புதன், 31 டிசம்பர், 2014

தொழில் நுட்பப் பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

                                                
புதிதாக சந்தைக்கு வரும் தொழில் நுட்பங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதில் தொழில் நுட்பப் பதிவர்களின் பங்கு பாராட்டிற்குரியது. ஆனால் அதே சமயம் அவர்களுக்குப் பொறுப்பும் அதிகம் என்பதை அவர்கள் உணரவேண்டும். பதிவு போடுவதற்காக ஏதோ ஒன்றைப் பதிவிட்டு விட்டு, மற்றதெல்லாம் அவரவர்கள் பாடு என்று போவது நல்ல வழியல்ல.

என்னுடைய "மீண்டும் கையைச் சுட்டுக்கொண்டேன்"  என்கிற பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதில் பலரும் குறிப்பிட்ட ஒரு விஷயம் என்னவென்றால், "எந்தத் தளத்தில் கூறிய எந்த புரொக்ராமை தரவிறக்கும்போது அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது, அதை எங்களுக்கும் சொன்னால் நாங்களும் எச்சரிக்கையாக இருப்போமே" என்பதாகும்.

நான் அதை வெளிப்படையாகச் சொல்லாததற்குக் காரணம் ஒரு பதிவர் தன்னையறியாமல் தவறு செய்திருக்கலாம். அதைச் சொல்லி அவருடைய மனதை புண்படுத்தக்கூடாது என்பதால்தான். ஆனால் பதிவுலக மக்கள் தொழில் நுட்ப விஷயங்களுக்கு தங்களுக்கு ஒரு வழி காட்டுதல் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆகவே தொழில் நுட்பம் பற்றி எழுதும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனி வரும் காலத்தில் நீங்கள் எழுதும் பதிவுகளில் கூறும் புரொக்ராம்களை நீங்களே சோதித்து அதில் உள்ள சாதக பாதகங்களையும் குறிப்பிட்டு எழுதினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

இது ஒரு வேண்டுகோள் மட்டுமே. இவன் யார் எங்களுக்கு நாட்டாமை செய்ய என்று யாராவது நினைத்தால் இந்தப் பதிவை எழுதியதற்காக என்னை மன்னித்து விடவும். அப்படி மன்னிக்க முடியாவிட்டால் ஏதாவது நல்ல சாபம் கொடுக்கவும். "துபாய் சென்று தங்கக்காரைப் பார்த்து வயிற்றெரிச்சலில் வேகவும்" என்கிற மாதிரி சாபம் கொடுக்கவும்.

15 கருத்துகள்:

  1. பஞ்ச் லைன் வைகோ அவர்களின் துபாய் பயணத்தைப் படித்ததின் தாக்கம்.

    பதிலளிநீக்கு
  2. ஹா....ஹா....ஹா... நல்ல சாபம்.

    முன்னர் இருந்த சில தொழில் நுட்பப் பதிவர்கள் நீங்கள் சொன்ன மாதிரி சோதனை செய்து, சாதக பாதகங்களையும் சேர்த்தே பதிவில் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பெயர் சட்டென மறந்து விட்டது! சமீபத்தில் அவர்கள் பக்கங்களுக்கு நான் செல்லவில்லை என்பதால்.

    பதிலளிநீக்கு
  3. மன்னிப்போ, சாபமோ இல்லை. பதிவு மூலம் பல புதியனவற்றை அறியமுடிகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.’ என்ற நோக்கத்தில் அவர்கள் புதிய தொழில் நுட்பங்களை சக பதிவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனாலும் தாங்கள் கூறியதுபோல் அதனுடைய சாதக பாதகங்களை குறிப்பிட்டு எழுதுவது நல்லது. எனவே தொழில் நுட்ப பதிவர்களுக்கு தாங்கள் விடுத்த வேண்டுகோளை நானும் விடுக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அப்படி எல்லாம் நினைக்க மாட்டோம் அய்யா!
    நானும் சுட்டுக் கொண்டேன்.
    ஒவ்வொரு முறை சுட்டுக் கொண்டு டாக்டர் பீஸ் 500 கொடுத்த அனுபவம்தான் நினைவுக்கு வருகிறது.
    ஒரு மாதம் முன்பு கூடக் கணினி டாக்டர் வந்திருந்தார்.
    அருமையான அனுபவப் பதிவிற்கு நன்றி அய்யா!!!

    பதிலளிநீக்கு
  6. //"துபாய் சென்று தங்கக்காரைப் பார்த்து வயிற்றெரிச்சலில் வேகவும்" என்கிற மாதிரி சாபம் கொடுக்கவும்.//

    அடடா, ஏன் சார் இப்படி நினைக்கிறீர்கள்?

    இந்த என் கீழ்க்கண்ட பதிவிலுள்ள தங்களின் பின்னூட்டம் + அதற்கான என் பதிலினை தயவுசெய்து எல்லோருமே படிக்கவும்.

    http://gopu1949.blogspot.in/2014/12/13.html

    அதை மற்றவர்களின் பார்வைக்காக இங்கு கீழே மீண்டும் கொடுத்துள்ளேன்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  7. COMMENTS OF DrPKandaswamy Sir

    //பழனி. கந்தசாமி December 30, 2014 at 3:17 AM
    எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாடத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் துபாய் சென்று அந்தத் தங்கக் காரை வாங்கி விட்டுத்தான் மறு வேலை.//

    REPLY OF VGK:

    வை.கோபாலகிருஷ்ணன் December 30, 2014 at 4:09 AM
    பழனி. கந்தசாமி December 30, 2014 at 3:17 AM

    வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

    //எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாடத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் துபாய் சென்று அந்தத் தங்கக் காரை வாங்கி விட்டுத்தான் மறு வேலை.//

    வாழ்த்துகள் ஐயா. தாங்கள் கட்டாயம் அந்த தங்கத்தால் செய்த காரை வாங்கி விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    NOTHING IS IMPOSSIBLE, Sir.

    சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, நம்மில் பெரும்பாலானோரிடம் இன்றுள்ள, நாம் அனுபவித்துவருகிற எந்த ஒரு நவநாகரீகப் பொருட்களுமே கிடையாது. ஒரு சைக்கிள் கூட இருந்திருப்பது சந்தேகமே.

    இவ்வாறு ஒரு 50 ஆண்டுகளில் நம் வாழ்க்கைத்தரமும் பொருளாதாரமும் உயர்ந்து, இவ்வாறு நாம் வீடு வாசல், கார், பைக், உலகத்தையே உள்ளங்கையில் அடக்கிவிடும் மொபைல் போன், உடனுக்குடன் உலகச்செய்திகளை மின்னல் வேகத்தில் அறிய வீட்டுக்குள் டி.வி., ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, ஏ.ஸி., கம்ப்யூட்டர், போதிய பேங்க் பேலன்ஸ் என சகலவிதமான வசதிகளுடன் வாழ்வோம் என கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம் அல்லவா !

    அதுபோல நமக்கு விடாமுயற்சியும், ஆசையும், ஆர்வமும், ஆயுளும், அதிர்ஷ்டமும் இருந்தால் போதும். நாம் அடைய முடியாததே இந்த உலகில் ஏதும் கிடையாது.

    விரைவில் தாங்கள் இந்தக்காரை வாங்கிவிடுவீர்கள். அதற்கு இப்போதே என் அட்வான்ஸ் நல் வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  8. ஐயா!

    நான் உள்பட தொழில்நுட்ப பதிவர்களில் பலர் ஆங்கில தளங்களில் வேறு யாரோ உருவாக்கிய நிரல்களைத் தான் பகிர்கின்றோம். அப்படிப் பட்ட நிரல்கள் குறிப்பிட்ட இணையதளங்களில் பதியப்பட்டிருக்கும் (HOST). பின்னால் என்றாவது ஒருநாள் அந்த இணையதளம் மால்வேர், வைரஸ்களால் பாதிக்கப்பட்டால் அதில் பதியப்பட்ட நிரலும் பாதிக்கப்படும். பிறகு அந்த நிரல் உள்ள வலைத்தளங்களும் பாதிக்கப்படுகிறது.

    நான் பகிர்ந்த ஒரு நிரலும் பாதிப்பை உள்ளாக்கியது. இன்ட்லி, யுடான்ஸ், ஒட்டி போன்ற திரட்டிகள் கூட இது போல் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்திருப்பீர்கள்!

    பயனாளர்கள் தெரிவிக்கும் வரை அந்த நிரலை பகிர்ந்த (தொழில்நுட்ப) பதிவர்களுக்கு தெரியாது. இதனை தெரியப்படுத்துவது தனிநபர் தாக்குதல் ஆகாது என்பதை நினைவில் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமேல் இந்த மாதிரி இருந்தால் அந்தந்த பதிவரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

      நீக்கு
  9. நல்ல வேண்டுகோள்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. நான் அவ்வப்போது எளிய கணினிக் குறிப்புகளை எழுதுவதுண்டு அதனை பயன்படுத்திய பிறகே அதனை பிறருக்கு பரிந்துரைக்கிறேன். புதிய மென்பொருள்களுக்கு ஆங்கிலத்தில் Review க்கள் எழுதுகிறார்கள் அவரைப் படித்தால் ஓரளவிற்கு அந்த மென்பொருள் தன்மை அறிந்து கொள்ள முடியும் .
    உங்கள் வேண்டுகோள் கவனத்தில் கொள்ளப் படவேண்டியது அவசியம்

    பதிலளிநீக்கு
  11. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் கேட்டது வரமா சாபமா! :)

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு