செவ்வாய், 24 ஜூலை, 2012

இல்லறம் நடத்துவது எப்படி?



இதென்ன கேள்வி என்று நீங்கள் நினைப்பது தெரிகின்றது. இப்டித்தான் பல விஷயங்களை நாம் அறிந்ததாக நினைத்துக்கொண்டு இருப்போம். ஆனால் அவைகளில் மேலோட்டமாக ஏதோ சில விஷயங்கள்தான் தெரிந்திருப்போம்.

இல்லறம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்றுதான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலுள்ள பல நுணுக்கங்களை ஆராய்ந்தால்தான் இல்லறத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்று மலைப்பாக இருக்கும்.

தன் சந்ததியை தொடரவேண்டும் என்று ஓரணு ஜீவராசிகளிலிருந்து மனிதன் வரை ஆசைப்படுகிறான். இது இயற்கையில் ஏற்பட்ட ஒரு உந்துதல். மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் அனைத்தும் இந்த ஒரு நோக்கத்திற்காகவே உயிர் வாழ்கின்றன. ஆனால் மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று அனைத்து உயிர்களிலும் மேம்பட்டவனாக இருக்கிறான். அவனுக்கு பகுத்தறியும் திறன் இருப்பதால் பல விதங்களில் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளான்.

அப்படி வாழும் மனிதன் மற்ற ஜீவன்களிடமிருந்து வேறுபட்டு பல சமூகக் கோட்பாடுகளை தனக்காகவும் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும் ஏற்படுத்தியுள்ளான். இந்தக் கோட்பாடுகள் ஒரு நாளில் ஏற்பட்டவை அல்ல. பல நூற்றாண்டு காலமாக மனித சமுதாயம் ஏற்படுத்தியுள்ள கோட்பாடுகள். இந்தக் கோட்பாடுகளின்படி வாழ்பவனே மனிதன் எனப்படுகிறான். மற்றவர்கள் மனித உருவில் வாழ்பவர்கள் மட்டுமே.

இல்லறம் இனிமையாக அமைய 10 யோசனைகள் கொடுத்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் அனுசரிக்கலாம்.
  
   1.   பொறுப்பை உணருங்கள். குடும்பம் என்று ஆகிவிட்டால் குடும்பத்தலைவன் என்கிற பொறுப்பு உங்களுடையது. குடும்பத்திலுள்ள அனைவரின் சுக துக்கங்களும் உங்களுடையதே.
   2.   ஒரு நல்ல தொழில் வேண்டும். வாழ்வதற்கு பொருளாதாரம் அவசியம் தேவை. அது இல்லாவிட்டால் உங்களுக்கு குடும்பம் தேவையில்லை.
   3.   சேமிப்பு மிக மிக அவசியம். உங்கள் வருமானத்தில் பாதியில்தான் உங்கள் குடும்ப செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். மீதியை சேமியுங்கள். அதில் ஒரு பாதி எதிர்பாராத செலவுகளுக்கு உதவும். மீதி பாதி நீண்ட கால சேமிப்பாக இருக்கும்.
   4.   செலவினங்களுக்கு ஒரு திட்டம் போடுங்கள். அப்போதுதான் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். சிக்கனம்தான் செழிப்புக்கு வழி.
   5.   ஆடம்பரத்திற்கு ஆசைப்படாதீர்கள். உணவு விடுதிகளில் சாப்பிடுவது வீண் செலவு தவிர சுகாதாரக் கேடும் கூட.
   6.   எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். உங்கள் எதிர்காலத்தைப் பற்றி அவர்களிடம் விவாதியுங்கள்.
   7.   பிரச்சினைகளை வளர விடாதீர்கள். அவ்வப்போது அவைகளுக்குத் தீர்வு கண்டு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள்.
   8.   உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல ஒழுக்கம் ஆகியவைகளைக் கற்றுக்கொடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது.
   9.   ஆணானாலும் பெண்ணானாலும் காலா காலத்தில் அவர்களின் கல்யாணங்களை செய்து வைப்பது பெற்றோர்களின் கடமை. இதை எப்போதும் மறக்கக்கூடாது.
   10. தன் கடைசி காலத்தை சிரமமில்லாமல் கழிக்கப் போதுமான ஆதாரத்தை தேடிக்கொள்ள வேண்டும்.


25 கருத்துகள்:

  1. அனுபவ வார்த்தைகள்! நிச்சயம் பின்பற்ற முயற்சி செய்கிறோம்.முத்தான பதிவு.

    பதிலளிநீக்கு
  2. பத்து யோசனைகளும் மனதில்
    பதித்து வைத்துக் கொள்ள வேண்டிய
    அருமையான முத்துக்கள்
    பயனுள்ள அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் பிரபல பதிவாளர் அல்ல அதாவது சூப்பர் ஸ்டார் பதிவாளர்

    பதிலளிநீக்கு
  4. இல்லறம் இனிமையாக அமைய கொடுத்த 10 யோசனைகளும் அருமை. அதுவும் அந்த 10 ஆவது யோசனையை அவசியம் அனைவரும் கடைப்பிடித்தாக வேண்டும். யோசனைகளுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுப்பை உணருங்கள் -
      பொறுப்பான அனுபவ மொழிகள் பயன் நிறைந்தவை... பாராட்டுக்கள்..

      நீக்கு
  5. பத்து சிறந்த யோசனைகளையும் மனதோடு பதிக்க முயற்சிக்கிறென்..தங்கள் பதிவு மிக்க நன்று..நன்றிகள்

    பதிலளிநீக்கு
  6. தங்களின் முதிர்ச்சியானதொரு அனுபவம், பிறருக்கு நன்முறையில் பயன்பெற வேண்டுமென அக்கறையுடன் பகிரப்பட்டதனை எண்ணும் போது, மனம் நிறைவு கொள்கிறது. தொடரவேண்டும் தங்களின் பணி! பாராட்டுதல்கள் ஐயா!
    http://vallimalaigurunadha.blogspot.com
    http://atchayahealth.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. கோட்பாடுகளின் படி வாழாத மனிதன், வெறும் ஒரு மனித உருவமாக வாழ்கிறான் என்பதை முத்தான பத்து யோசனைகள் மூலம் அருமையா சொல்லி உள்ளீர்கள்.. நன்றி சார் ! (த.ம. 5)

    பதிலளிநீக்கு
  8. பழுத்த அனுபவங்களின் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நல்ல அறிவுரைகள்.... தொடரட்டும் நட்சத்திர வார பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  10. ஐயா ! நட்சத்திர பதிவர் ஆனமைக்கு எனது வாழ்த்துக்கள் !

    உண்மையில் மனித இனம் உடல் சார்ந்த மட்டுமல்ல அறிவு சார்ந்தும் பரிணாமம் அடைந்துள்ளான், அடைந்து வருகின்றான் ...

    மனித வாழ்வுக்கு குடும்ப வாழ்க்கை இன்றியமையாதது. அவற்றை சரிவர நடத்தவும் பொறுப்புக்களை உணரவும் பலர் மறக்கின்றனர் / மறுக்கின்றனர்.

    தாங்கள் கூறிய பத்துக் கட்டளைகள் ... ச்சா மதம் சார்ந்த பதிவுகளை படித்த கிரக்கம் .. பத்து அறிவுரைகளும் அருமையானவை, இன்றியமையாதவை ..

    குறிப்பாக சேமிப்பு குணம், ஆடம்பரம் தவிர்த்தல், கல்வியில் முதலிடுதல் மற்றும் ஓய்வு நிதி சேர்த்தல் .. இவை முக்கியமானவையாகும் !

    உங்களின் உங்களைப் போன்றோரின் அனுபவங்களும் வழிக்காட்டலும் எம்மை போன்ற இளையவர்களுக்கு உதவும் என்றால் அது மிகையாகாது ...

    தொடருங்கள் ....

    பதிலளிநீக்கு
  11. அய்யா 10ம் முத்தானவை வாழ்க வளமுடன்!




    உண்மைவிரும்பி.
    மும்பை.

    பதிலளிநீக்கு
  12. அருமையான கருத்துகள்.

    இந்தப் பொறுப்பெல்லாம் சுமக்கச் சோம்பப்பட்டுத்தான் இப்பல்லாம் லிவிங்-டுகெதர்னு ஆரம்பிச்சிட்டாங்கபோல!!

    பதிலளிநீக்கு
  13. சிறப்பான கருத்துக்கள்! தேவையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  14. அருமை
    பத்தும் முத்துக்கள்
    மௌனம் புன்னகை கொண்டு தென்திசை அமர்ந்த குருவின் அருள்
    எப்போதும் நமக்கு உண்டு ..........
    வெள்ளை அம்மாவின் ஆசிர்வாதத்தில்........
    நான் பத்திற்கு பத்து வாங்க தங்கள் தாழ் பணிகிறேன் மகிழ்ச்சியுடன்

    பதிலளிநீக்கு
  15. பத்து முத்துக்களில் மொத்த விஷயங்களையும் முடித்து விட்டீர்கள். செலவு செய்ய வேண்டிய தேவை வரும்போது முதலிலேயே திட்டமிட்டு முதலில் அதற்கான வருமானப் பெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அப்புறம் அந்த செலவைச் செய்வது நல்லது என்று எனக்குத் தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருமானத்தைப் பெருக்குவது என்பது ஒரு நிரந்தரமான இலக்காக வைத்துக் கொள்ளவேண்டும். எவ்வளவு வருமானம் பெருகினாலும் அந்த வருமானத்தில் நான் சொன்ன உத்திகளை கடைப்பிடித்தால் நல்லது.

      நீக்கு
  16. சிறப்பான நல்ல அறிவுரைகள்

    பதிலளிநீக்கு
  17. பத்தில் கடைசி எல்லோரும் கண்டிப்பா மனசில் வச்சுக்க வேண்டியது.

    பதிலளிநீக்கு
  18. உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல ஒழுக்கம் ஆகியவைகளைக் கற்றுக்கொடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது.//

    இதை கொடுத்து விட்டால் நம் கடமையை சரிவர செய்து விட்டவர்கள் ஆவோம்.
    இல்லறம், நல்லறமாகும்.


    பத்தும் மிக கிக அவசியமான அறிவுரைகள்.

    பதிலளிநீக்கு
  19. || தன் சந்ததியை தொடரவேண்டும் என்று ஓரணு ஜீவராசிகளிலிருந்து மனிதன் வரை ஆசைப்படுகிறான். இது இயற்கையில் ஏற்பட்ட ஒரு உந்துதல். மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் அனைத்தும் இந்த ஒரு நோக்கத்திற்காகவே உயிர் வாழ்கின்றன. ஆனால் மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று அனைத்து உயிர்களிலும் மேம்பட்டவனாக இருக்கிறான். அவனுக்கு பகுத்தறியும் திறன் இருப்பதால் பல விதங்களில் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளான். ||

    இதற்கு முக்கியமான பொருள் உண்டு.

    மனிதன் பரிணாம வளர்ச்சியை அடைந்ததால் அவனுக்குக் கூடுதலாக ஒரு பணி இதில் இருக்கிறது;அதாவது தனது சந்ததியை தன்னை விட மேன்மையானதாகவும்,உயர்ந்ததாகவும்,சிறந்ததாகவும்,சமூகத்திற்குப் பயனுள்ளதாகவும் வளர்த்து விட்டுச் செல்ல வேண்டுய பெரும் பொறுப்பு இருக்கிறது.

    இந்தப் பொறுப்பில் அவன் வெற்றி பெறும் போது,நீங்கள் குறிப்பிட்ட 10 நோக்கங்களும் இயல்பாகவே நிறைவேறி விடும் !

    அதனைத்தான் என்னுடைய பதிவிலும் நான் பின்வரும் வார்த்தைகளால் குறிப்பிட்டிருந்தேன்...

    ஒஷோ ரஜனீஷ் ஒரு புத்தகத்தில் உலகம் இயங்குவதன் நோக்கம் பற்றி விளக்கியிருப்பார்.இந்த உலகத்தின் ஒவ்வொரு உயிரும்,ஒவ்வொரு தாவரமும்,ஒவ்வொரு விலங்கும்,கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள் கூட தன்னைப் போன்ற வழித்தோன்றல்களை விளைவித்துச் செல்லும் இயக்கச் சக்கரத்திலேயே இயங்குகின்றன.
    அந்த இயக்கத்தில் விளையும் விளைவு மேன்மை பொருந்தியதாக இருக்கும் போது நல்ல காய்கறிகளும்,சுவையான கனிகளும்,வலிமை பொருந்திய கால்நடைகளும் சமூகத்திற்கு நன்மை தரும் வகையில் விளைகின்றன.


    மனித இனமும் தன் வாரிசுகள், தான் விட்டுச் செல்லும் உலகிற்கும் சமூகத்திற்கும் நன்மை தரத் தக்க,மேன்மை பொருந்திய, நல்லறிவும் நல்லறமும் மிக்கவர்களாக இருக்கும் வண்ணம் அவர்களை உருவாக்கி விட்டுச் செல்லுவது அவர்கள் தோற்றத்தின் உயர்ந்த,இறுதியான கடமை.அந்தக் கடமையை சிறந்த அளவில் தன் வாழ்க்கையால் விளைவித்துச் செல்பவர்கள் உலகத்தின் நல்லியக்கத்திற்கு இன்றியமையாதவர்கள்.

    பதிலளிநீக்கு
  20. அன்பின் அய்யா - இல்லறம் சிறக்க அறிவுரைகள் - அனைத்துமே எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய அறிவுரைகள் - அனுபவத்தின் அடிப்படையில் எழுந்த சிந்தனைகள் - இளைய சமுதாயம் இல்லறத்தில் தொடர வேண்டிய அறிவுரைகள் - நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு