வியாழன், 13 செப்டம்பர், 2012

பயணத்தின் இறுதிக் கட்டம்


புவனேஸ்வரத்தில் விவசாய பல்கலைக் கழகம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்ப்பதற்காக அந்த ஊருக்குப் போனோம். புவனேஸ்வரம் ரயில் நிலையத்தில் நாங்கள் சென்ற கோச்சை நிறுத்துவதற்கான வசதிகள் இல்லை. அங்கிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ளகுர்தா ரோடுஎன்னும் ஸ்டேஷனில்தான் நிறுத்தவேண்டும். இது எங்களுக்கு முன்பே தெரியுமாதலால் அதற்கு தகுந்தாற்போல் எங்கள் பயண ஏற்பாடுகளைச் செய்திருந்தோம்.

இரண்டு தினங்கள் அந்த ஸ்டேஷனில் தங்கியிருந்தோம். அங்கிருந்தே தனி பஸ்சில் நாங்கள் பார்க்கவேண்டிய இடங்களை எல்லாம் பார்த்து முடித்தோம். மூன்றாவது நாள் மாலையில் புறப்படவேண்டும். எங்கள் கோச்சை ரயிலில் இணைத்து ரயில் பிளாட்பாரத்திற்கு வந்து விட்டது. அப்போதுதான் மாணவர்கள் எங்கள் கோச்சில் கரன்ட் சப்ளை இல்லையென்று கவனித்தார்கள். ரயில்வே ஆட்களிடம் சொன்னபோது, அவர்கள் வந்து பார்த்துவிட்டு, எங்கள் கோச்சின் டைனமோ/ஜெனெரேட்டர் பெல்டை யாரோ அறுத்து விட்டார்கள் என்று சொன்னார்கள். இரவு மாணவர்கள் அத்தனை பேரும் கோச்சில்தான் படுத்திருந்தார்கள். பகலில் நாங்கள் வெளியே போயிருக்கும்போதுதான் இது நடந்திருக்கவேண்டும். இது அந்த ஊரில் வழக்கமாக நடக்கும் அக்கிரமம் என்று பின்னாளில் அறிந்தோம்.

மாணவர்கள் கூட்டம் பெரிதாக இருந்ததால் ஏகப்பட்ட ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அந்த டைனமோ பெல்டைப் போட்ட பிறகுதான் ரயிலைப் புறப்பட அனுமதிப்போம் என்று ரகளை செய்தார்கள். அரை மணி நேரம் வாக்குவாதம் நடைபெற்ற பிறகு அந்த ஸ்டேஷன் சூப்பிரன்டென்ட் என்னிடம் வந்து, “சார் பெல்ட் மாற்றுவதற்கு இந்த ஸ்டேஷனில் வசதி இல்லை. நீங்கள் விஜயவாடாவில் சொன்னால் அவர்கள் மாற்றி விடுவார்கள். இன்று இரவு மட்டும் எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். இதற்கு மேலும் தகராறு செய்தீர்களானால், இந்தக் கோச்சைசிக்” (Sick) என்று சொல்லி, கழட்டி விட்டு விட்டு, ரயில் புறப்பட்டு விடும், வேறு வழியே கிடையாது, உங்கள் சௌகரியம் எப்படிஎன்று கேட்டார்.

அதுதான் எங்கள் பயணத்தின் கடைசி கட்டம். நாங்கள் அன்று அங்கிருந்து, அந்த ரயிலில் புறப்படாவிட்டால் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டு விடும். நாங்கள் ஒழுங்காக ஊர் போய்ச் சேரமுடியாது. இதையெல்லாம் மனதில் கொண்டு மாணவர்களைச் சமாதானம் செய்து, இரவு முழுவதும் ஃபேன், லைட் இல்லாமல் பயணம் செய்து காலையில் விஜயவாடா வந்து சேர்ந்தோம். அங்கு நாங்கள் 6 மணி நேரம் எங்களுடைய அடுத்த ரயிலுக்காக காத்திருக்கவேண்டும். இந்த நேரத்தில் மாணவர்கள் அந்த ஸடேஷனில் யார் யாரையோ பிடித்து டைனமோ பெல்டை மாட்டி விட்டார்கள்.

அங்கிருந்து சுகமாக சென்னை வந்து சேர்ந்து, அந்த ஸ்டேஷன் சூப்பிரன்டென்டுக்கு நன்றி சொல்லிவிட்டு மதுரை ரயிலில் ஏறி கல்லூரி வந்து சேர்ந்தோம். டூர் புறப்பட்டுப் போன 80 பேரும் முழுதாகவும் எந்த உடல்நலக் குறைவும் இல்லாமலும் ஊர் திரும்பி வந்ததற்கு மதுரை மீனாட்சி அம்மனுக்கு நன்றி சொல்லி விட்டு, பழையபடி எங்கள் வழக்கமான வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தோம்.

8 கருத்துகள்:

  1. டூர் புறப்பட்டுப் போன 80 பேரும் முழுதாகவும் எந்த உடல்நலக் குறைவும் இல்லாமலும் ஊர் திரும்பி வந்ததற்கு மதுரை மீனாட்சி அம்மனுக்கு நன்றி சொல்லி //

    நிறைய ந்டைமுறைகள் இதுவரை அறியாதவைகள்.. பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள் ஐயா..

    பதிலளிநீக்கு
  2. என்டு கார்டுபோட்டாசு.படம் சூப்பர் சார்

    பதிலளிநீக்கு

  3. இளைஞர்களோடு இளைஞராக அத்தனை பேரையும் பொறுப்போடு கட்டி மேய்ப்பதே பெரிய காரியம். அதிலும் பெரும்பாலும் ஆங்கிலம் பேசாத மாநிலங்களில் பிரச்சனைகளை சாதுரியமாக எதிர்கொள்வது இன்னும் சிரமம். வெற்றிகரமான சுற்றுலா பகிர்ந்தளித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு பயண அனுபவம்! பகிர்வுக்கு நன்றி!

    இன்று என் தளத்தில்
    ஓல்டு ஜோக்ஸ் 2
    http://thalirssb.blogspot.in/2012/09/2.html


    பதிலளிநீக்கு
  5. புவனேஷ்வரில் லிங்கராஜ் சுவாமி கோவிலுக்குச் சென்றீர்களா சார்? பூரி ஜகன்னாத் கோவில் கூட பக்கம் தான்!!

    பதிலளிநீக்கு
  6. பயணம் பலவித அனுபவங்களோடு முடிந்தது... நல்ல பதிவுகள்... மேலும் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.....

    பதிலளிநீக்கு