வெள்ளி, 19 அக்டோபர், 2012

இனிமையான வியாதி

இனிப்பானதெல்லாம் இன்பமானதல்ல. அதில் ஒன்றுதான் சர்க்கரை நோய். உலகில் பெரும்பாலானவர்கள் வைத்திருக்கும் நோய். இந்திய நாடு இதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆயுர்வேதத்தில் “மதுமேகம்” என்று அழைக்கப்படுகின்ற இந்த நோய் இந்தியர்களுக்குப் பல காலமாகப் பரிச்சயமான நோய். இந்த நோயைப் பற்றிய சரியான விழிப்புணர்வு அவசியம்.


முதலில் புரிந்து கொள்ளவேண்டியது – இது ஒரு நோய் அல்ல. உடலில் ஏற்படும் ஒரு குறைபாடு. வயது ஆகிவிட்டால் தலை நரைக்கிறது. பல் விழுகிறது. பசி குறைகிறது. காது கேட்பதில்லை. அந்த மாதிரிதான் சர்க்கரை வியாதியும். இது ஒரு ஜீரண மாறுபாடு. இந்நோய் பற்றிய மருத்துவத் தகவல்கள் டாக்டர் முருகானந்தம் அவர்கள் ஒரு பதிவில் அருமையாக விளக்கியுள்ளார். தையும் படியுங்கள்.

தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று முதன்முதலில் தெரியும்போது எல்லோரும் அதிர்ச்சியடைவது இயல்பு. அவர்கள் கற்பனை சிறகடித்துக்கொண்டு பறக்கும். ஓ, இனி ஆயுளுக்கும் இனிப்பு சாப்படக்கூடாது, காப்பிக்கு சர்க்கரை போடாமல் குடிக்கவேண்டும், சப்பாத்தி மட்டுமே சாப்பிடவேண்டும், இப்படி வாழ்வது என்ன வாழ்க்கை, செத்துப் போய்விடலாமா என்றெல்லாம் கற்பனை பண்ணுவார்கள். இந்தக் கற்பனைகள் எல்லாம் தேவையற்றவை. நீங்களும் எல்லோரையும் போல் வாழலாம். நல்ல காப்பி குடிக்கலாம். கல்யாண வீட்டில் வெளுத்துக் கட்டலாம். அரிசிச் சாப்பட்டை விட வேண்டியதில்லை. எப்படி என்று பார்க்கலாம்.

நம் உடம்பின் அவயவங்கள் இயங்குவதற்கும், நாம் வேலை செய்வதற்கும் சக்தி தேவைப்படுகிறது. (ஆபீசில் வேலை செய்பவர்கள் இதிலிருந்து விதிவிலக்கு - ஏனென்றால் அவர்கள் வேலை என்பது தூங்குவதுதானே). இந்த சக்தியானது நாம் சாப்பிடும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் சாப்பாடு அப்படியே சக்தியாவதில்லை. பலவிதமான வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் உணவு சக்தியாக மாறுகின்றது. அப்படி ஏற்படும் மாற்றங்களில் முக்கியமானது நம் உணவிலுள்ள ஸ்டார்ச்சு சத்து குளுகோஸ் சர்க்கரையாக மாறுவது. இது நமது இரைப்பையில் நடக்கிறது.

இந்த குளுகோஸ் சர்க்கரை குடல்களில் உள்ள குடல் வால்களின் மூலமாக உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் சேருகிறது. இந்த குளுகோஸ் சர்க்கரைதான் உடலின் பல பாகங்களுக்கும் சென்று அந்த திசுக்களுக்கு சக்தியைத் தருகிறது. குளுகோஸ் திசுக்களில் எப்படி சக்தியாக மாறுகிறது என்பதை வேறு ஒரு பதிவில் பார்ப்போம். ( நான் படிச்சதையெல்லாம் உங்களுக்குச் சொல்லி கட்டாயம் உங்கள் கழுத்தை அறுக்கப் போகிறேன்.)

நாம் எல்லோரும் பொதுவாக ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவோம். அதற்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களைக் கணக்கில் சேர்க்க வேண்டாம். நாம் சாப்பிட்ட உணவு ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகி, அந்த குளுகோஸ் முழுவதும் ரத்தத்தில் சேர்ந்து விடும். அப்போது ரத்தத்தில் குளிகோஸின் அளவு அதிகமாக இருக்கும். அப்படி அதிகமாக இருப்பது நல்லதல்ல. ஏனென்றால் நமது உடம்புக்கு சக்தி ஒரு அளவில் நீடித்து, அதாவது அடுத்த வேளை உணவு உண்ணும் வரை வேண்டும். ஆகவே ரத்தத்தில் இருக்கும் அதிக சர்க்கரையை ஓரிடத்தில் சேமித்து வைத்துப் பிறகு உடலுக்குத் தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் நல்லதல்லவா? கடவுள் இதற்கான ஒரு வழியை ஏற்பாடு செய்திருக்கிறார்.

ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்போது, அந்த சர்க்கரையானது கல்லீரலில் சேமிக்கப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, கல்லீரலிலிருந்து ரத்தத்திற்கு திரும்பவும் கொடுக்கப்படுகிறது. அதாவது ஆறுகளில் வெள்ளம் வரும்போது அதை அணைக்கட்டுகளில் சேகரித்து ஆற்றில் நீரை ஒரே அளவில் விடுகிறோம் அல்லவா? அதே போல் கல்லீரல் சர்க்கரைக்கு ஒரு அணைக் கட்டாக செயல்படுகிறது. இப்படி இல்லாவிட்டால் ஆற்று வெள்ளம் அது பாயும் இடங்களிலெல்லாம் சேதம் விளைவித்து விடும் அல்லவா? அது போல்தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் உடலின் பல அவயவங்களுக்குத் தீமை வந்து சேரும். இவ்வாறு நடக்காமல் இருக்க கல்லீரல் ஒரு அணையாக வேலை செய்கிறது.

இன்னொரு சமாச்சாரம். சர்க்கரை ரத்தத்திலிருந்து கல்லீரலுக்குள் போவதற்கும் மறுபடி கல்லீரலுக்குள் இருந்து ரத்தத்திற்கு வருவதற்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகின்றது. பல காரணங்களினால் இந்த இன்சுலின் பலருடைய உடம்பில் பற்றாக்குறையாகி விடுகிறது. அப்போது சாப்பிட்டவுடன் ரத்தத்தில் அதிக அளவில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்குள் போகாமல் ரத்தத்திலேயே இருந்து விடுகிறது. அதனால்தான் இதை சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம்.

சரி, அப்படி ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே என்று நினைப்பவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. அதிக சர்க்கரை ரத்தத்தில் இருந்தால், கிட்னி அதை வெளியேற்றப் பார்க்கும். அப்போது சிறுநீரில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இப்படி சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேறிவிட்டால் கொஞ்ச நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது கல்லீரலிலிருந்து சர்க்கரை ரத்தத்திற்கு வராது. வேலை செய்ய சக்தி குறையும். அதை ஈடுகட்ட மூளை சாப்பிடு என்று சொல்லும். பசி எடுக்கும். அப்போது சாப்பிடவேண்டும்.

இப்படி சாப்பிடுவதும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் இருந்து சிறுநீர் வழியாக சர்க்கரை வெளியேறுவதுமாக இருந்தால் உடல் நிலை க்ஷீணித்து பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். இதற்கு தீர்வு உடலில் இன்சலின் செயலை அதிகரிக்கவேண்டும். இதை இரண்டு விதத்தில் டாக்டர்கள் செய்வார்கள். ஒன்று மாத்திரைகள், இரண்டு இன்சுலின் இஞ்செக்ஷன். ஆனால் இவை முழுமையான தீர்வுகள் அல்ல. டாக்டர் முருகானந்தம் சொல்லியுள்ள வழி முறைகளை தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும்.

26 கருத்துகள்:

  1. அனைவருக்கும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய
    தகவலகளைத் தாங்கிய அருமையான பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. புரியும்படி எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. நல்விவரங்கள் அடங்கிய பகிர்வு. டாக்டர் முருகானந்தம் பக்கத்திற்கு இதோ போய் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இனிப்பு பற்றிய உண்மைகள் கசப்புதான் என்றாலும் சரியான வழிமுறைகளை பின்பற்றினால் நமைக் காத்துக் கொள்ள முடியும்.தெளிவாக கூறியதற்கு நன்றி,

    பதிலளிநீக்கு
  5. எளிமையாகப் பகிர்ந்த பயனுள்ள இனிய பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. இனிமையான வியாதி (அல்ல அல்ல குறைபாடு) பற்றி சுவைபட சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் படிச்சதையெல்லாம் சொல்லி கட்டாயம் எங்கள் கழுத்தை அறுக்கப் போவதாக சொல்லியிருக்கிறீர்கள். அந்த சுகானுபவத்தை ஏற்றுக்கொள்ளத்தாயாராக இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பாணியில் விளக்கங்கள் அருமை...

    மருத்துவர் கூறிய அனைத்தையும் கடைப் பிடித்தாலும், மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள தெரியா விட்டால்... வெகு சீக்கிரத்தில் NIDDM இருந்து IDDM வந்து விடலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூகுளைப் பார்க்க வைத்துவிட்டீர்களே, தனபாலன்.

      நீக்கு
    2. NIDDM - Non Insulin Dependent Diabetes Mellitus (அடியேன் இருபதாம் வருடத்தை நோக்கி... வெற்றிகரமாக NIDDM... ஹா...ஹா...)

      IDDM - Insulin Dependent Diabetes Mellitus

      நீக்கு
    3. NIDDM - Non Insulin Dependent Diabetes Mellitus (அடியேன் இருபதாம் வருடத்தை நோக்கி... வெற்றிகரமாக NIDDM... ஹா...ஹா...

      IDDM - Insulin Dependent Diabetes Mellitus

      கொடுத்து வச்சவங்க நீங்க...! பகுதி 1 2 3...எழுதணும் சார்... ஹிஹி...

      நன்றி...

      நீக்கு
  8. டாக்டர். கந்தசாமி: நான் எழுதவது சும்மா கிண்டலுக்குத் தான். குசும்பில் உங்களை தோற்கடிக்க வேண்டும் என்பதை தவிர வேற எந்த நோக்கமும் எனக்கு இல்லை!

    ஏன் எனக்கு அந்த கொலைவெறி? Simple because...மருத்துவம் மூன்றாவது வருடம் படிக்கும் போதே கல்லூரியில் என் பெயர் Dr. Cholesterol! (வெள்ளைக் கோட்டு மாட்டினா நாங்க டாக்டர் தான்!)

    சரி என்னுடைய கேள்வி?
    பூனைக்கு சர்க்கரை வியாதி வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் வராது. ஏனென்றால் அந்தப் பெரிய பூனைக்கு ஒரு நாள் ஸ்வீட் கொடுத்துப் பார்த்தேன். முகர்ந்து பார்த்துவிட்டு சாப்பிடவில்லை. சர்க்கரை சாப்பிடாவிட்டால் சர்க்கரை வியாதி எப்படி வரும்???

      சோறு சாப்பிட்டால் வரும், பால் குடித்தால் வரும் என்பதெல்லாம் மனிதர்களுக்குத்தான். மிருகங்களுக்கு சர்க்கரை சாப்பிட்டால்தான் சர்க்கரை வியாதி வரும். இல்லாவிட்டால் வரவே வராது. இது வரை உங்களிடம் எந்தப் பூனையாவது சர்க்கரை வியாதிக்கு மருந்து கேட்டு வந்ததுண்டா?

      நீக்கு
  9. தகவலுக்கும் டாக்டர் முருகானந்தம் அவர்களின் பதிவு இணைப்பினைக் கொடுத்தமைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  10. நலப்ப பதிவு இனிப்பு நோயாளிகளுக்கு இனிப்பாய் இருக்கும்

    பதிலளிநீக்கு
  11. நல்ல தகவல்கள். ஆனால் ஒன்றை நான் மறுக்க வேண்டியிருக்கிறது.

    \\வயது ஆகிவிட்டால் தலை நரைக்கிறது. பல் விழுகிறது. பசி குறைகிறது. காது கேட்பதில்லை. அந்த மாதிரிதான் சர்க்கரை வியாதியும். \\

    இது உண்மை அல்ல. ஒரு தலைமுறைக்கு முன்னர் சாகும்வரையிலும் சர்க்கரை வியாதி வந்ததில்லை. சர்க்கரை வியாதி ஒருத்தருக்கு இருக்கிறது என்றால் அதை அதிசயமாக, 'அட அப்படியா' என்று பார்த்த காலம் போய், இன்னுமா உனக்கு சர்க்கரை வரவில்லை என்று ஆகிவிட்டது. ஏனிந்த மாற்றம்? விவசாயத்தில் கலக்கப் படும் இரசாயன் உரங்கள், பூச்சி மருந்துகள் நம் உணவை நஞ்சாக்கிவிட்டன, இதை எந்த டாக்டரும் சொல்லவே மாட்டான் ஏனென்றால் ஒரு ஆறிவியல் துறையில் ஏற்ப்படும் தீங்கை, அது செய்யும் அயோக்கியத் தனத்தை இன்னொரு அறிவியல் காரன் காட்டிக் கொடுக்க மாட்டான். மேலும் மருத்துவர்களும் மறுத்து கம்பனிகளும் இந்த அயோக்கியத் தனத்தால் தான் கோடிக் கணக்கில் சம்பாதிக்கின்றன, அதனாலும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள். இதை அடுத்து, வெள்ளைச் சீனி, மைதா, வெள்ளை வெளேர் என்று பாலிஷ் செய்யப் பட்ட அரிசி இவற்றையே உட்கொள்வதும் இதற்க்கு காரணங்களாகும். இவற்றில் இருந்து மாற மாற நம் உடல் நலனும் மேலாகும்.

    நீங்கள் கொடுத்த சுட்டியையும் பார்க்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இது உண்மை அல்ல. ஒரு தலைமுறைக்கு முன்னர் சாகும்வரையிலும் சர்க்கரை வியாதி வந்ததில்லை.//

      காரணம் அவர்களின் உணவு முறைகளும் வாழ்க்கை முறைகளும் ஆகும். நன்றாக உழைத்தார்கள் நல்ல உணவு (சோளம், ராகி, கம்பு) சாப்பிட்டார்கள். சீக்கிரமே போயும் விட்டார்கள். இப்போது எல்லாம் மாறிவிட்டது. உடல் உழைப்பு குறைந்து விட்டது. சோளம், ராகி எல்லாம் கோழிக்கு கொடுக்கிறோம்.

      நீக்கு
  12. பல சந்தேகங்களை விளக்கிச்செல்லும் பகிர்வு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  13. நான் சான்றின் அடிப்படையில் மருத்துவம் பற்றி தமிழில் எழுத முயற்சி செய்கிறேன். மூச்சு முட்டுது தமிழில் தட்டச்சு செய்ய! நிற்க. கான்சர் டயாபீட்டீஸ் diseases of old age. இந்தியாவில் கான்சர் கம்மி தான். ஏன்னா ஐம்பது வயசுக்குள்ள முக்கால்வாசி புட்டுக்குறான். நீங்க இல்லை என்று சொல்லலாம்; நான் சொல்வது இந்தியாவில் ஒரு நாளைக்கு 28 ரூபாய்க்கு குறைவாக சம்பாதிக்கும் இருக்கும் 90 கோடி மக்கள்.தினமும் 5000 குழ்ந்தைகள் வயிற்ருப் போக்கிலே இறக்கிறார்கள். இந்தியாவில் ஈ கொசுவை விட அதிகம் அல்பாயிசுல் சாவது மனிதர்கள்.

    வாங்க அம்மனுக்கு அபிஷேகம் பண்ணுவோம்; வியாதிகள் போய்விடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் சொல்வது இந்தியாவில் ஒரு நாளைக்கு 28 ரூபாய்க்கு குறைவாக சம்பாதிக்கும் இருக்கும் 90 கோடி மக்கள்//

      இந்தக் கணக்கெல்லாம் யார், எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இன்று மும்பையில் இருக்கும் பிச்சைக்காரன் தினம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான். கோயமுத்தூரில் சித்தாளுக்கு ஒரு நாள் கூலி 300 ரூபாய். மேசனுக்கு 700 ரூபாய். 28 ரூபாய்க்கு குறைவாக யார் சம்பாதிப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை?

      நீக்கு
    2. எவ்வளவு சம்ம்பதிக்கிரார்கள் என்றால் விவாதம் திசை திரும்பும்.

      ஆனால், இந்தியாவில் உள்ள 90 கோடி மக்களில் முக்கால்வாசி 50 வயதிற்குள் புட்டுக்கிறார்கள். மிடில் கிளாஸ் மாதவன்கள்/மாதவிகள் பிளாக் எழுதும் புண்ணியவான்கள்/ புண்ணிய-வாணிகள் தான் இந்த மீதி 30 கோடியில் வருவார்கள்...இந்த 30கோடி மக்கள் தான் இந்தியாவா?

      அந்த 90 கோடிமக்களில் முக்கால்வாசி பேர் 50 வயதை தாண்டுவதில்லை....இது தான் என் கருத்து...

      நீக்கு
    3. கொஞ்சம் யோசிச்சுப்பாத்தா நீங்க சொல்ற மாதிரிதான் இருக்கறாப்பல இருக்கு. ஆனா ஒண்ணு ஞாபகம் வச்சுக்குங்க. அப்படி ஜனங்கபுட்டுக்காட்டி, இந்தியா தாங்காதுங்க.

      நீக்கு
  14. நீரிழிவு பற்றிய அடிப்படை விடயங்களை
    மிக விளக்கமாக மற்றவர்களுக்குப் புரியும் வண்ணம்
    சொல்லியிருக்கறீர்கள்.
    நன்றாக இருக்கிறது
    எனது பதிவிற்கான
    இணைப்பையும் தந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு