திங்கள், 8 ஜூலை, 2013

மனித இயல்பும் அன்றாட நிகழ்வுகளும்


லண்டனில் ஒரு நிகழ்வு. ஒரு பொழுதுபோக்கு கிளப்பில் ஒரு நாள் ஒருவர் கீழே விழுந்துவிட்டார். அந்தக் கிளப் பெரிய பெரிய கனவான்கள் உறுப்பினராக உள்ள ஒரு கிளப். கீழே விழுந்தவர் அப்போதுதான் அந்தக் கிளப்பில் சேர்ந்திருக்கிறார். யாரையும் அறிமுகமில்லை. மற்ற கிளப் மெம்பர்கள் எல்லோரும் அவர் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்த பிறகும் உதவிக்குச் செல்லவில்லை. பின்னால் ஏன் நீங்கள் அவருக்கு உதவவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில் ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முறையை துல்லியமாக காட்டுகிறது.

"அவரை இதுவரை யாரும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவில்லையே, நாங்கள் எப்படி அறிமுகமில்லாத அவருக்கு உதவமுடியும்? "

இந்தியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். வந்தாரை வாழவைப்பவர்கள். இப்படியெல்லாம் பெயர் பெற்றவர்கள். அதிலும் தமிழர்களைப்போல் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்று பெருமையும் பேசிக்கொள்கிறோம். ஆனால் அடுத்தவருக்கு உதவி செய்தல் என்று வரும்போது, பலரும் பின்வாங்குவதை அன்றாடம் நடைமுறையில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இதை ரோடுகளில் விபத்து நடக்கும்போது கண்கூடாகப் பார்க்கலாம். ஒருவர் கீழே விழுந்து கிடக்கிறார். இரத்தக் காயம் ஒன்றுமில்லை. பக்கத்தில் ஒரு இருசக்கர வாகனம் கிடக்கிறது. இதைப் பார்க்கும் எத்தனை பேர் நின்று அவருக்கு உதவுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? நூற்றுக்கு ஒருவர் தேறக்கூடும். காரணம் என்னவென்று சிந்தித்தால், அப்படி உதவச் செல்லும்போது ஏதாவது வம்பு, வழக்கு வந்து விடுமோ என்ற பயம்தான் காரணம்.

சாதாரண விபத்துக்கே இப்படி என்றால், பலமான காயங்கள் ஏற்பட்டிருந்தால், என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். இந்த இடத்தில் மனித நேயம் அடிபட்டுப் போகிறது. ஆனால் இந்த மனோபாவம் சரிதானா? நாம் ஒரு உதவியை மனித நேய அடிப்படையில் செய்யத் தயங்கினால் நம் மனச்சாட்சி உறுத்தாதா?

முடிந்தவரையில் விபத்துகளின்போது ஒருவருக்கு உதவுவது சிறந்தது. ஆனால் இன்றுள்ள அவசர கதி வாழ்க்கையில் ஒருவர் இதற்காக தன் நேரத்தை ஒதுக்க முடியுமா என்பது ஒரு பதில் சொல்ல முடியாத கேள்வியாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி கருத்து கூறுங்கள்.

திங்கள், 1 ஜூலை, 2013

ஒரு மூத்த பதிவரின் புலம்பல்கள்

நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல்  - குறள் 948

பதிவெழுதுவது ஒரு பைத்தியமாக மாறிக்கொண்டு வருகிறது. எப்பொழுதும் சிந்தனை, அடுத்த பதிவு எப்பொழுது, எதைப்பற்றி என்பதைச் சுற்றியே வந்துகொண்டு இருக்கிறது. இந்த மாதிரிப் பைத்தியம் கல்யாணத்திற்கு முன்பு எங்கள் கிளப்பில் சீட்டு விளையாடினபோது வந்தது. மிகவும் சிரமப்பட்டு அதை குணப்படுத்தினேன்.

பதிவு போட்ட பின், பின்னூட்டம் வந்திருக்கிறதா, எத்தனை ஹிட்ஸ் வந்திருக்கிறது என்று பலமுறை பார்க்கத் தோன்றுகிறது. தமிழ்மணம் ரேங்க் எவ்வளவில் இருக்கிறது என்று தினந்தோறும் பார்க்கிறேன். ரேங்க் குறையக் குறைய ஏற்படும் மகிழ்ச்சி, அந்த ரேங்க் அதிகமாகும்போது துக்கமாக மாறுகிறது.

மற்றவர்கள் போடும் பதிவுகளின் தலைப்புகளை மட்டும்  நுனிப்புல் மேய்கிறேன். வெகு சில பதிவுகளை மட்டும் படித்து பின்னூட்டம் போடுகிறேன். ஆழமான படிப்பிற்கான பதிவுகள் அபூர்வமாகத்தான் எழுதப்படுகின்றன. அவைகளை ஆழமாகப் படிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டு வருகிறேன்.

பேப்பரில், பேனாவினால் எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டது போன்று தோன்றுகிறது. ஒரு வித்தியாசத்திற்காக இந்தப் பதிவை முதலில் பேப்பரில் எழுதி பிறகு கம்ப்யூட்டரில் அச்சிடுகிறேன். யாருக்கும் கடிதம் எழுதுவது என்பது மறந்தே போய்விட்டது. யாரிடமிருந்தும் கடிதங்கள் வருவதும் இல்லை. தபால்காரனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்த காலங்கள் மறந்தே போனது.

தூங்கி எழுந்ததும் கம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்ந்து இணையத்தைப் பார்க்கத் தோன்றுகிறதே தவிர வேறு ஒரு வேலையையும் செய்யத்தோன்றுவதில்லை. புத்தகங்கள் படித்து வெகு காலம் ஆகிவிட்டது. ஆரணி குப்புசாமி முதலியார் மற்றும் வடுவூர் துரைசாமி அய்யங்கார் துப்பறியும் கதைகளை நடு ஜாமம் வரை படித்துவிட்டு, பின்பு பயத்தினால், ஒன்றுக்கு கூடப் போகாமல்,  தூக்கம் வராமல் கிடந்தது, ஏதோ போன ஜன்மத்தில் நடந்தது போல் இருக்கிறது.

பிரசங்கங்கள், கதா காலக்ஷேபங்கள், சங்கீதக் கச்சேரிகள், நாட்டியம், சினிமா ஆகியவற்றில் எனக்கு அபரிமிதமான பற்று ஒரு காலத்தில் இருந்தது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. எங்கள் ஊரிலேயே  குமுதம் பிரதியை, முதல் ஆளாக, ஒவ்வொரு வாரமும் (அதற்கு முன்பு மாதம் மும்முறை)  விநியோகஸ்தர் பார்சலைப் பிரித்ததும்  வாங்கி, வீட்டிற்கு வருவதற்குள் அதை நடந்துகொண்டே படித்து முடித்தவன் நான் என்று சொன்னால் என் பேரப் பிள்ளகள் நம்ப மறுக்கிறார்கள்.

யூட்யூபில் இருந்து ஆயிரக்கணக்கான கர்னாடக இசைப் பாடங்களை டவுன்லோடு பண்ணி கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கிறேன். அவைகளை எப்போது கேட்பேன் என்று சொல்ல முடியவில்லை. அநேகமாக அடுத்த ஜன்மத்தில் முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். நாய் பெற்ற தங்கப் பழம் கதைதான்.

நல்லவேளை. பேஸ்புக், ட்விட்டர், செல்போன், எஸ் எம் எஸ், டி.வி. சீரியல், சினிமா விமரிசனம் எழுதுதல் ஆகியவைகளில் நான் சிக்கவில்லை. அப்படி சிக்கியிருந்தால் என்னை ஏர்வாடி தர்காவில்தான் சந்தித்திருக்கமுடியும்.

இது ஒரு  சரியான மனப்பிறழ்தல் நோய். உங்களுக்கும் இருக்கலாம். ஒரு பிரச்சினையை உணர்வதே அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுவதில் முதற்படியாகும். முதற்படி எடுத்து வைத்தாகிவிட்டது. எப்படியும் தீர்வை அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வியாழன், 27 ஜூன், 2013

எனக்குப் புரியாத பேங்க் விவரம் ஒன்று

இன்றைய செய்தித்தாள்களில் வந்த ஒரு பேங்க் மோசடி விவகாரம் பற்றி படித்திருப்பீர்கள். கர்நாடகா பெங்களூரில் உள்ள அரசு சார்ந்த ஒரு நிறுவனம் 25 கோடி ரூபாயை இரண்டாகப்பிரித்து சேலம் மாவட்டத்தில் சங்ககிரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் டிபாசிட்டாக ஒரு வருடத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

அதில் 12 கோடி ரூபாயை வங்கி அதிகாரிகள் மோசடி செய்திருக்கிறார்கள்.

எனக்கு வந்த சந்தேகம் என்னவென்றால் இந்தப் பணத்தை டிபாசிட் வைப்பதற்கு ஒரு நல்ல பேங்க் பெங்களூரில் இல்லையா என்பதுதான்?  பெங்களூரில் இருந்து இவ்வளவு தூரம் வருவதற்கான காரணம் என்ன?

என் சந்தேகம் நியாயமானதுதானா?

திங்கள், 24 ஜூன், 2013

அக்காளைக் கட்டினால் தங்கச்சி இலவசம்


இலவசங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

சீலை வாங்கினால் ஜாக்கெட்டு இலவசம்.

சோப்பு வாங்கினால் சீப்பு இலவசம்.

இரண்டு சர்ட் (அல்லது பேன்ட்) வாங்கினால் மூன்றாவது இலவசம்.

இப்படி உலகில் பல வியாபார வித்தைகள் நடக்கின்றன.

இதைப் பார்த்த என் நண்பர் சொன்னதைத்தான் இந்தப் பதிவிற்கு தலைப்பாக வைத்திருக்கிறேன். இது வேடிக்கைக்காக சொன்னாலும் இலவசங்களின் தத்துவத்தை நன்றாக விளக்குகிறது.

இந்த பொது தத்துவம் இணையத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று பார்ப்போம்.

இவ்வுலகில் எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை என்பதை அனுபவசாலிகள் புரிந்துகொண்டிருப்பார்கள். காற்றும் தண்ணீரும் இயற்கை தந்த இலவசச் செல்வங்கள் என்று சிறுவயதில் பாடபுத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் அவை எவ்வாறு வியாபாரப் பொருள்களாகி விட்டன என்று கண்கூடாகப் பார்க்கிறோம்.

இலவசம் என்று செல்லப்படும் அனைத்து விஷயங்களிலும் மறைமுகமாக ஏதோ ஒன்றை நம்மிடம் தள்ளிவிடுகிறார்கள் அல்லது அதனால் ஏதோவொரு லாபம் அவர்களுக்கு இருக்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டும்.

உலக நடைமுறை இவ்வாறு இருக்க இணையம் மட்டும் எப்படி வேறு விதமாக இருக்க முடியும்? இணையத்தில் இந்த உத்தியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.

கம்ப்யூட்டரை இயக்க பல மென்பொருட்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கிறது. விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்களில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. ஆனால் அத்தியாவசிய மென்பொருட்களுக்கான விலை அதிகமாக இருப்பதால் இந்தியாவில் ஏறக்குறைய எல்லோரும் காப்பியடிக்கப்பட்ட (Pirated) மென்பொருட்களை உபயோகிக்கிறோம்.

இது போக பல இலவச மென்பொருட்களை நம் பதிவுலக ஆர்வலர்கள் பரிந்துரைக்கிறார்கள். சில மென்பொருட்கள் உண்மையிலேயே இலவசமானவை. ஆனால் அவைகளின் மூலமாக ஏதோவொரு லாபம் அவர்களுக்கு கிடைக்கிறது. நம் காரியம் நடந்தால் சரி என்று நாம் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்கள் தங்களுடன் இன்னுமொரு இலவசத்தைக் கொண்டு வருகின்றன. பெரும்பாலான கம்ப்யூட்டர் வைரஸ்கள்  இவ்வாறுதான் நம் கம்பயூட்டருக்கு வந்து சேர்கின்றன.
சில வைரஸ்கள் பெரிய தீங்கு விளைவிக்காதவை. ஆனால் சில வைரஸ்கள் நம் கம்ப்யூட்டரையே முடக்கிப் போட வல்லவை.

ஆகையால்தான் எந்த வைரஸாக இருந்தாலும் தடுக்கவேண்டும் என்று அனைவரும் கூறுகின்றனர். இணையத்தை உபயோகப்படுத்தாதவர்கள் இந்த வைரஸ்களைக் கண்டு பயப்படத்தேவையில்லை. அவர்களை இந்த வைரஸ் இணையம் மூலமாக அணுகாது. வேறு வகைகளில் வரலாம்.

எந்தவொரு மென்பொருளையும் தரவிறக்கும்போது நல்ல ஆன்டிவைரஸ் மூலமாக பரிசோதித்து, பின்பு தரவிறக்குங்கள். அல்லது நண்பர்களிடம் விசாரித்துவிட்டு, பின்பு தரவிறக்குங்கள்.

கடந்த வாரத்தில் என்னுடைய கம்ப்யூட்டரை இரு முறை முற்றிலுமாக ரீஇன்ஸ்டால் செய்ய வேண்டி நேர்ந்தது. எனக்கு ஓரளவு இந்த தொழில் நுட்பம் தெரிந்திருந்ததினால் செலவு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் இந்த தொழில் நுட்பம் தெரியாதவர்களுக்கு வீண் செலவு ஏற்படும். ஆகவே இணையத்திலிருந்து எதையும் தரவிறக்கம் செய்யுமுன் தீர யோசித்து, பலரை விசாரித்து செயல்படவும்.


திங்கள், 17 ஜூன், 2013

வருமானவரி - மேலும் சில விவரங்கள்.

பதிவுகளைப் படிக்கும் பெரும்பான்மையானவர்கள் என்னைப்போல் சட்டங்களுக்கு பயப்படும் நடுத்தர வர்க்க மக்கள் என்று நம்பி இந்தப் பதிவை எழுதுகின்றேன். அப்படி இல்லாதவர்கள் இந்தப் பதிவைப் படித்து உங்கள் பொன்னான நேரத்தை பாழ்படுத்திக்கொள்ளாமல், இன்னும் இரண்டு காசு பார்க்கும் வேலையைச் செய்யவும்.

வருமான வரி என்றால் என்ன என்று கேட்கும் பல கோடீஸ்வரர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாதா என்ற கேள்வி கேட்பவர்களுக்கு விடை இதுதான். நாயை கண்டு பயந்து ஓடுபவனைத்தான் நாய் துரத்தும். தைரியமாக எதிர் நிற்பவனைப் பார்த்து வாலை சுருட்டிக்கொண்டு ஓடும்.

சட்டமும் இப்படித்தான். என்ன,  நாயை கல்லால் அடிக்கவேண்டும். சட்டக் காவலர்களை பணத்தால் அடிக்கவேண்டும். அவ்வளவுதான். நாம் எல்லோரும் நாயைக்கண்டு பயந்து ஓடும் ஜாதி.

வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்கு மேல் உங்களுக்கு வருமானம் இருந்தால் நீங்கள் வருமான வரி கட்டவேண்டும் என்று பார்த்தோம். மாமனார் வீட்டிலிருந்து வரும் வருமானத்தை இதில் காட்டவேண்டியதில்லை. மாமனார் என்பதற்கு அர்த்தம் எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். (நமக்கு வருமானம் தரும் ஒவ்வொருவரும் மாமனாரே.)

இப்படி கணக்குப்போட்டு வரும் வருமான வரி 10000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அந்த வரியில் 30 சதத்திற்கு குறையாமல் செப்டம்பர் 30 ம் தேதிக்குள் கட்டவேண்டும். 60 சதத்திற்கு குறையாமல் டிசம்பர் 31 க்குள் கட்டவேண்டும். மீதி வரியை துல்லியமாக கணக்குப் போட்டு மார்ச் 15ம் தேதிக்குள் கட்டவேண்டும். இதுதான் சட்டம்.

ஆனால் இப்படி ஒரு சட்டம் இருக்கிறதென்றே பலருக்குத் தெரியாது. மார்ச் 31 க்குள் வரி கட்டினால் போதும் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நடைமுறையிலும் அதையே கடைப்பிடிக்கிறார்கள்.

நானும் என் நண்பர்களும் இப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். போனவருடம் கொடுத்த வருமான வரிப் படிவத்தில், என் நண்பர் தவறுதலாக ஒரு ஆயிரம் ரூபாயைக் குறைத்துக் கட்டிவிட்டார். இந்த ரிடர்ன் எப்படியோ ஒரு வருமானவரி அதிகாரியின் பார்வையில் சிக்கியிருக்கிறது. அதற்கு அவர் என் நண்பருக்கு ஒரு "ஓலை" அனுப்பி விட்டார்.

அந்த ஓலையில் எழுதியிருந்ததாவது. நீங்கள் உங்கள் வருமானவரியில் 1000 ரூபாய் குறைவாகக் கட்டியிருக்கிறீர்கள், அதற்கு 750 ரூபாய் வட்டி சேர்த்து உடனடியாக பேங்கில் கட்டி, கட்டின ரசீதை இந்த ஆபீசுக்கு அனுப்பவும்.

இது என்ன, மீட்டர் வட்டி மாதிரி இருக்கிறதே என்று வருமான வரி அலுவலகத்தில் போய் விசாரித்தோம். அதற்கு அவர்கள் சொன்னது. நீங்கள் உங்கள் வரி முழுவதையும் மார்ச் மாதம்தான் கட்டியிருக்கிறீர்கள், எங்கள் விதிகளின்படி மூன்றில் ஒரு பாகத்தை செப்டம்பர் மாதத்திலும், இன்னொரு மூன்றில் ஒரு பாகத்தை டிசம்பர் மாத த்திலும் கட்டியிருக்கவேண்டும். இந்த தாமதத்திற்குத்தான் இவ்வளவு வட்டி என்றார்கள்.

ஐயா, இந்த சமாசாரம் எங்களுக்குத் தெரியாதே என்றோம். நீங்கள் இந்தியக் குடிமகன்தானே என்று கேட்டார்கள். ஆம் என்றோம். அப்படியானால் உங்கள் நாட்டுச் சட்டங்களையே நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையே, அது உங்கள் குற்றமல்லவா? என்றார்கள். நாங்கள் ஒரு பதிலும் பேசமுடியவில்லை.

பேசாமல் அவர்கள் சொன்ன பணத்தைக் கட்டிவிட்டு வந்தோம்.

அப்புறம் எங்களுக்குத் தெரிந்த வக்கீல் ஒரு பொன்மொழி சொன்னார்.

Ignorance of rules is no excuse for not following.

திங்கள், 10 ஜூன், 2013

டிராபிக் ரூல்ஸ்


சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானவை என்றுதான் நாம் அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நடைமுறை அப்படியில்லை என்பதை பலர் தங்கள் அனுபவத்தில் அறிந்திருப்பார்கள்.

சமீபத்தில் என் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம்.

கோவையில் உள்ள ஒரு முக்கிய ரோட்டில் ஒரு பக்கத்தில் "நோ பார்க்கிங்க்" போர்டுகள் வைத்திருக்கிறார்கள். அந்த போர்டுகள் ஒரே சீரான இடைவெளியில் இல்லை. ஒரு இடத்தில் அந்த மாதிரி போர்டு இல்லாத இடம் இருந்திருக்கிறது. அங்கு சில கார்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். என் நண்பர் "இந்த இடத்தில் கார்களை நிறுத்தலாம் போல் இருக்கிறது" என்று தன்னுடைய காரை நிறுத்திவிட்டு அவர் வேலையை கவனிக்கப் போய்விட்டார்.

திரும்பி வந்து பார்க்கையில் அவர் கார் சக்கரத்திற்கு ஒரு பூட்டுப் போட்டிருந்தது. கார் கண்ணாடியில் ஒரு போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் உங்கள் கார் "நோ பார்க்கிங்" இடத்தில் நிறுத்தி வைத்திருப்பதால் உங்கள் காரை லாக் செய்திருக்கிறோம். இந்த போலீஸ் ஸடேஷனுக்கு வந்து உங்கள் காரை ரிலீஸ் செய்து கொள்ளவும் என்று எழுதியிருந்தது.

அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற கார்களை எனது நண்பர் பார்த்தார். அந்தக் கார்களுக்கு இந்த மாதிரி பூட்டு போடவில்லை. இவர் சிரமப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விசாரித்தார். அந்த டூட்டியில் இருக்கும் போலீஸ்காரர் இந்த ரோட்டில் இப்போது இருக்கிறார், அங்கு சென்று பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இவரும் அங்கே சென்று சிரமப்பட்டு அவரைக்கண்டுபிடித்து கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு கூட்டிவந்தார்.

அவர் 300 ரூபாய்க்கு பைன் எழுதி பணத்தை வாங்கிக்கொண்டு பூட்டை திறந்துவிட்டார். என் நண்பருக்கு வயித்தெரிச்சலும் கோபமும் ஒரு சேர வந்தன. அவர் போலீஸ்காரரிடம் "இங்கே இன்னும் நாலு கார்கள் இருக்கின்றனவே, அவைகளுக்கு ஏன் பூட்டு போனவில்லை, என் காருக்கு மட்டும் ஏன் பூட்டு போட்டீர்கள்" என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த போலீஸ்காரர் சொன்ன பதில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியவை. "சார், இப்போ விவகாரம் எனக்கும் உங்களுக்கும் மட்டும்தான், அடுத்தவர்களைப்பற்றி நீங்கள் பேசவேண்டாம்" என்று சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவல்ல. ஆளாளுக்கு மாறுபடும் என்பதுதான். இதைப் புரிந்து கொண்டால் நீங்கள்தான் உண்மையான இந்தியப் பிரஜை.

திங்கள், 3 ஜூன், 2013

நீங்கள் குடி பெயர்ந்தீர்களா, சனி உங்களைப் பிடித்துவிட்டான்.


ஏழரை நாட்டு சனி என்று கேள்விப்படாதவர்கள் இருக்கமாட்டார்கள். இந்தச் சனி பிடித்தால் ஒருவனைப் படாதபாடு படுத்தும் என்று கேள்வி. நமது புராண நாயகன் நளச்சக்கரவர்த்தியை சனி எப்படிப் பிடித்தான் என்று அறிந்திருப்பீர்கள். ஒரு நாள் அவன் கைகால் கழுவும்போது குதிகாலில் ஒரு இடத்தில் கால் நனையவில்லை. சனி, நளனை அது வழியாகப் பிடித்தான் என்பது புராணக் கதை.

இது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் துர்ப்பாக்கிய வசமாக வீடு மாற்ற நேர்ந்தால் அப்போது உங்களை சனி பிடித்துக்கொள்ளுவான் என்பது மட்டும் தெரியும். வேறு ஊருக்குப் போய்விட்டீர்கள் என்றால் உங்களை ரெட்டைச் சனி பிடித்துக்கொண்டான் என்று அர்த்தம்.

நீங்கள் இவ்வாறு வீடு மாற்றியவுடன் செய்யவேண்டியவை:

1. ரேஷன் கார்டை புது விலாசத்திற்கு மாற்றவேண்டும்.

2. கேஸ் கனெக்ஷனை புது இடத்திற்கு மாற்றவேண்டும்.

3. தபால் ஆபீசில் உங்கள் தபால்களை புது விலாசத்திற்கு அனுப்பச்சொல்லி கடிதம் கொடுக்கவேண்டும். அவர்கள் அவ்வாறு உங்கள் கடிதங்களை புது விலாசத்திற்கு அனுப்புவார்களா என்பது வேறு விஷயம்.

4. பேங்க் அக்கவுன்டுகளை உங்கள் புது வீட்டிற்குப் பக்த்தில் உள்ள கிளைக்கு மாற்றவேண்டும்.

5. உங்கள் டிரைவிங் லைசன்சில் உங்கள் விலாசத்தை மாற்றவேண்டும்.

6. உங்களை வாகன ரிஜிஸ்ட்ரேஷன் அட்டையில் உங்கள் விலாசத்தை மாற்றவேண்டும். அந்த வாகனத்திற்குண்டான இன்சூரன்ஸ் சர்டிபிகேட்டிலும் விலாசத்தை மாற்றவேண்டும்.

7. உங்களுக்கு படிக்கும் வயதில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு ஸ்கூல் மாற்றவேண்டும்.

8. லேண்ட் லைன் டெலிபான் வைத்திருந்தால் அதை புது இடத்திற்கு மாற்றவேண்டும்.

இன்னும் விட்டுப் போனவை இருக்கலாம். எனக்கு நினைவு வந்தவரை குறிப்பிட்டிருக்கிறேன்.

இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு பதிவு எழுதவேண்டிய அளவிற்கு விஷயங்கள் இருக்கின்றன. அப்படி எழுதினால் உங்களில் பலரை, தற்கொலை செய்து கொள்ளத்தூண்டிய பாவம் என்னை வந்து சேரும் என்ற பயத்தினால் எழுதாமல் விடுகிறேன்.

ஞாயிறு, 26 மே, 2013

நீங்கள் கோவைக்கு வருகிறீர்களா, ஜாக்கிரதை.


போக்குவரத்து சிக்னல்கள் நகர வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. சந்தடி மிகுந்த சாலை சந்திப்புகளில் அவைகளின் பங்கு மகத்தானது. ஆனால் எந்த தொழில் நுட்பமும் அவைகளை உபயோகிப்போரின் பொறுப்பான செயல்களினால்தான் பயன் பெறும்.

சிக்னல்களில் மூன்று கலர் விளக்குகள் இருப்பதை எல்லோரும் கவனித்திருப்பீர்கள். ஒரு ஜோக்கில் ஒரு சிறுவன் சொன்னதை இங்கே ஞாபகப்படுத்துகிறேன். அவனுடைய டீச்சர் இந்த டிராபிக் விளக்குகளின் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார்.

அந்த சிறுவன் சென்ன பதில்: பச்சை விளக்கென்றால் நிற்காமல் போகவேண்டும். ஆரஞ்சு விளக்கென்றால் அதிக வேகத்தில் போகவேண்டும். சிகப்பு விளக்கு விழுந்து விட்டால் கண்ணை மூடிக்கொண்டு உச்சகட்ட வேகத்தில் போகவேண்டும் என்று சொன்னானாம்.

கோவையில் ஏறக்குறைய இது மாதிரிதான் நடக்கிறது. சட்டம் என்னவென்றால், ஆரஞ்சு விளக்கு விழும்போது நீங்கள் பாதி தூரம் வந்திருந்தால் போய் விடலாம். நிறுத்துக் கோட்டிற்கு இந்தப் புறம் இருந்தால் ஆரஞ்சு விளக்கு விழுந்தவுடன் வண்டியை நிறுத்திவிடவேண்டும்.

ஆனால் நடப்பது என்னவென்றால் அந்த பள்ளிச் சிறுவன் சொன்னது போல்தான். நீங்கள் சட்டப்பிரகாரம் ஆரஞ்சு விளக்கைப் பார்த்தவுடன் நிறுத்தினால் பின்னால் வருபவன் உங்கள் வண்டி மீது வந்து மோதுவான். கேட்டால் ஆரஞ்சு விளக்குதானே விழுந்திருக்குது. நீ போகவேண்டியதுதானே என்று உங்கள் மீது குற்றம் சுமத்துவான்.

சந்திப்புகளில் நிற்கும் போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது. லாரிக்காரர்களை "கவனிப்பது" தான் அவர்களின் முக்கிய வேலை.

நாங்கள், அதாவது உள்ளூர்க்காரர்கள் இதற்கு பழகிப் போய்விட்டோம். வெளியூரிலிருந்து கோவைக்கு புதிதாய் வருபவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.

வியாழன், 23 மே, 2013

நான் செய்த தவறு


நான் சமீபத்தில் தமிழீழம் பற்றி ஒரு பதிவு போட்டதில் சில தவறுகள் செய்து விட்டேன். அதாவது ஈழ சரித்திரம் சரியாகப் படிக்காததினால் வந்த தவறுகள் அவை. ஆகவே ஈழச் சரித்திரத்தை படிப்போம் என்று சில புத்தகங்களைப் படித்தேன்.

அதிலிருந்து நான் தெரிந்து கொண்டவை என்னவென்றால் இலங்கையில் தமிழினம் 2000 ஆண்டுகளாக இருந்து வருகிறது.  தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்வதற்காக 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து போனவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இலங்கையை ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் ஆண்டுவிட்டு பிறகு சுதந்திரம் கொடுத்தபோது பல சிக்கல்களையும் விட்டுச் சென்றார்கள். அந்தச் சிக்கல்களில் தலையாயதுதான் தமிழ் ஈழப் பிரச்சினை. இது மிகவும் சிக்கலான பிரச்சினை.

பல கட்டங்களைத் தாண்டி இந்தப் பிரச்சினை இன்று ஒரு குழப்பமான நிலைக்கு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை எப்படி தீரும் என்பதை காலம்தான் சொல்லும்.

வெள்ளி, 17 மே, 2013

ஒரு அறிவிப்பு


நண்பர்களே...
நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
எதுவும் வெளியிடாமல்...
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

தமிழீழம் பற்றி ஒரு சந்தேகம்.


எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் மனதைக் குடைந்து கொண்டே இருக்கிறது.

தமிழீழம், தமிழீழம் என்று தமிழர்கள் உயிரை விடுகிறார்களே, இலங்கைக்கு அந்தக் காலத்தில் கேரளாவிலிருந்தும் கணிசமான மக்கள் போயிருப்பார்கள் அல்லவா, அவர்களும் கேரள ஈழம் கேட்பதில்லையா?

படம்: கூகுளாண்டவர் உபயம்

செவ்வாய், 14 மே, 2013

திரு. பட்டாபட்டி - இறுதி சடங்குகள்.


திரு.பட்டாபட்டியின் நிஜப் பெயர் வெங்கிடபதி. அவர் அப்பா பெயரையும் சுருக்கி ராஜ் வெங்கிடபதி என்ற பெயரில் சிங்கப்பூரில் "Global Foundries" என்னும் ஸ்தாபனத்தில் சீனியர் இஞ்சினீயராக வேலை பார்த்துள்ளார். ஏதோ விஷயமாக பேங்காக் சென்றிருந்தபோது ஒரு மாலுக்குள் சென்றிருக்கிறார். அங்கு உள்ளே நுழைந்த சில நிமிடங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக இறந்துவிட்டார். அவரின் ஒரு சகோதரர் சிங்கப்பூரிலேயே இருக்கிறார். அவர் உடனடியாக பேங்காக் சென்றிருக்கிறார்.

திரு. பட்டாபட்டி இறந்தது 12-5-2013, ஞாயிற்றுக்கிழமை. அடுத்த நாளான 13ந் தேதி, திங்கட்கிழமை, தாய்லாந்தில் லீவு. ஒரு காரியமும் நடக்கவில்லை. இன்றுதான் (14-5-2013) பேப்பர் வொர்க் முடிந்து மதியத்திற்கு மேல் பேங்காக்கில் விமானத்தில் ஏற்றுவார்கள். இன்று இரவு(அதாவது 15-5-2013 அதிகாலை)  1 மணி சுமாருக்கு சென்னை வரும். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவருடைய சொந்த ஊரான பெரியநாயக்கன்பாளையத்திற்கு (கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 20 கி.மீ. தூரம்) அநேகமாக நாளை (15-5-2013, புதன்கிழமை) காலையில் 8 லிருந்து 9க்குள் சடலம் வரலாம்.  அன்றே இறுதிச்சடங்குகள் நடக்கும்.

இறந்தவருக்கு வயது 46. மனைவியும் இரு பெண் குழந்தைகளும் இருக்கின்றன. எனக்கு நெருங்கிய நண்பர். அந்த விபரங்களை பிற்பாடு எழுதுகிறேன்.

அவருக்கு சொந்த ஊரில் ஏகப்பட்ட நண்பர்கள். ஊரெங்கும் இரங்கல் நோட்டீஸ் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.


அஞ்சிலே ஒன்று பெற்றான்


இந்தப் பாடலை பலமுறை பல இடத்தில் படித்திருக்கிறேன். ஆனால் முறையாக அர்த்தம் தெரிந்து கொள்ளவில்லை. இந்தப் பதிவில் 

 http://sangarfree.blogspot.in/2012/04/blog-post.html 


இந்த உரையைக் கண்டேன். எல்லோருக்கும் பயன்படுமென்று கருதி அதை அந்த ஆசிரியரின் அனுமதி பெறாமலேயே இங்கு பிரசுரித்துள்ளேன். அவருடைய ஈமெயில் விலாசம் கிடைக்கவில்லை. அதனால் அவரிடம் அனுமதி வாங்கவில்லை. அனுமதி வாங்காததற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

இந்தப் பதிவுதான் என்னுடைய முதல் "காப்பி-பேஸ்ட்" பதிவு என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.


அஞ்சிலே ஒன்று பெற்றான்

                  அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
                ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற
              அணங்கைகண்டு  ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான்
              அவன்  நம்மை அளித்து காப்பான் 

இது கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் வரும் ஒரு பா ..தமிழ் சினிமா காரங்க சொல்லூர மாதிரி ரொம்ப எபெட் எடுத்து தான் கம்பர் இந்த பாடலை புனைந்திருக்க  வேண்டும் .

அனுமனுக்கு வணக்கம் வைக்கும்வகையில இந்த பா உருவாக்க பட்டிருக்கும் .
முதல் அடி கம்பர் ஆரம்பிக்கிறார் அனுமன் பிறப்பில்   அஞ்சிலே ஒன்றுபெற்றான் .அஞ்சு என்று கம்பர்  விளிப்பது ஐம்பூதங்களை என்பது வாசிக்கும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது .

அனுமனை வாயுபுத்திரன் என்றும் வாயுமைந்தன் என்றும் விளிப்பார்கள் .காரணம் அவன் வாயுபகவானின் வாரிசு என்கிற படியால் .அதே கருத்தை கம்பர் தன் பாவில்   அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றுஆரம்பித்திருக்கிறார்.

அடுத்து   அஞ்சிலே ஒன்றை தாவி        இந்த  கவி இடம் பெறும் படலம் பால காண்டம் சீதா பிராட்டியை தேடும் படலம் எனவே அஞ்சில் ஒன்றாகிய நீரை  கடக்க போவதை அதாவது கடலை கடந்து போவதை கம்பர் தன் பாணியில் எடுத்து விட்டிருக்கிறார்..அத்தோடு   அஞ்சிலே ஒன்று ஆறு ஆக   எனும் போது வான் வீதி வழியாக தாவி கடல் கடக்கிறான் என்கிறார் கம்பர்
எதுக்கு?  ஆருயிர் சீதாதேவியை காக்க கடல் தாண்டி செல்கிறான் ,சொல்கிறார் கம்பர்



கடல் தாண்டி அயலூர் அதாவது இலங்கை வருகிறான்,இங்கும் அந்த அஞ்சு என்பதை கம்பர் விடாமல் தொட்டு கொண்டே இருக்கிறார் .அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கை கண்டு இது சீதாபிராட்டி பற்றியது ,சீதா பூமா தேவி மகள் எனவே இந்த வரி இங்கு ..இதை விட அடுத்த வரி தன் முத்திரையை அழகாய் பதித்து விட்டு போயிருக்கிறார் கம்பர்

அஞ்சிலே ஒன்று வைத்தான்  இலங்கா புரிக்கு தீ வைத்தான் என்று முடித்து அவன் நம்மை காப்பான் என்று நினைத்திருகிறான்  கவியர்...

அருஞ்சொல் விளக்கம்:

ஆறு = வழி
அளித்து = கருணை அளித்து
ஆரியர் = வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள்

மேற்கண்ட பதிவு கீழே கொடுத்துள்ள தளத்திலிருந்து, அதன் ஆசிரியரிடமிருந்து எந்த விதமான அனுமதியும் வாங்காமல் பிரசுரிக்கப்பட்டது. அவருடைய முகவரி தெரியாததால் இவ்வாறு செய்யவேண்டி நேர்ந்தது.
http://sangarfree.blogspot.in/2012/04/blog-post.html

திங்கள், 13 மே, 2013

இப்படியும் ஒரு பதிவர்


http://avinashiathikadavu.blogspot.in    ல் வெளிவந்த  பதிவு  அவினாசி அத்திக்கடவு திட்டம் ...மேலும் வாசிக்க

இன்று தமிழ்மணம் திரட்டியை மேய்ந்துகொண்டிருந்த பொது மேற்கண்ட பதிவைப் பார்த்தேன். ஏதோ நம்ம ஊரு சமாச்சாரமா இருக்குதே, என்ன ன்னு பார்ப்போம் என்று கிளிக் பண்ணினேன். கீழ்க்கண்ட அறிவிப்பு வந்தது.


அதாவது வருகை புரிந்தவரின் பெயரும் பாஸ்வேர்டும் கேட்கிறது. படிக்க வருபவர்களை இந்தப் பதிவர் ஏன் இப்படி வாதிக்கிறார் என்று புரியவில்லை.

வெள்ளி, 10 மே, 2013

வருமானவரி என்றால் என்ன?


ஐயா.வருமான வரி யார் யாருயெல்லாம் கட்ட வேண்டும்.ரிட்டன் தாக்கல் செய்வது என்றால் என்ன?வரி கட்ட வில்லை என்றால் என்ன செய்து விடுவார்கள்.
தங்களின் பதில் தனி பதிவாக வெளியிட்டால் நலம்.

ஆஹா, கடவுள் எப்படியெல்லாம் கருணை காட்டுகிறார், பாருங்கள். பதிவு போட சப்ஜெக்ட் இல்லாமல் அல்லாடும்போது "ஆரிஃப்" ரூபத்தில் வந்து உதவுகிறார் பாருங்கள்.
==================================================================================

வருமான வரி கட்ட உங்களுக்கு வருமானம் இருக்கவேண்டும். வருமானம் இல்லாதவர்கள் வருமான வரி கட்டவேண்டியதில்லை. இந்த உண்மை அந்த பெயரிலிருந்தே உங்களுக்கு விளங்கியிருக்கவேண்டும். இருந்தாலும் ஒரு ஆசிரியன் என்கிற முறையில் இதைச் சொல்வது என் கடமையாகிறது.

நான் சம்பாதிக்கிறேன். அதற்கு அரசுக்கு எதற்கு வரி செலுத்தவேண்டும் என்று சிலர் கேட்பார்கள். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி. அரசு இல்லாவிட்டால் உனக்கு வேலை ஏது? சம்பளம் ஏது? நீயே இருக்க முடியாதே? இதைப் புரிவது கொஞ்சம் கடினம்தான்.

எவ்வளவு வருமானம் இருப்பவர்கள் வருமான வரி கட்டவேண்டும்? இது ஒரு சிக்கலான கேள்வி. நம் நாட்டில் சட்டம் ஒன்று சொல்லும். ஆனால் மக்கள் ஒரு விதமாக நடப்பார்கள். முதலில் சட்டத்தை சொல்கிறேன். பிறகு நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

சிலருடைய வருமானத்தை துல்லியமாக கணக்குப் போட்டுவிடலாம். மாத வருமானத்திற்கு வேலை பார்ப்பவர்களின் சம்பளம் இவ்வளவு என்று மாதாந்திர சம்பள பட்டியலைப் பார்த்தால் தெரிந்து விடும். இவர்கள்தான் நம் நாட்டின் அச்சாணி. இவர்களுக்காகத்தான் பெரும்பாலான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டங்களைப் பார்த்து பயப்படுபவர்களும் இவர்கள்தான்.

இவர்களுக்கான வருமானவரிச் சட்டம் என்ன சொல்லுகிறதென்றால்,  வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் இரண்டு லட்சத்திற்கு மேல் வாங்கும் சம்பளத்திற்கு வருமான வரி செலுத்தவேண்டும். வரி விகிதம் இவர்களுக்கு ரூபாய்க்கு பத்து பைசா மட்டுமே. இவர்கள் ஐந்து லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினால் அந்த அதிக சம்பளத்திற்கு வரி ரூபாய்க்கு இருபது பைசா. சம்பளம் பத்து லட்சத்திற்கு மேல் இருந்தால் வரி ரூபாய்க்கு முப்பது பைசா. இதுதான் அதிக பட்ச வரி விகிதம்.

வருமானவரி சட்டத்தின்படி வருடம் என்பது ஏப்ரல் 1 ந்தேதி ஆரம்பித்து அடுத்த வருடம் மார்ச் 31 ந்தேதி முடிவடையும் வருடமாகும். இதை கணக்கு வருடம் என்பார்கள் அதாவது "Accounting Year" என்பார்கள். அதற்கு அடுத்த வருடத்தை "Assessment Year" சுருக்கமாக "AY" என்பார்கள். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவே சில வருடங்கள் ஆகும்.

நீங்கள் பிராவிடண்ட் பண்ட்டில் பணம் போடுபவராக இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமான வரி கட்டவேண்டியதில்லை. அதே போல் மெடிகல் இன்சூரன்ஸ் செய்திருந்தால் 15000 ரூபாய்  வரை வரி இல்லை. பல டொனேஷன்களுக்கும் இவ்வாறு சலுகைகள் உண்டு.

சொந்தமாக வீடு கட்டியிருந்தால், அதற்கு கடன் வாங்கியிருந்தால், அந்தக் கடனின் வட்டிக்கு வரி இல்லை. வாடகை வீட்டில் குடியிருந்தால் அந்த வாடகைப் பணத்தின் ஒரு பகுதிக்கு வரி விலக்கு கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் யாராவது ஊனமுற்றிருந்தால் அவர்கள் பராமரிப்புக்கு என்று ஒரு தொகைக்கு வரி விலக்கு உண்டு.

இப்படியாக இன்னும் பல விலக்குகள் உண்டு. அவைகளைப் பற்றி இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டில் வேலை செய்பவர்களுக்கே சரியாகத் தெரியாது. நாமும் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை.

இப்படி இந்த சட்டதிட்டங்களை எல்லாம், எல்லோரும் தெரிந்து வைத்திருப்பது கடினம். ஒவ்வொரு ஆபீசிலும் இந்த சட்டதிட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் ஒருவர் இருப்பார் (என்னை மாதிரி). அவரிடம் போனால் அவர் உங்களுக்கு எவ்வளவு டாக்ஸ் வரும் என்று ஐந்து நிமித்தில் கணக்குப் போட்டு சொல்லிவிடுவார். என்ன, அவருக்கு ஒரு பார்ட்டி வைக்கவேண்டி வரும். அவ்வளவுதான்.

நீங்கள் ஆபீசில் வேலை செய்பவராக இருந்தால் உங்கள் வருமான வரியை அவர்களே பிடித்தம் செய்து அரசுக் கணக்கில் கட்டிவிடுவார்கள். அதற்கான ஒரு சர்டிபிகேட்டும் கொடுப்பார்கள். இந்த சர்டிபிகேட் பின்னால் தேவைப்படும்.

நீங்கள் ரிடையர் ஆகியிருந்தாலோ அல்லது வியாபாரம் செய்பவராகவோ இருந்தால் இந்த வரியை நீங்களே பேங்கில் கட்டவேண்டும். அதற்கு அவர்கள் ரசீது கொடுப்பார்கள்.

இப்படி நீங்கள் மார்ச் 31ந் தேதிக்குள் அந்த வருடத்திற்கான வருமான வரியைக் கணக்குப்போட்டு கட்டிவிட்டால் பாதி கிணறு தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

இந்த வரி கட்டின விபரங்களை அதற்குரிய படிவத்தில் சரியாக எழுதி அதை வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்து அதற்குண்டான படிவத்தில் ஒப்புதல் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். இதைத்தான் இன்கம்டாக்ஸ் ரிடர்ன் சமர்ப்பிப்பது என்று சொல்வார்கள். நாம் வாங்கும் ஒப்புதலுக்கு "Acknowledgement" என்று பெயர். இது மிகவும் முக்கியமான தஸ்தாவேஜு. இந்த வேலையை ஜூலை 31க்குள் செய்து முடித்துவிடவேண்டும்.

நீங்கள் பாட்டுக்கு வரி கட்டிவிட்டு, நாம்தான் வரி கட்டிவிட்டோமே என்று இருந்தீர்களானால், நீங்கள் வரி கட்டாதவராகத்தான் வருமானவரி இலாக்கா உங்களைக் கருதும். இந்த ரிடர்ன் பல பக்கங்களுடையதாய் சில வருடங்கள் முன்பு வரை இருந்தது. அத்தகைய படிவங்களை வைப்பதற்கு போதுமான இடம் வருமானவரி அலுவலகங்களில் இல்லாமையால் இப்போது இந்த படிவங்களை ஒரு சிங்கிள் காகிதமாக மாற்றிவிட்டார்கள்.

இந்த சிங்கிள் காகிதத்தை அச்சடிக்கத்தான் அவர்களுக்கு நேரம் இல்லை.

இத்துடன் வருமான வரி சமாச்சாரம் முடிந்து விடாது. உங்கள் கர்மவினை சரியாக இல்லாவிட்டால், உங்கள் வருமானவரிப் படிவம் ஒரு கிளார்க் கண்ணில் பட்டு அவனுக்கு அதில் ஏதாவது சந்தேகம் வரும். அப்போது அவன் உங்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்புவான். அதில் ஒரு தேதியில் வருமானவரி ஆபீசுக்கு வரச்சொல்லி இருக்கும். அன்று நீங்கள் நேரில் போய் விளக்கம் கொடுக்கவேண்டி இருக்கும்.

இந்த நடைமுறைகளெல்லாம் நம் போன்ற சாதாரண பிரஜைகளுக்குத்தான். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெரிய பெரிய வியாபாரிகள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் ஆகியோருக்கு இந்த வருமானவரிச் சட்டங்கள் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும்.

நீங்கள் மந்திரியாக இருந்தால், நான் வருமானவரி படிவம் தாக்கல் செய்ய மறந்துவிட்டேன் என்று கூட சொல்லிக்கொள்ளலாம். தேச சேவையில் இந்த மாதிரி சாதாரண விஷயங்கள் நினைவில் இருப்பது கடினம்தானே.

பின்சேர்க்கை:

சில வார்த்தைகளுக்கு வருமானவரி இலாக்காவில் அர்த்தம்.

1. Financial Year: இது ஏப்ரல் 1 ம் தேதி முதல் அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி முடிய உண்டான வருடம். இதை Accounting Year என்றும் சொல்லுவார்கள்.

2. Assessment Year: உங்கள் வருமான வரியை கணிப்பது, ரிடர்ன் சமர்ப்பிப்பது ஆகியவைகளுக்கு உண்டான வருடம். 31-3-2013 அன்று முடிவடைந்த கணக்கு வருடத்திற்கு 1-4-2013 முதல் 31-3-2014 வரை உண்டான வருடம்தான் Assessment year.

3. FY 2012-13  என்றால் 1-4-2012 முதல் 31-3-2013 வரை. இதற்கான Assessment Year = AY 2013-14.

4. AY 2013-14  என்றால் 1-4-2013 முதல் 31--3-2014 வரை.

இந்த வருடக் கணக்கை சரியாகப் புரிந்து கொள்ள எனக்கு 78 வயது தேவைப்பட்டது. உங்களில் அநேகர் என்னைவிட கெட்டிக்காரர்களாக இருப்பீர்கள். ஆகவே இந்தக் கணக்கை சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

AY 2013-14 வருடத்திற்கான வருமான வரிப் படிவம் இன்டர்நெட்டில் வந்துவிட்டது. அதை டவுட்லோடு செய்து பிரின்டிங் சென்டரில் கொடுத்தால் பிரின்ட் செய்து கொடுப்பார்கள். நம்மைப்போல் சாதாரணர்களுக்கு உண்டான படிவம் ITR 1 என்பதாகும். இது இரண்டு பக்கம் உள்ளது. இதை ஒரே காகிதத்தில் பிரின்ட் செய்யவேண்டும். தவிர இது  கண்டிப்பாக கலர் பிரின்ட்டாக இருக்கவேண்டும்.

கூடவே ITR V என்று ஒரு படிவம் இருக்கிறது. அதை கருப்பு வெள்ளையில் பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் வருமானவரி அலுவலகத்தில் ITR1 படிவத்தைக் கொடுத்ததும், இந்தப் படிவத்தில்தான் வரி ரிடர்ன்ஐ பெற்றுக்கொண்டதற்கான கம்ப்யூட்டர் ரசீதை ஒட்டிக்கொடுப்பார்கள். இதுதான் வரி ரிடர்ன் சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி. பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்தப் படிவங்களில் உள்ள எல்லா விவரங்களையும் தவறாமல் கொடுக்கவேண்டும். குறிப்பாக உங்கள் பேங்க் அக்கவுன்ட் நெம்பர். பேங்கின் IFSC  கோட் ஆகியவை கண்டிப்பாக வேண்டும்.  IFSC என்றால் Indian Financial System Code  என்பதின் சுருக்கம். இது அந்தந்த பேங்கிலோ அல்லது இன்டர்நெட்டிலோ கண்டு பிடிக்கலாம்.

இந்த விளக்கங்கள் போதுமென்று நினைக்கிறேன். மேலும் விவரங்கள் தேவைப்படின் பின்னூட்டத்தில் எழுதுங்கள். தனிப்பட்ட ஆலோசனை தேவைப்படுபவர்கள் நேரில் தக்ஷிணையுடன் வரவும்.

புதன், 8 மே, 2013

கடன் வாங்கி கார் வாங்கினீங்களா?


இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

பேங்கிலோ அல்லது தனியார் நிதி நிறுவனங்களிலோ கடன் வாங்கி கார் அல்லது பைக் வாங்கியுள்ளீர்களா? அதில் உள்ள நுணுக்கங்களைத் தெரிந்திருக்கிறீர்களா? பெரும்பாலானவர்கள் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. இந்த விவகாரத்தில் உள்ள வில்லங்கங்களை தெரிந்து கொள்வது நல்லது.

காருக்கு கடன் வாங்கும்போது பேங்க் ஆக இருந்தால், ஒரு பத்து கையெழுத்துகளும் தனியார் நிதி நிறுவனமாக இருந்தால் ஒரு நூறு கையெழுத்துகளும் வாங்கியிருப்பார்கள். புது கார் அல்லது பைக் வாங்கும் கிளுகிளுப்பில் நீங்கள் அவர்கள் காட்டிய இடத்திலெல்லாம், ஏதோ நீங்கள்தான் ரிசர்வ் பேங்க் கவர்னர் என்ற நினைப்பில், கையெழுத்து போட்டிருப்பீர்கள்.

ஒவ்வொரு கையெழுத்தும் ஒவ்வொரு கண்ணிவெடி என்பது பின்னால்தான் உங்களுக்குத் தெரியவரும். கார் அல்லது பைக் உங்கள் பேரில்தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உங்கள் பெயர்தான் ஆர்.சி. புஸ்தகத்தில் (இப்போது புஸ்தகம் ஏது, வெறும் ஒரு சிங்கிள் ஷீட்தான்) இருக்கும். நீங்களும் ஆஹா, நம் கார் என்ற மாயையில் சந்தோஷப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். இதுதான் ஒரிஜினல் மாயை. அந்தக் காரின் நிஜ சொந்தக்காரன், அந்த பேங்கோ அல்லது நிதி நிறுவனமோதான்.

அவர்கள் நீங்கள் எப்போது தவணை கட்ட மறக்கிறீர்கள் என்று கண் கொத்திப் பாம்பாக காத்திருப்பார்கள். ஒரு தவணை கட்ட மறந்தீர்களோ, உங்கள் காரைப் பிடுங்கிக்கொள்வார்கள். நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது. சட்டம் அவர்கள் பக்கம். இந்த மாதிரி தவணை கட்டாதவர்களின் காரைப் பிடுங்க ஒரு தனி ஏஜென்சி வைத்திருக்கிறார்கள். அவர்கள் உங்களைக் கண்காணித்து, நீங்கள் ஆள் அரவமில்லாத ரோட்டில் தனியாகப் போய்க் கொண்டிருக்கும்போது, நான்கு பேராக வந்து உங்களை காரிலிருந்து இறக்கி விட்டு விட்டு, காரை ஓட்டிக்கொண்டு போய்விடுவார்கள்.

பிறகு நீங்கள் அவர்களிடம் நடையாய் நடந்து, பல ஏச்சுகள் வாங்கி, தண்டங்கள் பல அழுது உங்கள் காரைத் திருப்பி எடுத்து வரவேண்டும்.

பிறகு நீங்கள் தவறாமல் தவணைகளைக் கட்டி முடித்து விடுவீர்கள். ஆஹா, கார் நம்முடையதாகி விட்டது என்று சந்தோஷப்படுவீர்கள். அது அற்ப சந்தோஷம் என்று உணறுங்கள். நீங்கள் தவணைகளை முழுவதும் கட்டி முடித்து விட்டாலும், கார் சட்டப்பிரகாரம் அவர்களுடையதுதான். பழைய கால ஓட்டல்களில் "இந்த டம்ளர் ஆனந்தபவனில் திருடியது" என்று என்கிரேவ் செய்திருப்பார்கள். அதுபோல  ஆர்.சி. புத்தகத்தில் அந்த பேங்கின் பெயரைக் குறிப்பிட்டு, இந்தக் கார் இந்த பேங்க்கிற்கு அடமானமாக வைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.

இதற்கு "ஹைபாதெகேஷன்" என்று பெயர். இதை கேன்சல் செய்தால்தான் கார் உங்களுடையது என்று உறுதியாகும். பலர் இந்த விவரம் நெரியாமல் இருப்பார்கள். இந்த "ஹைபாதெகேஷன்" ஐ கேன்சல் செய்வது என்பது ஒரு மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போன்ற வேலை.

இதற்கு அந்த நிதி நிறுவனம் அல்லது பேங்கில் இருந்து NOC அதாவது No Objection Certificate வாங்கவேண்டும். அதில் இந்த காருக்கான தவணைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டாம். இந்த காரின் "ஹைபாதெகேஷன்" ஐ கேன்சல் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று குறிப்பிட்டிருப்பார்கள். கூடவே Form 35 என்று ஒன்று இருக்கிறது. அதை அவர்கள் உங்கள் கையெழுத்துடன் நீங்கள் முதலில் கடன் வாங்கும்போதே வாங்கி வைத்திருப்பார்கள். அதையும் அவர்கள், தங்கள் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும்.

இந்த இரண்டையும் நீங்கள் வெற்றிகரமாக வாங்கி விட்டீர்களானால், பாதி கிணறு தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம். உடனே ஆர்டிஓ ஆபீசுக்கு ஓடிவிடாதீர்கள். இன்னும் பல படிகள் இருக்கின்றன. கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவை.

1. Form 35 இரண்டு காப்பிகள் (இது பேங்கில் கொடுத்திருப்பார்கள்)
2. NOC (இதற்கு இரண்டு ஜீராக்ஸ் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னால் தேவைப்படும்.
3. ஒரிஜினல் ஆர்சி புக் (ஷீட்)
4. இன்சூரன்ஸ் சர்டிபிகேட் ஜீராக்ஸ் காப்பி
5. உங்களுடைய அட்ரஸ் புரூப் (ரேஷன் கார்டு அல்லது ஒட்டர் ஐடி கார்டு) ஜீராக்ஸ் காப்பி
6. உங்களுடைய பேன் (Pan) கார்டு ஜீராக்ஸ் காப்பி
7. காரின் புகைச் சான்றிதழ் ஜீராக்ஸ் காப்பி
8. பேங்க் அல்லது நிதி நறுவனத்தின் விலாசம் எழுதப்பட்ட, 35 ரூபாய் தபால் ஸ்டாம்ப் ஒட்டிய கவர்

அனைத்து ஜீராக்ஸ் காப்பிகளையும் ஒரு கெஜட்டட் ஆபீசர் அல்லது நோட்டரி பப்ளிக் அவர்கள் அட்டெஸ்ட் செய்யவேண்டும். எல்லா ஒரிஜினல்களையும் கூடவே எடுத்துச்செல்லுங்கள்.

இவைகளை ஒன்றாகப் பின் பண்ணி எடுத்துக்கொண்டு உங்கள் ஆர்டிஓ ஆபீசுக்குப் போகவேண்டும். சுற்றுலாத் தலங்களில் கைடுகள் உங்களை மொய்ப்பார்களே அந்த மாதிரி, இங்கும் தரகர்கள் உங்களை மொய்ப்பார்கள். உங்களால் ஆர்டிஓ ஆபீஸ் கெடுபிடிகளை சமாளிக்க தைரியம் இல்லாவிட்டால் இந்த தரகர்களின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆளைப் பொறுத்து, வண்டியைப் பொறுத்து நூறு ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை சார்ஜ் பண்ணுவார்கள்.

நீங்கள் கார் வாங்கிய பின் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தீர்களானால் அதை விட வேறு வினை வேண்டியதில்லை. அந்த நிலையை டீல் பண்ணுவது இன்னொரு பதிவிற்கான விஷயம். அதை அப்புறம் பார்க்கலாம்.

நான் எப்பொழுதும் நேரடியாகத்தான் ஆர்டிஓ ஆபீசை டீல் பண்ணுவது வழக்கம். இந்த மாதிரி கவர்மென்ட் ஆபீசுகளுக்குப் போகும்போது கீழ்க்கண்டவைகளைக் கொண்டு போவது நல்லது.

1.ஸ்டேப்ளர், போதுமான அளவு பின்கள் இருக்கிறதா என்று செக் பண்ணிக்கொள்ளுங்கள்.
2. திக்காக எழுதும் ஸ்கெட்ச் பேனா, சாதாரணப் பேனாக்கள் இரண்டு, சிகப்பு இங்க் பேனா ஒன்று
3. பெவிஸ்டிக் கோந்து
4. குண்டூசிகள்
5. கெட்டி நூலும் அதற்குத் தகுந்த ஊசியும்.

ஆர்டிஓ ஆபீசுக்குள் முதல் முறையாகச் செல்லுகிறீர்க்ள என்றால் அங்குள்ள நடைமுறைகள் தலையும் புரியாது வாலும் புரியாது. கொஞ்சம் நிதானமாக நாலு பேரை விசாரித்து, உங்களுக்கான பணம் வாங்கும் கவுன்டரைக் கண்டு பிடியுங்கள். அங்கு இருக்கும் க்யூவில் சேர்ந்து கொள்ளுங்கள். க்யூவின் நீளம் உங்கள்  அதிர்ஷ்டத்தைப் பொருத்து பெரிதாகவோ சிறிதாகவோ இருக்கும்.

"ஹைபாதெகேஷன்" கேன்சல் செய்ய கட்டணம் 125 ரூபாய். சரியான சில்லறை கொண்டுபோவது அவசியம். பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு கம்ப்யூட்டர் ரசீது கொடுப்பார்கள். அது இரண்டு பாகமாக இருக்கும். ஒரு பாதியை கிழித்து உங்கள் Form 35 ல் ஒட்டவும். பிறகு இதைக்கொண்டு போய் எந்த கவுன்டரில் கொடுக்கவேண்டுமென்று விசாரித்து அங்கே கொடுக்கவும். அங்கேயும் க்யூ இருக்கும். அங்குள்ள நபர் உங்களை ஒரு நொடியில் எடை போட்டு விடுவார். சரி, ஒன்றும் பெயராது என்று முடிவு கட்டி, உங்கள் விண்ணப்பத்தை வேண்டா வெறுப்பாக வாங்கி வைத்துக் கொள்வார்.

மறு நாள் 5 மணிக்கு வந்து உங்கள் ஆர்சி புக்கை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்வார். அவரிடம் அதற்கு மேல் ஒன்றும் கேட்க முடியாது. அவ்வளவுதான். மறுநாள் மாலை 5 மணிக்குப் போய், இதற்குண்டான கவுன்டரை விசாரித்து அறிந்து அங்கு போனால் அந்தக் கவுன்டரில் உள்ள ஆள் அப்போதுதான்   டீ சாப்பிடப்போயிருப்பார். அரை மணி நேரம் கழித்து அவர் வருவார். வந்து என்ன வேண்டும் என்று நம்மை பார்வையாலேயே கேட்பார்.

நாம் ஆர்சி புக் என்று இழுத்து, ரசீதைக் காண்பித்தால் பத்து நிமிடம் தேடி அதை எடுத்துக் கொடுப்பார். அதை வாங்கிக்கொண்டு அப்பாடா என்று வீட்டிற்குத் திரும்ப வேண்டியதுதான். ஆனால் இந்த விஷயம் இத்துடன் முடியவில்லை.

"ஹைபாதெகேஷன்" கேன்சல் செய்யப்பட்ட ஆர்சி புக்கின் ஜீராக்ஸ் காப்பியும் NOC யின் ஒரு காப்பியையும் இணைத்து உங்கள் காரை இன்சூரன்ஸ் செய்திருக்கும் கம்பெனிக்கு அனுப்பவேண்டும். அவர்களிடம் இருந்து இதற்கான ஒப்புதல் வரவேண்டும். அப்போதுதான் இந்த விவகாரம் முடிந்தது என்று அர்த்தம்.

இந்த வேலை செய்தவர்கள், வீடு கட்டுவதோ, கல்யாணம் நடத்துவதோ கஷ்டம் என்று சொல்லவே மாட்டார்கள்.

திங்கள், 6 மே, 2013

ஒரு இனம் எப்படி முன்னேறும்?


இந்தியாவில் இனப் பாகுபாடு எப்படி தோன்றியது, அதை யார் வளர்த்தார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் கண்டு பிடிப்பது சிரமம் தவிர அதனால் பெரிய பலன் ஏற்படப்போவதுமில்லை. இன்று நம்மிடையே இந்த பேதங்கள் இருக்கின்றன என்பது நிதரிசனம்.

ஒரு சில இனங்கள் முன்னேறுவதையும் மற்றவர்கள் அப்படி முன்னேறாததையும் நாம் பார்க்கிறோம். ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று சமூகவியல் வல்லுநர்கள் ஆராயவேண்டும்.

சமீப காலங்களில் இரண்டு இனங்கள் தங்களை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கின்றன. அந்த சமூகத்தில் தோன்றிய தலைவர்கள் இந்த மாறுதலைத் தோற்றுவித்துள்ளார்கள். மற்ற இனத்தவர்களை வசை பாடாமல் அமைதியாக முன்னேறியுள்ளார்கள். அவர்கள் நாடார் சமூகத்தினரும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சமூகமும் ஆகும்.

மற்ற இனத்தவர் ஏன் இந்த மாதிரியைப் பின்பற்றி முன்னேறவில்லை என்று பார்த்தால் அந்த இனங்களில் தோன்றிய தலைவர்கள் சுயநலத்தோடு இருந்ததால் என்று தோன்றுகிறது. தங்கள் இனத்தவர்களை முன்னேறாமல் வைத்திருந்தால்தான் தாங்கள் கோலோச்சமுடியும் என்று உணர்ந்து அவர்கள் அந்த சமூகத்தினரின் உணர்ச்சிகளை மட்டும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

இந்த இழிநிலை மாறாத வரை அந்த சமூகங்கள் முன்னேற மாட்டா.

சனி, 4 மே, 2013

செலவு 300 ரூபாய் வரவு 3 லட்சம்


பேராசையே பல சங்கடங்களுக்குக் காரணம் என்று பல அனுபவங்கள் மூலமாக உணர்ந்திருந்தாலும், மனிதன் அதற்கு சில சமயங்களில் இடம் கொடுத்து விடுகிறான். அதற்கு உண்டான பலனையும் உடனே அனுபவிக்கிறான்.

==================================================================
3-5-2013 தினத்தந்தி செய்தி

மதுரை திருநகரில் ஆட்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் சம்பவம்.

வங்கி முன்பு, அ.தி.மு.க. பிரமுகரிடம் 3 லட்சம் கொள்ளை.

மதுரை, மே 3.

மதுரை திருநகரில் வங்கி முன்பு, ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு, நூதனமுறையில் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அ.தி.மு.க. செயலாளர்.

மதுரை திருநகர் 6 வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜ். நேற்று காலை இவர் திருநகர், சித்ரகலா காலனியில் உள்ள ஒரு வங்கிக்குச் சென்றார். வங்கியில் 3 லட்சம் பணத்தை எடுத்து ஒரு பேக்கில் வைத்துக்கொண்டு, தனது காருக்குத் திரும்பினார்.

காரின் பின் சீட்டில் பணப்பையை வைத்துவிட்டு, காரை எடுப்பதற்காக முன் சீட்டுக்கு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருநபர்கள், ரோட்டில் 100 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடப்பதை காட்டி, "இந்த ரூபாய் உங்களுடையதா பாருங்கள்" என்று கூறினர். அதைப் பார்த்த செல்வராஜ் தனது பணப்பையில் இருந்து சிதறாயிருக்குமோ என்று நினைத்து சிதறிக்கிடந்த மூன்று 100 ரூபாய் தாள்களையும் எடுத்தார். இதை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், காரின் பின் சீட்டில் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

சிதறிக்கிடந்த பணத்தை எடுத்தபின் காருக்கு வந்த செல்வராஜ், பின் சீட்டில் இருந்த பணப்பை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம மனிதர்கள் கீழே சில ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு தனது கவனத்தை திசை திருப்பி, பணப்பையை எடுத்துச்சென்றதை உணர்ந்தார்.

300 ரூபாயை எடுத்து முடிப்பதற்குள் 3 லட்சத்தை இழந்துவிட்டதை நினைத்து திகைத்துப்போனார்.

====================================================================

இந்தச் செய்தியில் எனக்குப் புரியாத ஒரு பாய்ன்ட். நூதனமுறையில் இந்த திருட்டு நடந்தது என்று தினத்தந்தி குறிப்பிட்டிருக்கிறது. இந்த திருட்டில் நூதனம் எங்கே வந்தது? காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் அரதப்பழசான டெக்னிக்தானே இது.

அடுத்து ஒரு பாய்ன்ட் - இது நல்ல பிசினஸ் மாதிரி தெரிகிறது. ஆர்வமுள்ள பார்ட்னர்ஸ் விண்ணப்பிக்கவும்.

வெள்ளி, 3 மே, 2013

20. கனவு கலைந்தது.


ஆஹா, இந்திய நாடு சீக்கிரமே வல்லரசாகப்போகிறது என்ற நினைப்பில் ஆனந்தமாக இருந்தேன். திடீரென்று ஒரு இடிச்சப்தம் கேட்டது. உடனே மழையும் பெய்ய ஆரம்பித்தது.

என்னடா இது, வேளை கெட்ட வேளையில் மழை பெய்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, என் மனைவியின் குரல் ஓங்கி ஒலித்தது. ரிடையர் ஆனாலும் ஆனீங்க, எப்பப் பாரு தூக்கம்தானா, எழுந்திரீங்க, வாசல்ல யார் யாரோ வந்து நிக்கறாங்க, என்னன்னு போய்ப்பாருங்க, என்றாள்.

அப்பத்தான் நான் இவ்வளவு நேரமும் கனவு உலகத்தில் இருந்திருக்கிறேன் என்று புரிந்தது. எழுந்து முகம் கழுவி விட்டு வாசலுக்கு வந்தேன். அங்கு கார்ப்பரேஷன் பிளம்பர் நின்று கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று கேட்டேன். நாளைக்கு உங்கள் ரோட்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்போகிறோம், உங்கள் பைப் கனெக்ஷன் உடைந்தாலும் உடையலாம் என்றார்.

சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றேன். கொஞ்சம் சம்திங் கொடுத்தால் அந்தப் பசங்களை உங்கள் பைப்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறேன் என்றான். சரியென்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு திரும்பினால் இன்னொருவன்.

நீங்க யாருங்க என்றேன். நான் டெலிபோன் டிபார்ட்மென்டுங்க. நாளைக்கு ரோடைத் தோண்டும்போது உங்கள் டெலிபோன் வயர் அறுந்தாலும் அறுகலாம் என்றான். அய்யய்யோ, டெலிபோன் இல்லாவிட்டால் இன்டர்நெட் இருக்காதே. அத்துடன் நம் உயிரும் இருக்காதே என்று நினைத்து அதற்கு என்ன பண்ணலாம் என்றேன். வயர் அறுகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை கொஞ்சம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றான்.

சரி என்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பினால் இன்னொருத்தன். நீ யாரப்பா என்றேன். நான் எலெக்ரிசிட்டி டிபார்ட்மென்ட்டுங்க என்று தலையைச் சொறிந்தான். எனக்கு விஷயம் புரிஞ்சு போச்சு. அவனுக்கும் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு வந்து காபி குடித்தேன்.

நம் நாடு என்னவாகும் என்று யோசனையில் மூழ்கினேன். நம் மக்கள் என்ன கஷ்டம் வந்தாலும் விதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று வாழ்வார்கள் என்று புரிந்தது. கனவில் வரும் ஒரு மாற்றத்தைப் பற்றிய பதிவைப் படிப்பதற்கே பயப்படும் ஒரு இனம், நிஜ வாழ்வில் மாற்றங்களைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள் என்பது என் மர மண்டையில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

(எங்க வீட்டு ரோஜாப்பூ)

புதன், 1 மே, 2013

19. அவசரச் செய்தி

வந்த அவசரச்செய்தி என்னவென்றால், அனைத்து மாநிலங்களிலும் சில ஓட்டுச் சாவடிகளை "பூத் கேப்சர்" செய்வதற்காக குண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே.

இந்தக் குண்டர்களை ஓட்டுச் சாவடியில் இருக்கும் நமது கிங்கரர்களே கவனித்துக்கொள்வார்கள் என்றாலும் ஓட்டுச் சாவடிக்குப் பக்கத்தில் சலசலப்பு எதற்கு என்று, அவர்கள் அனைவரையும் நமது தூதரகத்திற்கு கொண்டுவரச் சொன்னேன்.

எல்லோரும் வந்து மீட்டிங் ஹாலில் உட்கார்ந்தார்கள். எதற்காக பூத் கேப்சர் பண்ண முயன்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒவ்வொரு எலெக்ஷன் நடக்கும்போதும் இதுதான் எங்களுக்கு வேலை. இந்தந்த பூத்துகளை கேப்சர் செய்யுங்கள் என்று வேட்பாளர்கள் சொல்லுவார்கள். அதன்படி செய்வோம். அடுத்த எலெக்ஷன் வரும்வரை நாங்கள் வாழ்வதற்கான செலவிற்கு பணம் கொடுப்பார்கள். அதை வைத்து பிழைத்துக்கொண்டிருந்தோம்.

இந்த எலெக்ஷனில் எங்களை ஒருவரும் கூப்பிடவில்லை. எங்களுக்குத் தெரிந்த தொழில் இது ஒன்றுதான். அதனால்தான் இந்த வேலைக்குக் கிளம்பினோம் என்றார்கள்.

அப்படியா சேதி, உங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பணம் கொடுக்கப்படும். நீங்கள் அனைவரும் எல்லைக் காவல் படையில் சேர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளம் உங்கள் வீட்டில் கொடுக்கப்படும் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.

பிறகு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்தது. 98 சதம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. நடக்க முடியாதவர்களும் ஆஸ்பத்திரியில் இருந்தவர்களையும் தவிர அனைவரும் ஓட்டுப்போட்டிருந்தார்கள்.

மறு நாள் காலையில் ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்தது. மதியத்திற்குள் முடிவுகள் வெளியாகிவிட்டன. தேசீயக் கட்சி, எதிர் பார்த்தது போல் 90 சதம் இடங்களில் வெற்றி பெற்றார்கள். எதிர்க்கட்சிகளுக்கு 10 சதம் இடங்கள் கிடைத்தன. இது எப்படி நடந்தது என்று அனைத்து மக்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அந்த ரகசியம் தேவலோக தூதரகத்தில் இருக்கும் சூபர் கம்ப்யூட்டருக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்.

மாநில சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதினைந்து நாள் பயிற்சி கொடுக்கப்பட்டது. அவர்களின் கடமைகள் என்ன, உரிமைகள் என்ன, மாநில அரசின் பொறுப்புகள் என்ன, அவைகளை நிறைவேற்றுவது எப்படி ஆகிய விஷயங்களில் அவர்களுக்குத் தீவிரப் பயிற்சி கொடுக்கப்பட்டது.

அதே மாதிரி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. எல்லோரும் நாட்டை ஆளுவதற்கு தயாராகி விட்டார்கள்.

இந்தப் பயிற்சிகளில் வலியுறுத்தப்பட்ட அம்சங்கள் வருமாறு.

1. இந்திய நாட்டில் இனி லஞ்சம் எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது.

2. இலவசங்கள் எந்த ரூபத்திலும் இல்லை.

3. அனைவரும் வேலை செய்யவேண்டும்.

4. தொழிற்சாலைகள் தரமான பொருள்களையே உற்பத்தி செய்யவேண்டும்.

5. நாட்டில் பிச்சை எடுப்பது ஒழிக்கப்பட்டு விட்டது.

6. எல்லோரும் சமம். யாருக்கும் எந்தவிதமான சலுகைகளும் இல்லை.

7. பொருட்களுக்கு உற்பத்தி செலவிற்கு மேல் 30 சதம் லாபம் உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்கப்படும்.

8. வியாபாரத்தில் வாங்கும் விலைக்கு மேல் 10 சதம் மட்டுமே அதிகப் படுத்தி விற்கலாம்.

9. அனைத்து அரசு நிறுவனங்களும் மக்களின் சேவைக்காகவே தரமாக பணியாற்றும்.

10. ரயில்கள் குறித்த நேரத்தில் ஓடும்.

11. போக்குவரத்து நெரிசலான நேரங்களில் நகரின் மையப் பகுதிகளில்  தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

12. நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் அரசு அலுவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.

13. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து விதிகள் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும்.

14. கல்விக்கூடங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும். தனியார் கல்விக்கூடங்களை அமைப்பது தடுக்கப்படுகிறது.

15. போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும்.

16. பாராளுமன்ற, சட்டசபை உறுப்பினர்களுக்கு எந்த ஆடம்பர வசதிகளும் தரப்படமாட்டாது. மத்திய மந்திரிகள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்யலாம்.

17. டில்லியில் மீட்டிங் வைத்து மாநிலங்களிலிருந்து மந்திரிகளையும், செயலர்களையும் கூப்பிடும் வழக்கம் அடியோடு நிறுத்தப்படுகிறது.

இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவைகளை எனக்குத் தெரிவிக்குமாறு எல்லோருக்கும் அறிவித்தேன். பாராளுமன்றமும் சட்டசபைகளும் செயல்பட ஆரம்பித்தன. நாடு ஒழுங்கான பாதையில் போக ஆரம்பித்தது.


திங்கள், 29 ஏப்ரல், 2013

18. நாட்டின் தலைவிதி மாறியது

பிரதம மந்திரி. நிதி அமைச்சர், கட்சித்தலைவர் ஆகியார் குழு வந்தார்கள். பொதுத் தேர்தலை எப்படி நடத்துவது என்பதைப்பற்றி தீவிரமாக விவாதித்தோம்.

நான் சில கருத்துகளைக் கூறினேன்.

1. இப்போது உள்ள தேசீயக் கட்சியே வேட்பாளர்களை நிறுத்தும். இதில் 33 சதம் பெண்கள். இந்த  வேட்பார்களே 90 சதம் வெற்றி பெறுவார்கள்.

2. எதிர்க் கட்சிக்கு 10 சதம் இடம் கொடுப்போம். ஏனெனில் எதிர்க்கட்சி இல்லாவிடில் அதை ஜனநாயக நாடு என்று ஒருவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

3. பாராளுமன்றத்திற்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். இப்போதுள்ள நாடாளுமன்றம், அனைத்து சட்டசபைகளையும் கலைப்பதற்கு ஜனாதிபதியிடம் உத்திரவு வாங்கி அமுல்படுத்துங்கள்.

4. தேர்தலுக்கான அறிவிப்புகளும் வேட்பாளர் தேர்வும் உடனடியாக ஆரம்பிக்கட்டும்.

5. தேர்தலை இன்னும் மூன்று மாதத்தில் நடத்தி முடித்து விடவேண்டும்.

இந்த கருத்துகளுக்கு அவர்கள் ஏகமனதாக ஒத்துக்கொண்டார்கள்.

நிதி அமைச்சர் மட்டும் ஒரு சந்தேகம் எழுப்பினார். நம் வேட்பாளர்கள் 90 சதம் வெற்றி பெறுவார்கள் என்று கூறினீர்களே, அது எப்படி சாத்தியமாகும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். சந்தோஷத்துடன் அவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. எல்லொரும் மும்முரமாக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தார்கள். தேசீயக் கட்சி வேட்பாளர்கள் சீக்கிரம் முடிவு செய்யப்பட்டு அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து விட்டார்கள். எதிர்க்கட்சிகளுக்கு வேட்பாளர்கள் யாருமே முன்வரவில்லை. அவர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கும் வேட்பாளர்களை நானே ஏற்பாடு செய்தேன்.

வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு ஓட்டுச் சீட்டுகள் அடித்தாகிவிட்டது தேர்தல் பிரசாரம் என்பதே மருந்துக்குக்கூட இல்லை. ஆங்காங்கே விளம்பரத் தட்டிகள் வைத்ததோடு சரி. அனைத்து ஓட்டர்களும் கண்டிப்பாக ஓட்டுப் போடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். அனைவருக்கும் ஓட்டுப் போட்டவுடன் பிரியாணி விருந்து கட்சி பேதமில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன்.

தேர்தல் நாளைக்கு முன்தினம் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டுப்பதிவிற்கான அனைத்து சாதனங்களும் தேர்தல் அதிகாரிகளும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வைக்கப்பட்டிருந்த அனைத்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும் "வை-ஃபி" முறையில் தேவலோகத் தூதரகத்திலுள்ள சூபர் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் நாள் வந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒவ்வொரு யம கிங்கரனைக் காவலுக்குப் போட்டிருந்தேன். எந்தச்சாவடியிலும் எந்த விதமான சலசலப்பும் இல்லை. மக்கள் ஒழுங்காக வந்து ஓட்டுப்போட்டு விட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.

மாலை 5 மணிக்கு பத்து நிமிடம் இருக்கும்போது ஒரு அவசரச்செய்தி.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

நான் வருமானவரி கட்டப் போன கதை.


நான் ஏறத்தாழ 40 வருடங்களாக வருமானவரி கட்டிக்கொண்டு வருகிறேன். மார்ச் 31 தேதிக்குள் அந்த வருடத்திற்கான வரியை பேங்கில் கட்டி விடுவேன். ஏப்ரல் முதல் வாரத்தில் வருமான வரி ரிடர்ன் தயார் செய்து 15ம் தேதிக்குள் வருமான வரி ஆபீசில் தாக்கல்செய்து விடுவேன்.

நானும் என் நண்பர்கள் சிலரும் இவ்வாறுதான் வருடா வருடம் செய்து வந்தோம். வருமான வரி படிவத்திற்கு என்றும் தட்டுப்பாடு ஏற்பட்டது கிடையாது. வருமான வரி ஆபீசில் கேட்டால் தாராளமாக கொடுப்பார்கள். இரண்டு மூன்று படிவங்கள் என் பைலில் எப்போதும் இருக்கும்.

போன வருடம் இந்த மாதிரி வழக்கம்போல் ஒரு படிவத்தில் விவரங்களைப் பதிவு செய்து வருமானவரி ஆபீசுக்கு சென்றோம். அவர்கள் இந்த பழைய படிவங்கள் செல்லாது, புதிய படிவங்கள் இன்டர்நெட்டில் இருக்கிறது, டவுன்லோடு செய்து அதில் விவரங்களைப் பூர்த்தி செய்து கொண்டு வாருங்கள் என்றார்கள். நீங்களே படிவங்கள் தருவீர்களே, அந்த முறை என்ன ஆயிற்று என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், நாங்கள் கொடுப்போம், இப்பொழுதுதான் படிவங்களை அச்சாபீசுக்கு கொடுத்திருக்கிறோம், அவை வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும், உங்களுக்கு அவசரமில்லையென்றால் காத்திருங்கள் என்றார்கள். எங்களுக்கு இந்த சனியன் பிடித்த வேலையை சீக்கிரம் முடித்து விட்டால் ஒரு தொல்லை தீருமே என்ற எண்ணம்.

வீட்டிற்கு வந்து இன்டர் நெட்டில் தேடி அந்தப் படிவத்தைக் கண்டுபிடித்து டவுன்லோடு செய்து ஜீராக்ஸ் சென்டருக்குப் போய் பிரின்டவுட் எடுத்து பூர்த்தி செய்து, வருமானவரி ஆபீசில் சேர்த்துவதற்குள் தாவு தீர்ந்து விட்டது.

இந்த வருடமும் அவ்வாறே மார்ச் 31 க்குள் வரி முழுவதையும் கட்டிவிட்டு பழைய படிவத்தில் விவரங்கள் பூர்த்தி செய்து எடுத்துக் கொண்டு வருமானவரி ஆபீசுக்குப் போனோம். அங்கே இந்தப் படிவம் வாங்கும் கவுன்டரில் இரண்டு பேர் ஈ ஓட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

அவர்களிடம் இந்த மாதிரி வருமானவரி படிவம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொன்னோம். அவர்கள் எங்கள் படிவங்களை ஏறெடுத்தும் பாராமல், இந்த வருடம் புது படிவம் வரப்போகிறது, அதில்தான் நீங்கள் ரிடர்ன் தாக்கல் செய்யவேண்டும் என்றார்கள். சரி, புது படிவங்கள் எப்பொது கிடைக்கும் என்று கேட்டோம். மூன்று மாதங்களில் அநேகமாக கிடைக்கும் என்றார்கள், அதாவது ஜூன் மாதக் கடைசியில் வரும் என்றார்கள்.

இன்டர்நெட்டில் இப்போது கிடைக்குமா என்று கேட்டதற்கு, இன்டர்நெட்டிலும் ஜூன் மாதம்தான் கிடைக்கும் என்றார்கள். இப்போது தினம் இன்டர்நெட்டைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.

அவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்பிய கேள்வி வாய் வரையில் வந்து விட்டது. இருந்தாலும் அதைக்கேட்கவில்லை. அந்தக்கேள்வி- வருமானவரிப் படிவங்கள் வருவதற்கு இன்னும் மூன்று மாதம் ஆகும். அதுவரையில் நீங்கள் என்ன செய்து கிழிக்கப்போகிறீர்கள்? சேரைத் தேய்ப்பதற்கா உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்?   இடம், பொருள், ஏவல் கருதி அந்தக் கேள்விகளை அப்படியே விழுங்கி விட்டு வந்தேன்.

இந்த மேட்டரில் எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், இந்திய அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் வருமானவரித்துறை மிக முக்கிய இடம் வகிக்கின்றது. ஏப்ரல் 1 ம் தேதியானால் வருமானவரி ரிடர்ன் கொடுக்க மக்கள் வருவார்கள் என்பது இந்த மடச்சாம்பிராணி டிபார்ட்மென்டுக்கு நன்றாகத்தெரியும். ஒரு மாதம் முன்பே இந்தப் படிவங்களை தயார் செய்து வைத்தால் என்ன?

வருடம் ஏறக்குறைய இரண்டு லட்சம் கோடி வருமானம் வசூலிக்கும் ஒரு அரசுத்துறையின் அவலத்தை என்னவென்று சொல்வது?

புதன், 24 ஏப்ரல், 2013

சமையலறை அமைப்பது எப்படி?


சமையலறையில்தான் இந்தியப் பெண்கள் அவர்கள் வாழ்நாளில் பாதியைக் கழிக்கிறார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம். இப்போது காலம் மாறிவிட்டது. இருந்தாலும் ஒரு வீட்டில் சமையலறை மிகவும் முக்கியமானதுதான். யார் சமைக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

சமையலறை சமைப்பதற்காக என்ற அடிப்படை உண்மையை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஆகவே அதற்கான அமைப்புகள் அங்கு இருக்கவேண்டியது அவசியம். முதலில் சமையலறையின் அளவு. குறைந்தது 10 அடிக்கு 10 அடி இருப்பது அவசியம்.

முதலில் அடுப்பு.

கேஸ் அடுப்புதான் இப்போது மாமூல். விறகு அடுப்பு, குமுட்டி அடுப்பு, கெரசின் ஸ்டவ் அப்படீன்னு ஒரு காலத்தில் இருந்தது, என்னைப்போன்ற கிழம் கட்டைகளுக்கு ஞாபகம் இருக்கும். கேஸ் அடுப்பில் பலவகை இருக்கிறது. கேஸைத் திருகினால் தானாகவே பொருத்திக்கொள்ளும் மாடல்தான் இப்ப பாபுலர்.


அடுத்த அவசியம் கிச்சன் சிங்க்

சின்னச்சின்ன சாமான்களை கழுவ ஒவ்வொரு தடவையும் வெளியில் இருக்கும் பெரிய சிங்க்குக்குப் போக முடியாது. அதற்கு சமையல் மேடையிலேயே ஒரு சிங்க் வேண்டும். ஸ்டெய்ன்லெஸ் ஸடீலில் நவீன டிசைனில் பலவிதமான சிங்க்குகள் கிடைக்கின்றன.


எலெக்ட்ரிக் சிம்னி: 

இது பேஷனாக இருந்த காலம் போய் இன்று ஒரு அத்தியாவசியமாக ஆகிவிட்டது. பலதரப்பட்ட விலைகளில் கிடைக்கிறது. ஃபேபர் ஒரு நல்ல கம்பெனி. இதை வாங்கிப் பொருத்தவேண்டும்.


பிரிட்ஜ்:

இது இல்லாத வீடே இன்று இல்லை. அதை எப்படி பராமரிக்கிறார்கள் என்பது வேறு விஷயம். வாங்கும்போதே கொஞ்சம் பெரிய சைஸ் வாங்கிவிட்டால் நல்லது. பல கம்பெனிகள் இருக்கின்றன. உங்கள் பட்ஜெட்டைப் பொருத்து வாங்கலாம்.


கப்போர்டுகளும் டிராயர்களும்:

இன்று சமையலறை நாகரிகம் என்னவென்றால், நீங்கள் சமையலை முடித்து விட்டு வெளியில் வந்த பிறகு, யாராவது அந்த சமையலறையைப் பார்த்தால், இங்கு சமையல் செய்கிறார்களா என்று கேட்க வேண்டும். அப்படி கிளீனாக சமையலறை இருக்கவேண்டும். அதற்கு உதவுபவைதான் கப்போர்டுகளும் டிராயர்களும். அனைத்து பொருட்களும் இதற்குள்தான் இருக்கவேண்டும். அதுதான் பேஷன்.


இழுவை டிராயர்கள்:

இவை மிகவும் உபயோகமானவை. புழங்குவதற்கு எளிதானவை.


கப் போர்டுகள்:

கிச்சன் ஸ்லேப்பிற்கு கீழும், லாஃப்டுக்கு மேலும் இவைகளை அமைத்தால் பல பொருட்கள் அங்கு வைத்துக்கொள்ளலாம்.




அடுத்த அவசியம் - குடி தண்ணீர்:

சுத்தமான குடிதண்ணீரின் அவசியத்தை அனவரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே அக்வாகார்டு கட்டாயம் வேண்டும்.


பவர் பாயின்டுகள்:

மிக்சி, எலெக்ட்ரிக் கிரைண்டர் முதலியவை எல்லோர் வீடுகளிலும் சகஜமாகி விட்டன. அவைகளைப் பொருத்த, நல்ல பாதுகாப்பான பவர் பாயின்டுகள் அவசியம்.


நல்ல வெளிச்சம்:

சமையலறையில் நல்ல வெளிச்சம் இருப்பது அவசியத்தேவை.


சுவரில் டைல்கள்

தரையிலிருந்து சீலிங்க் வரைக்கும் கிளேஸ்டு டைல்ஸ் ஒட்டிவிட்டால் சமையலறையை கிளீன் செய்வது சுலபம்.


மைக்ரோ ஓவன்:

இது காலத்தின் கட்டாயம். ஒரு வாரத்திற்கு வேண்டிய இட்லிகளை ஒன்றாகச் சுட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு, அவ்வப்போது தேவையானவற்றை எடுத்து மைக்ரோ ஓவனில் சுட வைத்தால் புது இட்லி தயார். சாம்பார், ரசம் ஆகியவைகளும் இவ்வாறே.


தரை:

தரை துடைப்பதற்கு ஏதுவாகவும் பார்ப்பதற்கு நன்றாகவும் இருக்கவேண்டும். பலவகை டைல்கள் இருக்கின்றன, இங்கே காண்பது கிரேனைட் தரை.



கடைசியாக:

நாங்களெல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன் கை கழுவுவோம். உங்கள் வீட்டு வழக்கம் எப்படி என்று தெரியவில்லை. அப்படி கை கழுவுவதற்கான இடம்.


இப்படிப்பட்ட ஒரு சமையலறை அமைக்க ஏறக்குறைய மூன்று லட்சம் ரூபாய் தேவைப்படும். (கட்டிட செலவு போக)

திங்கள், 22 ஏப்ரல், 2013

17. ஆணும் பெண்ணும் சமம்.



இந்த தேர்தல்கள் முடிந்து எல்லோரும் பதவி ஏற்றுவிட்டார்கள். மகளிர் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மகளிருக்கு 33 சதம் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இந்த பஞ்சாயத்து உறுப்பினர் அனைவருக்கும் ஒரு வார காலப் பயிற்சி தேவலோகத் தூதரகத்தில் கொடுக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் நடைமுறை அலுவல்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களை நல்வழிப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன. மக்களின் நலவாழ்விற்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவைகளை செயல்படுத்தத் தேவையான வழிமுறைகளும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

இதேபோல் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் கடைசியாக ஒரு அறிவுரை வழங்கப்பட்டது. எல்லோருக்கும் அவர்கள் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தத் தேவையான ஊதியம் கொடுக்கப்படும். ஆகவே எந்த திட்டத்திலும் ஊழல் என்பதே தலைகாட்டக்கூடாது. அனைத்து நலத்திட்டங்களும் கச்சிதமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த செயல்பாடுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் நடக்கும். இந்த செயல்பாடுகளை ஒரு சூபர் கம்ப்யூட்டர் கண்காணிக்கும். எங்கு தவறு நடந்தாலும் அது என் தனிப்பட்ட கவனத்திற்கு வந்து விடும். அதற்கான தீர்வுகள் உடனடியாக எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

பஞ்சாயத்துகள் செயல்படுத்த வேண்டிய கிராம நலத்திட்டங்கள்:

   1.   எல்லோருக்கும் குடியிருக்க கழிவறை வசதியுடன் கூடிய வீடுகள்
   2.   அனைவருக்கும் வேண்டிய குடிநீர்
   3.   அனைவருக்கும் வேலை வாய்ப்பு 
   4.   கிராமத்திலேயே தரமான கல்வி
   5.   எல்லோருக்கும் மருத்துவ வசதி
   6.   நல்ல சாலைகள்
   7.   விளைபொருட்கள் கொள்முதல் நிலையங்கள்
   8.   மக்களுக்குத் தேவையான பொருட்களின் விற்பனை நிலையங்கள்
   9.   சமூக கூடங்கள்
10. வேலை வாய்ப்பு சுய உதவிக் குழுக்கள்.
11. விவசாயத்திற்கு முன்னுரிமை

இந்த வசதிகள் அனைத்தும் அந்தந்த கிராமங்களிலேயே மக்களின் தேவையை அனுசரித்து இருக்கும். கிராம மக்கள் பெரும்பாலான தேவைகளுக்கு கிராமத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

அனைத்து அரசு துறைகளும், அனைத்து கிராமங்களுக்கும் சென்று அந்த கிராமங்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை தயாரித்து அவைகளை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக நிறைவேற்றுவார்கள். இதற்கான நிபுணர்கள் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்படுகிறது. இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான போதிய நிதி வசதிகள் ஒவ்வொரு பஞ்சயத்திற்கும் தடையில்லாமல் வழங்கப்படும். எங்கும் எதிலும் இலவசம் என்ற பேச்சுக்கு இடமே கொடுக்கப்பட மாட்டாது.

இதற்கான நடைமுறை உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டு நாட்களில் அனைத்து உத்திரவுகளும் நடைமுறைக்கு வந்தன.

வேலை வாய்ப்பு சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் அமைக்கப்பட்டன. அந்தந்த தொழிலுக்குத் தேவையான வேலைகளை இந்த குழுக்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுக்கும். அந்தந்த குழுக்களுக்குத் தேவையான தொழில் நுட்ப பயிற்சிகள் தகுந்த நிபுணர்களால் கொடுக்கப்பட்டது. விவசாய வேலைகளுக்கு தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக இயந்திரங்களை வைத்துக்கொண்டு ஆட்களின் தேவைகளைக் குறைக்கும் தொழில் நுட்ப பயிற்சிகள் விரிவாக கொடுக்கப்பட்டன.

இதனால் குறிப்பாக விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற குறை தீர்ந்தது. அனைத்து விளைபொருட்களுக்கும் உற்பத்திச் செலவை அனுசரித்து விற்பனை விலை நிர்ணயிப்பதால் உற்பத்தியாளர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

கிராமங்கள் செழிப்படைய ஆரம்பித்தன. இந்நிலையில் நாட்டின் பொதுத் தேர்தலுக்கான நேரம் வந்து விட்டது. பிரதம மந்திரியின் குழுவை வரச்சொல்லி தகவல் அனுப்பினேன்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

சேவை அமைப்புகள்


சமீபத்தில் ஒரு சேவை அமைப்பின் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் என் நண்பர் ஒருவருக்கும் விருது கொடுத்து மரியாதை செய்வதாக இருந்ததால் என் நண்பர் என்னையும் நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார். நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு.

ஐந்தேமுக்காலுக்கே போய்விட்டேன். நிகழ்ச்சி சரியாக 6.25க்கு ஆரம்பித்தார்கள். அந்த சேவை அமைப்பின் பெயர் "தாய்மடி". அதாவது தாய்மடியில் உங்களுக்கு எந்த ஆதரவு கிடைக்குமோ அந்த ஆதரவு இந்த அமைப்பின் மூலம் கிடைக்கும் என்று அமைப்பின் பொறுப்பாளினி, தன் அறிமுக உரையில் சொன்னார்கள். இந்த சேவை அமைப்பு பிரபல ஜவுளி நிறுவனமான பி.எஸ.ஆர் ஸ்தாபனத்தின் ஆதரவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பலரிடம் பல திறமைகள் இருக்கலாம், ஆனால் வெளி உலகிற்கு அந்த திறமை தெரியாமல் இருக்கலாம், அப்படிப்பட்டவர்களை இந்த அமைப்பின் மூலம் வெளி உலகிற்குத் தெரிய வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம். நோக்கம் உன்னதமான நோக்கம். ஆனால் செயல்படுத்த அதிக பொருளும், நேரமும், உழைப்பும் தேவைப்படும்.


அன்று நடந்த நிகழ்ச்சி ஒரு அவியல் சுவையுடையதாய் இருந்தது. பலதரப்பட்ட திறமையாளர்களை மேடையேற்றி அவர்களை பலவாறாக கௌரவித்தார்கள். என் நண்பருக்கு "யோகா வல்லுநர்" என்ற பட்டமும், பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியும், ஒரு பொன்னாடையும் கொடுத்தார்கள். அவர் பேசுவதற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார், ஆனால் ஏதோ காரணத்தினால் அவரைப் பேச அழைக்கவில்லை.

அந்த நிகழ்ச்சியில் கடைசியாக பல மழலைகளைக் கொண்டு ஒரு நடன நிகழ்ச்சியும் வைத்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சி மூலமாக நான் கற்றுக்கொண்ட பாடம் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்பதுதான். அங்கு எடுத்த சில படங்களை இணைத்திருக்கிறேன்.


வந்திருந்தவர்கள்.


வியாழன், 18 ஏப்ரல், 2013

நான் சைக்கிள் ஓட்டின கதை


சைக்கிள் என்றால் முழு சைக்கிள் இல்லை. அந்தக் காலத்தில் முழு சைக்கிள் என்பது என்னைப் போன்ற சின்னப் பசங்களுக்கு எட்டாக்கனி. என் சித்தப்பா ஒரு சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருந்தார். அங்கு பழைய சைக்கிள் டயர் கிடைக்கும். அதுதான் அந்தக் காலத்தில் என்னைப் போன்ற சின்னப் பசங்களுக்கு சைக்கிள்.

அந்த பழைய டயரை ஒரு குச்சியால் லாகவகமாக அடித்தால் அது உருண்டு ஓடும். அதன் கூடவே நாமும் ஓடினால் சைக்கிள் ஓட்டுவதாக எண்ணம். அப்படி கற்பனை செய்து கொள்ள வேண்டும். நம்மால் ஓடமுடிந்த அளவு வேகத்தில் அந்த டயரை ஓட்டுவது நாளாவட்டத்தில் பழக்கமாகி விடும்.

சிலர் இந்த டயரை சைக்கிள் ரிம்முடன் சேர்து ஓட்டுவார்கள். அது லக்சரி எடிஷன். எல்லோருக்கும் கிடைக்காது. தவிர அதை ஓட்டுவது கொஞ்சம் சிக்கலானது.


நொங்கு சாப்பிட்ட பிறகு மிச்சமாயிருக்கும் பனம்பழத்துண்டுகள் இரண்டை எடுத்து அவைகளை ஒரு முக்கால் அடி குச்சியால் இணைத்து, ஒரு நீண்ட குச்சி, அதன் நுனியில் ஒரு கொக்கி மாதிரி அமைப்பு, இவைகளை வைத்தும் இந்த மாதிரி ஓட்ட முடியும். சிலர் ஒரு இரும்பு வளையத்தை இந்த மாதிரி ஒரு குச்சி வைத்து ஓட்டுவார்கள். ஆனால் இரும்பு வளையம் எல்லோருக்கும் கிடைக்காது. பனம்பழம் எப்போதும் கிடைக்காது. சைக்கிள் டயர்தான் எப்போதும் சுலபமாக கிடைக்கும். ஆகவே அதுதான் பாப்புலர்.

பள்ளிக்கூடத்திற்கு இந்தச் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போக முடியாது. ஏனெனில் பார்க்கிங் பிராப்ளம். பள்ளியில் இந்த சைக்கிளை பார்க் பண்ண முடியாது. யாராவது தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக இந்த சைக்கிளில் ஒரு ரவுண்டு போய்விட்டு வந்த பிறகுதான் மற்ற வேலைகள்.

வீட்டுக்கு ஏதாவது சில்லறை சாமான்கள் வாங்குவதற்கு அந்தக் காலத்தில் சின்னப் பசங்களைத்தான் அனுப்புவார்கள். நாங்களும் சைக்கிள் விட ஒரு சான்ஸ் கிடைத்தது என்று ஆர்வத்துடன் இந்த சைக்கிளை ஓட்டிக்கோண்டு போய் அந்த சாமானை வாங்கி வருவோம். ஒரு கையில் பையை பிடித்துக்கொண்டு அடுத்த கையால் இந்த டயரை ஓட்டிக்கொண்டு வருவது ஒரு நுண்கலை.

சிலர் இந்த சைக்கிளை ஓட்டும்போது வித விதமான சவுண்டு கொடுத்துக் கொண்டு ஓட்டுவார்கள். சில சமயம் இந்த பழைய சைக்கிள் டயர், காராகவும், சில சமயம் ஏரோப்ளேன் ஆகவும் கூட மாறும். அதற்குத் தகுந்த மாதிரி வேகமும் சவுண்டும் மாறும். அவ்வப்போது பாதசாரிகளுக்கு எச்சரிக்கையாக ஹாரனும் அடிக்கவேண்டும். ஏரோப்பிளேனில் போகும்போது இந்த ஹாரன் அவசியமில்லை.

இந்த சைக்கிள் ஓட்டும்போது அனுபவித்த ஆனந்தத்தை, பிற்காலத்தில் நிஜ சைக்கிள் ஓட்டினபோதோ அல்லது ஸ்கூட்டர் ஓட்டினபோதோ அல்லது கார் ஓட்டினபோதோ கூட அனுபவித்ததில்லை. இளம் வயது அனுபவங்களே அலாதியானவை.

இப்போது சிறுவர்கள் இந்த மாதிரி சைக்கிள் ஓட்டி நான் பார்த்ததில்லை. வாழ்க்கையில் எத்தனை ஆனந்தங்களை இன்றைய நம் சிறுவர்கள் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்க மனது வேதனைப்படுகின்றது.