திங்கள், 6 ஆகஸ்ட், 2012

இயற்கை விவசாயம் ஏன் சாத்தியமில்லை?

என்னுடைய  இந்தியாவில் விவசாயத்தின் எதிர்காலம் என்ற பதிவிற்கு நான் எதிர்பார்க்காத அளவிற்கு பார்வையாளர்களும் பின்னூட்டங்களும் வந்துள்ளன. சில பின்னூட்டங்கள் பதிவுலகைப் பற்றிய என் கருத்தை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றன. இதில் எனக்கு வருத்தமேயில்லை. மாறாக சந்தோஷமே. ஏனென்றால் நாட்டுப் பிரச்சினைகளில் மக்கள் இவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம் தானே.

என்னுடைய மனமாற்றத்திற்கு முக்கிய காரணம் திரு வே.சுப்பிரமணியன் அவர்கள். அவருடைய பின்னூட்டத்தை இங்கு கொடுத்து அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் (சிகப்பு வர்ணம்) தனித் தனியாக பதில் கொடுக்கிறேன்.


//நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்ல. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்பது என் கருத்து.//

அப்படியெனில் நடைமுறைக்கு ஒத்து வருவது எது என்று தாங்கள் தெரியப்படுத்தவில்லையே..

இன்று நடைமுறையில் பெரும்பாலானோர் விவசாயத்தில் செயற்கை உரங்களையும் பூச்சிகொல்லி மருந்துகளையும் பயன்படுத்திதான் மகசூல் எடுக்கிறார்கள். இதனால் மண்ணின் தன்மை மாறுபட்டு நிலம் கெட்டுக்கொண்டு வருகின்றது என்பது உண்மை. அதற்கு மாற்றாகத்தான் இயற்கை வழி விவசாயம் செய்வோம் என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயற்கை விவசாயத்தில் ரசாயன உரங்களும் ரசாயன பூச்சி மருந்துகளும் உபயோகப் படுத்த மாட்டார்கள். இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துவார்கள்.இந்தியாவிலுள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் இயற்கை உரம் மட்டும் போடுவதென்றால் அவ்வளவு உரம் எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியவில்லை. ஏறக்குறைய "அன்னா ஹஸாரே" ஆரம்பித்த லஞ்ச ஒழிப்புத்திட்டம் மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இந்த இரண்டு திட்டங்களையும் எதிர்ப்பவர்களுக்கு வெகு சுலபமாக "தேசத்துரோகிகள்" அல்லது "இயற்கை விரோதிகள்" என்ற பட்டத்தை சூட்டி விட முடியும். ஏனென்றால் நாம் உணர்ச்சிகளினால் ஆட்டுவிக்கப்படுகிறோமே தவிர, சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பது கிடையாது. லஞ்சத்தை ஒழிப்பது பற்றிய விவாதம் இங்கு வேண்டாம்.

இயற்கை விவசாயத்திற்கு வருவோம். 1970 களில் பசுமைப் புரட்சி வந்தது பலருக்கு நினைவிருக்கலாம். அதன் முக்கிய அம்சமே ரசாயன எருக்கள் உபயோகப்படுத்துவதுதான். அப்படி உபயோகித்துதான் பசுமைப் புரட்சி வெற்றி பெற்றது. இன்றும் இந்திய விவசாயம் இந்த செயற்கை உரங்களை நம்பித்தான் இருக்கிறது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களைப் பாருங்கள்.

உரங்களின் உபயோகம் கடந்த 60 வருடங்களில் எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்று பாருங்கள். அப்படி உரங்களை உபயோகித்ததால்தான் இன்று நாம் எல்லோரும் பட்டினியில்லாமல் இருக்கிறோம். சுதந்திரத்திற்கு முன் நாம் 30 கோடியாக இருந்தபோது பஞ்சங்கள் வந்தது என் போன்றவர்களுக்குத் தெரியும். இன்று 120 கோடியாக ஜனத்தொகை உயர்ந்த போதும் பஞ்சம் என்பது என்னவென்றே இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது.

இந்த நிலை எப்படி சாத்தியமாயிற்று என்று விவசாய வல்லுனர் யாரையாவது நேரில் சந்தித்தால் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.



இந்தப் படத்தை நன்கு பார்த்து புரிந்து கொள்ளுங்கள். பயிரிடும் பரப்பு குறைந்த போதிலும் உணவு உற்பத்தி அதிகமாகியிருக்கிறது. இது எப்படி சாத்தியமாயிற்று? உரங்களின் உபயோகத்தினால்தான்.

இப்படி ரசாயன உர உபயோகத்தினால்தான் மனிதனுக்கு வியாதிகள் வருகின்றன, நிலவளம் கெட்டு விட்டது, இப்படியான கதைகளை இயற்கை விவசாய விஞ்ஞானிகள் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இயற்கை விவசாயத்தை அனுசரித்து இன்றுள்ள இந்திய ஜனத்தொகைக்கு அவர்களால் உணவு கொடுக்க முடியுமென்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

தவிர, சுற்றுச்சூழல் பாதிப்பு இந்த விவசாயத்துறையில் மட்டுமா இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர், எது இன்று மாசில்லாமல் கிடைக்கிறது? அதைப் பற்றி நாம் கவலைப்பட்டு ஆகப்போவதென்ன? உலகத்தை 100 வருடங்களுக்கு முன்னால் கொண்டு போக யாரால் முடியும்?

//இதைப் பற்றி பலர் விவாதத்திற்கு தயாராக இருப்பார்கள். பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை. நிஜ உலகில் அத்தகைய விவாத மேடைகள் அமையுமானால் அவசியம் பங்கேற்பேன்.//

பதிவுலகை தாண்டிய உலகம்தான் நிஜம் என்றும், பதிவுலகம் பொய்யென்றும் தாங்கள் கூறுகிறீர்கள். அப்படியெனில் பொய்யான இந்த பதிவுலகில், ஏன் ஆரோக்கியமான விஷயத்தை பதிவிட்டு வீணடித்தீர்கள்? பதிவுலகம் பொய்யான உலகமாக தெரியவில்லையே அய்யா. அப்படி பொய்யானதாக இல்லாததால்தான் இந்த பதிவையே நீங்கள் இட்டுள்ளீர்கள்.

தங்கள் கூற்றுப்படி, பதிவுலகில் விவாதம் பயனில்லையென்றால்.. அதே பதிவுலகில் இட்ட இந்த பதிவும் பயனில்லாத ஒன்றாகத்தானே இருக்கும்.


பதிவுலகத்தில் நான் வலம் வருவது என்னுடைய சுயநலனுக்காக மட்டுமே. என்னுடைய மூளை துருப்பிடிக்காமல் இருப்பதற்காக இந்தக் கம்பயூட்டரையும் பதிவுலகத்தையும் பயன்படுத்துகிறேன்.மற்றபடி இதில் எனக்கு வேறு ஒரு உபயோகமும் எதிர்பார்ப்பும் இல்லை.

பொய்யான பதிவுலகத்தில் ஏன் ஆரோக்யமான விஷயத்தைப் பதிவிட்டு வீணடித்தீர்கள் என்று கேட்கிறீர்களே, அது என் தனிப்பட்ட விருப்பம். உங்கள் அப்பன் வீட்டு சொத்தை ஒன்றும் நான் வீணடிக்கவில்லையே. இந்தப் பதிவுகளைப் படிப்பதும் படிக்காததும் அவரவர்கள் விருப்பமே.

பதிவுலகில் விவாதங்களினால் பயன் இல்லை என்று நான் சொன்னது இயற்கை விவசாயம் பற்றி மட்டும்தான். மொத்தப்  பதிவுகளினால் பயனில்லை என்று ஏன் பொருள் கொள்கிறீர்கள்?

ஏதாவது எனக்கு மனதிற்குப் பிடித்த விஷயங்களை என்னுடைய ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேனே தவிர, என்னுடைய பதிவுகளைப் படித்து இந்த உலகில் புரட்சி வெடிக்கும் என்கிற எண்ணம் எல்லாம் கிடையாது.  ஏதாவது பதிவர் எதைப் பற்றியாவது எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டால், எனக்கு மனது இருந்தால் அதைப்பற்றி எழுதுவேன். அவ்வளவுதான்.  ஏன் அதைப் பற்றி எழுதுகிறீர்கள், ஏன் இதைப்பற்றி எழுதவில்லை என்று யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். பொது அரங்கில் கேள்வி கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் " இதையெல்லாம் எழுதி நீ என்ன சாதித்தாய் (கிழித்தாய்)?" என்று வரும் கேள்விகள் அநாகரிகமானவை. அப்படிப்பட்ட கேள்விகளை நிராகரிக்கும் உரிமை எனக்குண்டு. அல்லது அதே பாணியில் பதிலளிக்கும் உரிமையும் எனக்குண்டு.

நாகரிகமான, நக்கல் கிண்டல் இல்லாமல் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன். அதை கண்டிப்பாய் நிறைவேற்றுவேன். நகைச்சுவையை அவை ஆபாசமாக இல்லாதவரை நான் வரவேற்கிறேன். "எதை நீங்கள் ஆபாசம் என்று கருதுகிறீர்கள்" என்று நீங்கள் கேட்கலாம். அது என்னுடைய அபிப்பிராயத்திற்கு உட்பட்டது.

பதிவுலகம் முகமூடிகளால் நிரம்பியிருக்கிறது. அப்படிப்பட்ட மாயாஜால உலகில் எந்த விவாதமும் பயனளிக்காது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். அந்தக் கருத்துகளுக்கு யார் பொறுப்பேற்று நடைமுறைப் படுத்தப் போகிறார்கள்? அதனால்தான் பதிவுலகில் செய்யப்படும் விவாதங்கள் ஆண்டிகள் கூடி மடம் கட்டின கதையாகத்தான் முடியும்

பதிவுலகத்தில் வரும் பதிவுகளினால் நிஜ உலகில் ஏற்பட்டிருக்கும் ஏதாவது மாற்றங்களைச் சொல்லுங்கள். நான் என் கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். 

என்னைப்பொறுத்தவரை, பதிவுலகில் இட்டுள்ள இந்த பதிவும் பயனுள்ள ஒன்றாகத்தான் பார்க்கிறேன். மேலும் அதை ஒட்டிய பதிவுலக விவாதங்களும் பயனுள்ள ஒன்றாகத்தான் இருக்கும்.


ஏதோ ஒரு சிலர் ஒரு பதிவைப் படிப்பதற்கும் உருப்படியான சமுதாய மாற்றம் ஏற்படுவதற்கும் மிகுந்த வேறுபாடு இருக்கிறது, நண்பரே. அப்படி ஏற்படும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமே.

நன்றி அய்யா!

சில சுட்டிகள் கொடுத்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் அவைகளைப் பார்க்கலாம்.


FAO Report on Agricultural Production


PRODUCTION

The domestic production of N and P2O5 was 29 000 and 10 000 tonnes, respectively, in 1951/52. By 1973/74, this had increased to 1.05 million tonnes N and 0.325 million tonnes P2O5. As a result of the oil crisis in the mid-1970s and the consequent sharp increase in the international prices of fertilizers, the Government of India encouraged investment in domestic fertilizer production plants in order to reduce dependence on imports. It introduced a “retention price” subsidy in 1975/76. The scheme led to a sharp increase in domestic capacity and production between the mid-1970s and the early 1990s. The total production of N and P2O5 rose from 1.51 million and 0.32 million tonnes respectively in 1975/76 to 7.30 million and 2.56 million tonnes in 1991/92. In 1992/93, phosphatic and potassic fertilizers were decontrolled. As a consequence, the rate of growth in the demand for these products slowed. The total production of N reached 10.6 million tonnes and that of P2O5 reached 3.6 million tonnes in 2003/04.



இந்த லிங்க்கில் 2020 வரைக்கும் இந்தியாவின் உரத்தேவை என்ன என்று Indian Institute of Management, Allahabad ஒரு 32 பக்க அறிக்கை தயாரித்திருக்கிறார்கள். 



இந்த லிங்கில் இந்திய நாட்டின் உர பயன்பாட்டு புள்ளி விபரங்கள் உள்ளன.


முடிவுரை:

இத்தகைய ஆரோக்கியமான விவாதங்கள் நம் கருத்துகளைத் தெளிவு படுத்திக்கொள்ள உதவும். இவைகளை நான் வரவேற்கிறேன்.


சிலபல எரிச்சலூட்டும் பின்னூட்டங்களும் வருகின்றன. என்னால் முடிந்தவரையில் அவைகளுக்குப் பதில் அளிக்கிறேன். ஆனால் சில பின்னூட்டங்கள் தனி மனித தாக்குதல்களாக இருக்கின்றன.  

ஒரு முகமூடிப் பதிவர் போட்ட இந்தக் கமென்ட்டைப் பாருங்கள்.

//இப்படி ஒரு பதிவு எழுதுவீங்கன்னு நினைக்கவில்லை, இணையத்தில் விவசாயம் பற்றிப்பேசுவதால் பயனில்லை என்கிறீர்கள் ,அப்போ மற்றது பேசினால் மட்டும் பயன் கூறையை பிச்சிக்கிட்டு கொட்டுமா?



விவசாயத்துக்கு உதவாத விவசாய பல்கலைகளும், விவசாய துறையும் எதுக்கு , தெண்ட சம்பளம் வாங்கவா, அவற்றையும் மூடி விடலாம். ஆண்டுக்கு பல கோடி மிச்சம் ஆகும்.//

எவ்வளவு நாகரிகமான கமென்ட் பார்த்தீர்களா? யார் மேலயோ உள்ள வயித்தெரிச்சலை என் மேல் கொட்டினால் நான் என்ன செய்ய முடியும்?

அவர் போட்ட இன்னொரு கமென்ட்டையும் பாருங்கள்.

நீங்கள் நிஜ உலகில் மேடையில் தான் பேசுவேன் என்று சொல்கிறீர்கள் ரைட்டு,பான்கி மூன் கிட்டே சொல்லி UNOமூலம் FAO வில் ஒரு மேடை தயார் செய்துவிடலாம்.

இந்த நக்கலை அவர் எதற்காக என்னிடம் 


காட்டுகிறார் என்று தெரியவில்லை. அப்படி FAO 


வில் மேடை தயார் செய்யக்கூடிய சாமர்த்தியசாலி, 


எதற்கு ஒரு முகமூடி போட்டுக்கொண்டு 


பதிவுலகில் வலம் வருகிறார் என்று எனக்குத் 


தெரியவில்லை.




இப்படிப்பட்ட கமென்ட்டுகளுக்கு அவர்கள் 


பாணியிலேயே பதில் கொடுப்பது தவறல்ல என்று 


நினைக்கிறேன்.


