வெள்ளி, 7 செப்டம்பர், 2012

மும்பையில் தனியாகத் தவித்தேன்



மும்பையில் என்னுடன் படித்த நண்பர் ஒருவர் ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜராக இருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு, மாணவர்கள், ஆசிரியர் ஆகியோர், நாங்கள் 80 பேர், மும்பைக்கு இத்தனாம் தேதி டூர் வருகிறோம், எங்களுக்கு தங்குவதற்கும் பார்க்க வேண்டிய இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டிருந்தோம். அவரும், ஆஹா, செய்து விடுகிறேன் என்று பதில் அனுப்பியிருந்தார்.

ஹைதராபாத்தில் இருந்தும் எங்கள் வருகையை உறுதிப் படுத்தி-யிருந்தோம். நாங்கள் மும்பையில் விக்டோரியா டெர்மினஸ்ஸுக்கு பல ஸ்டேஷனுக்கு முன்பு வந்துகொண்டிருந்தபோதே, என் நண்பனின் சகாக்கள் மூன்று பேர் எங்கள் கோச்சில் ஏறி அறிமுகம் செய்து கொண்டார்கள். அவர்கள் சொன்ன திட்டத்தின்படி, நாங்கள் அனைவரும் விக்டோரியா டெர்மினஸ் போகாமல் மாதுங்கா ஸ்டேஷனில் இறங்கிக் கொள்ளவேண்டும். அங்குள்ள தமிழ்ச்சங்கத்தில்தான் எங்களுக்குத் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எங்களை ஏற்றிச்செல்ல இரண்டு பஸ்களும் அங்கே காத்துக்கொண்டு இருக்கின்றன. நாங்கள் விக்டோரியா டெர்மினஸ் போய் அங்கிருந்து திரும்பி வருவதென்றால் அதிக தூரம், தவிர நேரமும் அதிகம் ஆகும் என்றார்கள்.

நாங்களும் அவர்களை நம்பி மாதுங்கா ஸ்டேஷனில் மூட்டை முடிச்சுகளுடன் இறங்கி விட்டோம். எங்கள் கோச் நாங்கள் வந்த ரயிலுடன் விக்டோரியா டெர்மினஸ் போய் விட்டது. கோச் அங்குதானே இருக்கும், இந்த தங்குமிடம் மற்றும் மும்பை புரொக்ராம் வேலைகளை முடித்து விட்டுப் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று எதார்த்தமாக நம்பினோம். (வடிவேலு பாணியில் - நம்ப்ப்ப்ப்ப்ப்பினோம்) இங்குதான் நாங்கள் தவறு செய்து விட்டோம்

எல்லோரும் அவரவர்கள் உடைமைகளை வைத்துவிட்டு குளித்து டிபன் சாப்பட்டோம். கூட வந்த இரண்டு ஆசிரியர்களும் மாணவர்களைக் கூட்டிக்கொண்டு புரொக்ராமுக்கு சென்று விட்டார்கள். நான் மட்டும் ரயில்வே பார்மாலிடிகளைக் கவனிக்க விக்டோரியா டெர்மினஸ் சென்று ஸ்டேஷன் சூப்பிரன்ட் ஆபீசுக்குப் போய், நாங்கள் ஸ்பெஷல் கோச்சில் சென்னையிலிருந்து வந்து மாதுங்காவில் இறங்கிவிட்டோம். எங்கள் கோச் இங்கே வந்திருக்கும். நாங்கள் அந்தக் கோச்சில் இத்தனாம் தேதி இந்த ரயிலில் டில்லி போகவேண்டும். அதற்குண்டான ஆர்டர்கள் போடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

