புதன், 27 மார்ச், 2013

11. விவசாய மகாநாட்டின் தீர்மானங்கள்


ஐந்தாம் நாள் எல்லோரும் காலை பத்து மணிக்கு மகாநாட்டுப் பந்தலில் கூடினோம். ஏறக்குறைய அனைத்து முதல் மந்திரிகளும் தங்கள் தங்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். அந்தந்த மாநில விவசாய அதிகாரிகளும் விவசாயிகளும் மட்டுமே பந்தலில் இருந்தார்கள். ஓரிரு விவசாய மந்திரிகள் கண்ணில் பட்டார்கள்.

நான் பிரதம மந்திரியைப் பார்த்து நம் நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தின் மேல் நமது முதலமைச்சர்களுக்கு உண்டான அக்கறையைப் பார்த்தீர்களா என்றேன். அவர் தலையில் அடித்துக் கொண்டு நீங்கள் ஒரு முறை இவர்களைப் பார்த்ததுமே இப்படி அலுத்துக் கொள்கிறீர்களே, நான் அன்றாடம் இவர்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டு இருக்கிறேனே, என்னுடைய நிலையை யோசித்துப் பாருங்கள் என்றார். ஆமாங்க, உங்கள் நிலை உண்மையிலேயே பரிதாபத்திற்கு உரியதுதான் என்றேன்.

 மகாநாட்டு அலுவல்கள் தொடங்கின. பிரதம மந்திரி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்து சொன்னதாவது. இப்போது நாம் இங்கு ஓரு விவசாயப் புரட்சி செய்யப் போகிறோம். இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வெறும் பேச்சாக நின்று விடப்போவதில்லை. அவைகள் உடனடியாக அமுலுக்கு வரப்போகின்றன. அதில் சந்தேகம் வேண்டாம். இப்போது தீர்மானங்களை நிதி மந்திரி முன்மொழிவார்.

நிதி மந்திரி எழுந்து தீர்மானங்களை ஒவ்வொன்றாக முன் மொழிந்தார்.

1. நம் தேவலோகத் தூதுவர் வருண பகவானிடம் போட்டுள்ள ஒப்பந்தப்படி இனிமேல் இந்தியாவில் மாதம் மும்மாரி பெய்யும். அனைத்து ந்திகளிலும் வருடம் முழுவதும் தண்ணீர் வற்றாமல் ஓடும். எந்த ஆற்றிலும் நகரக் கழிவு நீரோ அல்லது தொழிற்சாலைக் கழிவு நீரோ கலக்காது. அவற்றிற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன.

2. விவசாயம் தொழில்துறையாக அறிவிக்கப்படுகிறது. தொழில் துறை நிறுவனங்கள் செயல்படும் விதத்திலேயே இனிமேல் விவசாயமும் செயல்படும். அதில் முக்கியமான செயல்பாடு, உற்பத்திப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்தல். உற்பத்திச் செலவுகளுக்கு மேல் 20 சதம் அதிகம் வைத்து விலை நிர்ணயிக்கப்படும். இந்தியா முழுவதும் விளை பொருட்களின் விலை ஒரே மாதிரி இருக்கும். வியாபாரிகள் கொள்முதல் விலைக்கு மேல் 20 சதம் மட்டுமே லாபம் வைக்கலாம்.

3. விவசாய விளை பொருட்களை சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்குவதற்கு வியாபாரிகள் முன் வராவிட்டால் அந்தப் பொருட்களை அரசே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு கொள்முதல் செய்து கொள்ளும். அதிக விளைச்சல் வரும்போது விலை இல்லையே என்று எந்த விவசாயியும் கவலைப்படவேண்டியதில்லை.

4. விவசாயம் இனி நவீன தொழில் நுட்பங்களுடன் நடைபெறும்.வேலைகளை சுலபமாக்கும் நவீன கருவிகள் உபயோகிக்கப்படும். விவசாய வேலைகள் இனிமேல் நன்கு பயிற்சி பெற்ற தொழில் நிபுணர்களால் செய்யப்படும். அவர்களை பயன்படுத்த அந்தந்த கிராமங்களில் சேவை மையங்கள் அமைக்கப்படும்.

5. இயற்கை வழி விவசாயமே இனி கடைப்பிடிக்கப்படும். நச்சு கலந்த பூச்சிக்கொல்லிகள் உபயோகப் படுத்தப்படமாட்டாது. மண்வளம் பாதுகாக்கப்படும். காடுகளை எக்காரணம் கொண்டும் யாரும் அழிக்க முடியாது. அவைகளின் பரப்பளவு அதிகரிக்கப்படும். விவசாய நிலங்களை இனி வேறு எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தக் கூடாது.

6. வருடம் முப்போகம் விளைவதில், ஒரு போகம் பசுந்தாள் உரப் பயிர்களுக்காக ஒதுக்கப்படும். இதற்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும்.

7.இயற்கை உரங்களை அரசே தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கும்.
குறிப்பாக மனிதக் கழிவுகள் வீணாகாமல் உரம் தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப்படும்.

8. மக்ளுக்கு வேண்டிய தரமான, கலப்படமில்லாத உணவுப்பொருட்கள் ஆங்காங்கே நிறுவப்படும் அரசு அங்காடிகள் மூலமாக விற்கப்படும்.

9. முக்கியமான மற்றொரு தீர்மானம். விவசாயிகளின் கடன்கள், அவர்கள் எங்கு வாங்கியிருந்தாலும் சரி, அவைகள் மொத்தமாக ரத்து செய்யப்படுகின்றன.  இனிமேல் அவர்களுக்கு விவசாய வேலைகளுக்குத் தேவையான நிதி வட்டியில்லாக் கடனாகக் கொடுக்கப்படும்.

மத்திய விவசாய மந்திரி இந்தத் தீர்மானங்களை வழி மொழிந்தார்.

இந்தத் தீர்மானங்களைக் கேட்ட மகாநாட்டுக்கு வந்திருந்த அனைத்து மக்களும் எழுந்து நின்று கரகோஷம் செய்த சத்தம் கேட்டு வானத்திலிருந்து மும்மூர்த்திகளும் வந்து விட்டார்கள். நல்ல விஷயங்கள்தான் நடக்கிறது என்று அறிந்து கொண்டு ஊர் திரும்பினார்கள்.

இப்படியாக மாநாட்டுத் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறின.

கடைசியில் பேசிய பிரதம மந்திரி கூறியதாவது.

அனைத்து விவசாய மந்திரிகளும் விவசாய அதிகாரிகளும் இந்த தீர்மானங்களை அமுல் படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுப்பார்கள். இந்த நடைமுறைகளில் வரும் பிரச்சினைகளை சமாளிக்க விவசாய நிபுணர்கள் கொண்ட அனைத்திந்திய கமிட்டி ஒன்று 24 மணி நேரமும் செயல்படும்.

இவ்வாறு விவசாய மகாநாடு முடிவுக்கு வந்தது.

மகாநாடு முடிந்தவுடன் சில பத்திரிகை நிருபர்கள் சில சந்தேகங்களை கேட்டார்கள். விவசாயப்பொருட்களுக்கு இவ்வாறு விலை வைத்தால் அந்தப் பொருட்களை மக்களை வாங்குவார்களா என்று கேட்டார்கள். அதற்கு நிதி மந்திரி சொன்னார். இப்போதுள்ள லகுவாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறையில் இருப்பதால் மக்களின் தனிப்பட்ட பொருளாதாரம் வெகுவாக முன்னேறியுள்ளது.

விவசாயம் தவிர அனைத்துத் துறைகளிலும் பொருட்களின் விலை, வேலையாட்களின் கூலி ஆகியவை பன்மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால் விவசாயத்துறையில் மட்டும் இந்த மாற்றங்கள் ஏற்படவில்லை. ஏனென்றால் இன்றைய சந்தை நிலவரப்படி விவசாயி ஆட்களுக்கு கூலி கொடுக்க முடிவதில்லை. ஏன்? அவன் விளைவிக்கும் பொருளுக்கு சந்தையில் கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. இப்படியே இருந்தால் விவசாயம் அழிந்து போய்விடும்.

ஏன் விவசாயம் மட்டும் இப்படி இருக்கவேண்டும்? கணினித்துறையில் ஒருவன் 50000 ரூபாய் சாதாரணமாக சம்பளம் வாங்குகிறான். தொழில் துறையில் மேலாளராக இருப்பவனுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள். கட்டிடத்துறையில் சாதாரண மேசனுக்கு 600 - 700 என்று சம்பளம். அவன் நான் ஏன் வாரம் முழுவதும் வேலைக்குப் போகவேண்டும்? இரண்டு நாள் போனால் என்னுடைய ஒரு வாரத்தேவைக்கான பணம் கிடைத்துவிடுகிறது என்கிறான்.

விவசாயிதான் ஊருக்கு இளைத்தவனா? அவன் எப்பொழுதும் கிழிந்த வேட்டியுடன்தான் இருக்கவேண்டுமா? அவன்தானே எல்லோருக்கும் உணவு உற்பத்தி செய்து கொடுக்கிறான்? அவன் உற்பத்தியை நிறுத்தி விட்டால் மக்கள் எதைச் சாப்பிடுவார்கள்?

மற்ற தொழில்களில் உற்பத்தி செய்ய்ப்படும் பொருட்களின் விலையை மட்டும் அவ்வப்பொழுது அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு செல்போனின் விலை 40000 ரூபாய் என்கிறார்கள். பெட்ரோல் விலை வாரத்திற்கு ஒரு முறை ஏறுகிறது. எங்காவது வாகன நெருக்கடி குறைந்துள்ளதா?

இதற்கெல்லாம் செலவு செய்யத் தயங்காத மக்கள் தாங்கள் உண்ணும் உணவுப் பொருட்களுக்கு, கட்டுப்படியாகும் விலை கொடுக்க ஏன் தயங்கவேண்டும். ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் என்றால் 50000 ரூபாய் சம்பளம் வாங்குபவர் கொடுப்பதற்கென்ன? மார்க்கெட்டில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் முருங்கைக் காயை விவசாயியிடமிருந்து வியாபாரிகள் என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

முந்தின நாள் இரவு குடித்த பானங்களின் வயிற்றெரிச்சல் தீர தினமும் காலையில் ஒரு இளனி 20 ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கிறார்களே, அதில் அதை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு எவ்வளவு சேருகிறது என்று தெரியுமா? வெறும் ஐந்து ரூபாய மட்டுமே.

தக்காளி சீசனில் அமோகமாக விளைந்துவிட்டால் அதைப் பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் செலவிற்கு கூட வியாபாரிகள் விலை கொடுப்பதில்லை என்று எத்தனை பேருக்குத் தெரியும்?

விவசாயியும் ஒரு மனிதன்தானே? இந்திய நாட்டின் குடிமகன்தானே? ஒரு கட்டிடத்தொழிலாளி வாங்கும் கூலியாவது அவனுக்குக் கிடைக்கவேண்டாமா? அவனும் மானமாக வாழ வழி வேண்டாமா? தற்கொலை செய்து கொள்ளத்தான் அவன் பிறந்தானா?

மக்களே யோசியுங்கள்.


இப்படியாகவே தொழில் துறை, கல்வித்துறை ஆகியவற்றிற்கும் அடுத்தடுத்து மகாநாடுகள் நடத்தப்பட்டன. தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவைகளை விவரமாக இங்கே விவரிக்காததிற்குக் காரணம் பதிவுலக மக்களின் ஆர்வக்குறைவே.

ஆகவே பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்போகிறேன்.

எதிர் பாருங்கள் - தேவலோக சுற்றுலா

15 கருத்துகள்:

  1. நான் பிரதம மந்திரியைப் பார்த்து நம் நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தின் மேல் நமது முதலமைச்சர்களுக்கு உண்டான அக்கறையைப் பார்த்தீர்களா என்றேன்.

    நல்ல தீர்மானங்கள் நிறைவேற்றியதற்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. ஆச்சரியப்பட்டேன். இது போன்ற பதிவுகளைத்தான் தொடக்கம் முதல் உங்களிடம் எதிர்பார்த்தேன்.

    அரசாங்கமே மொத்த கொள்முதல் மையம் உருவாக்கி விவசாயிகளிடமிருந்து வாங்க வேண்டும் என்பதை நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்து அதற்குத்தான் நம்ம மணணு மோகன் வெளிசந்தையை திறந்து குளிர்சாதன கிடங்குகளை கட்ட உதவி செய்து கொண்டு இருக்கின்றார் என்றார்.

    பதிலளிநீக்கு
  3. //நம் நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தின் மேல் நமது முதலமைச்சர்களுக்கு உண்டான அக்கறையைப் பார்த்தீர்களா என்றேன்//

    பிரச்னையே அதுதான்.
    விவசாயி ஸ்டிரைக் செய்தால் உடனயாக எபக்ட் இருக்காது. விவசாயி தவிர மற்றவர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
    எனவேதான் அவனுடைய கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட முடிவதில்லை. தின சாப்பாடுக்கே ததிங்கினதோம் போடும் அவனால் நீண்ட காலம் போராட்டத்தை நீடிக்கவும் முடிவதில்லை. எனவேதான் இந்த நிலை.
    ஒரு பேங்க் ஸ்டிரைக்கோ லாரி ஸ்டிரைக்கோ போடு ஜனங்களை உடனே பாதிக்கிறது. எனவே அதன் பின்னால்தான் இந்த முதல் மந்திரிகள் ஓடுவார்கள். லாங் டெர்ம் பிளானிங் செய்யும் காலமெலாம் போயே விட்டது.

    பதிலளிநீக்கு
  4. //இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வெறும் பேச்சாக நின்று விடப்போவதில்லை. அவைகள் உடனடியாக அமுலுக்கு வரப்போகின்றன. அதில் சந்தேகம் வேண்டாம்//

    முதல் தடவையாக சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்பது உண்மையாக போகிறது.
    அருமை அய்யா நம் நாட்டில் அறிஞர்களுக்கும் ஐடியாக்களுக்கும் குறைவில்லை. என்றைக்கு அயல் நாட்டை நம்பினோமோ அன்றே நமது நாட்டு அறிவை மதிப்பதை விட்டு விட்டோம். கடைசி 300 ஆண்டுகள்தானே நம்மை ஆங்கிலேயன் ஆட்சி செய்தான். அதற்கு முன்னால் பல நூற்றாண்டுக்காலமாக நாம்தானே இங்கு வாழ்ந்து வந்தோம். ஏன் இப்படி ஒரு சுய மரியாதையற்ற நிலை. நினைத்து பார்ப்பதற்கே வெட்கமாக இல்லையா?
    நல்லது இருந்தால் எங்கிருந்தாலும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் அதற்காக நம் பழக்க வழக்கங்களை சிறிது மாற்றிகொள்ளலாம் ஆனால் முற்றிலும் விட்டு விட கூடாதல்லவா?

    பதிலளிநீக்கு
  5. விவசாயியை கேவலமாக நினைக்கும் இந்த நாடு முன்னேறுவது சிரமம் தான்...

    பதிலளிநீக்கு
  6. //அவைகளை விவரமாக இங்கே விவரிக்காததிற்குக் காரணம் பதிவுலக மக்களின் ஆர்வக்குறைவே.//

    அவ்வளவுதான் நம் மக்களின் அக்கறை.
    இதுவே விஸ்வரூபம், ஆதி பகவன் போன்ற பதிவுகளுக்கு இந்நேரம் நீங்களே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பின்னூட்டங்கள் குவிந்திருக்கும்.
    விவசாயிக்கு கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான். இதை நினைத்தால்தான் ஜீரணிக்க முடிவதில்லை.
    நம் நாடு ஜனங்களுக்கு ஒரு பெரிய அளவில் மூளை சலவை தேவை என்பது ஏன் திண்ணமான எண்ணம்
    அய்யா அவர்கள் இதை பற்றி ஒரு பதிவு போட வேண்டும். மூளை சலவைக்கு பின்னர் நாடு எப்படி முன்னேறுகிறது என்பதை பதிவு செய்யவேண்டும் என்பது ஏன் ஆசை. நிறைவேறுமா? அடஹி படிக்கிறவர்களில் 1% அளவு மாறினாலும் போதுமே கொஞ்சம் நாடு முன்னேறுமே.

    பதிலளிநீக்கு
  7. //விவசாயியும் ஒரு மனிதன்தானே? இந்திய நாட்டின் குடிமகன்தானே? ஒரு கட்டிடத்தொழிலாளி வாங்கும் கூலியாவது அவனுக்குக் கிடைக்கவேண்டாமா? அவனும் மானமாக வாழ வழி வேண்டாமா? தற்கொலை செய்து கொள்ளத்தான் அவன் பிறந்தானா?//

    ஒரு விவசாயியின் மனக்குமுறல்களை அப்படியே கொட்டியிருக்கிறீர்கள். இதுவரை யாரும் இந்த அளவுக்கு வெளிப்படியாக சொன்னதில்லை.
    நாம் நமது மனைவியை house wife வீட்டில் சும்மாத்தான் இருகிறார்கள் என்று சுலபமாக சொல்லிவிடுகிறோம். ஆனால் ஒரு நாள் ஒரே ஒரு நாள் வெயில் இருந்து அவர்கள் செய்யும் multi tasking போன்ற வேலையை செய்து பார்த்தால்தான் தெரியும்.
    அதே போன்றுதான் விவசாயியும். இன்னும் ஒரு படி மேலே. மனைவியாவது தன குடும்பத்திற்குத்தான் வேலை செய்கிறாள் சமைத்து போடுகிறாள். ஆனால் விவசாயியோ நாட்டுக்கே உணவு தயாரிக்கிறான். அவனுக்குத்தான் விலை கொடுத்து விடுகிறோமே என்று சொல்லலாம். ஆனால் கொடுக்கும் விலை கால் தூசிக்குக் கூட பற்றாது எனபது எத்தனை பேர் அறிவார்கள். ஒன்றுமில்லாத ஒரு காபிக்கு 18 ரூபாய் அழுகிறோம். அரிசி விலை சிறிது ஏறினாலும் (அந்த விலை ஏற்றம் உண்மையில் விவசாயியை சென்றடைவதில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்) உடனே கூப்பாடு போடுகிறோம். நிதி அமைச்சர் சிதம்பரமும் கூட சேர் மார்கட் விழுந்து விட்டால் தூங்காமல் சிவந்த கண்களுடன் மும்பையில் இருக்கிறார். 1000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும் எட்டி கூட பார்ப்பதில்லை அதுதான் இன்றிய இந்தியாவின் கேவலமான நிலை.
    கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி என்று பாடினால் போதாது அந்த தொழிலாளி கண்ணில் ஒரு துளி கண்ணீர் சிந்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமையல்லவா.
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற பழ மொழிகளில் உயிரில்லை. உண்டி கொடுக்கும் விவசாயியை பாதுகாத்தலே அந்த பழமொழிக்கு உண்மையில் உயிர் கொடுக்கும்

    பதிலளிநீக்கு
  8. //அவைகளை விவரமாக இங்கே விவரிக்காததிற்குக் காரணம் பதிவுலக மக்களின் ஆர்வக்குறைவே.//

    பதிவுலக மக்களே
    உயிர்தெழுங்கள். இதற்கப்புறமும் அமைதியாக இருந்தால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். இந்நேரம் ஒரு 100 பின்னூட்டங்கள் வந்திருக்க வேண்டாமா?
    ஆரம்பியுங்கள்
    அய்யா போன்றவர்கள் ஊக்கம் அளிக்க வேண்டியது நம் தலையாய கடமையன்றோ.
    அய்யா அவர்கள் சொல்வது பற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
    அவரை உற்சாகப்படுத்துங்கள்

    பதிலளிநீக்கு
  9. விவசாயத்தை ஒரு சில வருடங்கள் நிறுத்தி வைக்க வேண்டும்..என்பதே இதற்கு ஒரே தீர்வு..ஆம்..நான் குறிப்பிடுவது விவசாயி ஸ்ட்ரைக் !

    பதிலளிநீக்கு
  10. //மார்க்கெட்டில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் முருங்கைக் காயை விவசாயியிடமிருந்து வியாபாரிகள் என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
    //முந்தின நாள் இரவு குடித்த பானங்களின் வயிற்றெரிச்சல் தீர தினமும் காலையில் ஒரு இளனி 20 ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கிறார்களே, அதில் அதை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு எவ்வளவு சேருகிறது என்று தெரியுமா? வெறும் ஐந்து ரூபாய மட்டுமே//


    இல்லையென்றால் இடைத்தரகர்களாகிய நாங்கள் எப்படி வாழ்வதாம்..
    நாங்கள் மட்டும் இல்லையென்றால் வியாபாரமே படுத்து விடும் அல்லவா?
    விளைந்த விலை பொருட்களை விவசாயி கொண்டு போய் விற்றுக்கொண்டிருந்தால் அவன் விவசாயம் பார்க்க வேண்டாமா?
    இல்லை எல்லோரும் தனக்கு தேவையான பொருட்களை விவசாயியிடம்தான் என்று வாங்க வேண்டும் என்றால் அதற்குத்தான் அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும்,. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு இடத்திற்கு போக வேண்டியதிருக்கும்.
    வேறு வேலை செய்ய முடியாது.
    இந்திய முழுவதும், ஏன் உலக முழுவதும் விளையும் பொருட்களை ஓரிடத்தில் கொணர்ந்து சேர்க்கும் வியாபாரிகளை நீங்கள் இடைத்தரகர்கள், ஐந்து ரூபாய் முருங்கைக்காயில் ஒரு ரூபாய் மட்டுமே விவசாயிக்கு போகிறது. மீதி நான்கு ரூபாய் வியாபாரிக்கு, 20 ரூபாய் இளநீரில் 5 ரூபாய் விவசாயிக்கும் 15 ரூபாய் எங்கள் பாக்கெட்டுக்கும் போகிறது என்று கமென்ட் அடிக்கிறீர்கள்.

    ஏப்ரல் 1 ந்தேதி லாரி ஸ்டிரைக் வரபோகிறது.
    விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்றுக்கொள்ளட்டும். மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எங்கு கிடைக்கிறதோ அங்கி சென்று வாங்கிகொள்ளட்டும்.
    இடைத்தரகர்கள் என்று கிண்டல் செய்யப்படும் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் நீங்கள் வாழவே வேண்டாம் என்று சொல்லவில்லையே
      சிறிது கரிசனத்தோடு வாழுங்கள் என்று மட்டுமே சொல்கிறோம்.
      நான்கு மாதம் பாடுபடும் விவசாயிக்கு 20%-30%. வாங்கி வந்து விற்கும் வியாபாரிக்கு 50%-60%. இதை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு 10%-20%. இதைதான் வேண்டாம் என்று சொல்கிறோம்.
      நீங்களும் வாழுங்கள் எங்களையும் வாழ விடுங்கள் என்றுதான் சொல்கிறோம்.
      நாள் முழுதும் உழைக்கும் விவசாயி கோவணததோடுதான் இருக்கிறான். உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அரசு அதிகாரிகளும் செலவு செய்யும் பொது எண்ணித்தான் செலவு செய்ய முடிகிறது. ஆனால் இடைத்தரகர்களாக செயல்படும் நீங்கள் மட்டும் சிறிது காலத்திலேயே கார் என்ன மாடி வீடு என்ன என்று பிரமாதமாக வளர்ந்து விடுகிறீர்களே அதைத்தான் சொல்கிறோம்.

      ஏப்ரல் 1 ந்தேதி லாரி லாரி ஸ்டிரைக் வரப்போகிறது.
      விவசாயி விளைந்த பொருட்களை அழுக விடப்போகிறீர்கள்.
      மக்களாகிய நாங்கள் 2 நாட்கள் முதலாகவே அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கி வைக்க போகிறோம்.
      உங்களுக்கு எந்த விதத்திலும் நஷ்டமாக போவதில்லை.

      நீக்கு
    2. நீங்கள் ஒரு நாளும் வியாபாரியின் கஷ்டங்களை புரிந்து கொள்ளப்போவது இல்லை.
      ஒரு இடத்தை பிடிக்க பகடி கொடுக்கவேண்டும். கிடைக்கும் இடத்தில் கடை வைக்க வேண்டியதுதானே என்று சொல்லலாம். கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற கதைதான். ஊரின் கோடியில் கடை வைத்தால் எத்தனை பேர் வரபோகிரீர்கள். எனவே ஊரின் முக்கியமான ஜன புழக்கம் உள்ள இடங்களில் கடை வைத்தால்தான் பிசினெஸ் ஓடும். அதற்க்கு பகடி கொடுத்துத்தானே ஆகவேண்டும். அது திரும்பி வராத காசுதானே.

      அப்புறம் அரசியல் வாதிகள். எந்த ஒரு பிரச்சினை என்றாலும் வசூலுக்கு வந்து விடுவார்கள். அதெல்லாம் எந்த அக்கௌண்டில் எழுதுவது.
      பொழுது போய் பொழுது விடிந்தால் போலிஸ்காரர்கள் தொந்திரவு ஒன்றுமில்லை. ரோடோரத்தில் கடை போட்டிருக்கும் கடைக்காரன்
      எவ்வளவு அழ வேண்டும் தெரியுமா? கொஞ்சம் சுணங்கினாலும் அடுத்த நாள் அங்கு கடை போட முடியாது.
      பிறகு ஊர் விழாக்களுக்கு டொனேஷன்.
      கடை வேலைக்காரர்களை கண் கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் கொஞ்சம் ஏமாந்தால் சாமான் போய்விடும். நாள் வேலையாளாக இருந்து கொஞ்சம் இடம் கொடுத்தால் 2-3 வருடங்களில் நமக்கு போட்டியாக பக்கத்திலேயே ஒரு கடை போட்டு விடுவான். நமது பிசினஸ் பாதி போய் விடும்.
      எல்லாவற்றிக்கும் மேலாக சொந்தக்காரர்களின் ஒரு கல்யாணம் காட்சி எதற்கும் போக முடியாது. கடை 2-3 நாட்கள் சாத்தினால் வாடிக்கையாளர்கள் குறைந்து விடுவார்களே.
      இதெல்லாம் மாச சம்பளம் வாங்குபவர்களுக்கும் புரியாது.
      விவசாயம் செய்பவர்களுக்கும் புரியாது.
      இந்த மாதிரி பதிவு போடுபவர்களுக்கும் புரியாது.
      அனுபவித்தால்தான் தெரியும்.

      நீக்கு
  11. சந்தையில் கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை.//உண்மைதான் அரசாங்கமே இன்று கவலைப்படவில்லை .விவசாயிகள் உள்ளம் உங்களுக்காவது தெரிந்தது மகிழ்ச்சியே

    பதிலளிநீக்கு
  12. ஹா ஹா நல்ல ஜோக்!!! ஆனா விவசாயி கட்சிக்கி 200/300 கோடி அழ மாட்டானே? பின்னே அவன் உருப்படாமல் போனாதானே அவனை வைத்து அரசியல் நடத்த முடியும்? இன்னும் 90 சதவிகித விவசாயம் மழையை நம்பியே இருக்கிறது. அதாவது நாம் இன்னும் 1900 லேயே இருக்கிறோம்!

    குஜராத்தின் இப்போதைய தண்ணீர் பிரச்சினை ஒரு உதாரணம், விவசாயமாம், விவசாயம்.கடன் கட்ட முடியாமல் சாப்பிட உணவில்லாமல் பாலிடால் குடித்து செத்தவர்கள் எத்தனை பேர்??? உழுரவனெல்லாம் விழ ஆரம்பித்து எவ்வளவோ நாட்களாச்சு :-(

    பதிலளிநீக்கு
  13. /அந்தந்த மாநில விவசாய அதிகாரிகளும் விவசாயிகளும் மட்டுமே பந்தலில் இருந்தார்கள். ஓரிரு விவசாய மந்திரிகள் கண்ணில் பட்டார்கள்./

    போட்டிருக்கும் படம் அவ்வளவு பொருத்தமாய் இல்லையே!

    /தொழில் துறை நிறுவனங்கள் செயல்படும் விதத்திலேயே இனிமேல் விவசாயமும் செயல்படும்./
    competition, resource optimisation and profit optimisation என்பவை பெரும்பாலான தொழில் துறை நிறுவனங்களின் முக்கியா கோட்பாடு.
    உங்களது பெரும்பாலான தீர்மானங்கள்(நிறுவனங்கள் எப்படி செயல் பட்டாலும் அது இறுதி பலன்களை பாதிக்காது.20 சதவீதம் லாபம் நிச்சயம்.), இக்கோட்பாடுகளை முறித்து விடாதா?


    /விவசாய வேலைகளுக்குத் தேவையான நிதி வட்டியில்லாக் கடனாகக் கொடுக்கப்படும்/
    முந்தைய பதிவில் நீங்கள் சொன்னது இது:
    /தவிர இந்தியா முழுவதிலும் இலவசம் என்பது எங்கும் எந்த ரூபத்திலும் இருக்கக் கூடாது/
    வட்டியில்லா கடன் என்பதும் ஒரு வகை இலவசம்தானே..
    விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது, மிகவும் வருந்த வேண்டிய விஷயம். ஆனால் அப்படித் தூண்டும் பல காரணங்களில் ஒன்று அவர்கள் தன்மான உணர்ச்சி (self esteem). மாற்று திட்டங்கள் எதுவாய் இருந்தாலும் பாடுபடும் அந்த விவசாயின் சமூக அந்தஸ்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும். If we give him an assured market for his production and taking care of inponderables (like crop failure)by an insurance, the agriculturist would lead a decent life with self esteem.
    If your super computer takes care of corruption, cheating and criminal mentality, the existing framework itself would yield the desired results.

    /ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் என்றால் 50000 ரூபாய் சம்பளம் வாங்குபவர் கொடுப்பதற்கென்ன?/
    உங்கள் கருத்து மக்களின் வருமானம் பெருகிவருகிறது. பல தரப்பட்ட பொருட்கட்கும் சேவைகட்கும் கூடுதல் விலை தருகிறார்கள் (விவசாய பொருட்கள் தவிர) . எனவே விவசாய பொருட்கட்களின் விலையை ஏற்றுவது தவறாகாது.
    உணவுப் பொருட்கள் அனைவருக்கும் இன்றி அமையாதது. மற்ற பொருட்கள்/ சேவைகள் அவ்விதம் அல்ல.முயன்றால் தவிர்க்க இயலும். உணவை தவிர்க்க முடியாது. நீங்கள் கடை நிலை மக்களை நினைத்து பாருங்கள் . (அவர்கள் அனைவரும் விவசாயிகள் மட்டும்தானா ? வேறு தொழில் புரிவோரில்லையா?).மத்திய தர வர்கத்தையும் விலைவாசி மிகவும் பாதிக்கும். உங்களையே எடுத்து கொள்ளுங்கள். ஒய்வு பெற்று கடந்த காலத்தின் சேமிப்பையும் , போதாத பென்ஷன் வரவையும் கொண்டு விஷம் போல் ஏறும் விலைவாசியில் சமாளிக்க முடிகிறதா? ஒரு நல்ல அரசின் அடையாளம் அனைவருக்கும் தடங்கல் இன்றி அடிப்படைதேவைகளைபெற வழி செய்து விலைவாசியை கட்டுக்குள் (1%) வைத்திருப்பதுதான். இதனால் உங்களது சேமிப்பு தன் வலிமையை இழக்காது.. நாடு வளம் பெறும். ரூபாயின் மதிப்பு குறையாது. பல விதத்தில் விலை வாசி கட்டுப்பட்டு நன்மை பயக்கும்.


    விவசாயப் பொருட்களின் market நிலை மேம்பட அத்துறையின் கட்டுமான தேவைகள் பலப்படுத்தப் பட வேண்டும். Storage/pest control/ambience etc. சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். To provide for space needed for ensuing procurement, Government sold off the current stocks by export incurring a loss of Rs.1700 Crores. தேவைதானா?
    http://articles.timesofindia.indiatimes.com/2013-03-25/india/38008807_1_lakh-tonnes-wheat-subsidy-bill

    Your decision emphasising organic farming and banning of chemical fertilizer is quite good. I did not however come across any comments on "genetic" farming. You have emphasised scientific and modern techniques and I do hope they do not include any resort to "genetic" strategies.
    Overall I empathise, as many others do, with the plight of my farming brethren and it is high time their welfare is focussed upon.

    பதிலளிநீக்கு