21 கருத்துகள்:

  1. என்ன பதிவு ரொம்ப சூடாக இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு, என்னை சூடு ஏற்றினால் பதிவும் சூடாக வெளி வருகிறது, அவ்வளவுதான். கொஞ்சம் சூடு ஆறின பிறகு படியுங்கள், சரியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. பசுமை புரட்சி வெற்றி பெற்றது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும். வெற்றி பெற்றதாக எல்லோரும் இங்கு நம்ப வைக்கப்படுகிறார்கள். அதுதான் இங்கு பிர்ச்சனையே

    http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13929:2011-04-02-05-13-51&catid=1290:2010&Itemid=549
    http://www.amsenthil.com/2011/09/blog-post_1689.html
    http://www.keetru.com/literature/essays/muthukrishnan_6.php

    இன்னும் பல அதிர்ச்சியான கட்டுரைகள் கொட்டிக் கிடக்கின்றன.

    இப்படி இதைத்(ரசாயன உரம்) தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உருவாக்கியது அரசும் உர நிறுவங்களும்தான். அதாவது அணு உலை மின்சாரம்தான் ஒரே தீர்வு என்பது போல. அவர்கள்தான் தற்போது பிடி கத்தரிக்காயையும் நம்மிடம் திணிக்கிறார்கள்.
    பஞ்சம் இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் விவசாயம் செய்பவர்களே கடன் வாங்கி அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வது நடக்கிறது. விதர்பா விவசாயிகள் பற்றி கேள்விப்பட்டதேயில்லையா ? அழியும் நிலையிலிருக்கும் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கப் போராடுகிறவர்கள் இருக்கிறார்கள். இயற்கை விவசாயம் எடுபடாது என்று சொல்ல முடிகிறது. இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும் உர நிறுவனங்களும், விதை நிறுவங்களும் நன்றாகத்தானே இருக்கின்றன, வெள்ளையன் வருவதற்கு முன்பு இந்தியாவில் 2000 வகையான அரிசிகள் இருந்ததாம். இன்று எத்தனை இருக்கின்றன. இதை அரசியலுடன் சேர்த்துத்தான் பார்க்க வேண்டு, இப்படி செயறகை உரம் விவசாயத்தில் சேர்ந்தது இயல்பாக நடக்கவில்லை, அது திணிக்கப்பட்டது. எல்லோரும் இளநீ குடிப்பதை விட்டு கோக்கிற்கும், பெப்சிக்கும் மாறியது எப்படி நடந்ததோ அது மாதிரித்தான். அப்படி இரசாயன உரங்களால் விளைந்த உணவுப்பொருள்களின் தரம் எப்படியிருக்கிறது. செயற்கை உரங்களால், சூழல் கெடுகிறது, பல்லுயிர்கள் அழிகின்றன, மண்ணின் இயல்பு மாறுகிறது இப்படி எத்தனையோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் நம் நாட்டின் ஜனத்தொகை கட்டுப்பாடின்றி அதிகரிப்பதுதான். மற்ற நாடுகளில் ஜனப்பெருக்கம் மைனஸில் இருக்கும்போது நாம் மட்டும் ஏன் இப்படி பெருகுகிறோம்?

      நீக்கு
  3. பதிவுலகத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்கு மிகப் பெரிய சல்யூட் ! அனைத்தும் உண்மை... (நான் எழுதிய சில பதிவுகள் என்னையே சில சமயம் கேள்வி கேட்டதுண்டு...) யாரும் யாரையும் மாற்றவும் முடியாது... நாம் எழுதும் பதிவுகள் நமக்கு உதவினாலே போதும்...

    ப்ளாக் - என் வாழ்வில் மிகச் சிறிய பகுதி என்று எப்போதும் நினைப்பதுண்டு... நீங்கள் வழக்கமாக சொல்லுவதைப் போல் கூகிள் ஆண்டவர் ப்ளாக்-யை நிறுத்தி விட்டால்... எதுவுமே நிரந்தரமில்லை...

    தங்கள் கொடுத்துள்ள லிங்க்-களுக்கு சென்று பார்க்கிறேன். நன்றி ஐயா !(T.M. 2)

    பதிலளிநீக்கு
  4. ஐயா, எனக்கு ஒரு சந்தேகம். பசுமை விகடனில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் சிலர் ரசாயன உரங்களை விட இயற்கை முறையில் மகசூல் அதிகமாக வருகிறது என்று சொல்கிறார்களே. இப்போது இருக்கும் இயற்கை விவசாயத்திற்கும் 1970க்கு முன்னால் நடந்த விவசாயத்திற்கும் எதுவும் வித்யாசம் உண்டா? எனக்கு விவசாயத்தை பற்றி ஒன்றுமே தெரியாது. அதனாலேயே இந்த கேள்வி.

    இன்னும் ஒரு வேண்டுகோள். நீங்கள் பல்வேறு தமிழகத்தின் பல்வேறு காலகட்டங்களை பார்த்தவர் (உங்கள் வயதுக்கு முன்னால் நான் ஒரு ஒரு சுண்டெலி :)) முந்தைய நாளில் தமிழகம் எவ்வாறு இருந்தது என்று அறிய ஆவல். உங்களுக்கு நேரம் இருப்பின், நீங்கள் கடந்து வந்த பல காலகட்டங்களில் தமிழகம் எவ்வாறு இருந்தது என்று ஒரு தொடர் எழுத முடியுமா? புத்தகம் படிப்பதிற்க்கும் நேரடியான அனுபவம் கேட்கவும் வித்யாசம் உண்டு அல்லவா? அதனால் தான் ஒரு ஆவல். மேலும் நேரடியாக கேட்டு பெருவர்தற்க்கு பக்கத்தில் வாய்ப்பும் இல்லை. இணையம் ஒரு நேரம் விழுங்கி என்று நான் நன்றாக அறிவேன். ஆகையால் இந்த வேண்டுகோள் உங்களுக்கு நேரமும் இது குறித்த ஆர்வமும் இருப்பின் மட்டும்.

    //பதிவுலகம் முகமூடிகளால் நிரம்பியிருக்கிறது. அப்படிப்பட்ட மாயாஜால உலகில் எந்த விவாதமும் பயனளிக்காது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். அந்தக் கருத்துகளுக்கு யார் பொறுப்பேற்று நடைமுறைப் படுத்தப் போகிறார்கள்? அதனால்தான் பதிவுலகில் செய்யப்படும் விவாதங்கள் ஆண்டிகள் கூடி மடம் கட்டின கதையாகத்தான் முடியும்
    மிகவும் சரி. நீயே ஒரு அனானி என்று உங்களுக்கு தோன்றலாம். தமிழ் மணத்தில் சில வருடங்கள் வாசகனாக மட்டும் உள்ளேன். நம் பெயரையும் புகை படத்தையும் வைத்து கொண்டு சிலர் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். நாம் வேலை பார்க்கும் கம்பெனியில் நம்மை பற்றி புறம் சொல்லவும் வாய்ப்பு உண்டு. அதனாலேயே தயக்கம். வேலை ஓய்வு பெற்ற பிறகே எனக்கு தயக்கம் விலகும் என்று நினைக்கிறேன் :)

    //பதிவுலகத்தில் வரும் பதிவுகளினால் நிஜ உலகில் ஏற்பட்டிருக்கும் ஏதாவது மாற்றங்களைச் சொல்லுங்கள். நான் என் கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.
    நேரடியாக நடத்தும் கூடங்குளம் போராட்டமும், முல்லை பெரியாறு போராட்டமுமே தமிழகத்தை அதில் உள்ள மொத்த மக்களை சேர்ந்து போராட வைக்க முடியவில்லை. அந்த அந்த பகுதி மக்கள் மட்டுமே போராட்டம் நடத்துகின்றார்கள். இதில் இணைய பதிவுகளினால் எல்லாம் ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியவே முடியாது. நீங்கள் சொல்வது சரியே.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் கோபப்பட்டது சரிதான். ஆனாலும் “Forgive them, O my Father,
    They know not what they do.” என்ற புகழ் பெற்ற சொற்களைத்தான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. //உங்கள் கருத்துகள் முக்கியமானவை. ஒரு பதிவின் ஆரோக்யமான விவாதத்திற்கு வழி வகுக்கும் பாணியில் இருக்கின்றன. இதற்கான பதில்களை ஒரு புது பதிவில் போடுகிறேன். விவாதத்தை ( விவாதம் என்றால் சண்டை என்று பலர் கருதுகிறார்கள் - நாம் தொடரப்போவது அது அல்ல) தொடருவோம். புதிய கருத்துக்கள் உருவானால் நாட்டுக்கு நல்லதுதானே.//

    என்று எனது கருத்துரைக்கு பதில் சொல்லிவிட்டு..

    //உங்கள் அப்பன் வீட்டு சொத்தை ஒன்றும் நான் வீணடிக்கவில்லையே.// என்று அநாகரிகமான வார்த்தைகளில் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

    பதிவுலகில் இடப்படும் கருத்துரைகள், பொதுவாக.. நாம் இட்டுள்ள பதிவு சார்ந்த, நிறை குறைகளை சொல்லி, அதன்மூலம் நம்மையும் நம் பதிவுகளையும் செம்மைப்படுத்திக்கொள்ள பயன்படும் ஒன்றாகத்தான் பதிவுலகில் இடப்படும் கருத்துரைகளை நான் பார்க்கிறேன்.
    அதற்காக பதிவுலக விவாதங்களையும் கருத்துரைகளையும் வரவேற்க வேண்டுமென்பது எனது கருத்து.

    கருத்துரையாளர்களும் "ஆகா" "ஓகோ" என்று கருத்துரையிடாமல், நிறைகளை பாராட்டவும், அதே நேரத்தில் தவறாமல் குறைகளை சுட்டிக்காட்டுவதும்தான் ஆரோக்கியமான படைப்புகளுக்கும், திறமையான படைப்பாளிகளுக்கும் வழிவகுக்கும்.

    அந்த வகையில்தான் என்னுடைய கருத்துரைகளும் இருக்கும். அப்படிப்பட்ட எண்ணத்தில்தான் நானும் தங்களது பதிவுக்கு கருத்துரை இட்டேன்.

    எனது கருத்துரைகள் தங்களை செழுமைப்படுத்துவதற்கு பதிலாக, புண்படுத்தியிருந்தால்.. தயவு செய்து மன்னிக்க வேண்டுகிறேன்.

    மேலும் பகிர்ந்து கொள்வோம். நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்பிரமணியன் அவர்களே, உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

      உங்கள் பின்னூட்டம் மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது. இம்மாதிரியான ஒரு நல்ல விவாதம் இதுவரையில் பதிவுலகத்தில் நடக்கவில்லை என்று உறுதியாகக் கூறலாம். தொடர்ந்து உங்கள் கருத்துகளைக் கூறி வாருங்கள்.

      நகுதற் பொருட்டன்று நட்பு மிகுதிக்கண்
      மேற்சென்று இடித்தற்பொருட்டு

      என்று அன்றே வள்ளுவர் சொல்லிப்போயிருக்கிறார் அல்லவா.

      நீக்கு
  7. வணக்கம் ஐயா. நான் விவசாயத்தில் பட்டம் வாங்கியவன் அல்ல. ஆனால், இன்றைய விவசாயிகள், விவசாயத்தின் நிலையை சிறிதளவேனும் அறிந்தவன்.

    உங்களுடைய இயற்க்கை விவசாயம் பற்றிய கருத்து மற்றும், அதற்கான காரணங்களை ஆமோதிக்க முடியவில்லை.

    \\இந்தியாவிலுள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் இயற்கை உரம் மட்டும் போடுவதென்றால் அவ்வளவு உரம் எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியவில்லை.\\

    இயற்க்கை உரங்கள் கால்நடை மூலமாகவும், இலை தலைகளில் இருந்தும், மண்புழுக்கள் வளர்ப்பு மூலமாகவும் உற்பத்தி செய்ய இயலும் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அதேபோல, உலகிலேயே, இந்தியாவில்தான் கால்நடைகள் அதிகம் இருப்பது, ஒவ்வொரு சிறு, குறு விவசாயி முதல், பெரிய பண்ணையார் வரை, ஆடு, மாடு வைத்திருப்பது சின்ன குழந்தைக்குகூட தெரியும்.

    \\உரங்களின் உபயோகம் கடந்த 60 வருடங்களில் எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்று பாருங்கள். அப்படி உரங்களை உபயோகித்ததால்தான் இன்று நாம் எல்லோரும் பட்டினியில்லாமல் இருக்கிறோம். \\

    ரசாயன உரங்கள் இந்தியாவில் திணிக்கபட்டதர்க்கு எவ்வளவோ காரணங்கள் உண்டு. மிக முக்கியமான காரணம், இரண்டாம் உலகப்போரில், மக்களை கொல்ல தயாரிக்கப்பட்ட மருந்துகளை, அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபம் சம்பாதித்து கொடுக்கும் நோக்கில், பூச்சிகொல்லியகவும், ரசாயன உரமாகவும் மாற்றப்பட்டது என்பது, இப்போது இயற்கை விவசாயம் பற்றி கொஞ்சம் அறிந்தவருக்கும் தெரியும்.

    \\இயற்கை விவசாயத்தை அனுசரித்து இன்றுள்ள இந்திய ஜனத்தொகைக்கு அவர்களால் உணவு கொடுக்க முடியுமென்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்?\\

    இது சாத்தியமே. நீங்கள், பசுமை விகடன் படிப்பது இல்லையா? படித்து பாருங்கள். எத்தனையோ விவசாயிகள், இப்போது இயற்க்கை விவசாய முறையை பின்பற்றி, நிறைய மகசூல் எடுத்துகொண்டு இருக்கிறார்கள்.

    \\இப்படி ரசாயன உர உபயோகத்தினால்தான் மனிதனுக்கு வியாதிகள் வருகின்றன, நிலவளம் கெட்டு விட்டது, இப்படியான கதைகளை இயற்கை விவசாய விஞ்ஞானிகள் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.\\

    இது கதை இல்லை ஐயா. "எண்டோசல்பான்" உண்மைகளை நீங்கள் கேட்டது இல்லையா?

    இயற்க்கை விவசாயம் முற்றிலும் சாத்தியமே என்று, நம்மாழ்வார் ஐயா நிரூபித்துக்கொண்டு உள்ளார். எத்தனையோ விவசாயிகள், இதிலே நம்பிக்கையுடன் இறங்கி வெற்றி முகத்தில் உள்ளனர்.

    உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமானால், ஒரு முறை நம்மாழ்வார் ஐயாவின் வானகம் சென்று வாருங்கள். உங்கள் முடிவை நிச்சயம் மாற்றிகொள்வீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னக் குழந்தைக்குக் கூட தெரிந்தது ஒரு 80 வயது விவசாய விஞ்ஞானிக்குத் தெரியாமல் போனது இந்நாட்டின் பெரிய துரதிர்ஷடம்.

      நீக்கு
    2. //இது கதை இல்லை ஐயா. "எண்டோசல்பான்" உண்மைகளை நீங்கள் கேட்டது இல்லையா?//

      இங்கு "கதை" என்று சொல்லியது ஒரு வார்த்தைப் பிரயோகத் தவறு.இலங்கைப் பதிவுகளைப் படித்ததின் தாக்கம் என்று நினைக்கிறேன். "உதாரணங்கள்" என்று சொல்லியிருக்கலாம் அல்லது "உண்மைக் கதைகள்" என்று சொல்லியிருக்கலாம். இறைவனேயானாலும் தவறு தவறுதான் அல்லவா நண்பரே.

      நீக்கு
  8. I read your article, it is nice and useful, Since you are/were a professor in Agri and I belive that you do not write anything without valid data on this matter, about people bad comments, just ignore them and you have a right to write anything for your pleasure.Keep going....

    பதிலளிநீக்கு
  9. இன்னுமொரு தவறான கருத்தை உங்கள் பின்னூட்டத்தில் இட்டிருக்கிறீர்கள்.

    //எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் நம் நாட்டின் ஜனத்தொகை கட்டுப்பாடின்றி அதிகரிப்பதுதான். மற்ற நாடுகளில் ஜனப்பெருக்கம் மைனஸில் இருக்கும்போது நாம் மட்டும் ஏன் இப்படி பெருகுகிறோம்?//

    கடந்த 50 வருட வரலாற்றை புரட்டி பாருங்கள். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில் உட்பட, எல்லா நாடுகளிலும் மக்கள் தொகை வருடா வருடம் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. நான் மேலே சொல்லியுள்ள நாடுகள் தான் மக்கள் தொகையில் டாப்-5 இடத்தில உள்ளன(இந்தியாவையும் சேர்த்து).

    சில நாடுகளின் ஜனப்பெருக்கம் மைனஸில் இருக்கலாம். அவை ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஓரிரண்டு சதவீதம் இருக்குமே ஒழிய, பெரிதான ஒஉர் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, இதற்கு சரியான விளக்கம் கொடுப்பதற்கு நான் கூகுளில் சென்று ஆராய்ச்சி செய்யவேண்டும். அதற்கான தெம்பு என்னிடம் இல்லை. ஆகவே அந்தக் கருத்தை ஒரு கிழவனின் சொந்தக் கருத்து அல்லது பிதற்றல் என்ற பிரிவில் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

      நீக்கு
  10. அக்காலத்திய தேவையும் நிறைவேற்றி, பஞ்சத்தைப் போக்கிய பசுமைப் புரட்சியின் வெற்றி மறுப்பதற்கில்லை. ஆனால், அதன் விளைவுகளும் மறுப்பதற்கில்லைதானே. காலப்போக்கில் மக்கள் இராசயன உரஙக்ளை, அதிக விளைச்சலுக்கு ஆசைப்பட்டோ அல்லது அறியாமையினாலோ அதிகமாகப் பயன்படுத்தி விடுகிறார்கள். ஒரு ப்ரூஃபன் மாத்திரை எடுத்துக் கொள்ளவேண்டிய நோய்க்கு, வலிதாளாமையால் மூன்று ப்ரூஃபன்களை விழுங்குவதுபோல!!

    வீரியமிக்க இரசாயன உரஙக்ள், பூச்சிக் கொல்லி மருந்துகளும், அவை தவறாக்க கையாளப்பட்டதன் விளைவுகளுமே இன்று இயற்கை விவசாயத்தின் மீதான் ஆர்வம் அதிகரித்துள்ளதற்கு ஒரு காரணம்.

    ஒரு இரசாயன உரம் பயன்படுத்தும் பண்ணை விவசாயியிடம் பேசியபோது அவரும் உங்கள் எண்ணங்களையே பிரதிபலித்தார். விளைவுகள் உண்டு, ஆனால் தவிர்க்க முடியாதது என்று.

    இயற்கை விவசாயம் சாத்தியமில்லை என்ற் கூறுபவர்கள் முன்வைக்கும் காரணம், “இயற்கை உரப் பற்றாக்குறை” என்பதே. ஆனால், சில பத்திரிகைகளில், பலர் வெற்றிகரமாகச் செய்து வருவதையும் சொல்கிறார்கள். எனில், இது தீர்க்கக்கூடிய காரணம்தானா?

    இன்னொரு காரணம், இராசாயன உர விவசாயத்தில் கிடைத்த அதிக விளைச்சலை இயற்கை விவசாயத்தில் எதிர்பார்க்க முடியாது என்பது. இருக்கலாம், ஆனால் குறைந்த விளைச்சல் என்றாலும் பாதுகாப்பான உணவு கிடைக்கிறது. மேலும், போகப் போக விளைச்சல் கூடும் என்றும் சொல்கிறார்களே.

    ஆக, சில குறைபாடுகள் இருந்தாலும் இயற்கை விவசாயமே சிறந்தது, பாதுகாப்பானது என்று தோன்றுகிறது. தலைவலிக்கு, பெனடால் உடனடி நிவாரணம் தரும்; நெற்றியில் போடும் மிளகுப் பற்று கொஞ்சம் மெதுவாகத்தான் வேலை செய்யும். ஆனால், பின்விளைவுகள் இராது. அதுபோல என்று சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நன்றாக சொல்லியுள்ளீர்கள் ஹுஸைனம்மா. பிரச்சினையைத் தெளிவாகப் புரிந்துள்ளீர்கள். பாராட்டுகள்.

      ஒரு ப்ரூஃபன் மாத்திரைக்குப் பதிலாக மூன்று மாத்திரைகளை முழுங்கும் உதாரணம் அருமை. உர உபயோகத்திலும் பூச்சி மருந்து உபயோகத்திலும் நடந்தது அதுதான். மக்கள் மனோபாவமே அப்படித்தானே. கரும்பு இனிக்கிறதென்று வேருடன் தின்பதுதானே.

      உரங்களை தேவைக்கு அதிகமான அளவில் பயன்படுத்திய காரணத்தினால் நிலங்கள் பலவகையான சீர்கேடுகள் அடைந்தன. உண்மை. மண்வளத்துறையில் 38 வருடம் நான் பணி புரிந்திருக்கிறேன். என்னுடைய மேற்படிப்புகளும் இந்தத் துறையில்தான். ஆகவே இந்த உண்மையைச் சொல்ல நான் அருகதையானவன்.

      நிலத்திற்குத் தேவையான இயற்கை உரங்களையும் போட்டு அதன் மேல் ரசாயன உரங்களையும் அளவாகப் போட்டுக் கொண்டு வந்திருந்தால் இந்த சீர்கேடு வந்திருக்காது. பொன் முட்டையிடும் வாத்தை பேராசைக்காரன் வயிற்றை அறுத்தது போல் விவசாயிகள் செய்தார்கள். இன்றும் கறவை மாடு வளர்க்கும் பலர் பேராசைப்பட்டு பால் சுரக்கவைக்கும் ஊசிகளை மாட்டுக்குப் போடுவது உங்களுக்குத் தெரியும்.

      இந்த நிலைக்கு மாற்று இயற்கை விவசாயமே. இதில் யாருக்கும், எந்த விவசாய விஞ்ஞானிக்கும் எதிர்க் கருத்தே இல்லை. எனக்கும் இல்லை.

      இயற்கை உரம் பற்றாக்குறை என்பது ஒரு நிஜம். அதை இயற்கை விவசாயத்தை முன்னிலைப் படுத்துபவர்கள் கண்டு கொள்வதில்லை.

      ஒரு பின்னூட்டத்தைப் பாருங்கள்.

      //இயற்க்கை உரங்கள் கால்நடை மூலமாகவும், இலை தலைகளில் இருந்தும், மண்புழுக்கள் வளர்ப்பு மூலமாகவும் உற்பத்தி செய்ய இயலும் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அதேபோல, உலகிலேயே, இந்தியாவில்தான் கால்நடைகள் அதிகம் இருப்பது, ஒவ்வொரு சிறு, குறு விவசாயி முதல், பெரிய பண்ணையார் வரை, ஆடு, மாடு வைத்திருப்பது சின்ன குழந்தைக்குகூட தெரியும்.//

      சின்னக் குழந்தைக்குக் கூட தெரிந்தது ஒரு 80 வயது விவசாய விஞ்ஞானிக்குத் தெரியாமல் போனது இந்நாட்டின் பெரிய துரதிர்ஷடம்.

      ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப கீறல் விழுந்த கிராமபோன் ரிக்கார்டு மாதிரி சொல்லிக்கொண்டு இருப்பதில் என்ன பயன்? நாடு முழுவதும் இயற்கை விவசாயம் செழித்து மக்கள் ஆரோக்கியமாக வாழும் நாளை முழு மனதுடன் வரவேற்கிறேன்.

      நீக்கு
  11. வணக்கம்
    அருமையை சொன்னீர்கள், நாட்டின் தேவையை ...
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    பதிலளிநீக்கு
  12. முட்டாள்தனமான பதிவு
    ஏட்டு சுரைக்காய் கறிக்கு ஆகாது என்பதை நிருபிக்க்கிறீர்கள் ஒரு ஏக்கர் பயிரிட ஒரு மாடு வைத்திருந்தாலே போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்கு நன்றி. அப்படி இயற்கை விவசாயம் பண்ணுகிறவர்கள் விலாசம் கொடுங்கள். நானும் போய் பார்த்து என் முட்டாள்தனத்தைப் போக்கிக் கொள்கிறேன்.

      நீக்கு