அவர்கள் என் தலையில் ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டார்கள். உங்கள் கோச்சா? அது காலியாக வந்ததா, அதை ஒரு கல்யாணப் பார்ட்டிக்கு கொடுத்துவிட்டோம் என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்கள். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என்னடா இது, நேத்து வந்தவன் பொண்டாட்டியை இண்ணைக்கு வந்தவன் கூட்டீட்டுப் போன கதையாக இருக்கிறது? என்று நினைத்துக்கொண்டு, அவர்களிடம் அதெப்படி எங்களுக்கு என்று கொடுக்கப்பட்ட கோச்சை இன்னொருவருக்கு கொடுக்கலாம் என்று கேட்டேன்அவர்கள் உங்கள் கோச்சை அனாதையாக விட்டுவிட்டு நீங்கள் எங்கே போனீர்கள்? கோச் காலியாக வந்ததினால் நாங்கள் அதை வேறு பார்ட்டிக்கு கொடுத்து விட்டோம். உங்களுக்கு வேண்டுமானால் வேறு கோச் அலாட் செய்கிறோம் என்று சொன்னார்கள். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த புது கோச்சை சென்னையிலிருந்து வாங்கி வந்தோம், அதை இப்படி செய்து விட்டீர்களே, எங்களுக்கு அதே மாதிரி புது கோச் கொடுக்காவிட்டால் மாணவர்கள் உங்கள் ஆபீசுக்கு முன்னால் வந்து தர்ணா செய்வார்கள், பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

நாங்கள் புறப்படும் அன்று ஸ்டேஷனுக்கு சென்று பார்த்தபோது நாங்கள் வந்த அதே மாதிரியான கோச் எங்களுக்கு அலாட் செய்திருந்தார்கள். நான்கு டிஜிட் கோச் நெம்பரில் கடைசி நம்பர் மட்டும்தான் மாற்றம். யாராவது சொன்னால் தவிர கோச் மாறினது யாருக்கும் தெரியாது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன். வேறு ஏதாவது பழைய கோச் கொடுத்திருந்தார்களானால் மாணவர்கள் மத்தியில் என் மானம் மரியாதை எல்லாம் கப்பலேறிப் போயிருக்கும். அன்று என்னைக் கடவுள்தான் காப்பாற்றினார்.

25 கருத்துகள்:

  1. நண்பர்தான் கை விட்டு விட்டாரோ என்று முதலில் நினைத்தேன்! சரி, மடக்கி வைத்திருந்த இரண்டு விரலில் ஒன்றை நீட்டி விடவா?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. களிமண்ணுக்கு ஒண்ணும் புரியமாட்டேங்குதே?

      நீக்கு
    2. மன்னிக்கவும்... தவறாக ஒன்றுமில்லை! இரண்டு விஷயங்கள் அப்புறம் சொல்கிறேன் என்று கடந்த இரண்டு பகுதிகளிலும் நீங்கள் தவணை வைத்திருந்ததை விரல் மடக்கி நினைவு வைத்திருக்கிறேன் என்று முன்னர் பதிவில் சொல்லியிருந்தேன்!! அதில் ஒன்றுதானா இது என்று கேட்டேன்!

      நீக்கு
    3. ரொம்ப தேங்க்ஸ் ஸ்ரீராம். அந்தப் பதிவுகளை எழுதி ஒரு வாரத்திற்கு மேல் ஆச்சா? நடுவில் இந்த விண்டோஸ் 8 ரகளை நடந்துச்சா, களிமண் ஸ்ட்ரைக் பண்ணீட்டுது.

      நீக்கு
  2. பதில்கள்
    1. நான் முருகான்னுதான் சொல்லுவேன். வாரியார் பிரசங்கங்கள் கேட்ட தோஷம். பாருங்க எனக்கும் பெருமாள் கிருபை பண்ணுகிறார்.

      நீக்கு
  3. அட, இப்படி ரயில் கோச் எல்லாம் நமக்கே நமக்காக புக் செய்ய முடியுமா?!

    பதிலளிநீக்கு
  4. //புது கோச் கொடுக்காவிட்டால் மாணவர்கள் உங்கள் ஆபீசுக்கு முன்னால் வந்து தர்ணா செய்வார்கள், பார்த்துக்கொள்ளுங்கள் //

    பலே ஆளுதான் சார் நீங்க!! மாணவர்கள் மத்தியில் உங்க பேரைக் காப்பாத்திக்க, அந்த மாணவர்களையே காரணமாக் காட்டி உதார் விட்டிருக்கீங்களே!! :-))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பண்றதுங்க, மானத்தைக் காப்பாற்ற எல்லா ஜிகுடுதத்தமும் செய்யவேண்டியிருக்குது.

      நீக்கு
  5. எம் பெருமான் ஈசன் தானே முதற் கடவுள்! ஆதலால், ஈசன் கிருபை என்று சொல்லுக!
    எம் பெருமான் ஈசன் தானே "உலகத்தில் உள்ள எல்லா [எல்லா மதமும், ஜாதியும, கடவுள்களையும்] படைத்தார்! இது, சைவப் பழமான என் அம்மா வழி தாத்தா சொன்ன பொன்மொழி!

    அவர் பொன்மொழிக்கு என் பொழிப்புரை
    ஈசனை கும்பிடாவிட்டால், நீ ஈசலாகப் போகக் கடவது!
    (ஈசல் வாழ்க்கை அல்பாயுசு)

    பதிலளிநீக்கு
  6. Aiyaa naan kuta ungal nanbar thaan tata kamichutaar poolanu nenaichu tean.

    பதிலளிநீக்கு
  7. டிக்கட் புக் பண்ணிட்டா அவனே கோச் நம்பர், சீட் நம்பர் குடுப்பான்னு தெரியும், இது மாதிரி கோச்சையே புக் பண்ணும் வாய்ப்பு இருக்குதா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில இந்த வசதி மிகவும் சலீசாக இருந்தது. இப்போதும் இந்த வசதி இருக்கிறது. ஆனால் கட்டணம் மிகவும் அதிகம்.

      நீக்கு
  8. ஹா ஹா.. நல்ல அனுபவம்! அப்படியே மும்பை சுத்திப் பார்த்ததையும் எழுதுங்களேன்.. நான் மும்பையில் 3 வருடங்கள் வசித்திருக்கிறேன்.. மாதுங்கா நல்ல ஊர், சில தமிழ் கோயில்க்ள், மடங்கள் உள்ளன. சூப்பரான தமிழ் சாப்பாட்டு கடைகள், மெஸ்கள் உள்ளன. நிறைய தமிழர்கள் வசிக்கின்றனர். கடைத்தெருவில் மல்லிகைப் பூ, வாழையிலை விற்பதைப் பார்த்து எனக்கு கண்ணீர் (ஆனந்த) வந்து விட்டது, துடைத்து விடத்தான் மனைவி அருகிலில்லை (அப்போது திருமணமாக வில்லை) :))

    ***

    ரயிலில் தனி கோச் எடுத்து மாணவர்களுடன் செல்வது உற்சாகமானது, ஆனால் நீங்கள் ஸ்ட்ரிக்டான ஆசியர் என்று சொல்லி இருக்கிறீர்கள், எப்படி இருந்தது ட்ரிப் உங்களுக்கும், மாணவர்களுக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்குப் பிறகும் பல முறை மும்பை சென்றிருக்கிறேன். கடைசியாக (4வருடம் முன்பு) அந்த போக்குவரவு நெரிசலைப் பார்த்து பயம் வந்துவிட்டது. தவிர மும்பையைப் பற்றி எழுதும் அளவிற்கு குறிப்புகளோ, நினைவோ இல்லை.

      மாணவர்களை மேய்க்கும் பொறுப்பை என்னுடன் வந்த இரண்டு ஆசிரியர்களிடம் விட்டு விட்டேன். என்னால் டூரில் அந்த வேலையை சுமுகமாக செய்ய முடியாது.

      நீக்கு
  9. ஒருவழியா தப்பிச்சிட்டேங்க.. முன்னமே கேட்டிருக்கணும் விதிமுறைகளை பற்றி

    பதிலளிநீக்கு
  10. அருமை தோழரே வாழ்த்துக்கள் வணக்கம் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  11. எஹிர் பாரா சிக்கல்களை திறமையாக சமாளித்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு