல்லிச் சென்றவிதமும் முடித்த விதமும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. எல்லாவற்றையும் இப்படி அதிரடியாக பேசும் உங்களின் குணம் வியக்க வைக்கிறது! உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது குறித்து மகிழ்ச்சி! எங்களுக்கும் அதனால் நிறைய அனுபவப் பகிர்வுகள் கிடைக்கிறது அல்லவா? மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  10. தவறு செய்பவர் தப்பிக்கும் வழிதெரிந்தால்தான் அதைச் செய்ய வேண்டும் என்கிறீர்களா?பதினாறு வயதிலேயே அதெல்லாம் சரிப்படாது என்று என் வேலையை விட்டகதையைப் பதிவாக்கி இருக்கிறேனே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோக்கம் நல்லதாக இருக்கவேண்டும். அதை அடைய குறுக்கு வழிகளைக் கடைப்பிடிப்பதில் தவறில்லை. அப்டிச்செய்யும்போதும் அதனுடைய நெளிவு சுளிவுகள் தெரிந்திருக்கவேண்டும்

      போலீஸ்காரர்களுக்கு திருடுவது எப்படி என்று தெரிய வேண்டும். திருடர்களைக் கண்டுபிடிக்க இந்த அறிவு அவசியம் தேவை.

      நீக்கு