வெள்ளி, 5 டிசம்பர், 2014

புது வருட புது முட்டாள்


பல சமயங்களில் பலரும் முட்டாள்கள் ஆவதுண்டு. தினப் பத்திரிகை செய்திகளை மேலோட்டமாக படித்து விட்டு தவறான கருத்துகளை மனதில் பதியவைத்துக் கொள்வோம். அதே மாதிரி அடுத்தவருடன் பேசும்போது அவர் சொல்லும் வார்த்தைகளை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளாமல் வேண்டாத முடிவுகளுக்கு வருவோம். கடிதங்களைச் சரியாகப் படிக்காமல் தவறான செயல்களைச் செய்வோம்.

முக்கியமாக தேதிகளை சரியாக மனதில் பதிய வைப்பதில்லை. அதுவும் புது வருடம் பிறந்து பல நாள் ஆன பின்பும் கையெழுத்து போடும்போது பழைய வருடத்தையே குறிப்பிடுவோம். பலரும் இவ்வாறான தவறுகளினால் முட்டாள்கள் ஆவதுண்டு. சிலர் தக்க சமயத்தில் தங்கள் முட்டாள்தனத்திலிருந்து விடுபடுவார்கள். சிலரோ அதே தவறான புரிதலோடு வாழ்வார்கள்.

நானும் சமீபத்தில் இவ்வாறு முட்டாள் ஆனேன். ஆனால் தக்க சமயத்தில் விழித்துக்கொண்டேன்.

நான் இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பணியாற்றி வருவது அநேகருக்குத் தெரிந்திருக்கும். அதில் ஒரு பதிவிற்கு திரு சீனா ஐயா இட்டிருந்த மறு மொழியைப் பாருங்கள்.

அன்பின் திரு கந்த சாமி அய்யா - தாங்கள் இப்பதிவில் எழுதி உள்ள படி - திங்கள் வரவேண்டிய ரெகுலர் பதிவு செவ்வாய் காலையில் வரும்.படி செய்க. இப்படியே மற்ற ஆறு நாட்களுக்குப் போடவேண்டிய ஆறு பதிவுகளையும் செவ்வாய் முதல் நாளுக்கு ஒன்றாக ஞாயிறு வரை போட்டு விடுங்கள். அவ்வளவு தான். செவ்வாய் மட்டும் இரண்டு பதிவுகள் வரும். பர்வாய் இல்லை.
சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா 

இதற்கு நான் போட்ட பதில்:

மிக்க நன்றி, சீனா ஐயா.
அடுத்து இன்னொரு பதிலும் போட்டேன்.

"சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா"

இந்த வரிகள் முதலில் என் மனதில் சரியாகப் பதிவாகவில்லை. இந்த அழைப்பு உண்மையாகவா? இந்த வார வலைச்சரப் பதிவுகள் முடிவடைந்த பிறகும் உங்கள் எண்ணம் இதுவாகவே இருந்தால் உறுதி செய்யவும். நான் என்றும் உங்கள் அன்பிற்குக் கட்டுப்பட்டவன்.

அன்புடன், பழனி.கந்தசாமி.
இந்த பரஸ்பர செய்திகளில் உள்ள முரண்பாடு புரிகிறதா? எனக்கும் முதலில் புரியவில்லை.
இதற்கு தமிழன்பன் இட்ட பதிலில் இருந்துதான் இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது போல என்று மனதிற்குப் பட்டது.

"சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா"

ஒண்ணுமே புரியல்ல உலகத்திலே !!
இன்றுதான் அகஸ்மாத்தாக இந்த பின்னூட்டத்தைப் பார்த்தும்தான் என் மூளையில் ஒரு ஸ்பார்க் அடித்தது. ஆஹா நாம் முட்டாளாகி விட்டோமே என்ற ஞானோதயம் ஏற்பட்டது.
தமிழன்பனுக்கு இவ்வாறு பதில் போட்டேன்.
//தமிழன்பன்Tue Dec 02, 03:39:00 AM
"சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா"

ஒண்ணுமே புரியல்ல உலகத்திலே !!//

தமிழன்பனின் பின்னூட்டத்திற்கு இப்போதுதான் பொருள் புரிந்தது.

தமிழன்பன், என் மூளை நிஜமாகவே துருப்பிடித்துத்தான் போய்விட்டது. இப்படித்தான் செய்திகளை மேலோட்டமாக படித்து விட்டு தவறான முடிவுகள் எடுத்து விடுகிறோம். இதற்கு திரு. சீனா என்ன செய்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்பர்களே, நான் எப்படி முட்டாள் ஆனேன் என்று புரிகிறதா?
ஆனாலும் என் நல்ல காலம் அதில் இருந்து விடுபட்டு விட்டேன்.

12 கருத்துகள்:

  1. இந்தப் பதிவிற்கு வரப்போகும் பின்னூட்டம் என்னவென்ற என் கணிப்பு.

    " இதை என் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தால் தவறை சரி செய்திருக்கலாமே, இப்படி பொது வெளியில் போட்டு உடைத்து விட்டீர்களே"

    என்று வரும்.
    அதற்கு நான் தரும் பதில்.

    "என் ஆதங்கம் என்னவென்றால் நான் இந்த செய்தியின் அடிப்படையில் வலைச்சரப்பதிவில் எங்காவது நான் இன்னொரு முறை வலைச்சர ஆசிரியராகப் போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தால் என் நிலை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். அதை நினைக்கவே என் மனம் நிடுங்குகிறது."

    என்பதாகும்.

    பதிலளிநீக்கு
  2. 05-01-2015ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 11.01.2015 வரை - தேதியும் வருடமும் தவறாகி விட்டதோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறுகள் ஏற்படுவது வாழ்க்கையில் சகஜம். ஆனால் தவறைத் தவறென்று உணர்ந்து அதை சரி செய்யாமலிருப்பதே வருத்தத்திற்குரியது.

      நீக்கு
  3. ஐயா. திரு அன்பின் சீனா அவர்கள் 5-12-14 என்பதற்கு பதில் 8-1-14 ஆம் நாள் திங்கள் என்று சொல்லிவிட்டார். நீங்கள் அதை 8-1-15 என நினைத்து புத்தாண்டில் எழுதவும் அழைக்கிறார் என நினைத்து சரி என சொல்லிவிட்டீர்கள். ஆனால் 8-1-15 புதன் கிழமை. மேலும் ஆண்டையோ அல்லது கிழமையையோ பார்த்திருந்தால் இந்த குழப்பம் வந்திருக்காது. எப்படியோ ஒரு பதிவிட சுவையான தகவல் கிடைத்துவிட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "எப்படியோ ஒரு பதிவிட சுவையான தகவல் கிடைத்துவிட்டது!"
      அது உண்மை. இப்போதெல்லாம் பதிவு போட சூடான விஷயங்கள் கிடைப்பது கடினமாய் இருக்கிறது.

      திரு.சீனா அவர்கள் வருத்தம் அடையாமல் இருந்தால் நான் பாக்யம் செய்தவனாவேன். இந்தப் பதிவிற்குப் பிறகு அவரிடம் இருந்து வலைச்சர ஆசிரியராவதற்கு அழைப்பு வந்தாலும் நான் ஏற்றுக்கொள்ள முடியாது. "இதப் பார்றா, ஒரு ஆள் சண்டை போட்டு வலைச்சர ஆசிரியர் பதவி வாங்கியிருக்கான்" என்று மக்கள் ஏச மாட்டார்களா?

      நீக்கு
    2. யானைக்கும் அடி சருக்கும். பேங்கராகிய உங்களுக்கே அடி சருக்கி விட்டது. நானெல்லாம் எம்மாத்திரம்?

      5-1-2015 -திங்கட்கிழமை இந்த நாள் ஆரம்பிக்கச் சொல்லியிருந்தால் சரி.
      5-12-2014 அல்லது 8-1-2014 அல்லது 8-1-2015 இவை எதுமே திங்கட்கிழமை அல்ல

      நீக்கு
    3. ஏதோ நினைப்பில் இன்றைய தேதியான 5-12-14 ஐ தட்டச்சு செய்துவிட்டேன். நீங்கள் சொல்வதுபோல் ‘யானைக்கே அடி சறுக்கும்போது’ இந்த அடியேன் எம்மாத்திரம்?

      நீக்கு
  4. எனது இரு வலைத்தளங்களையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. யானைக்கே அடி சறுக்கும்... ஏதோ தவறுதல் சீனா ஐயாவின் கருத்தில்...

    பதிலளிநீக்கு
  6. அதனாலென்ன? இன்றைக்குக்கூடத்தான் அனுமனுக்குப் பாலபிஷேகம் பதிவில் அவர் பெரும் பிழை என்று குறிப்பிட்ட வருட மாற்றத்தை ( 2014 என்பதற்கு அவர் 1914 என்று போட்டுருந்தார்) கவனிக்காமல் பாலபிஷேகம் நடந்ததைப் பார்த்ததாக பின்னூட்டி இருந்தீர்கள்:-))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த்ப பின்னூட்டம் தேதி தெரிந்தேதான் போட்டேன். 1914 ம் வருடம் அந்த அனுமன் கோவில் கட்டவேயில்லை. ஆனாலும் ஜனங்கள் 14 ஐத்தான் பார்ப்பார்களே ஒழிய 19 ஐக் கவனிக்க மாட்டார்கள்.

      ஆனால் திரு. சீனா ஐயா அவர்கள் குறிப்பிட்ட தேதியில் உள்ள தவறை நான் சுட்டிக்காட்டிய பின்பும் சரி செய்யாததால் ஒரு வாரம் வலைச்சரப் பதிவுகள் இல்லாமல் போயின. இது எனக்கு வருத்தத்தையே தந்தது.

      நீக்கு