திங்கள், 8 அக்டோபர், 2012

இயற்கை விவசாயம் - கூடுதலாக சில சிந்தனைகள்


இயற்கை வழி விவசாயம் மூலம் கிடைக்கும் உணவுப்பொருட்கள் சுகாதாரமானவை. மனிதன் ஆரோக்யமாக வாழ்வதற்கு நல்ல, சுகாதாரமான, கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் இல்லாதிருப்பது அவசியம். இயற்கை வழி விவசாயம் செய்தால் அத்தகைய உணவுப் பொருட்கள் நமக்கு கிடைக்கும். தவிர, சுற்றுச்சூழல் மாசுபடுவதில்லை. நிலவளம் பாதுகாக்கப்படுகிறது.

ஏனெனில் இந்த முறை விவசாயத்தில் இயற்கைக்கு எதிராக எதுவும் செய்யப்படுவதில்லை. இயற்கை உரங்கள், இயற்கை வித்துக்கள், இயற்கையில் கிடைக்கும் பூச்சி மருந்துகள் இவைகளையே பயன்படுத்துகிறார்கள். இப்படி விவசாயம் செய்யப்படும்போது நில வளம் பாதுகாக்கப்படுகிறது. சத்துள்ள, சுகாதாரமான உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. இத்தகைய உணவைச் சாப்பிடுபவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

இத்தகைய விவசாயத்தை நிச்சயமாக செயல்படுத்த முடியும். அதற்கான மனநிலைதான் வேண்டும். இந்த முறை விவசாயத்தில் பல விதமான பயிர்கள் விளைவிக்கப்படுவதால் நில வளம் பாதிக்கப்படுவதில்லை. பலர் இத்தகைய பண்ணைகளை வைத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பண்ணைகளைப் பராமரிப்பதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அது தவிர, அந்தப் பண்ணைதாரர்களுக்கு இது ஒரு பெருமையும் சேர்க்கும். அவர்கள் லாப நஷ்டம் பார்ப்பதில்லை. அல்லது அவர்கள் கணக்குகள் லாபம் காட்டக்கூடும்.

மனித மனம் விசித்திரமானது. தான் கொண்ட நம்பிக்கைக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் கேட்காது. அதனால் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யும். நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது பேர் செய்வது தவறு என்று சொல்லும். தான் சொல்வது பிரச்சினை மிகுந்தது என்றாலும், நம்பிக்கை இழக்காமல் சொன்னதையே செயல்படுத்துக்கொண்டு இருக்கும்.

இதற்கு இயற்கை விவசாயமும் விலக்கல்ல. இயற்கை விவசாயம் நல்லதுதான். ஆனால் வளர்ந்த நாடுகளிலேயே பத்து சதம் விவசாயிகள் கூட இயற்கை விவசாயம் செய்வதில்லை. அதன் நன்மைகள் தெரிந்தும் கூட அவர்களால் இயற்கை விவசாயம் செய்ய முடியவில்லை.

ஏன்? இயற்கை விவசாயத்திற்கு வேண்டிய இயற்கை உரங்கள் போதுமான அளவு இல்லை. இந்தியாவில் மொத்தமாக என்ன நடக்கிறது என்று நேரில் போய் பார்க்க முடியாது. நாம் அறிந்ததை வைத்து அறியாததை யூகிக்க முயல்கிறோம். அதுதான் நடைமுறையில் செய்யக்கூடியது. எனக்குத் தெரிந்த ஒரு யதார்த்தம், எல்லா மாநிலங்களிலும் விவசாயத்திற்கு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன், கால்நடைகளை வைத்துத்தான் நிலங்களை உழுது பண்படுத்தினார்கள். விவசாயப் பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று அந்த வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன. கால்நடைகளின் தேவை குறைந்து விட்டது. கால்நடைகளின் பராமரிப்பு செலவு அதிகரித்து விட்டது. தீவனப் பயிர்களுக்குப் பதில் வேறு பயிர்கள் பயிரிட்டால் கூடுதல் வருமானம் வருகின்றது. தற்போது பயிரிடப்படும் பெரும்பாலான பயிர்களில் தானியம் மட்டும்தான் கிடைக்கிறதே தவிர, கால்நடைகளுக்கான தீவனம் கிடைப்பதில்லை. இந்தக் காரணங்களினால் விவசாயிகள் பால் மாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு எருதுகளை எல்லாம் விற்று விட்டார்கள்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் துடியலூர் சந்தைகளில் முன்பு கால்நடைகள் அதிக அளவில் விற்கவும் வாங்கவும் செய்வார்கள். இப்போது இந்த கால்நடைகளின் வியாபாரம் மிகவும் குறைந்து விட்டது. காரணம் விவசாயப் பண்ணைகளில் கால் நடைகள் இல்லை. நான் படிக்கும்போது விவசாயக் கல்லூரியில் எருதுகளும் பசுக்களுமாக 200 உருப்படிகள் இருந்தன. தற்போது 20 உருப்படிகள் கூட இல்லை. காங்கயம் பட்டக்காரர் ஆயிரக்கணக்கான எருதுகளும் மாடுகளும் வளர்த்துக்கொண்டு இருந்தார். இப்போது அவரிடம் பெயரளவிற்குத்தான் கால் நடைகள் இருக்கின்றன. இந்தியா முழுவதும் இந்த நிலைதான் இருக்கிறது. ஆகவே இயற்கை விவசாயத்திற்கு வேண்டிய தொழு உரம் மிகவும் அரிதாகி விட்டது. அடுத்ததாக இலைதழைகள். முன்பு இருந்த அளவு மரங்களும் காடுகளும் இப்போது இல்லை. இரண்டாவது, கிடைக்கும் இலை தழைகளை நிலத்திற்கு கொண்டு சேர்க்க அதிக செலவு ஆகிறது. இந்த செலவு விவசாயத்திற்கு கட்டுபடியாவதில்லை.

மனிதக்கழிவுகளைச் சேகரிக்கும் முறைகள் மாறிவிட்டன. முன்பு நகரங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளையும், மனிதக் கழிவுகளையும் சேர்த்து கம்போஸ்ட் செய்துகொண்டிருந்தார்கள். அந்த நகரத்தைச் சுற்றிலுமுள்ள விவசாயிகள் தானியமல்லாத மற்றப் பயிர்களுக்கு அதைப் பயன்படுத்தினார்கள். ( நம்பள்கி அமெரிக்காவில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருந்தார். சைனாவில் நெற்பயிருக்கு இதுதான் முக்கிய உரம். அங்கு இந்த மனிதக் கழிவுகளை அருவருப்புடன் பார்ப்பதில்லை).

தற்போது அதிகரித்து வரும் கோழிப் பண்ணைகள் கொஞ்சம் இயற்கை எருக்களைக் கொடுக்கின்றன. ஆனால் இந்தக் கோழி உரம் விலை அதிகமாகின்றது.

இயற்கை உரங்களின் விலையும் அதிகம். கிடைக்கும் அளவும் குறைவு. இது இயற்கை விவசாயத்திற்கு ஒரு பெரும் சவாலாக இருக்கிறது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இயற்கை விவசாயப் பண்ணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பண்ணைகளிலிருந்து கிடைக்கும் பொருள்களை அதிக விலைக்கு விற்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் இந்த இயற்கை விவசாயம் கட்டுப்படியாகும்.

இந்த இயற்கைப் பொருள்களின் நன்மையை உணர்ந்து அதிக விலை கொடுத்து வாங்குமளவிற்கு நம் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை. இந்த சாதக பாதகங்களை எல்லாம் கணக்கில் கொண்டுதான் இயற்கை விவசாயம் வளர வேண்டும்.

மக்கள் நாட்டில் நிலவும் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆகாயத்தில் கோட்டை கட்டுவோம் என்று வீராப்பு பேசுவதில் பயனில்லை.

40 கருத்துகள்:

  1. நான் படிக்கும்போது விவசாயக் கல்லூரியில் எருதுகளும் பசுக்களுமாக 200 உருப்படிகள் இருந்தன. தற்போது 20 உருப்படிகள் கூட இல்லை. காங்கயம் பட்டக்காரர் ஆயிரக்கணக்கான எருதுகளும் மாடுகளும் வளர்த்துக்கொண்டு இருந்தார். இப்போது அவரிடம் பெயரளவிற்குத்தான் கால் நடைகள் இருக்கின்றன. இந்தியா முழுவதும் இந்த நிலைதான் இருக்கிறது. ஆகவே இயற்கை விவசாயத்திற்கு வேண்டிய தொழு உரம் மிகவும் அரிதாகி விட்டது. அடுத்ததாக இலைதழைகள். முன்பு இருந்த அளவு மரங்களும் காடுகளும் இப்போது இல்லை. இரண்டாவது, கிடைக்கும் இலை தழைகளை நிலத்திற்கு கொண்டு சேர்க்க அதிக செலவு ஆகிறது. இந்த செலவு விவசாயத்திற்கு கட்டுபடியாவதில்லை.

    மனதை நெருடிச் செல்கின்றது தங்களின் ஆக்கத்தில் வெளிப்படும் உண்மைத் தன்மை !...இந்தியாவில் மட்டும் இன்றி இலங்கையிலும் இந்த நிலைதான் ஐயா .யுத்தத்தின்போது அழிக்கப்பட்ட கால்நடைகளின்
    சடலங்கள் இன்னும் கண்ணை விட்டு மறையவில்லை .அதையும் இன்று நினைத்துப் பார்க்கின்றேன் :( மிக்க நன்றி ஐயா அவசியமான
    தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு .

    பதிலளிநீக்கு
  2. இயற்கை விவசாயம் நல்லது என்றாலும் அதில் நடைமுறை சிக்கல்கள் அதிகம் என்பதை அழகாக விளக்கி இருக்கிறீர்கள்.பால் ஒன்றின் தேவை இல்லை என்றால் பசுக்கள்கூட காணாமல் போயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. இங்கே இயற்கை விவசாயபொருட்களுக்கு இப்போ நல்ல டிமாண்ட் இருக்கு. விலைதான் ஒரு பத்து மடங்கு கூடுதல். வேற வழி இல்லை:(

    நேரம் இருந்தால் இங்கே பாருங்க.

    http://www.organicfarm.org.nz/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவில் இன்னும் பிரபலமாகவில்லை. ஆனால் எக்ஸ்போர்ட் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

      நீக்கு
  4. அம்பாளடியாள்...said.
    "காங்கயம் பட்டக்காரர்." சம்பந்தம் இல்லாத கேள்வி தான்; டாக்டர் கந்தசாமியும் இதற்க்கு பதில் சொல்லாம்...

    எது சரி? பட்டக்காரர் அல்லது பட்டையக்காரர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு அந்தப் பகுதியை ஆள்வதற்கு பட்டயம் கொடுத்ததினால் பட்டயக்காரர் என்பதுதான் சரி.(பட்டை போடுவதினால் பட்டையக்காரர் என்றும் கூப்பிடலாம் - விபூதிப்பட்டை/பட்டைச்சாராயம்). வழக்கில் அது மருவி "பட்டக்காரர்" என்று வழங்குகிறது.

      எங்கள் ஊரில் சொந்தக்காரர் ஒருவரை "சுப்பராவ்" என்று அழைப்பார்கள். எனக்கு ரொம்ப நாளா சந்தேகம், நமக்கு ராவ் எப்படி சொந்தக்காரர் ஆனார் அப்படீன்னு. அப்புறம்தான் தெரிந்தது, அவருடைய பெயர் "சுப்பராயன்" என்பது. அதை உச்சரிப்பதில் உள்ள சிரமத்தினால் சுப்பராவ் என்று அழைத்தார்கள்.

      கேரளாவில் "ராமச்சந்திரன்" என்று முழுதாகச் சொல்ல மாட்டார்கள். அவர் "ராமேந்திரன்" தான் அவர்களுக்கு.

      நீக்கு
    2. தமிழ் இலக்கண விதிப்படி வல்லினத்திற்கு ஒற்று மிகாது.

      நீக்கு
    3. ///பட்டைச்சாராயம்...வழக்கில் அது மருவி "பட்டக்காரர்" என்று வழங்குகிறது.// உங்கள் பதில் கரீட்டுங்க! அது எப்படி நான் பட்டைச்சாராயம் தான் போடுவேன் என்று உங்களுக்கு தெரியும்?

      நீக்கு
    4. சும்மா தமாசுங்க! பாம்புகக்கு கால் இல்லை என்று கல்லூரி வாத்தி சொன்னாரே! நீங்க சொன்னது தான் சரியா தான் இருக்கும்...

      நீக்கு
  5. //மக்கள் நாட்டில் நிலவும் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆகாயத்தில் கோட்டை கட்டுவோம் என்று வீராப்பு பேசுவதில் பயனில்லை.//
    உங்கள் கருத்தை வழிமொழிகின்றேன்.


    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு அய்யா. நிதர்சனமான உண்மைகளை பேசுபவர்களை ஏதோ பன்னாட்டு உர மற்றும் மருந்து கம்பெனிகளின் கைகூலிகள் என்ரும் இயற்கை விவசாயம் பற்றி பேசுபவர்கள் தியாகிகள் போலவும் சித்தரிக்க படுகிறார்கள். இயற்கை விவசாயம் மூலம் பெருகி வரும் மக்கள் தொகை அனைத்திற்க்கும் கட்டுபடியாகும் விலையில் உணவை உற்பத்தி செய்தால் உலகில் அனைவருக்கும் மிகுந்த சந்தோஷமே. அது பெட்ரோலிய பொருட்கள் மீது நமக்கு இருக்கும் தேவையையும் குறைக்கும். ஆனால் அது மிக பெரிய அளவில் நடைமுரை படுத்த நடைமுறை சாத்தியமா என்று நினைத்து பார்க்க வேண்டும். உண்மையில் நடைமுரை சாத்தியம் உள்ள வழிமுறை- ஒருங்கினைந்த மண் வள பாதுகாப்பு, ஒருங்கினைந்த பயிர் பாதுகாப்பு போன்றவற்றின் மூலம் இயற்கை எரு மற்றும் இயற்கை வழி பூச்சு கட்டுபாடு மற்றும் நுண்ணியிரினம்/மண்புழு உபயோகம் போன்றவறை சிறிது சிறிதாக இயன்றவரை அதிகரித்து வேதி பொருட்கள் பயன்பாட்டை சிறிது சிறிதாக குறைக்களாம். அதுவும் விவசாயிக்கு பொருளாதார ரீதியாக கட்டுபடியானதாக இருக்கவேண்டும் மற்றும் குறைந்த வேலையாட்களை வைத்து செய்வதாக இருக்கவேன்டும் .அதைவிட மேலாக நீங்கள் கூறியுள்ளது போல் எளிதில் கிடைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. Sir

    Can we say Farming itself is against Nature. Ploughing, sowing, watering etc. are against Nature. Therefore The life of early men of roaming in Forests and eating what they get can only be said to nature's way of living.

    பதிலளிநீக்கு
  8. Sure, you are 100 % correct. The day the man ceased to be a nomad, then started his tirade against Nature.

    பதிலளிநீக்கு
  9. சாதக பாதகங்களை எல்லாம் கணக்கில் கொண்டுதான் இயற்கை விவசாயம் வளர வேண்டும்.
    ஆகாயத்தில் கோட்டை கட்டுவோம் என்று வீராப்பு பேசுவதில் பயனில்லை.

    நடைமுறை சிரமங்களை விரிவாக பகிர்ந்த விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..

    பதிலளிநீக்கு
  10. // இந்த இயற்கைப் பொருள்களின் நன்மையை உணர்ந்து அதிக விலை கொடுத்து வாங்குமளவிற்கு நம் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை. இந்த சாதக பாதகங்களை எல்லாம் கணக்கில் கொண்டுதான் இயற்கை விவசாயம் வளர வேண்டும். //
    உண்மை நிலவரத்தை எடுத்துரைத்தீர்கள். இது தெரியாமல் இன்னும் சிலர் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது மக்களிடையே இதைப்பற்றிய சரியான விழிப்பணர்வு வரவேண்டும்.

      நீக்கு
  11. ஐயா!!! தங்களுடைய வயதிற்கும் அனுபவத்திற்கும் வணக்கம். தங்களுக்கு விவசாயம் சம்பந்தப்பட்ட துறையில் பல்லாண்டு அனுபவம் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. ஆனால், தங்களது இந்த பதிவு படித்து ஆச்சர்யம் அடைந்தேன். காரணம், பெங்களூர் போன்ற தொழில் நுட்ப வல்லுனர்கள் அதிகம் உள்ள நகரங்களில் கூட, இந்த இயற்க்கை முறை விவசாய பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளுக்கு என்று தனியாக உணவகங்கள் வந்து மிக சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அதேபோல, சென்னையில், அடையார் அருகில் வாரம் ஒருமுறை இயற்கை காய்கறிகள் விற்பதுக்கு என்று தனியாக ஒரு சந்தையே கூடுகிறது.

    இது, இன்னும் அதிகம் ஆகும். பல விவசாயிகள் இயற்கை முறை விவசாயத்தில் ஆர்வம் காட்டுவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை.

    இது நடக்கும். காரணம், வெளி நாட்டு மருந்து மற்றும் விதை கம்பனிகளை நம்பி நட்டாற்றில் இறங்கி விவசாயம் செய்யும் நமது விவசாயிகளுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவு வந்துகொண்டுள்ளது.

    காங்கேயம் காலை, பட்டக்காரர் பற்றிய இன்னுமொரு செய்தி. கீழே உள்ள சுட்டியில் சென்று பார்க்கவும்.
    http://www.kangayambull.com/index.htm

    உங்களுடைய இந்த பதிவை படிக்கும்போது சத்தியராஜ் அவர்களின் ஒரு திரைப்பட வசனம்தான் ஞாபகம் வந்தது. "முடியும்னு நினச்சதனாலத்தான், அமெரிக்ககாரன் நிலவுல கால் வச்சான். முடியாதுன்னு நினக்கரதுனாலத்தான், நாம இன்னும்..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது மக்கள் தங்கள் மனப்பான்மையை எப்பொழுது மாற்றிக்கொள்வார்கள் என்று தெரியவில்லையே? பொறுத்திருந்து பார்ப்போம்.

      நீக்கு
    2. //முடியும்னு நினச்சதனாலத்தான், அமெரிக்ககாரன் நிலவுல கால் வச்சான். முடியாதுன்னு நினக்கரதுனாலத்தான், நாம இன்னும்..."//

      நெனச்சா மட்டும் போதுமுங்களா? நம் நாடு ஏன் சரியான வழியில் முன்னேறவில்லை என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது, நாம் வளர்த்து விட்டிருக்கும் பிணந்தின்னும் அரசியல்வாதிகள். அவர்கள் வழி நடத்துதலில் நம் மக்கள் தங்களுக்கு என்று என்ன தனி நபர் கொள்கை வைத்திருக்கிறார்க்ள?

      வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை செய்பவர்கள் எத்தனை பேர்? தங்களுக்கு உரிமை இல்லாததை தன்னுடையதாக்கிக் கொள்ளக்கூடாது என்று எவ்வளவு பேர் இருக்கிறார்க்ள? மிளகாய்த்தூள் ஏற்றுமதி செய்யும்போது செங்கல் பொடியையும் ஏற்றுமதி செய்தவர்கள் எத்தனை பேர்?

      இயற்கைப் பொருட்கள் உண்மையில் இயற்கைப் பொருளா என்று சோதியுங்கள்.

      நீக்கு
    3. ஐயா, இந்த மானங்கெட்ட அரசியல் ஒரு சாக்கடைதான். அதிலே ஒரு சந்தேகமுமே இல்லை. சாக்கடையில யாரு கும்மி அடிப்பான்னு உங்களுக்கே தெரியும். அதப்பத்தி பேசி நம்ம வாயில சேத்த ஒட்டிக்க வேணாம்.

      நாம நல்ல இருக்கணும்னா, 400 பேரு செத்தாலும் பரவாயில்லன்னு ஏறி முதிச்சுட்டு போயிட்டு இருக்காங்க. இது கடந்த 10 - 15 வருஷமா, ரொம்ப அதிகமாயிடுச்சு. சமீபத்துல, எத்தன கொலை, கடத்தல்.

      நாம, கற்காலத்த நோக்கி போயிட்டு இருக்கோம். இன்னும் கொஞ்ச நாள்ல, சோத்துக்கு எதுவும் கிடைக்காம, மனுஷனையே அடிச்சு சாப்பிடவேண்டியதுதான்.

      இயற்கை பொருள்களை சோதிச்சு பார்க்கற அளவுக்கு, இன்னும் நாம வளரல. ஆனா, இயற்கை பொருள்களை தயார் பண்ணறவங்களுக்கு சோதிச்சு சான்றிதல் குடுக்கறாங்க. அதைகூட, காசு கொடுத்து வாங்கிடகூடிய அளவுல தானே நம்ம நாடு இருக்கு.

      நீக்கு
    4. //இயற்கை பொருள்களை சோதிச்சு பார்க்கற அளவுக்கு, இன்னும் நாம வளரல. ஆனா, இயற்கை பொருள்களை தயார் பண்ணறவங்களுக்கு சோதிச்சு சான்றிதல் குடுக்கறாங்க. அதைகூட, காசு கொடுத்து வாங்கிடகூடிய அளவுல தானே நம்ம நாடு இருக்கு.//

      இதுதான் இன்றைய உண்மை நிலை. இதை என்னுடைய நேரிடை அனுபவ பூர்வமாகக் கூறுகிறேன்.

      நீக்கு
  12. /// மனித மனம் விசித்திரமானது...

    தான் கொண்ட நம்பிக்கைக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் கேட்காது...
    அதனால் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யும்...

    100-க்கு 99 பேர் செய்வது தவறு என்று சொல்லும். தான் சொல்வது பிரச்சினை மிகுந்தது என்றாலும், நம்பிக்கை இழக்காமல் சொன்னதையே செயல்படுத்துக்கொண்டு இருக்கும். ///

    இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை...

    உண்மை நிலவரத்திற்கு நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  13. மனமிருந்தால் மார்க்கமுண்டு. இயந்திரங்கள் ரொம்ப நாளைக்கு உதவாது. சீக்கிரமே பெட்ரோல் தீர்ந்து போச்சுன்னா அப்புறம், நம்ம கால்நடைகள்தான் கை கொடுக்கும். ஆனால், அவற்றை வைத்து விவசாயம் செய்ய திரண்ட தோள் கொண்ட இளைஞர் படை இருக்குமா என்பது தான் சந்தேகமாக இருக்கு. ஜர்தா தயாரிக்க பயன்படும் பாக்கு, புகையிலை, வெளிநாடுகளில் வேற எவனுக்கோ பயன்படும் தேயிலை போன்ற மக்களுக்குப் பயன்படாத பணப் பயிர்களை விளைவிக்கப் பயன்படும் நிலங்களை உணவு விளைவிக்கப் பயன்படுத்தினாலே போதும், தேவையான உற்பத்தியை எட்ட முடியும். மேலும், அசைவ உணவுக்காக வளர்க்கப் படும் பிராணிகளுக்காக எக்கச் சக்கமான தாவரங்களை விளைவிப்பதால், மக்கள் சைவத்துக்கு மாறினாலும் உணவு உற்பத்தி பெருகும். நல்ல கட்டுரை. ஆனால் செயல்படுத்த எந்த நாதாரியும் இந்தியாவில ரெடியா இல்லை. வந்தானா அடிச்சானா, [பணத்தை] கம்பி நீட்டினானா என்றே எல்லா பயல்களும் இருக்கானுங்க. என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  14. பயன் மிக்க பதிவு, ஆரோக்யத்தை விட மக்கள் விலையைத் தான் பார்க்கின்றார்கள், ஆக எப்போதுமே கெமிக்கல் விவசாயத்துக்கு மவுசு இருக்கவே செய்யும், ஆனால் அது செய்யும் ஊறுகள் பற்பல .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான, இக்பால் செல்வன். ஆனால் இதற்கு எப்படி தீர்வு காண முடியும் என்று தெரியவில்லை. நாடு தழுவிய விழிப்புணர்ச்சியும் அரசின் கொள்கைப் பிடிப்பும் இருந்தால் ஏதாவது விடிவு ஏற்படலாம்.

      நீக்கு
    2. //ஆரோக்யத்தை விட மக்கள் விலையைத் தான் பார்க்கின்றார்கள்,//
      உலகிலேயே அதிக மக்கள் இந்தியாவில் தான் வருமை கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள். தற்போது அரசாங்கம் இந்த அளவு மான்ய விளையில் உணவு பொருள் கொடுத்து, வெளி மார்கெட்டில் (பயிர் உற்பத்தி திறனை மேம்படுத்தி) முடிந்த அளவு குறைந்த விலையில் உணவு பொருள் கிடைக்கும் போதே பட்டினி சாவும் ஊட்ட சத்து குறைவும் தலைவிரித்தாடுகிறது. அப்புறம் எல்லோரும் இயற்கை விவசயம் என்று போய் உற்பத்தி திறன் குறைந்து விலை அதிகமானால் இந்தியாவின் நிலை எங்கு போய் சேரும்?நிச்சயம் உயர் நடு தர மக்கள் மக்கள் பணகாரர்களுக்கு மட்டும் இயற்கை விவசாய பொருட்கள் கட்டுபடி ஆகலாம்.

      நீக்கு
    3. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியாத நாம் எதைக் கட்டுப்படுத்தப் போகிறோம்?

      நீக்கு
  15. //இந்த இயற்கைப் பொருள்களின் நன்மையை உணர்ந்து அதிக விலை கொடுத்து வாங்குமளவிற்கு நம் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை.
    இந்தியாவில் இன்னும் பிரபலமாகவில்லை. ஆனால் எக்ஸ்போர்ட் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது//
    மேலை நாடுகளில் தங்களின் வருமானத்தில் உணவிற்காக செலவிடபடும் விகிதம் (Percent of money spent on food products) 25 சதத்திற்கும் குறைவு. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் சராசரி மனிதன் தன் வருமானத்தில் பெருமளவு உணவிற்காக செலவிடுகிறான். எனவே மேலை நாட்டு மக்கள் சிறிது அதிகம் பணம் கொடுத்து இயற்கை உனவு பொருளை வாங்குவது சாத்தியம். நிலமை இப்படி இருந்தால் கூட அமெரிக்காவின் பெரிய கடைகளில் அதிகபட்சம் 20% தான் இயற்கை விவசாய பொருட்கள் விற்பனை ஆகும்.இந்தியாவில் உணவு பொருட்களின் விலை அதிகம் ஆனால் அதன் விளைவாக ஏழை மக்கள் காய்கறிகள் வாங்குவது குறைந்து ஊட்டசத்து குறைவு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.இயற்கை விவசாய பொருட்களை அதிக விளைக்கு கொடுத்தால் தான் கட்டுபடியாகும் என்று அனைவரும் ஒத்து கொள்கிறார்கள். அப்படி என்றால் பணகாரர்களுக்கு இயற்கை விவசாயம் ஏழைகளுக்கு விவசாயம் என்று வைத்து கொள்ள வேண்டுமா என்ன?

    இன்னொரு முக்கிய விஷயம் எப்படி தூய்மையான இயற்கை விவசாய பொருட்களை விளைவிப்பது என்பது. உதாரணமாக காவிரி டெல்டா முழுதும் வாய்க்கால் பாசணம் செய்கிறார்கள். அது மட்டுமன்றி வடிகால் பிரச்ச்னை எல்லாம் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் பக்கத்து நிலத்தில் இடப்படும் உரம் தண்ணீர் மூலம் இயற்கை விவசாயம் செய்ய்யும் நிலத்தில் கலக்காமல் இருக்குமா என்பது கேள்விக்குறியே. அதுவே பூச்சி மருந்துக்கும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  16. காவிரி டெல்டாவில் அனைத்து விவசாயிகளும் இணைந்து செயல்பட்டால்தான் இயற்கை விவசாயம் செய்யமுடியும்.

    பதிலளிநீக்கு
  17. இயற்கை நலமடைய இதயம் துடிக்கும் மனிதர் நீர் -நன்று

    பதிலளிநீக்கு
  18. முதலில் நன்றி.

    1. நீண்ட நாட்களாக உங்கள் பணி மற்றும் அனுபவம் சார்ந்த விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தேன். அது இந்த முறை சிறப்பாக வந்ததுள்ளது.

    2. ஆரோக்கியமான கொஞ்சம் பரவாயில்லை என்கிற ரீதியில் வந்துள்ள விமர்சனங்கள்.

    3. அப்பப்ப ஊத்திக்கும் என்றாலும் 20 வது இடத்தில் தமிழ்மணம் ரேங்க் இருப்பதற்கும். அப்ப நீங்களும் பிரபலம் தானா?

    பதிலளிநீக்கு
  19. இது போன்ற விசயங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மாற்றம் என்றுமே மாறாதது. நிச்சயம் வட்டம் ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும். அப்போதுள்ள மக்கள் இதன் அருமையை உணர்வார்கள். இங்கு எல்லோருமே மாற்றம் என்பது அடுத்தவர் வாழ்வின் மூலம் காணப்து. நாம் கடைபிடிக்க வேண்டியது இல்லை என்பதை உறுதியாகவே நம்புகிறார்கள்.

    பக்கத்து சந்தில் கடை வைத்திருப்பவர் செல்லும் போது புலம்புவார்கள். குறைவான விலையில் தரமான பொருட்களை கொடுக்கின்றேன். ஆனால் என் கடையில் ஆடம்பரம் எதுவும் செய்வதில்லை. குறிப்பாக கீரை வகைகள், வெளியே கிடைக்காத அத்தனை சத்தான காய்கறிகளை தோட்டத்தில் பேசி வாங்கி வந்து விற்றாலும் மக்கள் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சென்று அவன் போடும் தூசி தும்பட்டை போன்றதுக்கும் காசு கொடுத்த வாங்கவே விரும்புகிறார்கள் என்கிறார்.

    என்ன சொல்வீர்கள்? இயற்கை செயற்கை என்று பாரபட்சம் இல்லை. அது நாகரிகமாக நவீனமாக ஃபேஷனாக சென்றவுடன் எடுத்து போட்டுக் கொண்டு வரும் அளவுக்கு இருக்க வேண்டும். மொத்தத்தில் எதுவும் அழகாக இருக்க வேண்டும். அது ஆரோக்கியத்தின் அடிப்படையா என்பது போன்ற விசயங்கள் அநாவசியம்.

    இது தான் தற்போதைய மக்களின் வாழ்க்கை. வீட்டுக்கு வயதானவர்கள் தலையில் சுமந்து கொண்டு விற்கும் பல பொருட்கள் கடையை விட ஐந்து ரூபாய் அதிகமாகத்தான் இருக்குது. கோபம் இருந்தாலும் அவர்களின் வயது உழைப்புக்கு மரியாதை கொடுக்க இந்த இழப்பை தாங்கிக் கொள்வதுண்டு. புன்செய் புளியம்பட்டியில் இருந்து ஒரு அம்மா பருப்பு வகைகளை அத்தனையும் மாதம் ஒரு முறை ஒவ்வொரு வீடாக கொண்டு வந்து கொடுப்பார். பணம் கூட அடுத்த மாதம் வந்து வாங்கிக் கொள்வார். ஆனால் மக்கள் காரில் சென்று கடையில் போய் வாங்கி விட்டு வந்தால் தான் நான் ஷாப்பிங்க போயிட்டு வந்தேன் என்று கதையளக்கும் போது சொல்ல முடியும்.

    வருத்தப்பட எதுவுமில்லை. எல்லாமே வேடிக்கை. இது தான் தற்போதைய உலக வாடிக்கை.

    நாம் தனியாக சிந்திப்போம். மற்றபடி அனைத்தையும் ரசிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலக இயற்கையை நாம் மாற்ற முடியாது. சரியாகச்சொன்னீர்கள்.

      நீக்கு
  20. செயற்கை நிறைந்த உலகத்திலே இயற்கையை மதிக்க யாரும் நினைப்பதில்லை .இரசாயணம் நிறைந்த உணவுகளால் நோய்களே அதிகம். உங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ஐயா.

    வேளாண் பேராசிரியாரன உங்களிடம் இயற்கை விவசயாம் பற்றி நிறைய உரையாட வேண்டும் என உங்களின் வலைப்பூவில் இணையும் போது நினைத்திருந்தேன். ஆனால் உங்களின் வேளாண்மை சார்ந்த முந்தைய பதிவுகளை கண்டு நானே உங்கள் எண்ணம் பற்றி அறிந்து கொண்டேன்.

    நானும் சுமார் கடந்த நான்கு மாத காலமாக தீவிரமாக அதைபற்றியெல்லாம் சிந்தித்து பார்த்தேன். நம்மால் எதுவும் இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் உள்ளேன்.

    தற்போது சேர்ந்துள்ள வங்கி பணி காரணமாக வேளாண்மை பக்கமே ஒதுங்க முடியவில்லை. இருந்தும் வேளாண்மை பற்றிய சிந்தனையே நிறைய உள்ளது.

    இது சாத்தியமில்லாத முறை என்று சொல்லகிறோமே. சாத்ததியமில்லை என்பதற்காய் சரியென்றாகிவிடுமா?

    நம்மால் இயலவில்லை என்பதற்காய் அதை கைவிட்டுவிட வேண்டுமா?

    அப்படி முழுதும் புறக்கணித்து விட்டு சென்றால் இயற்கைக்கு எதிரான செயலுக்க நாமும் துணைபோவது ஆகதா?

    இப்படியெல்லாம் வினவுவதற்கு மன்னிக்கவும் ஐயா.

    நேற்றிரவு டைரி எழுதும் போது எனது இயலாமை பற்றி என்னை நானே கேட்ட கொண்ட கேள்விகள் இவை.. இன்று தான் உங்கள் பதிவை காணமுடிந்தது. அதே கேள்வி இங்கும் எழுந்தது.

    நன்றி..

    பதிலளிநீக்கு