திங்கள், 2 ஏப்ரல், 2012

ஆசையைக் குறைத்தல்

(வயது வந்தவர்களுக்கு மட்டும். அதாவது 70 வயது.)



யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் - குறள்

என்னதான் தேவைக்கு மிஞ்சிய பணமும் வசதியும் இருந்தாலும் மன அமைதி இல்லையேல் என்ன பயன்? மன அமைதிக்குத் திறவுகோல் ஆசையைக் குறைத்தல் மட்டுமே.


ஆசையைக் குறைத்தல் என்றால் ஆசை அறவே இல்லாமல் இருத்தல் என்று பொருளல்ல. தேவையான விஷயங்களில் தேவையான அளவு ஆசை இருக்கவேண்டும். இல்லையென்றால் மனிதன் வாழ்வதற்கு அர்த்தம் இல்லை.நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் எதிலும் அதீத ஆசை கூடாது என்பதுதான்.


எனக்கு ஆசையே இல்லை என்று சொல்பவர்களும் ஏதாவது சில விஷயங்களின் பேரில் ஆசை வைத்திருப்பார்கள். மற்றவர்கள் தங்களைப் பாராட்ட வேண்டுமென்பதற்காக அப்படிச் சொல்பவர்களும் உண்டு.


நம் வாழ்க்கை இன்பமாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படாதவர்கள் இருக்கமுடியாது. இன்பமாக வாழ்வதற்கு சுலபமான வழி துன்பத்தை விலக்குவதே. அப்படி துன்பத்தை விலக்குவதில் இந்த ஆசையைக் கட்டுப்படுத்தல் மிக அவசியமாகிறது.


மனிதனாக வாழ்பவனுக்கு பல கடமைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவது இரண்டு வழிகளில் செய்யலாம். ஒன்று அந்தக் கடமைகளை பலன்களை எதிர்பார்த்து செய்வது. இன்னொன்று பலனை ஆண்டவன் மேல் போட்டுவிட்டு கடமைகளை மட்டும் செய்வது. இரண்டாவது வழியில் ஆசை இல்லை. பலன்கள் ஆண்டவன் கொடுத்த பிரசாதம். இப்படி செய்யும்போது மன உளைச்சல் இல்லாமல் கடமையைச் செய்யலாம். இதைத்தான் "நிஷ்காம்ய யோகம்" என்று கீதையில் கண்ணன் சொல்லுகிறான்.


இப்படி வாழும்போது வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் ஒருவனுடைய மன நிலையைப் பாதிக்காது. தாமரை இலைத் தண்ணீரை பல ஆன்மீகவாதிகள் உதாரணம் சொல்லியிருப்பார்கள். இந்த தாமரை இலைத் தண்ணீரை கூர்ந்து கவனித்தால் ஒன்று புலப்படும். தாமரை இலை தண்ணீருக்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அதனுடன் ஒட்டாமல் இருக்கிறது.


வாழ்க்கையில் நாம் எல்லாக் காரியங்களையும் செய்துதான் ஆகவேண்டும். ஆனால் அந்தக் காரியங்களின் மேலுள்ள பற்றைக் குறைத்துக் கொண்டால் நம் மனநிலை ஒரே சீராக இருக்கும்.




9 கருத்துகள்:

  1. எதிலும் அதீத ஆசை கூடாது

    வாழ்க்கையில் நாம் எல்லாக் காரியங்களையும் செய்துதான் ஆகவேண்டும். ஆனால் அந்தக் காரியங்களின் மேலுள்ள பற்றைக் குறைத்துக் கொண்டால் நம் மனநிலை ஒரே சீராக இருக்கும்.

    எந்த வயதிற்கும் பொருந்தும்...

    பதிலளிநீக்கு
  2. தலைப்பை மாத்துங்கள் தலைவரே! ஆசையைக் குறைத்தல் எல்லா வயதினருக்கும் உகந்தது. ஆசையே சகல துக்கங்களுக்கும் காரணம், அப்படின்னு ஒருத்தர் சொன்னார். நீங்க அதை எங்களுக்கு புரியரமாதிரி சொல்கிறீர்கள். நன்றி.

    இதிலிருந்து என்ன தெரிகிறது? உங்க வீட்டிலேயும் ஒரு போதி மரம் இருக்குன்னு. ஆமாம்! அரசமரத்திற்க்கு மறு பெயர் தான் போதி மரம் என்று சொல்லுகிறார்கள். உண்மையா? வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியராக உங்கள் கருத்து என்ன?
    -----------------------------

    தயவு செய்து மன்னிதுக் கொள்ளுங்கள்; என்னுடைய கை நம நம என்று இருக்கிரத்கு. கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி எனக்கு கொழுப்பு; அதனால் நான் இதற்ககு பதில் இப்படி எழுதியே தீர வேண்டும்...

    ///இப்படி வாழும்போது வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் ஒருவனுடைய மன நிலையைப் பாதிக்காது. தாமரை இலைத் தண்ணீரை பல ஆன்மீகவாதிகள் உதாரணம் சொல்லியிருப்பார்கள். இந்த தாமரை இலைத் தண்ணீரை கூர்ந்து கவனித்தால் ஒன்று புலப்படும். தாமரை இலை தண்ணீருக்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அதனுடன் ஒட்டாமல் இருக்கிறது.///

    இதற்கு "எருமை மாட்டின் மீது மழை பெய்தா மாதிரி," என்று சுருக்கமாக சொல்லியிருக்கலாமே?

    எதற்கு இந்த தாமரை இலை- தண்ணீர் -ஆன்மீகவாதிகள் இதெல்லாம்!!!!

    பதிலளிநீக்கு
  3. அருமை!

    ஆசையைக் குறைக்க, ஆசைப்படத்தான் வேணும்.

    இங்கே நியூஸியில் 80 வயது ஆனால்தான் முதியவர் என்ற கணக்கு!

    ஆனால் 65 வயசு ஆனால் சூப்பர் கோல்ட் கார்டு கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  4. உண்மையான வரிகள் அதென்ன 70 வயது. நாங்கல்லாம் தெரிந்து கொள்ளக்கூடாதா?

    பதிலளிநீக்கு